• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆசிரியர் உரை - ஆட்டநாயகன்

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆசிரியர் உரை

கதை முடிந்து அடுத்த நாள் போட நினைத்த போஸ்ட் இது. சிலபல சைட் குளறுபடிகளால் பிந்திப்போச்சு.

ஆட்டநாயகன் - இதை ஆரம்பிக்கவும் எழுதவும் எந்தளவுக்கு யோசிச்சேன், பயந்தேன் என்று சொல்லவே முடியாது. 2022ல் எழுதி முடித்த நீ தந்த கனவை இன்றுவரை புத்தகமாகப் போடாது வைத்திருந்ததும் இதனால்தான்.

ஒவ்வொரு முறையும் எழுத என்று வந்துவிட்டு எப்படி எல்லாம் தள்ளிப்போட்டேன் என்று என்னோடு நெருக்கமாகப் பழகுகிறவர்களுக்கு தெரியும்.

கடைசியில், சொந்த வாழ்க்கையிலேயே பல ரிஸ்குகளை எடுக்கிறோமாம், ஒரு கதை எழுதுற விசயத்தில ரிஸ்க் எடுக்க யோசிப்பியா நீ என்று என்னை நானே கேட்டுக்கொண்டு ஆரம்பித்த கதை அது.

உண்மையில் நீ தந்த கனவு கதை எழுதிய நாள்களில் இப்படி அதன் தொடர்ச்சியாக இன்னொரு கதை எழுதுவேன் என்று நினைக்கவே இல்லை. இன்னுமே சொல்லப்போனால் காண்டீபன் இறந்ததாக வரும் அத்தியாயத்திற்கு அடுத்த அத்தியாயம் எழுதவே முடியாத அளவில் அந்தக் கதை எழுதிய நாள்களில் அவ்வளவு மெசேஜ்.

அந்த நேரம் நான் கொஞ்சம் பயந்துபோனேன். என்னால் மனித உணர்வுகளைச் சமாளிக்க முடியவில்லை. அழுதழுது பலர் அனுப்பிய வொயிஸ் மெசேஜுக்கு என்ன பதில் சொல்லுறது, ஏற்கனவே என் கதையால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களை என் வார்த்தை என்னை அறியாமலேயே காயப்படுத்திவிடுமோ என்று பயம்.

அதனால்தான் இடையில் நிறுத்தினேன். கிட்டத்தட்ட அதன் பிறகு ஆறு மாதங்கள் எடுத்து, offline ல் கதையை முடித்துவிட்டு போஸ்ட் பண்ணினேன். அந்த ஆறு மாத இடைவெளியில் காண்டீபனை உயிருடன் கொண்டு வருவதுபோல் கதையை மாத்தலாமா என்று பல வழிகளிலும் யோசித்துப் பார்த்தேன்.

எந்த வழியும் எனக்குத் திருப்தியாக இருக்கவே இல்லை. நீ தந்த கனவை காண்டீபனின் சிறப்போடு மட்டுமே என்னால் எழுதி முடிக்க முடிந்தது. அதுதான் அவன் இறந்துவிட்டான்தான் என்று உறுதியாகச் சொல்வதுபோல் அவன் உடல், அது அந்தச் சிறைச்சாலையின் தரையில் இறந்து கிடக்கும் காட்சி, அவனின் மரணவீடு, ஆதினி அவன் கேஸ் பைலை பார்க்கும் இடம் எல்லாம் அழுத்தமாக எழுதி அவன் இறந்துவிட்டான்தான் என்று மிகத் தெளிவாக வாசகர்களுக்குக் கடத்தினேன்.

அதே நேரத்தில் வாசகர்களின் உடைந்து கரகரத்த குரல் என்னை தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது. கற்பனைக் கதை என்று தெரிந்தும் ஒருவர் வருந்துகிறார். அவரின் அந்த வலியை நான் புறக்கணித்தால் ஈரமற்ற ஒருத்தியாக நான் ஆகிவிடுவேன் இல்லையா. அதனால்தான் கரு கிடைத்தால் எழுதுவோம் என்று சத்தியநாதனின் அந்த ஒற்றை வசனத்தை கதையில் வைத்தேன். (எழுதினால் அந்த வசனம் நீ தந்த கனவில் தொடர்ந்து இருக்கும். இல்லையா அதைத் தூக்குவது எல்லாம் ஒரு வேலையே இல்லைதானே?)

