• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 28

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-28

அதுவரை நேரமும் அங்கிருந்து எழுந்து ஓடிவிடத் துடித்த இலக்கியா தர்சனின் காரைக் கண்டதும் அந்த இடத்திலேயே உறைந்தாள்.

கணவனின் அன்பில் உறுதியடையாத அவள் மனது, வெண்பாவை கண்டுவிட்டு என்னை வெறுத்துவிடுவானோ, வீட்டை விட்டுத் துரத்திவிடுவானோ என்று பலதை எண்ணிக் கலங்கியது.

இவ்வளவு நாட்களும் அவனைவிட்டு தாய்வீடு செல்ல அவள்தான் துடித்தாள் என்பதை அந்தநிமிடம் மறந்தே போனாள்.

கையில் இருக்கும்வரை அருமை தெரியாமல் இருக்கும் ஒரு பொருளை இன்னொருவர் சொந்தம் கொண்டாடிவிடுவார்களோ என்று தெரிந்ததுமே, அந்தப் பொருளை எப்படியாவது தன் வசமே வைத்திருக்கப் போராடுமே குழந்தை, அந்த நிலையிலிருந்தாள் இலக்கியா.

அப்படி, அவனை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாமல் தவித்தவளின் சுவாசக் குழாயை பயப்பந்து ஒன்று உருண்டுவந்து அடைக்க, அடுத்து என்ன நடக்குமோ என்று நெஞ்சு பதறியது.

அவனாவது வெண்பாவை வெளியே போ என்று துரத்தி, அவளின் மனதைப் போட்டு வாட்டும் வேதனையையும் அவமானத்தையும் போக்கவேண்டும் என்று எதிர்பார்த்த அவளின் அதே மனது, அதைச் செய்வானா என்கிற சந்தேகத்தையும் எழுப்பித் தீயில் வெந்தது.

கணவன் தன்னுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்கி விடக்கூடாது என்கிற தவிப்புடன், வைத்தவிழி வாங்காது, ஏக்கமும் எதிர்பார்புமாய் அவள் தர்சனையே பார்க்க, அவனோ காரில் இருந்து இறங்கும்போதே மனைவியைப் பார்த்து அழகாய் புன்னகைத்தான்.

மஞ்சள் நிற சுடிதாரில் மலர்ந்து நிற்கும் சூரியகாந்தியாய் மனதை மயக்கியவளை ரசித்தபடி நடந்து வந்தவனின் விழிகளில், அவள் அருகில் அமர்ந்திருந்த மகேஸ்வரி படவே இல்லை.

வெண்பாவை கண்டதும் தர்சன் எப்படி நடந்துகொள்வானோ என்று எண்ணிய அவருக்கும் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. தன் பயத்தை யாருக்கும் காட்டாதிருக்க முயன்றபடி, “தர்சா..! நீ அப்பா ஆகிவிட்டாயாமே..” என்றபடி, எழுந்துசென்று சந்தோசமாக அவனை வரவேற்றார். ஆனாலும், அவர் குரலில் ஒருவித நடுக்கம் ஒன்று ஓடி மறைந்தது.

அப்போதுதான் அவரைக் கண்டு, “ஹாய் அத்தை. கொழும்பிலிருந்து எப்போது வந்தீர்கள்?” என்று உற்சாகமாகக் கேட்டுக்கொண்டு வீட்டுக்குள் வந்தவனின் விழிகளில் பட்டாள் வெண்பா.

பார்த்த கணமே சிரிப்பு மறைய, நடை நிற்க அவன் முகம் இறுகியது. ஆத்திரத்தில் கழுத்து நரம்புகள் புடைக்க, கைகள் இறுக அவன் தேகம் முழுவதும் கோபாக்கினி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சினமும் சீற்றமுமாக உள்ளே பொங்கியதில் நெருப்புத் துண்டங்களாக மாறிவிட்ட விழிகள் இரண்டும் வெண்பாவை எரித்தன.

அக்கினிப் பிழம்புகளாய் அவளைத் தாக்கிய பார்வையில் உடல் முழுவதும் நடுங்க தானாக எழுந்துகொண்டது வெண்பாவின் தேகம்.

அதுவரை நேரமும் தாயின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை, நிலத்தில் விடப்பட்டதாலும், புதியவனைக் கண்டதாலும் வீறிட்டு அழத் தொடங்கியது.

ஆவேசம்மிக்க உணர்வுகளுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்த தர்சன் அந்த வீறிடலில் தன்னுணர்வு பெற்று அன்னையைப் பார்த்து முறைத்தான்.

செய்வதறியாது கைகளைப் பிசைந்த மஞ்சுளா எதையாவது சொல்லி மகனின் கோபத்தைக் குறைக்க எண்ணி, “அவளும் இரண்டாவது குழந்தைக்குத் தாயாகி இருக்கிறாள் தர்சன்...” என்று அவசரமாக ஆரம்பித்து, கணவன் வீட்டில் அவளை மதிப்பதில்லை என்பது உட்பட மகேஸ்வரி சொன்ன அனைத்தையும், மிக வேகமாகச் சொல்லிமுடித்தார்.

