• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அத்தியாயம் - 42

ரோசி கஜன்

Administrator
Staff member
இன்று காலை, இவளைத் தவிர எல்லோரும் திருமணத்துக்குச் சென்றிருக்கையில் கிடைத்த தனிமை, அடுத்து என்னவென்று முடிவெடுக்க வைத்திருந்தது. தன்னிலையில், தானெடுக்கும் முடிவே மிகப் பொருத்தமென்று உறுதியாக நம்பினாள், இலக்கியா.

‘விரும்பினது ரெண்டுபேரும் தானே? இப்ப நீ மட்டும் முடிவெடுத்தால் சரியா? வேந்தன் இத ஏற்றுக்கொள்வானா?" இடையிட்டது மனம்.

‘நானே விருப்பம் இல்லையெண்டு சொல்லுறன் பிறகென்ன! விருப்பம் எண்டால் ஏற்கட்டும் இல்லையோ என்னவாவும் செய்யட்டும்.' விரக்தியில் இப்படித்தான் எண்ணிக்கொண்டாள். கண்ணீர் தான் அடம்பிடித்து வெளியேறிக்கொண்டிருந்தது. தன்னில் தானே கோபப்பட்டுக்கொண்டிருந்தவள் அப்படியே ஓய்ந்து கண்ணயர்ந்துமிருந்தாள்.

கல்யாணத்துக்குச் சென்றிருந்த மாறன், நாதன் குடும்பத்தோடு கவியும் வந்தே இவளை எழுப்பியிருந்தனர்.

“நல்லா நித்திர கொண்டியாம்மா? அதான் முகம் தெளிஞ்சிருக்கு!" கழுத்தில் கைவைத்துப் பார்த்தார், ரதி.

"மாமியும் அக்காவும் உன்னக் கட்டாயம் கூட்டிக்கொண்டு வரச் சொன்னவே. ஏன் விட்டுட்டு வந்தீங்க எண்டு கொண்டு நிண்டவே." என்றார் ரதி.

"அதுதான், வேணும் எண்டால் கொஞ்ச நேரம் நிண்டுபோட்டு வரலாம், எழும்பி வெளிக்கிடு இலக்கி!" வரவேற்புக்கு அணிய எடுத்துவைத்திருந்த உடையை எடுத்து வைத்தபடி சொன்னாள், கவி.

இவள் எவ்வளவோ மறுத்தும் விடாது அழைத்தும் வந்துவிட்டார்கள்.

"கவி உங்களைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தன், நல்லவேள நேரத்துக்கே வந்திட்டிங்க. கொஞ்சம் வாங்கம்மா." வந்ததும் வராததுமாக அவளை அழைத்துச் சென்றுவிட்டார், மணப்பெண்ணின் அன்னை. தந்தையும் மலரும் அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு அவர்களோடு சென்றமர்ந்துகொண்டாள், இவள்.

அந்த நேரம் தான் ரத்னாவின் அழைப்பு வந்தது. எடுத்துக் கதைத்த சுதர்சன், பரபரப்போடு எழுந்தார்.

“வேந்தன் ஆக்கள் எல்லாரும் வந்திருக்கீனமாம் மா! தங்கச்சிக்கு வேந்தனட அம்மா நல்ல சிநேகிதியாம். இன்னும் தங்களுக்கு விசயம் தெரியும் போல காட்டிக்கொள்ளேல்லையாம். வேந்தன் சொல்ல வர வர ஒரு மாதிரி தவிர்த்திட்டுக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாவாம்!" பரபரத்த சுதர்சனம், குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு வாசல் நோக்கி நகர, அப்படியே அதிர்வோடு அமர்ந்திருந்தாள், இலக்கியா.

'இப்ப இங்க வச்சு என்ன நடக்கப் போகுது!' அவள் நெஞ்சு படீர் படீரென்று அடித்துக்கொண்டது. ‘மொத்த உறவுகளின் முன்னால குடும்பத்துக்கே அவமானம் வந்திருமோ!’ உடலில் நடுக்கமோடியது.

‘வேந்தன்ட அம்மா கவியப் பெண் எண்டு காட்ட, வேந்தன் என்ன சும்மாவா இருப்பார்? உனக்கும் எனக்குமிடையில் ஏதுமில்லையென்று சொல்லவேண்டும் என்ற முடிவோடுதான் இருந்தாள். அதற்கிடையில் இங்க வரும்படியாகிட்டு. இப்போ!

எழுந்து வாசல்புறமாக நடந்தாள். அப்போதுதான், வேந்தனை ஒரு இளம்பெண் கைபிடித்து இழுத்து வருவதைக் கண்டாள். 'வேந்தன்ட அக்கா போல இருக்கே!' புகைப்படத்தில் அவன் காட்டியதாக ஒரு நினைவு.

மெல்ல ஓரமாக வந்து நின்று அவதானித்தாள். இரு பக்கக் குடும்பத்திலும் அத்தனை மகிழ்வு! பரபரப்போடு வந்திணைந்த கவியைக் கேட்கவே வேணாம், மலர்ந்து நின்றாள்.

வேந்தன் முகத்தில் கூட உச்சபட்ச வியப்பே! 'கவி பக்கம் கைகாட்டப்படும் போது?’ எண்ணியவள் நயனங்களில் நீர் முத்துக் கோர்வைகள் உதிர்ந்தன. மனதோடு துவண்டு நிற்கவில்லை, கால்கள். அருகிலிருந்த கதவால் வெளியேறியிருந்தாள், இலக்கியா.

வாகனச் சாரதி அங்கு தான் நின்றுகொண்டிருந்தார். "அங்கிள் ஹோட்டலில விடுறிங்களா?" கேட்டவள் முகம் பார்த்துவிட்டு எதையும் கேட்காது சாரதியாசனத்தை நிறைத்தாரவர்.

வாகனம் மண்டபம் விட்டு வெளியில் வந்து சில நிமிடங்களில் மாறனுக்கழைத்துச் சொன்னாள்.

அடுத்து?

கடந்த இரு கிழமைகளில் எத்தனையோ தடவைகள் அவனுக்குக் குறுஞ்செய்திகளைத் தட்டியனுப்பியுள்ளாள், இவள்; அப்போதெல்லாம், பெரும்பாலுமே அவளுதடுகள் முறுவல் வசப்பட்டிருக்கும்; இதயமோ, சந்தோசக்குமிழிகளின் ஆரவாரப் பிடியிலில் திமிறிக்கொண்டிருக்கும்; சந்தோசமோ, சீண்டலோ, கோபமோ, யார் பார்வையிலும் பட்டுவிடுமோவென்ற கள்ளத்தனமான ஆராச்சி முன்னிலையில் காவலுக்கிருக்கும்; இத்தனைக்கும் மத்தியில், தம்மிருவருக்குமிடையிலான உணர்வுகளைத் தட்டியனுப்பும் விரல்களில் நிறையவே திடமிருக்கும்.

இன்றோ, அவை சோர்வுடன் நடுங்கின; இதயம் மொத்தமும் துவண்டு கிடந்தது; உதடுகள் காய்ந்து, நாவறண்டு உடல் கனத்தது; எப்படி அவற்றைத் தட்டினாள் என்றே தெரியாது. எழுதிவிட்டதை அனுப்ப மட்டும் துளியும் யோசிக்கவில்லை; பட்டென்று ஒரே தட்டில் அனுப்பிவிட்டிருந்தது, வலக்கையின் ஆட்காட்டிவிரல்! அதேவேகத்தில் கைபேசியை அணைத்தும் விட்டாள்.

'எல்லாம் முடிஞ்சிட்டு!' விழிகளை மூடிக்கொண்டு இருக்கையில் தலைசாய்த்தவளின் சிந்தனா சக்தி மொத்தமாக வேலை நிறுத்தத்தில் இறங்கிவிட்டிருந்தது.

அடுத்த ஆறேழு நிமிடங்கள் அவளுக்கு யுகமெனக் கழிந்திருக்க, "வந்து சேர்ந்திட்டம் மா!" யன்னலில் மெல்லத் தட்டினார், சாரதி ஐயா.

“ஓ! வந்திட்டமோ!” திடுக்கிட்டு பார்த்தவள் விழிகளின் சிவப்பில் சற்றே தயங்கினாரவர். "உங்களுக்கு...நீங்க ஓகே தானே? ஏதாவது வேணுமா? இல்லை, நான் திரும்பிப் போகலாமா?" கேட்டார். மிகவும் வேண்டிய உறவினர்கள் என்று வேந்தன் சொல்லியிருந்தானே!

"நான்...ஓகே அங்கிள். நீங்க போங்க!" முயன்று திடமாகவே சொல்லிவிட்டிறங்கியவள் சிறு தலையசைப்போடு விறுவிறுவென்று நடந்தாள்.

தம் அறையைத் திறந்த வேகத்தில் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டவளுக்கு, கல்யாண வரவேற்பிலிருந்து புறப்பட்டு வந்துவிட்டதைப் போல் எங்கேயாவது போக முடிந்தால் என்றிருந்தது. அதுவே, அவளுள் துளியேனும் நிம்மதி தரும் போலிருந்தது. இக்கணம், சொந்தம் சுற்றமென்று சொல்லும் எவரையும் பார்க்க விரும்பவில்லை. அவளுக்குத் தேவை தனிமை!

'எங்க போவன்?!' பொலபொலவென்று விழிகளால் வழிந்த கண்ணீரைத் துடைக்க முயலாது முன்னாலுள்ள சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தாள், இலக்கியா.

'நான் அனுப்பினதப் பார்த்திட்டு 'உன்ர முகத்திலும் விழியேன்' என்ற முடிவு அவனுள் வரவேண்டும்.' மனதார வேண்டவும் செய்தாள். ஒருவேளை நாங்கள் காதலிக்கிறம் என்றது அவனால் வெளிவந்துவிட்டாலும், 'நான் கடைசிவரை இப்பச் சொன்னதிலிருந்து மாறப்போறதில்ல!' உறுதி கொண்டது மனம். அதைத் தக்க வைக்க வேண்டுமே! மிகையாகவே தவித்துப் போனாளவள். விரும்பியவனை வெறுக்கின்றேன் என்று அவன் முகத்துக்கு நேரே அடித்துச் சொல்லும் சந்தர்ப்பம் வந்துவிட்டால்!?

கொஞ்சம் தண்ணீர் குடித்தால் நல்லது போலிருந்தாலும் அவள் அசையவில்லை.

இப்படி இவள் தன்னைத் தானே வதைத்துக் கொண்டிருக்கையில் கதவு தட்டப்பட்டது. மெல்லிய தட்டுத்தான், அதிலொரு அவசரமிருந்தது. திடுக்கிட்டுவிட்டாள். கண்களை அழுந்தத் துடைத்தும் பார்த்தாள். அது எங்கே? எழுந்த வேகத்தில் மடியிலிருந்து தொப்பென்று விழுந்திட்டு கைபேசி. அதைக் கவனியாது மெல்ல நகர்ந்து சென்றவள், “ஆர் அது?” ஆங்கிலத்தில் கேட்டபடி கதவிலிருந்த சிறு துளைக் கண்ணாடி வழியே கண்வைத்துப் பார்த்தவள், மறுநொடி, மயங்கிச் சரிந்திருந்தாள்.

தடாலென்று கேட்ட சத்தத்தில் கணம் அதிர்ந்து நின்றுவிட்டான், வேந்தன். மறுநொடியே சுதாகரித்து, "இலக்கி...கதவைத் திற!" தட்டினான்.

'என்ன சத்தம் அது? இந்த அறையில்தான் கேட்டிச்சா?' சந்தேகம் கூட வந்திட்டு.

"இலக்கி!" சற்றே பலமாகத் தட்டியவனுள் இலேசான பதற்றமும்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
‘மற்ற அறைகள் எதிலாவது இருக்கிறாளோ!’ மீண்டும் மீண்டும் பலமாகத் தட்டினான், பதிலில்லையோ அடுத்த அறைக்குச் செல்வோமென்ற முடிவில்.

அந்நேரம், "என்ன வேந்தன் இது? பக்கத்தறைகளில இருக்கிறவே என்ன நினைப்பீனம்?" சிடுசிடுப்போடு வந்த நாதனையும் அவர் பின்னால் வந்த சுதர்சனையும் அவன் கொஞ்சமுமே எதிர்பார்க்கவில்லை.

"அங்கிள்...வந்து...இலக்கியா...கீழ விழுந்தது போல சத்தம் கேட்டிச்சு. தட்ட தட்டத் திறக்கேல்ல. அதுதான்." அவன் சொல்ல நாதன் தமையனைப் பார்த்தார்.

"விடியேல இருந்து ஏலாமல் இருந்தவள், சாப்பிட்டாளோவும் தெரியாது." முன்னால் வந்த சுதர்சன், "இலக்கிம்மா கதவைத் திற அப்பா வந்திருக்கிறன்!" இரண்டு தட்டுத் தட்டிவிட்டு, "பச்!" தன் பர்சில் இருந்த மாற்று அட்டை போட்டு கதவைத் திறந்துவிட்டவரால் தள்ளித் திறக்க முடியவில்லை.

“பிள்ளதான் விழுந்து கிடக்கிறாள் போல!” பதற்றத்தோடு மெல்லத் தள்ளியபடி தலையை விட முயல, “அங்கிள் கொஞ்சம் இங்கால வாங்கோ!” அவரைப் பிடித்து அப்பால் விலக்கிய வேகத்தில், “இலக்கி...இலக்கி...” என்றபடி, மெல்ல மெல்ல கதவைத் தள்ளித் தன்னை நுழைத்துக் கொண்டவன், அவள் விழுந்து கிடந்த விதம் பார்த்து அதிர்ந்து நின்றது ஒரு கணம் தான்.

“இலக்கி... கண்ணைத் திற!” கன்னத்தில் தட்டிப்பார்த்தான். அசைவில்லை. மனம் பதற அப்படியே தூக்கிக் கட்டிலில் கிடத்தினான்.

“இவளுக்கு காய்ச்சல் அடிக்குது போல!” சொன்னவனுள் குழப்பம்! ‘நேற்று இரவு எவ்வளவு சந்தோசமா நல்லாத்தானே இருந்தவள்!’ பதற்றமும் யோசனையுமாக மீண்டும் மீண்டும் தட்டியும் அழைத்தும் எழுப்பிட அவசரப்பட்டான்.

சுதர்சன், வேந்தன் விலக்கிவிட்டு உள்ளே வந்த வேகத்தில் திகைத்தவர் தான், தள்ளியே நின்றிருந்தார். அவளுக்குத் தான் மட்டுமே என்றமாதிரி மிக்க உரிமையோடு அவன் நிற்பதைப் பார்த்தவருள் அவர்களிடையேயான நெருக்கம் புலப்பட்டது. இந்த நெருக்கம் இருகிழமைகளுள் உருவானதென்பதைத்தான் நம்பவும் முடியாதிருந்தது. அவனளவு அவளுக்கும் அன்பிருக்கு! முதல் நாள் கவியைக் கட்டிப் பிடித்து அவள் அழுத அழுகையும் திடீர் காய்ச்சலும் வேறு எதைச் சொல்கிறதாம்?

