• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member

அவனுடைய பேச்சு முடிய, குட்டிப் பானை ஒன்றில் ‘கிரிபத்’ என்னும் பால் சோறு பொங்க ஆரம்பித்தார்கள். அந்த இடைவெளிக்குள் இவர்களிடம் ஓடிவந்தான்.

நிரல்யாவின் கையில் ஒரு பையைத் திணித்துவிட்டு,
“எப்பிடியாவது அவளைப் போட வச்சுக் கூட்டிக்கொண்டு வா. உனக்கும் இருக்கு.” என்று சரண்யாவிடம் சொல்லிவிட்டு மீண்டும் ஓடிப் போனான்.

அந்தப் பைக்குள் அவர்களின் பாரம்பரிய உடைகள் இரண்டு கிடந்தன.

“இதையா?” என்று அதிர்ந்த நிரல்யா, “நான் போடமாட்டன்!” என்றாள் உடனேயே.

அது சற்றே வில்லங்கமான உடைதான். கீழே தைக்காத சரம் போன்ற ஒரு துணி. அதை இடுப்பில் சுற்றிக் கட்டிக்கொள்ள வேண்டும். உடலை அப்படியே கவ்விக் பிடிக்கும் மேல் சட்டை. வயிறும் தொப்புளும் தெரியும் வகையிலும் அதை அணியலாம். அதனால்தான் நிரல்யா மறுக்கிறாள் என்று தெரிந்து, அதற்கு ஒன்றும் சொல்லாமல்
அந்த உடையின் மேல் சட்டையை எடுத்துப் பார்த்தாள் சரண்யா. அது அவள் பயப்படும் அளவுக்கு இருக்காது என்றே தோன்றிற்று.

“முதல் போட்டுப் பாப்பம் வா. நல்லா இல்லாட்டி மாத்துவம்.” என்று சரண்யா சொன்னது சரியாகவே பட, தயக்கமும் குறுகுறுப்புமாக உடைகள் மாற்றும் அறைக்குள் சென்று அணிந்துகொண்டனர்.

உண்மையில் அவள் பயந்த அளவில் இருக்கவில்லை. மேலே அணியும் சட்டை, இடுப்பில் சரம் கட்டியிருந்த இடம் வரைக்கும் வந்திருந்தது. கூடவே கழுத்தைச் சுற்றிப் பிறில் வைத்துத் தைக்கப்பட்ட துணி, முன் பக்கத்தையும் கச்சிதமாக மறைத்துக்கொண்டதில் சங்கடம் அகன்றாள் நிரல்யா. இப்போது பார்க்கையில் அவளுக்கே அந்த உடை மிகவும் பிடித்துப் போயிற்று. அவன் பார்த்துவிட்டு என்ன சொல்லுவான் என்கிற ஆவலும் ஆசையும் பிறந்திருந்தது.

“எனக்கும் சூப்பரா இருக்கு என்னடி?” என்றுகொண்டு வந்தாள் சரண்யா.

“ஓமடி. ஆனா மறந்தும் கையத் தூக்கக் கூடாது. பிறகு வயிறு தெரியும்.” என்று பேசிக்கொண்டு வெளியே வந்தனர்.

இவர்களுக்காகவே காத்திருந்தான் போலும் சிசிர. இவர்கள் தூரத்தில் வரும்போதே கண்டுவிட்டான். தயங்கி தயங்கி நடந்து வந்தவளிடமிருந்து பார்வையை அகற்றவே முடியவில்லை. அப்படியே அவர்கள் இனத்துப் பெண்தான். அந்த நிமிடமே மாலையை மாற்றிவிடலாமா என்று தோன்றிவிடவும் தடுமாறிப்போனான்.

மெல்ல அவன் முன்னே வந்து நின்றவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. கை விரலைப் பற்றியபடி பார்வையை எங்கெங்கோ அலையவிட்டாள்.

“நீங்க ரெண்டுபேரும் கதைச்சிட்டு வாங்க, நான் அங்க போறன்.” என்று அவர்களைத் தனியாக விட்டுவிட்டுச் சரண்யா நழுவியதைக் கூட உணரும் நிலையில் இருவரும் இல்லை.

