• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 18

ஷாரிகா

Member
Staff member
VIN - 18

எப்போதோ ஆரம்பித்த பயணம் எங்கே முடிவெனக் காட்டாமல் நீண்டநேரமாய் நீள்கின்றது. கண்களை மூடினால் கும்மிருட்டு; பயமாக இருந்தது. தூங்கவும் முடியவில்லை ஷோபனாவுக்கு.

அவளருகில் அமர்ந்திருந்தவன், கை விரல்களால் தன் மடியில் தாளமிட்டு கொண்டிருந்தான். அந்த நீண்ட விரல்களுடன் தன்னதையும் கோர்த்துக் கொண்டவள், கண்ணாடியை முழுதாக திறந்து வெளியே எட்டி, இரா வானத்தை பார்த்தாள். வெண்ணிலவு தெரிந்தது; விண்மீனும் தெரிந்தது. இவையெல்லாம் தவிர தூரத்தில் வேறேதோர் வெளிச்சமும் தெரிந்தது.
அருகிலிருந்தவனின் கைவளைவை, பற்றிக்கொண்டு தோளில் சாய்ந்தவளுக்கு, அவன் முகம் பார்க்க வேண்டும் போலிருக்க தலையை நிமிர்த்தினாள். கன்னத்தில் எங்கிருந்தோ விழுந்தன நீர்த்துளிகள் .

'இதென்ன வேணுக்குள்ள மழ பெய்யுது.'

வெள்ளவாய-வயல்பகுதிகளின் நடுவே அமைந்திருந்த அந்த பிரபலமான ஹோட்டலின் முதல்தள அறையொன்றிலே ஸ்பிரிங் மெத்தையில் ஒருபக்கமாய் சரிந்து படுத்திருந்தாள் ஷோபனா.

கன்னத்தில் விழுந்த நீர்த்துளிகளை கையால் துடைத்துக் கொண்டவளுக்கு தூக்கம் கலைந்ததில் திடுக்கிடல் இல்லை. தோள்சாய்ந்த போது கிடைத்த, அந்த இதம் தொலைந்த எரிச்சல் மட்டுமே.

இரவு எட்டு மணியளவில் பயணத்தை துவங்கியவர்கள், நள்ளிரவை தாண்டிய நேரத்தில்தான் இந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

குழம்பிய தூக்கத்தை தொடரநினைத்து கழுத்துவரை போர்த்தியிருந்த போர்வையை மேலே இழுக்க இழுக்க அது வரமாட்டேன் என்றது.

எழுந்தமர்ந்து என்னவென்று பார்த்தவள், வருண் போர்வையை பிடித்து வைத்திருப்பதைக் கண்டு கண்களை சுருக்கி அவனை முறைத்தாள்.

அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்திருப்பான் போலும். ஈரம் இன்னும் காயாத முகத்தை ஒற்றைக் கையால் துடைத்து வழித்தவன், மீண்டும் அவள் மீது நீர்த்துளிகளை தெளித்தான்.

"வரூ..ண்.." குரலில் தூக்கக் கலக்கமும், சிணுங்கலும் போட்டி போட்டன.

" என்ன ஙெரூ...ண்" அவள் போலவே சிணுங்கிக்காட்டி பழித்தவன், "டிரைவர் அண்ணா முதக்கொண்டு ஆரா வரைக்கும் எல்லாருமே எழும்பியாச்சு." என்றும் சொல்ல,

"என்ன இப்ப?" சூடாய்க் கேட்டாள் அவள்.

" யாழிஆக்கள் மாதிரி ஜோடியா சன்ரைஸ் பாக்க குடுத்து வைக்கல்லயே. பீஸ்ஃபுல்லா தனியவாவது பாப்பமே என்டு பெரிய காடு தாண்டி, வயலெல்லாம் கடந்து, மலையுச்சிக்குப் போனா.. அங்க வரைக்கும் கேக்குது, நீ குறட்ட விடுற சத்தம்." ஒரு மாதிரியாய் முகத்தை வைத்துக்கொண்டு, பொய்யாய்ச் சலித்தவனை நோக்கி தலையணை ஒன்று வேகமாய் பறந்து வர அதை கேட்ச் பண்ணினான்.

