அத்தியாயம் - 47
அமிர்தா சொன்ன அனைத்தையும் முகம் மாறாமல் கேட்கவே அகரன் அவ்வளவு சிரமப்பட்டான். அவள் சொல்லி முடித்து, "எல்லா உன்னால வந்தது. இந்த அப்பா வேற அவனைப் பற்றி அத்தனை அடுக்கறாரு." சலிப்புடன் கூறினாள்.
"நான் என்னம்மா செய்தேன்!? அவனோட விருப்பத்தை அவன் சொன்னான். இதுல என்னோட தப்பு என்ன இருக்கு?!" அகரன் கேட்க அவனை முறைத்தவள்,
"ம்ம்ம்.. உன் மூஞ்சி! நீயேன் அவனை பற்றி அவர்ட்ட அடுக்குன, 'அகரனே சொல்லிட்டான். கண்டிப்பா நல்ல பையனா தான் இருப்பான்'னு நீ சொன்னதை என்னமோ அவனோட எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷன் மாதிரி சொல்றாரு." அவனேயே குறை சொல்லி அவனிடம் குறைப்பட்டான்.
அவள் சொன்ன விதத்தில் லேசாக புன்னகைத்தவன்,"உண்மையை தானே சொன்னேன் அம்மு. அவன் நல்ல பையன் தான். குறையா சொல்ல எதுவுமில்ல அப்றம் நான் என்னத்த சொல்றது?!" வெகு இயல்பாக கேட்டான்.
எந்த உணர்வுமற்ற அவனது பேச்சில் குழம்பியவள் அவனையே கூர்ந்து பார்க்க, "என்ன!! என் மூஞ்சில என்ன தெரியுது?" குழப்பமாக அவன் கேட்க, "ஒன்னுல்ல. நான் போறேன்." இறங்கிய குரலில் கூறியவள் வெளியேற முயன்றாள்.
நவீனைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்பதை சொல்லாமல் போகிறாளே என்று தவித்தவன், "உங்க முடிவு என்னனு சொல்லலையே அம்மு? எனிவே ஹி இஸ் எ குட் சாய்ஸ்." அவளது மனநிலை அறிய வேண்டுமென்றே சொல்ல, அப்போது தான் அவளுக்கு அந்த வித்தியாசம் புரிந்தது.
ஒருநொடி கண்கள் மூடி திறந்த அமிர்தா, "உங்க அட்வைஸ்க்கு ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் அகரன்." என்றவள் வேகமாக கதவைத் திறந்து வெளியேறி விட்டாள். அவளது பதிலில் தெளிவாக எதுவும் புரியாமல் விழித்த அகரனின் மனம் அவளது பன்மை அழைப்பை அறவே வெறுத்தது.
வெளியே வந்த அமிர்தா தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்ப, "என்னடா உடனே கிளம்பற? வீட்ல சாப்டியா இல்லயா? பணியாரம் சுட்டேன் உனக்கு தான் ரொம்ப பிடிக்குமே, சாப்டுறியா?" எனக் கேட்டாள் தமிழ்.
"இல்ல ஆன்ட்டி, வேணாம். உங்க புள்ள பேசுனதுலேயே மனசு, வயிறு எல்லாம் நெறஞ்சுடுச்சு. நான் கிளம்பறேன்." என்றவள் வெளியேறி விட்டாள். இவள் என்ன சொல்கிறாள் என புரியாமல் விழித்த தமிழ் மகனைத் தேடிச் சென்றாள்.
அமிர்தா பேசிச் சென்றதில் அதுவரை இருந்த மனநிலை மாற, எதுவும் செய்யத் தோன்றாமல் அப்படியே அமர்ந்து விட்ட அகரன், தமிழ் கதவைத் தட்டவும் சட்டென தன் முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்டான்.
"வாங்கம்மா!" என்றவன் தாயை அமரச் சொல்ல, மகனருகில் அமர்ந்த தமிழ், "அவள் ஏன் ஒருமாதிரி பேசிட்டு போறா? அவளை நீ எதாவது திட்டுனியா கண்ணா? " நேற்றைப் போல எதுவும் எரிந்து விழுந்தானோ என்ற சந்தேகத்தில் கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னுமில்லம்மா. அம்மு வீட்ல நவீனோட ப்ரோபோஸல் ஏத்துக்குவாங்க போல, அதைப்பற்றி தான் பேசிட்டு போனாங்க. அவன் நல்ல சாய்ஸ் தான்னு சொன்னேன், அவ்ளோ தான்." தோள்களை குலுக்கினான்.