வெண்பா மீது அவருக்கு வெறுப்பே இருந்தாலும், தர்சனின் கோபத்தில் நியாயம் இருப்பது தெரிந்தாலும், கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணிடம் மகன் கை நீட்டுவதையோ அல்லது அநாகரீகமாக நடந்துகொள்வதையோ அவர் விரும்பவில்லை.

அவள் வாழ்க்கையில் நடந்தவைகளை அவள் முன்னிலையிலேயே தர்சனிடம் மஞ்சுளா சொன்னதில், வெண்பாவின் முகமோ கன்றிக் கருத்துச் சிறுத்துப் போனது. பின்னே, அவனுக்குச் சாபமிட்டுவிட்டுப் போனவள் இன்று அவளல்லவா அதை அனுபவிக்கிறாள்!

எரிக்கும் விழிகளில் ஏளனத்தையும் கலந்து அவளை நோக்கியவனின் பார்வையோ எல்லோரிடமும் சுழன்று கடைசியாக மனைவியிடத்தில் வந்து நிலைத்தது. அவள் விழிகளுக்குள் நுழைந்து அவள் மனதை ஆராய முற்பட்டது.

அவளோ பார்வையைத் தழைத்துக் கொண்டாள். ஆனாலும் வெண்பாவை வெளியே போ என்று சொல்லப் போகும் அவனுடைய சொல்லுக்காக அவள் செவிகள் கூர்மை பெற்றுக் காத்திருந்தன.

அந்த வீட்டுக்குள் வெண்பா அனுமதிக்கப்பட்டு, தான் அவமதிக்கப்பட்டதாக எண்ணியவள், தன்னுடைய மானத்தை, மரியாதையை, சுயகவுரவத்தைக் கணவனே காக்கவேண்டும் என்று எதிர்பார்த்தாள்.

இதுநாள் வரை, அவன் மனதில் வெண்பா இருக்கிறாள் என்று எண்ணி நித்தமும் வேதனையில் வெந்தவள், வெண்பாவை வெளியேற்றி அவன் மனதில் அவள் இல்லை என்று அவன் நிரூபிக்க வேண்டுமென்று எதிர்பார்க்க, அவனோ நொடியில் தன் முகப் பாவனையை மாற்றிக்கொண்டான்.

முகத்தில் சிரிப்பை படரவிட்டவன், “வா வெண்பா..” என்றான் இலகுவாக.

அதிர்ந்துபோய் விலுக்கென்று நிமிர்ந்த இலக்கியா, நம்ப முடியாமல் கணவனை வெறித்தாள். அவள் தலையில் இடியையே இறக்கிவிட்டானே!

எப்படி? எப்படி முடிந்தது அவனால்? அவனை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவளை சிரித்த முகமாக வரவேற்க எப்படி முடிந்தது? உங்களைப் பிடிக்கவில்லை என்று அவள் சொன்னதற்கே, அவனை அவமதித்ததாகச் சொல்லி அவளைத் திருமணம் செய்து தன் வெற்றியை நிலைநாட்டிய அதே கணவன், அவனையும் அவன் கட்டிய தாலியையும் தூக்கி எறிந்துவிட்டுப் போனவளை இன்முகமாக வரவேற்கிறான் என்றால் என்ன அர்த்தம்? அவன் இன்னும் அவளை மறக்கவில்லை என்பதா? அவள் திரும்பி வந்ததே போதும் என்று எண்ணுகிறானா?

எது எப்படி இருந்தாலும் அவன் மனதில் வெண்பா இன்னும் இருக்கிறாள்!

அப்படியானால் அவனுக்கு அவள் யார்? அவன் மனதில் அவளுக்கான இடம் என்ன?

அவனுடைய உடல் தேவைகளைத் தீர்ப்பதற்காக மனைவி என்கிற பெயரில் வரவழைக்கப்பட்டவளா? அல்லது ஊருக்கு முன்னிலையில் எனக்கும் மனைவி இருக்கிறாள் என்று காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட காட்சிப்பொருளா?

அவன்மேல் கரைகாணா காதல் கொண்டுவிட்ட நெஞ்சம் அவமானக் கன்றலில், கதறித் துடித்தது.

வெண்பாவுமே அதிர்ந்துபோய்த் தர்சனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுடைய சுபாவத்துக்குத் தர்சன் அவளை வெட்டிக் கூறு போட்டிருக்கவேண்டும். குறைந்த பட்சம் கழுத்தைப் பிடித்தாவது வெளியே தள்ளியிருக்கவேண்டும். இது எதையும் செய்யாமல், அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்ததும் அல்லாமல் வா வெண்பா என்றும் வரவேற்கிறானே. நம்பவே முடியாத அதிர்ச்சியில் சிலையாகி நின்றாள்.

