• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

6. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member

உறைநீர் - 6

நிலா அலறுவதை கேட்டு அங்கிருந்த மூவரும் அவளை புரியாமல் பார்த்தனர்.

சுனிதா அவள் அருகே சென்று அவள் கைகளை இறுக்கமாகப் பற்றி "ஓகே ஓகே.. காம் டவுன்.. இப்ப என்ன..? ஒரு போலீஸ் இருக்கிற வீட்டில நீ இருக்க மாட்டே.. அவ்வளவு தானே? அது ஒன்னும் பிராப்ளம் இல்ல.. நம்ம வேற ஏதாவது ஆப்ஷன் பார்க்கலாம்.. நீ அமைதியா இரு.. நான் சொல்றதை நல்லா மனசுல வச்சுக்க.. உன் இஷ்டம் இல்லாம உன்னை எந்த இடத்துக்கும் கூட்டிட்டு போக மாட்டோம்.. நீ எங்களை நம்பணும்.. இதுவரைக்கும் நீ நம்பி இருந்த ஆட்கள் உன்னை ஏமாத்தி இருக்கலாம்.. ஆனா நாங்க நிச்சயமா ஏமாத்த மாட்டோம்.. அதுவும் தமிழ் அரசி மாதிரி நல்லவங்க இந்த மாதிரி ப்ரொபஷன்ல இருக்கறதே நம்ம எல்லாருக்கும் கிடைச்ச வரம்.. இது போக போக உனக்கு புரியும்.. நாம இதை பத்தி கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம்.. நீ முதல்ல அமைதியா இரு.." என்று அவளை அமைதி படுத்தியவள் நிலா அப்படியே கண் மூடி அந்த படுக்கையில் சாய்ந்து விட அங்கு இருந்த மற்றவர்களுக்கு கண்ணை காட்டி அந்த அறையை விட்டு வெளியே வரச் சொன்னாள்..

வெளியே வந்ததும் தமிழையும் அரசியையும் பார்த்து "தமிழ்.. இனிமே உங்க வீட்டுக்கு வரதுக்கு அவ ஒத்துக்க மாட்டா.. ஃபார்ம் ஹவுஸ்ல அப்பா இருக்காரு.. அவரும் போலீஸ் தானே.. அவ ஏன் போலீஸ் இருக்கற வீட்டுல தங்கறதுக்கு இவ்ளோ பயப்படறான்னு தெரியலையே" என்று அவள் யோசனையாய் சொல்ல

"அதுக்கு காரணம் இருக்கு.. இந்த ஒரு மாசமா அவ கூட இருந்து கொடுமைப்படுத்தி அவளை செதைச்ச அந்த வயசான கிழட்டு நாய்.. அது ஒரு போலீஸ் உருவத்தில இருந்த பொறுக்கி.. ஒரு மாசமா அவ சித்திரவதை அனுபவிச்சிருக்கா.. அந்த ஆளு இரக்கமே இல்லாத ஒரு ராட்சசன்.. அதனாலதான் அவ போலீஸ்னாலே பயந்து நடுங்குறா.." என்று சூர்யா சொல்ல

அதைக் கேட்டு திடுக்கிட்டான் தமிழ்..

"என்ன போலீசா? யார் அவன்? அவன் பேர் என்னன்னு தெரியுமா?"

"இல்ல எங்க கிட்ட வர்றவங்க யார் பேரையும் எங்ககிட்ட சொல்ல மாட்டாங்க.. அவங்க யாரு.. என்ன.. எந்த டீடைல்ஸூம் எங்களுக்கு தெரியாது.. பொண்ணுங்க தப்பிச்சு போயிட்டா கூட இந்த பெரிய மனுஷங்களை வச்சு அவங்களை கண்டுபிடிச்சு மொத்தமா போட்டுத் தள்ள பார்ப்பாங்களே தவிர அவங்க யாரு எங்க இருக்காங்க என்ன பண்றாங்கன்னு ஒரு விஷயமும் எங்களுக்கு எப்பவுமே சொல்ல மாட்டாங்க.. அந்தாளு போலீஸூங்கறது கூட அவன் அவ கூட இருந்தப்போ போதையில அவன் உளறினது தான்.. இன்னொரு விஷயம் கூட அந்தக் கிராதகன் உளறினதா சொன்னா அவ.. அவனோட கூட இருந்த யாரோ ஒருத்தங்க அவனை ஏமாத்திட்டதா சொல்லி அவளை எப்படியும் ஒரு நாள் பழி வாங்குவேன்னு உளறி இருக்கான்.. அப்ப அவன் கண்ணுல கொலைவெறியே தெரிஞ்சதுன்னு சொன்னா.. அந்த பொம்பளையை பத்தி பேசும் போதெல்லாம் அவ மேல இருந்த கோவத்துல ஒவ்வொரு நாளும் நிலாவை அணு அணுவா செதைச்சிருக்கான்.. நாசமா போய்டுவான் அவன்.. அவனெல்லாம் உடம்பு முழுக்க புழுத்து போயி தான் சாவான்.. செத்தா கூட நரகத்தில அவனை எண்ணெய் சட்டியில போட்டு தான் வறுப்பாங்க.. அவனெல்லாம் மனுசனே கிடையாது.. மிருகம்.."

