உந்தன் நெஞ்சில் உயிராக 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
122
33
Chennai
உந்தன் உயிராக 2

முட்டி நின்ற பார்வையை அதீத கோபத்துடன் விலக்கிய திகழோவியனின் செயல் செந்தாழினியின் மனதை துவள வைத்தது.

"காலம்பரையே என்ன ஓரியாட்டம் (சண்டை)?" என்றான். ராஜேந்திரனின் மீது அழுத்தமான பார்வையை பதித்து...

கடுமை சுமந்து இறுக்கமாக வெளிவந்த அவனது குரலில் செந்தாழினியின் இதயம் நடுங்கி துடித்தது.

அதிர்ந்துக்கூட பேசி அவனது குரல் ஒலித்தது இல்லை. ஆனால் இன்று அந்தக்குரலில் எத்தனை அழுத்தம்? காரணம் அவளல்லவா? நெஞ்சம் தளும்பியது.

கலங்கி நின்ற கண்களை பிறர் அறியாது உள்ளிழுத்துக் கொண்டாள்.

"என்ட்ரா திகழு... உன்ற ஐயன் பண்ற எதுவும் சரியில்லை சொல்லிப்புட்டேன்" என்று பதில் வழங்கிய நாராயணன்,

"நாத்து நடவு இருக்கு... இன்னைக்கு இட்டேறி (வரப்பு) கழிக்கலாம்னு கழிச்சேன். ஏதோ உம்மட காட்டை நான் வளைச்சுப்போடுற கணக்கா அவ்ளோக்கு உன்ற ஐயன் ஓரியாட்டம் ஆடிட்டு வர்றான்" என்றார்.

"எம்மட காட்டை சொந்தமாக்கிக்க நீ இட்டேறியை கழிச்சு, உம்மட காட்டு பரப்பை விஸ்த்தீரணம் பண்ணுவ, நான் கம்முன்னு இருக்கணுமா?" என்ற ராஜேந்திரன்,

திகழோவியனின் முறைப்பில்,

"அவன் தான், இட்டேறியை கழிக்கிறேன்னு கொஞ்சம் கொஞ்சமா நம்மட பக்கம் நகத்திட்டு வந்துட்டான். பைக்கு(bike) போற கணக்கா இருந்த இட்டேறி. இப்போ ஒத்த ஆளு சுலுவா போய்வர முடியல. கால் வைக்க முடியுதாக்கும்?" என மகனின் முகம் காண முடியாது எங்கோ பார்த்துக்கொண்டுக் கூறினார் ராஜேந்திரன்.

"உன்ற ஐயன் பொய் சொல்றாரு திகழு. ரெண்டு பக்கமும் பட்டாபட்டம் கழிக்கும்போது அளவு சரியத்தானே செய்யும். கழிச்சா மட்டும் போதுமா? திரும்ப சேத்தை அள்ளி பூசினாதான அளவு கூடும். உன்ற ஐயன் அதை செய்றதே இல்லை. அப்புறம் இப்படித்தான் ஆவுமாக்கும்" என்று நாராயணனும் பேச்சினை முடிக்க நினைக்காது புகார் வாசித்தார்.

இருவரின் சண்டையும் வழக்கமான ஒன்று. மேற்கில் மறையும் சூரியன் வழக்கத்தை மாற்றி தெற்கில் மறைந்தாலும் இவர்களின் சண்டை மட்டும் ஓயாது. ஒரே வயதுடையவர்கள். பக்கத்து பக்கத்து வீடு. சிறுவயது பள்ளி சண்டையில் ஆரம்பித்தது, தொட்டதற்கும் சண்டையென இன்றளவிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தினமும் நடக்கும் இவர்களின் சண்டை அங்கிருப்போருக்கு பழக்கமானது. பார்க்கும் போதெல்லாம் முறைத்துக்கொண்டு திரிபவர்கள், நினைத்த நேரமெல்லாம் சண்டையிட்டுக் கொள்வர்.

இன்றும் தேவையில்லாத ஒன்றை பிடித்துக்கொண்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

நாராயணன் பரம்படித்த வயிலின் வரப்பினை சீர்ப்படுத்த மண்வெட்டியால் கழித்துக் கொண்டிருக்கும் போதுதான் வரப்பு மீது ராஜேந்திரன் நடந்து வந்தார்.