"ஹேய்! கேட்கணும் என்டு நினைச்சன். அதென்ன நித்திரையில சிரிக்கிறாய்... தலவாணியக் கட்டிப்பிடிக்கிறாய்... என்ன, என்ன விஷயம்??" கண்களில் விஷமம் வழிய கேட்டான் அவன்.

"சொல்ல ஏலாது!" என்று உதட்டை ஒருபக்கமாய் சுழித்து, மோவாயை வெட்டிக்கொண்டு முகத்தைத் திருப்பியவள் மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

மென்நீல நிறத்தில் ஆங்காங்கே சிறிய வெள்ளைப் பூக்கள் சிதறிய லோங் ஸ்கேர்ட், வெள்ளை நிற ப்ளைன் டி ஷர்ட்டில் தயாராகியிருந்த ஷோபனா, கழுத்தைச் சுற்றிப் போட்டிருந்த நீலநிற ஷால் காற்றில் படபடக்க, பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த ஹோட்டலின் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரிய நீச்சல் குளத்தினை அடுத்ததாக, கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் வயல் நிலங்களே.

வயல்களில் ஆங்காங்கே நின்ற மயில்களையும் கொக்குகளையும் ஃபோனில் இல்லாது, நிஜத்தில் கண்ட சந்தோஷத்தில் கைதட்டி குதூகலித்தாள் ஆரா. தங்கையின் கையைப் பிடித்தபடி அருகிலேயே நின்றிருந்தான் ஆதி.

பிள்ளைகளில் பார்வையை படித்தபடி கதைபேசிக் கொண்டிருந்தனர் சிவா-யாழினி தம்பதியர். நீச்சல் குளத்தின் மேடையில் போடப்பட்டிருந்த நீண்ட பிரம்பு நாற்காலியில் சம்மனமிட்டு அமர்ந்திருந்த யாழினி, கணவன் ஏதோ கூற கலகலவென நகைத்தாள். அவர்களைப் பார்த்திருந்தவளின் முகத்திலும் புன்னகை.

ஷோபனாவின் அருகே வந்த வருண், அவளிடம் சூடான டீ கப்பை நீட்ட மறுக்காமல் வாங்கி குடித்தாள்.

"சும்மா சொன்னன். நீ குறட்டையெல்லாம் விடல. கோவம் பொயிட்டு தானே..?" வருண் கேட்டதும், வேண்டுமென்றே தன் போனிடெயில் துள்ள மீண்டும் முகத்தைத் திருப்பினாள்.

அவளை நெருங்கி வந்தவன், ஷோபனாவின் நாடியை மெல்லப்பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான். இதை முற்றிலும் எதிர்பார்க்காதவள் அவனைப் பார்த்தது பார்த்தபடி அசையாமல் நின்றாள். இப்போது இரு கைகளாலும் அவளின் கன்னங்களைப் பற்றியவனின் விரல்களிலும் மெல்லிய நடுக்கம்.

"இந்த.. உடுப்புல நல்ல அழகா இருக்காய்..!" வார்த்தைகள் அவள் செவிப்பறையில் மோதுகையில் வலித்து விடுமோ எனும் அளவிற்கு, மென்மையான தொனியில் சொன்னான்.

ஷோபனாவின் கண்கள் விட்டால் வெளியே தெறித்துவிடுமளவிற்கு விரிந்தன.

'இப்படி எல்லாம் கதைக்கிறது வருண் தானே.. இல்லாட்டி நைட் நைட்டா காட்டு வழியா வந்ததுல பேய் கீய் ஏதாச்சும் பிடிச்சிட்டுதோ..' கண்டபடி யோசித்தது அவளின் இதயம்.

வருணின் முகம் இன்னும் நெருக்கமாய் வரக்கண்டு அவளையறியாமல் கீழே நின்ற யாழினியைப் பார்த்து, "அக்கா!" என்று சத்தமாய்க் கத்தி அழைத்திருந்தாள்.

சட்டென்று விலகி நின்றான் வருண்.