ஆனால், அதன்பிறகும் அவர்கள் விடவில்லை. இடையில் நிறுத்தியபோது எப்படித் துடித்தார்களோ, எப்படி என்னிடம் வந்து முறையிட்டார்களோ அதேயளவு வீரியத்துடன் கதை முடிந்தபிறகும் வந்து சொன்னார்கள்.

அப்போதுதான் இந்தளவில் பல வாசகர்கள் கேட்கிறபோது நான் என் முடிவிலிருந்து மாறவே மாட்டேன் என்று நிற்பது முறையல்ல என்று தோன்றிற்று.

கூடவே பலமுறை சொல்லியிருக்கிறேன். எனக்குச் சவால்கள் பிடிக்கும். ஏற்கனவே இறந்துவிட்டான் என்று சந்தேகத்திற்கு இடமறக் காட்டிய ஒருவனை உயிருடன் கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைத்தது.

அப்போதுதான் இறந்துவிட்டான் என்று பல வருடங்களாக நினைத்திருந்த ஒருவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும், அவர் பட்ட துயரங்கள் பற்றியும் ஒரு வீடியோ பார்த்தேன்.

அதே சிறை, இறந்த ஒருவர் திரும்பியது, அங்கே அவர் அனுபவித்தவைகள் என்று எல்லாமே என் கதைக்கு அப்படியே பொருந்திப்போயின.

அதை வைத்தே கதையை யோசித்துவிட்டேன். நீ தந்த கனவு வாசித்துவிட்டு என்னிடம் தனியாகப் பேசியவர்களிடம் அப்போதே இன்னொரு கதை வரும், அதில் காண்டீபன் உயிரோடு வருவான் என்பதைச் சொல்லித்தான் அவர்களை ஆற்றுப்படுத்தினேன்.

ஆக இதுதான் ஆட்டநாயகன் உருவான கதை. நீ தந்த கனவு எழுதியபோதே எனக்கு அந்த எண்ணம் இல்லை. அந்த எண்ணத்தை வரவைத்தது என் வாசகர்கள்தான்.

அடுத்ததாக ஆட்டநாயகன் : இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல?

ஏனோ மனம் தள்ளாடுதே கதை எழுதும்போதும் மோகனனுக்கு இன்னொரு கதை எழுதவே மாட்டேன் என்று போஸ்ட் போட்டேன். பிறகு வாசகர்களின் விருப்பத்திற்காக எழுதினேன். அது எல்லாம் சிரமமே இல்லை. அது ஒரு குடும்ப கதை. உணர்வுகள்தான் முன்னிலை வகிக்கும். அதே பள்ளிக்கூட பிரச்னையை எடுக்க கூடாது, மோகனனை நியாயப்படுத்த கூடாது. இது ரெண்டும்தான் எனக்கான எல்லைகளா இருந்தது.

ஆனால் இந்தக் கதை அப்பிடி இல்லை. நீ தந்த கனவில் சொன்ன விடயங்களில் இருந்து மீறாது, ஒரு குறிப்பிட்ட சின்ன வட்டத்துக்கு நின்றுதான் நான் எழுதியே ஆகவேண்டிய கட்டாயம்.

உண்மையா எனக்கு எழுதப் பிடிச்சிருந்தது. ஆனா எழுத ஈஸியா வரேல்ல. முன்னர் எல்லாம் எனக்கு சஸ்பென்ஸ் வச்சு எழுதுறது, இந்த இன்வெஸ்டிகேஷன் எல்லாம் வராது எண்டு நினைச்சிருந்தேன். ஆனா இப்ப அப்பிடி இல்ல. எழுத வருது. எனக்குப் பிடிச்சும் இருக்கு. எதிர்காலத்தில் இன்னும் ஈஸியா இன்வெஸ்டிகேஷன் கதை நிச்சயமா எழுதுவேன்.