அவன் ஒருவித மயக்கத்தில் இருந்தான். அவளை இழுத்துக்கொண்டு தனியாகச் சென்றவனுக்குள் பெரும் தவிப்பு. அவளைப் பார்ப்பதும் பார்வையை அகற்றுவதுமாக நின்றான். தலையைக் கோதினான். சேர்ட்டை பின்னால் இழுத்துவிட்டான். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் ஒரு வேகத்துடன் அவளை அணைக்க வந்தான்.

அவள் பயந்து மிரளவும் கன்னங்களைத் தாங்கி, அவள் நெற்றியில் முட்டி, “வடிவா இருக்கிறாய் நிரா.” என்றான் தமிழில்.

ஆனந்தமாய் அதிர்ந்து விழிகளை விரித்தாள் நிரல்யா. “என்ன பார்வை இது?” சிரிப்புடன் கேட்டவனின் கைகள் அவள் இடையில் படிந்தன. “ஹே…” என்று திகைத்து அவள் விலக முயல, “பிழையா நடக்கமாட்டன். எனக்கும் நீ முக்கியம்!” என்றான் இப்போதும் தமிழில்.

அவளால் இன்னுமே நம்ப முடியவில்லை. தமிழில்தான் கதைக்கிறானா என்று அவனையே பார்த்திருந்தாள்.

அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து, “எங்கட கம்பஸுக்கு புதுசா ஒருத்தி வந்தா. என்னை முறைச்சு முறைச்சுப் பாத்தா. எனக்கு என்னவோ அவள் என்னைக் கண்ணாலையே சாப்பிட்ட மாதிரித்தான் இருந்தது. அந்தக் குவேனிக்கு இந்த விஜயனைப் பிடிக்குமா தெரியாது. ஆனா இந்த விஜயனுக்குக் குவேனியத் தவிர வேற எதுவும் முக்கியம் இல்ல. அதான் தமிழ் படிக்கிறன்.” என்றான். உச்சரிப்புகள் அத்தனையும் படு பிழை. இவ்வளவையும் சொல்லி முடிப்பதற்குள் திணறிப்போனான். ஆனாலும் தமிழில்தான் சொன்னான்.

அதுவே அவள் விழிகளைத் தளும்ப வைத்தது. நெஞ்சமெல்லாம் உருகிக் கரைய, அதுவரையில் அவளை ஆட்டிய தடுமாற்றங்கள் எல்லாம் மறைய, அவன் மட்டுமே சகலதுமாய் அவள் எண்ணங்களில் நிறைந்து நின்றான். அவன் மூச்சுக் காற்று முகத்தில் மோதும் தூரத்தில் அவன் கைவளைவுக்குள் நிற்கிறோம் என்பதையே மறந்து அவனையே பார்த்து நின்றாள்.

அவனுக்குள்ளும் என்னென்னவோ ஆசைகள் எல்லாம் எழுந்து வந்தன. இருக்கும் இடமும் அவள் சங்கடப்பட்டுப் போவாள் என்கிற எண்ணமும் கட்டுப்படுத்த அவளோடு சென்று தனியாக அமர்ந்துகொண்டான். அதற்கு முதல் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டு ஒரு செல்பி எடுத்துக்கொண்டான்.

தோளினை உரசிக்கொண்டு இருந்தவனைக் கண்டு, “ஆரும் பாத்தாலும்…” என்று முணுமுணுத்தாள்.

“பிழையா நினைக்கிற மாதிரி நாங்க ஒண்டும் செய்ய இல்ல நிரா.” என்றான் அவன்.

“எண்டாலும் வேண்டாம்.”

சரி என்று கொஞ்சமே கொஞ்சம் விலகி அமர்ந்தான். இருவராலும் ஒன்றும் கதைக்க முடியவில்லை. ஓராயிரம் எண்ணங்கள் உள்ளத்தில் பொங்கின. வார்த்தைகளாய் ஒன்று கூட வரமாட்டோம் என்று சண்டித்தனம் செய்தன.

அவள்தான் சமாளித்து, “என்ன உடுப்பு இது?” என்றாள் சிரிப்புடன்.

