• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 31

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-31

இரண்டு அறைகள், ஹால் என்று எல்லா வசதிகளுடன் கூடிய அழகான அளவான வீட்டில், அனைத்துத் தளபாடப் பொருட்களும் போடப்பட்டிருந்தது. இதில், அவர்களின் உடைகள் முதல்கொண்டு அனைத்துப் பொருட்களும் கூட அங்கிருந்தன.

“வீடு பிடித்ததா?” வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு வந்த மனைவியிடம், ஹாலில் அமர்ந்திருந்த தர்சன் கேட்டான்.

“பிடிக்காமல் என்ன அத்தான்? மிக மிகப் பிடித்தது. ஆனால், எதற்காக இங்கே, அதுவும் வவுனியாவுக்கு வந்திருக்கிறோம்?”

அவள் முகத்திலேயே விழிகளைப் பதித்து, “நீதானே உன் பிரச்சினையைச் சொல்லி, தீர்த்துவைக்க முடியுமா என்று கேட்டாய். அதைத்தான் தீர்த்து வைத்திருக்கிறேன்.” என்று நிதானமாக அவன் சொன்னபோது, சற்றுநேரம் அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“எ..என்னத்தான் சொல்கிறீர்கள்?” குரல் உடைய கேட்டாள் லக்கி.

“எல்லாம் சொல்கிறேன். அதற்கு முதலில் போய் முகம் கழுவிக்கொண்டு வா. களைத்துத் தெரிகிறாய்..” என்றவனை அவள் முறைக்க, அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“மூன்று மணித்தியாலம் பயணம் செய்ததில் ஓய்ந்து தெரிகிறாய் என்றுதான் சொன்னேன். மற்றும்படி நீ நோயாளி இல்லைதான்.” என்றான் அவன் விரிந்த புன்னகையோடு.

வேகமாக உள்ளே சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவளின் விழிகள், அங்கே டீபாயின் மேல் வீற்றிருந்த தேநீரைக் கண்டதும் வியப்பால் விரிந்தன.

அதைக் கவனித்துவிட்டு, “வரும்போதே வாங்கி வந்தேன்..” என்றவன், ஒரு கப்பை எடுத்து அவளிடம் நீட்டினான்.

இப்போது இதுவா முக்கியம் என்று மனம் பரபரத்தாலும், குடிக்காமல் விடமாட்டான் என்றறிந்து, கப்பை வங்கி ஒரு மிடரை வேகமாக அருந்திவிட்டு, “இனியாவது சொல்லுங்கள் அத்தான்.” என்றாள், அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியாமல்.

“இனிமேல் இங்கேதான் இருக்கப் போகிறோம். அதனால்தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கிறோம்.” என்றான் அவன்.

“ஏ..ஏன்?” திகைப்போடு அவள் கேட்க,

“உனக்காகத்தான். உன் சந்தோசத்துக்காகத்தான்!” என்றான் அவன் உறுதியான குரலில்.

அதைக் கேட்டவளின் விழிகளில் சட்டென்று என்று நீர் திரண்டது.

எப்போதுமே அவனது பிடியிலிருந்து, பிடிவாதத்திலிருந்து இறங்கி வராதவன், எதற்காகவும், யாருக்காகவும் தன் முடிவுகளை மாற்றிக் கொள்ளாதவன், இன்று அவளைத்தேடி அவள் வீட்டுக்கு வந்ததே பெரிய விஷயம்! அப்படியிருக்க, அவளுக்காகத் தனி வீடு எடுத்திருக்கிறானே! அதுவும் வவுனியாவில்!

அதுவும் பெற்றுவளர்த்த பெற்றவர்களை விட்டு, கூடப்பிறந்த சகோதரர்களை விட்டு, சொந்தம், நட்பு, ஊர் என்று அனைத்தையும் விட்டு வந்திருக்கிறானே!

