• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்கதைகள் அத்தியாயம் 1

ரோசி கஜன்

Administrator
Staff member
வாசகர்களுக்கு அன்பான வணக்கம்!

என் இருபத்தியோராவது நாவலான 'கயல்விழி' மூலம் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மிக்க மகிழ்ச்சி! அவள், கயல்விழி; தனக்குத் தன் கையே உதவி என்றிருப்பவள்; உறுதியும் துணிச்சலும் மிக்கவள்; சுருங்கச் சொன்னால், தான் பெற்றுள்ள ஒற்றை வாழ்வை தனக்குப் பிடித்த வகையில் வாழ வேண்டும் என்று எண்ணுபவள். வேலை விசயமாக நியூயோர்க் செல்கிறாள், இவள். அந்நேரத்தில், அங்கு சந்திக்கப் போகும் மனிதர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவள் வாழ்வில், சுபாவத்தில் எத்தகைய மாற்றங்களை உண்டு பண்ணுகின்றது என்பதையே இக்கதை சொல்லிச் செல்கின்றது. கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களை உள்ளடக்கியுள்ள இக்கதையை வாசிக்கையில், கயல்விழி என்பவளை, அவள் இறந்தகால, நடப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையை முழுமையாக உங்களால் உருவகப்படுத்திட முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

-----------------------------------


அத்தியாயம் 1


“போயிட்டு வரப்போறன் சித்தி.” குரலுக்குரியவளை நோக்கிய வேதாவின் நினைவு, கிர்ரென்று இருபது வருடங்கள் பின் நழுவிற்று!

“எனக்கு எட்டு வயசில ஒரு மகள் இருக்கிறா; அவவையும் உங்கட மகளாப் பாத்துக்கொள்ள வேணும்.” முதற் சந்திப்பில் கரன் உதிர்த்த வார்த்தைகள், இவை. வாகன விபத்தொன்றில் மனைவியைப் பறிகொடுத்திருந்தவன், மகளுக்காகத்தான் இத்திருமணம் என்று ஒற்றை வார்த்தை விடவில்லை. அதுவே அவன் மீதொரு நல்லெண்ணத்தைத் தோற்றுவித்திருந்தது. புகைப்படத்தில் பார்த்த சிறுமியை, மூத்த மகளாய் வளர்க்க வேண்டுமென்ற உறுதியோடே அவன் மனைவியாகியிருந்தாள், வேதா.

திருமணத்தன்று, “ஹல்லோ! நீங்க தான் கயலா? சித்...சித்திட்ட... வாங்கோ!” ஆரம்பித்துவிட்டு, எடுத்ததும் ‘சித்தி’ என்றது தவறோ என்றெண்ணி, பின்னால் நின்றிருந்த கணவனைப் பார்த்திருந்தாள். அவனோ, முறுவல் மாறாது நின்றிருந்தான். அதில் மனம் தெளிந்தவளாய்ச் சிறுமியிடம் திரும்பினாள், வேதா.

“எத்தின நாள் பிள்ளயப் பாக்க நினைச்சன், நீங்க யாழ்ப்பாணத்தில இருந்து வரேல்ல! சித்திட்ட வாங்கோ!” வார்த்தைகள் உதிர, கரங்கள் சிறுமியை நோக்கி நீண்டன.

அவளோ, “என்ர பேர் கயல்விழி!” அறுத்துறுத்துச் சொன்ன வேகத்தில் ஓடி, அக்கூடத்தின் மறு தொங்கலில் நின்றிருந்த தன் அம்மாம்மாவின் கைவளைக்குள் பதுங்கிக் கொண்டாள். அக்கணம், தாமதியாது அரவணைத்துக் கொண்ட அம்முதியவரின் கதகதப்பே, தனக்கே தனக்காக பாதுகாப்பான, உரிமையான இடமென அவளை உணரச் செய்திட்டு.

தம் மகள் இறந்த பின், “இப்ப நீங்க இருக்கிற நிலையில வியாபாரத்தையும் பாத்துக்கொண்டு பிள்ளையையும் கவனிக்கிறது லேசுப்பட்ட வேல இல்ல.” என்று எடுத்துச் சொல்லி, சிறுமியைத் தம்மோடு அழைத்துச் சென்றிருந்தார்கள், கயல்விழியின் தாத்தாவும் அம்மம்மாவும்.