தன்னை ஒருமுறை குனிந்து பார்த்துவிட்டு, “ஏன் நல்லா இல்லையா?” என்றான் சிசிர.

அவள் இல்லை என்று சிரிப்புடன் உதட்டைப் பிதுக்கினாள்.

“நீ வாங்கித் தந்திருக்கலாம்தானே.” விளையாட்டுக்குத்தான் கேட்டான். ஆனால், அன்னையோடு கடைக்குபோய் அவனுக்கு ஒன்றும் வாங்காமல் திரும்பி வந்தது நினைவில் வர, அவள் முகம் வாடிப்போனது.

“இதுக்கே முகம் வாடுவியா? நான் சும்மா சொன்னனான்.” என்று ஒற்றைக் கையால் அவளை ஒருமுறை இறுக்கி அணைத்து விடுவித்தான். ஆனாலும் அவளின் மனவாட்டம் போகவில்லை. “இஞ்ச(இங்க) வாங்க, ஒரு நாளைக்குப் போய் எடுத்துக்கொண்டு வருவம்.” என்று சொன்னாள்.

மறுத்தால் இன்னும் முகம் வாடுவாள் என்று தெரிய, சரி என்று அவள் நெற்றியில் முட்டி விலகினான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மீண்டும் ஒரு சுகமான மௌனம் அவர்களுக்குள். அவர்கள் பேசிக்கொண்ட வார்த்தைகளை விடவும் அந்த மௌனம்தான் ஒருவரின் மனத்தை மற்றவருக்கு இன்னும் அழகாய்ச் சொல்லிற்று.

அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவளின் ஒற்றைக் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, “எனக்கு உன்ன இப்பிடியே எங்கட வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போகவேணும் மாதிரி இருக்கு.” என்றவன் மெல்லத் தன்னைப் பற்றி, தன் வீட்டு நிலையைப் பற்றி, தனக்கான பொறுப்புகள் பற்றி என்று எல்லாவற்றையும் சொன்னான். ஏன் சொல்கிறோம் என்று அவனும் சொல்லவில்லை, ஏன் சொல்கிறாய் என்று அவளும் கேட்கவில்லை.

“டேய் வாடா! நேரமாகுது!” தேடி வந்த மகிந்த எட்ட நின்றே அழைத்தான்.

“இந்தா வாறன் மச்சான்!” என்று குரல் கொடுத்துவிட்டு, “உன்னோட இன்னும் நிறையக் கதைக்கோணும் நிரா. முதல் இந்தக் கொண்டாட்டம் எல்லாம் முடியட்டும்!” என்றுவிட்டு எழுந்து போனான் சிசிர.

அசையக்கூட மனமற்றவளாக ஒருவித சுகமான மயக்கத்தில் திளைத்திருந்தவள் போகிறவனையே பார்த்திருந்தாள்.

அவர்கள் அமர்ந்திருந்த விதத்தைப் பார்த்து மகிழ்ந்த மகிந்த, சிசிர அருகில் வந்ததும், “என்ன மச்சான் ஓம் எண்டு சொல்லிட்டாளா?” என்று ஆர்வமாய் வினவினான்.

“ஓம்தான்.” என்றான் சந்தோசமாய்.

முகம் மலர, “சந்தோசம் மச்சான்!” என்று அவனை ஒருமுறை இறுக்கி அணைத்து விடுவித்தான் மகிந்த.

அவன் அங்கு என்ன வேலை பார்த்தாலும் அவளில்தான் அவன் கவனம் முழுவதும்.

பால் சோறு பொங்கி முடிந்ததும் கெவுங், கொண்டை கெவுங், முங் கெவுங் என்று பணியார வகைகள் கொக்கிஸ் எல்லாம் பால் சோற்றுடன் சேர்த்துப் பரிமாறினர். பிரத்தியேகமாக அவளுக்கும் சரண்யாவுக்கும் கொண்டுவந்து தந்துவிட்டுப் போனான் சிசிர.

