இமைக்க மறந்தேன் உயிரே 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Stn49

Member
May 6, 2026
35
58
18
Chennai

வித்யாசாகர் சொன்னதை கேட்டவளுக்கு முகத்தில் புன்னகை அரும்பியது.இருவரும் முன்பு ஒன்றாக வசிக்காத தொடங்கிய நேரத்தில் ,அலுவலக ஞாபகத்தில் இவள் 'சார்'என்றுதான் அழைப்பது. அவரும் இவளை புரிந்தவராக ,"நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சாச்சு சாகரி . நம்ம உறவுக்கு ,நாம வாழற -வாழப்போற வாழ்க்கைக்கு இப்படி கூப்பிட்டா எனக்கு மூடே வராதே டார்லிங்" என்று சொல்லிக்கொண்டே இவளது கழுத்து வளைவில் உதட்டை பொருத்தி ,வெகு நேரம் கண்களை மூடி நின்றிருந்ததும், இவளை அணுஅணுவாக கூசி சிலிர்க்க வைத்ததும் ,சார் என்று அழைத்த வாய்க்கு உதட்டின் வழியாக தண்டனைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு வழங்கியதும் பசுமை மாறாமல் நினைவுக்கு வர,இதோ இப்போதும் அவளது வதனம் செம்மை பூசியது.

அதற்குப் பிறகான நாட்களில்,அலுவலகத்தில் அழைப்பது தவிர, வீட்டில் இருக்கும் சமயங்களில் அவரை வம்புக்கு இழுக்க வேண்டும் என்று தோன்றும் சமயங்களில், அவருடன் காதல் செய்ய , சில சமயங்களின் சண்டை நேரங்களில் என்று 'சார்' என்ற ஒற்றை வார்த்தை இருவருக்குள்ளும் பல மாயாஜாலங்களை நிகழ்த்தியது.

அப்படி ஒரு நாளில்,எந்த முன்னேற்ப்பாடுகளும் இல்லாமல் இயற்கையாய் இணைந்த பொழுதில் தாம் ஸ்ரீதயா இவளின் வயிற்றில் உதித்தது. அந்த மழைநாளில் கூடலை ஒருபொழுதும் இவளால் மறக்க இயலாது.எத்தனையோ நாட்களின் இரவுகளில் அதுவும் ஒன்றல்ல. அது இருவருக்குமான பரிபூரணத்தை உணர்ந்த இரவு.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த இரவுக்குப் பிறகு இருவரிடமும் ஒருவருக்கொருவரான காதலை உணர்ந்தார்கள். பெண்ணிடம் இவன் மீதான காதலை,இவனை பித்து பிடிக்கவைக்கும் தேடலை முதன்முறையாக வித்யாசாகர் உணர்ந்த தருணம். அதற்குப் பிறகு ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு வித்யாசாகர் ஒருவித தடுமாற்றத்தில் கழித்தது அவனுக்கு மட்டுமே தெரியும்.

முழுமையாக தனது அவன் மீதான பிரியத்தை தெரிவித்த திருப்தியில் சாகம்பரி சுகமாக உணர்ந்தாள். காதல் செய்யும் மாயம். சாகம்பரி

கண்டிப்பாக நம்பிய விஷயம்,இதற்குப் பிறகு வித்யாசாகர் தனது காதலை உணர்ந்திருப்பான்.நிச்சயம் இருவருக்குமான திருமணம் சாத்தியம் என்பது தான்.

வாய்விட்டு கேட்க தயங்கி கொண்டிருந்தவளை , சூழ்நிலை சிறை செய்தது. அவள் அத்தனை மாதங்களில் வித்யாசாகரிடம் எதுவும் கேட்டதில்லை. அவள் கேட்ட ஒரே விஷயம் அவர்களது திருமணம் தான். காதல்,குழந்தை,குடும்பம் என்ற புள்ளிகளை இணைக்கும் அழகான கோலமாக அவள் திருமணத்தை எதிர்பார்த்தாள் .

