மலருமோ உந்தன் இதயம் 12 – 1

“மதுரா, ஒரே ஒரு கிழமை; ஏழே ஏழு நாட்கள் நான் இல்லாமல் சமாளித்துக் கொள்வீங்க தானே!”
“ம்ம்…நான் ஒரு சின்னப் பாப்பா பாருங்க! அம்மா தனியாக விட்டுவிட்டுப் போகப் போறார் என்று அழுது அடம் பிடிக்க!” என்ற, மதுராவின் குரலில் கேலி ததும்பினாலும், நித்தியில்லாத வீட்டிலிருக்க மனம் விருப்பம் கொள்ள மறுத்தது!
அதை வாய்விட்டுச் சொல்ல முடியுமா? இந்த எண்ணத்தில் ஒரு சிறு செயல் புரிந்தாலும், தனித்துத் தவித்து நின்றவளுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்களில் ஒருத்தியாக அணைத்துக் கொண்டவர்களை அவமானப்படுத்துவது போலாகாதா?
சட்டென்று அமைதியானவளை ஆராய்ந்தவாறே, அடுத்தநாள் காலையில் புறப்படுவதற்குத் தேவையான பொருட்களை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தாள் நித்தி.
“அதில்லை மதுரா, ஹாஸ்பிட்டலில் வரச் சொன்ன திகதிக்கு இன்னும் எட்டு நாட்கள் இருக்கு; ஏழுநாளில் திரும்பி வந்து விடுவேன்தான்; என்றாலும், உங்க அம்மாவும் இன்னும் வரவில்லை!” கவலைப்பட்டவளை பொய்யாக முறைத்தாள் மதுரா.
“இதென்ன நீர், அம்மா விஸாவுக்கு கொடுத்து இப்போதானே ஐந்து கிழமைகள். இரண்டு மாதத்துக்குள் தருவார்கள் என்றார்கள்; இன்னும் மூன்று கிழமைகள் இருக்கே! சீஸர் செய்ய வேண்டி வரலாம் என்றும் திடீரென்றுதானே சொன்னார்கள்; அதுவும் குழந்தைகள் திரும்பியிருந்தால் பிரச்சனை இல்லை! நீர் இதைப் பற்றியெல்லாம் யோசிக்காது சந்தோஷமாகப் போய் என்ஜாய் பண்ணிவிட்டு வாரும்!”
“ம்ம்…இதில் கிடக்கிற ‘ஸ்கொட்லன்ட்யாட்’; முதலும் அம்மா அப்பாவோடு போய் வந்த இடம்!” என்ற நித்தியை சட்டென்று அணைத்துக்கொண்ட மௌனம், சிறிது நேரத்தில், வேண்டாவெறுப்பாக விடுவித்தது.
பெற்றோர்களின் நினைவில் கலங்கியவள், சமாளித்து முறுவலித்தாள்.
“ஏற்கனவே குடும்பமாக இரண்டு தடவைகள் போயிருக்கிறோம். ஃபைனல் இயர்; எல்லோரும் போகும் பொழுது மறுப்பது அவ்வளவு சரியில்லை என்பதால் போகிறேன்; இல்லையோ..” சலித்துக் கொண்டவள், மதுராவோடு ஒட்டியமர்ந்து அவள் வயிற்றின் மீது வலக்கரத்தை வைத்தாள்.
ஆரம்பத்தில், இவளின் இச்செய்கையில் கூச்சத்தில் நெளிந்து போகும் மதுராவுக்கு, இப்போது அது பழக்கப்பட்ட விடயம்! முகம் கனிய அவளையே பார்த்திருந்தாள்.
அறியாச் சிறுமியாக, இளம்குமரியாக, அனுபவப்பட்ட பெண்ணாக, சட்டுச் சட்டென்று அவதாரம் எடுப்பவளில், அவள் இயல்பில், குணத்தில் மிதமிஞ்சிய ஆச்சரியமே இவளுக்கு!
“நித்தி, அப்படியே என் அம்மாவைப் போல!” அடிக்கடி சிலாகிப்பான் கார்த்திகேயன்.
‘ஹ்ம்…அவ்வளவு அருமையானவரைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் கிடைக்கவில்லையே!’ என, நினைத்துக் கொள்வாள் இவள்.
நித்தியின் உரிமையுடன் சேர்ந்த அக்கறையில், அன்பில், உருகி இதம் காண்பதே மதுராவின் இயல்பாகிவிட்டது! அவளும், பாசமும் நேசமும் கண்டு அப்படியே தளர்ந்துருகும் சாதாரணப்பெண் தானே!
