உந்தன் நெஞ்சில் உயிராக 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
122
33
Chennai
உந்தன் நெஞ்சில் உயிராக


உந்தன் உயிராக 1


'என்னை வெறுப்பவர்களையும் நேசிக்கும் நான்... நான் நேசித்த (நேசிக்கும்) உன்னை எப்படி வெறுப்பேன்.'
_______________________________

மேற்கத்திய தொடர்ச்சி மலையின் அழகையும், நவீன தொழில் வளர்ச்சியையும் ஒருசேரக்கொண்ட, தமிழ்நாட்டின் துடிப்பான பொருளாதார நகரமாக திகழும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் (கோவை) மாவட்டம்.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ள தென்னமநல்லூர் சிற்றூர்.

எங்கும் இயற்கையின் எழில் மிகு பச்சை வர்ணம்... காணும் கண்களின் வழி அகத்தில் மெல்லிய குளிர் பரப்பிடும்.

இதமான சூழலில் அமைந்திருக்கும் கிராமம் அதிகாலை பனிப்போர்வைக்குள் சுருண்டிருக்க... வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்த அவ்வீட்டின் தனக்கான அறை மெத்தையில் மெத்தென்ற கம்பளிக்குள் முழுதாய் அமிழ்ந்திருந்தான் திகழோவியன்.

ஜனவரி மாத குளிருக்கு வெள்ளி முளைத்திட்ட விடியலும் அத்தனை கருமையாகத் தோற்றம் கொண்டிருந்தது.

கதவு தட்டும் ஓசையில், போர்வையை விலக்கி, இரு கைகளாலும் முகத்தை அழுந்த தேய்த்தவனாக எழுந்தமர்ந்தவன், திறந்திருந்த சன்னல் தடத்தில் பொழுதை அவதானித்தான்.

மீண்டும் கதவு தட்டும் ஓசையோடு...

"திகழ்" என்ற சுகிர்தனின் விளிப்பும் ஒலிக்க...

“கதவு திறந்துதானுங்கண்ணா இருக்கு… தாப்பா போடலங்க” என்றான் திகழோவியன்.

"இப்போதான் தூங்கி எழுந்தியா?" என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்த சுகிர்தன், "என்னடா இம்புட்டு நேரமா தூங்கிட்டு இருக்க?" என்று தன் தம்பியின் அருகில் படுக்கையில் அமர்ந்தான்.

"நேத்து ராத்திரி ரொம்ப லேட் ஆகிப்போச்சுங்க. அதான் கண்ணை தொறக்கவே முடியலங்க" என்ற திகழோவியன், இரு கண்களையும் விரல் வைத்து அழுந்த தேய்த்தான்.

"எதுக்கு அவ்வளவுக்கு தேய்க்கிற... கண்ணு செவரப்போகுது" என்ற சுகிர்தன் தன்னுடைய தம்பியின் கையை தட்டியவனாக, "ரொம்ப கஷ்டமா இருக்காடா?" எனக் கேட்டான்.

"கஷ்டம்னு இல்லங்க... பழக்கப்படுத்திக்கிறேனுங்க" என்ற திகழோவியன், "என்ன சேதீங்க?" என்றான்.

"ராத்திரிக்கே உன்னை பார்க்கலையே! நான் தூங்கப்போனப்புறம் வந்தியாக்கும்?"

"ஆமாங்க... திராட்சை கொடிக்கு பந்தல் போட பொருளுவ வந்திறங்குச்சு. இறக்கி, போட வேண்டிய இடமெல்லாம் பிரிச்சுப்போட்டு நிமிர நேரமாகிடுச்சி" என்றான் திகழோவியன்.

"ம்ம்... உனக்கு இதுல ஆசை இல்லாட்டி... உன்ற ஆசை என்னவோ அதை செய்யு திகழு" என்று இளையவனின், கலைந்து சிலும்பியிருந்த முன்னுச்சி கேசத்தை ஒதுக்கியவனாகக் கூறிய சுகிர்தனின் கை, அவனின் கன்னத்தில் அழுத்தமாகத் தேங்கி நின்றது.