மேலே அண்ணார்ந்து பார்த்த யாழினி, ஷோபனாவை தங்களிடம் வருமாறு கையசைக்க, வேகமாய் அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

*******************

சிறிது நேரத்தில் இரு பெரிய லக்கேஜ்களையும் கையில் தூக்கியபடி கீழே இறங்கி வந்தவனின் தோளில் குறுக்காக ஷோபனாவின் இரு ஹேண்ட் பேக்குகளும் மாட்டப்பட்டிருந்தன. பார்த்தவளுக்கு ஒருமாதிரி குற்றவுணர்வாகிவிட்டது.

'பாவம் அவர் தனியா எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வர்றேர். சரியான சுயநலவாதிடி நீ...' மனசாட்சி திட்டியதில், மெள்ளமாய் அவனருகில் சென்று பேக்குகளுக்காக கையை நீட்டினாள்.

அவளை சிறிதும் கண்டு கொள்ளாதவன் கைப்பைகளை கழட்டி லக்கேஜின் மேல் வைத்துவிட்டு உணவுக்கூடம் நோக்கி நடக்கத் தொடங்கினான்.

கோவத்தில் திட்டுவான் என்று தான் நினைத்திருந்தாள். ஒன்றும் பேசாமல் போபவனைப் பார்த்து "ஐயோ!" என தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

****************

சாப்பிட்டு முடித்த பின் எல்லோரும் வேனில் ஏறினார்கள். பின் பகுதியின் முதல்வரிசை சீட்டில் யாழினியும் ஷோபனாவும் அமர்ந்திருக்க, அடுத்த வரிசையில் சிவாவும் ஆதியும் இருந்தனர்.

யாழினி ஷோபாவிடம் வெளியே எதையெதையோ பார்க்கும்படி காட்டினாள். கண்கள்கொண்டு பார்த்தாலும் ஷோபனாவுக்கு ஒன்றும் கருத்தில் பதியவில்லை. கவனம் முழுக்க டிரைவருக்கு பக்கத்திருக்கையில் அமர்ந்திருந்து போனில் யாருடனோ கதையளந்து கொண்டு வருபவனிடமே. ஒரு தடவையாவது பின்னால் திரும்பினான் இல்லை.

அவள் செய்தது ஒரு வகையில் தவறுதான். அதற்காக இந்த பாராமுக வைத்தியம் எல்லாம் அதிகப்படி.' என்ன செய்யலாம்...' கழுத்திலிருந்த செயினை பற்களால் கடித்தபடி மூளையைக் கசக்கலானாள்.

****************

ராவண எல்ல நீர்வீழ்ச்சியுள்ள இடத்தை அடைந்தனர். வேனிலிருந்து இறங்கி சற்று தூரம் நடந்து சென்றால் வீதியில் நின்றவாறே அருவி வீழும் அழகை பார்க்க முடியும். சிவா இறங்கிவர மறுத்துவிட்டான்.

யாழினி பிள்ளைகளை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள் . ஷோபனாவையும் போட்டோக்கு வரும்படி அழைக்க மறுத்து விட்டவள், டிரைவருடன் பேசிக் கொண்டிருந்த கணவனுக்கருகில் வந்து நின்று ஒற்றை விரலால் அவன் தோற்பட்டையை சுரண்டினாள். சற்று தள்ளி வந்தவன், "என்ன?" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

"சொரி.." கெஞ்சல் குரலில் கேட்டவளுக்கு பதில் மொழியாது அருவியைப் பார்த்து நின்றான்.

"இப்படி கதைக்காம இருந்தா சரியா..?"

"நீ செஞ்சது மட்டும் சரியா?? உனக்கு பிடிக்கலன்டு சொல்லி இருக்கலாமே. அதென்ன அக்காவ கூப்பிட்டுக்கொண்டு ஓடுறது. நானென்ன கொடுமையா செஞ்சனான்..?" வருண், ஒரு மாதிரிக் குரலில் கேட்கவும்,

"ஐயோ!" என உதடுகள் குவித்து சொன்னவள், அவன் கையை தன்னிரு கரங்களால் பற்றிக்கொண்டு அவன் தோளில் முகம் புதைத்து "சொரி" என்று முனுமுனுத்தாள்.

திரும்பி அவளைப் பார்த்தவனது முகத்தில் சற்று இளக்கம்.