விடுமுறை கிடைக்கையில் ஓடிச்சென்று மகளைப் பார்த்துவரும் கரன், மறுமணத்தின் பின் அவளைத் தன்னோடு கூட்டிக்கொண்டு வந்துவிடலாமென்று நினைத்திருந்தான்.

"இங்க பாருங்க கரன், என்ர மகள் போனதோட உங்கட வாழ்க்க தனியாக் கழியோணும் எண்டு நாங்க ஒருக்காலும் நினைகேல்ல. உங்களுக்கு எண்டு ஒரு வாழ்க்க வேணும் தான். ஆனா, ரெண்டு வருசமா எங்கட பார்வையில வளர்ற பேத்திய இனி இங்க விடுறது எண்டதும் ஏலாது. என்ர பேத்திய எங்கள விட இன்னொரு ஆளாள பத்திரமா, அன்பா வளக்கேலும் எண்டு நினைச்சும் பாக்க முடியேல்ல. எங்கட உடம்பில தெம்பில்ல எண்டா வேற கதை!”

கைவளைக்குள் பேத்தியை அணைத்துப் பிடித்தபடி வெட்டொன்று துண்டு இரண்டென்று கதைத்திருந்தார், அம்மம்மா.

அவள் தாத்தாவும் அதையேதான் சொன்னார். "நீங்க உங்கட வாழ்க்கையைப் பாருங்க தம்பி. யாழ்ப்பாணம் என்ன வேற தேசத்திலா இருக்கு? எப்பவும் போல விருப்பப்படேக்க வீட்ட வாங்க, மகளைப் பாருங்க. பேந்து(பிறகு) அவள் வளந்ததும் வேணும் எண்டா லீவுக்கு உங்களிட்ட வரலாம். எங்க இருந்தாலும் ஒழுங்கா வளந்தாச் சரிதானே? எங்களோடயே இருக்கட்டுமன்!" தீர்மானத்தைத் தன்மையாகச் சொல்லிவிட்டார்.

அப்போதும், இரு வருடங்கள் மகளைப் பிரிந்திருந்த வருத்தத்தோடு, அவளைத் தம்மோடு தங்க வைத்துக் கொள்ள முயன்றான், கரன். அது பார்த்தால்....

மாப்பிள்ளைக் கோலத்தில் நின்ற தகப்பனையும் மணமகள் அலங்காரத்தில் நின்ற வேதாவையும் பார்த்த சிறுமியின் விழிகளில் மிரட்சியும் அந்நியரைப் பார்க்கும் தன்மையும் வெளிப்படையாகவே தெரிந்திட்டு. அம்மம்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழவே தொடங்கிவிட்டாள்.

“தாய் இடத்தில இன்னொரு பொம்பள இருந்து பாசமா வளக்கிறது எல்லாம் கதை பேச்சுக்கு நல்லாத்தான் இருக்கும், நடக்கிற காரியமா?” என்று தொடங்கி, ஒரே மகளின் மகளைத் தம் நிழலில் வளர்த்து ஆளாக்கிட வேண்டுமென்று நினைத்துப் பெரியவர்கள் கதைத்தவை எல்லாமே அவள் மனதுள் அழுத்தமாகவே பதிந்திருந்தன. அதுவே, ‘சித்தி’ என்ற உறவில் பெரும் பயத்தை உருவாக்கியிருந்தது.

அதோடு, "என்ர செல்ல மகள் எண்டு ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் வந்து எட்டிப் பாத்திட்டுப் போறவரில எந்தவிதமான எதிர்பார்ப்பும் வைக்காத! பிறகு ஏமாந்து போகாத!" என, அவர்கள் அடிக்கடிச் சொல்வது, தந்தை மீதான ஒதுக்கத்துக்கும் வித்திட்டிருந்தது.

முடிவில், சிறுமியின் கேவலும் அழுகையும் கரனின் தந்தைப் பாசத்துக்கே வேலி போட்டிட்டு!

