• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 26

ஷாரிகா

Active member
Staff member
VIN - 26

" ஷோபியக்கா சொரீ..

ஃபோட்டோக்கள கூடாதமாரி எடிட் பண்ணிவச்சிட்டு காசு கேக்குறாங்கக்கா. என்னால மதூக்கு தான் பிரச்சன. நான் நல்லா மாட்டுப்பட்டுட்டன். அதான் இப்பிடி செய்ய வேண்டியதாப் போச்சு. தயவு செஞ்சி கோவிக்காத .

சரண, ஏலுமென்டா அந்த போட்டோச அவங்களுக்குத் தெரியாம எப்டியாவது அழிச்சிவிட சொல்லன். நான் இல்லென்டுட்டு மதுவ கரச்சல் குடுத்தாலும்.

காசெடுத்ததுக்கு மன்னிச்சிக்கோ. அதப்பத்தி அம்மாட்டயெல்லாம் சொல்லிராதக்கா ப்ளீஸ்..
பிள்ள களவெடுத்தென்டும் தெரிஞ்சா.. ஆகலும் மனவருத்தமா கிடக்குமல்லோ அவக்கு.

கபீஷ் இருக்கான் தானே. அம்மாவ அழவேணாமென்டு. அக்கா நீயும் அழாத."

அவள் எப்போதோ அழத்தொடங்கியிருக்க, கண்களின் ஈரம் பார்வையை மறைத்தனால் அடுத்தவரி மங்கலாக தெரிந்தது.

புறங்கையால் அவசர அவசரமாக கண்களை துடைத்து விட்டு,

" ............அக்கா நீயும் அழாத.

தம்பிய மட்டும் கவனமா பாத்துக்கோ.. அப்பா அவனுக்கு அடிக்கவெளிக்கிட்டா, விடாத என.. அம்மம்மாவும் விடமாட்டா தான். ஆனா நீயும் இடைக்க போய் மறிக்கப்பார்.

வேற, இன்னொன்டும் சொல்லணும். நான் ஒரு விஷயம் நிரம்ப ஆசையா நினைச்சு வச்சிருந்தனான் ஷோபி. எப்பயாவது கேப்பம் என்டு நினைப்பன், எங்க.. நீ 'முத்தல்தனம்' என்டு ஏசுவியோ என்ற பயத்துல சொன்னதே இல்ல.
அது என்னன்டா... உனக்கொரு (b)பபா கிடைக்குமல்லோ.. அவருக்கு, அபி என்டு ஸ்டார்ட் பண்றமாதிரி ஒரு நேம் வெப்பமா? அத்தான்ட்டையும் கேட்டுப்போட்டு வெய் என...
என்ட செல்ல அக்காச்சியல்லோ..

சரி. bபாய் அக்கா.
திருப்பவும் சொரி.
அருளுக்கும் ஒன்டுமே தொரியாது அவன்டயும் சொரி என்டு சொல்லிவிடு...
Bye.. "

ஷோபனாவின் கால்கள் நிற்கமுடியாமல் வலுவிழந்து தளர்ந்து போயின. கட்டிலின் ஓரமாக சாய்ந்தபடி தரையில் அமர்ந்துகொண்டு, ஒரு கையால்
வாயைப் பொத்தியபடி ஏங்கி ஏங்கி அழத்தொடங்கினாள்-அபித்ரனின் செல்ல அக்காச்சி.

அவள் தம்பி இரவுகளில் எவ்வளவு பயந்து விழித்திருப்பான், எத்தனைமுறை தனியாக அமர்ந்து அழுதிருப்பான், எத்தனைமுறை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று எதிர்பார்த்திருப்பான்...
என்பதெல்லாம் ஒவ்வொன்றாக அவள் மனதில் உருவம் பெறத்தொடங்கின.

உள்ளிருந்து எழுந்த விம்மல், தொண்டையில் சிக்கிச் சிக்கி உடைந்து வெளியேறியது.

நெஞ்சை நெரித்துக் கொண்டிருந்த இறுக்க உணர்வு, கொஞ்ச கொஞ்சமாய் வலியாய் உருமாறத் தொடங்கவும், கண்ணீர் வடித்தலை நிறுத்தும் முயற்சியில், தண்ணீர்ப் போத்தலை எடுத்து வாயில் சரித்துக்கொண்டாள்.

தொண்டை சற்றே நனைந்தது. ஆனால் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளின் வெள்ளம் ஓயவில்லை.

'இப்ப.. முதல்ல என்ன செய்றது நான்?'
'இந்த.. சரண் என்றது யாரு?'

'பொலிஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போகனுமா.. இத?'

............