"ஹை..! இந்தா சிரிச்சிட்டீங்க. வாங்க ஃபோட்டோ எடுப்போம்" ஷோபனா அழைக்க,

"எனக்கு மூட் இல்ல ஷோபா. நீ யாழி அக்காவோட போய் எடன்."

"இந்த உடுப்புல வடிவா இருக்கனென்டு சொன்னனீங்கல்லோ? எனக்கு உங்களோட தான் எடுக்கனும்." தன் தோளில் வாகாய் சாய்ந்தபடி கேட்பவளிடம், அவனால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

நான்கைந்து செல்ஃபீக்களைக் கிளுக்கிவிட்டு வேன் நோக்கி நடந்தனர்.

*******************

அடுத்ததாக பசுமை நிறைந்த மலைத்தொடர்களின் மத்தியில் அமைந்துள்ள Adisham Bangalow இற்கு வந்தனர். பிரிட்டிஷ் காலனித்துவக் காலத்தைச் சேர்ந்த இணையற்ற கட்டிடக்கலையே இதன் மிகப்பெரிய சிறப்பு. தற்காலத்தில் கிறிஸ்தவ மடாலயமாக செயல்படும் இந்த மாளிகையை, சுற்றிவளைத்துக் காணப்படுகின்ற ஓர்க்கிட், டேலியா, ரோஜா மலர்த்தோட்டம்- இயற்கை தீட்டிய ஓர் வண்ணமயமான எல்லைக்கோடு.

மாளிகையின் உள்ளேயும் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த நூதன அழகுகள்... ஒவ்வொன்றாய் ரசித்துவிட்டு வெளியே வந்தவர்கள், மடத்தின் வாசலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, அங்குள்ள துறவிகளால் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும், மரத்தக்காளி, ஸ்ட்ராபெரி, பீச் பழங்களின் ஜேம் பாட்டில்களில் சிலவற்றையும் வாங்கிக்கொண்டு புறப்பட்டனர்.

மதிய உணவு வேளையில் வருணின் கைப்பேசி சிணுங்க எடுத்துப் பேசியவன்,
"குமரன் வந்து சேந்துட்டான். எல்லாரும் கெதிய சாப்பிட்டு முடிங்க. சரியா ஒரு மணிக்கு ட்ரெயினாம்..." அவசரப்படுத்தினான் வருண்.

*******************

ஹப்புதளை ரயில் நிலையம்.

மலையக ரயில் பாதையிலுள்ள பழமை மாறாத ஒரு முக்கிய இடைநிலையம். பரபரப்புக் குறைவு; ரயில் வந்து போகும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் அமைதியாகவே இருக்கும்.

புகையிரத நிலைய நடைமேடையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த பழைய இரும்பு பெஞ்ச் ஒன்றில் தலையை நன்றாக பின்னால் சரித்து கண்களைமூடி அமர்ந்திருந்தான் குமரன். மடியில் சிறிய டிராவலிங் பேக்.

நேற்று வருண் அவனையும் தங்களுடன் வருமாறு அழைக்கவும், சம்பத்துடன் ஒருவாறு மல்லுக்கட்டி மூன்று நாட்கள் லீவு போட்டுக்கொண்டு கண்டியிலிருந்து ஓடோடி வந்துவிட்டான். இப்போது தூங்கவெல்லாம் இல்லை; வெறும் பயணக்களைப்புக்கான கண்மூடுதல் தான்.

கைப்பேசியில் அழைப்பொலி கேட்கவும் உடனே எழுந்து, முதுகில் பேக்கை மாட்டிக்கொண்டவன் சற்றுத்தொலைவில் வந்து கொண்டிருந்த வருண் மற்றும் குடும்பத்தினரை கண்டுவிட்டு அவர்களை நோக்கி நடந்தான்..

********************

டிரைவர் தவிர மற்ற அனைவரும் ஹப்புதளையில் இருந்து நானுஓயாவிற்கு செல்வதற்கான ரயிலில் ஏறியமர்ந்தனர். குமரன், வருண் இருவருமாக சேர்ந்து சிவாவையும் ஒருவழியாக ஏற்றியிருந்தனர். ஃபர்ஸ்ட் கிளாஸ் என்பதால் நெரிசலில் சிக்கித்தவிக்க வேண்டியதில்லை.