“எங்க இருந்தாலும் அவள் நல்ல சந்தோசமா இருந்தாச் சரி!” தன் மனதின் பலத்த அடிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிடவே அவனால் முடிந்தது. அதன்பின்னர் வேதாவும் தான் என்ன செய்வது?

பழைய நினைவுகளின் பலமான உரசலில் அவர் மனதோரம் எழுந்த ஏக்கம் பெருமூச்சாக வெளியேறிற்று.

“ம்மா...எங்களுக்கு நேரம் போகுது. என்ன அக்காவ இப்பத்தான் முதல் முதலா பாக்கிற கணக்கில பாக்கிறீங்க?” சீண்டலாகக் கேட்டாள், சுடர் விழி; அவரின் செல்ல மகள்; கயல்விழியின் ஒரே தங்கை.

‘இத்தின வருசமா நல்ல நாள் பெருநாளுக்கு எண்டாலும் வீட்டுக்கு வந்துபோய்க் கொண்டிருந்த பிள்ள கண்காணாத தேசம் போகப் போறாள். அவளுக்கு நான் சித்திதான். அது அவள் மட்டில ஒரு விசித்திரமான உறவா இருக்கலாம். ஆனா, எனக்கு அவளும் மகள் தான்.’ வேதாவின் மனம் முணுமுணுத்திட்டு. “கொஞ்சம் நில்லுங்க, இந்தா வாறன்.” அருகிலிருந்த அறைக்குள் சென்று மறைந்தார், அவர்.

அடுத்த சில நிமிடங்களில் கயல்விழியின் முன்னால் வந்து நின்றவர் உள்ளங்கையை விரித்தார். அங்கே, சிறு தங்கச்சங்கிலி ஒன்று குட்டியாகப் பட்டுப்போன்று சுருண்டு கிடந்தது.

“எங்கட நினைவா சின்னதா ஒரு பரிசு!” மெல்லிய ஆடலோடு கழுத்து நோக்கி வந்த சங்கிலியைப் பார்த்தவண்ணம், “இதெல்லாம் என்னத்துக்கு?!” இலாவகமாக விலகிக்கொண்டாள், கயல்விழி.

வேதாவின் முகம் சுண்டிப்போயிற்று! தமக்கையையே பார்த்திருந்த சுடர்விழியும் தான்.” கழுத்தை விட்டுக் கழட்டவே கூடாதக்கா!” சொல்ல நினைத்திருந்தாளே!

தன்னை அன்போடு அரவணைக்கும் தமக்கைக்குத் தாய் வேற்றாளானதெப்படி? சுடர்விழிக்கு உண்மையிலேயே புரியாத புதிரது!

தாய் சொல்வது போல், இவ்விரிசலின் பின்னால் தமக்கையின் அம்மம்மா, தாத்தா தான் இருக்கிறார்களோ என்று யோசித்தால் அதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

“அன்பாத் தரேக்க வாங்கிப் போட்டுக்கொள்ளன்; அதுக்கும் உன்ர அம்மம்மாட்டக் கேட்கோணுமா என்ன?” என்றபடி வந்த தந்தையைப் பார்த்த கயல் விழிகளில் அயர்ச்சி!

“இப்ப ஏன் அவையள இழுக்கிறீங்க? ஆரிட்டையும் சம்மதம் கேட்டுச் செய்ய வேண்டிய அளவுக்கு நான் ஒண்ணும் குழந்தப்பிள்ள இல்ல!” அலுப்போடு தான் சொன்னாள்.

“இப்பிடி என்னட்ட நிறையவே கிடக்கு அதான்; இதச் சுடரிட்ட குடுங்கவன்! நல்லா நேரமாச்சு...போவமே?” என்று வெளிக்கிட்டவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார், வேதா.