பக்க ஓரங்கள் வெட்டப்பட்ட வரப்பு, சேறு படிந்து ஈரமாக இருந்திட, ராஜேந்திரன் வழுக்கி விழுந்திருந்தார்.

சண்டை ஆரம்பித்திருந்தது.

இரு தரப்பினருக்கும் பொதுவான வரப்பு. சண்டையிட வேறு காரணம் வேண்டுமா என்ன?

எப்போதடா என்று இருப்பவர்கள் இதுதான் சாக்கென்று காலையிலே ஆரம்பித்திருந்தார்கள்.

இருவரும் மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொண்டிருக்க... திகழோவியனுக்கு ஆயாசமாக வந்தது.

இடையில் கைகளைக்குற்றி, வலதுபக்கம் முகம் திருப்பி கண்கள் மூடி இதழ் குவித்து ஊதிட, அவனின் சூடான சுவாசக்காற்று அந்தப்பக்கம் நின்றிருந்த செந்தாழினியின் முகம் தீண்டியது.

அவளுக்கு புதிதான ஒன்றல்ல... அவனின் வாசம், தீண்டல், யாவும். ஆனால் இன்று? பாலைவனத்தில் முளைத்திட புதைந்திருக்கும் விதை, துளி நீர்ப்பட்ட களிப்பில் மண்ணை முண்டி பிளந்து துளிர்ப்பதைப்போல, அவனது பாராமுகம் காட்டும் தகிப்பில் ஆவியாகிக் கொண்டிருப்பவளுக்கு, அவனது மூச்சுக்காற்றால் நெஞ்சம் குளிர்ந்தது.

மேனியெங்கும் கூச்செறிந்திட கலங்கிவிட்ட கண்களோடு உதட்டில் புன்னகையும் தேங்கியது.

"என்ட்ரா திகழு நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீபாட்டுக்கு அமைதியா நின்னுட்டு இருந்தினா என்ன அர்த்தம்?" நாராயணன் குரலில் இமைகள் திறந்தவன் பார்வையில் செந்தாழினி.

அவளின் முகம் காட்டும் ஒளியில், தனது செயலை உணர்ந்தவன், மீண்டும் தனது தகிப்பில் அவளை பொசுக்கியிருந்தான்.

சட்டென்று செந்தாழினியின் வதனம் வாடி சுருங்கிட, தன்னுடைய முகத்தில் திருப்தி பாவனையை படரவிட்டு மேலும் அவளை வருந்தச் செய்தான்.

"இப்போ நான் என்னங் மாமா செய்யணுங்க?"

"நீயென்ட்ரா அவனை மாமான்னு கூப்பிட்டுக்கிட்டு? வேலியில போற ஓணான கக்கத்துல புடிச்சு கட்டிக்கிற மாதிரி, முன்னபின்ன நமக்கு யாருன்னே தெரியாதவனெல்லாம் ஒறம்பறையாகிப்புடுமா?" சத்தமாகக் கேட்ட ராஜேந்திரன் திகழோவியன் பார்த்தப் பார்வையில் அமைதியாகினார்.

ராஜேந்திரனுக்கு தன்னுடைய இளைய மகன் திகழோவியன் என்றால் பயம் தான். அது பயமென்றுக்கூட இல்லை. அவரே உணர்ந்திடாத குற்றவுணர்வு. அவனிடம் எதுவென்றாலும் அடங்கிப்போகத்தான் தோன்றும். காரணம் அவனுக்கு அவர் இழைத்த பெரும் அநியாயம். ஒருவகையில் பெற்ற மகனுக்கு தந்தையாய் அவர் செய்தது துரோகம். அதற்கான குற்றவுணர்ச்சி அவனிடம் அவரை எதுவொன்றிலும் அடங்கிப்போக வைத்திடும்.

"நான் வேணும்னு எதுவும் செய்யல திகழு. உன்ற ஐயனை புரிஞ்சிக்க சொல்லு" என்ற நாராயணன், ராஜேந்திரனை முறைத்தார்.