கண் கட்டி முட்டி உடைத்தல், பப்பாசிப் பழத்தில் இருக்கும் கொட்டைகளை எண்ணுதல், ஓட்டப் பந்தயம், சிங்களக் கலாசார உடையில் அழகுராணிப் போட்டி, சாக்குப் பாய்ச்சல், கயிறிழுக்கும் போட்டி எல்லாம் நடந்தன.

இருவர் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, முகத்தால் மட்டும் பலூனைக் கீழே விழாமலும் வெடிக்காமலும் வைத்திருக்கும் விளையாட்டும் நடந்தது.

“வாறியா, நீயும் நானும் போவம்?” என்று அவள் காதுக்குள் வந்து கேட்டான் சிசிர.

தப்பித்தவறி பலூன் விழுந்துவிட்டால் அவர்கள் இருவரின் முகங்களும் என்னாகும்? இதில் பலூனை முகங்களால் பிடித்துக்கொண்டு அங்கே போய்க்கொண்டிருக்கும் பாட்டுக்கு ஆடவும் வேண்டுமாம். போங்கடா டேய்! கிளுகிளுப்புக்கு என்றே கேம்களை தேடி எடுப்பார்கள் போலும். அங்கே ஆணும் பெண்ணுமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு, சோடியாக ஓடுகிறோம் என்று உருண்டு பிரண்டுகொண்டிருந்தார்கள். நன்றாக முறைத்துவிட்டுச் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிரல்யா.

பெண்கள் குரூப்பாக ஆடினார்கள். சிலர் பாடினார்கள். திடீரென்று, “அடுத்த பாடல் சிசிர பண்டார!” என்று அறிவிக்கப் பட்டதும் பரபரப்பாகிப் போனாள் நிரல்யா. அவன் நன்றாக ஆடுவான் எண்டு தெரியும். பாடவும் செய்வானா?

மைக்குடன் நடுவில் வந்து நின்றான் சிசிர. இசை மட்டும் மெலிதாக ஒலிக்க ஆரம்பித்தது. பார்வை அவள் மீதே இருக்க, உதட்டோர முறுவல் இன்னும் விரிய, “ஹே…” என்று அவன் தன் கம்பீரக் குரலில் ஆரம்பிக்கையிலேயே அவளுக்குத் தேகமெல்லாம் சிலிர்த்தது.

லஸ்ஸன லஸ்ஸன மகே ஆதரீயே
ஓஹோ மெச்சர லஸ்ஸன ஒயா கொஹெத ஹிட்டியே
லஸ்ஸன லஸ்ஸன மகே ஆதரீயே
ஓஹோ மெச்சர லஸ்ஸன ஒயா கொஹெத ஹிட்டியே
ஒயா மகே ஆதரீயே ஒயா மகே ஆதரீயே
முது அவிஹின்சகாவி மகே மனலோல தேவி
ஆதரியே ஏ ஏ
ஆதரியே வெயு(weyu) மே பெம் கீ வெல்(pem gee wel)
லஸ்ஸன லஸ்ஸன மகே ஆதரீயே
ஓஹோ மெச்சர லஸ்ஸன ஒயா கொஹெத ஹிட்டியே

அவன் பாடிய வரிகள் முழுமையாக அவளுக்குப் புரிந்ததா என்றால் இல்லை. ஆனால் உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் தேவையா என்ன? அவன் பார்வை, அதில் வழிந்த நேசம், அந்தக் குரலில் சொட்டிய காதல் எல்லாமாகச் சேர்ந்து அவள் விழிகளில் கண்ணீரைச் குழும வைத்தன. இதழ்களில் புன்னகையும் விழிகளில் கண்ணீருமாக அவன் காட்டும் பேரன்பில் உருகி நின்றாள்.

அவனும் இந்த உலகத்தில் இல்லை. அவனைச் சுற்றியும் யாரும் இல்லை. அவனும் அவளும் மட்டுமே! தன் நேசத்தை அவன் சொல்கிறான். அவள் கேட்கிறாள். இத்தனை காலமும் இதயம் முழுக்கத் தளும்பி வழிந்த அன்பை, அவள் விழிகளைப் பார்த்துச் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பை, தான் அவள் மீது கொண்ட நேசத்தின் ஆழத்தை அந்த வரிகளினூடு அவளிடம் கடத்தினான்.

