உறை நீர் - 4
மருத்துவமனைக்குள் நுழைந்து தமிழ்ச்செல்வன் நிலா இருந்த வார்டில் காலை வைத்த நேரம் அவளோ அங்கு பெரிய கலாட்டாவே பண்ணிக் கொண்டிருந்தாள்..
ஒரு மருத்துவர் இரண்டு செவிலிகள் என அவள் கை கால்களை இறுக்கமாய் பிடித்தபடி அவளை அமைதிப்படுத்த படாத பாடு பட்டு கொண்டு இருக்க அவளோ ஏற்கனவே அறுத்துக் கொண்டு கட்டுப் போட்டிருந்த கையில் கத்தியை பிடித்திருந்தவள் ஆவேசம் வந்தவள் போல் அவர்களிடமிருந்து திமிறி இன்னொரு கையின் நரம்பை அறுத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள்..
"என்னை விடுங்க.. நான் சாகுறேன்.. என்னால உயிரோட இருக்.."
அவள் கத்தல் திமிறல் எல்லாமே பட்டென நின்று போனது.. அதற்கு மேல் வார்த்தை வராமல் தொண்டை வரள எச்சில் விழுங்கியவள் அந்த வார்டின் நுழை வாயிலை பார்த்தபடி அகன்று விரிந்த விழிகளோடு எந்த அசைவுமின்றி அந்தரத்திலேயே கத்தியை பிடித்திருந்த கை நின்றுவிட உறைந்து விட்டாள்..
அவளின் இந்த திடீர் மாற்றத்தை பார்த்து அங்கிருந்த எல்லோரும் அவள் பார்வையை தொடர்ந்து வாசல் பக்கம் பார்க்க அங்கே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கதவு நிலையில் சாய்ந்து நின்றபடி அவளைத்தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன்.
தன் நெற்றியை விரலால் நீவிய படி மெல்ல அவள் அருகே அடி மேல் அடி வைத்து நடந்து வந்தவனை மிரண்டு போய் தான் பார்த்திருந்தாள் நிலா..
அவளைப் பிடித்திருந்த செவிலிகளும் மருத்துவரும் அவளை விடுவித்து இருக்க அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆழ்ந்த பார்வையை சற்றும் விலக்காமல் அவள் அருகே வந்த தமிழ் கத்தியை பிடித்திருந்த அவளின் கையை பிடித்து அவள் கழுத்து பக்கத்தில் வைத்து
"கட் பண்றதுன்னா இங்க கட் பண்ணிட்டு ஒழுங்கா செத்துப் போ.. நாங்க எல்லாம் என்ன வேலை வெட்டி இல்லாம இருக்கோம்னு நினைச்சியா? இங்க இருக்கிற டாக்டர்ஸ் நர்ஸ் எனக்கு எல்லாருக்கும் நிறைய வேலை இருக்கு.. நீ எப்ப கைய வெட்டிப்ப.. உன்னை எப்படி காப்பாத்தணும்னு எந்த நேரமும் யோசிக்கிறது எங்களோட வேலை இல்லை. ஒழுங்கா கழுத்தை கட் பண்ணிட்டு சாவு.. அதை விட்டுட்டு கையில கட் பண்ணிக்கிறேன்னு அரைகுறையா கட் பண்ணிக்கிட்டு எங்க உயிரை எடுக்காதே.." என்றான்.
அவன் அவள் கையைப் பிடித்து இருந்த பிடியில் இருந்த அழுத்தத்தை சற்றும் குறைக்கவில்லை.. இன்னும் சொல்லப் போனால் அவள் கையை இன்னும் கழுத்துக்கு நெருக்கமாக கொண்டு போய் "ப்ச்.. சீக்கிரம் வேலையை முடி.. டைம் ஆகுது இல்ல.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. நீ செத்த பிறகு ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சுட்டு உன்னை அடக்கம் பண்ணிட்டு தான் மத்தவங்களை எல்லாம் நான் போய் பாக்கணும்.. சாகப் போற உனக்காக இந்த வலியை எல்லாம் தாண்டி வாழணும்னு நினைக்கிறவங்களை என்னால தவிக்க விட முடியாது.. உனக்கு இன்னும் ரெண்டு நிமிஷம் தான் டைம்.. அதுக்குள்ள வேலையை முடி" என்றவனை அதிர்ந்து போய் பார்த்திருந்தவளின் கவனத்தை கலைத்தது கார்த்திக்கின் அழுகை சத்தம்.
