• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 37

ரோசி கஜன்

Administrator
Staff member
“உலகத்தில இருக்கிற முதல் அஞ்சு ‘லோங்கஸ்ட் சஸ்பென்ஷன் பிரிட்ஞ்’களில இதும் ஒண்டு." விரைந்து செல்லும் வாகனத்தின் முன்னால் செந்நிற ‘கோல்டன் கேட்’ பாலம் தலை காட்டத் தொடங்கியதும் சொல்லியிருந்தான், வேந்தன்.

"பிறகு...மேல சொல்லுங்கோ!" இலக்கியாவின் குரல் எழும்ப, "இந்தப் பயணத்தின் இறுதி விவரணை!" ஆரூரன் சிரித்துக்கொண்டே சொன்னது வேந்தன் இலக்கியா பார்வைகளை மோத வைத்ததென்றால், இடையில் கவியின் பார்வையும் நுழைந்து போயிற்று.

"லாண்ட் எண்டு லாபிரிந்த் அடியில நிண்டு பார்க்க இந்தளவு பெரிசா இருக்கேல்ல என்ன?” சற்று நேரம் நிலவிய அமைதியைக் கலைத்த அஜி, “அம்மாடியோவ் சரியான நீளம் போலவும் இருக்கே!" யன்னல் கண்ணாடியில் முகத்தை அழுத்தி மேலே உயர்ந்திருந்த பாலத்தைப் பார்க்க முனைந்தபடி தொடர்ந்தாள்.

"சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிற இந்தப்பாலம் கிட்டத்தட்ட ஒரு மைல் நீளமிருக்கும்." வேந்தன் தொடங்க, "1917 இலயே இந்தளவுக்குக் கட்டி இருக்கினமே! நவீன உலக அதிசயங்களில இதும் ஒண்டு!" என்றான், ஆரூரன்.

"அதோட, உலகத்தில அதிகமா ஃபோட்டோ எடுக்கப்பட்ட மிக அழகான இடம் எண்டதும் இதான்." இலக்கியாவும் சேர்ந்துகொண்டாள்.

சுற்றியிருக்கும் இயற்கையின் அழக்கொன்றும் எங்களுக்குப் புதிதில்லையென்ற அசட்டையோடு சர் சர்ரென்று வழுக்கிச் சென்ற வாகனங்களோடு கலந்து விரைந்தது, வேந்தன் வாகனம்.

அடுத்த சில நிமிடங்களில், பாலத்தின் முடிவில் வலப்புறமொடித்துத் திருப்பி வாகனத்தை நிறுத்தியிருந்தான்.

மாலைப்பொழுது, பளீரென்று எரிக்கும் ஆதவன், அவன் வெம்மையை உணர விடேனென்று இதமாய் வந்து மோதிய சில்லென்ற காற்று, எப்பக்கம் திரும்பினாலும் உல்லாசப் பயணிகளென்று அவ்விடம் மிகுந்த பரபரப்பாகவே இருந்தது.

இறங்கிய வேகத்தில், யாரும் யாருக்காகவும் காத்திராது அருகிலிருக்கும் ‘ரெஸ்ட் ரூம்’ கட்டிடம் நோக்கிச் சென்றுவிட, தயங்கி நின்றிருந்தாள், இலக்கியா.

அந்தக் கார் நிறுத்தத்திலிருந்து பார்க்கையில் கூட இயற்கை கொஞ்சமும் ஏமாற்றவில்லை. விழிகள் சுற்றிச் சுழன்றாலும் காருக்குள் எதையோ எடுத்துக்கொண்டிருந்த வேந்தனோடு சில வார்த்தைகள் கதைத்துவிடும் எண்ணம் அவளுள். பிறகு கதைக்கச் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாதே! இன்னும் சிறிது நேரத்தில் சென்றுவிடுவான்.

“என்ன யோசன?” மனதுள் தவிப்போடு நின்றவள் பின்தலையில் மெல்லத் தட்டியபடி அருகில் வந்து நின்றவனை, சட்டென்று ஏறிட முடியவில்லை. கண்கள் கலங்கிக் கிடந்தன.

“டோய்! என்ன? வோஷ் ரூம் போகேல்லையா?”

“பச்!”

“என்ன எண்டு கேக்கிறன்.” அவள் கரத்தைப் பற்றியவனிடமிருந்து எப்போதும் போல் உதறிக்கொள்ளவில்லை. தொண்டை அடைத்தது.