கண்மணி கண்மணி என் காதலியே
ஓஹோ என்னுயிர் பெண்மணி எனையாளும் பூவே
கண்மணி கண்மணி என் காதலியே
ஓஹோ என்னுயிர் பெண்மணி எனையாளும் பூவே

என்று தமிழில் அடுத்த வரிகளை அவன் பாடவும் அவள் விழிகள் விரிந்தே போயின. அதுவும் அந்த வரிகள் சொல்லும் பொருளிலும், அதை அவளைப் பார்த்து அவன் பாடிய அழகிலும் அவள் அவள் வசத்தில் இல்லவே இல்லை.

நீ எங்கே இருந்தாயே என் கண்ணைத் திறந்தாயே
நீ எங்கே இருந்தாயே என் கண்ணைத் திறந்தாயே
தேவதையே ஏ ஏ தேவதையே என் வானம் நீ நீ நீ!
கண்மணி கண்மணி என் காதலியே
ஓஹோ என்னுயிர் பெண்மணி எனையாளும் பூவே

அதற்குமேல் அவனாலும் முடியவில்லை. அவள் மீதான நேசத்தின் பேரலையில் விழிகள் கலங்கி, குரல் கரகரத்துவிட வேகமாக அவளுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டு, தோள் பட்டையில் தன் கண்களைத் துடைத்துக்கொள்ள, அவளுக்கு மட்டுமல்ல அங்கு நின்ற எல்லோருக்குமே அவன் காதலின் ஆழம் புரிபட்டுப் போயிற்று.

நிரல்யாவுக்கு கரகரவென்று கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. அவன் காட்டும் அன்பை, உயிர் நேசத்தை அவளின் சின்ன இதயத்தால் தாங்க முடியவில்லை. மூச்சு முட்டியது, உதடுகள் அழுகையில் துடித்தன, கைகால்கள் நடுங்கின.

“ஓ மச்சங்! ஐ லவ் யூ டா!” என்று பல குரல்கள் சத்தமாய் ஒலித்ததில் சிரித்துக்கொண்டு நிமிர்ந்தவன், திரும்பித் தன் காதலியை நோக்கினான். கன்னத்தில் கண்ணீர் வழிய, ஓடிப்போய் அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டும் என்று உந்திய உணர்வை, சரண்யாவின் கையைப் பற்றி அடக்கியபடி நின்றிருந்தாள் அவள்.

அதற்குமேல் அவனும் தாமதிக்கவில்லை. மைக்கை நண்பனிடம் தூக்கி எறிந்துவிட்டு ஓடிவந்து, காற்றுக் கூட புகுந்துவிடாதபடிக்கு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். இருவர் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர்.

அவர்களைச் சுற்றி நின்றவர்கள் கரகோசம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருந்தது.


கருத்திட

ஹாய் ஹாய்,

ஒரு வழியா நீங்க எதிர்பார்த்த ஒன்றை அல்லது ஐயோ இது நடந்துவிடக் கூடாது என்று நினைத்த ஒன்றை எழுதி முடிச்சிட்டேன். எப்பிடி இருக்கு என்று மறக்காமச் சொல்லுங்க.

மற்றது அந்த பாட்டு ஸீன். அவர்களின் மனம் திறக்கும் அந்த இடத்துக்கு ஒரு டான்ஸ் தான் செட் பண்ணி இருந்தேன். சிசிர இன்னொரு பெண்ணோடு ஆடுவான், அது அவளுக்குக் கோபத்தைக் கொடுக்கும், ஊடலும் கூடலும் என்பதுபோல் அந்தக் கோபத்தின் பின்னே அவன் மனம் திறப்பான். இப்படித்தான் அவர்கள் மனதைப் பரிமாறும் இடம் யோசிச்சு வச்சிருந்தேன்.