"என்னத்துக்குங்க முறைக்கோனும். ஒன்னுமத்த விஷயத்துக்கு இம்பாடு ஓரியாட்டம் தேவைங்களா?" ராஜேந்திரனின் முகம்பாராது வினவிய திகழோவியன், "மன்னிச்சிடுங்க மாமா" என்றதோடு, அவன் மன்னிப்பு என்றதில் எதையோ கூற வாய் திறந்த ராஜேந்திரனை மீண்டும் பார்வையாலே அடக்கி, "நீங்களும் கொஞ்சம் இந்த சடவுப்பேச்செல்லாம் வேணாமுன்னு ஒதுங்கிப்போவணுமுங்க மாமா. ஊர் பார்க்க நின்னு வெடுக்கு வெடுக்குன்னு பேசுறதெல்லாம் நல்லாயில்லைங்க" என்றான், நாராயணனிடம்.

"நான் ஒதுங்கினா மட்டும் போதுமாக்கும்? உன்ற ஐயன்கிட்டவும் சொல்லு கண்ணு" என்ற நாராயணன், "உன் மொவத்துக்காக இப்போ வுட்டுப்போறேன் திகழு" என்று மண்வெட்டியை எடுத்து தோளில் மாட்டியவராக தன்னைப் பார்த்து மூக்காலே காத்தடித்துக் கொண்டிருந்த ராஜேந்திரனைப் பார்த்து வெட்டிக்கொண்டுச் சென்றார்.

நாராயணன் நகர்ந்ததும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நபர்களும் களைந்து செல்ல, திகழோவியன்... ராஜேந்திரன், செந்தாழினி இருவரையும் ஒரு பொருட்டாகக்கூட கருதாது வேட்டியை மடித்து கட்டியபடி வரப்பில் நீண்ட எட்டுக்களை வைத்துச்செல்ல, வேக அடிகளின் காரணமாக சேற்றின் ஈரம் வழுக்கிட, விழும் முன் வரப்புக்கு கீழான வயலில் காலினை அழுந்த ஊன்றி நிலையாக நின்றவன், தனக்கு பின்னால் திரும்பி வாயில் கை வைத்து அதிர்ந்து நின்ற செந்தாழினியை கண்கள் சிவக்கப் பார்த்தான்.

சில நொடிகளுக்கு முன்னால்... அவன் கீழே விழவிருக்கிறான் எனும் பதற்றத்தில்...

"அய்யோ மாமா பார்த்துங்க" என்று கத்தியிருந்தாள்.

அவளின் மாமா எனும் விளிப்பிற்கே அவனது இந்த முறைப்பு.

"சின்னப்பய நீ கால் ஊணி நின்னுப்புட்ட... என்னால முடியாம விழுந்துப்புட்டேன். இதுக்குத்தான் அவனை வகுந்துட்டு இருந்தேன் குறுக்கால வந்து கலைச்சுப்புட்ட" என்ற ராஜேந்திரன், "மேலாப்ப அடி வைச்சு வந்து சேருங்க" என்று சென்றார்.

திகழோவியனின் அழுத்தமான முறைப்பில் செந்தாழினியின் தலை தானாக தரை தாழ்ந்தது.

"ஏய் செந்தா இன்னும் என்ன புள்ள அக்கட்டிக்கே நின்னுக்கிட்டு இருக்க?" என்ற தாயின் குரலில் நிமிர்ந்தவள் கண்ணில் திகழோவியனின் உருவம் தென்படவில்லை.

சென்றிருந்தான்.

முழுதாக அவளை தனது வாழ்விலிருந்து நீக்கியிருந்தவனுக்கு, அவள் இன்றும் யாரோ தான்.

"மன்னிக்கவே மாட்டீங்களாங் மாமா?" நின்ற இடத்திலிருந்து அவனது வீட்டைப் பார்த்தவள், விடையறிந்த கேள்வியை அவனிடமே கேட்டிருந்தாள்.

அன்று தவறு முழுக்க அவள் மீதே!

அவன் சொன்னதைப்போன்று சற்று ஆறப்போட்டிருந்தாலே எல்லாம் இந்தநாள் சுமூகமாக அமைந்திருக்கும். அன்றைய சூழலுக்கு மாபெரும் தவறு தான். அவனுமே ஒப்புக்கொண்டது. ஆனால் இக்கணம், ஒன்றுமேயில்லாத நிகழ்வாகிப்போனது. திகழ் சொல்லியதுப்போன்று சற்று பொறுமை காத்திருந்திருக்கலாம்.