“வேந்தன்!” ஏறிட்டவள் விழிகளின் கசிவில், “என்ன இலக்கியா?” அதுவரையிருந்த மலர்வைத் தொலைத்துவிட்டிருந்தது, அவன் முகம்.

“இல்ல...நாங்க இங்க நிக்க மட்டும் எங்களோட நில்லுங்கோவன்.” தான் கேட்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமென்று தெரிந்தாலும் கேட்காதிருக்க முடியவில்லை.

“டேய்! இங்க வாரும்.” விறுவிறுவென்று அவளை இழுத்துக்கொண்டு முன்னால் சென்று ஓரமாகத் தள்ளி நின்று கொண்டான். வெளியே வரும் அவள் குடும்பத்தினர் இவ்வளவு மக்களில் அவளைத் தேடித்தான் கண்டு பிடிக்க முடியும். அவன் பிடியில் நகர்ந்தவளுக்கோ வீட்டினர் பற்றி மறந்தே விட்டிருந்தது.

தூரத் தெரியும் நவீன கட்டிடங்களோடிருந்த நகர், கடலுள் தலைநீட்டி நின்ற குன்றுகள், சுற்றிலும் படர்ந்திருந்த மலைத்தொடர்கள், அங்குமிங்குமாக நீலக் கடலை ஊடுறுத்துச் செல்லும் படகுகள், மஞ்சள் ஒளியில் பளீரென்று மினுங்கும் சுற்றம் என, அச்சூழலே, இயற்கையின் இறுகிய அணைப்பில் நெகிழ்ந்து கிடந்து, பார்ப்போரை வியந்து இரசிக்க வைத்தாலும் அவ்வருவர் விழிகளால் மட்டும் அவற்றை உள்வாங்கிட முடியவில்லை!

பார்வை வெறுமனே முன்னால் படிந்திருக்க, அவன் மேல் கையை இறுகப்பற்றியபடி தலையைச் சாய்த்துக்கொண்டவள் ஒத்த வார்த்தை உதிர்க்கவில்லை.

முதல் முதலாக அவளாகவே அவனை நெருங்கி நிற்கிறாள். கரத்தை இறுகப்பற்றியிருந்த விதமே ‘விட்டு விலகிடாதே’ என்று சொல்லாமல் சொல்வதையுணர்ந்தவன் தலை சாய்த்து அவள் தலையில் மெல்ல முட்டினான். இப்படியொரு தனிமையான தருணத்துக்கு இரண்டு கிழமைகளாக ஏங்கியவனாச்சே! ஆனால், இப்போது அவள் கலங்கியல்லவா நிற்கிறாள்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
துளியும் கலங்கத் தேவையே இல்லை. ‘சரி, வாவெண்டு கையைப் பிடிச்சு ஒரேயடியா வீட்டாக்கள் முன்னால் கொண்டு போய் நிப்பாட்டினா!’ யோசனையே அவ்வளவு நன்றாக இருந்தது.

‘இதைக் கேட்டா உடனே ஓமெண்டு சொல்வாளா என்ன?’ பார்வை அவள் முகத்தில் நிலைத்தது.

“எனக்கு நிறைய வேலைகள் இருக்கு இலக்கி. அதோட அம்மா ...” என்று ஆரம்பித்து விட்டு, “நாளைக்கு உங்களுக்கு நேரமில்லை எண்டு அங்கிள் சொன்னவர், கலியாண வீடு எண்டார். இருந்து பாரும், நாளண்டைக்கு விடியவே வீட்டாக்களோட வந்து நிப்பன். அதுவரைக்கும் ஒண்டையும் யோசியாமல் எப்பவும் போல இரும் என்ன!” மென்மையாகச் சொன்னவனுக்கு கண்ணீரோடு பார்த்தவளை அப்படியே இறுகக்கட்டிக்கொள்ளத்தான் தோன்றிற்று! கரம் அவளைச் சுற்றிக்கொள்ள, தலை தானாகவே திரும்பி பின்னால் ஆராய்ந்தது. ‘ஆர் கண்ணிலாவது பட்டுவிட்டால்’ என்ற எண்ணம் முறுவலைக் கொண்டுவந்துமிருந்தது. ‘பிரச்சனை முடிஞ்சிதே!’

