• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 20

ஷாரிகா

Member
Staff member
VIN-20

"இத்துடன் _#####_ இன் இரவு நேர பிரதான செய்திகள் நிறைவு பெறுகின்றன. எமது அடுத்த பிரதான செய்திகளை காலை ஆறு மணிக்கு எதிர்பாருங்கள்.
வணக்கம்!"

தன் கணீர் குரலால் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செய்தி வாசிப்பாளினி, அமர்த்தலான ஒரு புன்னகையுடன் கைகூப்பினாள். தொலைக்காட்சித் திரையில் அவள் முகம் மறைந்த அடுத்த நொடி, அந்த சேனலில் எண்பதுகளின் வாசனை சுமந்த பழைய திரைப்படம் ஒன்று ஓடத் தொடங்கியது.

மஞ்சள் நிறத்தில் மெல்ல நகர்ந்த தொடக்க எழுத்தோட்டம் முடிவதற்குள், தமிழ்நேசனின் இமைகள் கனக்கத் தொடங்கின. தூக்கம் கண்களை அழுத்த, பெரியதொரு கொட்டாவியுடன் மெதுவாக எழுந்தவர், அறைக்குள் நடந்தார்.

அப்பா எழுந்து சென்றதும், ரிமோட்டை கையில் எடுத்த ஷோபனா ஒவ்வொரு அலைவரிசையாகத் தாவினாள். எதிலும் மனம் ஒட்டவில்லை. சலிப்புடன் மீண்டும் அதே பழைய படத்திற்கே வந்து நின்றாள்.

அவளருகில் அமர்ந்திருந்த அமுதா, சாதத்தைப் பிசைந்து, கையில் கவளமாக உருட்டி நீட்ட நீட்ட வாயைத் திறந்து திறந்து வாங்கிக்கொண்டே, அசிரத்தையாக திரையை பார்த்திருந்தாள்.

தட்டு காலியானதும் அமுதா,
"கொஞ்சம் போட்டெடுத்துட்டு வரவா, பிள்ள?"

"இல்லம்மா, போதும்."

"சரி. நீ போய் டேப்லட்ட போட்டுட்டு படு. நான் உடுப்ப மாத்திட்டு வாறன்."

ஷோபா மௌனமாக தலையசைத்து, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

கையில் தொலைபேசியோடு கட்டிலில் விழுந்தவள் திரையை உயிர்ப்பிக்க, வருணின் குறுஞ்செய்தி மின்னியது.

'கோவமில்லையே????????' ஒரேவரி. முடிவில் ஏழெட்டு வினாக்குறிகள்.

உதட்டோரம் தன்னிச்சையாய் ஒரு குறுநகை பூக்க, டெடி பேர் ஒன்று, கையைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு கோபத்தில் முகத்தை சுளித்துத் திருப்பிக்கொள்ளும் ஸ்டிக்கரைத் தேடியெடுத்து, பதிலுக்கு அனுப்பி வைத்தாள்.

அவன் பார்த்துவிட்டானா என ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால், 'லாஸ்ட் சீன்' ஒரு மணி நேரத்திற்கு முன் என்று காட்டியது. இன்னும் கண்டிக்கு போய் சேர்ந்திருக்க மாட்டான் போல.

அமுதா உள்ளே வந்து விளக்கை அணைக்க, இருள் அறையை நிறைத்தது. ஷோபாவும் தலையணையில் தலை சாய்த்து, கண்களை மூடிக்கொண்டாள்.

*************** .

அலாரத்தின் அரக்கத்தனமான அலறல் இல்லாததால், சனிக்கிழமை காலைப்பொழுது ஆறஅமர அமைதியாகவே கண் விழித்தது. போர்வையின் இதத்தில் இன்னும் கொஞ்சம் புரண்டவள், பின் மெல்ல எழுந்துகொண்டாள்.

காலைக் கடன்களை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தவள், சுடசுட ஆவிபறக்கும் தேநீரை கையில் ஏந்தியபடி அங்கிருந்த பலகைக்கட்டையில் குந்தியமர்ந்து, மில்க் பிஸ்கட்டுடன் நிதானமாக ருசித்தாள்.

கடந்தநாட்களில் காலைத் தேநீருக்கு கம்பனி தந்தவனின் நினைவு வந்தது. ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் நிற்க வேண்டும் என்றிருந்தானே. எப்படியும் போவதற்கு முன் அழைப்பான்.