"ஆசைக்கு செய்ய ஒன்னுமில்லங்க... இனிமேலாவது உங்கனக்கூடவே இருக்கேனுங்க... வேற வேலைன்னா" என நிறுத்திய திகழோவியன், வார்த்தையை முடிக்க முடியாது தடுமாறிட, அவனது தொண்டைக்குழி அவஸ்தையாய் ஏறியிறங்கியது.

தம்பியின் தளர்வில் வேதனை கொள்ளும் மனதை இழுத்துப்பிடித்த சுகிர்தன், என்ன சொல்வதென்று தெரியாது தன் மார்போடு இழுத்து அணைத்திருந்தான்.

"எல்லாரும் இருந்துமே யாரோ மாதிரி..." என்ற திகழோவியன், "முடியலங்களே!" என்று சுகிர்தனின் தோளிலே முகத்தை அழுத்தமாகப் புதைத்தான்.

அவனின் சூடான கண்ணீர் சுகிர்தனின் தோளில் படர்ந்து அவனை பதற வைத்தது.

"இனிமேலாவது உங்களோடவே, நம்ம வூட்டோட இருக்கேனுங்க. நானும் இந்த குடும்பத்து மகன்(ந்)தானுங்க?" என்ற திகழோவியனின் கண்ணீர், குரல் தழுதழுப்பு எல்லாம் சுகிர்தனனுக்கு புதிது.

திகழோவியன் தங்களுடன் வந்துவிட்ட இந்த இரண்டரை வருடத்தில் என்றுமே அவனின் முகத்தில் சிறு வாட்டத்தையோ, வருத்தத்தையோ அவ்வீட்டில் யாரும் பார்த்ததில்லை.

எப்போதும் முகத்தில் அழுத்தம் குடிகொண்டிருக்க... பார்வையிலும் அவ்வழுத்தம் பிரதிபலிக்கத்தான் உடல் மொழியில் விறைப்புத் திமிர நடப்பான்.

திகழோவியன்... அத்தோற்றத்திற்கு இங்கு வந்த பின்னர்தான் தன்னை பழக்கியிருந்தான். அதுவரையில் அவனுமே வயதுக்குரிய துள்ளலோடு, உற்சாகமாக கலகலவென திரிந்தவன் தான்.

சொந்தக்குடும்பத்தின் உறவுகளாலே அவனின் வாழ்வியல் அனைத்தும் மாற்றம் கொண்டது. வலிக்க ஏற்றுக்கொண்டவனின் மனம் அவ்வலிக்கு பழகும் முன்னரே, மீண்டும் ஒரு வலியால் மொத்தமாக துவண்டுப்போனான்.

வலிகளிலிருந்து தன்னை மீட்கவே மிடுக்காய் மாறிப்போனான்.

உடன்பிறப்பின் அணைவில் விலக மனமின்றி அடங்கியே இருந்தான் திகழோவியன்.

"இனிமேலு நீயே நெனைச்சாலும் இல்லைன்னு ஆகாதுடா. அண்ணன் நானிருக்கேன். அப்போ எனக்குமே" என்ற சுகிர்தன் அடைத்த தொண்டையை சரிசெய்து, "அம்பாடுபட்டாவது உன்னைய என் கைக்குள்ள வைச்சிருந்திருப்பேன்" என்றிட, அவனின் கண்களில் நீர் கோர்த்தது.

அதிலும் நடந்துவிட்ட, தெரிந்துகொண்ட கடந்தகால நிகழ்வுகளெல்லாம் இக்கணம் வேதனையின் தடமாக எதிரொலித்தது.

"கருக்கல்லே ஆரம்பிச்சாச்சா?" என்று கையில் தேநீர் குவளைகளுடன் உள் வந்தாள் சுவிதா.

அவள் அருகில் வந்ததும் இருவரும் கண்களை துடைத்தவாறு விலகி அமர்ந்தனர்.

சுவிதா கணவனை ஆராய்வாகப் பார்த்திட...

"என்னங் மாமா, கண்ணுல தூசிங்களா?" என்றாள்.

