இமைக்க மறந்தேன் உயிரே 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Stn49

Member
May 6, 2026
35
58
18
Chennai
மாப்பிளை என்று சொல்லிக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்திருக்கும் வித்யாசாகரிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் தன்னை நிதானப் படுத்திக்கொள்ள சாகம்பரியின் அப்பாவுக்கு நிறையவே நேரம் தேவைப்பட்டது. வித்யாசாகர் இங்கே துணிச்சலுடன் வந்திருப்பதில் அவர் எளிதாக புரிந்து கொண்டது இந்த விஷயத்தில் தங்களது மகளின் பங்கு அதிகம் என்பதைத்தான்.அதுவே அவரது வாயை கட்டிப் போட்டது.

நடைமுறையில் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைக்கும் ஒரு மத்திய வர்க்க குடும்பத்தில் ,அவர்களது மகள் செய்திருப்பது அவ்வளவு எளிதாக ஜீரணம் செய்து கொள்ள கூடிய ஒன்றல்ல. வந்திருக்கும் மனிதரை பார்த்தாலே தெரிகிறது,மிக மிக வசதியுடன் வாழும் ரகம் என்று.

என்னதான் சாகம்பரிக்கு பணம் பெரியதாக தோன்றி இராமல் இருக்கலாம்.ஆனால், உலகத்தின் பார்வையில் சாகம்பரியின் உண்மைத் தன்மை நிச்சயம் கேள்விக்குறியாகத்தான் இருக்கும். அவள் இவர் மீதான காதலில் என்ற வாக்கியம் முழுமை பெற இந்த உலகம் அனுமதிக்காது.

வித்யாசாகரின் பணம்,சொத்துக்கு ஆசைப்பட்டு, குறுக்கு வழியில் அவள் பிள்ளை பெற்றுக் கொண்டதாக பேசுவார்கள்.ஏற்கனவே ,அவளும் குழந்தையுமாக என்பதே ஒரு u கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் வித்யாசாகர் அதைவிட பெரிய அதிர்ச்சி தான்.

பெற்றவர்களின் அதிர்ச்சி நிறைந்த முகத்தை உள்வாங்கியவனாக அங்கே அமைதியாக அமர்ந்திருந்தவர் வித்யாசாகர் மட்டும் தான்.இன்று இதற்கு ஒரு தீர்வை ,அதுவும் சுபமாக ஒரு சந்தோஷமான விடையை வாங்கியே ஆகவேண்டும் என்றுதான் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. இன்னமும் ராம் வந்திருக்கவில்லை. அதுவும் நல்லது தான் என்ற எண்ணம் வித்யாசாகருக்கு.இல்லாவிட்டால் இத்தனை நேரத்திற்கு விஷயம் பெற்றவவர்களின் காதுகளுக்கு சென்றிருக்கும். ராம் இரண்டாவது தலைமுறையாக இவர்களது கம்பனியில் வேலை செய்பவன்.அதனால் விசுவாசம் அதிகம்.

வெகுநேரமாகியும் சாகம்பரியின் அப்பா ஒன்றுமே பேசவில்லை. வார்த்தைகளை கோர்த்துக் கொண்டிருந்தார். மகள் இந்த திருமணத்திற்கு நிச்சயம் சம்மதம் சொல்லி இருந்திருக்க மாட்டாள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.இவ்வளவு வருஷங்களில் அவள் வாயிலிருந்து இவருடனான உறவு பற்றி தவறியும் ஒரு வார்த்தை விழுந்தது இல்லை.

அப்படி இருக்கும் போது இவரோ சாகம்பரியை முறியப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்து நிற்கிறார்.

"நேத்து நீங்களும் சாகம்பரியும் தான் டின்னருக்கு போனீங்களா... அவகிட்டே இதை பற்றி கேட்டீங்களா?" ஒருவழியாக பேச ஆரம்பித்தார் பெற்றவர்.