அன்று அவன் பக்கமும் இன்று அவள் பக்கமும் அவர்களின் காதல் தவறாகிப் போனதுக்கு விதி மட்டுமே காரணமாகும்.

எதுவொன்றும் கடந்த பின்னர் அந்நேரத்தில் இப்படி செய்திருக்கலாமென பல வழிகள் தோன்றிடும். ஆனால் அந்த நாட்களில்... மனம் முழுக்க நடந்துவிட்ட நிகழ்வில் அடுத்து என்னவென புரியாது துவண்டுவிடும். அக்கணம் எடுக்கப்படும் முடிவுகள் யாவும் நம்மை சிதைப்பவையாகவே இருந்துவிடும். அப்படியொரு நிலையில்தான் அன்று செந்தாழினியும், திகழோவியனும் சிக்கிக்கொண்டது.

பழைய நிகழ்வின் யோசனையோடு நிகழ் மறந்து வீட்டிற்குள் நுழைந்த மகளின் தலையில் கொட்டினார் தேவகி.

"எதுக்குங்கமா கொட்னீங்க? வலிக்குதுங்க..." என்று முகம் சுருக்கியபடி தலையை தேய்த்துக்கொண்ட செந்தாழினி, "நான்பாட்டுக்கு பள்ளிக்கூடம் கிளம்பி போயிருப்பேனுங்க. எல்லாம் உங்கனால" என்றாள்.

"என்கிட்ட மட்டும் குதிகுதின்னு குதி. பள்ளிக்கூடத்துக்கு போவனும் லேட்டாவது சொல்லிக்கிட்டு இருந்துப்புட்டு இப்போ என்னவோ கனவில்ல கண்டுக்கிட்டு வர. பள்ளிக்கூடத்து பஸ் வந்துப்புடும்டி, சட்டுன்னு கெளம்புடி" என்று மீண்டும் தலையில் கொட்டினார்.

"ம்மோவ்... இனிமேலு கொட்டுனீங்கனா..." என்று இழுத்து நிறுத்திய செந்தாழினி, என்ன சொல்வதென்று தெரியாது, "சாயங்காலம் வந்து சொல்றேனுங்க" என அறைக்குள் நுழைய,

"செந்தா" என்ற காமாட்சியின் குரல் வீட்டு பின்கட்டில் ஒலித்தது.

"உங்க ஃப்ரெண்ட்டு கூப்பிடுறாங்க" என்றவள், வெளிவாயிலில் நின்று யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் தந்தையை எட்டிப்பார்த்துவிட்டு பின்னால் சென்றாள்.

"கூப்பிட்டிங்களா அத்தை?" எனக்கேட்டுக்கொண்டே மதில் சுவற்றின் பக்கம் வந்தவள், " மாமா இல்லீங்(க)ளா?" என ஒரு வயல் வரப்பு கடந்து இருக்கும் அவரது வீட்டினைப் பார்த்தாள்.

"உன்ற அம்மா என்ன பண்றா கண்ணு?" என்ற காமாட்சி, "சுவிதா தட்டைப்பயிறு சாறு வச்சா. தேவகிக்கு புடிக்குமே. அதான் கொண்டாந்தேன்" என்ற காமாட்சி அவளின் கையில் குழம்பு கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு, "சாமான நான் அப்புறம் வாங்கிக்கிறேன்" என்றார்.

இரு குடும்பத்திலும் மூத்த ஆண்கள் இருவருக்கும் தான் ஆகாது. எதற்கும் ஒத்துவராது. ஆனால் மற்ற ஆட்கள் அத்தனை நெருக்கம். அதற்கு காரணம் தேவகி, காமாட்சியின் நட்பு.

காமாட்சி ராஜேந்திரனை மணம் முடித்து வந்த மூன்றாம் வருடம், தேவகி நாராயணனை மணம் முடித்து வந்தார்.

பக்கத்து பக்கத்து வீடென்றாலும், வந்த புதிதில் ராஜேந்திரன், நாராயணின் சண்டைகள் பற்றி அறியாத தேவகி காமாட்சியைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்திட, அப்போது தொடங்கிய நட்பு, இன்றுவரை தொடர்கிறது.

"உன்ற ஐயன் அக்கட்டிக்கு போனதும், தேவகியை கிணத்துக் காட்டுக்கு வரச்சொல்லு. இன்னைக்கு அங்கதான் மாடு மேய்க்கணும்" என்று நகர்ந்தார்.