“இலக்கி... நாம அதுவரை எல்லாம் பொறுத்திருக்கவும் தேவையில்ல.” இரகசியக் குரலில் ஆரம்பித்தவனை, ‘ஏதோ பகிடி சொல்லிக் கடிக்கப்போறான்’ என்ற நினைவில் சிணுக்கத்தோடு ஏறிட்டன, அவள் விழிகள்.

கைவளைக்குள் அடங்கி நின்றவளை நேசத்தோடு பார்த்தபடி, “இல்ல...இப்ப உன்னக் காணேல்ல எண்டு தேடிப் பார்த்து, நம்மள இப்படிக் கண்டா...” சொல்லி முடிக்கவில்லை விசுக்கென்று விலகியிருந்தாள்.

“பச்!” எட்டிப் பிடித்திழுத்து அருகில் நிறுத்த அவள் பார்வையோ பின்புறம் திரும்பி வீட்டாக்கள் வருகிறார்களாவென்று ஆராய்ந்தது.

அதேவேகத்தில், “போவம் வேந்தன்.” நகர்ந்தவளை முறைப்போடு நிறுத்திய வேகத்தில் தோளோடு இறுக அணைத்தபடி, “கொஞ்சம் சிரிக்கலாம் ம்ம்” ஒரு செல்ஃபியைக் எடுத்துக்கொண்டவன், “சரி, இப்பச் சரி நான் சொன்னதுக்கு மறுமொழி சொல்லும் பார்ப்பம். கெதியா!” மிக்க எதிர்பார்ப்போடு கேட்டான்.

அவள் விழிகளிலோ, மின்னலாக, சீண்டல் குடிவந்து கால்மேல் கால்போட்டமர்ந்துகொண்டது! அது என்னவோ அவன் இப்படிக் கேட்கையில் எல்லாம் உள்ளத்தில் எழும் மகிழ்வுக்கும் மேலாக அவனைச் சீண்டிப் பார்க்கும் விருப்பமே எழுகின்றது.

“உண்மையாவே நீங்க என்ன சொன்னீங்க இப்ப என்ன கேட்கிறீங்க எண்டு எனக்கு விளங்கவே இல்ல வேந்...த...ன்!” விழிகளில் விசமத்தோடு சொல்லிக்கொண்டு வந்தவள், அவன் முகம் போன போக்கில் இழுத்து நிறுத்தினாள்.

அப்போதும், சீண்டலாக மேலெழுந்து இறங்கிய புருவங்களிரண்டும் அவளை மீண்டும் தன்னருகில் இழுத்துவிடும் ஊந்துதலையே கொடுத்திட்டு! அதை அவன் பார்வையில் படித்தவள், “உது சரிவராது, வாங்கோ நான் போறன்.” திரும்பி ஓடியே போய்விட்டாள்.

மலர்ந்த முறுவலோடு பார்த்து நின்றவன், ‘எத்தினைக்கு இந்த ஓட்டம் பாப்பமே!’ மனதுள் சொல்லிக்கொண்டே சற்றே நின்றுவிட்டே அவர்களை நோக்கிச் சென்றான்.

அடுத்த கால்மணிநேரம் அவ்விடத்தில் நின்றே ‘கோல்டன் கேட்’ பின்னால் தெரிய விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பாலத்தின் அருகிலிருந்த நடைபாதையால் நடக்கத் தொடங்க, முன்னால் சென்ற நாதனோடு கதைத்தபடி சென்றுவிட்டான், வேந்தன்.

இலக்கியாவும் அவனருகில் செல்ல முயவில்லை. சிலநிமிடங்களேயென்றாலும் அவனும் அவளுமாகக் கழித்த அத்தருணம் அவளுள் விதைத்த நம்பிக்கையும் சமாதானமும் எக்கச்சக்கம் தான். அக்கணம், அவன் சொல்வதுபோல் ‘இடையில் இன்னும் ஒரேயொரு நாள்தானே’ என்று இலகுவாக நினைத்த மனதால் அந்நினைவில் உறுதியாகவும் நிற்க முடியவில்லை.

மிஞ்சி மிஞ்சிப்போனால் இன்னமும் ஒன்று ஒன்றரை மணித்தியாலம் அதன் பிறகு அவன் சென்றுவிடுவானே! தன் வாழ்வின் முக்கிய புள்ளியில் நிற்பதை உணர்ந்தவளுள் எல்லாமே நல்லபடி நடக்க வேண்டுமே என்ற பதற்றம் பிரதானமாக நின்றிட்டு!
 