"ஆமா ஆமா..." சுகிர்தன் சமாளிக்கப் பார்த்தான்.

"ரெண்டு பேருக்கும் ஒட்டுக்காங்களா?" என்றவள், "உங்களுக்கு நேரமாவலையாங்க?" எனக்கேட்டாள்.

"ம்ம் போவனும்" என்ற சுகிர்தன், "டீ நான் குடிச்சிட்டேன்" என்றான் அவளின் கையிலிருந்த குவளைகளைப் பார்த்து.

"உங்களுக்கு யாருங்க இப்போ எடுத்துகிட்டு வந்தாங்க" என்று நொடித்தவள், "என் கொழுந்தனுக்கு கொண்டாந்தேனுங்க" என்றாள்.

"எனக்கு இப்போ வேணாங்க அண்ணி." திகழோவியன் கூறிட,

"அவள் குடிக்கமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணுறா. உன்ற ஐயன் சமாளிக்க முடியாம தெணறி உட்கார்ந்திருக்காங்க. நீ வெளிய வந்தாதான் அவள் அடங்குவா. வெடுக்குன்னு கெளம்பி வா திகழு" என திகழோவியன் கையில் தம்ளரை கொடுத்துச் சென்றாள்.

"அவளுக்கு நீ இப்படி இருக்கிறது பிடிக்கலையாக்கும்... அதான் உன்னை உன் பொண்ணு பின்னாடி சுத்தவுட்டு திசை திருப்புறாளாம்" என மனைவியை கண்டு கொண்டவனாக சுகிர்தன் கூறிட, எட்டிப்பார்த்ததோ என நினைக்கும் வகையில் கீற்றாய் திகழோவியனின் உதடுகள் விரிந்தன.

"இப்படியே இருந்தா மொகம் பார்க்க எவ்வளவு அம்சமா இருக்குது... அதை வுட்டுபோட்டு மொகத்தை எப்பப்பாரு உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்கிறது நல்லாவா கண்ணு இருக்குது" என்று தம்பியின் தாடை பிடித்து ஆட்டிய சுகிர்தன், "உங்களுக்கு இன்னும் நேரமாவலைங்களா?" எனக் கேட்ட சுவிதாவின் குரலில் கட்டிலிலிருந்து வேகமாக எழுந்து இறங்கி நின்றான் .

"பருத்தி கொள்முதலுக்கு கரூர் வரைக்கும் போய்வரேன் திகழு... போனமுறையே போன்ல பார்த்து ஏமாந்தாச்சு. தரம் குறைஞ்சி, திருப்பி அனுப்பின்னு ஒருவாடு வேலையாகிப்போச்சு. அதான் இந்தமுறை நேர்ல பார்த்தே லோட் ஏத்திட்டு வந்துடுறேன். ரெண்டு நாளைக்கு மில்லுக்கு போய் வந்துக்க" என்றான் சுகிர்தன்.

"சரிங்கண்ணா!"

"ம்ம்... அப்போ நான் போய்வரேன்" என்று உடன் பிறப்பின் கன்னம் தட்டிச் சென்றான் சுகிர்தன்.

ஒரு பெருமூச்சோடு போர்வையை விலக்கி கட்டிலைவிட்டு இறங்கிய திகழோவியன் பால்கனி கதவினை திறந்து திரை நகர்த்தினான். வயல்கள் தவழ்ந்த சில்லென்ற குளிர்க்காற்று முகம் மோத மனதின் புழுக்கத்தை ஒத்தி வைத்து புத்துணர்வு பெற்றான்.

பால்கனி சுற்று கம்பியினை பற்றியபடி நின்றவனின் பார்வை ஒற்றை வரப்பு தாண்டி அமைந்திருந்த வீட்டின் பின்கட்டில் பதிந்தது. இரு வீட்டிற்கும் நடுவில் ஒரு பாத்தி வயல் மட்டுமே இடைவெளி.

கையளவு தடிமனான தண்டின் உச்சியில் கூடாரம் போன்று காட்சியளித்த பவள மல்லிகையின் சிறு மரத்தில் பூக்கள் பறித்துக்கொண்டிருந்த பெண்ணிடத்தில் அழுத்தமாகப் பதிந்தது திகழோவியனின் பார்வை.