ஆனா திடீர் எண்டு
Hanza RH தான் இந்தப் பாட்டை என் குரூப்பில் போட்டிருந்தா. அதைக் கேட்டதும் அந்தப் பாட்டை மிஸ் பண்ண எனக்கு மனமேயில்லை. இந்த இரண்டு நாள்களில் குறைந்தது ஐம்பது தடவைகளுக்கு மேல் கேட்டிருப்பேன். சிசிர என் மனதுக்குள்ளேயே நிக்கிறதாலையா என்னவோ தெரிய இல்ல, கேட்க கேட்கக் கேட்கிற ஒவ்வொரு முறையும் மனதை என்னவோ செய்யுது. அதைக் கேட்க கேட்க என் மனக்கண்ணில் உருவானதுதான் இப்ப எழுதியிருக்கும் அந்தக் காட்சி.

அந்தப் பாட்டு லிங்க் கீழ போடுறன். லிரிக்சும் போடுறன். ப்ளீஸ் எனக்காக ஒருமுறை ரெண்டையும் மேட்ச் பண்ணி கேட்டுப் பாருங்க. அந்த பீல் வாவ் தான். அப்பதான் சிசிரவின் நேசத்தை இன்னும் ஆழமாய் உங்களாலும் உணர முடியும்.

அந்த ஸீன் நல்லா இருந்தாலும்
Hanza RH க்குத்தான் பாராட்டு. நல்லா இல்லாட்டியும் அவாவைத்தான் கேளுங்க. எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல :love: .

Hanza RH : உண்மையாகவே மிக்க நன்றி அந்தப் பாட்டை எனக்கு அறிமுக படுத்தியத்துக்கு. அவ்வளவு பிடிச்சிருந்தது. இந்தக் கதை முடியிற வரைக்கும் கேட்பேன் என்று நினைக்கிறேன்.


வேற என்ன மக்களே, நாளைக்கு எபி போடா முடியுமா தெரிய இல்ல. எழுதிட்டா போடுவேன். இல்ல வெள்ளி வரும். சரிதானே? அதுவரையில் சிசிரவின் நேசத்தை கொண்டாடுங்கள்.

நன்றி வணக்கம்!


லஸ்ஸன லஸ்ஸன மகே ஆதரீயே
ஓஹோ மெச்சர லஸ்ஸன ஒயா கொஹெத ஹிட்டியே
லஸ்ஸன லஸ்ஸன மகே ஆதரீயே
ஓஹோ மெச்சர லஸ்ஸன ஒயா கொஹெத ஹிட்டியே
ஒயா மகே ஆதரீயே ஒயா மகே ஆதரீயே
முது அவிஹின்சகாவி மகே மனலோல தேவி
ஆதரியே ஏ ஏ
ஆதரியே வெயு(weyu) மே பெம் கீ வெல்(pem gee wel)
லஸ்ஸன லஸ்ஸன மகே ஆதரீயே
ஓஹோ மெச்சர லஸ்ஸன ஒயா கொஹெத ஹிட்டியே

கண்மணி கண்மணி என் காதலியே
ஓஹோ என்னுயிர் பெண்மணி எனையாளும் பூவே
கண்மணி கண்மணி என் காதலியே
ஓஹோ என்னுயிர் பெண்மணி எனையாளும் பூவே

நீ எங்கே இருந்தாயே என் கண்ணைத் திறந்தாயே
நீ எங்கே இருந்தாயே என் கண்ணைத் திறந்தாயே
தேவதையே ஏ ஏ தேவதையே என் வானம் நீ நீ நீ!

கண்மணி கண்மணி என் காதலியே
ஓஹோ என்னுயிர் பெண்மணி எனையாளும் பூவே

 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
இன்னொரு விசயம் அந்த உடுப்பு. உங்கள் பார்வைக்கு:

இதில் வெள்ளை நிறத்தில் இருப்பது அவர்கள் அவர்களின் புத்த சமயம் (தகம் பாசல்) கற்கப்போகும்போது அணிவது. சாதாரணமாக அணிவது தேடி பார்த்தேன் கிடைக்க இல்ல. இது இப்ப கட்டிக்கோ ஒட்டிக்கொ வேட்டி மாதிரியும் வந்திட்டான் எண்டு அம்மா சொன்னா. எனக்கும் விவரம் தெரிய இல்ல. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கோ.