ரோசி கஜன்

Administrator
Staff member
அருகில் வாகனங்கள் விரைந்து செல்ல அப்பாலத்தால் நடந்தபடி சுற்றத்தைப் பார்க்கும் அனுபவம் வேறாகவிருந்தது. குடும்பத்தினரின் வியப்பான கதைகள் காதில் விழுந்தாலும் அவளால்தான் எதையுமே இரசிக்க முடியவில்லை. முன்னால் சென்றவர்களைத் தொடர்ந்த கால்களை அப்படியே அதன் போக்கில் விட்டுவிட்டாள்.

இடையிடை சென்ற சைக்கிள்களுக்கு ஒதுங்கியபடி பாலம் முடிவுவரை நடந்தார்கள்.

ஒவ்வொருவரும் ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாலும் “எல்லாரும் ஒண்டா நிண்டு செல்ஃபி!” வழமைபோலவே எடுக்கவும் மறக்கவில்லை.

“இலக்கி ஏன் ஒரு மாதிரி இருக்கிறயம்மா?” வினவினார், சுகுணா. அதுவும் நாலைந்து தடவைகள் கேட்டுவிட்டார். சுதாகரிக்க முயன்று தோற்று நின்றவளை ‘அடிதான் வாங்கப் போறீர்!’ வேந்தனின் குறுஞ்செய்தி அவனைப் பார்க்க வைத்திட்டு.

விழிகளால் விசாரித்தான். ‘ஒண்ணுமில்ல’ இலேசாகத் தலையசைப்பில் பதிலிறுத்தவள், கலங்கிவிட்ட விழிகளை மறைக்க கடலைப் பார்க்கும் வண்ணம் திரும்பி நின்று சமாளித்தாள்.

“மூன்றரைக்கு வந்து சேர்ந்திட்டீனமாம்.” கணவரோடு கதைத்துவிட்டுச் சொன்னார், சுகுணா.

“நாம சாப்பாட்டையும் முடிச்சுக்கொண்டே போவம்.” என்று கதைத்துக்கொண்டே வாகனம் நோக்கித் திரும்பி நடந்து வருகையில் இலக்கியாவோடு கதைக்க முயன்றும் முடியவில்லை, வேந்தனால். ஆரூரன் நகராது அவனோடு வந்து கொண்டிருந்தான்.

‘இப்ப இப்பிடி முகம் வச்சிருந்தா நான் அங்கிளிட்ட சொல்லிப் போடுவன். வீட்டில சொல்லி அவையல் மூலம் கதைப்பம் எண்டு பார்த்தா நீர் என்ன இலக்கி!’ மீண்டும் குறுஞ்செய்தியேதான்.

பார்த்தவள் மெல்லப் பின்தங்கி அவர்களோடு சேர்ந்து நடந்தாள். எதுவுமே கதைக்கவில்லை. அருகருகில் நடந்து வந்த அந்த சில நிமிடத்துளிகளே தத்தளித்த மனங்களுக்கு ஒத்தடம் கொடுக்கப் போதுமாகவிருந்தன.

கலகலப்போடே புறப்பட்டவர்கள், தீடீர் என்ற ஏற்றமும் இறக்கமுமாகவிருந்த பாதையால் வாகனம் செல்ல, “கடவுளே!” கண்களை மூடிய அஜி திறக்கவேயில்லை. அவளுக்கென்று இல்லை மற்றவர்களுக்கும் இலேசான பதைபதைப்புத்தான்! காட்டிக்கொள்ளவில்லை. அதுவும் சிவப்பு விளக்குக்கு ஏற்றத்தில் நிறுத்தியிருக்கையில் வாகனம் அப்படியே பின்னால் சரிந்து விடும் போலவும், முன்னே இறக்கத்தில் நிற்கையில் உருண்டுவிடும் போலவும் கலங்கடிக்க, அவர்களின் முகங்களைப் பார்த்து வாய்விட்டே சிரித்துவிட்டான், வேந்தன்.

“இலக்கியா எங்க ஆளையே காணேல்ல? சீற்றில படுத்திட்டவோ! நானும் பெரிய வீராங்கனை எண்டு நினைச்சன்.” வம்பிழுத்தான்.