“இங்க பாருங்க மதுரா, நான் தொட்டதும் உள்ளே துடிக்கிறார்கள்!
ஹேய், இங்க பாருங்க; ஹைய்யோ மதுரா!” ஆரவாரித்தபடி கட்டிலிலிருந்து இறங்கி முழங்காலில் அமர்ந்தவள், அப்படியும் இப்படியும் அசைந்த குழந்தைகளை கரம் பதித்து உணர்ந்தாள்.
“குட்டிகளே, இப்போதே சொல்லி விட்டேன், நான் டூர் போய் வந்த பிறகு தான் என்னைப் பார்க்க வர வேண்டும்; டீல் ஓகே தானே!” நேரே பார்த்துப் பேசுவதுபோல குழந்தைகளோடு கொஞ்சிப் பேசினாள்.
“எப்போ என்ன செய்தாலும், கொஞ்சமாக வித்தியாசம் தெரிந்தாலும் அண்ணாவின் அறை அதோ முன்னால் தானே இருக்கு, ‘இன்டர்காம்’மிலும் அழைக்கலாம்; சொல்வீங்க தானே!” என்றவளுக்கு, இந்த நேரத்தில் அவளைத் தனியாக விட்டுச் செல்வதில் அவ்வளவாக மனம் சரியில்லை.
“தாயே! கையெடுத்துக் கும்பிடுகிறேன், அதையெல்லாம் நான் கவனித்துக் கொள்கிறேன்; நீர் இந்தப் பேச்சை நிறுத்தும்!” என்றவளை இப்போது குறும்பாகப் பார்த்தாள் நித்தி.
“ஏன் மதுரா, அண்ணாவின் பேச்சை எடுத்தால் இப்படி பயப்படுறீங்க? அவர் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறார்!”
“வேண்டாம் நித்தி, நான் போயிட்டு வாறேன்!” வெளியேற எழுந்தவளை மீண்டும் பிடித்து அமர்த்தியவள்,
“உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வதாக அண்ணா ப்ரொமிஸ் பண்ணியிருக்கிறார்; அந்தத் துணிவில் தான் நானும் நிம்மதியாகப் புறப்படுகிறேன்!” என்றவளுக்கு, “ஹ்ம்ம்..பெரிய குடும்பஸ்தர் போலத்தான் பேச்சு!” வலிக்காது அடித்தாள் மதுரா.
“பின்ன…நம்ம குடும்பத்தில் ஒன்றுக்கு இரண்டாக புதுவரவு; நான் பார்த்துக் கொள்ளாமல் யார் பார்ப்பது! அண்ணாவா?” விழிகளில் மின்னும் கேலியோடு சீண்டியவள், “அவருக்கும் சேர்த்துத்தான் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்றதும், சட்டென்று முகம் கறுத்துப் போனாள் மதுரா.
“ஹைய்யோ மதுரா! நம்ம வீட்டில் இருப்பது நாம் மூவரும் தானே! நான் அல்லது அண்ணாதானே உங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதைத்தான்பா சொன்னேன்!” வெள்ளையாகச் சொன்னவளை இயலாமையோடு பார்த்தாள் மதுரா.
“இல்லை நித்தி; என்னை பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்; குழந்தைகளையும் தான்! அதை ஏற்றுக் கொள்ளுறீங்க இல்லையே! உங்களைக் காண முதல் நான் வேலைக்கும் போய்க்கொண்டு என்னைப் பார்த்துக் கொள்ளவில்லையா?” மதுராவின் குரல் வறண்டு ஒலித்தது.
“ஆங்…உங்களை நீங்க பார்த்த அழகு எங்களுக்குத் தெரியாதா? அந்த அழகில் தான் ‘அனிமியா’ வந்து இருந்தீங்க! இங்க பாருங்க, இதில் என் மட்டில் ஒரு சுயநலமும் இருக்கு மதுரா!” குரலைத் தணித்து இரகசியம் பேசினாள்.
“நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என்று வரும்போது நீங்களா வைத்துப் பார்ப்பீங்க?” முழியை உருட்டி வினவினாள்.
“அப்போ, இந்த அனுபவத்தில் நானே என்னைப் பார்த்துக் கொள்ளலாம் இல்லையா?” என்றவள் காதைப் பிடித்து திருகிய மதுரா, “என் செல்லத்துக்கு குழந்தை பிறக்கும் பொழுது நான் பார்க்காமல் யார் பார்ப்பது!” என்றாள் பரிவும் பாசமுமாக!