அழுத்தம்... அவ்வளவுதான். வேறெந்த உணர்வுக்கும் அவ்விழிகளில் இடமளிக்க மறுத்திட்டான்.

பார்வையில் இளமை உணர்வுகளுக்கான விம்பம் சற்றுமில்லை.

வெண்மை நிற பூக்களின் ஆரஞ்சு வர்ண காம்புகளை இரு விரல்களால் பற்றி, தளிர் தண்டுக்கும் காம்புக்கும் நோகாது பறிப்பவளின் மீது வரையறுக்க முடியாத கோபம் அவனுள். கோபம் மட்டும்தானா என்றால்... பட்டென்று ஆமென்றிடுவான்.

சிறு செடிக்கும் கருணை கொண்டு மென்மை காண்பிப்பவள், மொத்தமாக அவனது இதயத்தை வேரோடு பிடுங்கிச் சென்று வலியை கொடுத்திருந்தாள்.

வலி கொடுத்தவர்களை பார்க்கவே கூடாதென வேண்டுபவர்களுக்கு மத்தியில், தனக்குள் ரணத்தை மிச்சமாக விட்டுச் சென்றவளை தினம் தினம் பார்த்தே தனது வலியின் அளவை கூட்டிக்கொண்டிருக்கின்றான்.

திகழோவியனின் கோபத்தின் அளவு அவனது பார்வையின் அழுத்தத்தில் தெறித்தது/தெரிந்தது.

இவற்றிற்கெல்லாம் மாறாக அவனின் மனம், 'அம்மணி' என கூவியது.

அவனது அவ்வழைப்பில் அவள் உருகுகிறாளோ இல்லையோ ஒவ்வொரு முறையும் இதயத்தில் சொக்கி சுருண்டு உயிர் கரைந்திடத்தான் அவளை அவ்வார்த்தையால் அழைப்பான்.

இப்போதும் அவனது கோபத்தை முந்தி ஓரம் தள்ளிவிட்டு அவனது ஆழ்மன காதல் அவனுக்கு இதம் தரும் சொல்லை உச்சரித்திட கண்கள் சிவக்க அவளை வெறித்திருந்தான்.

'விட்டுவிட நினைக்கவும் இல்லை...

சேர்ந்துவிடும் எண்ணமும் இல்லை,
அவனிடத்தில்...'

என்ன சொல்லி நடந்ததை மறப்பதென்றும் அவனுக்குத் தெரியவில்லை.

மொத்தமாக அவனை மரிக்கச் செய்த நிகழ்வு அவனுள் வடுவாய் தேங்கிவிட்டது.

"சித்தப்பா..." என்ற குரலில் நொடியில் தன்னிலையில் மாற்றம் கொண்டு அறைக்குள் திரும்பியவன், வேகமாகச் சென்று சுகிர்தன் மற்றும் சுவிதாவின் ஐந்து வயது மகள் நிதன்யாவை தூக்கிச்சுற்றி மார்போடு அணைத்துக் கொண்டான்.

அவனின் பார்வையை உணர்ந்த போதும் தனது வேலையில் கண்ணாக இருந்தவள், அவன் உள் சென்றுவிட்ட கணம் வலி மிகுதியாய் அப்படியே தரையில் அமர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு மடியில் முகம் புதைத்துக் கொண்டாள் திகழோவியனின் செந்தாழினி.

"நான் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கணும். எல்லாம் என்னால" என்று ஓசையின்று கண்களில் நீர் வழியவிட்டவள், "மன்னிக்கவே மாட்டீங்களாங் மாமா?" என்று இதயம் துடித்தாள்.

வேதனையின் தடத்தால் பெயருக்கேற்ற நிறமாய் நொடியில் முகம் கன்றி சிவந்தது.

தன்மீது அவனுக்கு ஆயிரம் மடங்கு கோபம் இருப்பினும் தினமும் அவன் தன்னை காண்பதற்காகவே அந்நேரம் மலர்களை பறித்திட அங்கு நின்றிடுவாள்.