முக்கியமான ஒண்டு சொல்லோணும். இந்தப் போஸ்ட்டுக்கு இது தேவை இல்லாத ஒன்றுதான். என்றாலும் நீங்களும் தெரிந்துகொள்வதில் தவறில்லை.

நீ தந்த கனவு எழுத ஆரம்பிக்கும்போது ஒரு இன்வெஸ்டிகேஷன் கதை எப்படி எழுதுறது எண்டு எனக்குத் தெரியாது. அமேசானில் இருந்த திரு ராஜேஷ்குமார் கதைகள், திரு சுஜாதா அவர்களின் கதைகள், மதன், இன்னும் பல ரைட்டர்ஸ் கதைகள்(அடேய் அதுல சில ரைட்டர்ஸ் கதைகள் உண்மையான 18+ எல்லாம் இருந்தது தெரியுமா? முதல் என்னடா இது இப்பிடி எழுதி இருக்கிறாங்க எண்டு பயந்துபோனேன். பிறகு எனக்கு என்ன தேவை எண்டு முடிவு கட்டி அதையெல்லாம் வாசிச்சேன்.)

அந்த நேரம் ஒன்றுமே மண்டைக்க வரவே இல்லை. யோசிச்சுப் பார்த்தா எதுவுமே நினைவில் இல்லை மாதிரி இருந்தது. நீ தந்த கனவுக்கு ஒரு இறப்பை எப்பிடி எழுதுறது, மரண வீடு விசாரணை எப்படி இருக்கும் எண்டெல்லாம் பொயிண்ட்ஸ் எடுத்து எழுதினேன்.

ஆனா ஆட்டநாயகன் எழுதியபோது அப்படி எந்தக் கதையும் வாசிக்க இல்லை. எழுத எழுத அந்த விசாரணை, அதை ஒவ்வொரு படியாக நகர்த்தும் பாங்கு என்று தானாக மைண்டில் வந்தது.(சும்மா அவன் ஹீரோ என்றதும் பட்டு பட்டு என்று துப்பாக்கியை எடுத்து சுட்டான் என்றெல்லாம் என்னால் எழுத முடியாது.) அப்பதான் தெரிஞ்சது, அன்றைக்கு வாசித்தது இன்றுவரை என் நினைவில் நின்று என்னை வழி நடத்துது என்று.

ஆக, ஒரு புத்தகத்தை வாசித்த பிறகு அதிலிருந்து என்ன நமக்காக எடுத்தோம் என்று யோசித்தால் எதுவுமே இல்லை மாதிரி இருக்கும். ஆனால், நம் மூளையில் நிச்சயம் ஏதோ ஒரு இடத்தில் போய் நிரந்தரமாகத் தங்கியிருந்து, தக்க சமயத்தில் நமக்கு உதவும். இல்லாமல் 2020 காலப்பகுதியில் வாசித்தவை 2026ல் எனக்குக் கை கொடுக்குமா சொல்லுங்க.

சோ, நல்ல வாசிப்பை என்றைக்கும் விட்டுடாதீங்க.

அடுத்த கட்டமாக வாசுசேனன் காண்டீபனாக மாறியது. பாதிப்பேருக்கு அது மிகுந்த மகிழ்ச்சி என்றால் மீதிப்பேருக்கு அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மென்மையும் அன்பும் பாசமும் நிறைந்த காண்டீபனைப் பலரால் வாசுசேனனாகப் பார்க்க முடியவில்லை. என்னால் உங்கள் மன உணர்வுகளை முழுமையாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஆனால், எனக்குமே மேலே சொன்னது போன்று ஒரு வட்டத்தினுள் நின்றுதான் இந்தக் கதையை எழுதவும் முடியும். அவன் சிறையில் இருக்கிறவன். சிவநாதர், சத்தியநாதன் போன்ற கொடியவர்கள் கையில் சிக்கியவன். அவனை கொல்லவேண்டும் என்கிற வெறியில் இருந்தவர்கள் கையில் சிக்கியவன்.

