அத்தியாயம் - 31
தட்டில் சாதத்தை போட்டு ரசத்தை ஊற்றி நன்கு குழையப் பிசைந்து, காய்கறி கூட்டோடு துளசி இருந்த அறைக்கு வந்த தமிழ், "அத்த! சாப்டுட்டு மாத்திரை போடனுமே. எழுந்துக்கோங்க." என்று தூங்கிக் கொண்டிருந்தவரை மென்மையாக தட்டி எழுப்பினாள்.
வயது மூப்பின் காரணமாக அகத்தியனின் தாய் துளசியின் நடமாட்டம் குறைந்து போய் அறைக்குள் மட்டும் வாக்கரின் உதவியுடன் எழுந்து நடமாடுகிறார்.
தனக்கான அடையாளத்தை விட்டு வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்து, தன்னை மனம் கோணாமல் பராமரிக்கும் மருமகளின் அன்பில் உருகியவருக்கு மகனை விட அவள் மீது பாசம் அதிகம்.
கனிவாக அவளைப் பார்த்து, "உனக்கு ஏம்மா சிரமம்? சத்தம் கொடுத்தா நானே மெதுவா நடந்து வந்து இருப்பேனே." அவரால் முடியாது என்பது தெரிந்தாலும் அவளை சிரமப்படுத்த விரும்பாமல் ஒவ்வொரு முறையும் தவறாது கேட்கும் அதே கேள்வியைக் கேட்டார் அவர்.
அவரை முறைத்த தமிழ், "இதென்ன மந்திரமா? ஒவ்வொரு தடவை சாப்பிட கொண்டு வரும்போதும் இதையே சொல்றீங்க? இனிமே நான் கொண்டு வரல. நீங்களே உங்க மகனுக்கும் பேரப்பிள்ளைக்கும் சமைச்சு போட்டு எல்லா வேலையும் முடிங்க. சரியா?!" என அவள் கோபமாகப் பேச அவர் விழித்தார்.
அவர் விழிப்பதைப் பார்த்து, வந்த சிரிப்பை உதட்டிற்குள் அடக்கிக் கொண்டு தமிழ் நிற்க, அவரோ பாவமாக முகத்தை வைத்திருப்பது கண்டு அதற்கு மேல் முடியாமல் வாய்விட்டே சிரித்து விட்டாள்.
"என்ன பயந்துட்டீங்களா?!" என்று சிரிப்பினூடே தமிழ் கேட்கவும் அதன்பிறகு தான் மருமகள் விளையாட்டிற்கு சொல்வது புரிந்து சற்று இலகுவான அவரும் அசடு வழிய சிரித்தார்.
" பின்னே என்ன அத்த!? எப்போ பாரு இதே மாதிரி பேசிட்டு இருந்தா எனக்கு கோபம் வராதா? நான் என்ன, கொடுமையே'னு உங்களுக்கு எல்லா செய்துட்டு இருக்கேனா? உனக்கேன் சிரமம், கஷ்டம்னு சொல்லிட்டே இருக்கீங்க."
" நான் வேலைக்கு போயிட்டு இருந்தப்ப வீட்ல அத்தனை வேலைகளையும் நீங்க தானே பார்த்தீங்க. அது மட்டும் பாசம். நான் செய்தா மட்டும் கஷ்டமா?" படபடவெனக் கேட்டாள்.
அவளது கேள்விக்கு என்ன பதில் தர எனத் தெரியாமல் விழித்தவர், "ஸாரிமா! நீ தனியா வீட்டு வேலை எல்லாம் மேனேஜ் பண்ணிட்டு, எனக்கும் செய்துட்டு இருக்கியே'னு சங்கடத்துல தான் சொன்னேன். மன்னிச்சுடுடா."வருத்தமாக அவர் சொல்லவும்,
"அச்சோ!! இதுக்கெல்லாமா ஸாரி கேட்பாங்க? இப்போ அவர் உங்களுக்காக செய்றதை எல்லாம் இப்படித்தான் யோசிப்பீங்களா? இல்லைல, அதே மாதிரி என்னை உங்க மகள் மாதிரி நினைச்சா, உங்களுக்கு எதுக்கு இப்படி எல்லாம் தோணப்போகுது? சிம்பிள்!" அவர் கையைப் பற்றி ஆதரவாக கூறினாள் தமிழ்.