“அப்படிச் சொல்லுங்க! அப்போ, நீங்க இங்குதானே இருப்பீங்க?” தலைசரித்துக் கேட்டவளை முறுவலோடு பார்த்தவள், “சுற்றிச் சுற்றி கடைசியில் இதில் தான் வந்து நிற்பீர் நித்தி.” என, அவள் வாய் உரைத்தாலும்,
‘குழந்தைகள் பிறந்ததும் எப்படியும் இங்கிருந்து போய்விட வேண்டும்; அம்மாவும் வரட்டும் என்ன செய்வது என்று முடிவெடுக்கலாம்! குழந்தைகளோடு இலங்கை போவதுதான் நல்ல முடிவு என்று நினைக்கிறேன்!’ மனதுள் எண்ணியதை வெளியில் மூச்சும் விடவில்லை.
எங்கே சிறிதாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் ‘உன்னைப் பார்ப்பது எங்கள் கடமை.’ என்பது போல இவர்கள் செயல்படுவது இவள் மனதுள் சஞ்சலத்தையே ஏற்படுத்துகின்றது.
அதுமட்டுமா? இப்போதெல்லாம் அடிக்கடி கார்த்திகேயனின் பார்வையிலும் பேச்சிலும் வெளிப்படும் ஒருவகை உரிமை கலந்த நெருக்கத்தில் அவள் தடுமாறியும் விடுகிறாள். அடுத்த கணம், ‘நான் உணர்ந்தது நிஜமா?’ என எண்ணித் தடுமாறும் வண்ணம், அவனோ மிகச் சாதாரணமாக நடந்து கொள்வான்.
“ஹ்ம்ம்..” நீண்ட பெருமூச்சுடன் எழுந்து கொண்டவளிடம், “கீழே உங்க அறையில் இன்னும் சின்னச்சின்ன வேலைகள் முடிக்க இருக்கு! அது முடிய சாமான்கள் வந்துவிடும்; அஸம்பில் பண்ணி விட்டால் சரி!” என்ற நித்தி,
“சொன்னால் கேட்காமல் உங்க இஷ்டத்துக்கு எது எதுவோ செய்றீங்க நித்தி; திரும்பவும் சொல்கிறேன், குழந்தைகளுக்குத் தேவையென்று வாங்கும் பொருட்களுக்கு நான் காசு தந்துவிடுகிறேன்!” என்ற மதுராவை விழிகளில் கடினத்தோடு ஏறிட்டாள் அவள்.
“என்னிடம் இல்லையென்றால் பரவாயில்லை; அதுதான் இருக்குதே!” என்றவளுக்கு நெஞ்சம் கசந்து வழிந்தது.
“மாதம் மாதம் நீ எனக்குப் பணம் தந்து நான் அதில் சீவிக்க விரும்பவில்லை. என் அம்மா கஷ்டப்பட்டுத் தந்த சீதனப்பணத்தை எண்ணி வை!” கறாராக நின்று கணேஷிடம் பணத்தை வாங்கி இருந்தாளே!
இலங்கைப் பணத்தில் மொத்தம் இருபது இலட்சங்கள், அதற்குப் பெறுமதியான யூரோக்களை, கொழுந்துவிட்டெரியும் தீச்சுவாலை போன்ற மனநிலையில் கொடுத்திருந்தான் கணேஷ்.
அப்பணத்தில் அவ்வளவாகச் செலவழிக்க வேண்டிய தேவை இன்றுவரை வரவில்லை. இப்போது குழந்தைகளுக்குரியதை அதில் செய்யலாம் என்றால் கார்த்திகேயன் அதற்கு விட்டால் தானே!
“பணக்கணக்கு?! ஹ்ம்ம்…திரும்பவும் ஆரம்பித்து விட்டீங்களா? உங்களுக்கு அண்ணாதான் சரி!” அலுப்போடு உரைத்தாள் நித்தி.
“இந்த, பண விடயங்களை எல்லாம் பார்த்துக் கொள்வது அண்ணாதான் மதுரா; அதோடு, குழந்தைகளுக்கு என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வதும் அவர்தான்! நான் சும்மா ஐடியா கொடுத்தேன்; அவ்வளவும் தான். அதனால், எதுவென்றாலும் அவரிடமே பேசிக் கொள்ளுங்க! எனக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.” தீர்மானமாகச் சொல்லி முடித்தவள்,
“ம்ம்ம்..நல்லா நேரம் போய்ட்டுது, போய்த் தூங்குங்க மதுரா; நானும் காலையில் எழ வேண்டும்!” என்றவளிடம் இரவு வணக்கம் சொல்லி வெளியில் வந்த மதுரா, அச்சிறு வரண்டாவில் எதிரே போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்து அவளையே கூர்மையாகப் பார்த்திருந்த கார்த்திகேயனைக் கண்டுவிட்டு சட்டென்று நிதானித்து நின்றாள்.