ஒருமுறை ஹாலுக்கு வந்து நேரத்தைப் பார்த்துவிட்டு கிச்சனுக்கே திரும்பினாள்.

அங்கே அமுதா, கல்லில் தோசைமாவை ஊற்றி பொன்னிறமாக சுட்டெடுத்துக் கொண்டிருந்தார். ஷோபனா சட்னிக்காக தேங்காய் துருவிக் கொடுத்துவிட்டு அறைக்கு வந்தவள், ஃபோனை எடுத்து நேராக வாட்ஸப்புக்குள் நுழைந்தாள்.

நேற்று அவள் அனுப்பியதற்கு பதிலாக, ஒரு டெடிபேர் மற்றொன்றின் கன்னத்திலே செல்லமாக மித்தமிடுவதைப் போல் ஒரு ஸ்டிக்கர் மெசேஜ் அவளுக்காக காத்திருந்தது. பார்த்தவளின் கன்னம் நேற்றைய நிகழ்வின் நினைவில் சூடேறியது.

உதடுகள் ஓர் மந்தகாசமான புன்னகையில் நெளிய இமைகளை அழுந்த மூடி , கைப்பேசியில் நெற்றிமுட்டி கவிதையாய் வெட்கப்பட்டாள்.

புன்னகை மாறாமலே நிமிர்ந்தவள், நேரெதிரே இருந்த ட்ரெஸ்ஸிங்டேபிள் கண்ணாடியில் தன் பிம்பம் கண்டு திடுக்குற்று உறைந்தாள்.

முன்பும் ஒருவனின் குறுஞ்செய்திகள் பார்த்து இதே புன்னகை சிந்தியிருக்கிறாள். இந்தக் கண்ணாடியும் அதை ஆயிரம் தடவைகள் பிரதிபலித்திருக்கின்றதே.

இது ஏதோ மீநிகழுணர்வு போலிருந்தது.

உள்ளங்கைகள் வியர்க்கத் தொடங்கின. நெற்றி, உதடுகளின் மேலும் வியர்வை முத்துக்கள்.

மார்பின் எங்கோ ஓர் ஆழத்தில் இறுக்கம். கண்ணுக்குத் தெரியாத பதற்றமொன்று வயிற்றின் அடிப்பகுதியிலிருந்து தொடங்கி உடல் முழுவதும் பரவுவது போலோர் உணர்வு.

கையிலிருந்த செல்ஃபோன் அழைப்பு வந்ததில் அதிரவும்தான், ஷோபனாவும் அதிர்ந்து வெளிவந்தாள்.

உடனே, தலையைப் பெரிதாக உலுக்கிக் கொண்டவள், ஃபோனைத் தூக்கிப்போட்டாள்.

விரல்களால் உள்ளங்கையில் நன்றாக அழுத்தியபடி, ஒரு ஆழ மூச்சை உள்ளடுத்து நுரையீரல் முழுவதையும் நிரப்பிக் கொண்டவள், மெல்ல மெல்ல வெளியிட்டாள்.

மீண்டும் மீண்டும் அதையே செய்தாள்.

"...ஷோபனா, இனிமேல் ஸ்ட்ரஸ் , ஆங்சைட்டி இந்த மாதிரி பீலிங்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணும் போது நீங்க செய்ய வேண்டியது... எல்லாத்துக்கும் முதல்ல, பிரசன்ட் மொமென்ட்க்கு வரணும் என்ற அவேர்ணஸ் வேணும்- அது கட்டாயம். பிறகு மெதுவா, ஆழமா, நிதானமா மூச்சிழுத்து வெளிவிடுங்க. திரும்பத் திரும்ப ஒரு டென் டூ பிஃப்டீன் டைம்ஸ் பண்ணுங்க. இன்னொரு விஷயம் சொல்லித் தர்றேன். இது மூளைய திசைதிருப்ப நல்லாவே ஹெல்ப் பண்ணும். அத நாங்க 5-4-3-2-1- Grounding Technique என்டு சொல்லுவம்.
Five things you see,
Four things you touch,
Three things you hear,
Two things you smell,
One thing you taste. கண், காது மூக்கு, நாக்கு, தோல் அதாவது, நம்மட ஐம்பொறிகளையும் வேல செய்ய வைக்க போறம். இந்த டெக்னிக் மூளைக்கான ஒரு ரீசெட் பட்டன் மாதிரி. மைண்ட டைவர்ட் பண்ணி பிரசண்ட் மொமென்ட்க்கு கொண்டு வந்துரும்... "

அன்று மனநல மருத்துவர் மதிவதனி கூறியது நினைவுக்கு வர, விரல்களை நீட்டி,

"ஃபைவ்.."