அன்று, ‘என்னை என் குடும்பத்திலிருந்து பிரிக்கும் திட்டமா?’ என்று கேட்டு அவளைக் குற்றம் சாட்டியவன்,இன்று தானாக அந்தக் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்திருக்கிறானா?

இதெல்லாம் அவளுக்காகவா?

தன்னை, தன் மனதை அவன் புரிந்து கொள்ளவில்லை என்று நித்தமும் தவித்தாளே, அவனானால் அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவனுடைய சொந்தங்களை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு வந்திருக்கிறானே!

நெஞ்சம் கர்வம் கொண்டு விம்மியது!

இது போதுமே அவளுக்கு!

ஆனந்தத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, பாய்ந்துவந்து கணவனைக் கட்டிக்கொண்டாள் இலக்கியா. “நாம் நம் வீட்டுக்கே போகலாம் அத்தான்..” என்றாள் இதழ்களில் பூத்த புன்னகையோடு.

அவளுக்காக இவ்வளவு செய்த கணவனுக்காக அவள் எதுவும் செய்வாளே! அப்படியிருக்க அந்த வெண்பாவை ஒருமாதம் பொறுத்துக்கொள்ள மாட்டாளா?

அவனது கைகளும் தன்னியல்பாய் மனைவியை அணைத்துக்கொள்ள, “ஏன்? நீதானே நாம் தனியாக வரவேண்டும் என்றாய்.” என்று வியப்போடு கேட்டான்.

“அது… நான் தெரியாமல்.. உங்களைப் புரிந்துகொள்ளாமல்..” என்று அவள் இழுக்க,

“அப்படியென்றால்.. இப்போது நீ என்னைப் புரிந்துகொண்டாயா?” என்று விழிகளில் கூர்மையோடு அவளைப் பார்த்துக் கேட்டான் தர்சன்.

இல்லையே!

இன்னும் கணவனை அவள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையே!

பல குழப்பங்கள் உண்டுதான்!

ஆனால், வெண்பாவைக் கண்டதும் தோன்றிய அந்தப் பயம் இல்லை!

கணவனின் அன்பில் அவள் கொண்ட அவநம்பிக்கை இப்போது இல்லவே இல்லை!

அதை அவனுக்கு உணர்த்திவிட எண்ணி, “உங்களை நான் முழுதாக நம்புகிறேன் அத்தான். உங்கள் மனதில் நான் மட்டும்தான் இருக்கிறேன்!” என்று, அவளும் அவன் விழிகளைப் பார்த்துச் சொன்னபோது, அவன் உதட்டோரம் ஏளனப் புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.

குழப்பத்தோடு அவள் பார்க்க, “என் மனதில் நீதான் இருக்கிறாய் என்று, உனக்கு இப்போதுதான் தெரிந்ததா?” என்று கேட்டான் தர்சன்.

ஏதோ, தினமும் அவளோடு அவன் மனம் விட்டுப் பேசியது போலவும், அவள்தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லை போலவும் சொல்கிறானே.

“என்றாவது அதை நீங்கள் வாய்விட்டுச் சொல்லி இருக்கிறீர்களா?” மனத்தாங்களுடன் கேட்டாள் அவள்.

மனைவியைச் சற்று நேரம் பார்த்துவிட்டு எழுந்துகொண்டான் தர்சன். “எதையும் வாய்விட்டுச் சொன்னால்தான் புரிந்துகொள்ள முடியும் என்றால், அங்கே புரிதல் இல்லை என்று அர்த்தம் லயா. கணவனின் மனதை மனைவி புரிந்துகொள்ள வாய்ச்சொல்தான் வேண்டும் என்றால், அங்கே அந்நியோன்யமும் அன்பும் இல்லை என்று அர்த்தம்.” என்றான் அவன் உணர்வுகளைக் காட்டாத குரலில்.