அவள் மட்டுமல்ல, மஞ்சுளா உட்பட ராகினி, ஆரணி எல்லோருமே அவன் காட்டிய புதுமுகத்தில் அதிர்ச்சியும் வியப்புமாக அவனையே நோக்கினர்.

மகேஸ்வரியோ அதுவரை நேரமும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை அப்போதுதான் வெளியேற்றினார். உடனேயே அங்கு நிலவிய அசாதாரணச் சூழ்நிலையை மாற்ற எண்ணி, “எப்படி இருக்கிறாய் கண்ணா? வேலைகள் எல்லாம் எப்படிப் போகிறது?” என்று விசாரித்து, பேச்சை மாற்ற முயன்றார்.

அவரைப் பார்த்துப் புன்னகைத்து, “எனக்கு என்ன அத்தை? மிக நன்றாக இருக்கிறேன். என்மேல் உயிரையே வைத்திருக்கும் மனைவி, அம்மா அப்பா, அண்ணா அண்ணிகள் என்று சந்தோசமாக இருக்கிறேன். போதாக்குறைக்கு விரைவில் நான் அப்பாவும் ஆகப்போகிறேன். எங்கள் குழந்தையின் ராசியாக்கும் அடுத்த மாதம் வவுனியாவில் இன்னொரு கடை திறக்கப் போகிறேன்.” என்றபடி, இலகுவாக நடந்துவந்து இலக்கியாவின் அருகில் அமர்ந்துகொண்டான். அது மட்டுமல்லாமல் அவள் பக்கம் இருந்த கையைத் தூக்கி அவளின் தோளைச் சுற்றிப் போட்டும் கொண்டான்.

அவனது செயலிலும் பேச்சிலும், உடலும் மனமும் அதிர வெறுப்பும் வேதனையுமாக அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு, தான் தன்னுடைய மணவாழ்க்கையில் தோற்றுவிட்டது புரிந்தது. காதலிலும்!

அவள் ஏழை வீட்டுப் பெண்ணாக இருக்கலாம். ஆனால், சுயமரியாதை அற்றவள் அல்லவே! தன்மானம் அற்றவள் அல்லவே!

அதற்குமேலும் அங்கே இருக்கமுடியாமல் மனம் கொந்தளிக்க, விருட்டென்று எழுந்தாள் இலக்கியா.

அப்படி வேகமாக எழுந்ததில் தலைசுற்றிவிட, நிற்கமுடியாமல் தடுமாறியவள் தன்னை அறியாமலேயே பற்றுக்கோலாகக் கணவனின் தோளையே பற்றிக்கொண்டாள்.

“பார்த்து பார்த்து..” என்று பதறி அவளைப் பற்றினான் தர்சன். “உடம்பு இருக்கும் நிலையில் எதற்கு இவ்வளவு அவசரம்?” என்று அக்கறையோடு அவன் கடிய, ‘ஆமாமாம்! இனி உனக்கு நான் எது செய்தாலும் பிழையாகத்தானே தெரியும்!’ என்று உள்ளம் கொதித்தது அவளுக்கு.

தலை சுற்றலோடு புண்ணாகிப்போன மனதின் வலியும் சேர்ந்துகொண்டதில், கண்கள் இருட்டத் தொடங்கியது. மயங்கி விழுந்துவிடப் போகிறோமோ என்று அஞ்சி, தலையை அவள் ஒரு கையால் பற்ற, “தலை சுற்றுகிறதா?” என்று கனிவோடு கேட்ட தர்சன், அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.

அவனிடமிருந்து விலுக்கென்று விலகத்தான் மனமும் உடலும் போராடியது. ஆனால், பாறாங்கல்லாய் கனத்த தலையோ அவளையும் மீறி அவன் நெஞ்சில் சாய்ந்தது.

தன் இயலாமையை எண்ணி கண்கள் கரிக்கப் பார்க்க, எல்லோரின் முன்னும் அழுதுவிடக்கூடாது என்று பெரும் பிரயத்தனப் பட்டுத் தன்னை அடக்கப்பார்த்தாள் இலக்கியா.

அதில் கசங்கித் தெரிந்த அவள் முகத்தை நோக்கிவிட்டு “களைத்துத் தெரிகிறாய். வா.. வந்து கொஞ்சநேரம் படுத்திரு..” என்றுவிட்டு, “அம்மா! நாங்கள் மேலே போகிறோம். இவளுக்கு எதையாவது குடிக்கக் கொடுத்துவிடுங்கள்.” என்றவன், மனைவியைக் கைப்பிடியிலேயே அழைத்துச் சென்றான்.

வாயை திறந்தாலே கதறிவிடுவோம் என்கிற நிலையில் இருந்தவளின் நெஞ்சமோ, என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது, இதில் படுக்கை ஒன்றுதான் இல்லாத குறை என்று கொதித்தது.

ஆனாலும், அவனிடம் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறமாதிரி நான்கு கேள்விகள் கேட்கவேண்டுமே! அதற்கு அவனுடனான தனிமை வேண்டுமே! எனவே அவனோடு மாடிக்கு நடந்தாள்.

அறைக்குள் நுழைந்ததுமே, தலைச் சுற்றலும் சற்றே அடங்கியிருக்க, “போதும் உங்கள் நடிப்பு!” என்று சீறியவள், வெறுப்பும் ஆத்திரமுமாக அவனை உதறித் தள்ளினாள்.

மனைவியின் திடீர் கோபத்தில் குழப்பத்தோடு அவளைப் பார்த்தான் தர்சன்.

“நடிப்பா? நான் எதற்கு நடிக்கவேண்டும்?” என்று புரியாமல் அவன் கேட்க,

“அப்போதுதானே, ‘அடடா, இந்த நல்லவனைத் தவற விட்டுவிட்டோமே’ என்று, அங்கே கீழேயிருக்கிற அவள் வருந்துவாள்.” என்றாள் லக்கி ஏளனமாக.

பார்வை கூர்மை பெற, “எவள்?” என்று கேட்டான் தர்சன்.

“ஏன்? என் வாயால் அவளின் பெயரை கேட்பதில் அவ்வளவு ஆவலோ?”

“உளறாதே லயா!” என்றான் தர்சன் இறுக்கமான குரலில்.

“அவளின் பெயரைச் சொன்ன இந்த வாயால் இனிமேல் என் பெயரைச் சொல்லக்கூடாது!” என்று தன்னை மறந்து சீறினாள் இலக்கியா. “திருமணமாகி மூன்றுமாதம் கழித்துத்தான் என் பெயரே உங்கள் வாயில் வந்தது. ஆனால், அவளைக் கண்டதும் ‘ வா வெண்பா’ வா? ஓடிப்போனவளைப் பார்த்து பல்லைக்காட்ட வெட்கமாக இல்லை உங்களுக்கு?” என்றாள் ஆத்திரத்தோடு.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
“ப்ச்! எதற்கு இப்படிக் கத்துகிறாய். மெல்லப் பேசு!” என்றான் அவன் சிடுசிடுப்பாக.

“ஏன்? சத்தமாகப் பேசினால் அவளுக்கு உங்களைப்பற்றித் தெரிந்துவிடும் என்று பயமா?”

“அடுத்தவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று நான் என்றுமே கவலைப்பட்டது இல்லை.” என்றான் அவன் அழுத்தமான குரலில்.

“அது என்னவோ உண்மைதான்! நீங்கள் என்றைக்குமே அடுத்தவர்களுக்கும் ஒரு மனது இருக்கும், அதிலும் ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் இருக்கும் என்று சிந்திக்காத மனிதர் ஆச்சே!” என்றாள் குத்தலாக.

மனைவியை முறைத்தான் தர்சன். “அப்படி உன்னைப் பற்றி, உன் ஆசைகளைப் பற்றி நான் யோசித்ததே இல்லையா?”என்று அவன் கேட்டபோது, அதற்கும் பதிலாக எதையோ அவள் சொல்லத் தொடங்கவும், கையை முன்னால் நீட்டித் தடுத்தான் தர்சன்.

“பரவாயில்லை. நான் உன்னைப்பற்றிச் சிந்திக்காதவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.” என்று மரத்த குரலில் சொன்னவன், “இப்போ உனக்கு என்ன பிரச்சனை? அதை மட்டும் சொல்லு!” என்றான் அழுத்தமாக.

“என் பிரச்சனை என்னவென்று தெரிந்தால் உடனேயே தீர்த்து வைத்துவிடுவீர்களோ?” என்று மறுகேள்வி கேட்டாள் அவள்.

“சொல்லு! தீர்த்து வைக்கிறேன்.”

“இந்த வீட்டுக்குள் வந்திருக்கிறாளே அவளை உடனேயே வெளியே போகச் சொல்லுங்கள்!”

“அதெப்படி சொல்லமுடியும்?” என்று அத்தையைக் கருத்தில் கொண்டு அவன் கேட்க,

“ஏன் சொல்லமுடியாது?” என்று கொதித்தாள் அவள்.

“அந்தளவுக்கு அவளை உங்களால் இன்னும் மறக்க முடியவில்லையோ.. திரும்பி வந்ததே போதும் என்று நினைக்கிறீர்களோ?” என்றாள் குத்தலும் குமுறலுமாக.

மனைவியை வெறித்தான் தர்சன். இன்னுமா அவன் மனதை அவள் அறிந்து கொள்ளவில்லை. எதிலேயோ தோற்ற உணர்வு அவனைத் தாக்கியது. “இந்தக் கேள்விக்கு நான் எத்தனையோ முறை பதில் சொல்லிவிட்டேன்!” என்றவன் தொடர்ந்தான்.

“இது என் அம்மா அப்பாவின் வீடு. அதில் யாரை உள்ளே விடவேண்டும் விடக்கூடாது என்று முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தான் உண்டு. அதோடு, வெண்பா அப்பாவின் தங்கை மகள். அவளை வெளியே போ என்று என்னால் சொல்ல முடியாது.” என்று விளக்கினான் தர்சன்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அவளை இந்த வீட்டிலேயே வைத்திருக்க இது ஒரு சாட்டா?

“அப்படி என்றால் வாருங்கள், நாம் வெளியே போகலாம்.” என்றாள் அவன் மனைவி பட்டென்று.

நம்ப முடியாத அதிர்ச்சியோடு மனைவியைப் பார்த்தான் தர்சன். வெண்பாவை கண்டதினால் மனைவிக்கு உண்டான கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்தே, அவ்வளவு நேரமும் பொறுமையாகப் பேசினான் அவன். ஆனால், அதற்காக அவள் இப்படிக் கேட்பாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. மெல்லிய கோபமும் எட்டிப் பார்த்தது.

“என்ன அர்த்தத்தில் இப்படிச் சொல்கிறாய்?” பார்வையில் கூர்மையைத் தேக்கிக் கேட்டான் தர்சன்.

“நாம் தனியாகப் போகலாம் என்பதுதான் அர்த்தம். இது உங்களின் அப்பாவின் வீடு என்பதால் தானே உங்களால் அவளை வெளியே போ என்று சொல்ல முடியவில்லை. நானும் வாய்மூடி நிற்கவேண்டி இருக்கிறது. இதுவே நம் வீடாக இருந்தால் என் விருப்பம் இல்லாமல் எவளும் உள்ளே வரமுடியுமா? நீங்களும் தான் கண்ட நொண்டிச்சாட்டைச் சொல்லி என்னிடம் தப்பிக்க முடியுமா? அதனால்தான் சொல்கிறேன். வாருங்கள், நாம் தனியாகப் போகலாம்!” என்றாள் அப்போதும் உறுதியான குரலில்.

“என்ன? என் குடும்பத்தில் இருந்து என்னைப் பிரித்துத் தனிக்குடித்தனம் போகும் திட்டமா?” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டான் அவன்.

“ஆமாம்! தனிக்குடித்தனம் தான். அதிலே என்ன தப்பு? கூட்டுக் குடும்பமாக இருந்தால் அங்கிருக்கும் எல்லோரினதும் நலனில் அக்கறை கொண்டுதான் ஒரு முடிவை எடுக்கவேண்டும். இந்த வீட்டில் அப்படியா நடக்கிறது? அவரவர் அவரவருக்குப் பிடித்தமாதிரி நடப்பார்களாம். அதை மற்றவர்கள் பொறுத்துக்கொண்டு போகவேண்டுமாம். எந்த ஊர் நியாயம் இது?” என்று வெடித்தாள் லக்கி.

அவளைப் பற்றி, அவளின் மனதைப் பற்றிச் சற்றும் யோசிக்காமல்தானே வெண்பாவை எல்லோருமாகச் சேர்ந்து- கணவன் உட்பட உள்ளே கூப்பிட்டார்கள்!

“அம்மா சொன்னவைகளைக் கேட்டுவிட்டும் புரியாமல் பேசாதே! அவள் என்ன இங்கேயே தங்கிவிடவா போகிறாள். ஒரு மாதம் தானே. கொஞ்சம் பொறுத்துக்கொள்.” என்றான் அவன்.

“ஒரு மாதம் என்ன, ஒரு நிமிடம் கூடப் பொறுக்கமாட்டேன். நான் எதற்காகக் கண்டவளையும் பொறுத்துப் போகவேண்டும்?”

“அவளுக்காக இல்லாவிட்டாலும் அத்தையைப் பற்றிக் கொஞ்சம் யோசி. அவர் பாவம் இல்லையா? மகளை வெளியே போ என்று சொன்னால் கவலைப்பட மாட்டாரா?”

ஊரில் இருக்கும் அத்தனை பேரைப் பற்றியும் கவலைப்படுகிறவன் கட்டிய மனைவியைப் பற்றி மட்டும் யோசிக்க மறந்து போனானே.. நெஞ்சம் புண்ணாகியது அவளுக்கு.

“அவர் பாவம் என்றால், உடனேயே.. இன்றே அவர்கள் இருவருக்குமாக ஒரு வீட்டை பார்த்து எடுத்துக் கொடுங்கள். அது உங்களால் முடிந்த ஒன்றுதானே!” என்று தன் பிடியில் இருந்து சற்றும் இறங்காமல் நின்றாள் லக்கி.

மீண்டும் மனைவியின் மீது கோபம் வந்தது தர்சனுக்கு. “அப்படிச் செய்வதற்கும் வீட்டை விட்டு வெளியே போங்கள் என்று சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. அதனால் இந்த ஒருமாதம் நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்!” என்றான் அவன் சற்றே அழுத்தி..

அந்த அழுத்தத்தில் லக்கியின் பொறுமை பறந்தது. “நீங்கள் வேண்டுமானால் ஒரு மாதம் என்ன, காலம் முழுமைக்கும் வேண்டும் என்றாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் என்னால் முடியாது. அவள் இருக்கும் இந்த வீட்டில் ஒரு கணமும் நான் இருக்கமாட்டேன். அதனால் அவர்களை வெளியேற்றுங்கள்!” என்றாள் அவளும் அழுத்தமாக.

“முடியாது என்று சொன்னால்..?” என்று, அவன் கூர்மையான குரலில் கேட்டபோது,

“அடுத்த முடிவு நாம் தனிக்குடித்தனம் போவதுதான்!” என்றாள் அவள், உறுதியான குரலில்.

“ஆக, இந்த வீட்டிலிருந்து, என் குடும்பத்திடம் இருந்து என்னைப் பிரித்துக்கொண்டு போவதுதான் உன் திட்டமா?” என்ற கணவனை வெறித்தாள் இலக்கியா.

அவன் அவளைப் புரிந்துகொண்டது அவ்வளவு தானா? இவனிடமா தன் மனதைப் பறிகொடுத்தாள்? ஏற்கனவே திருமணம் ஆனவன் என்று தெரிந்தும், அந்தப் பெண்ணை மனதில் சுமக்கிறான் என்று அறிந்தும், குருட்டுத் தனமாக அவன்மேல் காதல் கொண்டாளே, அவனைப் பிரியவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் தவிக்கிறாளே, அதற்குத் தண்டனையாக அவளுக்கு இந்தப் பழிச்சொல் அவசியம்தான் என்று கசப்போடு எண்ணினாள்.

இனியும் அவனிடம் போராடுவதற்கு எதுவும் இல்லை என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. மனதைச் சூழ்ந்த விரக்தியை விழுங்கியபடி, “சரி! நீங்கள் உங்கள் குடும்பத்தோடு ஒற்றுமையாகவே இருங்கள். உங்களை நான் பிரிக்கவில்லை. ஆனால், இந்த வீட்டில், அவள் இருக்கும் இடத்தில் நான் இருக்கமாட்டேன். நான் என் அம்மா வீட்டுக்குப் போகிறேன்!” என்றாள், அந்தப் பிரிவை எண்ணியதால் உண்டான உயிர்போகும் வலியை மறைத்து.

“ஓ..! இப்போதுதானே எல்லாம் புரிகிறது. அன்று உன் அம்மா வீட்டுக்கு அனுப்ப மறுத்ததனால், இன்று இப்படியொரு பிரச்சனையை ஆரம்பித்து அங்கே செல்ல திட்டமா?” என்று குற்றம் சாட்டினான், அவளுடைய அருமைக் கணவன்.

மீண்டும் மனச்சாட்சியே இல்லாமல் அவளையே குற்றம் சாட்டுகிறானே! மனம் கைந்து நைந்து போனது அவளுக்கு! “திட்டம் போடுவது, தரமற்ற செயல்களைச் செய்வது எல்லாம் உங்களைப் போன்றவருக்குத்தான் சரி. எனக்கல்ல! என்னை என்னவென்று நினைத்தீர்கள்? உங்களின் முதல் மனைவி இருக்கும் அதே வீட்டில் இருக்குமளவுக்குச் சுயமரியாதை அற்றவள் என்றா? அல்லது, நீங்கள் செய்யும் கேவலமான செயல்களை எல்லாம் பொறுத்துப் போக முதுகெலும்பு அற்றவள் என்றா?” என்று ஆத்திரத்தோடு கேட்டவள், “உங்களுக்கு வேண்டுமானால் இரண்டு மனைவிகளோடும் ஒரே வீட்டில் இருக்கமுடியுமாக இருக்கலாம். ஆனால் என்னால் முடியாது!” என்றாள் தொடர்ந்து.

“சீச்சீ! என்ன பேச்சிது? அவள் இப்போது இன்னொருவனின் மனைவி. இரண்டு குழந்தைகளின் தாய்! அவளைப் பற்றி இப்படியெல்லாம் கேவலமாகப் பேச எப்படி வாய் வந்தது உனக்கு?” என்றான் அவளைக் கேவலமாக நோக்கி, குரலிலும் அதே தொனியை கலந்து.

அவள் சொன்னது தப்புத்தான்! ஆனாலும், அவன் சொன்ன அந்த ‘சீச்சீ’ யில் அவளுக்கு எல்லாமே விட்டுப் போனது. இனி பேசுவதற்கோ, சொல்வதற்கோ, விளக்குவதற்கோ எதுவுமே இல்லை.
 