இந்நேரம் பால்கனிக்குச் சென்றால் அவளை பார்க்கலாம், தேங்கிக்கிடக்கும் வலி கீறப்படுமெனத் தெரிந்தும், அவளை பார்க்காதே என கட்டளையிடும் மூளையை கண்டுகொள்ளாது, காலையில் துயில் கலைந்ததும் கால்களை தன்னைப்போல் பால்கனிக்கு நகர்த்திடுவான்.

அவன் தன்னை காணும் பார்வையில் காதலின்றி உறைந்திருக்கும் கோபத்தை உணர்ந்திடும் போதும், அவனுக்காக மலர்களின் மீது கண்கள் பதித்து நின்றிருப்பாள். தான் பதில் பார்வை பார்த்தால் அவன் சென்றிடுவான் என்பது நன்கு தெரிந்ததாலே, விழிகளை அவன் புறம் பதிய வைத்திடமாட்டாள்.

கோபமாகவேனும் அவனது கண்கள் தன்னை தீண்டுகிறதே எனும் சிறு குளிர் அவளுள்.

"இன்னும் எவ்வளவு நேரம் பூவையே பறிச்சிக்கிட்டு நின்னுட்டு இருப்ப?" என்ற குரலில், முகத்தை அழுந்த துடைத்து நிமிர்ந்தவள், வேகமாக வீட்டிற்குள் சென்றாள்.

"நிது கண்ணு இன்னைக்கு ஸ்கூல் போவலைங்களா?" என்று குழந்தையின் மூக்கோடு மூக்கு உரசி, அவளின் குண்டு கன்னத்தில் முத்தம் வைத்தான்.

"குத்துதுங்க சித்தப்பா" என்று நிதன்யா கன்னத்தை தேய்த்திட...

"என்னதுங்க?" என்ற திகழோவியன் முகத்தில் அதுவரையிலான சோக மேகங்கள் களைந்து அப்படியொரு இதம். குழந்தைகளிடத்தில் இயல்பாய் தோன்றும் சுகம்.

"உங்க மீசைதாங்க" என்று பிடித்து இழுத்தாள் சிறுமி.

நொடியில் அவனது புன்னகை காணாமல் போனது.

நெஞ்சம் அதிரும் நினைவில் மனதின் தவிப்புகளை சட்டென்று புறம் ஒதுக்கினான்.

"உன்ற ஐயனோட ஐயனை காலையிலே படாதபாடு படுத்துனீங்களாம்?" என்ற திகழோவியன், "பெரியவங்களுக்கு மரியாதை தரணுமுங்க என் செல்ல அம்மணி" என்று இரு விரலால் அவளின் மூக்கு நுனி பிடித்து... குழந்தையின் இரண்டு பக்க குதிரைவாலும் அசைய ஆட்டியிருந்தான்.

"நீங்க சொன்னா கேட்டுகிறேனுங்க. இப்போ வந்து என்னைய ஸ்கூல் போவ கெளப்புங்க" என்று அவனைப்போலவே அவனது மூக்கினைப் பிடித்து அசைத்தாள்.

"ஐயனும் மகளும் ஒண்ணு சேர்ந்தீங்கன்னா நேரம் போறது தெரியாதுங்களே!" என்று வந்த காமாட்சி, "பள்ளிக்கூடத்து வேன் வந்துப்புடும். சட்டுபுட்டுன்னு சொக்காவை மாத்தி கூட்டியா திகழு" என தன்னுடைய இளைய மகனின் கையில் பேத்திக்கான பள்ளி சீருடையை கொடுத்தார்.

"நான் ஸ்கூல் போவலங்க சித்தப்பா" என்று வேகமாக அவனது இடையிலிருந்து கீழிறங்கி நிதன்யா அறைக்குள் ஓடிட...

"நிது குட் கேர்ள் இல்லைங்களா? ஸ்கூல் போறதுக்கு என்னத்துக்கு இம்புட்டு அடம். இப்போ கொஞ்சமுன்ன கெளப்பிவிட சொன்னீங்களே. அதுக்குள்ள மனசு மாறியாச்சுங்களா?" எனக்கேட்டு இரண்டே எட்டில் மகளை தூக்கியிருந்தான்.