அவள் செய்த அமர்க்களத்தை பார்த்து அரண்டு போன கார்த்திக் அழுது கொண்டே இருக்க அவன் அழுகை சத்தம் அதுவரை அங்கு நடந்த கலவரத்தில் கேட்காமல் இருந்தது நிலாவிற்கு..
சூர்யாவும் அவனை அங்கு நிகழ்ந்ததை பார்க்க விடாமல் அவன் முகத்தை தன் தோளில் வைத்து மறைத்தபடி அவனை தூக்கி அணைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்..
கார்த்திக்கின் அழுகை சத்தத்தை கேட்டு "கார்த்திக்.. சாரிடா.. அழாதடா.." என்று தன் கழுத்தில் இருந்த கத்தியை விலக்கிவிட்டு கட்டிலில் இருந்து நிலா இறங்க பார்க்க தமிழோ அவளை அவள் இருந்த நிலையிலிருந்து கிஞ்சித்தும் அசைய விட்டான் இல்லை..
தமிழ்ச்செல்வனை தீவிரமாக முறைத்தவள் "விடுங்க என்னை.." என்க
"செய்ற வேலையை முழுசா முடிச்சுடு.. உங்க எமோஷனல் சீன் எல்லாம் பாக்குறதுக்கு எனக்கு டைம் இல்ல.."
அவன் சொன்னதைக் கேட்டு இவன் எல்லாம் மனிதனா என்று தான் தோன்றியது அவளுக்கு..
"உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே கிடையாதா.. என் தம்பி அழறான்.. விடுங்க என்னை.." என்க அவள் கையில் இருந்த கத்தியை அவளிலிருந்து சற்றும் பார்வையை விலக்காமல் தன் இடக்கைக்கு மாற்றியவன் இன்னொரு கையால் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான்..
அவனுடைய ஐந்து விரலும் அவள் கன்னத்தில் அழுத்தமாய் பதிந்து இருந்தது.. அவன் அறைந்த கன்னத்தை கையால் தாங்கியபடி மிரண்டு போய் அவனை விழித்து பார்த்திருந்தாள் நிலா.
"மேடமுக்கு இப்பதான் தம்பின்னு ஒருத்தன் இருக்கான்னே தெரியுதோ? இத்தனை நேரம் அவனை பத்தி கூட யோசிக்காம உயிரை விடணும்னு துடிச்சுட்டு இருந்த.. அப்படி என்னடி சாகணும்னு உனக்கு வெறி?"
ஏற்கனவே அவள் தற்கொலைக்கு முயன்றதில் கோபத்தில் இருந்தவனுக்கு இப்போது மறுபடியும் அவள் அதையே செய்ய துணிந்ததில் அவள் மீதான ஆத்திரம் எல்லை கடந்து போய் இருந்தது.
"ஏன்? இந்த கேள்வி கேட்கிற உங்களுக்கே தெரியாது..? என் தம்பியை மறந்து என் உயிரை எடுத்துக்கணும்னு நான் நினைக்கிறேன்னா அதுக்கு காரணம் உங்களை மாதிரி ஆம்பளைங்க தான்.. பொம்பளைங்களை எப்போவும் ஒரு போகப் பொருளா தானே நீங்க எல்லாம் பாக்குறீங்க? எங்க உணர்வுகளுக்கு உங்க கிட்ட ஏதாவது மதிப்பு இருக்கா..? ஹூம்.. எங்களுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ உங்க இஷ்டப்படி தான் நாங்க எல்லாமே செய்யணும்ல? உங்க சந்தோஷம் தான் முக்கியம்.. எல்லாரும் சுயநலம் பிடிச்சவங்க.. இதோ இப்ப கூட என் உணர்வு புரியாம என்னை அடிச்சு பணிய வெக்க தானே நினைக்கிறீங்க? இதையே தானே இந்த ஒரு மாசமா நான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன்.. அப்புறம் உயிரோட இருக்குறதுக்கு எனக்கு என்ன காரணம் இருக்க முடியும்?"
அவள் கேட்ட கேள்வி எல்லாமே தமிழ்ச்செல்வனுக்கு உரியது அல்ல.. இந்த ஒரு மாதமாய் அவளை சித்திரவதை செய்து இந்த சாக்கடைக்குள் தள்ளிய டில்லி பாபு.. அவனுடைய ஆட்கள்.. அவளோடு இந்த ஒரு மாதமும் சல்லாபித்து பல கொடுமைகளை செய்து தன் கொடூரமான காம இச்சைகளை தீர்த்துக் கொண்ட அந்தக் கிழட்டுக் காமாந்தகன்.. இவர்களுக்கான கோபம் அது..