ரயில் நகரத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இருபுறமும் பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டங்கள் கண்முன் விரிந்தன. ஜன்னலோரமாக அமர்ந்திருந்த ஷோபாவின் மடியில் ஆராதனா. பக்கத்தில் ஆதி.

தலையில் கூடையணிந்தபடி தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு கைகாட்டிக் கொண்டு வந்தாள் ஆரா.

தூரம் போகப்போக ஜன்னலுக்கு வெளியே பள்ளத்தாக்குகள், புல்வெளிகள், மலைச் சரிவுகள் என காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன. சூழ்ந்திருந்த பசுமை மட்டும் மாறவே இல்லை.

ஷோபனாவுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் வருணும், குமரனும். நண்பனுடன் வளவளத்துக் கொண்டு வந்தாலும் பார்வை அடிக்கடி எதிரில் அமர்ந்திருப்பவளைத் தொட்டு மீண்டது. அவளுமே அவன் பார்வைக்கு எதிர்வினையாக கன்னங்கள் சிவக்க ஜன்னல்பக்கமாய்த் திரும்பிப் புன்னகைப்பாள். இன்று காலையிலிருந்தே ஏதோ ஒரு மாயவலைக்குள் சிக்குண்ட உணர்வு இருவருக்கும்.

"நான் வேணுமெண்டா என்ட பெயர நந்திவேல் என்டு மாத்தவாடா மச்சான்?" குமரன் திடீரென்று கேட்கவும்,

"என்னடா உளர்றாய்?" என்றான் வருண்.

"இல்ல...(சிவா-யாழினி பக்கமாக கண்ணால் காட்டி) அவங்க பழைய ஜோடி. நீங்க புது ஜோடி. நடுவுல நான் யார்ரா? நந்தி தானே..?"

அவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இப்டி லூசுத்தனமா ஏதாவது யோசிக்காம, ஷோபாவ இம்ப்ரஸ் பண்றதுக்கு ஏதாவது ஒரு ஐடியா யோசிச்சு சொல்லன்டா."

தெரியாது என்பதாக உதடு பிதுக்கி கைகளை விரித்த குமரன்,
"முன்ன பின்ன செத்திருந்தாத் தானேடா சுடுகாடு தெரியும்?" என்க,

"ரைட்டு விடு.. போயும் போயும் ஒரு தனிக்கட்டைகிட்ட இந்த கேள்விய கேட்டது தப்புத்தான்."

குமரன் சில நிமிடங்கள் ஏதோ யோசித்தபடி கைவிரல்களினால் காற்றில் கணக்குப் போட்டவன், பின் சட்டென்று நண்பனிடம் திரும்பி,
அவன் காதிற்குள் எதுவோ சொன்னான்.

"ஓகே.." என்ற வருண், உடனேயே ஆதியை அழைத்து, மடியில் இருத்தி அவன் காதிற்குள் எதுவோ ஓத, சரி என்பதாக மண்டையை மண்டையை ஆட்டிய ஆதி ஷோபனாவை,

"மாமி! " என்றழைக்க,

"என்ன ஆதி?"

"வருண் மாமாக்கு உங்கள எவ்ளோ புடிக்குமென்டு தெரியுமா?"

இமையுயர்த்தி வருணை ஒருமுறை பார்த்துவிட்டு,
"எவ்ளோ..?"

"இந்த ட்ரெயின் நீளத்துக்கு புடிக்கும்." என்ற ஆதியிடம்,

"ஹ்ம்ம்.. பரவால்லயே. ஓரளவுக்குப் பெரிய ட்ரெயின் தான் இது." என்றாள் சாதாரணமாய்.

அவள் வேறுபதில் கூறியதில் அடுத்த டயலோக்கை மறந்துவிட்ட ஆதி திருதிருவென முழிக்க,

"இல்லம்மா ஷோபனா. இப்ப நீங்க, ஆதிட்ட அவ்வளோக்கு தானா புடிக்கும் என்டு கேக்கணும்?" என்ற குமரனை வருண் கண்களால் எரித்தான்.

