• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 01

ஷாரிகா

Moderator
Staff member
எல்லாப்புகழும் இறைவனுக்கே.

வாசக நண்பர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள்!
காலைல நிதனி அக்காவிற்கு Mail அனுப்பி,
மத்தியானம் அவங்க அதுக்கு Reply அனுப்பி,
சாயங்காலம் சைட்ல Epi போட வந்திருக்கேன்.

'வாழ்க்கைல எல்லா நல்ல விஷயங்களுமே, இந்த வேகத்துல நடந்தா நல்லா இருக்குமே...' என்டு ஒரே நப்பாசையா இருக்கு. சரி, அது ஒரு பக்கம் இருந்துட்டு போகுது. இப்ப 'வள வள , கொள கொள' என்டு இழுக்காம நான் விஷயத்துக்கு வர்றேன்.

வரைமீறி எழுந்துநிற்கும், எழுதவேண்டுமென்ற நெடுநாள் கனாவினை, நிறைவேற்றிப் பார்க்கும் ஆசையில், அறிமுகமில்லா ப்ரியர்களின் அன்பை எதிர்பார்த்தபடி, புதியதொரு பாதையில் முதலடி எடுத்துவைப்பதற்கு முன்பாக..

எனக்கு Voice Messageஇல் வாழ்த்திய, 'தாராளமாக எழுதலாம்' என்றுகூறி, நம்பி வாய்ப்பளித்த தாராள(நிதனி)பிரபு அக்காவே, உ(ங்கள்)ன் அன்புக்கு நன்றி❤

படித்துப் பார்த்துப் பிடித்திருந்தால், மறந்திடாமல் என்னுடன் பகிர்ந்திடுங்கள்.
பிழையேதுமிருப்பினும் கருத்திடுங்கள்; திருத்திடவே விரும்பிடுவேன்.

அன்புடன்,
ஷாரிகா ரோஷி.




VIN 1

முன்மாலை நேர வெயில் வழமையை விட இன்று சற்று அதிகமாகவே கொழுத்தியது. வெப்பநிலை எப்படியும் 32 டிகிரி செல்சியஸாவது இருக்கக்கூடும்.

வெப்பம்தாள முடியாமல், வீட்டின் ஜன்னல்களை ஒவ்வொன்றாக திறந்து கொண்டிருந்தார் அமுதா. வீட்டிலிருந்து சற்று தொலைவிலுள்ள பள்ளிவாயலில், அஸர் தொழுகைக்கான அதான் ஒலிக்க தொடங்கியது. நீண்ட நாட்கள் கழித்து சொந்த ஊரின் பாங்கு சத்தம் கேட்டதும் அமுதா முகத்தில் புன்னகை.

தமிழ்நேசன்-அமுதா இருவருமே மட்டக்களப்பை சேர்ந்தவர்கள்தான். நேசன் (மட்டக்களப்பு)கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். மகளின் A/L பரீட்சை முடிந்தகையோடு அவருக்கு கொழும்பு பல்கலைக்கு மாற்றல் கிடைக்கவும், குடும்பமாக அங்கேயே குடியேறிவிட்டார்கள்.

இல்லத்தலைவியான அமுதாவுக்கு சொந்தஊரையும், பெற்றோரையும், நீண்ட நெடிய இருபத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த வீட்டையும் விட்டு செல்ல துளியும் விருப்பமில்லை. கணவருக்காக சென்றார். வருடத்தில் ஓரிருமுறை வீட்டுக்கு வந்து தங்கி செல்வார்கள்தான். ஆனால் அவருக்கு அது போதுமாயில்லை. நிரந்தரமாக வீடு வந்து சேரும் நாளுக்காக பெரிதும் ஏங்கினார்.

கொழும்பில் குடியேறி 8 வருடங்கள் கழிந்த நிலையில் நேசன் வேலையிலிருந்து முழுதாக ஓய்வு பெற்றுக் கொண்டமையால், மீண்டும் சொந்த ஊருக்கே வந்துவிட்டனர், நேசன் குடும்பத்தினர்.