அதிர்ச்சியோடு அவள் அவனைப் பார்க்க, “உன்னைக் காதலிக்கிறேன், நேசிக்கிறேன், நீதான் என்னுயிர் என்று வாயால் சொன்னால்தான் காதலா? என் அன்பே, என்னுயிரே என்று உருகினால் தான் நேசமா? அப்படிக் காதல் வசனங்கள் பேச எனக்குத் தெரியாது என்பதாலேயே எனக்கு உன்மீது அன்பில்லை என்று அர்த்தமா? என் மனதில் நீயில்லை என்று சொல்வாயா? இவ்வளவு நாள் வாழ்க்கையில், என்னுடைய ஒரு செயல் கூடவா என் அன்பை உனக்குக் காட்டவில்லை? ஒருநாள், ஒரு நிமிடம் கூடவா அதை நீ உணரவில்லை?” என்று அவன் கேட்டபோது, விக்கித்து நின்றாள் இலக்கியா.

“நான் கோபக்காரன் தான். முரடன் தான். காதலை வாயால் சொல்லத் தெரியாதவன் தான். அதற்காகப் பாசம் இல்லாதவன் இல்லை! நேசம் இல்லாதவன் இல்லை. அதெல்லாம் இருக்கப் போய்த்தான் என்றும் என் விருப்பப்படியே நடந்தவன், உன் விருப்பங்களை ஓடியோடி நிறைவேற்றினேன். உனக்கு ஒரு பிரச்சினை என்றால் நீ என்னிடம்தான் வரவேண்டும் என்று சொன்னேனே, அது ஏன் என்று யோசித்தாயா? நீ என்னவள், உன் தேவைகள் அனைத்தையும் நானே நிறைவேற்றவேண்டும் என்கிற ஆசை. நீ கண் கலங்கினால் தாங்க முடியாது கோபப்பட்டேனே, உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்கமுடியாது என்று உன் அம்மா வீட்டுக்கே உன்னை அனுப்ப மறுத்தேனே, அதெல்லாம் ஏன் என்று யோசித்ததே இல்லையா நீ? ” என்று அவன் கேட்டபோது, தவியாய் தவித்துப் போனாள் அவள்.

இவ்வளவு ஆழமாக அவனும் அவளை நேசிக்கிறான் என்பதை அவள் அறியவில்லைதான். அதற்காக அவள் அவனைப் புரிந்துகொள்ளவே இல்லை என்று சொல்லமுடியாதே!

“உங்கள் அன்பை நான் உணர்ந்துகொள்ளாமல் இல்லை அத்தான்.” என்று அவசரமாகச் சொன்னவள், “ஆனால்..” என்று இழுத்தாள்.

ஏற்கனவே வேதனையில் உழலும் கணவனிடம், திருமணமான புதிதில் நீ நடந்துகொண்ட விதம் சரியா என்று கேட்கமுடியவில்லை. அவனுக்கு வலித்தால் அது பன்மடங்காக அவளைத் தாக்குமே!

ஆனால், அவள் மனதில் தோன்றிய கேள்வியை அவன் புரிந்துகொண்டான் போலும். “நம் திருமணத்தை நிறுத்திவிட நான் முயன்றுகொண்டு இருந்தபோதுதான் நீயாக அழைத்து என்னைப் பிடிக்கவில்லை என்றாய்..” என்று ஆரம்பித்தான் எங்கோ பார்த்துக்கொண்டு.

“என்னது?” அவன் சொன்ன செய்தி அதிர்ச்சியாக இருந்த போதிலும், அவன் திருமணத்தை நிறுத்த முயன்றான் என்பது, அவன்மேல் உயிரையே வைத்திருக்கும் இன்றைய லக்கிக்கு வலித்தது. “ஏன்.. என்னைப் பிடிக்கவில்லையா உங்களுக்கு?”