ஆனால், ‘அப்பா, அம்மா நான் அவரை விரும்புறன் எண்டு சொல்லமுடியாமல் எது அவளைத் தடுத்தது?’ அவர் விழிகள் நிறைந்திட்டு. அவள் சின்னதாகவேனும் மனம் வருந்திவிடக்கூடாதென்பதில் மிக்க கவனமாக இருப்பவர், அவர். அதை, அவள் விளங்கிக் கொள்ளவில்லையோ என்றிருந்தது.

“என்னதான் எண்டாலும் இந்த நிலையில் நம்மள நிப்பாட்டி இருக்க வேணாம், அண்ணா. இலக்கியாவா எண்டு என்னால நம்ப முடியாமல் இருக்கு. கவியைவிடவும் புத்திசாலி எண்டு இருந்தன் நான்." என்ற நாதன், தண்ணி கிளாசை எடுத்துச் சென்று அவளுக்குத் தெளிக்க முயல, கைநீட்டியிருந்தான் வேந்தன்.

நாதன் முகம் இறுகிப் போயிற்று! இருந்தாலும் ஒத்த வார்த்தை கதைக்காது நீரைத் தெளித்தாரவர். அவள் முகத்தில் பட்ட நீரை மென்மையாகத் துடைத்துவிட்டபடி, "இலக்கி...கண்ணைத் திற!" கன்னத்தில் தட்டினான் வேந்தன். நாதன் வெளிப்படையாகவே அவனை முறைத்தார். ‘முதல் நீங்க கொஞ்சம் வெளில நில்லுங்க.’ சொல்ல வாயுண்ணினார்.

"நாதன்...விடு!" சுதர்சன்.

வேந்தன் அந்நேரம் அங்கு வந்து நிற்பானென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை, இலக்கியா. மனதளவிலும் உடலளவிலும் மிகையாகவே துவண்டிருந்தவளாச்சே! அச்சிறு துளை வழியே, ஒற்றைவிழியின் ஊடாகப் பாய்ந்த அவன் வரவு, நின்ற நிலை, முகத்தின் கடுமை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தாக்கி அதிர்வேற்படுத்தியதில் அப்படியே மயங்கிப் போயிருந்தாள்.

இப்போது, முகத்தில் பட்டுத் தெறித்த நீர் தந்த சிலிர்ப்பில் இமைகளைப் பிரிக்க முயன்றவளுக்கு வேந்தன் குரல் ஓயாது ஒழித்துக் கொண்டிருக்க, பிரிக்க முயன்ற இமைகளை முந்திக்கொண்டிறங்கியது, கண்ணீர்.

மென்மையாக அதைத் துடைத்துவிட்டன, அவன் விரல்கள். உள்ளிருந்து திரண்டெழுந்த விம்மலோடு, அப்படியே அவனைக் கட்டிக்கொள்ள வேண்டும் போலெழுந்த வேகத்தோடு விழிகளை மலர்த்தியவள் பார்வை, கலங்கிக் கிடந்த அவன் விழிகளில் மோதிய வேகத்தில், “வே...ந்தன்!” கேவல்களுக்குள்ளால் தட்டுத் தடுமாறி உச்சரித்த சத்தத்தோடு அப்படியே எம்பி அவன் கழுத்தில் கைபோட்டு வளைத்துக் கொண்டவளை நெஞ்சோடு இறுக அணைத்துக்கொண்டான், வேந்தன்.

எப்படி அவள் பார்வைக்கு அவன் முகம் மட்டும் தெரிந்ததோ, அப்படியே, அவன் சிந்தையிலிருந்து அங்கு நின்ற பெரியவர்கள் மறைந்திருந்தார்கள்.

‘காலம் முழுமைக்கும் உனக்கே உனக்கான இடமிது, அவ்வளவு சுலபமாக உதறிவிடுவாயோ!’ சண்டைபோடும் கணக்கில் படீர் படீரென்று அடித்த அவனிதய இதய ஒலியோடு போட்டிப் போட்டுக்கொண்டு அழுதாளவள்.

“விசரி! உண்மையிலேயே நீ விசரிடி!” என்றபடி, உச்சியில் முகம் பதித்தவன், “விடு, அழாத, இங்க பார் இலக்கியா.” முகத்தை நிமிர்த்தினான்.