ஒன்று மாற்றி ஒன்றாய் அடுத்தடுத்த கேள்விகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன.


தமிழ்நேசன் (இரத்த அழுத்தம்) BP-க்கு புது மாத்திரை மாற்றியதில், அதன் பக்க விளைவாக கால்களிரண்டும் திடீரென வீங்கி, இரு நாட்களாக நிற்க, நடக்க மிகுந்த சிரமப்படுகிறார்.

காவல் நிலையம் செல்வதாயின் அவரை துணைக்கு அழைக்க முடியாது.

'என்ன செய்யலாம்.. என்ன செய்யலாம்..' தலை முன்னுச்சியை அழுந்தப் பற்றியபடி யோசித்திருந்தவள்,
சட்டென்று ஏதோ முடிவெடுத்தவளாக, அந்த தாளையெடுத்து கைப்பையினுள் பத்திரப்படுத்தி விட்டு அருள் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தவாறே அவசர அவசரமாய் வெளியே வந்தாள்.

"திருப்பி எங்க போறாய்!? சாப்பிடலையா நீ?" என்ற கேள்வியுடன் எதிர்ப்பட்ட அன்னையிடம்,

"அ... அவசர வேலையொன்டம்மா. ஒருக்கா... ஸோனல் ஒஃபீஸ் வரைக்கும் போயிட்டு வாரன்." என்றுரைத்துவிட்டு வேகஎட்டுகள் வைத்து வாசலுக்கு விரைந்தாள்.

அழைப்பு ஏற்கப்பட்ட செய்தியை அதிர்வின் மூலம் வெளிப்படுத்தியது திறன் பேசி.

"ஹலோ!? அருள்?"

"ஓமக்கா.. சொல்லுங்கோ.."

"அதூ.. சரண்... என்றது யாரு!? உங்கட கிளாஸ்மேட் யாருமா..?"

"சரணா.. ஓமோம். ஆனா.. அவன் B-கிளாஸக்கா. ஏன்!? ஏன் கேக்குறீங்க?"

"ஆஹ்.. உனக்கு அவங்கட வீடு தெரியுமா? ஒருக்கா வாரியா? ரெண்டுபேரும் பொயிட்டு வருவம்.."

"ஓம். லோயர்ட வீடு தானே.. இங்கருந்து கிட்டத்தான்.. ஏனக்கா?."


"சொல்றன். அவடத்த வாரன், போவம் என??"

"ஆஹ்!! சரி வாங்கக்கா. நான் அம்மாட்ட கேட்டு எடுக்குறன்."

பேசி முடித்து கைபேசியை பேகினுள் போட்டுவிட்டு, கீயை திருப்பி ஸ்கூட்டியை உயிர்ப்பித்தாள் ஷோபனா.

********************

அந்த இரண்டு மாடி வீட்டின் பிரம்மாண்ட மரக்கதவுகள் அகலத் திறந்திருந்தன. அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஷோபனாவும் அருளும் வாசலில் காத்திருந்தனர்.

சில நொடிகளுக்குப் பிறகு, ஷோபனாவின் சித்தியின் வயதையொத்த ஒரு பெண்மணி வந்தார். வந்தது மாதவனின் அம்மா என அருளுக்குத் தெரிந்திருந்தது.

“வாங்க..!! சேரையா பாக்கணும்..?” என்ற கேள்வியில், இந்த மத்தியான நேரத்திலா? என்ற ஆச்சர்யம் ஒட்டிக்கொண்டிருந்ததோ..

ஷோபனா மெதுவாக தலையசைத்தாள்.

இருவரையும் உள்ளே அழைத்து சோஃபாவில் அமரச் செய்துவிட்டு, அந்த பெண்மணி நேராக கமலசேகரின் அலுவலக அறைக்குள் சென்றார்.

“...அந்த கேஸ கொஞ்சம் குயிக்கா கிளோஸ் பண்ணப்பாருங்க. என...”
போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த கமலசேகர், உள்ளே வந்தவரை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தார்.

“ஒரு பிள்ளையும் பெடியனும் வந்திருக்கினம். உங்கள அவசரமா பாக்கணுமாம் சேர்.”

“இப்ப ஏலாது.. அர மணித்தியாலம் ஆகுமென்டுங்க...” என்று மறுப்பாய் சொன்னவர், மீண்டும் கைபேசியில் மூழ்கினார்.

அதே அறைக்குள்…

கப்பல் கவிழ்ந்து போன சோகமுகத்துடன், அப்போதுதான் மெலிதாய் அரும்பத் தொடங்கியிருந்த தாடிமுடிகளை விரல்களால் தடவிக்கொண்டு, தந்தையின் அருகே நின்றிருந்த சரண்,

கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, சுவரில் சாய்ந்து ஏதோ ஆழ்ந்த யோசனையில் நின்றிருந்த தன் ஒரே மகன்,

நெற்றி சுருங்க, இருவரையும் மாறிமாறி பார்த்துவிட்டு, மெதுவாக வெளியேறினார் மாதவனின் அன்னை, தேவி.

