முன்னுரை
நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஓர்புள்ளியில் அழகான விடியல் ஒன்று உதித்துவிடுகிறது. அந்த விடியலின் உதயம் இதுவரையான வாழ்க்கைப்பாதையின் திசையையே அடியோடு மாற்றியும் விடுகிறது.
அப்படித்தான் இங்கேயும். இதுதான் இனி என் எதிர்காலம் என்று இருக்கிறவனின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிவிடுகிறது விதி! அந்தகாரம் சூழ்ந்த அகழிக்குள் அகப்பட்டுக்கொண்டவனின் வாழ்க்கையை மீட்கும் உதயமாய் வருகிறாள் ஒருத்தி!
தன்னைத் தொலைக்காமல் அவனை அவள் மீட்பது பேரழகு என்றால், மீள விரும்பாதவன் மீண்டுவிடுவது பெரும் அழகே!
அழகான குடும்பம் இரண்டு, அதற்குள் நிகழும் சிக்கல்கள், உறவுகளுக்கிடையேயான பிரிவு, துயரம், துன்பம், காதல் என்று, அன்புச் சகோதரி திருமதி ரோசிகஜனின் எழுத்தில் எப்போதுமே கோலோச்சும் உறவுகளின் சங்கமம் இக்கதையிலும் அழகாக மிளிர்கிறது!
தரமான எழுத்தின் மூலமும் யதார்த்தமான கதை நகர்த்தலின் மூலமும் நம்மைத் தன் கதைக்குள் இழுத்துவிடுவதில் வல்லவர் எழுத்தாளர் ரோசிகஜன் அவர்கள். இக்கதையிலும் அதே மந்திரத்தைத்தான் நிகழ்த்தியிருக்கிறார்.
'சூர்யோதயம்', கதையல்ல; நம் வாழ்வின் ஒரு பகுதிதான் இது என்பதை, வாசித்து முடிக்கையில் மிகுந்த நிறைவோடு உணர்வீர்கள் என்பதில் ஐயமில்லை.
நட்புடன் நிதனிபிரபு
Last edited: