“என்ன?” அவளின் திடீர் மாற்றத்துக்கு காரணம் புரியாமல் வினவினான் அவன். சுற்றவரப் பார்வையைச் சுழற்றிவிட்டு அவனை நெருங்கி, “என்ன இது?” என்று அதட்டியபடி அவன் கழற்றிவிட்டிருந்த முதல் இரண்டு பட்டங்களையும் போட்டுவிட்டாள்.
“நேரம் போக போகக் கையை மடிச்சு விடுறேல்ல சொல்லிட்டன். இப்பிடியே நிக்கோணும். ஷேர்ட்ட வெளில இழுத்து விடுறது எண்டு ஏதாவது குரங்குச் சேட்டை விட்டீங்க எண்டா தெரியும்.” அவன் எப்போதும் அப்படித்தான். எல்லாம் கொஞ்ச நேரத்திற்குத்தான். பிறகு கையையும் மடித்துவிட்டுவிட்டு, ஷேர்ட்டையும் வெளியில் இழுத்து விட்டுவிடுவான்.
அவனுக்கு எப்போதும் தன் இயல்பு கெடாமல் இருக்க வேண்டும். அவளுக்குப் போகும் இடத்திற்குத் தங்குததுபோல் இருக்க வேண்டும்.
‘பப்பரப்பா’ என்று நின்ற தலைமுடியையும் சரி செய்துவிட்டு அவனை ஒருமுறை முழுமையாகப் பார்த்துத் திருப்தி கொண்டாள்.
அவளும் சேர்ந்துதான் அந்த உடையை எடுத்தாள். ஆனால் இன்று தலைக்கு ஜெல் வைத்து, கிளீன் சேவில் கன்னங்கள் பளபளக்க, கண்கள் எப்போதும்போல் குறும்பில் சிரிக்க நின்றவன் பேரழகனாக அவள் மனத்தை நிறைத்தான்.
எப்போதும் அவன் செய்வதுபோல் ஆள்காட்டி விரலையும் சுட்டு விரலையும் சேர்த்துப் பிடித்து அழகாய் இருக்கிறான் என்று அபிநயம் பிடித்துக் காட்டினாள்.
“நீயும்தான்!” என்றான் அவளைச் சுற்றி வந்தபடி. ஆரி வேலைப்பாடு செய்த கடல் பச்சை பிளவுஸ் அணிந்து, தங்க ஜரிகை ஓடியிருந்த அடர் நாவல் உடல் கொண்ட சேலை, அவள் பொன் தேகத்தில் நளினமானக் கிடந்து, அவளின் அங்க வளைவுகளை மிக அழகாக எடுத்துக் காட்டியது. அவன் பார்வை அங்கெல்லாம் எந்தக் கூச்சமும் இல்லாது சென்று வர, “நிரோ!” என்றாள் யாமினி அதட்டலாக.
“இந்த சாரி உனக்கு எப்பிடி இருக்குத் தெரியுமா?” என்றுவிட்டு அவள் காதருகே வந்து, “அண்டைக்கு மாதிரி இண்டைக்கும் கிஸ் பண்ணலாமா எண்டு யோசிக்க வைக்கிற அளவுக்கு இருக்கு.” என்று சொன்னான்.
முகம் இரத்த நிறம் கொண்டுவிட அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் யாமினி.
“யம்மு உண்மையாத்தாண்டி. அப்பிடி இருக்கிறாய். இந்த சோக்கர் பொருந்தாது எண்டு சொன்னாய். எப்பிடிப் பொருந்தி இருக்குப் பார்.” என்று சொல்லி சொல்லி ரசித்தான்.
உண்மைதான். அது கழுத்தை ஒட்டி அணியும் அகலமான சோக்கர் வகை நெக்லஸ். நாவல், தங்க நிற மணிகளும் கற்களும் மூன்று பாட்டில் சுற்றிவர, நடுவில் சதுர வடிவில் தங்க நிற பெரிய கல்லு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அதனைச் சுற்றித் தங்கத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கம்பி வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் கீழே முத்துகள் தொங்கின. அதே டிசைனில் அவளுக்கு எப்போதும் பிடித்தமான நீண்ட பெரிய ஜும்க்கா.
அவளுக்கு இவை சற்று அதிகப்படியோ என்று சந்தேகம். அவன்தான் வேறு எந்த நகையும் போடாதே, இதை மட்டுமே அணி என்று சொல்லி, இதய வடிவில் அதே டிசைனில் ஒரு கைப்பையும் வாங்கிக் கொடுத்திருந்தான்.
அவன் சொன்னதுபோலவே அணிந்து, அலங்காரமும் செய்து வந்தவளிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.
“நிரோ, நான் போகவா?” அவன் பார்வை தந்த குறுகுறுப்பு ஒருபுறம் என்றால் யாராவது பார்த்துவிடுவார்களோ என்று அவளுக்குப் பயம்.