"ஃபோர்.."

"த்ரீ.."

"டூ.."

"வன்.."

ஒவ்வொரு எண்ணாக எண்ணி அந்த கிரவுண்டிங் டெக்னிக்கை முயற்சி செய்து பார்த்தாள்.

பதற்றத்தின் பிடி இன்னும் முற்றிலும் விலகவில்லை என்றாலும், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு தன்னைத் திரும்பப் பெற்றிருந்தாள்.

குளிர்ந்த நீரால் முகத்தை அடித்துக்கழுவி விட்டு வந்தாள்.

அவ்வளவு நேரம் அவளைவிட்டு நழுவிப்போன நிதானம், மெதுவாக திரும்பி வந்துகொண்டிருந்தது.

தாறுமாறாய் சிதறியிருந்த சிந்தனைகளை உண்மையில் இப்போது ஓர் புள்ளியில் குவிக்க முடிந்தது.

எண்ணப் பேரலைகளினால் எங்கோ தூரமாய் அடித்துச் செல்லப்பட்டு மீண்டும் கரை சேர்ந்த உணர்வில் கட்டிலில் மெதுவாய் அமர்ந்தாள். தனித்துக் கிடந்த கைப்பேசி சிணுங்கியது. திரையில் 'வருண் கோலிங்' என்ற எழுத்துக்கள் மின்னின.

இம்முறை அழைப்பை ஏற்றாள். போனை மெல்லக் காதில் பொருத்தி, க நடுக்கத்தை மறைத்துக்கொண்டு, "ஹலோ!" என்றாள். காற்றில் கரைவது போல் மெலிந்திருந்தது குரல்.

மறுமுனையில் ஒரு கணம் மௌனம். பிறகு அவனது குரல், கேலியும் கனிவும் கலந்து ஒலித்தது. "என்ன மேடம்... ஹலோ சரியான 'லோ'-வா கேக்குதே!? Any Problem?"

இம்முறை கொஞ்சம் சத்தமான தொனியில், "ஹலோ..!!" என்றவள் ஒரு வினாடி நிறுத்தி, குரலில் செயற்கையான நிமிர்வை ஏற்றி, "இப்ப ஓகேவா?"

"முதல்ல நீ ஓகேயா?ஆன்லைன் பார்த்ததுமே கால் பண்ணேன். எத்தன கால்... ஏன் இவ்வளோ லேட் ஆன்ஸர் பண்றதுக்கு??" அவன் விசாரிப்பில் துளியாய் ஓர் பதைபதைப்பு தெரிந்தது.

"அது.. அம்ம்... சும்மா விளையாட்டுக்கு. உங்கள பயமுறுத்தி ரியாக்ஷன் பாப்போமேனு" சட்டென வாய்க்கு வந்ததைச் சொல்லி சமாளித்தாள்.

மறுமுனையில் அவன் பெருமூச்சு விடுவது கேட்டது. பிறகு, "அம்மா தாயே ஷோபனாம்பிகேஸ்வரி! உனக்கு ஜாலி விளையாடனும்னா கிரவுண்டுக்கு போ.. இல்லாட்டி பீச்சுக்கு போ.. அத விட்டுட்டு ஒரு பாவப்பட்டவனுக்கு விஷப்பரீட்சை வச்சு விளையாடலாமா?" அவன் கேட்ட விதத்தில், அவளையும் அறியாமல் இதழ்கள் மில்லிமீட்டர் அளவில் நெளிந்தன. உரிமையும், குறும்பும் கலந்திருந்த அந்த வார்த்தைகள் நெஞ்சின் இறுக்கத்தை முழுதாய் தளர்த்தியது.

"இனிமே இல்ல." மென்குரலில் சொன்னாள்.

"அப்புறம்... டீ குடிச்சாச்சா?"

"ஓம். நீங்க?"

"ம்ம்... வேற??" வருண் இழுத்தான்.

"வேற..."ஷோபனா, வேறு என்ன கேட்கலாமென்று சிந்தித்து முடிப்பதற்குள்,

"பிடிச்சிருந்ததா..?"வருண் உள்ளே போன குரலில் உணர்வுமயமாய்க் கேட்டான்.

"என்ன??"

"அதான்.. ஹால்ல வச்சு ஒன்டு தந்துட்டு வந்தனே.."குழைவாய் சொன்னான்.