‘நாங்க கதைத்தவை எல்லாம் நிச்சயம் இவர் காதில் விழுந்திருக்கும்! பார் எப்படி முழுசுகிறார்; சரியான பிடிவாதம் பிடித்த ஆள்.’ மனதில் முணுமுணுத்தவாறே அருகில் இருந்த தன்னறைக்குள் நுழைந்தாள்.
விரைந்து சென்று மறைபவளையே பார்த்திருந்த கார்த்திகேயனின் விழிகளில் உறைந்திருந்த கூர்மை மறைய, அங்கு, கனிவு வந்தமர்ந்து கொண்டது. தன்னையுமறியாது தன்மனதில் அவள்பால் ஒருவகை நேசமும் நெருக்கமும் ஏற்பட்டுள்ளதை உணர்ந்திருந்தாலும் அதைப்பற்றி பெரிது பண்ண முனையவில்லை இவன்.
தன்பொறுப்பிலுள்ள தங்கையைப் போலவே அவள் மீதும் குறையாத அக்கறையையும் கனிவையும் காட்டுவதில் அவனுக்கு எவ்வித கஷ்டமும் இருக்கவில்லை. அதில், மிகவும் மகிழ்வையே உணர்ந்தான் அவன்.
அதுவே சிலவேளைகளில் தன்னையும் மீறி பார்வைகளிலும் செயல்களிலும் வெளிப்படுகையில் அவள் மிகவும் தடுமாறுவதை அவதானித்திருக்கிறான் தான். சட்டென்று நத்தையாகச் சுருங்கித் திகைப்பதைப் பார்த்து, அவள் சங்கடம் உணர்ந்து கவனமாக சுதாகரித்துக் கொள்பவன், நாட்கள் நகர நகர அது முடியாதிருப்பதை, அவள்பாலுள்ள கவனமும் அக்கறையும் அதிகரிப்பதை உணர்ந்து மெல்லிதாகத் தடுமாறிப் போய்விடுகிறான். அப்போதும் அதை நிறுத்தவோ தவிர்க்கவோ அவன் முனையவில்லை.
இந்த நேரத்தில் மதுராவுடன் மிகவும் நெருக்கமான தங்கை ஒருகிழமை இல்லாமல் இருப்பதால், ‘நித்தியோடு கலகலத்துப் பழகுவதுபோல என்னோடு நிச்சயம் பழக மாட்டாளே; தேவையற்ற யோசனைகளில் உழலப் போகிறாள்.’ என்ற கவலையிருந்தாலும், ஒருவகையில் தங்கை இல்லாத நாட்களை விரும்பவே முயன்றது அவன் நெஞ்சம்.
நித்தியைப் போலவே அவளோடு நெருங்கிட பலவேளைகளில் ஆசைகொள்ளும் அவனுள்ளம் இந்த சந்தர்ப்பத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையுமா என்று ஆவலோடு காக்க முனைந்தது.
‘நித்தி வரும் வரை இயன்ற மட்டும் வீட்டில் நிற்க வேண்டும்! மதுரா வாய் திறந்து எதையும் சொல்வாள் என்பதை மட்டும் என்னால் நம்பமுடியாது!’ எண்ணிக்கொண்டவன், எழுந்து தனது அறைக்குள் சென்று மறைந்தான்.
*****
“போய்ட்டு வாறேன் மதுரா! கவனம்; எதுவென்றாலும் அண்ணாவிடம் சொல்ல வேண்டும் சரியா?’ கட்டிப்பிடித்து கன்னத்தோடு கன்னம் வைத்து அழுத்தினாள் நித்தி.
“நித்திம்மா, நான் கவனமாக இருக்கிறேன்; நீர் கவனமாகப் போயிட்டு வாரும். நேரம் கிடைக்கும் பொழுது கால் பண்ணும்.” என்றாள் மதுரா.
ஏதோ பலநாட்கள் பிரிவுபோல் மாறி மாறி, கவனங்களைப் பரிமாறிக் கொண்ட இருவரையும் இடுப்பில் கைவைத்து முறைத்தான் கார்த்திகேயன்.