அப்படியானவன் இப்படித்தான் இருப்பான் இல்லையா? இன்னும் சொல்லப்போனால் அவனை அவர்கள் உயிருடன் விட்டு வைத்ததே பெரிய விடயம். கொஞ்சம் உங்களை எல்லாம் மண்டையைப் பிய்க்க வைப்போமே என்று நானும் கொஞ்சம் சதி செய்தேன்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

சில லாஜிக் மிஸ்டேக்ஸ் இருக்கலாம். நானும் அனைத்தையும் தெரிந்தவளும் இல்லை, குறையே இல்லாமல் எழுதக்கூடிய அளவுக்கு வல்லவளும் இல்லை. என்னால் முடிந்தவரையில், எனக்குத் தெரிந்த வரையில் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்.

வேறு என்ன இந்தக் கதையைப் பற்றி சொல்ல என்று தெரியவில்லை. ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்டு வையுங்கள். பதில் சொல்கிறேன்.

கேள்வி கேட்க : https://docs.google.com/forms/d/e/1...ewform?usp=sharing&ouid=117613769386943198312

அச்சோ முக்கியமானவற்றை மறந்துவிட்டேன். கதிரவனுக்கு நிச்சயமாகத் தனிக்கதை உண்டு. இப்போதைக்கு அந்தக் கதையின் தலைப்பு : என் கதிர் அவன்

மாதவன் கேதகிக்கு இதமான ஒரு ரொமான்ஸ் நாவல் எழுத ஆசை உண்டு. அதில் சோகம் துயர் எதுவுமே இல்லை. தனிய கலப்படமில்லாத சிரிப்பு மட்டும்தான். ஓகேயா?

எப்போதும் எனக்கு ஆதரவும் அன்பும் தரும் உங்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகளும் அன்பும். பயந்த கதையை இத்தனை அழகாய், திருப்தியாய் முடித்திருக்கிறேன் என்றால் நீங்கள் மட்டுமே காரணம்.

முக்கியமா முதல் எபி போடுகிறபோது நான் விடுகிற பல மோசமான எழுத்துப்பிழைகளுக்கு சொறி. அடுத்த நாள் எடிட் பண்ணிவிடுவேன்தான். என்றாலும் தினமும் நித்திரை கலக்கத்தோடுதான் எபி போடுவேன். இது முறை கிடையாது. இது சாட்டு சொல்கிற தவறும் கிடையாது. நிச்சயம் மாற்றிக்கொள்ள முயற்சி எடுப்பேன்.

(இப்பவும் எழுத்துப்பிழை திருப்பி பாக்க இல்லை:LOL:. பிறகு பாக்கிறேன்.)

நன்றி மக்களே!

அடுத்த கதை நீ வந்து தங்கிய நெஞ்சில். விரைவில் சந்திப்போம்.

அதுவரை,

நட்புடன் நிதனிபிரபு



 

Chitra ganesan

Active member
காண்டு மவனை திருப்பி கொடுக்க நீங்க பட்ட சிரமங்கள் எல்லாம் இப்போ உங்க தலையில் மணிமகுடமாய் மாறி இருக்கு.
வாழ்த்துகள் நிதா.😍
கதிரவன்,மாதவன் கேதகி எல்லோரையும் மீண்டும் பார்க்க போகும் நாளுக்கு காத்திருக்கிறோம்.😍
 

vijisarma

New member
Of all the writers (I mean to say the stories I read on line nowadays, ) you are one of the most humble writer ma. I dont know about many of the new writers but when I read the posts in the groups and pratilipi I do feel bad sometimes.
But to accept even I could do mistakes and I am here to correct is a great human mind set.
My best wishes to you. Keep on writing and always love to read. Eagerly waiting to read the next one
 

Ananthi.C

Well-known member
வாசுசேனன் தான் காண்டீபன் என்று தெரிந்த கணத்தில் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியாது...
நீ தந்த கனவை நினைக்கும் போதெல்லாம் காண்டீபனை நினைத்து ஒரு நொடியேனும் கலங்கும் கண்களுக்கு அவனை உயிர்ப்பித்து ...விடுதலை தந்துள்ளீர்கள் நிதாம்மா...

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Top Bottom