அவனது இயல்பான பேச்சு, பன்மை அழைப்பு என அனைத்தையும் கூர்மையாக கவனித்த தமிழ், "நீ.. ஓகேயா கண்ணா?!" எனக் கேட்க, "எ..எனக்.எனக்கென்ன!! நான் நல்லா தான் இருக்கேன்ம்மா." அவன் தடுமாற்றமே தமிழுக்கு ஏதோ இருப்பதை உணர்த்தியது.
"நீயா எதாவது யோசிச்சு மனசை புண்ணாக்கிக்காத அகரா. எதுனாலும் மனசு விட்டு பேசு. அதான் சில விசயங்கள்ல ரொம்ப நல்லது." பூடகமாக சொல்லி அவனது தோளைத் தட்டிக் கொடுத்து செல்ல, அகரன் யோசனையில் ஆழ்ந்தான்.
மேலும் இரு தினங்கள் கழிந்த நிலையில் அகத்தியன் பணிக்கு சென்றிருக்க, ஹாலில் அமர்ந்திருந்த அகரன் தன் மடிக்கணினியையும் நவீன் தனது அலைபேசியையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடுமென அகரனின் அலைபேசி அழைக்க, ராகவனின் எண்ணிலிருந்து அழைப்பு என்றதும் புருவம் சுருங்க யோசித்தவன் அழைப்பை ஏற்றான். சம்ப்ரதாய விசாரிப்புகளுக்கு பிறகு, "இதோ தர்றேன் அங்கிள்." அலைபேசி நவீனின் கைக்கு மாறியது.
"சொல்லுங்க அங்கிள்!" என்ற நவீன் சிறிது நேரம் பேசப்பேச அவனது கண்கள் ஒளிர, "யாஹூ!!!" என்று போட்ட சந்தோஷ கூச்சலில் அருகிலிருந்த அகரன் காதைப் பொத்திக் கொண்டான் என்றால், அறைக்குள் இருந்த தமிழ் வெளியே வந்து விட்டாள்.
" ஸாரி அங்கிள்! கொஞ்சம் எக்ஸைட் ஆகிட்டேன்." என்றவன் "ஓகே.. ஓகே அங்கிள்! யா! வித் ப்ளஷர்!" மகிழ்ச்சி கொப்பளிக்க பதிலளித்தவன் தனது அலைபேசி எண்ணை அவரிடம் கூறி அழைப்பை வைத்துவிட்டு அகரனை எழுப்பி கட்டிக் கொண்டு சுற்றினான்.
அகரனுக்கு விசயம் என்னவாக இருக்கும் என்று நவீனின் கூச்சலிலேயே ஓரளவுக்கு புரிந்து விட தொண்டையை அடைத்தது. இருப்பினும் நண்பனின் மகிழ்வில் வலிய வரவழைத்து கொண்ட சிரிப்புடன் நின்றிருந்தான் அகரன்.
தமிழ் புரியாமல் விழிக்க அவளிடம் ஓடிவந்த நவீன், "ரொம்ப ஹேப்பி ந்யூஸ் ஆன்ட்டி! என்னோட ப்ரோபோஸலுக்கு அம்ருதா அல்மோஸ்ட் ஒத்துக்கிட்டாங்களாம், எங்கிட்ட நேர்ல பேசனும்னு சொல்லி இருக்காங்களாம்."
"ஐம் வெரி ஹேப்பி! இந்த ஹேப்பி ந்யூஸை முதல்ல மாம் கிட்ட சொல்லனும்." குதித்தவன் தன் அலைபேசியோடு தனக்கான அறைக்குள் சென்று மறைய, அமிர்தா சம்மதித்து விட்டதாக அவன் சொன்னதைக் கேட்டு சிலையென நின்ற அகரனைத்தான் பார்த்தாள் தமிழ்.
தாய் அறியாத சூலா! அவளுக்கு மகன் மனதின் போக்கு என்றோ தெரிந்து விட்டது. ஆனால் அவனாக உணராத போது தானாக எடுத்து சொல்லியதாக இருக்க வேண்டாமே என அமைதியாக இருந்தாள்.
இதுநாள்வரை அமிர்தாவிடம் உரிமை கொண்டாடிய அகரன், அவளது வீட்டில் நவீன் பேசிய பிறகு அவளிடம் விலகலை காட்டியதில் ஒருவேளை 'நாந்தான் தவறாக யோசிக்கிறேன் போல' என்று சற்று குழம்பிப் போனாள்.
தற்போது அவள் கைவிட்டு போய் விடுவாளோ என்ற அதிர்வில் நிற்பவனை பார்க்க பாவமாக இருந்தது. அன்று தான் பூடகமாக சொல்லியும் அதற்கு ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்துவிட்டு இன்று வருந்தி என்ன பயன்!? என்றுதான் இருந்தது தமிழுக்கு.