‘சித்தி எண்டா கொடுமைக்காரி, மாமியார் எண்டா பத்திரகாளி என, முத்திரை குத்தப்பட்ட உறவுகள்!’ மனம் முனகியது. வருத்தத்தோடுதான் வழியனுப்ப வந்தார்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
எப்போதும் போலவே, ‘விடு, அவளப் பற்றித் தெரியும் தானே!’ என்றளவில் மனைவிக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, மகள்களோடு கொழும்பு நோக்கிப் பயணப்பட்ட கரன் மெல்லத் திரும்பினார். தங்கையோடு கலகலத்துக்கொண்டு வரும் மூத்த மகளில் பார்வை நிலைத்திட்டு.

மனைவியின் இழப்பின்பின் மறுமணம் செய்யாது மகளை வளர்த்து ஆளாக்கியிருக்கலாம் என்றளவுக்கு எல்லாம் ஒருநாளுமே அவர் சிந்தித்தில்லை. ஆனால், எப்பாடுபட்டாகிலும் மகளைத் தம்மோடு தங்க வைத்திருக்க வேண்டுமென்ற கவலை அண்மைய ஆண்டுகளில் அடிக்கடி எழுவதுண்டு. அதுவும் பேசிய திருமணங்களை எல்லாம் மிக இலகுவாகத் தட்டிக் கழித்துவிட்டு, வெளிநாட்டு வேலையென்று புறப்பட்டு விட்ட மகள் முழுவதுமாய்த் தன் கைவிட்டுப் போகும் உணர்வு அவருள்.

சின்ன மகளிடம் வெளிப்படையாகக் கதைப்பது போல் கதைக்க முடியாத தன்னிலையில் கோபம் கொண்டார், கரன். மூத்த மகளைத் தன்னை விட்டு விலகிச் செல்லவிட்ட தன் இயலாத் தனத்தில் மீண்டும் மீண்டும் கோபம் கொண்டவரால் வாயை மூடிக்கொண்டு இருக்க மட்டுமே முடிந்தது.

அதே நேரம், “நான் என்ன செய்து கொண்டிருக்கிறன், செய்ய இருக்கிறன் எண்டது பற்றி எனக்கு நல்லாவே தெரியும். என்னப்பத்தித் தேவையில்லாம யோசிச்சுக் குழம்ப வேணாம்.” என, நிதானமாகச் சொல்லும் மகளில் மலையளவு நம்பிக்கையும் இருந்தது.

இப்பிடியே, கொழும்பு வந்து சேரும் வரை சகோதரிகள் கலகலத்துக் கொண்டிருக்க, தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தார், கரன்.

கொழும்பில், ‘கொட்டஹேனா’வில் வசிக்கும் தூரத்து உறவினரோடு இரு நாட்கள் தங்கியிருந்துவிட்டு, ‘நியூயோர்க்’ புறப்பட்டாள், கயல்விழி.

“எங்களுக்கு நல்லா வயசு போயிட்டுக் குஞ்சு. வழியனுப்ப எல்லாம் வர ஆசையிருந்தாலும் உடம்பு இடம் கொடாதாம்.” என்று சொல்லி வீட்டில் நின்று விட்ட அம்மம்மாவுக்கும் தாத்தாவுக்கும் அவள் விமானம் ஏறும் வரை கதைக்க, சொல்ல நிறையவே விசயங்களிருந்தன.

“சரி, அம்மம்மா, ரெண்டு பேரும் கவனமா இருங்க. உடம்பப் பாத்துக் கொள்ளுங்க. போயிறங்கினோன்ன கதைக்கிறன்.”

“பிள்ள...பூபாலனிண்ட செல் நம்பர் கவனமா குறிச்சு வச்சிருக்கிற எல்லா?” கேட்டவருக்குப் பதில் சொல்லவில்லை, அவள்.

“பெரிய கொம்பர்! புது இடத்தில எனக்கு எதுவும் எண்டா அவர்தான் முன்னுக்கு வந்து நிண்டு பாப்பாராம்.’ மனதில் சிடுசிடுத்தபடி, அருகில் நிற்கும் தங்கையில் படிந்த பார்வை தன்னையே பார்த்து நிற்கும் தந்தையிலும் பட்டு விலகியது.

“சித்தி ஒருக்கா கதைக்கப் போறன் எண்டு சொன்னவா கயல்.” அவள் தன்னைப் பார்த்ததும் சொன்னார், கரன்.