சூர்யா அந்த காமாந்தகனை வாயால் அரைத்துக் கொண்டே போக அவள் கையை இறுக்கமாய் பிடித்த அரசி "ஓகே புரியுது.. ஆனா இனிமே அவளுக்கு அப்படி எதுவும் நடக்காது.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கறது எங்க பொறுப்பு.. அது மட்டும் இல்ல.. அங்க இருந்த எல்லாருக்குமே யாரையும் நம்பி இருக்காம சுயமா அவங்களோட சொந்தக் கால்ல நிக்கற மாதிரி வேலை ஏற்பாடு பண்ணியோ இல்ல சுயதொழில் அமைச்சோ கொடுத்து உதவி செய்ய வேண்டியது எங்க பொறுப்பு.. நீ இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதே.. இனிமே அந்த இடத்துல நடந்ததத்தனையும் மறக்க பாருங்க.. இன்னைக்கு நீங்க எல்லாம் புதுசா பொறந்திருக்கிறதா நினைச்சுக்கோங்க.. இனிமே வாழற வாழ்க்கையை சந்தோஷமா வாழுங்க.. புரியுதா?" என்றாள்.

"ம்ம்.. நான் போயி நிலாவை பார்க்கிறேன்.. அவ ரொம்ப வேதனைல இருக்கா.. அவங்க அம்மா இந்த இடத்தோட காத்து கூட படாம 18 வயசு வரைக்கும் அவளை பொத்தி பொத்தி வளர்த்தாங்க.. ஆனா அந்த டில்லி பாபு எப்படியோ அவ இருக்கிற இடத்தை மோப்பம் பிடிச்சு அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லாம போனப்போ அவ கிட்ட நல்லவன் மாதிரி ஏதேதோ பேசி இங்க கூட்டிட்டு வந்துட்டான்.. அவனை எல்லாம் நட்ட நடு ரோட்டுல வச்சு கொளுத்தணும்.. எவ்ளோ பொண்ணுங்களோட வாழ்க்கை.. இவனாலயும் இவனோட அப்பனாலயும் நாசமா போயிருக்கு.. பாவி.. பாவி.."

அவள் புலம்பிக் கொண்டே இருக்க பார்த்த மூவருக்கும் அவர்களின் வலிக்கு எப்படி மருந்திடுவது என்று கூட தெரியவில்லை.. இந்தக் காயங்கள் நிச்சயம் மறையாது.. ஆறுவதற்கும் நீண்டகாலம் ஆகலாம்.. அதற்குள் அவர்கள் மொத்தமாய் உடைந்து போகாமல் காப்பது எப்படி என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தார்கள்..

"இனி அப்படி எதுவும் நடக்காது.. அப்படி நடக்காம பாத்துக்கிறதுக்கு தான் நாங்க இருக்கோம்.. நீ அவளை அந்த நினைப்பில இருந்து எப்படி வெளிய கொண்டு வர்றதுன்னு மட்டும் பாரு.. பழசை பேசாம அவ கிட்ட பேசும்போது அவளுக்காக என்ன மாதிரியான வாழ்க்கை காத்துகிட்டு இருக்குன்னு புரிய வை.. அவளுக்கு தேவையானது அன்பு அரவணைப்பு இதெல்லாம் தான்.. நிச்சயமா அரசியும் சுதாவும் உங்களுக்கு அதை கொடுக்கற நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்பாங்க.."

தமிழ் சொன்னதைக் கேட்டு ஒரு புதுவித தெம்பு பிறந்தது உள்ளுக்குள் அவளுக்கு.. அவனைப் பார்த்து சினேகமாய் ஒரு புன்னகை சிந்தினாள்..