தூக்கிய வேகத்திற்கு இரு கையிலும் ஏந்தி, சிறுமியின் வயிற்றில் முகம் புதைத்து கிச்சுகிச்சு மூட்டி அவளை சிரிக்க வைத்தான்.

குழந்தை அவனின் கைகளில் துள்ளி கலகலவென சிரிக்க, திகழோவியன் முகத்தில் அத்தனை பூரிப்பு.

அக்காட்சியை கண்ணுற்ற காமாட்சி சட்டென்று நீர் நிறைந்திட்ட கண்களை மறைத்தவராக, நெஞ்சம் விம்மினார்.

ஒருநாளும் அவரின் இளைய மகனை இதுபோன்று கைகளில் ஏந்தி செல்லம் கொஞ்சியதில்லையே! நிதன்யாவுடனான அவனுடைய பொழுதுகளை எல்லாம் காண நேரிடும் போது, காமாட்சிக்குள் மகனை தன்னுடைய கைகளில் சீராட்டாவில்லையே என்ற எண்ணம் பெரும் ஏக்கமாக உருவெடுக்கும்.

இக்கணமும் ஏக்கம் அவரின் அகத்தினை நிறைக்க... எப்போதும்போல் நொடியில் தன்னை மீட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டார்.

மகளும், சிறிய தந்தையும் சில கணங்களாகினும் தங்களின் உலகத்திற்குள் மூழ்கியிருக்க...

"உன்ற கைக்குத்தான் அடங்குவாள். நீயே குளிப்பாட்டி கெளப்பிவிட்டுப்போடு திகழு" என்று வெளியேறிய காமாட்சியின் முதுகை தவிப்போடு தழுவியிருந்தான் திகழோவியன்.

அன்னையின் மனம் அறியாதவனா அவன்.

இதில் அவனைப்போல் அவரும் அல்லவா உண்மை அறியாது... தற்போது வலி சுமக்கின்றார்.

அடி வயிற்றில் சுருண்ட வலி பெரும் மூச்சாய் வெளியேறிட... நிதன்யாவை தூக்கிக்கொண்டு குளியலறை நுழைந்து, அவளுக்கு கதைகள் கூறி சிரிக்க வைத்தபடி அனைத்தும் முடித்து பள்ளிக்கு தயார் செய்திருந்தான்.

அலங்கார கண்ணாடி முன்பிருக்கும் சிறு மேசையின் மீது நிற்க வைத்து, நிதன்யா பள்ளிப்பாடல் பாடியபடி அசைந்தாட, அவளின் அசைவுக்கேற்ப தானும் சுழன்றான்.

"ஆடாம நில்லு கண்ணு" என நூறு முறையாவது சொல்லியிருப்பான். இரண்டு குதிரைவால் குடுமி போடுவதற்குள்.

தலைவாரி முடித்து இருபக்கமும் அவளின் தலையை திருப்பி திருப்பிப் பார்த்தவன்,

"இந்த பக்க சிண்டு கீழ இறங்கியிருக்கு... அவுத்து கட்டுவோம்" என்று மகளிடம் பேசிக்கொண்டே வாயில் சீப்பினை வைத்து, அவிழ்க்க முனைய...

"இந்த ஆளு இன்னைக்கும் ஆரம்பிச்சிட்டாங்க... பொழுது விடிஞ்சா நெதம் இதே பொழப்பா" என்று காமாட்சியின் குரல் கேட்கவும், சண்டையின் சலசலப்பு பலவித குரலாய் ஒலித்தது.

வேகமாக பால்கனி பக்கம் சென்று சத்தம் வரும் திசையில் பார்த்தான் திகழோவியன்.

வீட்டின் பின் பக்கம் சில வயல்களைத்தாண்டி பயிரின்றி கரம்பாய் கிடந்த ஒற்றை பாத்தியில் சிலர் கூடியிருக்க, வேட்டியை வரிந்து கட்டியவராக பக்கத்து வயல் உரிமையாளரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் அவனின் தந்தை ராஜேந்திரன்.