***************

'அரை மணி நேரம் தாமதமாகும்' என்று சொல்லப்பட்டதும், ஷோபனாவின் உடல் இறுகியது. வேறு வழியில்லை. காத்திருக்கத்தான் வேண்டும்.

கைப்பையின் ஜிப்பை சிறிதளவு திறந்தாள்... மூடினாள்...
மீண்டும் திறந்தாள்... மூடினாள்.

விரல்கள் நடுங்கின. முகம் முழுக்க கலக்கம்.

"அக்கா...?"
அருளின் அழைப்பு அவளை திடுக்கிட்டு நிமிரச் செய்தது.

"என்னக்கா? ஏதும் பிரச்சனையா?"

அருள், அபியின் உற்ற தோழன். தம்பியை இழந்த பிறகு, அவனிடம் ஒரு தனி உரிமை ஏற்பட்டிருந்தது ஷோபனாவுக்கு. அவனும், அவள் அழைக்கும் போதெல்லாம் மறுப்பு சொல்லாமல் ஓடி வந்து விடுகிறான்.

ஒரு நெடிய பெருமூச்சை வெளியேற்றிய ஷோபனா, இம்முறை ஜிப்பை முழுவதுமாகத் திறந்தாள்.

உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த தாளை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
குழப்பத்துடன் வாங்கிய அருள், அதை மெதுவாகப் பிரித்தான்.

முதல் வரியிலேயே நண்பனின் கையெழுத்தை அடையாளம் கண்டவனின் தொண்டை அடைத்தது.

அவசரமாக வாசிக்கத் தொடங்கினான்.

கடைசி வரியை வாசித்து முடித்தபோது, தாளைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்கின.
கண்களில் நிரம்பிய நீர் வழிந்துவிடுவதற்கு முன், முகத்தைத் திருப்பிக்கொண்டு அவசரமாக துடைத்துக்கொண்டான்.

அப்போதுதான் அவர்கள் ஏன் இங்கே வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அபி, மதுஷ்ணவியை எவ்வளவு நேசித்தான் என்பது அருளுக்கு மட்டுமே தெரியும். அவளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவன் கண்களில் ஒரு தனி ஒளி தோன்றும். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள்கூட அதில் கலந்திருக்கும்.

அதனால்தான், மதுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம்... அதற்குப் பிறகு வந்த பிரிவு... அந்த வலியைத் தாங்க முடியாமல் தான் அபி அந்த விபரீத முடிவை எடுத்திருப்பான் என்று அருளும் நம்பியிருந்தான்.
எல்லாரைப் போலவும்.

ஆனால்.. உண்மை வேறு ஒன்று, என்பது இப்போது தான் தெரிந்தது.

*************

கமலசேகரன் மேலும் சில நிமிடங்கள் தொலைபேசியில் பேசிவிட்டே அழைப்பைத் துண்டித்தார்.

பின்னர் எதிரே நின்றிருந்த இருவரையும் அமைதியாகப் பார்த்தார்.

கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியிருந்த மாதவன், தன்னையறியாமல் அவற்றை இறக்கிக்கொண்டான்.

"ரெண்டு பேரும் கவனமா கேட்டுக்கோங்க. கதைக்க வேண்டிய ஆக்கள்ட்ட எல்லாம் நான் கதச்சிட்டன். இனி நீங்க யார்ட்டையும் வாய்விடாம இருந்தீங்கன்டா போதும். மத்ததை நான் பாத்துக்கொள்ளுறன். மிச்.."

"ஆனா மாமா...!"

மாதவன் அவசரமாக இடைமறித்தான்.

அவனை ஒரு நொடி இமைக்காமல் பார்த்தவர்,

"எலக்ஷனுக்கு இன்னும் எவ்வளோ காலமிருக்கு?" என்று அமைதியாகக் கேட்டார்.

மாதவன் புரியாமல் விழித்தான்.

"ரெண்டு... ரெண்டு மாசம்."

"ஆஹ்...இன்னும் ரெண்டே மாசந்தானிருக்கு."
நாற்காலியில் சற்றுப் பின்னால் சாய்ந்தவர், ஒரு பெருமூச்சை வெளியேற்றினார்.

" இந்த நேரத்துல இப்படியொரு பிரச்சனையோட வந்து நிக்கிறான்."
என்றபடி சரணை ஒரு வெட்டும் பார்வை பார்த்தார்.