இன்று காலையில்தான் அனைத்து பொருட்களையும் இடம் மாற்றி இருந்தனர்.
சொந்தஇடம் வந்து சேர்ந்த சந்தோஷத்தில் புன்னகை முகமாகவே சுற்றிக்கொண்டிருந்தார் அமுதா. அவரது முகத்திலிருந்து வியர்வைக்கு போட்டியாய் ஆனந்தமும் வழிந்து கொண்டிருந்தது.

*****
அந்த அறையின் ஜன்னலுக்கருகே, சுவற்றோடு ஒட்டியவாறு போடப்பட்டிருந்த பெரிய கட்டிலில் சாய்ந்து, மெத்தையில் தலையை சரித்தவாறு தரையில் அமர்ந்திருந்தாள் அவள். இமைகள் இரண்டும் மூடியிருந்தாலும் அவளின் கட்கோளங்கள் அசைவைக்காட்டின. எதையோ எண்ணி, குழம்பித்தவிக்கிறாள் என்றன -புருவமத்தியிலிருந்த சுருக்கங்களும்; அதை மீண்டும் மீண்டும் அழுத்திவிட்டுக் கொண்டிருந்த விரல்களும்.

திறந்திருந்த ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்த காற்றிற்கேற்ப, தொங்கவிடப்பட்டிருந்த மெல்லிய திரைச்சீலை மெல்ல அசைந்து, அவளது முகத்தில் விழுந்து, தலையைத்தடவி, அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்தது. அதை கையினால் விலக்கிவிட்டு விலக்கிவிட்டு, ஒருகட்டத்தில் எரிச்சலுற்றவள் வேகமாய் எழுந்து திரைச்சீலையினை அகற்றியிருந்தாள். அவள் ஷோபா. ஷோபனா தமிழ்நேசன்.

ஜன்னல் நிலையில் சாய்ந்து நின்றவாறு கைப்பேசியினை எடுத்து, புலனத்துக்குள் நுழைந்து 'ஜோ'என பதியப்பட்டிருந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைத்துப் பார்த்தாள் ஷோபனா. ஜோனதனின் இலக்கத்தை இம்முறையும் அடைய முடியவில்லை. 'ப்ச்..' என்று சலிப்பாய் இதழ் பிரித்தவளின் இதயத்திலும் சின்னதாய் சிணுக்கம்...

பின்னே, நிறைய தடவைகள் முயற்சித்துப் பார்த்தாயிற்று. புலனத்தில் நேற்றைய தினம் அவள் அனுப்பியிருந்த மெஸேஜ் இன்னும் ஒற்றை சரியிலேயே நிற்கின்றது. 'அவளது இலக்கத்தை தடைப்படுத்திவிட்டானா என்ன?' மூளை கேள்வியெழுப்பிய மறுகணமே 'இருக்கவே இருக்காது' என்று பதில் தந்தது ஷோபாவின் இதயம்.

'நான் வந்த விடயமறிந்தால், என்ன செய்வானோ...' என எண்ணியவளின் இதழ்களில் புன்னகையின் சாயல்.

அவனுக்கு எப்படியாவது தெரியப்படுத்திவிடும் முனைப்பில் ஓடிச்சென்று, அம்மாவின் போனையெடுத்து அதிலிருந்து ஜோவின் எண்ணிற்கு, தான் வந்திருப்பதாக மெசேஜ் அனுப்பினாள். உடனேயே பார்த்துவிட்டிருந்தான். இடக்கை பெருவிரல் நகத்தைக் கடித்தபடி அவனது பதிலுக்காக காத்திருந்தாள் இவள்.

அப்போது அவளது போனுக்கு புதிய எண்ணிலிருந்து டெக்ஸ்ட் பண்ணியிருந்தான் ஜோ. 'நாளைக்கே அவளை சந்திக்க வேண்டுமாம். XYZ கஃபேயிற்கு வரமுடியுமா?...' என கேட்டிருந்தான். உடனேயே 'okay' என்பதாக அனுப்பியவளின் வதனம், சந்தோஷத்துக்கும் வெட்கத்துக்கும் இடையேயான ஓர் அழகிய முகபாவத்தைக் காட்டியது.