இருவரின் சம்பாஷனையையும் தனது அறை பால்கனியிலிருந்து திகழோவியன் பார்த்துக் கொண்டிருந்தான்.

வீட்டு ஆண்கள் பார்க்கும் போதெல்லாம் முட்டிக்கொண்டு நிற்க, இவர்களுக்குள்ளான நெருக்கம், உறவுமுறை அவனுக்கு அதிசயம் தான்.

அவனது காதலுக்கு முதல் தடையாக வந்து நின்றதே ராஜேந்திரன், நாராயணன் சண்டை தானே! ஆனால் இதைவிட பெரிய பூதம் ஒன்று அவர்களின் காதலுக்கு முன்வந்து இதுவொரு காரணமே இல்லையென்றல்லவா ஆகியிருந்தது.

'என் அம்மாகிட்ட பேச மட்டும் இவங்க சண்டை தடையில்லாயாக்கும்.' மனதில் நொடித்தான்.

"சித்தப்பா வரலைங்களா?" கீழிருந்து நிதன்யா கத்தி அழைக்க, வேகமாக ஓடி வந்திருந்தான் திகழோவியன்.

"போலாங்களா அம்மணி?" என்று மகளை தூக்கியவன், சுவிதா நீட்டிய நிதன்யாவின் பள்ளி பையையும், உணவு பையையும் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தான்.

திகழோவியன் வண்டியில் அமர, நிதன்யாவின் பள்ளிப் பேருந்து அவர்கள் வீட்டைத்தாண்டிச் சென்றது.

"பஸ் வந்துப்புடுச்சே கண்ணு. அதுலே போறீங்களா?" காமாட்சி கேட்டிட, குழந்தை முடியாதென அழ ஆரம்பித்திட...

"இருக்கட்டுங்ம்மா... எனக்கும் அக்கட்டிக்கு வேலையிருக்கு" என்றான்.

"ரெண்டு மூனு நாளா கொடுத்துவிடுற பலகாரமெல்லாம் சாப்பிடாம அப்படியே கொண்டுவர்றா திகழு. அவள் கிளாஸ் மிஸ் பார்த்து சொல்லிப்புடு" என்றாள் சுவிதா.

"சரிங்க அண்ணி" என்று வண்டியை உயிர்ப்பித்து சாலையில் சீரான வேகத்தில் பயணித்தான்.

"ஏங்கண்ணு ஸ்கூல்ல சரியா சாப்பிடுறது இல்லைங்களா?" தனக்கு முன் அமர்ந்திருந்த நிதன்யாவின் தலையில் தன்னுடைய நாடி பதித்து விலகியவனாக வினவினான்.

"டைம் பத்தமாட்டேங்குதுங்க" என்ற நிதன்யா, தங்களை கடந்து செல்லும் பள்ளிப் பேருந்திலிருந்து அவளது தோழி கை அசைத்திட, தானும் சிரித்த முகமாய் கை அசைத்தாள்.

பேருந்திலிருந்து கைக்காட்டிய குழந்தையை, அப்படி செய்யக்கூடாதென உள்ளிருந்த செந்தாழினி கண்டிப்பது தெரிந்தது. பேருந்தும் விரைந்து சென்றிருந்தது.

"நான் சரியா சாப்பிடுறதில்லைன்னு மிஸ்கிட்ட சொல்லப்போறீங்களா சித்தப்பா?" நிதன்யா கேட்க,

"ம்ம்... உன்ற அம்மா சொல்லி அனுப்பனாங்களே" என்றான் திகழோவியன்.

"என்ற மிஸ் மாத்திப்புட்டாங்கங்க... செந்தா சித்திதானுங்க என்ற மிஸ் இப்போ... நீங்க அவங்ககிட்ட பேசமாட்டிங்களேங்க. அதான் சொன்னேனுங்க" என்ற நிதன்யா, "ரெண்டு தாத்தா மாதிரி உங்களுக்கும் சண்டைங்ளா?" எனக் கேட்டாள்.