சலிப்பாக இருபக்கமும் தலையை அசைத்துக் கொண்ட திகழோவியன், பார்வையை திருப்பிட, பக்கத்து வீட்டு பின்கட்டு மதில் சுவற்றை பிடித்துக் கொண்டு சண்டை நடக்கும் இடத்தை பார்த்திருந்தாள்... சற்று நேரத்திற்கு முன்னர் பவளமல்லி பறித்துக் கொண்டிருந்தவள்.

சடுதியில் முகத்தை தகராறு நடக்கும் திசைக்குத் திருப்பியிருந்தான்.

"இக்கட்டையே நின்னு வேடிக்கை பார்க்காமா, அக்கட்டு போயி உன்ற ஐயனை அடக்கி கூட்டியா செந்தா" என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த மகளின் முதுகில் அடி வைத்தார் தேவகி.

"அட போங்கம்மா" என்று முகத்தை சுருக்கி, "பொழுது விடிஞ்சா இது நடக்கிறதானுங்க. எதுக்குங்க இப்போ என்னைய அடிச்சீங்க?" என்று சிணுங்கினாள்.

அவள் முகம் காணவே கூடாதென நினைத்தாலும், இவர்களின் பேச்சு சத்தத்தில் தன்னைப்போல் அவர்களை கவனித்த திகழோவியன், அவளின் சுருங்கிய வதனத்தில் தன்னுடைய மனமும் சுருள்வதை உணர்ந்து விறைத்தான்.

'மானங்கெட்ட காதல்' என மனதில் சினம் கொண்டு உதிர்த்தான்.

"உன்ற பேச்சு ஐயன் கேட்பாங்க செந்தா. போ... கூட்டியா!" என்றார்.

"ஆமா ஆமா... கேட்டுட்டாலும். எனக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரமாவுதுங்க" என வீட்டிற்குள் போக முயன்றவளை பிடித்து, "என் கண்ணுல..." என்று கொஞ்சி அனுப்பி வைத்தார்.

"ஸ்கூல் பஸ் போயிடுச்சுன்னா நான் என் வண்டி எடுத்துட்டுப்போவேன். வேணாம் சொல்லக்கூடாதுங்ம்மா நீங்க" என்றவளாக மதிலைக் கடந்து வயல் வரப்பில் எட்டி அடி வைத்தாள்.

அவளது வார்த்தைகளில்... அவளுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்த நிகழ்வுகள் மனதில் நினைவுபெற சுவற்றில் ஓங்கி குத்தியவனாக உள்ளே சென்றுவிட்டான்.

அறைக்குள் வந்து முகத்தை மாற்றிக்கொண்டவனாக நிதன்யாவை கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.

"அவ்ளோதானுங்க அம்மணி... ரெடியாகியாச்சு. சாப்பிட்டுப்போட்டு ஸ்கூலுக்கு போவவேண்டியதுதானுங்க" என்று அவளின் காதில் குட்டியாக ஊசலாடிக் கொண்டிருந்த ஜிமிக்கியை விரலால் சுண்டிவிட்டான்.

"நீங்க அம்மணி சொல்றது பிடிச்சிருக்குங்க சித்தப்பா" என்ற நிதன்யா, அவனின் கன்னத்தில் எக்கி முத்தம் வைத்து,

"நான் சாப்பிடுறேனுங்க... நீங்க சீக்கிரம் ரெடியாகி வாங்க. என்னைய நீங்கதானுங் இன்னைக்கு வண்டியில கூட்டிப்போவனும்" என்று சித்தப்பனுக்கு கட்டளையிட்டவளாக கீழே ஓடினாள்.

'அம்மணி.' ஒற்றை வார்த்தை போதும் அவனை உருக்கி நெகிழ்த்திட... இப்போது அவ்வார்த்தையே அவனை உருகுலைக்கவும் போதுமானது. பேச்சில் இயல்பான அவ்வார்த்தையை வெகுவாக தவிர்த்திடுவான். இருந்தும் இன்று தன்னைப்போல் இருமுறை மகளை விளித்திருக்க காதலாய் அவன் மனம் ஊசலாடியது.