"ம்ம்..ஆமா. நேத்து சந்திக்கும் பொழுது அவகிட்டே கல்யாணம் செஞ்சுக்கலாம்னு சொன்னேந்தான் .அவ யோசிக்கணும்னு சொல்லிட்டா. அவளுக்கு இதுல சுத்தமாக இஷ்டம் இல்ல.அதோட எனக்குஇன்னொன்னும் தெரியும்.அவ வேறே யாரையும் மனசில கூட நினைக்க மாட்டா.அங்கே நா மட்டும்தான் இருக்கேன்.சோ , அவளது வாழ்க்கைல கணவன் உறவுல இந்த ஜென்மத்துல நா மட்டும்தான்!" இதை சொல்லும் பொழுது வித்யாசாகரின் குரல் கர்வத்துடன் ஒலிப்பதை உணர்ந்து கொண்டார் பெரியவர். அவரது முகத்தில் கசந்த முறுவல் வெளிப்பட்டது.

உண்மையும் தானே! அவளது மனம் முழுவதும் இவரிடம் தானே மண்டி போட்டு கிடக்கிறது.எத்தனை வரன்கள் பார்த்தும் ஒன்றுக்கும் சரி என்று பெண் சொன்னதில்லையே! அதே சமயம் இவரை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்காமல் நிற்கிறாள். என்ன செய்வது என்று அவருக்குள் கழிவிரக்கம் மிகுந்தது. தலையை வேகமாக உலுக்கிக் கொண்டார் .

வித்யாசாகர் இப்போது பேச ஆரம்பித்தான்."உங்களுக்கு என்ன தெரியணும்னு சொல்லுங்க மாமா. நா அதுக்கு பதில் சொல்ல கடமை பட்டிருக்கேன். ஆனா,உங்க பொண்ணையும் ,என்னோட பொண்ணையும் இனிமே நா தனியா விடுறதா ஐடியா இல்ல.சாகம்பரி மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நிச்சயமா தெரியும்.

அவ என்மேல் வச்சிருக்கிற காதல் தான் எங்க கல்யாணத்துக்கு காரணமாக இருக்கணும். எங்களோட குழதையை காட்டி எங்க கால்யாணத்தை நடத்த அவளுக்கு விருப்பம் இல்ல.

பட் ,குழந்தை பற்றி தெரியும் முன்னேயே அவகிட்டே கல்யாணம் செஞ்சுக்க கேட்டிருந்தேன் .அவ யோசிக்கணும்னு சொல்லிட்டா.சோ,நேத்து நடந்த மீட்டிங் ரெண்டாவது. அவளுக்கு ஒரு மாசம் முழுசா நேரம் கொடுத்தும் அவ எனக்கு பதில் சொல்லல. நேத்தும் யோசிக்கணும்னு சொல்றா.

ஏற்கனவே குடும்பம் நடத்தி குழந்தையை பெத்துக்கிட்ட பிறகு இப்போ புதுசா யோசிக்க என்ன இருக்குன்னு எனக்கு புரியல. இந்த அஞ்சு வருஷமா அவ இல்லாத வாழ்க்கை எனக்கு சலிப்பை தருது. என்னோட வீட்டுல சீரியஸா எனக்கு கல்யாணத்துக்கு பாக்குறாங்க.ஒரு மனுஷன் எத்தனை பெண்களை பாக்க முடியும்? "

அவனுடைய வார்த்தைகளில் இருக்கும் உண்மையும் ,வலியும் சாகம்பரியின் பெற்றவர்களை வாய் திறக்க அனுமதிக்கவில்லை.

அவனே தொடர்ந்தான். இன்று இவர்களிடம் எல்லாவற்றையம் பேசி முடித்துவிட வேண்டும் என்ற ஆவேசமும்,ஆதங்கமும் தெரிந்தது அவனது பேச்சில்.' நேத்து பேசுற பொழுது கல்யாணம் செஞ்சுக்க ஆச வந்திருச்சுன்னா வேறே யாரையாவது ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சுக்க சொல்றா உங்க பொண்ணு. பெண்களுக்கு மட்டும்தான் கற்பு இருக்கா..ஆண்களுக்கு இல்லையா?