கலங்கிக் கிடந்த அவன் விழிகளைச் சந்திக்கத் திராணியின்றி, “சொறி வேந்தன்!” அவன் தோள் வளைவுக்குள் முகம் பதித்தவள் அடுத்த கணம் அப்படியே செயலற்றுப் போனாள்.

கால்மாட்டில், கரமிரண்டையும் கட்டிக்கொண்டு யாரோ போல் ஒதுங்கி நின்றிருந்தார் அவள் தந்தை, விழிகள் ஈரத்தில் பளபளக்க.

விசுக்கென்று அவனிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு இறங்க முனைந்தவளுக்கு அறையொருதடவை கிர்ரென்று சுழன்றது. முதல் நாள் மாலை உண்டபின் அவள் எதையுமே உண்ணவில்லை. உணவை வீணாக்குவது அவள் ஒரு போதும் செய்யாத செயல். இருந்தும், காலையில் மாறன் கொண்டுவந்து வைத்த டோஸ்ட் அப்படியே குப்பைக்கூடைக்குள்ளேதான் போயிட்டு.

கைகளால் முகத்தைப் பொத்திய விதம் பார்த்து, "இலக்கி என்ன செய்யுது? டொக்டரிட்ட போவமா?" கேட்டபடி தோள்களைப் பற்றினான் வேந்தன். அவனை ஏறிட்டவள் விழிகள் மீண்டும் குபுக்கென்று நிறைந்திட்டு.

"என்னடி உனக்கு இப்பப் பிரச்சினை?" கேட்டபடி அவள் விழிநீரைத் துடைக்க வந்தவன் கரத்தைப் பற்றிக்கொண்டே இறங்கி, "அப்...பா!" கேவலோடு பாய்ந்து தந்தையின் நெஞ்சில் சரிந்து விட்டாளவள்.

"சொறி அப்பா! சொறி! சொறி! சொறி!" கேவல்களிடையே தட்டுத் தடுமாறி வந்து விழுந்தன, வார்த்தைகள்.

கவியின் முகம் வேறு வந்து போயிற்று. 'எனக்கு அதான் வேணும். வேணும் எண்டா வேணும். இல்லையோ ஒண்ணும் வேணாம். 'சிறுவயதிலிருந்து எதற்கும் இப்படிச் சொல்பவள் அவள். தான் விரும்பியதைப் பெறவே விரும்புபவள். இன்று?'

தமக்கையின் வாழ்வு பற்றிய விசயத்தில் தன்னால் இப்பிடியொரு நிலைவந்துவிட்டதை அவளால் கொஞ்சமும் ஏற்கவே முடியவில்லை. 'சர்வ நிச்சயமா எல்லாருக்குமே என்னைப் பிடிக்காமல் போயிரும்.’ அன்பை அள்ளித் தந்த உறவுகள் அவளை விட்டு விலகிவிட்டதாகச் சொன்னதுணர்வு!

முதல், தமக்கையின் கண்ணீரைப் பார்த்துக்கொண்டே இவனைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்திட முடியுமா அவளால்? இதனால்தானே வேந்தனை விட்டு விலகவே முடிவெடுத்தாள். இப்போ?

'நான்...உண்மையாவே அவர விரும்பேல்ல பா!' எழுத்தில் அவனுக்கு எழுதிவிட்டவாளால் அவனையும் வைத்துக்கொண்டு இதைச் சொல்ல முடியவில்லை.

அழவும் கண்ணீர் விடவும் மட்டுமே முடிய, செய்வதறியா நின்றாளவள்!

மகளை அணைத்துப் பிடித்தபடி அவள் தலையை வருடிய சுதர்சனாலும் ஒற்றை வார்த்தையுதிர்க்க முடியவில்லை.

இந்நிலையைக் கலைத்தார்கள் வேகமாக உள்ளிட்டவர்கள்.
 
Top Bottom