தமிழ் இப்படி உரையாடிக் கொண்டே அவருக்கு உணவைக் கொடுத்து முடித்திருக்க, அவளது அலைபேசி இசைத்து தன் இருப்பைக் காட்டியது. "இப்ப தான் உங்க மகனைப் பற்றி பேசுனேன். அதுக்குள்ள கூப்டாச்சு பாருங்க." கேலியாக சொல்வது போல் கூறியவள்,
அவருக்கு மாத்திரைகள் எடுத்துக் கொடுக்க, " நான் சாப்பிடுறேன். நீ போய் என்னனு பாரும்மா. அவன் எதுக்கு கூப்டுறானோ!?" அவளிடம் கூறி அனுப்பி வைத்தார் துளசி.
"ம்க்கும்! உங்க புள்ள எதுக்கு கூப்டுவாருனு தெரியாதாக்கும்." என்று அவரிடம் பேசிக்கொண்டே சென்றவள்,
"ரெண்டு பேரும் சாப்டாச்சா? டயர்ட்ஆ இருந்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பாரு. இழுத்துப் போட்டு செய்துட்டு முடிலனு புலம்பாத'னு ஒரு வண்டி அட்வைஸ் செய்வாரு." கேலி பேசியபடி சென்று அலைபேசியை எடுத்தாள்.
அவள் வருவதற்குள் அழைப்பு நின்றிருக்க, கணவனுக்கு மீண்டும் அவளே அழைத்து, "ரெண்டு பேரும் சாப்டாச்சு. இப்போதைக்கு எனக்கு பெருசா வேலை எதுவும் இல்ல. ரெஸ்ட் தான் எடுக்கப் போறேன். சரியாத்தான்!" அவன் பேசுவதற்குள் அவளே படபடவென கூறி முடிக்க, எதிர்பக்கம் அமைதி.
அவன் எதுவும் பேசாமல் இருப்பதிலேயே வேறு ஏதோ விசயம் என புரிய, "என்னாச்சுங்க?!" அவள் சீரியஸாக வினவ, "நம்ப பையன் ஸ்கூல்ல இருந்து கால் வந்தது. நம்மை உடனே வரச் சொல்லி இருக்காங்க. கிளம்பி இரு மொழி. "
"அம்மாட்ட ஒன்னும் சொல்லாதேடா. வந்து பேசிக்கலாம். நான் இப்ப கிளம்பிட்டேன். வீட்டுக்கு வந்து உன்னை பிக்கப் பண்றேன், ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வருவோம்." சேதி போல் கூறினான்.
அவள் ஒன்றும் புரியாமல் விழித்தவள், "என்னாச்சு அத்தான்? ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?" கலக்கமாகக் கேட்க,"ஒன்னுமில்லமா. பயப்படாதே. நீ ரெடியாகு."அவளை சமாதானம் செய்தவன் உடனே அவளை கிளம்பச் சொல்லிவிட்டு அழைப்பை வைத்தான்.
துளசியிடம், "ஏதோ அவசர வேலை இருக்காம் அத்த. நானும் வரனுமாம். அவர் வந்து என்னை கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு. ரெண்டு பேரும் வெளியே போயிட்டு வந்துடுறோம். நீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க." என்று கூறியவள் குழப்பத்துடன் சென்று தயாரானாள்.
அகத்தியன் வீட்டிற்கு வந்த பிறகும் கூட இறுக்கமாக இருந்த அவன் முகத்தில் அவளால் எதையும் படிக்க முடிக்கவில்லை. தீராத குழப்பத்துடன் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.
தலைமையாசிரியர் அலுவலகத்தில் அனுமதிக் கேட்டு அவர்கள் உள்ளே நுழைய, அவரது இருக்கைக்கு பக்கவாட்டில் கலங்கிய விழிகளுடன் அவமானத்தில் தலை குனிந்து நின்றிருந்தான் அகரன்!.. அவர்களது ஒரே தவப்புதல்வன்.