எப்படி உங்க பெண்ணாலே வேறே ஒருத்தரை மனசாலையும் நினைக்க முடியாதோ,அப்படித் தானே எனக்கும்?மனசு வலிக்குது. அவளை மட்டுமே நினைச்சி நா வாழ்ந்த இந்த அஞ்சு வருஷ வாழ்க்கையும் ஒரு நிமிஷ வார்த்தைல உடைச்சிட்டா "என்றவன் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனது, அந்தப்பெண் காதலனுடன் சென்றுவிட்டது ,அவன் பெண்கள் என்றாலே ஒதுங்கியது என்று ஒன்றையும் மறைக்கவில்லை.

அவன் மறைத்த விஷயம், சாகம்பரி தானே இவனிடம் வந்து காதல் சொன்னதையும், இவர்கள் உறவு தொடக்கத்திற்கு அவள்தான் ஆரம்பப் புள்ளி என்பதையும் தான். அவன் சொல்லாமல் விட்டாலும்,பெற்றவர்களுக்கு அதுவும் புரிந்தது.


வெகுநேரமாக அவன் உணர்ச்சி வயப்பட்டு பேசியிருக்கையில் தொண்டை கமறியது . அருகில் சொம்பில் இருந்த நீரை குடித்து கொஞ்சம் தன்னை ஆஸ்வாசப் படுத்திக் கொண்டான் வித்யாசாகர். இன்னமும் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை அவனிடம்.இனிமேல் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க அவளை பெற்றவர்கள்தான் சம்மதிக்க வேண்டும். என்னதான் வார்த்தைகளால் அவள் எனது மனைவி என்று சொன்னாலும் சமூகம் அதை ஒத்துக் கொள்ளாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

சாகம்பரியின் அம்மாவுக்கு இத்தனை அதிர்ச்சிகளை கேட்ட்டதில் லேசாக தலை சுற்றுவது போல உணர்ந்தார். என்ன நடக்கிறது சாகம்பரியின் வாழ்க்கையில்?ஏற்கனவே திருமணம் ஆன ,தன்னை விட பத்து வயது அதிகம் இருக்கும் ஒருவரை எப்படி தனது பெண்ணால் காதலிக்க முடிந்தது என்று திகைத்துப் போனார். தனது வளர்ப்பில் தான் ஏதாவது பிழையா என்னும் அளவுக்கு யோசிக்க ஆரம்பித்து விட்டார். இதை எல்லாம் பெற்றவர்கள் இருவராலும் யோசிக்கவும் முடியவில்லை.

வந்திருக்கும் இவருக்கு தகுந்த பதிலை சொல்லியாக வேண்டும். கையை பிசைந்து கொண்டு நின்றார் சாகம்பரியின் அப்பா. அவர்களிடம் இன்னொரு கேள்வியும் இருந்தது.அதை வித்யாசாகரிடம் கேட்கவும் தவறவில்லை.

"இங்கே எங்ககிட்டே வந்து பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கறேன் என்று சொல்கிறீர்கள் எங்கள் சம்மதம் இருக்கட்டும்.நாங்கள் பெண்ணை பெற்றவர்கள்.அதிலும் அவள் இப்போது குழந்தையுடன் இருக்கும் பட்சத்தில் அவளது நல்வாழ்வுக்காகவும் பேத்தியின் எதிர்காலத்தை யோசித்தும் முடிவு எடுத்தாக வேண்டும்.உங்கள் வீட்டில் இதற்க்கு ஒப்புக்கொள்வார்களா?

நாங்கள் கேள்விப்பட்ட வரையில் உங்களது குடும்பம், பாரம்பரியம், தொழில் என்று பார்ப்பார்கள் தானே! கையில் ஐந்து வயது குழந்தையுடன் வரும் மருமகளை அவர்கள் எப்படி முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார்கள்?அப்படியே உங்கள் திருமணம் முடிந்தாலும் அவளை உங்கள் வீட்டார்கள் எப்படி நடத்துவார்கள்,அவளது மதிப்பு அதுவென்னவாகும் ?