சிறு தலையாட்டலை பதிலாகக் கொடுத்துவிட்டு, “எல்லா நம்பரும் கவனமாக் குறிச்சு வச்சிருக்கிறன். நீங்க என்னப்பத்தி யோசியாம கவனமா இருங்கோ! வைக்கிறன் என்ன.” விடை பெற முயன்றாள்.

“குஞ்சு சொல்லுறதக் கேளன, அறியாத தெரியாத ஊரில போய் இறங்கித் தனியா வாகனம் பிடிச்சுத் தங்கிற வீட்டுக்குப் போவன் எண்டு சொன்னியாமே! சுடர் சொன்னவள். அந்த விளையாட்ட விட்டுட்டு அந்தத் தம்பிக்கு அடி, வந்து கூட்டிக்கொண்டு போய் விடுவார்.” அம்மம்மா விடுவதாக இல்லை.

தங்கையை முறைத்தாள், கயல். அவளோ, ‘என்ன?’ என்று உதடு பிதுக்கி விசாரித்தாள்.

“அம்மம்மா அம்மம்மா அம்மம்மா! அதெல்லாம் நான் பாத்துக் கொள்ளுறன். வேணும் எண்டா உங்கட தங்கக் கம்பிட்ட உதவி கேட்கிறன் சரியா?” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவள், “உன்ன ஆர் தேவையில்லாத கதை எல்லாம் அங்க சொல்லச் சொன்னது? வழி தெரியாமல் துலைஞ்சு போறதுக்கு நான் என்ன சின்னப்பிள்ளையா?” தங்கையிடம் கேட்டவள் பார்வை ‘செக் இன்’னுக்காக நகரும் வரிசையில்.

“நான் எங்க சொன்னன்!? ‘அக்காளும் தங்கையும் எந்த நேரமும் குசுகுசுக்கிறீங்க. உனக்குத் தானே அவள் எல்லாம் சொல்லுறவள்’ எண்டு சொல்லி சொல்லியே அம்மம்மா தான் போட்டு வாங்கினவா!” தமக்கையைக் கட்டிப்பிடித்தபடி சொன்னாள், சுடர்.

“அந்தத் தம்பிட ஃபோன் நம்பர் உன்ர ‘வட்ஸ் அப்’புக்கு அனுப்பி இருக்கிறன், தேவையெண்டாக் கதையன்.” கரன்.

அதன் பிறகு நின்று வாயாட நேரம் இருக்கவில்லை. “ம்ம்ம்’ கொட்டிக்கொண்டே இருவரிடமும் விடைபெற்று நகர்ந்தவளுக்கு, விமானத்தில் ஏறியமர்ந்த பின்னரே சிறிய தாயார் கதைக்க வேண்டுமென்றது நினைவிலாடியது.

‘பச்! என்ன சொல்லப் போறா, கவனமாப் போயிட்டு வா எண்டு சொல்லத்தானே...போய்ச் சேர்ந்த பிறகு கதைப்பம்.’ என்றுவிட்டு, நகரும் நகருக்கு விடை கொடுத்தபடியே பயணத்தை இரசிக்க முயன்றாளவள்.

அதேநேரம், அவள் அழைப்பாள் என்று பார்த்திருந்துவிட்டு, “அக்கா வெளிக்கிட்டிட்டாம்மா, நாங்க பின்னேரம் அங்க வர வெளிக்கிடுறம்.” சின்ன மகள் சொன்னதும் விழிகளை இறுக மூடித் திறந்த வேதாவின் பார்வை, வரவேற்பறைச் சுவரில் தங்கையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு மலர்ந்து நிற்கும் கயல்விழியில்!
 

ரோசி கஜன்

Administrator
Staff member
இந்தக் கதையை ஏற்கனவே வாசித்து விட்டீர்களா ? உங்கள் கருத்துகளை இப்போதும் என்னோடு பகிர்ந்துகொள்ளலாம் . வாசிக்காதவர்கள் வாசித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கோ. இயன்றமட்டும் வார நாட்களில் அத்தியாயங்கள் பதிவிடுவேன்.
 
Top Bottom