ஆனால் சம்பந்தமே இல்லாமல் அத்தனை கோபத்தையும் தமிழ்ச்செல்வன் மேல் கொட்டி இருந்தாள் பெண்ணவள். அவனும் சிறிதும் அசையாமல் எதுவும் பேசாமல் அமைதியாய் அவள் வார்த்தைகளை வாங்கிக் கொண்டிருந்தான்..
சூர்யாவுக்கோ அவனுடைய இந்த அமைதி ஆச்சரியமாக இருந்தது. 'இவன் இவளை காப்பாத்த தானே செஞ்சிருக்கான்.. அப்புறம் அவ இவ்வளவு திட்டும் போது எதுவும் சொல்லாம வாங்கி கட்டிக்கிட்டு நிக்கிறான்..!?' என்று எண்ணியவள்
"ஏய் நிலா.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இத்தனை நாள் உன்னை கொடுமைப்படுத்தி உன்னை அனுபவிச்சவங்களையும் இவரையும் ஒரே தட்டில வெச்சு பேசுற.. இவரு உன்னை அடிச்சது உன்னை காப்பாத்தறதுக்காக.. நீ இப்படி உயிரை விட பார்க்கறியேங்கற கோவத்துல.. இவரும் அவங்களும் ஒன்னா டி?"
அவளுக்கும் அப்போதுதான் தான் எங்கோ இருக்கும் கோபத்தை யாரிடமோ காட்டிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது..
சூர்யாவை திரும்பிப் பார்த்த தமிழ் அவளை நிறுத்துமாறு கையை காட்டி "பரவால்ல.. திட்ட வேண்டியது எல்லாம் திட்டி முடிச்சாச்சா? இப்போ நிதானமா யோசிக்கலாமா? ஒரு மாசமா அந்த மாமா பசங்களையும் உன்னை இந்த கதிக்கு ஆளாக்கின அந்த ********களையும் போட்டு தள்ளாம பொறுமையா இருந்துட்டு அங்கருந்து வெளிய வந்தப்பறம் இப்படி ஒன்னையே நீ அழிச்சுக்கறதனால என்ன நடக்கும்னு நெனைக்கற..? உனக்கு என்ன மானம் போனதை தாங்காமல் உயிர் நீத்த கவரிமான் பெண்..!! னு மெரினா பீச்ல சிலையா வைக்க போறாங்க..? நீ இல்லனா உனக்கு பதிலா இன்னொரு பொண்ணு.. அவ்வளவுதான் அவனுங்க கணக்கு. அந்தக் கணக்கை மாத்தி எழுதறதுல இந்த வெறியை காட்டு.. நானே உனக்கு சிலை வைக்கிறேன்.."
அதுவரை வெறி பிடித்தவள் போல் உயிரை விட போனவள் நிதானித்து இருந்தாள். ஆனால் சுயபச்சாதாபம்.. தன்னுடைய நிலையை பற்றிய நினைப்பு அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுக் கொண்டிருந்தது. அவள் கண்களில் வழிந்த கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை..
"சாரி சார்.. தேவையில்லாம உங்களை திட்டிட்டேன்.. என் தம்பிக்காக நான் வாழ்ந்துதான் ஆகணும்.. நான் இல்லாம அவன் ரொம்ப தவிச்சு போயிருப்பான்.. ரெண்டு முறை என் உயிரை காப்பாத்துனதுக்கு தேங்க்ஸ் சார்.." தழைந்த குரலில் தலைகுனிந்து அவள் சொல்ல அவனுக்கோ மனதில் பாரம் ஏறியது..
அவளை கூர்ந்து பார்த்தவன் அவள் நாடியில் கை வைத்து அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான்..
"நீ எதுக்கு தலை குனிஞ்சு சாரி சொல்லிட்டு இருக்க? நீ எதுக்கு அவமானப்பட்டு சாகணும்? இப்படி கூனி குறுகி போற அளவுக்கு நீ என்ன தப்பு பண்ண? முதல்ல ஒன்னு புரிஞ்சுக்க.. நீ எந்த தப்பும் பண்ணல.. நிமிர்ந்து தைரியமா கண்ணை பார்த்து பேசு.. தலை குனிய வேண்டியவனுங்க எல்லாம் திமிரா சுத்திட்டு இருக்கானுங்க.. இன்னைக்கு நீ ஹாஸ்பிடல் வராம ஸ்டேஷனுக்கு வந்து இருந்தா உனக்கு புரிஞ்சிருக்கும்.. எவ்ளோ தெனாவட்டா பேசுறான் தெரியுமா அவன்.. அவனோட திமிரை அடக்க வேண்டாம்..? இன்னொரு பொண்ணு இவனுங்களால சீரழியக்கூடாது.. அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்.. அதுக்கப்புறம் நீ உயிரை விட்டாலும் எனக்கு கவலை இல்லை.."