தங்கையைத் திரும்பிப் பார்த்த கவியின் முகத்தில் இறுக்கம் தான். பலதடவைகள் கதைக்க முயன்றும் நாசுக்காகத் தவிர்த்துவிட்டானே! அதையுணர்ந்தவளுள் கோபம். அதுவும் இலக்கியாவோடு மலர்ந்து கொண்டு அவன் கதைப்பதைப் பாரக்கையில் அக்கோபம் அதிகமானது.

வேந்தனோ இலக்கியாவோ கவியைக் கவனிக்கவில்லை.

“ஹலோ...அப்படியே நிப்பாட்டிட்டு இறங்கி விடுங்க, நான் ஓடுறன்.” சிலுப்பினாலும் அவள் விழிகள் சுருங்கி, பார்வையளவைக் குறைத்திருந்தன.

“இது ‘லோம்பார்ட் ஸ்ட்ரீட்’. இதுக்கு முதல் வந்திருக்கிரீங்களா?” கொண்டை ஊசி வளைவுகளால் காரை இலாவகமாகத் திருப்பியோட்டியடி கேட்டான்.

“வந்திருக்கிறம் வந்திருக்கிறம். கன வருசதுக்கு முதல்.” ஆரூரன் சொல்ல, “அங்க என்ன இருக்கு?” கேட்டுவிட்ட அஜி, “ஓ இந்த ரோட்டிண்ட பெயரோ! சரி சரி.” என்று சொல்லிக்கொண்டே, “அம்மாடியோவ்! கொஞ்சம் பார்த்து வேந்தன்.” மகனை இறுகப் பற்றியபடி அமர்ந்திருந்தாள்.

அப்படியே சென்று சைனீஸ் உணவகம் ஒன்றில் உணவையும் முடித்துக்கொண்டே ‘ரெட் வூட் சிட்டி’யில் அவர்கள் தங்கவுள்ள விடுதி நோக்கிச் சென்றார்கள்.


இவர்களை வரவேற்க ராஜி, சிவா, சுதர்சனம், மலர் என்று எல்லோருமே வரவேற்பில் காத்திருந்தார்கள்.

கண்டதும், பல வருடப் பிரிவின் பின் சந்திப்பது போலவே ஆரவாரத்தோடு கட்டிப் பிடித்து நலம் விசாரித்தவர்களை முறுவலோடு பார்த்தபடி தள்ளி நின்றிந்தான் வேந்தன்.

விரைந்து வந்து, “மிக்க நன்றி தம்பி!” அவன் கரங்களைப் பற்றிக்கொண்டார் சுதர்சன்.

“நான் என்ர வேலையச் செய்தன் அங்கிள்.” என்றவனை நெருங்கிய மலர், “ராசா!” பாசத்தோடு முகம் வருட, “எப்பிடி இருக்கிறிங்க பாட்டி, பயணமெல்லாம் சுகமா இருந்திச்சா?’ இலேசாகக் கட்டியணைத்துவிட்டு விட்டவன், மலர் விழியெடுக்காது அவனையே ஆராய்ந்து நின்றாரா, சிறு சங்கடத்தோடு நாதனைப் பார்த்தான்.

“நோய்...இதானே வேணாம் எண்டு சொல்லுறது! நாங்க இத்தின பேர் நிக்கிறம், கண் தெரியுதில்லப் போல!” ஆரூரன் வந்தணைக்க, “தள்ளாடா!” என்றுவிட்டு, “பாருங்கோவன் “இவவிட சேட்டைய...எங்கள கண்ணில தெரியுதில்லையாமோ!” ஆரூரன் வம்பிழுத்ததைக் கவனியாது, “இதென்ன வெளியில நிண்டு கதைக்கிறது? வாங்க உள்ள போயிருந்து கதைக்கலாம்.” வேந்தன் கரத்தைப் பற்றியபடி நடக்க முனைய, “இல்ல, நானும் வெளிக்கிடுறன்.” தயங்கி நின்றவன் பார்வை ஓரமாக நின்ற இலக்கியாவைத் தொட்டு வந்தது.