அவளது காதலை முழுமனதாக உணர்ந்த பிறகும் கூட ஏதோ ஒருவித பயமும்,தயக்கமும் ஆட்கொண்டவனாக ,"கல்யாணம் வேணா டார்லிங்.நாம இப்படியே வாழ்க்கை முழுவதும் இருக்கலாம்.எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்லை.ப்ளீஸ் " என்றவனை வெற்றுப் பார்வை பார்த்தவள்,தனது வயிற்றில் இருக்கும் அவர்களின் காதல் சின்னத்தை பற்றியெல்லாம் அவனிடம் சொல்லவே இல்லை. அதற்குப் பிறகு வந்த நாட்களில் வெளியே சாதாரணமாக காட்டிக்கொண்டாலும் இயல்பாக இருக்க முடியாமல் தடுமாறினாள். எவ்வளவு நாட்கள் வயிற்றுப பிள்ளையை அவனுக்குத் தெரியாமல் மறைக்க முடியும் என்ற குழப்பம்.

அவ்வளவிலும் ,வித்யசகரிடம் குழந்தை பற்றி சொல்ல வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை. வித்யாசாகருக்கும் தனக்குமான திருமணம் தங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலுக்காக இருக்க வேண்டுமே தவிர ,குழந்தை உட்பட இன்ன பிற காரணங்களுக்காக இருக்கக் கூடாது என்ற எண்ணம்.பிடிவாதம்.

சாகம்பரிக்கு இப்போது ஆச்சர்யமாக இருந்தது.காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுமா? திருமணம் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லாத வித்யாசாகர் திருமணம் பற்றி கேட்பது , இது நிஜம் தானா!என்றுதான் யோசித்தாள் .

மீட்டிங்குக்கு சென்ற இடத்தில ,அந்த ஹோட்டலின் தற்போது பொறுப்பில் இருக்கும் கேஷவ் வெகுவாக வித்யாசாகரின் பொறுமையை சோதித்தான். இப்போதுதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பான மேல் படிப்பை முடித்து இரண்டு வருஷங்கள்

ஆகிறது என்று கேஷவ் பற்றி தெரிந்து கொண்டிருந்தான் வித்யாசாகர்.நேரில் பார்க்கும் பொழுது , கேஷவ் பேசுவது ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு உகந்ததாக இருந்தாலும்,நேரம் கடக்கும் பொழுது பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தான் சாகர் .

தான் அங்கே படித்த மொத்த சரக்கையும் இங்கே இறக்குவத்ற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான் போலும்.வித்யாசாகர் புனரமைப்பு பற்றிய திட்டங்களை விளக்கி சொல்லியும் புரிந்து கொள்ளாமல் ஆயிரம் கேள்விகளை கேட்டான்.அத்தனையும் நமுத்துப் போன கேள்விகளாகவே இருந்தது.

வித்யாசாகர் சொன்னவை எதுவும் அவனுக்கு புரியவில்லையா..அல்லது வேண்டுமென்றே புரியாத பாவனையில் இருக்கிறானா என்றெல்லாம் வித்யாசாகருக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது. அவ்வளவு தூரத்திற்கு இருந்தது கேஷவின் பேச்சு.

கேஷவ் மனதில் என்ன இருக்கும் என்று அவதானிக்க முயன்று தோற்றவனாக,"ஓகே மிஸ்டர்.கேஷவ் , உங்க ஹோட்டல் சீனியர்ஸ் கூட மீட்டிங் வச்சு டிஸ்கஸ் பண்ணுங்க. நா சொன்ன போய்ண்ட்ஸ் பத்தி எடுத்து சொல்லுங்க. இது ப்ராஜெக்ட் ப்ளூபிரிண்ட். டிசைட் பண்ணிட்டு சொல்லுங்க"என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.

'டின்னர் இருக்கே "என்று சொல்லிக்கொண்டிருந்த கேஷவின் குரல் வித்யாசாகரனை எட்டவில்லை. அந்த அளவுக்கு வெறியில் இருந்தான். அன்று இரவு வெறும் பாலை மட்டும் குடித்துவிட்டு வந்து படுத்தவனுக்கு உறக்கம் வருவதாக இல்லை. அவனது காரியதரிசி ராம் வேறு மூன்று நாட்களாக விடுப்பில் சென்றிருக்க ,கடுப்பை காட்ட முடியாமல் தடுமாறினான் வித்யாசாகர்.

