அத்தியாயம் - 48
காலையில் பணிக்குச் செல்வதாகக் கூறி எப்படியோ தப்பித்தாலும் மீண்டும் வீட்டிற்கு வந்து தானே ஆக வேண்டும். பணி முடிந்து வீடு திரும்பிய அமிர்தாவை வந்ததுமே பிடித்துக் கொண்டார் ராகவன்.
"உங்கிட்ட கொஞ்சம் பேசனும் செல்லம்! போய் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வா." அவர் அவளை அனுப்பி விட, பெருமூச்சுடன் தனது அறைக்கு சென்ற அமிர்தா தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.
உணவு முடிக்கும் வரை எதையும் பேசாமல் இருந்தவர், " நாங்க எப்பவும் உன்னோட நல்லதைத் தான் செய்வோம்னு உனக்கு நம்பிக்கை இருக்குல அம்மு?" பேச்சைத் துவங்கி விட்டார் என்றெண்ணிய அமிர்தா தலையசைத்தாள்.
"நவீன் நேத்து பேசுனதை நீயும் கேட்ட தானேடா" என்றவர் நேற்றிரவு மனைவியிடம் அடுக்கிய அதே காரணங்களை மகளிடம் விரிவாக கடை பரப்ப, அவளுக்கு 'ஹையோ!' என்றிருந்தது.
"நவீன் உனக்கு ஏத்த சாய்ஸ்னு நாங்க நினைக்கிறோம்டா அம்மு." மனைவியையும் சேர்த்துக் கொண்டவர், "நீ யோசிச்சு பாசிட்டிவ் ஆன முடிவா சொல்லு." என்ற தந்தையை விசித்திரமாக பார்த்தாள் அமிர்தா.
'இதென்னடா வம்பா போச்சு! என்னை யோசிக்கவும் சொல்லிவிட்டு, அவர்களுக்கு ஏற்ற முடிவையும் சொல்ல வேண்டும் என்றால் எப்படி!' கண்களை சுழற்றி மனதிற்குள் நினைத்தவள்,"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கப்பா" என்றுவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
மறுநாள் முதல் அவளைக் காணும் போதெல்லாம் அவளது பதிலை எதிர்பார்த்து ஆர்வமாக பார்க்கும் தந்தையின் செயலில் எரிச்சலாக உணர்ந்தாலும் எதாவது பதில் சொல்லித் தானே ஆக வேண்டும் என்றெண்ணியவள்,
"அப்பா! நான் நவீன்ட்ட பேசிட்டு என் முடிவை சொல்றேன்." என்றவள் அலுவலகம் கிளம்பி விட, அவனது அலைபேசி எண் இல்லாததால் அகரனுக்கு அழைத்து அவனிடம் அவள் ஏறக்குறைய சம்மதம் சொன்னதாகவே சொல்லி விட்டார்.
மேலும் இருநாட்கள் கடந்த நிலையில், வீட்டிற்குள் அடைந்து கிடந்தால் 'சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைகளம்' என்பதைப் போல எதையாவது யோசித்து வேதனை கொள்வதால், வெளியே சுற்றி வரலாமென நவீனை அழைத்துக் கொண்டு மாலுக்கு வந்து விட்டான் அகரன்.
அங்குள்ள துணிக்கடைக்குள் சென்று ஆடையை பார்த்துக் கொண்டிருந்த போது நவீனின் அலைபேசிக்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் "ஹலோ!" குழப்பத்துடன் அழைப்பை ஏற்றான்.
"ஹலோ! நவீன்?! " உறுதிப்படுத்திய குரலுக்கு அவன் ஆமோதித்ததும், "நான் அமிர்தா பேசுறேன். உங்கள்ட்ட கொஞ்சம் பேசனும். எனக்கு இன்னிக்கு வேலை முடிஞ்சது. இப்ப பேசலாமா? உங்களுக்கு ஓகேயா?" அமிர்தா கேட்கவும் பரவசமாகிப் போன நவீன் எங்கு வர வேண்டும் எனக் கேட்டான்.
"நீங்க வர வேணாம் நானே வர்றேன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் உடனே கிளம்பி வர்றேன்." என்றவளிடம் அவனிருக்கும் மால் பற்றி சொன்னவன் அவளால் வர முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.