அந்த விஷயத்தை தற்காலிகமாய் மறந்திருந்தவளுக்கு மீண்டும் நினைவூட்டினான். குப்பென்றானது ஷோபனாவுக்கு.
"மாமி என்ன நினைச்சிருப்பாங்க... நீங்க செஞ்ச வேல சரியா?" அதட்டிக் கேட்கவே நினைத்தாள். ஆனால் குரலோ செல்லம்கொஞ்சி சிணுங்கியது.

"சரி என்று சொல்ல ஏலாது. ஆனா பிழை இல்ல.. ப்ச் , இப்ப சரி பிழ போர்றது முக்கியமா? நீ இத சொல்லு, உனக்குப் பிடிச்சிருந்தா இல்லையா?"

அவன் விடாப்பிடியாக நிற்கவும், வேண்டுமென்றே "இல்ல..." என்றிருந்தாள்.

"என்னது...! பிடிக்கலையா?"

"இல்ல.."

'டக்...'உடனே அழைப்பு நிறுத்தப்பட்டதற்கான ஒலி காதுக்குள் கேட்க, குழப்பமடைந்தாள்.

'கட் பண்ணிட்டானா?? ஏன் நான் இல்லன்டு சொன்னத்துக்கா?'
ஃபோனைக் காதிலிருந்து எடுத்து முடிச்சிட்ட புருவங்களுடன் என்னவென்று ஆராய்ந்தாள் ஷோபனா.

கைப்பேசி மீண்டும் இசைத்தது. இம்முறை வருணிடமிருந்து காணொளி அழைப்பு.

'ஓஹோ... சந்தேகம் போலயே. முகத்தப்பாத்தா இல்ல என்டு சொல்லமாட்டமா..' மெல்ல முணுமுணுத்து விட்டு, அலட்சியம் போல் முகத்தை வைத்துக்கொண்டு அழைப்பை ஏற்றாள்.

ஆனால், அவனின் உயிரை ஊடுருவும் பார்வையில், கன்னங்கள் சிவப்பை அள்ளியள்ளி பூசிக்கொள்ளத் தொடங்கின. விழிகள் அவன் முகம் பார்க்க தயங்கின; தழைந்து தாழ்ந்தன.

நாக்கைக் கன்னத்தில் துருத்தியபடி அவள் முக பாவனைகளை ரசித்துக்கொண்டே "ஹ்ம்ம்... முழுசா நனஞ்ச பிறகும் முக்காடால மறைக்க நினைக்கிறவங்கள என்னதான் செய்றது?"

அவன் கேட்டதில், இதழ்கள் சிரிப்பில் விரிந்துகொள்ள பக்கவாட்டில் திரும்பிக்கொண்டாள்.

"ஷோபா இங்கப் பாரன்.." அவன் குரலின் மென்மையில், உள்ளுக்குள் இருந்த ஏதோ ஒன்று உருகிக் கரைய,

"ஐயோ!! போன்ல இந்தப்பேச்சு வேணாமே..." அவனிடம் கெஞ்சலாய்க் கேட்டாள்.

"சரி. ஓகே. அப்ப நேர்லவந்து செயல்ல காட்டுவோம் ."அடக்கப்பட்ட புன்னகையுடன் தோள் குலுக்கினான்.

அவன் பேச்சை கேட்காதது போல், வேறு கேள்விகள் கேட்டாள்.
"வெளிக்கிட்டிங்களா? போற டைம் ஆயிட்டா?"

"நோ நோ.. நீ ஒரு கன்னத்துல குடுத்தா மத்த கன்னத்தை காட்டி இன்னொன்டும் வாங்கிட்டுப் போற அளவுக்கு போதுமான டைம் இருக்கு." குறும்பு கொப்பளிக்க கூறியவனை முடிந்த மட்டும் முறைத்தவள்,

"ஓஹோ...! சொல்பேச்சுக் கேக்காத பிள்ளைக்கு சொத்தைல ரெண்டு அப்பு அப்ப எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா ஏலாதே..."சொல்லிவிட்டு மீண்டும் முறைத்தாள்.

"அதோ!! மட்டக்களப்பில் மையம் கொண்ட சூறாவளி கண்டிவரை கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் தென்படுவதால், வருண் நல்ல பிள்ளையாய் வேலைக்கு போகப்போறான். பாபாய்..." என்றுவிட்டு போனை கட் பண்ணி இருந்தான்.