"அதுக்கென்ன கேட்பமே. அவ்வளோக்கு தானா புடிக்கும்?"

"ம்ஹூம். இல்ல, இந்த தண்டவாள நீளத்துக்குப் புடிக்கும்."

ஷோபா உதடுகளின் நடுவில் ஒளிந்த புன்னகையுடன் வருணைப் பார்த்து 'அப்படியா?' எனக்கண்களால் வினவ,

வருண் படுஸ்டைலாக தலை முடியைக் கோதிவிட்டான்.

அவன் விரல்களைப் பிடித்து தலைகோதலை நிறுத்திய குமரன், "ஷோர்ட் ஃபிலிம் டயலாக் தானே அது... ஏன்தம்பி சொந்த வசனம் பேசின மாரி சீனப் போர்றிங்க.." என்க,

"பரவால்ல அண்ணா. எனக்குப் பிடிச்சித்தான் இருந்தது." என்று ஷோபா சப்போட்டுக்கு வர, குமரனின் முகத்துக்கு நேரே குனிந்த வருண், கெத்தாய் தன்சட்டைக் கோலரை உயர்த்திக் காட்டினான்.

"கேட்டியாடா ஆதி, அந்தா அவங்களுக்கு பிடிச்சிட்டாமே.. இனிமே நம்ம சேவை வருணுக்கு தேவையில்ல. சோ,நீ இப்டீக்கா குமரன் மாமாட்ட வந்தியன்டா சரி.." என்று அவனைத் தன் மடியில் அமரச்செய்தான் குமரன்.

அவர்களுக்கு நேர் வரிசையில் அமர்ந்திருந்த சிவாவுக்கும் யாழினிக்கும் என்ன சங்கதி என்று முழுதாக தெரியாவிட்டாலும்கூட நடக்கும் கூத்தைப் பார்த்தே சிரித்தனர்.

இப்படி கேலியும் கிண்டலுமாக , வெட்கமும் காதலுமாக அந்த இரண்டு மணிநேர இரயில் பயணத்தை இனிதே அனுபவித்தனர்.

நுவரெலியா நகரத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் நானு ஓயாவை நெருங்கியபோது, குளிர் இன்னும் கொஞ்சம் கூடியிருந்தது.

நானு ஓய ரயில்வே ஸ்டேஷனில் ட்ரைவர் வேனுடன் காத்திருந்தார். இவர்கள் ஏறியதும் வண்டி நுவரெலியாவை நோக்கிப் புறப்பட்டது.

சாலையின் இருபுறங்களிலும் உயரமாக நின்ற யூகலிப்டஸ் மரங்கள் குளிர்காற்றில் மெதுவாக அசைந்து வரவேற்றன. இடையிடையே ஆங்கிலேயர் காலத்து பழமையான கற்சுவர் கட்டிடங்கள் கண்ணில் பட்டன. பசுமையான தேயிலைத் தோட்டங்கள், மலைச் சரிவுகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சமும், குளிர்ந்த வானிலையும் அந்தப் பயணத்திற்கு ஒரு தனிஅழகைச் சேர்த்தன.

அன்றைய நாள் காலையிலிருந்தே பயணம், சுற்றிப்பார்த்தல், ரயில் சவாரி என தொடர்ச்சியாக அலைந்திருந்ததால், அனைவரின் உடலிலும் சோர்வு. ஹோட்டலை அடைந்து இரவுணவை முடித்ததும், ஒவ்வொருவரும் தங்களது அறைகளுக்குச் சென்றனர். குமரன், ட்ரைவர் அண்ணாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டான்.

கட்டிலில் விழுந்த சில நிமிடங்களிலேயே அந்த நாள் முழுவதும் சேர்த்த நினைவுகளுடன் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிப் போனார்கள்.

********************

 

ஷாரிகா

Member
Staff member
அடுத்த நாளும் விடிந்தது.

நுவரெலியாவிலுள்ள சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் வீடு நோக்கிப் புறப்படுவதே அன்றைக்கான திட்டம்.

முதலில் கிரகோரி (Gregory ) ஏரிக்கு சென்றவர்கள், அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு நீர்ப்பரப்பை ரசித்தபடி ஏரிக்கரை வழியே நடை போட்டனர்; மிதி படகுகளில் ஏரியை உலாவந்தனர்.