ஆடையை ட்ரையல் பார்க்க உள்ளே சென்றிருந்த அகரன் வெளியே வந்து
பார்க்க, புன்னகை மன்னனாக நின்ற நவீனை கண்டு குழம்பி" என்னடா திடீர்னு வாயெல்லாம் பல்லா நிற்கிற?" கிண்டலாக வினவினான்.
"ஹே மேன்!.. அம்ருதா என்னைப் பார்த்து பேச இங்கேயே வர்றேன்னு சொல்லிட்டாள்டா." அவள் இப்போதே அவனுக்கு சொந்தம் என்பதைப் போல மரியாதை பன்மை பறந்து போனதில் அகரனுக்கு கடுப்பானது.
அதை வெளியில் காட்டாமல், "ஓஓ! நான் அப்ப கிளம்பட்டுமா? நீங்க பேசிட்டு வாங்க."என்று 'ஓ'போட்ட அகரன் கிளம்ப எத்தனிக்க, சேர்ந்தே போகலாமென அவனை பிடித்து தன்னோடே நிறுத்திக் கொண்டான் நவீன்.
நவீன் வற்புறுத்தியதால் தவிர்க்க முடியாத அகரன் சரியென சம்மதிக்க, மேலும் சிறிது நேரம் இருவரும் மால் சுற்றியபிறகு உணவுகள் இருக்கும் பகுதியில் உணவை ஆர்டர் செய்துவிட்டு வந்தமர்ந்தனர்.
அப்போது நவீனின் அலைபேசி இசைக்க, அதை ஏற்றவன் தாங்கள் இருக்குமிடத்தை கூறினான். அவன் பேசிய விதத்தில் அமிர்தா தான் அழைத்திருக்கிறாள் என்று உணர்ந்த அகரன் அங்கிருந்த அகல முனைய, "அவ வரட்டும் கரண். அதுவரை இருடா."அவனை தேக்கினான்.
நவீனுக்கு எதிர்புறம் அகரன் அமர்ந்திருக்க, அந்த பகுதிக்கு வந்த அமிர்தா நவீனின் முகத்தைப் பார்த்தபடி அங்கே வந்தவள், "ஹாய்! ரொம்ப லேட் பண்ணிட்டேனா?" சிறு புன்னகையுடன் கேட்கவும் நவீன் இல்லையென புன்னகைத்தான்.
அமிர்தா எதிர் இருக்கையில் இருந்த அகரனை கவனித்த உடனே திகைக்க, "ஹாய் அம்மு! நீங்க பேசிட்டு இருங்க. நான் இதோ வர்றேன்." என்றவன் வேகமாக எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டான். அவள் நவீனுடன் சிரித்துப் பேசியதை அவனால் ஏற்க முடியவில்லை.
நியூயார்க்கில் இருந்த போது எத்தனையோ முறை அவனுடன் சிரித்து பேசி இருக்கிறாள் தான். அப்போது எல்லாம் இயல்பாக இருந்தவனால் தற்போது அதுவும் தன் மனம் அறிந்த பிறகு சுத்தமாக முடியவில்லை.
என்றைக்கு நவீனுக்கு அவள்மீது விருப்பம் என்று தெரிந்ததோ அதன்பிறகு அவனிடம் அவளை பேச விடாதவாறு, அவன் இல்லாத சமயத்தில் மட்டுமே வீட்டிற்கு அழைத்து பேசி வந்தான் அகரன். சில சமயங்களில் தவறியதும் உண்டு.
இந்தியா திரும்பும் போது தன்னுடனே அவன் வருவதாக சொன்னபோது கூட வேண்டா வெறுப்பாகத் தான் கூட்டி வந்தான். தனக்குள் யோசித்து தெளிந்த பிறகு அமிர்தாவின் விருப்பம் என்று விட்டுவிட்டாலும் அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்க அவனால் முடியவில்லை.
"ஹே கரண்! ஃபுட் வந்துடும்டா. சாப்டு போவியாம். பசிக்குது சொன்னியே." நவீன் சொன்னது எல்லாம் காற்றில் கரைய, அகரன் மாயாவி போல் மறைந்தே விட்டான். ஓடிச்சென்ற அவனையே அமிர்தா யோசனையாக பார்த்திருந்தாள்.