இரவு மணி பதினொன்று. சுத்தமாக தூக்கம் வரவில்லை. போதாத குறைக்கு மறுநாள் சாகம்பரி என்ன சொல்லப் போகிறாளோ..எதையெல்லாம் சமாளிக்க வேண்டுமோ..என்றுதான் வந்தது. ஏற்கனவே வித்யாசாகரின் மனதில் ஒரு திட்டம் வரைந்து வைத்திருந்தான். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பிளான் 'பி'. அவன் அறையில் ஏசியின் குளுமையை கூடியவன் , அங்கிருக்கும் சாய்வு நாற்காலியில் சாய்ந்த வாக்கில் அமர்ந்தவன்,சாகம்பரிக்கு பிடித்த இளையராஜா இரவு நேர பாடல்களை ஒலிக்கவிட்டு கண்மூடி அமர்ந்திருந்தான். எப்போது உறக்கம் தழுவியது எண்டு தெரியாமல் தூங்கியும் போனான்.

விடிகாலை எழுந்தவனுக்கு கொஞ்சநேரம் உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டும் என்று தோன்றவே படுக்கை அறைக்கு அடுத்து இருக்கும் ஜிம்முக்கு சென்றான். இரண்டு மணி நேர பயிற்சிக்குப் பிறகு வியர்வையில் குளித்தவனாக அங்கே இருக்கும் கண்ணாடியில் தன்னை பார்த்தவனுக்குள் ஒருவித திருப்தி பரவியது.

அவன் கண்களுக்குள் சாகம்பரியின் தோற்றம் கண்சிமிட்டியது. மாநிறத்திற்கு சற்றே கூடுதலான நிறம் . திருத்திய புருவங்கள். கொஞ்சம் சப்பை மூக்கு. லேசான பூனை முடிகளுடன் நெற்றி.அதில் எப்போதும் ஸ்டிக்கர் பொட்டுடன் திருநீறும்,குங்குமமும் இருக்கும். ஆளை அசரடிக்கும் அழகு என்றெல்லாம் வித்யாசாகர் சொல்ல மாட்டான். ஆனால், நிச்சயம் அழகி தான். எப்போதும் இறுக்கி பின்னலிட்டு இருப்பாள். நீளமான முடிதான் .ஆனால் கொஞ்சம் சுருட்டை முடிவாகு. அதிக உயரமும் இல்லை,குள்ளமும் இல்லை.இவனது தோளுக்கு கொஞ்சம் மேலே இருப்பாள். உடல்வாகு...ம்ஹும்,அது இவனுக்கு மட்டுமே உரியது.வருணனைகளுக்கு அப்பாற்பட்டது.சோ..நோ கமெண்ட்ட்ஸ்.

அப்படியே தன்னை பார்த்தவனுக்கு ,இப்போது அதிக பயிற்சியினால் உடல் இரும்புபோல் இறுகி இருப்பதாக தோன்றியது. ஐந்து வருஷங்களுக்கு முன்பு தினமும் பயிற்சி செய்வான் தான்.அது உடல்நலனை பாதுகாக்க மட்டுமே! பிறகு தனிமை துன்பம் தாக்கும் அநேக நேரங்களில் ஜிம் பெருந்துணை என்றானது.

இப்போது கொஞ்சமும் தேவையற்ற சந்தேகம் ஒன்று வந்தது.."இப்போது இந்த உடலின் பாரத்தையும்,எனது இரும்பு பிடியையும் மென்மையான சாகம்பரி தாங்குவாளா?" என்பதுதான் அது. அதிமுக்கியமான இந்த கேள்விக்கு நிச்சயம் அவனுக்கு பதில் வேண்டும்தான்.

வழக்கம்போல் ப்ரோட்டீன் மில்க்ஷேக் எடுத்து குடித்தவன் கொஞ்சநேரம் அன்றைய பத்திரிக்கை செய்திகளை படித்துவிட்டு குளிக்க சென்றான்.இன்று ஞாயிற்று கிழமை என்பதை அவன் சுத்தமாக மறந்து விட்டிருந்தான். வேகமாக கிளம்பி உணவு மேசைக்கு வந்த முதலாளியை வித்யாசமாக பார்த்தார் சமையல்காரர். விடுமுறை நாட்களில் நிதானமாகத் தான் அவர் சமையல் வேலையை பார்ப்பது வழக்கம். சுதாரித்துக் கொண்டவராக, "ஐயா,காபி வேணுமா.." என்றார். அப்போதுதான் அவனுக்கு இன்று விடுமுறை நாள் என்றே நினைவுக்கு வந்தது.