எத்தனையோ நாட்கள் இல்லையில்லை, எத்தனையோ மாதங்களின் பின்னர் அவளுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறான் ஜோ. அதைத்தான் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஷோபனா.

உயர்தரத்தின் இறுதி வருடத்தில்தான் ஷோபாவும், ஜோனத்தனும் காதல் சொல்லிக்கொண்டார்கள்.

காதல் என்றான பின்னும் நட்பின் எல்லை மீறாது பேசும் தோழனை, அவளுக்கு மிகப்பிடித்தது. காதல் விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றதற்கு, சரியென சிறுபிள்ளை போல் மீண்டும் மீண்டும் தலையாட்டியவனைப் பிடித்தது. வகுப்புத் தலைவனாக பொறுப்பாய் நடக்கும், ஆளுமைமிக்கவனைப் பிடித்தது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அவளுக்கு பிடித்த வெளிநாட்டு சாக்லேட்களை ரகசியமாய் வாங்கித்தந்த புதுக்காதலனைப் பிடித்தது.

பொங்கல்விழாக் கொண்டாட்டத்துக்கு பட்டுவேஷ்டி-சட்டை அணிந்துவந்த கிறித்துவக் குமாரனை, ஷோபனா தமிழ்நேசன் மிக்க ஆழமாக நேசிக்கத் தொடங்கியிருந்தாள்.

இருவரும் விரும்பத் தொடங்கிய பின்னர் நேரில் பேசுவது குறைவு. வாட்ஸப் மூலம் தான் காதலை வளர்த்தார்கள். தரைக்கும் ஆகாயத்துக்கும் இடையிலே, தான் அழகெனக்காணும் அத்தனையையும் நேசிப்பவனிடம் ஒவ்வொன்றாக பகிர்ந்து, சந்தோஷித்துக் கொள்வாள் ஷோபா.

உயர்தர பரீட்சை முடிந்தது.
அதன்பின் ஒரு வாரம் போயிருக்கும். காலையில் போட்ட மெஸேஜிற்கு ஜோவிடமிருந்து பதில் வரக்காணவில்லை.

மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தவள், அறைக்கதவு தட்டப்படும் சத்தத்தில் எழுந்துபோய் திறந்தாள். அவளின் அண்ணா ஷங்கர் நின்றிருந்தான். கேள்வியாய் நோக்கியவளிடம், தனது கையிலிருந்த அவளின் கைப்பேசியை நீட்டினான்.

அவள் வாங்காது,
"என்னண்ணா...?" என்றாள்.
குரல் சாதாரணமாய் இருந்தாலும், ஷோபாவுக்கு வியர்க்க தொடங்கியது.

"சொல்றன், வா ஷோபா.." அவளின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டே உள்ளே வந்து,அவளைக் கட்டிலில் அமரச்செய்தான்.நாசியில் தொடங்கி நாடிவரை, இடக்கரத்தினால் அழுந்தத் துடைத்துக்கொண்டே அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள் ஷோபனா.

"என் போன்ல டேட்டா இல்ல. ஹொட்ஸ்பாட் ஒன் பண்ணலாமென்டு உன்ட போன் எடுத்ததுல, ஒரால்ட்ட இருந்து உனக்கு வந்த மெஸேஜ் சிலதை பாத்துட்டுத்தான் இங்க வந்தன்."

சற்றே கடினம் கலந்த குரலில் கூறிவிட்டு, அவளை அழுத்தமாக பார்த்து நின்றான்.

"அண்ணா..."
என அவளுக்கே கேட்காதவாறு அழைத்தவள், எழுந்துகொள்ள முற்படவும், அதைக் கைநீட்டி தடுத்தவன்,

" இந்த வயசுல இதெல்லாம் வர்றது தான். அண்ணா உனக்கு இதுக்காகஎல்லாம் அடிக்கப்போறதோ, இல்ல இத எல்லார்ட்டயும் சொல்லி உன்ன சங்கடப்படுத்தப் போறதோ இல்ல. ஆனா இது எப்பவுமே சரியா வராது ஷோபா..."

