அத்தியாயம் - 45
நவீனுக்கு அமிர்தாவை வேண்டுமானால் தெரியலாம் அவரது பெற்றோரை தற்போது தான் பார்க்கிறான் இதில் அவரிடம் அவனுக்கு அப்படி என்ன கேட்க வேண்டும் என்ற யோசனையில் சற்று தள்ளி அமர்ந்து பேசி கொண்டிருந்த மற்றவர்களும் திரும்பி பார்த்தனர்.
"டோன்ட் மிஸ்டேக் மீ அங்கிள். பொதுவா தமிழ்நாட்டுல கேர்ள்ஸ்க்கு 21, 22 வயசானாலே மேரேஜ் பற்றி பேரன்ட்ஸ் யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க'னு என் அம்மா சொல்லி இருக்காங்க. அமிர்தாவுக்கு அந்த மாதிரி நீங்க எதுவும் பார்க்கலையா?" என கேட்டே விட்டான்.
நவீனின் கேள்வியில் அதிருப்தியாக அமிர்தா மற்றும் தமிழ் பார்க்க, இப்போதே இந்த பேச்சை தொடங்க வேண்டுமா என்ற ரீதியில் அகரன் இருக்க, அமிர்தாவின் திருமணம் பற்றி அவரது பதிலை எதிர்நோக்கி இருந்தார் அகத்தியன்.
"அதெல்லாம் ஆரம்பிச்சுட்டேன் பா. இவ தான் பிடி கொடுக்க மாட்டீன்றா. ஒரு நல்ல வரனா வந்தா முடிக்கனும்." கர்ம சிரத்தையுடன் பதிலளித்த தந்தையின் பேச்சில் அதிர்ந்தாள் அமிர்தா.
"உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லனா.. நான் ஓகேவா அங்கிள்? பிகாஸ் ஐ லைக் அம்ருதா. என் வீட்டுலேயும் அம்ருதா மாதிரி தமிழ் பொண்ணு தான் வேணும்னு அம்மாக்கு ரொம்ப ஆசை. நான் சொன்னதை வைச்சே அவங்களுக்கு அம்ருதாவை ரொம்ப பிடிக்கும்." நவீன் பேச, அங்கு அசாத்திய அமைதி.
ராகவன் அமைதியாக இருக்கவும், நவீன் தன் குடும்பத்தைப் பற்றி, வசதியைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னவன், "என்னைப் பற்றி பர்சனலா தெரிஞ்சுக்க யூ ஆஸ்க் கரண். ஹி நோஸ் மீ வெரி வெல்." விரிந்த புன்னகையுடன் கூறினான்.
நவீனின் பேச்சில் அங்கிருந்த பெண்கள் குழப்பத்தில் இருக்க, தான் அறிந்தவரை அவனைப் பற்றி தவறாக சொல்ல ஒன்றுமில்லை ஆதலால் அகத்தியன் அமைதியாக இருந்தார்.
இது அமிர்தாவின் பெற்றோர் முடிவெடுக்க வேண்டிய விசயம். கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கும் அவளுக்கும் இதில் விருப்பம் எனில் நடக்கட்டும் என்ற எண்ணத்தில் இருந்து விட்டார்.
அகரனோ நவீன் இப்படி சட்டென இப்போதே பேசி விடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் மனதில் சொல்ல முடியாத பாரம் அழுத்த, அதை வெளிக்காட்டாமல் இயல்பாக இருக்க மிகவும் சிரமப்பட்டான்.
அன்று மதியம் தன் அறைக்குள் சென்று அடைந்த அகரன், 'காதல் என்பது எல்லாருக்கும் உண்டான உணர்வு தானே. நவீனுக்கு அமிர்தா மீது காதல் வந்ததில் தவறென்ன இருக்கிறது!?'
ஒருவேளை அம்முவுக்கு பிடிக்காமல் அவன் அவளை வற்புறுத்தினால் அதை தவறென்று சொல்லலாம். அவளது நிலைப்பாடு என்னவென்று தெரியாத நிலையில் இவனோடு கோபம் கொண்டு அவளிடம் அதைக்காட்டி தான் செய்த செயல் அவனுக்கே தவறாகப்பட்டது.