Vishakini

Moderator
Staff member
ஆனாலும், சொல் ஒன்று செயல் ஒன்று என்று இருப்பவனின் விழிகளை நேராகப் பார்த்து, “அன்றொருநாள், ‘உனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீ என்னிடம்தான் வரவேண்டும்’ என்று சொன்னீர்கள். மனைவியின் தேவைகளைக் கணவன்தான் பூர்த்திச் செய்யவேண்டும் என்றும் சொன்னீர்கள். நீங்கள் சொன்னபடியே என் பிரச்சனையை உங்களிடம் சொல்லிவிட்டேன். தீர்த்துவைக்க முடியுமா முடியாதா?” என்று அவள் கேட்டபோது, முகத்தில் அதிர்ச்சி துலங்க வாயடைத்துப்போய் நின்றான் தர்சன்.

சுதனுக்குச் சைக்கிள் வாங்கிக் கொடுப்பதற்காக அவள் வேலைக்குப் போகவா என்று கேட்டபோது, கோபப்பட்டு அவன் அப்படிச் சொன்னான் தான். இந்த நிமிடம் வரை அவன் சொன்னதில் எந்த மாற்றுக் கருத்தும் அவனுக்கு இல்லைதான். மனைவியின் பொறுப்பு கணவனுக்குத் தானே! ஆனால், எதை எதோடு இணைக்கிறாள் அவன் மனைவி?

கணவனின் நிலையைக் கண்டவளின் இதழ்கள் விரக்தியோடு ஏளனமாக வளைந்தது. “முடியாதில்லையா?” என்று கேட்டுவிட்டு, அதற்குமேலும் அங்கே நிற்கப் பிடிக்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அப்படி வெளியேறியவள், அதன்பிறகு அவன் வேலைக்குக் கிளம்பும் வரையிலும் அவன் கண்ணில் படவே இல்லை.

தர்சனும் மற்றவர்களுக்குச் சந்தேகம் வராத வகையில் அவளைத் தேடிப்பார்த்தான். பரந்த தோட்டத்துடன் கூடிய அந்தப் பெரிய வீட்டில் ஒருவர் வேண்டுமென்றே ஒளிந்துகொண்டால் அவரைக் கண்டுபிடிப்பது என்பது முடியாத காரியமே! எனவே, மனமே இல்லாமல் வேலைக்குச் சென்றான்.

அவன் சென்ற சிறிது நேரத்திலேயே, தோட்டத்தில் நின்ற முருங்கை மரத்தில் முருங்கை இலைகளைப் பறித்துக்கொண்டிருந்த மஞ்சுளாவைத் தேடிவந்தாள் இலக்கியா.

“என்னம்மா?” அழுததில் சிவந்திருந்த மருமகளின் முகத்தை ஆராய்ந்தவாறே இதமான குரலில் விசாரித்தார் மஞ்சுளா.

“நான்.. நான் அம்மா வீட்டுக்கு போகவா?” அவரின் முகம் பாராமல் கேட்டாள் லக்கி.

பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தவருக்கு, இந்தச் சிக்கலை எப்படி விடுவிப்பது என்று தெரியவில்லை.

ஆனாலும், முடிந்தவரை மருமகளிடம் தன் நிலையை விளக்க எண்ணி, “உன் நிலை எனக்குப் புரிகிறது லக்கி. ஆனால், வயிற்றில் பிள்ளையோடு வீட்டுக்கு வந்தவளை போ என்று சொல்ல முடியவில்லை. இன்று நீ இந்த வீட்டுக்கு மருமகளாக வந்திருக்கிறாய் என்றால் அதற்குக் காரணம் மகி. அவளின் முகத்துக்காக எல்லாவற்றையும் பொறுத்துப் போகவேண்டி இருக்கிறது. மற்றும்படி எனக்கும் வெண்பாவை பிடிக்கவில்லை.” என்று இயம்பினார்.

அவர் என்னதான் விளக்கங்கள் சொன்னாலும், அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகத் தோன்றினாலும் வெண்பா இருக்கும் வீட்டில் அவளால் இருக்க முடியாது. அதோடு, தன்னை மதியாத, தன் நேசத்தை உணராத, இன்னும் இன்னொருத்தியை மனதில் சுமப்பவனின் அருகில் அவளால் இருக்கவே முடியாது.

அவள் அமைதியாகவே நிற்க, “ஆனாலும், நீ உன் அம்மா வீட்டுக்குபோய்க் கொஞ்சநாள் இருந்துவிட்டு வா. உனக்கும் உன் அம்மாவின் கையால் சாப்பிடக்கொள்ள விருப்பமாக இருக்கும் தானே.” என்றார் இதமான குரலில். என்ன இருந்தாலும் அவரும் பெண்தானே! கட்டிய கணவனின் முதல் மனைவியை, அவள் இன்னொருவனின் மனைவி ஆகிவிட்ட போதிலும் அவளைப் பார்க்கவே எந்தப் பெண்ணும் சம்மதிக்கமாட்டாள். அப்படி இருக்கையில் அந்தப் பெண் இருக்கும் வீட்டில் இருப்பது என்பது முடியாத காரியம் அல்லவா!