“நல்ல கதையாக் கிடக்கு! வந்து ஒரு வாய் தேத்தண்ணி குடிச்சிப்போட்டுத்தான் போறது. என்ன சுதர்சன், கூப்பிடன் ஐயா.” மலர்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“வாங்கோ வேந்தன், அவையள் பாக்குகள எடுக்கிற வரைக்கும் உள்ள போயிருப்பம்.” அவரும் சொல்ல, நாதனும் அழைக்க, மறுக்க முடியாது சென்றவன் இலக்கியாவைக் கடக்கையில் மெல்லக் கண்சிமிட்டினான். அதுவரை பார்த்து நின்றவள் ஒரே ஓட்டமாக வாகனம் நோக்கிச் சென்றுவிட்டாள்.

‘மருமகன் எண்டு எல்லாருக்கும் விளங்கியிருக்கு’ நடந்தபடி அவளுக்கொரு குறுஞ்செய்தி.

வீட்டினர் அனைவருக்கும் அவனைப் பிடித்திருக்கே! தம் விடயம் தெரியவரும் போது நிச்சயம் சந்தோசப்படுவார்கள் என்றளவில் அவள் மனம் நிறைந்திட்டு! அதேமனம் தான் தந்தை, அம்மம்மாவைக் கண்டதும் களவு செய்த உணர்வோடு தவித்தும் நின்றது.

அடுத்தடுத்து இரு அறைகளும் இடையில் இரு அறைகள் இடைவெளி விட்டு இன்னுமிரு அறைகள் என்றும் எடுத்திருந்தார்கள்.

சுதர்சன் குடும்பம் தங்கவிருந்த அறையிலமறந்து பெரியவர்கள் கதைக்க, தம் பயணப்பைகளை வைத்த வேகத்தில் வெளியில் வந்துவிட்டாள், இலக்கியா.

அஜி, தானும் குளித்து மகனையும் குளிப்பாட்டும் வரையிலும் எடுத்த வீடியோக்கள் புகைப்படங்களைப் பார்த்தபடி அவர்களறையில் இருந்தவள், வேந்தன் விடைபெற்றுச் சென்று விட்டான் என்பதையும் பேச்சுக்குரல்களிலிருந்து அறிந்து கொண்டாள்.

“இலக்கி நீர் இங்கயே குளிக்கலாம்.” அஜி சொல்லவும், “அப்ப உடுப்பு அதுகள எடுத்துக்கொண்டு வாறன்.” எழ, “நாங்களும் வாறம். மகனையும் அழைத்துக்கொண்டு அறையைப்பூட்டி அட்டையை இலக்கியாவிடம் கொடுத்தவள், “தனிய வந்து குளிப்பீங்க தானே?” கேட்க, முறைத்தாள்.

“இந்த அறை அடுத்த கண்டத்தில தானே இருக்கு! நாங்க அப்பிடி இருந்தாலே தனிய இருப்பம்.” முறுவலோடு சொல்லிக்கொண்டு சென்றவள், பெரியவர்கள் ஒன்றாகவிருந்து கதைத்துக்கொண்டிருக்க, “நான் ஓடிப்போய் குளிச்சிட்டு வாறன்.” மாற்றுடைகளையும் குளியல் சாமான்களடங்கிய பையையும் எடுத்த வேகத்தில் நகர்ந்துவிட்டாள். அவளை அவ்வளவாகக் கண்டுகொள்ளாது கதை போய்க்கொண்டிருந்தது, அங்கு.

“மாறன் ஆக்களிட அறையிலா குளிக்கப் போறீர்?” அவர்கள் அறையிலிருந்து வந்தார் ரதி.

“ஓம் சித்தி, ஆரூரன் எங்க?”

“அவன் இப்ப தான் குளிக்க உள்ளிட்டவன்.” என்றவர், இலக்கியா அறையைத் திறந்து நுழையவும் தானும் பெரியவர்களிருந்த அறைக்குள் நுழைந்தார்.

சென்ற வேகத்தில் ‘வேந்தனுக்கு அழைப்போமா’ ஆசையோடு எண்ணிய மனதை அடக்கிவிட்டு விறுவிறுவென்று குளித்துவிட்டு அடுத்த இருபதாவது நிமிடம் அறையைப் பூட்டிகொண்டு நாலெட்டு எடுத்து வைத்திராள், மாறனின் அறைக்குப் பக்கத்தறைக் கதவு திறந்து வெளிப்பட்ட கரமொன்று அவளை அப்படியே உள்ளே இழுத்திருந்தது.
 
Top Bottom