பிறகு மீண்டும் மாதவன் பக்கம் திரும்பி,

"செத்துப் போன பெடியன் உன்ட நெருங்கின நண்பன், அதால உனக்கிருக்குற வேதனையும், கில்ட் பீலிங்ஸும் எனக்கு விளங்குது மாதவா... ஆனா நீயும் ஒண்ட விளங்கிக்கொள்ளணும்."

மாதவன் பேசவில்லை.
'என்ன?' என்ற கேள்வி மட்டும் அவன் கண்களில் தேங்கியிருந்தது.

"இங்கப் பாரு... இல்லாத பொல்லாத பாடெல்லாம் பட்டு, நிறையப் போராடித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கன். இந்த நேரத்துல உங்கட விஷயம் வெளியே போச்சென்டா, நான் கட்டினதெல்லாம் ஒரே நாள்ல இடிஞ்சு விழுந்த மாதிரி ஆயிடும்.

'பெரிய லோயராம்... மகனாக்கள்ட சீத்துவத்த காதுகுடுத்து கேக்கேலாமக் கிடக்குது...' என்டு ஊராக்கள் கதைப்பினம். நாளைக்கு பேப்பர்லயும், சோஷியல் மீடியாவுலயும் போயிரும். பரவால்லயா உனக்கு?"

அப்போதும் மாதவனின் முகம் தெளிவடையாததை கண்டு, கமலசேகரன் குரலை இன்னும் மென்மையாக்கினார்.

"நீ சரணோட சேந்து அந்த எளிய வேலய செய்யாததுல எனக்கு அவ்வளோ சந்தோஷம் தம்பி..."

ஒரு கணம் இடைவெளிவிட்டு,

"என்ன மாமா என்டுதான் கூப்பிடுறனீ. ஆனா நான் உன்ன என்ட மகனுக்கு சமமாத்தான் வளர்த்தனான். அந்த உரிமையிலதான் கேக்கிறன். மாமா சொன்னா கேக்க மாட்டியா?"

மாதவன் தலை குனிந்தபடி,
"கேப்பன் மாமா..."
குரலில் சுரத்தில்லை.

"அச்சாப்பிள்ள..."
என்று முகம் மலர்ந்தவர், உடனே

"டேய்!" என்று சரணை அதட்டினார்.

அறை வாங்கிய வெப்புசாரத்தில் நின்றிருந்த சரண், முறைப்புடன் நிமிர்ந்து பார்த்தான்.

"என்ன முறைக்கிறே? இந்தச் சேட்டையெல்லாம் விட்டுப்போட்டு, உன்ட மத்த ரெண்டு கூட்டாளிமார்ட்டையும் சொல்லிவை. லூசுத்தனமா யார்ட்டையும் வாய்விட வேணாமென்டு."

அவர் சொல்லி முடிக்க, சரண் விறுவிறென்று கதவை நோக்கி நடந்தான்.
ஆனால் போன வேகத்திலேயே பதற்றமாகத் திரும்பி வந்தான்.

"அப்பா...! அபி... அபித்ரண்ட அக்காதான் வந்திருக்குறது."

"என்ன!?"அதிர்ந்து கேட்டது மாதவன்.
வேகமாக நடந்து சென்று கதவிடுக்கால் வெளியே பார்த்தான்.

சோபாவில் அமர்ந்திருந்த ஷோபனாவைக் கண்டதும்,
பதற்றத்துடன் திரும்பி மாமாவைப் பார்த்தான்.

கமலசேகரனின் முகமும் இறுகியிருந்தது.

ஆனாலும் அடுத்த நொடியே தன்னைச் சமாளித்துக்கொண்டவர்,

"சரி... நான் போய் முதல்ல என்ன விஷயமென்டு கேக்கிறன்.
அதுவரைக்கும் உள்ளயே நில்லுங்க."
கட்டளையாய்ச் சொல்லிவிட்டு ஹோலை நோக்கி நடந்தார்.

கமலசேகரன், ஹோலுக்குள் வந்ததும் முகத்தில் சிறிய புன்னகையை வரவழைத்துக் கொண்டார்.

ஷோபனாவும் அருளும் எழுந்து நின்றனர்.

"இல்ல... இருங்க..." என்று கையசைத்து மீண்டும் அமரச் சொன்னவர், எதிரே இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்துகொண்டார்.

" சொல்லுங்கம்மா... என்ன விஷயம்?"

ஷோபனா உதடுகளை நனைத்துக்கொண்டாள்.