“ஹப்பா! பெரிதாக ஸீன் போடுறார்களே; தாங்க முடியவில்லை!” சத்தமாக முணுமுணுத்த தமையனை நோக்கி விழிகளை உருட்டினாள் நித்தி.
“ஏன்ணா, உங்களுக்கு பொறாமையாக இருக்கா? என்னதான் சொல்லுங்க, மதுராவுக்கு நான் தான் முதல்; அதுக்குப் பிறகுதான் நீங்க!
ஹா..ஹா..அதுக்குப் பிறகு சரி அண்ணாவுக்கு உங்க மனதில் இடமிருக்கா மதுரா?” கண்ணடித்தவளை, நிஜ முறைப்பால் மதுராவும், செல்ல முறைப்பால் கார்த்திகேயனும் சுட்டனர்.
“ஒ.கே ஒ.கே, கூல் மதுரா டார்லிங் கூல்; போய்ட்டு வாறேன்!” தமையன் காரில் ஏறவும் ஓடிச்சென்று ஏறியவள், கைகாட்டிக்கொண்டே மறையும் வரை பார்த்திருந்துவிட்டு உள்ளே திரும்பினாள் மதுரா.
இங்கு வந்ததிலிருந்து, அருகில் க்ளினிக்கில் எப்போதும் ஆள் நடமாட்டம் இருந்தாலும், வீட்டில், அனேக நாட்கள் பகல் பொழுதுகளில் தனியாகத் தான் இருப்பாள் இவள்.
மதியம் கார்த்திகேயன் உணவுண்ண வருவதால் காலைப்பொழுது சமையலோடு கழியும். அதன் பிறகு, நித்திரை கொள்ளவில்லையென்றாலும் கொஞ்ச நேரம் சாய்ந்திருந்துவிட்டு தன் வேலைகளைப் பார்க்க, எப்படியும் மூன்று நான்கு மணிக்கு நித்தி வந்துவிடுவாள். சிலசமயம் இரண்டுக்கே வந்துவிடுவாள்.
அதன் பிறகு, தனிமை, தேவையில்லாத சிந்தனைகளிற்கு என நேரம் இருப்பதில்லை! இப்போது, நித்தி இல்லை என்பதில் வீடே வெறிச்சென்றிருந்தது!
‘இன்னும் ஒரு கிழமை தனியாக!’ மிகமிக ஆயாசமாக உணர்ந்தவள் மெல்ல மாடியேறினாள்.
வீட்டுக்கு அழைத்து தாயோடும் சகோதரிகளோடும் உரையாடிவிட்டு பத்து மணிபோல சமையலைறைக்குள் நுழைந்தவள், சிறிது நேரத்துள் வந்த கார்த்திகேயனை, கேள்வியாகப் பார்த்தாள்.
“சமைக்க வேண்டாமென்று சொன்னால் நீங்க கேட்கப் போவதில்லை மதுரா! அதனால், நானும் அப்படிச் சொல்லப் போவதில்லை!” கூறிக்கொண்டே சமையல் மேடையில் சாய்ந்து நின்று கொண்டவன், “ஏதாவது ஹெல்ப் செய்து தரட்டுமா?” தயங்கித்தயங்கிக் கேட்டவனை மேலும் கீழுமாகப் பார்த்தவளுக்கு நகைப்புத் தான் வந்தது.
“உங்களுக்கு க்ளினிக்கில் வேலை இல்லையா?” என்றவள் கைவேலையைத் தொடர்ந்தவாறே, “இதெல்லாம் எப்போதும் செய்வது தானே! சின்னச் சமையல், இதில் ஹெல்ப் பண்ண என்ன இருக்கு?”
“அதில்லை மதுரா, எப்போதும் செய்வதென்றாலும் இப்போ சிலசமயங்கள் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம்; அதனால் தான் கேட்டேன்!” என்றவன், “அதோடு, நம் க்ளினிக்கில் புது டென்டிஸ் வந்திருப்பதால் நானும் கொஞ்சம் ஃப்ரீ!” என்றவாறே நகர்ந்து, உணவு மேசையின் கீழிருந்த கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.
‘முணுக்கென்றால் அண்ணனும் தங்கையும் இந்த வீட்டில் நீயும் ஒருத்தி என்று சொல்வது நிஜம் என்பது போல, ‘நாம்’ ‘நமது’ என்று என்னையும் சேர்த்துக் கதைத்துக் கொள்வார்கள்!’ ஆயாசமாகவே உணர்ந்தாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!