இருவருக்கும் நடுவில் நடந்ததற்கு பெயர் சண்டையா? என்னவென்று சொல்வான்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல கண்ணு. இதுவரைக்கும் ரெண்டுபேரும் பேசிக்கிட்டதில்லை" என்ற திகழோவியன், "இதெல்லாம் கவனிக்காம பாடத்தை மட்டும் கவனிங்க" என்றான்.

பள்ளிக்கூடமும் வந்திருக்க, வாகனங்கள் நிற்குமிடத்தில் செந்தாழினி வந்த பேருந்து நின்றிருந்தது. அப்போதுதான் இறங்கிக் கொண்டிருந்தாள்.

"மிஸ்! சித்தப்பா" என்று வண்டியிலிருந்து இறங்கிய நிதன்யா, "நீங்க பேசுறீங்களா? கூப்பிடட்டுமா?" எனக்கேட்டு, "மிஸ்" என அழைத்திருந்தாள்.

இவர்களை கவனிக்காது சென்று கொண்டிருந்த செந்தாழினி நின்று திரும்பிட, அவளுடன் மற்றொரு ஆசிரியையும் இருந்திட, திகழோவியனால் எப்போதும் போல் முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல முடியவில்லை.

வண்டியிலிருந்து இறங்கியவன், அணிந்திருந்த வேட்டியை நீவி விட்டவனாக, நிதன்யாவின் கையை பிடித்துக்கொண்டு, வேண்டா வெறுப்பாக செந்தாழினியின் அருகில் சென்றான்.

திகழோவியன் தன்னிடம் பேச வருகிறான் என்பதே செந்தாழினிக்கு உள்ளுக்குள் தடதடக்க வைத்தது.

வாய் ஓயாது அவனிடம் பேசிய நாட்கள் அதிகம். அவனது குரல் கேட்டு நடந்தது அதிகம். ஆனால் இன்று, அவன் அவளிடம் பேசுவது அவளுக்கு வரம் போன்றது. ஒருமுறை பேசிவிடமாட்டானா என முந்தைய இரவு கூட ஏங்கியிருந்தாள்.

திகழோவியன் தன்னிடம் பேசுவது எதற்காக யாருக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவன் தன்னிடம் பேச வேண்டுமென்பது அவளின் பெரும் எதிர்பார்ப்பு. முகம் பார்க்கவே யோசிப்பவன் தன்னை நோக்கி வருவது அவளுக்குள் குறுகுறுக்க வைத்தது.

பழைய நாட்களின் மிச்சம் மனதின் ஓரம் தேங்கி சலசலத்தது.

தோளில் மாட்டியிருந்த கைப்பையை இறுக்கிப் பிடித்தாள்.

திகழோவியன் அருகில் நெருங்கிட, கேட் மூடப்படுவதற்கான மணி ஒலித்தது.

செந்தாழினி கண்கள் சிமிட்டாது தன் முகத்தை நேருக்குநேர் பார்த்து நிற்பவனின் முகத்தை மனம் கலங்க விழிகளுக்குள் காட்டாது சிறைபிடித்தாள்.

"எங்க சித்தப்பா உங்ககிட்ட பேசணுங்களாம் மிஸ்" என்ற நிதன்யா, "பேசுங் சித்தப்பா" என்று அவனின் கையை பிடித்து ஆட்டினாள்.

"சொல்... சொல்லுங்... என்ன விஷயமாங்க பேசணும்?" திக்கித் திணறினாள் செந்தாழினி.

"பெல் அடிச்சிருச்சு நீங்க பேசிட்டு வாங்க... நான் போறேன்" என்று மற்றொரு ஆசிரியை சென்றுவிட, திகழோவியனுக்கு அவளிடம் பேசத்தான் வேண்டுமா எனத் தோன்றியது.

செந்தாழினி தன் முகம் தீண்டாத அவனது விழிகளின் மீதே கட்டுண்டிருக்க... அவனோ பார்வையை நாலாபுறமும் ஓட்டிக் கொண்டிருந்தான்.

"எதும் பிரச்சினைங்களா மேடம்?" காவலாளி கவனித்துக் கேட்க,

"இல்லைங்" என்று பதில் வழங்கியவள், "சொல்லுங்க மா...மா" என முடிக்கும் முன்னர், வாயில் ஒற்றை விரல் வைத்து வேண்டாம் என்பதைப்போன்று இருபக்கமும் தலையசைத்திருந்தான். அத்தனை இறுக்கத்துடன்.