அவனது ஓட்டத்தில் வாய்விட்டு சிரித்தவள், சிரிப்பின் மிச்சத்துடன் வருணின் வாட்ஸப் டிஸ்ப்ளே பிக்சரைத் தட்டினாள். இராவண எல்ல நீர்வீழ்ச்சியில் வைத்து அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட செல்பி ஒன்றையே அதில் பதிவேற்றி இருந்தான்.

போட்டோவை ஜூம் செய்தாள்.

போன் கேமராவையே நோக்கியிருந்த கண்கள் லேசாய் சுருங்கியிருக்க, இதழ்களில் சிறிதும் புன்னகையின்றி, ஒரு கம்பீரமான அமைதியோடு நின்றிருந்தான் வருண். அவனின் கை வளைவை பற்றியபடி தலைய உயர்த்தி அவன் முகத்தையே பார்த்திருந்தாள் ஷோபனா.

பின்னணியில் மலையின் உச்சியில் இருந்து பாலாய் கொட்டும் அருவி. அந்த பிரம்மாண்டத்துக்கு முன் இருவரும் ஜோடியாக நின்றிருந்தனர்.பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது; பார்க்கப் பார்க்க நெஞ்சின் இறுக்கங்கள் தளர்த்தி இதயத்தில் இதமாய் சுகம் சேர்த்தது.

அப்படியே கண்களை மூடிக்கொண்டு, இதுவரை இருவருக்குள்ளும் இருந்த இடைவெளியைக் குறைத்து புதிதாய் நெருக்கம் சேர்க்கும் அவனது இன்றைய பரிமாணம் தந்த தித்திப்பில் திளைத்திருந்தவள், அம்மா அவளை அழைக்கும் சத்தம் கேட்டே நடப்புக்கு வந்தாள்.

சித்தி வீட்டுக்கு அம்மாவை அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தது அப்போதுதான் சுரீரென்று நினைவுக்கு வந்தது.

மளமளவெனத் தயாராகி வந்தவள், வேகமாய் சாப்பிட்டு முடித்துவிட்டு அம்மாவை ஏற்றிக் கொண்டு ஸ்கூட்டியை கிளப்பினாள்.

*************

"என்ன சித்தி, காசு எடுத்த ஆளக் கண்டு பிடிச்சாச்சா?" ஷோபனா உள்ளே நுழையும்போதே கேட்டாள்.

"இல்லடி.. கடையில வேலை செய்றாக்களையும் நல்லா விசாரிச்சுப் பாத்தாச்சு. அவங்கள்ள யாருமில்லையாம்" உதடு பிதுக்கினார் வசந்தி.

"ஓ... அப்ப வெளியாள் யாரோதான் போலயே..." ஷோபனாவும் யோசனையாய் புருவம் சுருக்கினாள்.

"என்னவோ தெரியல. இல்லாட்டி இந்த மனுஷந்தான் எடுத்துப்போட்டு மறந்துட்டாரோ தெரியாது. வயசு போயிட்டு தானே" என்றார் வசந்தி சலிப்பாய்.

"உண்ட வயசு தானே அவருக்கும்?" அமுதா உடனே கிண்டலாய் கேட்க,

தயாளதேவியும் , "அதானே.. அதுவும் இல்லாம கணக்கு விஷயத்துல எல்லாம் பிழைவிட்ற ஆளுமில்ல அவர்." என்க,

"என்னவோ.. இனிமே கடையில எந்த குழறுபடியும் நடக்காம இருந்தா போதும். வீடோ கடையோ எங்க பிரச்சனை என்டாலும் நமக்கு தான் தலைவலி." சொன்ன வசந்தியின் முகத்தில் அலுப்பு அப்பிக் கிடந்தது.

" புட்டு சாப்பிடுறீங்களா ரெண்டு பேரும்?" அவர்தான் இருவரிடம் கேட்டார்.

"சாப்பிட்டுட்டுத்தான் வந்தனாங்க சித்தி. அபி ரூம்ல தானே?" என்று கேட்டபடியே ஷோபனா மாடிப்படிகளில் ஏறினாள்.

அறைக்கதவு திறந்திருந்தது.
மேசையில் புத்தகம் விரித்தபடி இருந்தாலும் அபித்ரனின் பார்வை நேரே வெற்றுச் சுவற்றை வெறித்திருந்தது. கை விரல்களை இறுக்கமாய்க் கோர்த்து அமர்ந்திருந்தவனின் காலொன்று நிற்காமல் ஆடிக் கொண்டிருந்தது.