'வேண்டாம்' என்று தலையசைத்து விட்டு மத்தியகைலாஷ் கோவிலுக்கு சென்றான். காரோட்டி இன்னமும் வந்திருக்கவில்லை என்பதால் அவனே ஒட்டிக்கொண்டு வந்துவிட்டான். கோவிலில் தெய்வத்தின் சன்னதியில் மனம் கொஞ்சம் சமன்பட்டது . கொஞ்சநேரம் அங்கே பிரகாரத்தில் அமர்ந்திருந்துவிட்டு கிளம்பியவனுக்குள் தன்னை யாரோ வெகு நேரமாக பார்த்துக்கொண்டிருப்பதை போல ஒரு உணர்வு. சுற்றிவர பார்த்தால் அபப்டி யாரும் இவனை பார்ப்பதாக தெரியவில்லை.எல்லாமே அறிமுகமற்ற முகங்கள்தாம்.

திரும்பவும் வித்யாசாகர் வீடு வந்து சேரவும் ,சாப்பிட உணவு தயாராக இருந்தது. கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குள் வந்தவனுக்கு கொஞ்சநேரம் அலுவலக வேலைகளை பார்க்கலாம் என்று தோன்றவே அதில் ஆழ்ந்து போனான். ஒருமணி நேரத்தில் இரவு உறங்காதது இப்போது தூக்கம் சொக்கியது. அப்படியே கட்டிலில் செண்டு படுத்தவன் மதியம் மூன்று மணி சுமாருக்கு எழும்பினான். இன்னமும் உறக்கம் முழுவதுமாக கலையவில்லை. வயிறு மீண்டும் 'நான் இருக்கிறேனே..என்னை கவனி 'என்றது .

வேறு வழியில்லாமல் குளியலறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் கீழே சென்று மதிய உணவை ஒருபிடி பிடித்தான். மனம் முழுவதும் மாலை சாகம்பரியை பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் நிரம்பி வழிந்தது. அதோடு அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று ஒருவித பயம் வேறு. கலவையான மனநிலை.அதை மாற்ற சிறிது நேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்தான்.இதுதான் என்று இல்லாமல் எல்லா சானல்களையும் மாற்றி மாற்றி பார்த்தான். நேரம் நகர்வேனா ..என்றது.ஒருவழியாக மாலை மணி நாலரை அகவும்தான் நினைவுக்கு வந்தது,இன்னமும் தான் அவளுக்கு இடத்தையும் நேரத்தையும் உறுதிப்படுத்தவில்லை என்பது.

அவசரமாக தனது அலைபேசியை எடுத்தவன் அவளுக்கு வாட்சாப் செய்துவிட்டான்.அப்போதும் அவள் பார்ப்பாளா..என்று ஒரு சந்தேகம்.தாமதிக்காமல் அவளுக்கு அழைத்துவிட்டான். மறுபுறம் ரிங் நீண்டநேரம் சென்று கட் ஆனது.அதுவேறு அவனுக்குள் பதட்டத்தை விதைத்தது.

மீண்டும் அவன் அழைக்கவும் அழைப்பு எடுக்கப் பட்டது. எடுத்தது வேறு யாருமல்ல.. அவனுடைய குட்டி தேவதைதான். "ஹெலோ,அம்மா தூங்குறாங்க.நீங்க கொஞ்சநேரம் அப்புறமா பண்ணுங்க "என்று மழலை மாறாமல் சொல்லிவிட்டு வைத்தும் விட்டது.


வித்யாசாகரின் உணர்வுகள் கட்டவிழ்ந்தது.இப்போதே தனது மகளை பார்த்தே தீரவேண்டும் என்று வெறியே வந்தது. இன்று வரும்பொழுது மகளை கூட்டிக்கொண்டு வருவாளா சாகம்பரி என்று கூட யோசித்தான் . பிறகு , அவள் எப்படி கூட்டிக்கொண்டு வர முடியும்.சாத்தியமில்லை என்று தனக்கே சொல்லிக்கொண்டவனாக,"அவள் சாகம்பரி என்ன சொன்னாலும் சரி,எப்பாடு பட்டாவது இந்த திருமணத்தை முடித்தாகவேண்டும்.இனியும் ,மனைவி - மகளை பிரிந்து வாழமுடியாது என்று உறுதி கொண்டான்.


அவன் உறுதியை அவள் தகர்த்து விட்டால் அப்போது என்ன செய்வான்? இருவர் சேரும் திருமண உறவில் ஒருவர் மட்டும் முடிவு எடுக்க முடியாதே!
 
Last edited:

Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.