பெண்ணை குற்றம் சொல்லும் சமூகம்,அதில் சமபங்கு வைத்திருக்கும் பெண்ணிற்கு நியாயம் செய்வதில்லையே! அவள் நிம்மதியாக வாழ்ந்தாக வேண்டுமே! நீங்கள் ஒன்று செய்யுங்கள். உங்கள் பெற்றவர்களுடன் வந்து பெண் கேளுங்கள் . பிறகு மேற்கொண்டு பேசலாம். எங்களுக்கு உங்கள் குடும்ப நபர்களுடன் கட்டாயம் பேசியாக வேண்டும்.அப்போதுதான் மேற்கொண்டு எங்களால் யோசிக்க முடியும்"என்றுவிட்டார்

அவரது பேச்சை ஆழமாக உள்வாங்கியவன் கொஞ்சநேரம் எதுவுமே பேசவில்லை.இதுவரை தனது குடுமபத்தில் இது பற்றி பேசவேண்டும் என்பதை வித்யாசாகர் இரண்டாவதாக தான் வைத்திருந்தான்,என்னவென்று பேசுவது?

முதலில் சாகம்பரி ஒப்புக்கொண்டாக வேண்டும். பிறகுதான் தனது பெற்றவர்களிடம் பேசவேண்டும் என்று நினைத்து இருந்தான். அவள் சம்மதிப்பாளா..இல்லையா?அவளை எப்படி திருமணத்திற்கு 'சரி'சொல்ல வைப்பது என்றே அவனது எண்ணம் முழுவதும் இருந்தது.

சாகம்பரி சம்மதம் சொன்ன பிறகுதான் இருபக்க பெற்றோர்களையும் சந்தித்து மேற்கொண்டு பேச வேண்டும் என்று நினைத்திருந்தவனை முதல் நாளின் சாகம்பரியின் பேச்சு வெகுவாகத் தாக்கி இருந்தது.இரவு முழுவதும் மனைவி மற்றும் மகளிடம் லயித்திருந்த மனதில் இன்னமும் இதை இப்படியே விட்டு வைக்க முடியாது .ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்று வேகத்தில்தான் இங்கே வந்து நிற்கிறான்.இவர்கள் என்னடாவென்றால்,'உன் பெற்றவர்களை கூப்பிட்டு கொண்டு வா' என்று ஏதோ பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனை அழைத்து சொல்வது போல் சொல்கிறார்களே!என்று சலித்துக்கொண்டான்.

வித்யாசாகரே நாற்பதை நெருங்கி கொண்டிருக்கிறான். அவன் சலிப்பையும் தவிப்பையும் பார்த்தவர்களுக்கு தங்களை மீறி சிரிப்புதான் வந்தது. வந்ததிலிருந்து அவனது கண்கள் வேறு மகளை தேடி தவித்தது. அதை வீட்டுப் பெரியவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவன் தவிப்பை பார்த்தவர்கள் ,"குழந்தை பேரு ஸ்ரீ தயா.இப்போ ஸ்கூலுக்கு போயிருக்கா. ஸ்கூல் ஒரு மணிக்குத்தான் விடுவாங்க.நாங்க யாராவது போயி கூட்டிட்டு வருவோம் " என்று ஒருசேர சொன்னார்கள். இருந்து மகளை பார்த்துவிட்டு செல்லலாமா..என்று வந்த தவிப்பை அடக்கிக் கொண்டான்.

அவனைப் புரிந்து கொண்டவர்களாக,"நீங்க உங்க பேரண்ட்ஸை கூட்டிட்டு வாங்க.மேற்கொண்டு பேசுவோம்.கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிட்டு உங்க பொண்ணை கூடவே வச்சி சீராட்டிக்கோங்க. யாரு நடுவே வரப்போறாங்க?" என்று சொல்ல ஆமோதிப்பாக தலை அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.அவன் காலையிலிருந்து இன்னமும் அலுவலகம் செல்லவில்லை.காலையிலிருந்து அவனது அப்பாவும்,சித்தப்பாவும் மாற்றி மாற்றி போன் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இவன் எடுக்கவில்லை.
 

Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.