"ஹலோ சேர்..." பின்னாலிருந்து ஷோபனாவின் குரல்.

தூக்கிவாரிப்போட்டவன் போல் சட்டென்று எழுந்தான் அபி. முகம் வெளிறிப்போயிருந்தது.

"என்னடா காய்ச்சல் எப்படி?" அக்கறையாய் விசாரித்தபடி கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

"நல்லம்." ஒற்றை வார்த்தை. குரல் கரகரத்தது.

"எங்களோட ட்ரிப்கு வந்திருக்கலாம் தானே... செம்ம ஜாலியா இருந்தது."

"அது.. க்ளாஸ்.. எக்ஸாம்..." வார்த்தைகளை ஒவ்வொன்றாய்க் கோர்த்துக் கோர்த்துச் சொன்னான் அபி.

"என்னடா புதுசா இந்தப் பம்மு பம்முறாய்..." அவனை சந்தேகமாக ஊடுருவினாள் ஷோபனா.

"இந்தா, ஆளுக்கொரு டீ ஷர்ட் எடுத்து வந்தனான். சைஸ் சரியா என்டு பார். லைட் ப்ளூ உனக்கு. டார்க் ப்ளூ கபிஷுக்கு" என்றுவிட்டு ஒரு கிஃப்ட் பையை அவனிடம் நீட்டினாள்.
அதை வாங்கி மேசையில் வைக்கப் போனவன், தமக்கையின் முறைப்பைக் கண்டதும் அவசரமாய் பையைத் திறந்து எடுத்துப் பார்த்தான்.

"அளவா இருக்கும் தானே?"

"ம்ம்.." தலையை மட்டும் ஆட்டினான்.

"ஆள் சரி இல்லையே நீ... ஒவ்வொரு சொல்லா அளந்து அளந்து கதைக்கிறாய்? அபி! என்னவோ கள்ளத்தனம் செய்றாய்.. அப்படித்தானே?" கண்கள் அவனைத் துளைத்திருக்க ஷோபனாவின் குரலில் இப்போது கண்டிப்பு ஏறியிருந்தது.

அபிக்கு தொண்டை அடைத்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கிக்கொண்டவன், "என்ன... அத.. அதெல்லாம் ஒன்டுமில்ல. நா..ன் கிளாசுக்கு போகணும்" என்று அவசரமாய் சொல்லிவிட்டு, கையில் கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறப் போனான்.

"அபித்ரன்.." அவள் குரல் சாட்டை போல் சொடுக்கியது.

கால்கள் அந்த இடத்திலேயே நின்றன. திரும்பவில்லை. முதுகு மட்டும் இறுகியது.

"உங்கட அம்மா அப்பா கடைவிஷயமா டென்ஷன்ல இருக்காங்க. அவங்கள வேணுமெண்டா நீ தலைவலி, காய்ச்சல் என்டு என்னன்னமோ சொல்லி பேய்க்காட்டலாம். ஆனா இது வேற ஏதோ விஷயமென்டு எனக்கு விளங்கிட்டு. சொல்லாம மறைக்கிறாய்..." ஷோபனா எழுந்து அவன் முன்னால் வந்து நின்றாள். குரல் தணிந்து, ஆனால் இறுக்கமாக ஒலித்தது.

"எல்லா பிரச்சனையை யும் சரி செய்யலாம் அபி. அதுக்கு நீ முதல் என்னென்டு வாய் திறக்கணும். அக்கா கிட்ட சொல்லு, ஹெல்ப் பண்றேன். சொல்றதா இருந்தா மட்டும் 'அக்கா' என்டு வந்து கூப்பிட்டுக்கத. இல்லாட்டி வேணாம்."
ஷோபனாவின் இவ்வித கடினமான, ஆசிரியைக்குரிய தொனியை அபி இதுவரை அறிந்திருக்கவில்லை.

சொல்லிவிட்டு, அவன் பதிலுக்காக ஒரு நொடி கூட காத்திருக்காமல், ஷோபனா அவனைத் தாண்டி விடுவிடு என்று மாடிப்படி வழியே இறங்கினாள்.

பின்னால், அபித்ரன் அப்படியே சிலையாய் நின்றிருந்தான்.