'நவீன் சொன்னது போல அப்படி அவளுக்கு நவீனை பிடித்திருக்கிறது என்றால் தன்னால் என்ன செய்ய முடியும்!?' எதையெதையோ யோசித்து தன்னை சமாதானம் செய்ய,
'அப்ப அம்மு வேணாமா உனக்கு!? அவளை எவனோ ஒருத்தனுக்கு அப்படி விட்டுக்கொடுக்க முடியுமா உன்னால?' மனசாட்சியின் கேள்வியில்..
தன்னை குறித்தே ஆராய்ந்த அகரனுக்கு தன் மனமறிந்து திடுக்கிட்டு,"ஓ காட்!! நான் எப்ப இருந்து இப்படி ஆனேன்!?" வாயில் கைவைத்து திகைப்புடன் கூறியவன் யோசிக்கத் தொடங்கினான்.
எந்த சூழ்நிலையிலும் இதுவரை எந்த பெண்ணிடமும் மரியாதை இன்றி பேசாத அகரன், அம்முவிடம் மட்டும் சமீப காலங்களில் ஒருமையில் பேசுவதோடு "இந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருக்க அம்மு!" என அவளை ரசனையுடன் பார்த்திருக்கிறான்.
அவளை எப்போதிருந்து ஒருமையில் அழைக்க துவங்கினோம் என்றே அவனுக்கு நினைவில்லை. மனதில் உரிமை பிறந்த பிறகு ஒருமை தானாக வந்திருக்கிறது. இத்தனை வருடங்களாக அதை உணராமலே இருந்திருக்கிறான்.
அதனால்தான் நவீன் அவளை காதலிப்பதாக சொன்னதும் அத்தனை கோபம் வருகிறது. தன் கைப்பொருளை பாதுகாக்கும் குழந்தையின் செயலாக தன்னவளை அவனிடமிருந்து விலக்கி வைக்க முயல்கிறான்.
தன் காதலை உணர்ந்து மகிழ்வதா அல்லது தற்போது அதற்கு பெரும்தடையாக வந்து நிற்கும் நண்பனை எண்ணி வருந்துவதா எனத் தெரியாமல் திணறினான்.
இதில் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று வேறு தெரியாது என்ற சிந்தனையில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். பயணக் களைப்புடன் ஜெட்லாக் வேறு அவனைப் படுத்த, அதோடு இந்த அதீத சிந்தனையில் அப்படியே உறங்கியும் விட்டான்.
உறங்கி எழுந்த பிறகு எப்போதும் போல, அம்முவுக்கு என்ன விருப்பமோ அதையே செய்யட்டும். தனது சுயநலத்திற்காக அவளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்ற முடிவிற்கு வந்து விட்டான்.
அப்படிச் சொல்லியே தன் மனதை தேற்றிக் கொண்டு வந்தவன், அமிர்தா வீட்டிற்கு வந்த போதே நவீன் இந்த பேச்சை தொடங்குவான் என எதிர்பார்க்கவில்லை.
இதயம் பலமாக துடிக்க ராகவன் என்னச் சொல்லப் போகிறார் என அமர்ந்திருந்த அகரனை மேலும் வெடி வைத்து தகர்க்கும் வண்ணம், "நான் யோசிச்சு, வீட்ல கலந்து பேசிட்டு சொல்றேன் தம்பி." என்றார் ராகவன்.
அதைக்கேட்டு தாயும் மகளும் ஒருபுறம் திகைப்புடன் இருக்க, 'அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது! ' என்ற விரக்தியான முடிவிற்கு வந்து விட்டான் அகரன். அம்மு தன் பெற்றோரின் பேச்சை மீறி எதையும் செய்பவள் அல்ல என்பதால் ஏற்பட்ட விரக்தி அது!
அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அவனுக்கு மூச்சு முட்டியது. சட்டென எழுந்து வாசலுக்கு அருகே இருந்த சிறிய தோட்டத்தை காண வெளியே வந்து விட்டான்.
நவீன் அகத்தியனிடம் பேசத் தொடங்கியதும், அகரன் வெளியே நிற்பதை கவனித்த ராகவன் அங்கு வந்து, "என்னப்பா உன் ஃப்ரெண்ட் இப்படி சொல்றாப்ல. பையன் எப்படி அகரா?" விசாரணையை போட, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு நவீனைப் பற்றி நல்லவிதமாக கூறினான் அகரன்.