"அது... நான் அபித்ரன்ட அக்கா. சரண்ட கிளாஸ்மேட், அபிட விஷயம் கேள்விப்பட்டிருப்பீங்க..."
என்று சொல்லிவிட்டு அவர் முகத்தைப் பார்த்தாள்.

'ஆம்' என்பதாக மெதுவாகத் தலையசைத்தார். "நடந்தது ரொம்ப வருத்தமான விஷயம்." என்றவர் அடுத்தது என்ன என்பதைப்போலப் பார்த்தார்.

அவரது குரலில் இருந்த பரிதாபம் இயல்பானதா, இல்லை மரியாதைக்காகச் சொல்கிறாரா என்று கூட ஷோபனாவால் கணிக்க முடியவில்லை.

"எனக்கு... உங்கட மகன்..." அவளுக்கு என்னவோ எப்படிக் கேட்பதென்று தெரியவில்லை. ஆதலால் கையிலிருந்த தாளை அவரிடம் நீட்டி இருந்தாள்.

படித்து முடித்தவர், நிதானமாக அவளை ஏறிட்டு, "இது.. எப்ப கிடைச்சது?" என்று வினவ,

"இண்டைக்கு. இப்பதான்.. பாத்ததும் கொண்டுட்டு ஓடி வாரன். பாத்தீங்களா சேர்!! தம்பிய யாரோ பிளாக்மெயில் பண்ணியிருக்கினம். உங்கட மகனக் கேட்டா என்னென்டு தெரியும்.. ஸ்கூல்ல விசாரிச்சதுல இப்படி ஒரு விஷயத்த அவரும் சொல்லல்ல, ஒருவேள அவரையும் மிரட்டி வெச்சிருக்கிணமோ தெரியாது. நான்... நான் கொஞ்சம் அவரோட கதைக்கலாமா?"

மனப்பாடம் செய்ததைப் போல மளமளவென பேசினாள் ஷோபனா.

சில நொடிகள் அந்த தாளை வெறித்த படியே யோசனையாக இருந்தவர், "என்னோட ஒருக்கா வாங்க..." என்றுவிட்டு எழுந்தார்.

ஷோபனாவும் அருளும் எழுந்தனர்.
"நீங்க மட்டும்..." என்று ஷோபனாவைப் பார்த்துச் சொல்லிவிட்டு அறையை நோக்கி நடக்க,

அவள் ஒரு கணம் அருளைப் பார்த்தவள், அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த இருவரைக் கண்டு அவளது நடையே நின்றது.
'மாதவன்...!?'

அடுத்த கணம் அவளது பார்வை சரணின் மீது பதிந்தது. அவனையும் மைதானத்தில் அடிக்கடி கண்டிருக்கிறாள்.

இருவரின் முகத்திலும் ஏதோ சொல்ல முடியாத பதற்றம் படிந்திருந்தது.

கமலசேகரன் காட்டிய இருக்கையில் அமைதியாக அமர்ந்துகொண்டாள்.
அவரும் எதிரே அமர்ந்தார்.

"உங்கட தம்பிக்கு என்ன நடந்ததென்டு தெரியணும், அதானே?"

ஷோபனா பதில் சொல்லவில்லை, சரணைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையைப் புரிந்துகொண்ட கமலசேகரன், தொண்டையைச் செருமிக்கொண்டு,
"சரண்... அவனும் கதைப்பான், அதுக்கு முன்னால, நான் சொல்லுறதையும் ஒருக்கா கேளுங்க."

அவளது பார்வை இப்போது அவரிடம் நிலைத்தது.

"இங்கப்பாரம்மா..." என்று தொடங்கினார் கமலசேகரன்.

"இவனுகள் ஃபிரெண்ட்ஸா சேர்ந்து... ஏதோ தெரியாத்தனமா ட்ரக்ஸ் எடுத்....."

"ட்ரக்ஸா!?" அதிர்ச்சியில் குரல் உயர்ந்தது ஷோபனாவுக்கு.
"அபியுமா!?"

"இல்லக்கா... அபி இல்ல. அவ..."
மாதவன் அவசரமாகக் குறுக்கிட்டான்.
அடுத்த நொடியே கமலசேகரனின் கூர்மையான பார்வை அவன் மீது விழ, சட்டென்று வாயை மூடிக்கொண்டான்.

கமலசேகரன் மீண்டும் ஷோபனாவைப் பார்த்தார்.
"உங்கட தம்பி அதைப் பார்த்ததால, வெளிய சொல்லிடுவான் என்டு பயந்து, அவங்க -அந்த ட்ரக் க்ரூப், சில ஃபோட்டோஸ எடிட் பண்ணி மிரட்டியிருக்காங்க. அதோட, கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணி அப்பப்ப காசும் வாங்கப்பட்ருக்கு. நடந்தது இதான்"

சொல்லிய விஷயத்தை விட, அவர் பேச்சிலும் உடல் மொழியிலும் இருந்த இலகுத்தன்மை ஷோபனாவை வெகுவாக பாதித்தது.