சட்டென்று துளிர்த்து கன்னம் இறங்கிய கண்ணீரை வேகமாக புறம் கைக்கொண்டு துடைத்திட்டாள்.

"ஸ்கூலுக்கு கொடுத்துவிடுறதை நிது சரியா சாப்பிடுறதில்லைன்னு அண்ணி சொல்ல சொன்னாங்க" என எங்கோ பார்த்துக்கொண்டுக் கூறியவன், "உள்ள போ" என்று மகளின் முதுகில் தட்டியவனாக அங்கிருந்து வேகமாக சென்றிருந்தான்.

செல்லும் அவனது வண்டிக்குப் பின்னால் சுழன்ற புழுதி, அவனின் வேகத்தில் பொதிந்திருந்த கோபத்தின் அளவை அவளுக்கு உணர்த்தியது.

"என்ன பண்ணா ஏத்துப்பீங்க?" அவளது மனதின் கதறல், அவனுக்கு கேட்டிட வாய்ப்பில்லை.

அங்கிருந்து நேராக தங்களின் திராட்சை தோட்டத்திற்கு வந்தவன், துளிர்விட்டிருந்த திராட்சை கொடிகளை மேலேற்றுவதற்காக பந்தல் போடும் வேலை ஆரம்பித்திருக்க, அதனை மேற்பார்வை பார்த்தவனாக அங்கிருந்த ஓட்டு வீட்டின் திண்ணையில் சென்று அமர்ந்துகொண்டான்.

மனம் அத்தனை கொதிப்பில் இருந்தது.

செந்தாழினியை தினம் தினம் பார்ப்பது அவனுக்கு நரக வேதனைதான். அதற்காக அவன் வீட்டைவிட்டா சென்றிட முடியும்? அவளது பார்வையில் விழாது ஒதுங்கிச்செல்ல பழகியிருந்தவனுக்கு, இன்றைய தினம் ஆரம்பித்ததும் இருமுறை அவளை பக்கமிருந்து பார்த்துவிட்டதில், பழைய காதல் மேலெழும்புவதோடு, தன்னுடைய கோபத்திற்கான ரணமும் தூண்டப்பட நிலையில்லாது தவித்தான்.

அந்நேரம் ராஜேந்திரனின் எண்ணிலிருந்து அழைப்பு வர, அழைத்தது அன்னையென தெரியாது மொத்த கோபத்திற்கும் வார்த்தை வடிவம் கொடுத்து அவரிடம் கொட்டியிருந்தான்.



நெஞ்சில் உயிர் நிறையும்...

 

Author: STN - 03
Article Title: உந்தன் நெஞ்சில் உயிராக 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
பாவம் டா திகழ்....அப்பாவும் ஒரு காரணமா????
என்ன செஞ்சி வெச்சாரோ....
நாராயணன் பேசறதை பார்த்தா அவருக்கு இவங்க லவ் விசயம் தெரியாதோ?????
காமு & தேவி ரெண்டு பேரும் கூட பிரெண்ட்டா தான் இருக்காங்க
 
Jul 18, 2026
4
2
3
Thangachimadam
அப்படி அவங்க ரெண்டு பேருக்கும் என்ன நடந்துச்சுன்னு நமக்கு தெரியல.

ஆனா அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாட நம்மலால புரிஞ்சுக்க முடியுது.

கமெண்ட் போடாம கடந்து போய்விடுவோம் என்று நினைத்தாலும் கூட எழுத்தாளரின் சில அழகான உவமைகள் என் எண்ணத்தை தடம் புரள வைக்கிறது.

இதோ அந்த வரிகள்,

பாலைவனத்தில் முளைத்திட்ட புதைந்திருக்கும் விதை துளி நீர்பட்ட கழிப்பில் மண்ணை முண்டி பிளந்து துளிர்பதை போல அவனது பாராபட்சம் காட்டும் தக்பில் ஆவியாகிக் கொண்டிருப்பவனுக்கு அவனது மூச்சுக்காற்று தந்த தகப்பில் அவள் நெஞ்சம் குளிர்ந்திருந்தது....... என்ன மாதிரியான வரிகள். உணர்வுகளோட வெளிப்பாட உவமை கொண்டு உணர்த்தியது உண்மையில் பாராட்டத்தக்கது.👏👏👏👏.