"ரொம்ப தேங்க்ஸ் சார்.. நீங்க இல்லனா இன்னும் எத்தனை நாள் நாங்க அந்த நரகத்தில சிக்கிக்கிட்டு இந்த சித்திரவதையை எல்லாம் அனுபவிச்சு இருந்திருப்போன்னு தெரியாது.. அவ இந்த ஒரு மாசமா அந்த போலீஸ்காரன் பண்ண டார்ச்சர்னால தான் உங்களை தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கா.. அதிலிருந்து வெளியில வந்தா தன்னால உங்களை பத்தி புரிஞ்சிடும்.. அப்புறம் உங்களை தெய்வமா தான் பார்ப்பா.."

சூர்யா சொல்ல "தெய்வமா? அந்த ராட்சசனுங்களால நாங்க உங்க கண்ணுக்கு தெய்வமா தெரியறோம்.. ஒரு மனுஷனா செய்ய வேண்டிய கடமைகளை தான் நாங்க எல்லாரும் செஞ்சுக்கிட்டு இருக்கோம்.. சரி நீ உள்ள போ.. அவளோடயே இரு.. அவளை தனியா இருக்காம விடாம எப்பவும் அவ மேல ஒரு கண்ணு வெச்சு பாத்துக்க.." என்றான் தமிழ்..

"அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க ஆஃபீஸர்... நான் இப்போதைக்கு அவங்களை விட்டு போறதா இல்ல.. நானும் அரசியும் மாறி மாறி வந்து அவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறோம்.. அப்பாக்கு கூட ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்.."

சுனிதா உறுதியான குரலில் சொல்ல "தேங்க்ஸ் டி" என்றான் தமிழ்..

"அரசி உங்க அண்ணனை திருத்தவே முடியாது தெரியுமா? எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன் ஃப்ரண்ட்ஸ்க்கு நடுவுலயே தேங்க்ஸ் சாரி எல்லாம் இருக்க கூடாதுன்னு.. ஆனா உங்க அண்ணன் சாரி தேங்க்ஸ் சொல்லி என்னை தள்ளி வெச்சே பார்க்கறான்.. கல்யாணம் ஆனப்புறம் என்னோட இவன் எப்படி குடும்பம் நடத்த போறான்னே தெரியல.. இவனை கல்யாணம் பண்றதுக்கே பயமா இருக்கு அரசி.." என்று அவள் முகத்தை சோகமாய் வைத்து சொல்ல அதைப் பார்த்த அரசி சூர்யா இருவருமே கலகலவென வாய்விட்டு சிரித்தார்கள்..

தமிழோ "இதுக்கு மேல நான் இங்க இருந்தா இவ என்னை ரொம்ப டேமேஜ் பண்ணுவா.. நான் கிளம்புறேன் அரசி.." என்று அங்கிருந்து நகர பார்க்க..

அதே நேரம் சூர்யாவின் கையில் இருந்த கார்த்திக் திடீரென சிணுங்க ஆரம்பித்தான்..

"ஏண்டா கார்த்தி?" என்று சூர்யா கேட்டதும் "தொப்பை வலிக்குது" என்று வயிற்றை பிடித்துக் கொண்டு அவன் சொல்லவும் தான் வெகு நேரமாய் அவன் உணவு ஏதும் உண்ணாமல் பசியோடு இருப்பதே நினைவு வந்தது சூர்யாவுக்கு.

"ஐயோ.. இவன் ரொம்ப நேரமா ஒன்னுமே சாப்பிடல... பசிச்சிருக்கும்.. நடந்த கலவரத்தில சுத்தமா மறந்து போயிட்டேன்"

"குட்டிக்கு பசிக்குதா? அங்கிளுக்கும் கூட பசிக்குது.. வரீங்களா? நம்ம ஏதாவது யம்மியா சாப்பிட்டு வரலாம்.." என்று சொல்லி தமிழ் அவனை அழைக்க அவனோ சூர்யாவின் தோளில் பயந்து முகத்தை புதைத்துக் கொண்டான்..

சூர்யா "ஏய் கார்த்தி.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த அங்கிள் பெரிய பைக் வெச்சிருக்காங்க.. உன்னை பைக்ல ரைட் கூட்டிட்டு போவாங்க.. போறியா?" என்று கேட்க உடனேவே கண்களை விரித்து ஆவலாய் தமிழை திரும்பிப் பார்த்தான் அவன்..