"தேவையில்லாத நெனப்பெல்லாம் வேணாம் திகழ்" என தனக்குத்தானே வலியுறுத்தியவனாக குளியலறைக்குள் புகுந்தான்.

திகழோவியன் குளித்து வரும் வரையிலும், சலசலப்பின் சத்தம் ஓயாது ஒலித்துக்கொண்டே இருந்தது.

"ஆரம்பிச்சா நிறுத்தமாட்டாங்களே" என்று சலிப்பாக எண்ணியவனாக, தயாராகி கீழே சென்றான்.

"இது இப்பைக்கு ஓயாது போல கொழுந்தனாரே! ஒரு எட்டு போய் பாருங்க... மாமாவும் (சுகிர்தன்) இல்லைங். அத்தை பேச்செல்லாம் அவங்ககிட்ட எடுபடாது" என்ற சுவிதாவின் பேச்சினை தட்ட முடியாது விருப்பமற்று அங்கு சென்றான் திகழோவியன்.

"அப்பா, சொல்றதை கேளுங்கங்க... சண்டை வேணாமுங்க."

அருகில் சென்றதும் திகழோவியனுக்கு கேட்டது செந்தாழினியின் குரல் மட்டுமே!

பெண்ணவளும் அவனின் வருகையை எதிர்பார்க்கவில்லை. திமிரிக்கொண்டு ராஜேந்திரனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தன்னுடைய தந்தை நாராயணனின் கையை பிடித்து இழுத்தவளாக மன்றாடிக் கொண்டிருந்தவள், திகழோவியனின் வருகையில், தன்னை உரசும் அவனது பார்வையில், வெகு நாட்களுக்குப் பின்னர் அருகில் அவனது முகம் பார்த்தாள்.

தீயில் காய்ந்திய ஈட்டியின் செந்நிற கூர் முனையாய் திகழோவியனின் செந்தணல் பார்வை, அவளின் விழி வழி இறங்கி இதயத்தில் சுட்டது.

செந்தாழினியின் விழிப்படலம் தவழ்ந்த கண்ணீரும் அவனது இதயத்தில் ஈரத்தை உண்டாக்க முடியாது அவனது தகிப்பில் வற்றி ஆவியாகியது.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இருவரின் பார்வையும் கலந்து நின்றது.

அவனது தீயாய்!

அவளது குளிராய்!

கிடைத்தால் மட்டும் காதலென்றில்லை.

மூச்சின் மிச்சம் வரை,
அவனு(ளு)க்கென துடிப்பதும் காதல் தான்!


நெஞ்சில் உயிர் நிறையும்...

 

Author: STN - 03
Article Title: உந்தன் நெஞ்சில் உயிராக 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
Hmm interesting start ❤️ ❤️ ❤️ ❤️
திகழ்க்கு எவளோ கோவம் இருக்கோ அதை விட செந்தா மேல காதலும் இருக்கு.....
ஆன அவனின் கோவம் அதை வெளி காமிச்சிக்க விடல.....
இவளும் தான் தான்னு மறுகர.....
 
Jul 18, 2026
4
2
3
Thangachimadam
கோவை வட்டார வழக்கோடு கிராமத்து பின்னணியில் தொடங்கிய முதல் அத்தியாயம்... அருமை.

திகழோவியன் செந்தாழினியின் வாழ்க்கையில் அப்படி என்ன நடந்திருக்கும்?..

வெண்மை நிற பூக்களின் ஆரஞ்சு வர்ண காம்புகளை இரு விரல்களால் பற்றி தளிர் தண்டுக்கும் காம்புக்கும் நோகாதவாறு பறிப்பவளின் மீது வரையறுக்க முடியாத கோபம்..... என்ற வரிகளை எழுதி கோபம் கொண்டவன் காதல் கொண்டவளின் மீது உள்ள கோபத்தை கூட கொல்லை கவி நயத்துடன் கூறிய வரிகள் என்னை வெகுவாக ஈர்த்தது.....👏👏👏👏👏