அவளைத் திரும்பிப்பார்த்தான் தர்சன். “இந்த உலகத்தில் என் உயிருக்கும் மேலாய் நான் நேசிக்கும் ஒருத்தி நீதான். நீ மட்டும்தான்!” என்று அழுத்தமான குரலில், தன் மனதை முதன் முதலாக மனைவியிடம் பகிர்ந்தான் தர்சன்.

அந்த ஒற்றை வார்த்தையே அவளின் உயிர்வரை சென்று அவளை உயிர்த்தெழ வைத்தது.

பூவாய் மலர்ந்த முகத்தோடு அவள் கணவனைப் பார்க்க, “ஆனால் அன்று.. உன்னை அல்ல வேறு எந்தப் பெண்ணையும் நம்பவோ கட்டிக்கொள்ளவோ நான் தயாராக இல்லை. அதனால்தான் திருமணத்தை நிறுத்த முயன்றேன்.” என்றான் தர்சன்.

“பிறகு ஏன், பிடிக்கவில்லை என்று சொன்னவளை பிடிவாதமாகக் கட்டிக்கொண்டீர்கள்?”

“என் மனதில் ஏற்கனவே ஆறாமல் கனன்று கொண்டிருந்த காயத்தை, ஆத்திரத்தை உன் மறுப்பு இன்னும் கிளறிவிட்டது. அதென்ன எவளுக்கும் என்னைப் பிடிக்கவில்லை என்கிற கோபம். ஏற்கனவே ஒரு பெண்ணினால் அவமானப்பட்டு நின்ற என்னை உன் பேச்சு இன்னுமின்னும் அவமானப் படுத்தியது. என்னை வேண்டாம் என்று சொன்னவளை விடக்கூடாது என்றுதான் கட்டிக்கொண்டேன். அதோடு, அத்தையும் காலில் விழுந்து கெஞ்சினார்.” என்றான் அவன் இறுகிய குரலில்.

அதைக் கேட்டுக்கொண்டவளுக்குக் கணவனின் அன்றைய நிலை நன்றாகவே புரிந்தது. ஆனால், திருமணத்தின் பிறகு அவன் நடந்துகொண்ட முறைகள்…

“ஒரு கணவனாக என் மனைவியோடு குடும்பம் நடத்தியதில் எந்தப் பிழையும் இருப்பதாக எனக்கு இப்போதும் தோன்றவில்லை.” என்றான் அவன், அவள் மனதைப் படித்தவனாக.

“அதெப்படி அத்தான்? நாம் கணவன் மனைவிதான் என்றாலும் என் மனதைப்பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல் நீங்கள் நடந்துகொண்டது சரியல்லவே.” அன்றைய நிலையை எண்ணியதில் இன்றும் தொண்டை அடைத்தது அவளுக்கு.

“தப்புத்தான்.” என்று உடனேயே ஒத்துக்கொண்டு மீண்டும் அவளை வியப்பில் ஆழ்த்தினான் அவன்.

“ஆனால், அன்றைய நிலையில் நான் ஒரு சூடு கண்ட பூனை. திரும்பவும் ஏமாறவோ எந்தத் தோல்வியையும் சந்திக்கவோ தயாராக இல்லை. அதேபோல, இனி கடைசிவரை எனக்கு நீதான் உனக்கு நான்தான் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதனால்தான் உன் மறுப்பை லட்சியமே செய்யவில்லை.” என்று அவன் சொன்னபோது, அவள் முகம் கசங்கியது.

ஏமாறத் தயாரில்லை என்றால் அதன் அர்த்தம்? அவள் ஏமாற்றி விடுவாள் என்பதுதானே!
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
“அவளைப்போல நானும் ஓடிவிடுவேன் என்று நினைத்தீர்களா?” என்று விழிகள் கலங்க அவள் கேட்டபோது, இல்லை என்று உறுதியாக அவனால் மறுக்க இயலவில்லை.