பின்னர் ஆதியும், ஷோபனாவும் பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் சிறிது தூரம் குதிரை சவாரி செய்தனர். குதிரையில் ஏறி அமர்ந்தவளுக்கு, மூன்று வருடங்களுக்கு முன்னர் நுவரெலியாவிற்கு குடும்பமாக ட்ரிப் வந்திருந்த போது, அவளும் அபியும் இதே போலவே குதிரை சவாரி செய்தது நினைவுக்கு வந்தது.

அன்று அவன் டியூஷன் கிளாஸ் முடிந்து வந்த கையோடே தங்களுடன் கூட்டி செல்லலாம் என்று சித்தி வீட்டில் ஷோபனாவும் வருணும் காத்திருந்தார்கள். வந்தவனின் முகமே சரியில்லை. எங்கேயும் தூரப்பயணம் போவதென்றால் முதலாளாக நிற்பவன், அன்று ஒரேடியாக மறுத்துவிட்டான். ஷோபனா திரும்பத் திரும்ப வற்புறுத்தி அழைக்கவும், "வரேல்லன்டா சும்மா விட்டுத்தொலைங்களன்." என்று அவளிடம் பாய்ந்து விட்டு, விடுவிடு என படியேறி சென்று விட்டான்.

ஸ்கூல் அல்லது டியூஷனில்தான் ஏதாவது பிரச்சனையாக இருக்க வேண்டும். ஊருக்குத் திரும்பியதும் அவனிடம் அதுபற்றி ஒழுங்காக விசாரிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள் ஷோபனா.

******************
அடுத்து விக்டோரியா பார்க்கிற்கு சென்றனர். பிரித்தானியப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இப்பூங்கா, அரிய வகைப் பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகளை காண்பதற்கான மிகச்சிறந்த இடம்.

நுவரெலியா வந்துவிட்டு தேயிலைத் தோட்டத்திற்கு செல்லாவிடின் தெய்வக்குத்தமாகிவிடும் என்பதால் அடுத்து டீ எஸ்டேட் ஒன்றிற்கு வண்டியை விட்டனர். தேயிலை தொழிற்சாலைகுள் சென்று சுற்றிப்பார்த்து, தேயிலைத்தூள் உற்பத்தி பற்றி அறிந்து கொண்டவர்கள், புதிதாக தயாரிக்கப்பட்ட தேநீரையும் பருகிச் சுவைத்தனர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களுடன் பேசியதெல்லாம் புதுவித அனுபவமாய் இருந்தது.

****************

மதிய உணவிற்கு ரெஸ்டாரன்ட் ஒன்றில் ஓடர் கொடுத்துவிட்டு எல்லோரும் வெளியே வேனில் காத்திருந்தனர்.

மொட்டை மாடி மேலே
ஒற்றை மழையாகிறேன்
ஒட்டடையின் மேலே
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்..

உணராத எதுவோ
எனை தாலாட்டுதே
தினம்தோறும் அதையே
மனம்தான் கேட்குதே..

ஷோபனாவுக்கு மிகப் பிடித்த பாடலொன்று ரேடியோவில் ஒலிக்க தானும் சேர்ந்து ஹம் பண்ணினாள்.

ஃபோனில் எதையோ பார்த்தபடி, வருணும் குமரனும் வேலை விஷயமாக தீவிர டிஸ்கஷனில் இருந்ததில் அவள் பாடியதெல்லாம் கவனிக்கவில்லை.

"ஆஹா..! யார்றா அந்த சிங்கர் ஒஃப் சிலோன்?" பின்னாலிருந்த சிவா கேட்கவும், இருவரும் என்னவென்று இந்தப்பக்கம் திரும்பிப் பார்த்தனர்.

"ஐயோ.. நல்லா புடிச்ச பாட்டண்ணா. அதான் ஆர்வக்கோளாறுல கொஞ்சம் சத்தமா பாடிட்டன்." என்று வெட்கப்பட்டாள் ஷோபா.

"ஹ்ம்ம்... கார்த்திக் நேத்தா எழுதின பாட்டுகள் எல்லாமே கேக்கவும் நல்லாருக்கும்."