தைரியமாக சேர்ந்து சுற்றவோ, நேரம் செலவழிக்கவோ இது கொழும்பு அல்லவே. யாராவது பார்த்துவிட்டால்? அவள் வீட்டினர் யாராவது தேடிக்கொண்டு வந்துவிட்டால்?
“அதுக்கு முதல் ஒரு செல்ஃபி!” அவள் தோள் மீது கைபோட்டபடி சொன்னான். அவள் பயத்தில் நெளிய, “ஒழுங்கா நிண்டா ஒரு செக்கனில முடிஞ்சிடும். இல்லை எண்டு வை..” என்றவனைப் பொய்யாக முறைத்துவிட்டு அவனோடு அணைந்து நின்றாள்.
அவன் சுயமியைக் கிளிக்கியதும் வேகமாகத் தள்ளி நின்றுகொண்டாள். ஒற்றை புருவம் உயர்த்தி அவளைக் கேலி செய்தான் அவன். அவள் முறைத்தாள். அக்கா அத்தான் இருவரும் ஒரு வார்த்தை சொல்லுமிடத்தில் தான் இருந்துவிட கூடாது என்பது அவளுக்கு. அவனுக்குக் கிண்டல்.
“நிரோ!”
அவளுக்கும் அந்தப் புகைப்படத்தை அனுப்புவதில் கவனமாக இருந்தவன், “ம்!” என்றான் நிமிராமல்.
“ஒண்டு சொல்லுவன். கோபப்பட மாட்டன் எண்டு சொல்லுங்க.”
“நீ சொல்லு முதல்.”
“ஈவ்னிங் பார்ட்டில டிரிங்க்ஸ் ஏதும் எடுத்திடாதீங்க. என்ர மொத்தக் குடும்பமும் நிக்குது. டான்சும் வேண்டாம்…” பயந்து பயந்துதான் சொன்னாள்.
ஆனால், அவள் பயந்தது சரிதான் என்பதை நிரூபிப்பதுபோல், அவள் பேச்சு முடிந்த அடுத்த நொடியே அவன் முகம் மாறி, சினத்தில் சிவந்தது.
“இதுதான் யாமினி, உன்னட்ட எனக்குப் பிடிக்காத விசயம். அந்தளவுக்கு நான் என்ன எங்க எப்பிடி நடக்கோணும் எண்டு தெரியாதவனா? இல்லை, பார்ட்டி எண்டாலே குடி கூத்து எண்டு ஒதுங்குகிறவனா? என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறாய் என்னைப் பற்றி?” அடக்கப்பட்ட சினத்தில் சீறினான் அவன்.
அவள் பயந்துபோனாள். “நிரோ ப்ளீஸ்..:” என்று ஏதோ சொல்ல வந்தவளை அவன் விடவில்லை.
“என்னவோ உனக்குத்தான் எல்லாம் தெரியும் மாதிரியும், எனக்கு ஒண்டுமே தெரியாத மாதிரியும் கதைக்கிறாய். அந்தளவுக்கு நான் என்ன?” என்றவன் மிகுதியைச் சொல்லாமல் விழுங்கினான்.
யாமினி பேசுவது அறியாது அதிர்ந்து நின்றாள்.
அவனுக்கு ஆத்திரம் அடங்குவதாக இல்லை. அவன் எப்போதாவது மது அருந்துவான் என்றுதான் அன்றைக்கு வரை அவளுக்குத் தெரியும். அன்று அவன் அவ்வளவு கெஞ்சியும் கேளாமல், நட்ட நடு இராத்திரியில் கேப் வரவழைத்துப் போகிறாள் என்கிற ஆத்திரத்தில் அருந்தினான்.
அதுதான் இத்தனை வருட காலத்தில் அவள் அறிய, அவள் பார்க்க அவன் அருந்தியது. அதற்குப் போய் என்னவோ அவனை மொடாக் குடியன் போல் பாவித்துப் பேசினால் எப்படி இருக்கும்?
“இதுக்குத்தான் விலகியே இருந்தனான். கொழும்பில இருந்து வெளிக்கிடேக்க கதைச்சுப் பேசிப் பிரச்சினையைத் தீர்க்கோணும் எண்டு சொன்னாய். உன்னோட எதுவுமே கதைக்கேலாது. உனக்கு என்னை விளங்கவே விளங்காது. உனக்கு நீ சொல்லுறதை நான் செய்யோணும். நீ என்ன சொன்னாலும் கேக்கோணும். இல்லாட்டி இப்பிடித்தான் பெரிய இவள் மாதிரி எதையாவது லூசுத்தனமா சொல்லிக்கொண்டு வருவாய்.” எரிச்சலோடு சொல்லிவிட்டு, அவன் அங்கிருந்து விலகிச் சென்றான்.