என மென்மையாக கூறியவன், போனை அவளிடம் நீட்டி,

"நிதானமா யோசிச்சிப் பாரு..."
எனக்கூறி அவளது தலையை மெதுவாய்த் தடவிவிட்டு அறையிலிருந்து வெளியேறிவிட்டான் .

வன்முறையோ, அடக்குமுறையோ இன்றி புத்திசாலித்தனமான முறையில் தங்கையின் விஷயத்தினைக் கையாண்டிருந்தான் ஷங்கர். அது நன்றாகவே வேலை செய்தது.

ஷோபா குற்றவுணர்வின் மிகுதியால், இரு நாட்களுக்கு போனைத் தொடவில்லை.மூன்றாம் நாள் ஜோனதனுக்கு முழுதையும் ஒற்றை பந்தியில் வாட்ஸப்பில் அனுப்பினாள். பந்தி இறுதியில் 'சொரி ஜோ... நாம இனி பேச வேணாம்' எனவும் சேர்த்திருந்தாள். நிமிடங்கள் தாமதித்து, சரி என்றவன் அதன் பின் பேசவில்லை.

இவளுக்கு தான் அவனுடன் பேசாமலிருப்பது பெரும் கஷ்டமாய் இருந்தது. கொழும்பு வந்து இரு வருடங்கள் கடந்த நிலையில் அவனது பிறந்தநாளன்று அழைத்துப் பேசினாள். பழசைப் பேசி தன்னை சங்கடப்படுத்தாத 'ஜோ', மீண்டும் ஷோபா இதயத்தில் இடம்பிடித்துக் கொண்டான்.

அன்றிலிருந்து எட்டு மாதங்களுக்கு ஒருதடவையோ அல்லது வருடத்தில் ஒரு தடவையோ அவனுக்கு அழைப்பதை வழக்கமாக்கியிருந்தாள். பழைய நண்பர்கள் போல சாதாரணமாகவே பேசிக்கொள்வார்கள்.

அண்ணா சொன்ன 'சரியா வராது...' என்றதன் அர்த்தம் சரிவரத் தெரிந்திருந்தாலும், ஒரு நாள் மட்டும் தானே என மனதை சமப்படுத்திக் கொள்வாள்.

ஷோபாவுக்கு இது எங்கு போய் முடியுமெனத் தெரியவில்லை. தெரிய விரும்பவில்லை என்பதே உண்மை. அவனுடன் பேசும் அந்த ஒருநாள் தரும் சந்தோஷத்தை எண்ணியே அடுத்தமுறை பேசும்வரைக்குமான நாட்களைக் கடத்திக்கொள்வாள்.

அவள், அதன் பிறகு யாரையும் விரும்பவில்லை; அவளுக்கு அவனைத்தவிர வேறு எண்ணமும் இல்லை. அவனும் அவ்வாறான நிலைப்பாட்டில் தான் இருக்கிறான், என்பதை அவன் வாயிலாக அறிந்துகொண்டு நிம்மதிப்பட்டுக்கொள்வாள்.

சென்றவருடம் அவள் அழைத்தபோது, இணைப்புக் கிடைக்கவில்லை. அதன் பின்னர் இன்றுதான் அவனிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு....
அது தந்த புது உற்சாகத்துடன் அறையில் பொருட்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கினாள் பெண்.

இந்த எட்டு வருடங்களில் ஷோபனா வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள். அவள் கொழும்பு பல்கலைக்கழகத்தில்
பட்டம்பெற்று, ஆங்கில இலக்கியத்திலே ஸ்பெஷல் முடித்து, ஆசிரியையாக நியமனம்பெற்று, ஒரு ஸ்கூலில் இரு வருடங்கள் வேலையும் பார்த்திருந்தாள்.

என்ன ஆனாலும் அவன் பற்றிய எண்ணங்கள் மட்டும் மாறவில்லை. மறக்கவே நினைத்தாள். முதன்முதலில் சலனத்தை ஏற்படுத்திய அந்த பள்ளிப்பருவ 'ஜோ' இந்த ஆங்கில ஆசிரியை இதயத்தில் தமிழ் போல வாழ்கிறான். இன்னும்...









 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

Top Bottom