இரு நொடிகள் தமிழை கூர்ந்து பார்த்தவன் சட்டென அவனிடம் தாவி விட "ஊஊஊ.. பைக் ரைட்னா அவ்வளவு பிடிக்குமா தங்கத்துக்கு.." என்று நிலை தடுமாறி அவனை தாங்கிப் பிடித்துக் கொண்ட தமிழ் சுனிதாவை பார்த்து "ஏய் ரவுடி.. உன் பல்ஸர் சாவி கொடு.. நான் இவனை அதுல கூட்டிட்டு போறேன்.. நான் ஜீப்ல தான் வந்தேன்.. இவனை அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. அம்மா கிட்ட சொல்லி இவனை பார்த்துக்க சொல்றேன்.. இவன் ஹாஸ்பிடல்ல ரொம்ப நேரம் இருக்க வேண்டாம்.." என்றவன் அவளிடமிருந்து சாவியை வாங்கிக் கொண்டு கார்த்தியோடு கொஞ்சி பேசியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..

"ஏய் சுனி.. ஏன்டி எங்க அண்ணனை எப்பவும் இப்படி நக்கல் பண்ணிட்டு இருக்க?" என்ற அரசியிடம் "ஹா.....ஆன்.. எனக்கு வேண்டுதல்.. உங்க அண்ணன் கிட்ட இருந்து ஒரு ஹக்.. ஒரு கிஸ்க்கு கூட வழியில்லை.. கேட்டா கல்யாணம் வரைக்கும் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்றாராம்.. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு புருஷனா தான் என்னை நெருங்கி வருவாராம் உங்க நொண்ணன்.. ஏன்டி இவன் இவ்வளவு நல்லவனா இருக்கான்?" என்று புலம்பியவளை பார்த்து மறுபடியும் வாய் விட்டு சிரித்துக் கொண்டாள் அரசி..

"தெய்வானை டீச்சரட வளர்ப்பு.. சிவனேசன் ஐஏஎஸ்ஸோட ரத்தம்.. வேற எப்படி இருப்பான்? ஆமா நீ இவனுக்கே சொல்ல போய்ட்ட.. இவனை விட ரொம்ம்ம்ப நல்லவனா ஒருத்தன் இருக்கானே எங்க வீட்டுல.. அவனை மறந்துட்டியா?" என்று கேட்க

"ஐயோடா.. அந்த டெரர் பீஸ் பத்தி என்கிட்ட பேசாத.. அவனை நெனச்சாலே சும்மா அதிருதில்ல? அவன் எல்லாம் 1930ல பொறக்க வேண்டியவன்.. 2000ல பொறந்து நம்மளை எல்லாம் கற்காலத்துக்கு கூட்டிட்டு போக பார்க்கிறான்.. சரியான பூமர் அங்கிள்டி அவன்.. பொண்ணுங்களை நிமிர்ந்து கூட பார்க்காத அடக்கமா இருக்கற சிங்கிள் மாடல் பீஸூ.. ம்ம்.. வாத்திங்குறது சரியாத் தான் இருக்கு.. அதுவும் கணக்கு வாத்தி ஆச்சே.. கேட்கணுமா? கணக்கா தான் பேசுவாரு.." என்க

சூர்யாவுக்கு அதைக் கேட்டு அவர்கள் விவரித்து பேசிய அந்த ஆண்மகன் யார் என்று பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் நெஞ்சில் நிறைந்து போனது.. ஆவலை அடக்க முடியாமல் "நீங்க யாரை பத்தி பேசுறீங்க?" என்று கேட்க

"அதுவா..? இவளோட இன்னொரு அண்ணன்.. பேரு தமிழழகன்.. சார் ஒரு கணக்கு வாத்தி.. பொண்ணுங்களை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்.. பொண்ணுங்களை எல்லாம் ரெண்டு அடி தள்ளி வச்சு பழகுவாரு.. அவர் பேசுற ஒரே பொண்ணு இவ தான்.. இதுவரைக்கும் என்கிட்ட கூட சரியா பேசினது இல்ல.. ஏன்னா நான் எல்லாம் ரொம்ப மாடர்னாம்.. அடக்கமே இல்லாம தலை விரிச்சு ஆடுறேனாம்.. பொண்ணுங்கன்னா அடக்கமா இருக்கணும்.. பேசக்கூடாது.. முக்கியமா ஆம்பளைங்களுக்கு மரியாதை கொடுக்கணும்.. இப்படி எல்லாம் பேசுற ஒரு பழைய பஞ்சாங்கம் அவன்.. சத்தியமா என்னால எல்லாம் பத்து நிமிஷம் சேர்ந்தாப்புல அவன் இருக்கிற இடத்தில நிற்க கூட முடியாது.."

சுனிதா அவனை விவரித்த விதத்தில் இப்போது இன்னும் அவனை காணும் ஆவல் கூடி போனது சூர்யாவினுள்..

நீர் உறையும்..
 
Top Bottom