"என்ன சேர், இவ்வளோ ஈஸியா சொல்றீங்க?" அவரிடம் கேட்டுவிட்டு,

நின்றிருந்த இருவரிடமும் திரும்பி,
"ஸ்கூல்ல விசாரிக்கேக்க ஏன் இதெல்லாம் சொல்லல நீங்க?" கடினமான தொனியில் வினவினாள்.

இருவரும் பதிலின்றி தலைகுனிந்து கொண்டனர்.

குழப்பம் சூழ்ந்த முகத்துடன் எதிரில் இருந்தவரை வெறித்தாள் ஷோபனா.
 
Last edited:

ஷாரிகா

Active member
Staff member
"சின்னப் பிள்ளைகள் தானே... கொஞ்சம் பயந்திருப்பாங்க. நானும் இதெல்லாம் ஆதரிக்கிறவன் இல்லமா. எனக்கும், இப்பதான் விஷயம் இதென்டு தெரியும். உடனே, இது சம்பந்தமா போலீஸ் ஆபீஸர்ஸ்டயும் கதச்சிட்டன். எப்படியும்... ஆக்களப் புடிச்சுருவாங்க."

அவர் சொன்னதும் சற்று நம்பிக்கை வந்தவளாய், "ஓஹ்! அப்ப... இவங்கட வாக்குமூலமெல்லாம் எடுத்துட்டாங்களா சேர்?" இயல்பாகவே கேட்டாள்.

கணநேர தயக்கத்தின் பின்,
"அதான் சொன்னனேமா. நான் பிள்ளைகளோட வடிவா கதச்சிட்டன்.
பாவம்! ரெண்டுங்கெட்டான் வயசுதானே... ஏதோ ஆசையில, தெரியாத்தனமா செஞ்சிட்டாங்க. இன்னும் நாலஞ்சு மாசத்துல O/L எக்ஸாம் எழுதப்போற ஆக்கள் வேற. இப்ப இவங்களுக்கு ஸ்டேஷன், கோர்ட், கேஸ் என்டு... அதெல்லாம் தேவையில்லாத அலச்சல் தானேமா. அதான் சொல்றேன், அந்த கேஸ் இருக்குற மாதிரியே இருக்கட்டும். ஆனா சம்பந்தப்பட்ட குரூப்ப, எப்படியாவது ரெண்டு மூணு நாளைக்குள்ள கண்டுபிடிக்க சொல்லிருக்கன்... புடிச்சிருவாங்க. " என்று தலையசைப்போடு உறுதி தந்தார் கமலசேகரன்.

"இல்ல சேர்... அப்படி இல்ல." ஒரேயடியாக மறுதலித்தவள்,

"சேர்...இப்ப நீங்களே சொன்னீங்களே, ஏதோ தெரியாத்தனமா என்டு, அப்ப இந்த விஷயமும் அதுட பாதிப்பும் கட்டாயம் வெளிய தெரியனும். அதுவுமில்லாம கேஸ மதுஷ்ணவிடா பக்கமே முழுசா திருப்பிவிட்டது, ரொம்ப பெரிய அநியாயம். "

குரல் சற்றுத் தளர்ந்தது.
"எனக்கு யாரையும் பழிவாங்கணுமென்டு இல்ல சேர்."

பிறகு ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக உச்சரித்தாள்.
"ஆனா... அபி விஷயத்துல நடந்தது என்னன்டு எல்லாருக்கும் முழுசா தெரியணும். இவங்களும் ஸ்டேஷனுக்குப் போய், தெரிஞ்சதெல்லாம் சொல்லணும்."

"இல்லம்மா. அது கஷ்டம்."
வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என பதில் வந்தது.

அவர் எதைக் காப்பாற்ற முயல்கிறார் என்பது இப்போதுதான் புரிந்தது ஷோபனாவுக்கு.


"ப்ளீஸ் சேர்.. கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. என்ட தம்பியும், உங்கட மகனாக்களும் மட்டும் படிக்கிற ஸ்கூல் இல்லயே அது. இன்னும் ஆயிரக்கணக்கில பிள்ளைகள் இருக்காங்க. அவங்களுக்குத் தெரியனும்; அவங்கட பேரன்ட்சுக்கு தெரியனும்; ஊராக்களுக்கும் தெரியனும்..."

ஒரு கணம் மூச்சைச் சீர்செய்தவள், மீண்டும் தொடர்ந்தாள்.