*************
 
Last edited:

ஷாரிகா

Member
Staff member
*************

ஷோபனாவின் நாட்கள் அதன் போக்கிலன்றி அழகாய் நகர்ந்தன. இல்லையில்லை, காலை முதல் மாலை வரை காதல்செய்து அழகாய் நகர்த்திக் கொண்டிருந்தான் வருண். நாளொரு காணொளி அழைப்பும் பொழுதொரு குறுஞ்செய்தியுமாக நேரம் உடைத்து நேசம் வளர்த்தனர். இப்போது இருவருக்கும் இடையில் சில கிலோமீட்டர்களிலான தூரம் மட்டுமே. ஏற்கனவே இருந்த இடைவெளிகளையெல்லாம் காதல் கொண்டு அடைத்திருந்தனர்.

இப்போதெல்லாம் பூரிக்கும் நேரங்களில் எதேச்சையா கண்ணாடி முன் நின்றால், பழைய பயம் இல்லை. எந்தவித ஏடாகூடமான எண்ணங்களும் மனதை அரிக்காமல், உதடுகள் தானாக விரிந்து சிரிக்கின்றன. அந்தச் சிரிப்பில் கண்களும் கலந்து கொள்கின்றன.

இப்படி அவ்வப்போது தானே உணர்ந்து கொள்ளும் மனதளவிலான சிறு சிறு முன்னேற்றங்கள், அவளுக்குள் பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கின்றன. கடந்த மருத்துவ சந்திப்பில் டாக்டர் சொல்லித்தந்த படி, யாரும் பார்க்காத நேரத்தில் தன் தோளில் தானே 'குட் ஜாப் ஷோபா!!' என்று மெல்லத் தட்டிக்கொள்கிறாள். அந்த சின்ன அப்ரிஷியேஷன், ஒரு விருது வாங்கிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

இனி கடந்ததை நினைத்து கலங்காமல், கையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும், காற்றின் வாசத்தையும், காலைத் தேநீரின் சூட்டையும், கணவனின் ஒவ்வொரு குறிஞ்செய்தியையும், அதில் சொட்டி நிற்கும் காதலையும் கொண்டாடி வாழ நினைக்கிறாள்.

இவ்வாறு வருணோடு பேசும் நேரங்கள் ஒரு பக்கம் தேன் வார்க்க, இன்னொருபுறம் அபி விஷயம் சின்னதாய் நெருடலாகவே இருந்தது.

முன்பெல்லாம் என்னவென்றாலும் ஓடி வந்து அவளிடம் கொட்டிவிடுவான். பரீட்சையில் மார்க் குறைஞ்சது முதல், பக்கத்து வீட்டு சண்டை வரைக்கும்... சரி, இப்போது வளர்ந்து விட்டான்தான். மீசை அரும்பும் வயதுதான். ஆனால் இன்னும் அப்பாவின் அடிக்கும், அம்மாவின் அதட்டலுக்கும் பயந்தபிள்ளை. அவளிடமும் தம்பியிடமும் மட்டுமே வாய் நீளும். மற்றபடி அமைதியான சுபாவமுடையவன்.

அன்று ஏதோ தவறிழைத்தது போல் பதறினானே. கதைக்காமல் ஓடி ஒளிகிறானே.

என்னவாக இருக்கும்?
நிச்சயம் ஏதோ சில்லறை விஷயம் தான்.
ஒருவேளை அதுவாக இருக்குமோ...?
இருக்குமோ என்ன, அதுவாகத்தான் இருக்கும்.

'க்ளாஸ் பொம்பிளப் பிள்ள யார்டையோ செருப்படி வாங்கிட்டார் போல தம்பியர்.' நினைத்த மாத்திரத்தில் அபியை நினைக்க பாவமாக இருந்தாலும் சிரிப்பாகவும் இருந்தது ஷோபனாவுக்கு.

'அண்டைக்கு கொஞ்சம் ஹார்ஷா கதைச்ச கோபத்துல, இவள்ட்ட சொல்லவேகூடாது என்டு நினைச்சிருப்பான். இன்னொரு விசிட்ட போட்டு நம்மட முகத்தைக் காட்டினால், 'அக்கா' என்டு உருகி, கண்ண கசக்கிருவேர். மோடிவேட் பண்றமாறி பண்ணிப்போட்டு முளையிலேயே கிள்ளி ஏறிய வைக்கணும். '

யோசித்தவள், 'சனிக்கிழம தானே...இப்போவே போனா சரியா இருக்கும்' என்று முடிவெடுத்து, உடனே கிளம்பியும் விட்டாள்.