அலட்சியமாய் சொல்லிவிட்டு அந்த அறையின் நாலா பக்கமும் விழிகளை அலைபாயவிட்டவன் யாரையோ நினைத்து கொலைவெறியோடு தன் சிகையை அழுத்தமாய் கோதி பல்லைக் கடித்து முஷ்டியை இறுக்கினான்.. அடுத்த கணம் தன்னை கட்டுக்குள் கொண்டு வர கண்களை அழுத்தமாய் மூடி திறந்தான்..
அந்த மருத்துவரோ தமிழை ஆச்சரியமாக பார்த்திருந்தார்.. இதுவரை அவன் இவ்வளவு நீளமாக யாரிடமும் பேசி அவர் பார்த்ததில்லை.. ஆளுமையோடு கம்பீரமாக சுருக்கமாய் ஒற்றை வார்த்தையில் பேசி முடிப்பவன் அவன். இன்று அவனுடைய இந்த முகம் ரொம்பவுமே புதிதாக இருந்தது அவருக்கு..
அங்கே பயத்தோடு நின்றிருந்த கார்த்திக்கை பார்த்தவன் பார்வையால் அவனை அழைக்க அவனும் ஓடி வந்து கட்டிலில் ஏறி நிலாவின் மடியில் அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டான்.
அவன் முகம் எங்கும் முத்தமிட்டவள் "சாரிடா கார்த்தி.. உன்னை பத்தி யோசிக்காம.." என்று உணர்ச்சிவசப்பட்டு அவனை இறுக்கிக் கொண்டவளை ஆழ்ந்து பார்த்தான் தமிழ்..
"இங்க பாரு சாக வேண்டியவங்க அவனுங்க.. உங்களை இந்த கதிக்கு ஆளாக்குனவன் முன்னாடி சந்தோஷமா வாழ்ந்து காட்டு.. அதுதான் நீ அவனுங்களுக்கு கொடுக்குற தண்டனை.. புரியுதா?" அடிக்குரலில் மிரட்டலாக கேட்டவனை கலங்கிய விழிகளை உயர்த்தி பார்த்தவள் "புரியுது சார்.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. ஏதோ கோவத்துல உங்களை பத்தி ரொம்ப தப்பா பேசிட்டேன்.. சாரி சார்" என்று கையை குவித்தாள்.
அவள் கையை கீழே இறக்கி விட்டவன் "இங்க பாரு.. இப்ப மட்டும் இல்ல.. இனிமே நீ மறுபடியும் இந்த வேலை பண்ண நினைச்சா இப்படித்தான் நான் பிஹேவ் பண்ணுவேன்.. ஒரு உயிரை காப்பாத்துறதுக்காக கோவப்படுறதோ பொய் சொல்றதோ தப்பு இல்லன்னு நினைக்கிறவன் நான்.. சாகறது ரொம்ப ஈஸி.. போராடி வாழறது தான் கஷ்டம்.. எனக்கு தெரியும்.. வாயால சொல்றது சுலபம்.. ஆனா உன் நிலையில் இருந்து இந்த கஷ்டத்தை எல்லாம் ஃபேஸ் பண்ணி வாழறது போராட்டம்.. ஆனா நான் எப்பவும் உன்னோட போராட்டத்துக்கு துணையா இருப்பேன்.. இதை மட்டும் மறந்துடாத.. இனிமே இந்த மாதிரி எண்ணம் உனக்கு வரவே கூடாது.."
அவன் சொன்னதைக் கேட்டவள் ஆமோதிப்பாய் தலையை ஆட்டினாள்.. அதன் பிறகு அந்த மருத்துவரிடம் திரும்பியவன் "டாக்டர்.. இவங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க.. உங்க ஹாஸ்பிடல்ல சுனிதா இருக்காங்க இல்லையா? அவங்க கிட்ட ஸ்லாட்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க.." என்றான்.
"என்ன சார் இது? டாக்டர் சுனிதா உங்களோட ஃபியான்சே.. அவங்க கிட்ட என்னை ஸ்லாட் கேக்க சொல்றீங்க? நீங்களே கேட்கலாமே.." என்றார்..
நீர் உறையும்..
Last edited by a moderator:
Author: STN - 72
Article Title: 4. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: 4. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.