"என்ன நடந்தாலும், அபி திருப்பி வரப்போறதில்ல... ஆனா இன்னும் எத்தனை பிள்ளைகள் இப்படிப் பயந்துட்டு வாழ்றாங்களோ... யாருக்குத் தெரியும்? . இதுவரைக்கும் எங்கேயோ நடந்திருக்கென்டு கேள்விப்பட்ட விஷயம், இப்ப எங்கட ஊர்ல, எங்கட பிள்ளைகளுக்கு நடக்கேக்க, ஒரு டீச்சரா இத அப்படியே மூடி மறைச்சுட்டு போக என்னால முடியாது சேர்."

"விளங்குதுமா.. ஸ்கூல்லயும் கதைக்கிறேன். Anti Drugs செமினாருகள், லீடர்ஷிப் ஒர்க்சாப்... இப்படி ஏதாச்சும் தொடர்ச்சியா செய்ய சொல்லணும். அப்டியெண்டா ஓகே தானே?"

அவ்வளவுதான்.

ஷோபனாவுக்கு தெளிவாக விளங்கிவிட்டது. இவர் ஒருபோதும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. இயலாமையின் உச்சமாக சினம் பொங்கியது.

இனி பேச இயலாது அவளால். கோவத்தில் பேச முயன்றால் அழுதுவிடக்கூடிய அபாயம் அதிகம்.

அவர், தன் மகனைப் பிடித்து வைத்துக் கொள்ளட்டும். ஆனால் இந்த மாதவன், அவனாவது உதவ மாட்டானா?

உதடுகளை இறுக்கிப் பிடித்து உணர்வுகளை அடக்கியபடி, கடைசி வாய்ப்பென, அவன் முகம் பார்த்தாள்.
ஆனால் அவள் கண்களை சந்திக்கவே மறுத்தான் அவன். அந்த மௌனம், எந்த மறுப்பைவிடவும் கொடூரமாக இருந்தது.

" மாதவனும் வரமாட்டான்." என்றுவிட்டு அபியின் கடிதத்தை அவள் புறமாக நீட்டியவர்,

" வீணா பொலிஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் அலையாதம்மா. நீ போனாலும், இந்த லெட்டர மட்டும்வச்சுக் கொண்டு கேஸ் முன்னுக்குப் போகாது. அதுக்கு ஆதாரம் வேணும்;சாட்சி வேணும்; டிஜிட்டல் எவிடென்ஸ் வேணும்." என்க,

'உங்கட ப்ரீ அட்வைஸ் எனக்கு வேணாம்' சொல்லத்துடித்த நாவை வலுக்கட்டாயமாக இழுத்து அடக்கிக்கொண்டாள். கடிதத்தை கிட்டத்தட்ட பறித்துக்கொண்டவள், எழுந்து வேகமாக வெளியேறிவிட்டாள்.

***************

" யூனிபார்ம் கூட மாத்தாம, அவ்வளோ நேரம் அப்படி என்ன கத? சரண், ஸ்கூல்ல ஏதும் பிரச்சனப்பட்டுட்டானோ!?"

மகனுடைய சோற்றுப் பீங்கானில் கறி வைத்தவாறே வினவினார் தேவி.

"அதெல்லாம் ஒன்டுமில்லமா. மாமா கூப்பிட்டு, படிப்பு விஷய..."

அவனைத் துளைக்கும் பார்வை பார்த்தவர்,
"உனக்கும் உங்கட அப்பாக்கும் நம்புற மாதிரி பொய் சொல்லவே தெரியாது." என்றதில்,
வாய்க்குள் இருந்ததை மெல்லமுடியாமல், சங்கடமாக அவரை நோக்கினான் மாதவன்.

தேவி ஒரு பெருமூச்சுடன்,

"மாதவா... நான் ஆயிரம் முறை சொல்லிட்டன். திருப்பவும் சொல்றன், வடிவாக் கேட்டுக்கோ. உங்கட அப்பா, நல்லது கெட்டது பாக்காம லோயர் சேருக்கு துணபோய் துணபோய், கடைசில ஜெயிலுக்கயே செத்துப் போனதுதான் மிச்சம்..." என்றவர்,

சில நொடி அமைதிக்குப் பின்,

" எனக்கென்டா சரண்ட போக்கும் சரியாவே படல. அன்டைக்கு ரூம க்ளீன் பண்ணேக்க, நாலஞ்சு சிகரெட்... அவனும் , உன்ட மாமாவும் உண்மையிலயே உன்னோட இரக்கம் தான். அதுல எனக்கு சந்தேகமில்ல. ஆனா அதுக்காக அவங்க சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடவோ, செய்றதுக்கெல்லாம் துண நிக்கவோ அவசியமில்ல... சரி இதெல்லாம் விடு. என்ன பிரச்சனன்டு அம்மாட்ட சொல்லப்பு?"