"ஓம் அண்ணா. சாதாரண விஷயங்கள கூட வித்தியாசமா அழகா எழுதியிருப்பேர். வரிகளுக்காகவே கேக்கலாம்."

அவள் சொன்னதை தலையசைத்து ஆமோதித்தவன்,

" நம்பிக்கையிலே எழும் பூவிலே... கொள்ளையழகு அதை பார்த்தாயா..
பள்ளம் நிறையும் மழைநீர் மேலே.. அம்மாடி வானவில்லை பார்த்தாயா..."

என்று அழகாய் பாடிக் காட்டிவிட்டு,

"இந்த பாட்டுவரி தெரியுமா?" என்று கேட்க,

"வாவ்!! இந்தப் பாட்டு தெரியும். ஆனா, சிவாண்ணா இவ்வளவு நல்லா பாடுவேரென்டுதான் தெரியாது." ஷோபா மெச்சுதலாய் சொன்னாள்.

டிரைவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த குமரனும் பாராட்டுதலாய் வாய்க்குள் விரல்நுழைத்து விசிலடிக்க,

வருண் அவனிடம், "மச்சான்! நீயும் உன்ட குரல்வளத்த காட்டலாமேடா.."

" அட! குமரன் அண்ணாவும் பாடுவேறா? அப்டியென்டா அவர் எழுதினதுலயே உங்களுக்குப் புடிச்ச பாட்டப் பாடுங்கண்ணா."என்ற ஷோபனாவை ஏதோ ஏலியன் போல பார்த்த குமரன்,
"ஏம்மா ஷோபனா, உனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?" என்று கேட்க,

"அதானே... நம்மாள்ட்ட போய் இப்படி கேக்குறீயே, அவர்லாம் பாட்டுல வைப் இருக்கா என்டு மட்டும்தான் பாப்பேர். வசனம், எழுதினவர் அதெல்லாம் என்டைக்கு பாத்திருக்கேர்..?" வருண் இப்படி சொல்லவும்,

"ஓஹோ! அங்க மட்டும் என்ன வாழுதாம்..??" குமரன் இடக்காய் கேட்டான்.

"மச்சான்.. வேனுக்குள்ள நம்மள மாதிரி ஆக்கள் தான் மெஜாரிட்டியே. என்ன யாழி, நீயும் எங்கட கட்சி தானே?" வருண் யாழினியிடம் கேட்க வேறு செய்ய,

"நோ.. நோ.. நான் ஆராவோட கட்சி. எங்களுக்கு கரடி மாமா, குரங்கு மாமா அந்தப்பாட்டு வரியெல்லாம் அத்துப்படி. " என்று யாழினி கெத்தாய்ச் சொல்ல,

மற்றவர்கள் இதழ்களில் மென்னகை.

"என்னா...து குரங்கு, கரடி எல்லாமே ஆராவோட மாமாவா? யூ மீன் வருண்??" நக்கல் வழியும் குரலில் கேட்ட குமரனை,

"ஹா.. ஹா.. நல்ல ஜோக் குமரன்சேர். பார்சல் பண்ணி முடிச்சிருப்பாங்க. வந்தீங்க என்டா போய் எடுத்துட்டு வந்துரலாம்.." என அவனை கடைக்குள் கூட்டிச் சென்றான் வருண்.

ஒரிடத்தில் வேனை நிறுத்தி சாப்பிட்டுவிட்டு, இராமாயண நிகழ்வுகள் இலங்கையில் நடந்ததை காட்டும் வகையிலான இடங்களான இராவணன் எல்ல, இராவணன் வெட்டு உள்ளிட்ட வரிசையில் அமைந்துள்ள சீதா அம்மன் கோவிலிற்கு சென்றனர்.

அதன் பிற்பாடு தங்கள் மாலை நேரத்தை ஆறஅமர ஹக்கல தாவரவியல் பூங்காவிலுள்ள பூக்களோடு வண்ணமயமாக செலவிட்டவர்கள்,
பின் அங்கிருந்தே மட்டக்களப்பு நோக்கிப் பயணப்பட்டனர்.
 
Top Bottom