**************

மண்டையைப் பிய்த்தபடி தன்அறைக்குள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான் அபித்ரன். வந்த எரிச்சலில், இயலாமையில் அவ்வப்போது தன்னையே சபித்துக்கொண்டான். நெற்றியில் வியர்வை ஆறாய் வழிந்தது.

பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டான்.

' இப்ப என்ன செய்றது? '

கீழே வாசலில் ஸ்கூட்டி சத்தம். அடுத்த நொடி ஷோபனாவின் குரல், "சித்தி..." என்று கேட்டது.

'ஐயோ! இவளேன் இப்ப வாராள்?'

உடனே பாய்ந்து சென்று அறைக்கதவை அடைத்து 'டக்' என்று லாக் செய்தான். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.
இவள் வந்து கேட்கும் கேள்விகளைச் சமாளிக்க முடியாது. அந்த ஊடுருவும் பார்வை முன்னால் உண்மை தானாவந்து விழுந்துடும்.

'என்ன செய்யலாம்...? என்ன செய்யலாம்...?' மூளையை கசக்கிப் பிழிந்தான். ஒரு ஐடியா கூட வரவில்லை. மீண்டும் தலையை கோதியவாறே, வட்டமடிக்கலான்.

ஒரு மணி நேரம். அறைக்குள்ளேயே குமைந்தான்.

மெல்லக் கதவைத் திறந்து படியில் நின்று கீழே எட்டிப்பார்த்தான். ஷோபனா வசந்தியுடன் பேசியவாறே கிச்சனில் நின்றாள்.

முழுதாக இறங்கி ஹாலுக்கு வந்தான். அம்மம்மா அறையில் நல்ல உறக்கத்தில். குறட்டை சத்தம் லேசாக கேட்டது.

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பூனை போல பதுங்கி ஹாலுக்கு வந்தான். சோபாவில் ஷோபனாவின் ஹேண்ட் பேக். நெஞ்சு படபடப்போடு அதை திறந்து கையை நுழைத்து தேடினான். அவளது போன் அகப்படவில்லை. பர்ஸைத் திறந்து பார்த்தான் அதற்குள்ளும் ஃபோன் இல்லை.

போன் எங்கே? மேசையில் இல்லை. கிச்சன்ல வச்சிருப்பாளோ? கையில வச்சிருக்காளோ?

'ப்ச்.. எப்படி எடுக்கிறது??' அபி யோசித்து முழிக்கையில், அம்மா ரூமில் இருந்து 'நருட்டோ' கார்ட்டூன் சத்தம்....

உடனே எட்டிப் பார்த்தான். கபிஷ் கட்டிலில் உட்கார்ந்து, ஷோபனாவின் ஃபோனில் யூடியூப் பார்த்துக்கொண்டிருந்தான்.

'அப்பாடா!'

அபி தன்னிடமிருந்த அம்மாவின் கைப்பேசியை எடுத்தான். அதை அன்லாக் பண்ணி, "டேய் கபிஷ், இந்தா இதுல புது கேம் இருக்கு. சூப்பரா இருக்கும். இதை விளையாடு. அத ஒருக்கா தாரியா??" என்று ஆசை காட்டி, ஷோபனாவின் போனை நைசாக வாங்கிக்கொண்டான்.

போன் கையில் வந்ததும், வெளியே நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு புயல் வேகத்தில் பறந்தான். எங்கே போனான் என்று தெரியவில்லை.

சரியாக பதினைந்து நிமிடங்கள் கழித்து அதே வேகத்துடன், வியர்க்க விறுவிறுக்க வீடு வந்து சேர்ந்தான். முகமெல்லாம் சிவந்திருந்தது. மூச்சு வாங்கியது.

வெளியிலிருந்தே எட்டிப்பார்த்தான். இப்போதும் ஷோபனா கிச்சனிலேயே சித்தியோடு கதைத்தபடி நிற்கிறாள்.

'அப்பாடா! பார்க்கவில்லை.'

நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, பூனை போல மீண்டும் ஹாலுக்கு வந்தான். எடுத்ததெல்லாம் இருந்த இடத்திலே சத்தமில்லாமல் வைத்துவிட்டு, அம்மாவின் போனை எடுத்துக் கொண்டான்.

அவன் கைகள் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தன. ஆனால் இந்த நிமிடம், எதிலிருந்தோ தப்பித்த நிம்மதி மட்டும் இருந்தது.

ஓர் தற்காலிக நிம்மதி.
 
Last edited:
Top Bottom