மாதவன் வாய் திறவாது, தட்டிலிருந்ததை அளைந்து கொண்டிருந்தான்.

இது வழக்கம் தான். சரணின் விடயமாக தேவி ஏதாவது கேட்கும் சமயங்களில், மாதவன் திடீர் மௌனி அவதாரம் எடுத்துவிடுவான்.

அவரும் இயன்றவரை முயன்று பார்த்துவிட்டு, ஒரு கட்டத்தில் விட்டுவிடுவார்.

"அந்த நேரத்துல குழந்தப்பிள்ளையோட, வேறவழியில்லாமல் தான் இங்க வந்தன். இப்பவும் விருப்பமே இல்லாம, உன்ட தெண்டுதலால இங்க இருக்க வேண்டியதாக் கிடக்கு. என்ட பிள்ள நீ, ஒழுங்கா இருந்துக்கோ மாதவா. கேட்கக்குள்ள வாயே திறக்காம இருந்துட்டு, ஏதும் பெருசா நடந்த பிறகு அம்மா என்டு வந்து நின்டுறாத. சொல்லிப் போட்டன்."
கோவமாய் சொல்லிவிட்டு அவர்களது அறைக்குள் சென்றுவிட்டார்.

மாதவனுக்கு தொண்டை வழியாக உணவு இறங்கவே இல்லை. தாய் சென்ற திசையையே பார்த்திருந்தான்.

*********************

ஷோபாவுக்கு மனம் தாங்கவேயில்லை. இவ்வளவு நாட்களும் இருட்டின் நடுவே திசை தெரியாமல் நின்றவளுக்கு, அபித்ரனின் கடிதம் கிடைத்த அந்த நொடி, ஏதோ மெல்லிய நூலிழையைப் பிடித்த உணர்வு. அதைப் பற்றியபடியே நடந்தால் ஒருவேளை அது தன்னை ஏதோ ஒரு வெளிச்சமான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று முழுதாக நம்பினாள்.

ஆனால்...
இப்போதும் முழு உண்மை அவளுக்குத் தெரியவில்லை. தெரிந்த சில உண்மைகளை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாத கையாலாகாத நிலை, அவளது மனதை நொறுக்கிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு கணமும் அந்த இயலாமை அவளை உள்ளுக்குள் சிதைத்தது.

கனத்த காலடிகளுடன் வாசற்கதவைத் தாண்டி வீட்டிற்குள் நுழைந்தாள் ஷோபனா. அவளது நடையில் இருந்த தள்ளாட்டத்தைக் கண்ட அமுதா, பதற்றத்துடன் அவளை நோக்கி விரைந்தார்.

ஆனால் அவர், அவளை நெருங்குவதற்குள், இதுநாள் வரையிலான அத்தனை மன அழுத்தமும், உடல் சோர்வும், காலை சாப்பிட்டதோடு, நாள் முழுவதும் எதையும் உண்ணாமல் இருந்ததால் ஏற்பட்ட பலவீனமும் ஒன்றுசேர்ந்து, அவளை முற்றிலுமாக ஆட்கொண்டன.

ஷோபனா கண்கள் இருள மயங்கிச் சரிந்திருந்தாள்.

விஷயத்தை அறிந்ததுமே கிளம்பி வர வேண்டும் என்றுதான் வருணின் மனம்துடித்தது. ஆனால் நாளை தவிர்க்க முடியாத கிளையண்ட் மீட்டிங் இருந்ததால், அவனால் உடனடியாக வர இயலவில்லை.

மறுநாள் காலையிலேயே ஷோபனா வைத்தியசாலையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்திருந்தாள்.

மீட்டிங்கை முடித்துக்கொண்டு, மாலையில்தான் ஊருக்கு வந்து சேர்ந்தான் வருண்.

அவனைக் கண்டதும், எல்லாம் பகிர்ந்து ஒருமூச்சு அழுது தீர்த்தாள் பெண்.

"ஒருக்கா நான் போய் கதைச்சிப் பாக்குறன்." என்றவன், பொழுது சாய்ந்த நேரத்தில், கமலசேகரை சந்திக்க சென்றிருந்தான்.

ஆனால் அவனது முயற்சியும் பலனளிக்கவில்லை. எவ்வளவோ எடுத்துரைத்தும், அவர் தன் நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வர மறுத்துவிட்டார்.
இறுதியில், ஏமாற்றத்தோடுதான் அங்கிருந்து திரும்ப வேண்டியதாயிற்று வருணுக்கு.
 
Last edited:
Top Bottom