“சரி அத்தை..” என்றவள் போய்வருகிறேன் என்று சொல்லாமலேயே திரும்பினாள்.

“தர்சனுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் மஞ்சுளா.

பதில் சொல்ல இயலாமல் அவள் நிற்க, “சரி, நான் சொல்லிவிடுகிறேன். நீ உனக்குத் தேவையானவைகளை எடுத்துவை. நான் இதோ வருகிறேன்.” என்று மருமகளை அனுப்பிவைத்தார் மஞ்சுளா.

உள்ளே சென்றவளுக்கு எதையும் எடுத்து வைக்கவே பிடிக்கவில்லை. கணவனைப் பிரியப் போகிறோமே என்று எண்ணிக் கண்ணீர்தான் வந்தது.

அவளை, அவளின் உணர்வுகளை மதிக்காத கணவனோடு வாழப்பிடிக்காமல் தான் வெளியே போக நினைக்கிறாள். பிறகு எதற்கு இந்தக் கண்ணீர்? எதற்கு இந்த உயிரையே பிரியும் வேதனை? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

கையில் கிடைத்தவைகளை எடுத்து ஒரு பாக்கில் திணித்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் கணவனையே நினைவூட்டின.

அதோ, அவர்களின் கட்டிலில் இருக்கும் அந்த இரண்டு தலையணைகளையும் தான் முதுக்குக் கொடுத்துவிட்டு, கால்நீட்டி அமர்ந்து, அவள் நடமாட்டத்தை ரசிப்பான்.

அந்த அறையின் ஒரு மூலையில் இருக்கும் மேசையில்தான் கணணியோடு மல்லுக்கட்டுவான்.

ஒரு கையைத் தலைக்குப் பின்னால் மடித்து வைத்தபடி, சோபாவில் இலகுவாக அமர்ந்துகொண்டு, டீப்பாயின்மேல் கால்களைப் போட்டபடிதான் தொலைக்காட்சியைப் பார்ப்பான். அலமாரிக்கு அருகில் இருக்கும் ஸ்டாண்ட்டில் தான் உடைகளைக் களைந்து போடுவான். அதோ, அன்று காலையில் அவன் அணிந்திருத்த ஷர்ட் கூடத் தொங்குகிறதே.. அழுகையை அடக்கமுடியாமல் ஓடிப்போனவள், அந்த ஷர்ட்டை கையில் எடுத்தாள்.

அதில் கணவனின் வாசனை வீசவே தாங்கமுடியாமல் அதிலேயே முகத்தைப் புதைத்துக் கண்ணீர்விட்டாள் இலக்கியா. கணவனையே அணைப்பதாக எண்ணினாளோ என்னவோ, சற்றுநேரம் தன் நெஞ்சோடு அதைச் சேர்த்தணைத்துக் கொண்டாள்.

கீழே மஞ்சுளாவின் குரல் கேட்கவும், கணவனின் நினைவுகளில் இருந்து சிரமத்துடன் தன்னை மீட்டுக்கொண்டவள், அவனது ஷர்ட்டை எடுத்த இடத்திலேயே மீண்டும் வைத்தாள். அவனுடைய அலமாரியைத் திறந்து, அங்கே ஒழுங்காக அவள் அடுக்கி வைத்திருந்த அவனுடைய உடைகளில் அடியில் இருந்த ஒன்றை உருவி தன்னுடைய பாக்கில் வைத்துக்கொண்டாள்.

நெஞ்சு பாறாங்கல்லாய் கனக்க, கடைசியாக என்றெண்ணி அந்த அறையை விழிகளால் வலம்வந்து நெஞ்சுக்குள் பதித்தவள், வேகவேகமாகக் கீழே இறங்கிச் சென்றாள்.

எல்லாம் எடுத்தாயா, கவனமாக இரு, ஏதும் தேவை என்றால் சொல்ல மறக்காதே என்று எதையெதையோ மஞ்சுளா சொல்லிக்கொண்டு அவளோடு கூட நடக்க, பெயருக்குத் தலையை ஆட்டிக்கொண்டு வாசலுக்கு நடந்தாள் இலக்கியா.

அங்கே வாசலில், அவளுக்காகக் கார் தயாராக நின்றது. வேறு யாரினதும் முகத்தில் முழிக்கும் சந்தர்ப்பம் அமையாததில் நிம்மதியாக உணர்ந்தவள், வாயை திறந்து விடைபெற முடியாமல் தொண்டை அடைத்ததில், தலையை அசைத்து விடைபெற்றாள்.

அவரும், அப்போதைக்கு வேறு எதையும் சொல்லாது , “கவனமாகப் போய்வா” என்று அவளை அனுப்பிவைத்தார்.
 
Top Bottom