“அப்படி ஒன்றை சிந்திப்பதற்கே அன்று நான் தயாராக இல்லை லயா. என் வாழ்வில் இன்னொரு பிசகு, அது எந்த விதத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் மிக உறுதியாக இருந்தேன். இன்னொரு முறை அவமானப்பட நான் தயாரில்லை. அதனால் தான் உன் மனம் மாறுவதற்கு அவகாசம் தராதபோதும், உன்னிடம் கணவனுக்கான சகல உரிமைகளையும் எடுத்துக்கொண்டேன். அதேபோல உன்னையும் என் மனைவிக்கான கடமைகள் அனைத்தையும் செய்ய வைத்து, என்னை உன் கணவனாக உன் மனதில் பதியவைத்தேன்.”

அவன் என்ன காரணங்கள் சொன்னாலும், வலுக்கட்டாயமாக உறவில் அவளை அவன் இணைத்துக் கொண்டதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கொஞ்ச நாட்கள் அவன் பொறுத்திருக்க அவள் மனம் தானாகவே மாறியிருக்குமே. மனம்விட்டுப் பேசியிருக்கலாமே. அப்படி நடந்திருக்க இந்தத் துன்பங்கள் எதையும் அவர்கள் இருவருமே அனுபவிக்க நேர்ந்திராதே!

ஒன்றுமே சொல்லாமல் நின்றவளின் மனம் புரிந்ததில், தன்னால் முயன்றவரை தன் நிலையை அவளுக்கு உணர்த்த முயன்றான் தர்சன். “வெண்பாவின் கழுத்தில் தாலியை அவசரப்பட்டுக் கட்டினாலும், மனம்மாறி அவளாக என்னை ஏற்றுக்கொண்ட பிறகு வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றெண்ணி நான் கொடுத்த அவகாசத்தைப் பயன்படுத்தித்தான் அவள் வீட்டை விட்டுப் போனாள். அதே அவகாசத்தை உனக்குத் தந்து இன்னொரு முறை வாழ்க்கையில் தோற்க நான் தயாராக இல்லை.” என்று அவன் சொன்னபோது,

“என்ன.. என்ன சொல்கிறீர்கள்?” என்று, ஏதோ புரிந்தும் புரியாமல் படபடத்தாள் இலக்கியா.

மனைவியின் பதட்டம் அவனுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணியது. அதே வேளையில் அவன் சொன்னதைத் திரும்பச் சொல்லவும் பிடிக்கவில்லை. எனவே, “என்ன?” என்று பொதுவாகக் கேட்டான்.

“ஐ..யோ..! இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்? எதற்கு அவளுக்கு அவகாசம் கொடுத்தீர்கள்?” என்று, பொறுமையற்று படபடத்தாள் இலக்கியா.

கடவுளே.. நான் நினைப்பது சரியாக இருக்கவேண்டும் என்று மனம் கிடந்தது அடித்துக்கொண்டது அவளுக்கு.

மனைவியின் கேள்வி புரிந்து, கறுத்துவிட்ட முகத்தைத் திருப்பிக்கொண்டான் தர்சன். “என்னோடு வாழ்வதற்கு..”

“அப்போ.. அப்போ.. நீங்கள் அவளோடு குடும்பம் நடத்தவில்லையா?”

இதென்ன கேள்வி? என்பதாக அவளைப் பார்த்தாலும், இல்லை என்பதாக அசைந்தது அவன் தலை.

அந்த அசைவில் அவ்வளவு நாட்களும் அவளுக்குள் இருந்து அரித்த வேதனை அடியோடு மடிந்தது.

“அப்படியென்றால் நாம்தான்.. என்னோடுதான்.. நீங்கள்..” அவளுக்கு அதை எப்படிக் கேட்பது என்றே தெரியவில்லை.

ஆனால், அதைத் தர்சன் புரிந்துகொண்டான். “நான் தொட்ட முதல் பெண்ணும் நீதான். கடைசிப்பெண்ணும் நீ தான்!” என்றான் அவள் விழிகளையே பார்த்து.
 
Last edited by a moderator:
Top Bottom