428924754_1090811998815616_4190637379857805787_n.jpg

images.jpgsilk-lama-saree.jpg106404308_100426521742900_2101042451977825874_n.jpg


428629608_1660163681181119_710244893547013575_n.png
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 10


அன்று அவன் அவளைத் தூக்கி அமர்த்திய அதே மரம். அதன் கீழே, முகமெல்லாம் கோபத்தில் சிவந்திருக்க அமர்ந்திருந்தாள் நிரல்யா. காதலைச் சொன்ன கணமே அவளைக் கடுங்கோபத்தில் திளைக்க வைத்த பெருமை சிசிரவையே சேரும்.

அத்தனை பேரின் முன்னும் தன் அன்பைச் சொல்லி, கட்டியணைத்து நெற்றி முத்தம் பதித்தவன் அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து ஆடினால் எப்படி இருக்கும்? அதற்கே அவள் கொதித்துப்போனாள். இதில், அந்தப் பாடலில் வருவது போலவே, அந்தப் பெண்ணோடு இசைந்து ஆடிக்கொண்டே அந்தப் பெண்ணின் கையில் வீணை வாசிக்கிறான். நினைக்க நினைக்கப் பற்றி எரிந்தது. அதற்குமேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் கண்களாலேயே அவனை எரித்துவிட்டு, விறுவிறு என்று தனிமையைத் தேடி வந்துவிட்டாள்.

அவளைச் சுற்றியிருந்த புற்களை எல்லாம் கதற கதறப் பிடுங்கி எறிந்துகொண்டு இருந்தவளின் முன்னே, மூச்சு வாங்கியபடி ஓடிவந்து நின்றான் சிசிர. நெருப்புப் பார்வை ஒன்றை அவனுக்கு வீசிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

கோபத்தில் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. அவ்வளவு அழகாய் நேசத்தைச் சொல்லிவிட்டு இப்படி அழ வைப்பானா? மூக்கு விடைத்து முகம் சிவக்கவும், “மகே நிரா!(என்ர நிரா!)” என்றபடி அவள் முன்னால் முழங்காலிட்டு (முட்டிக்கால்) அவளை அணைக்க வர, “என்னைத் தொடாதயடா!” என்று அவனைப் பிடித்து ஒரே தள்ளலாய்த் தள்ளிவிட்டாள் நிரல்யா.

வியப்பில் விழிகள் விரிய சிரிப்பு வந்தது அவனுக்கு.

“என்னைக் கட்டிப்பிடிச்சிட்டு இன்னொருத்தின்ர கையப் பிடிச்சு ஆடுவியாடா நீ? எவ்வளவு தைரியம் உனக்கு? என்ன சேட்டையா? கொன்றுவன்!” விழிகளில் அனல் பறக்க, விரல் நீட்டி எச்சரித்தளைக் கண்டு அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் போயிற்று.

அதுவும் அவளுக்கு இன்னுமே கோபத்தைத்தான் உண்டாக்கிற்று. “உங்களுக்குச் சிரிப்பா இருக்கா? இதேமாதிரி நானும்…” என்றவளை மேலே விடாமல், அவள் தடுப்பதையும் மீறி மூச்சு முட்டும் அளவுக்கு இறுக்கி அணைத்து, கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான் சிசிர.

அவ்வளவு நேரமாக மனம் கொதித்த கொதிப்பிற்கு அந்த முத்தம் பெருமருந்திட்டத்தில் கண்ணீர் பெருகிற்று அவளுக்கு.

“நிரா ப்ளீஸ்!” தன் கைகளுக்குள் இருந்தவள் முகத்தை நிமிர்த்திக் கண்களைத் துடைத்துவிட்டுவிட்டு, “உன்னக் கட்டிப்பிடிச்ச இந்தக் கையால இனி இன்னொருத்தியைத் தொடமாட்டன், சரியா? டான்ஸுக்காக எண்டாலும் இன்னொருத்தியோட நான் சோடியா நிண்டது இதுதான் கடைசி. கோபம் போச்சா?” என்று அவள் முகம் பார்த்து வினவினான்.

அப்போதும் விழிகள் இலேசாகக் கலங்க இல்லை என்று தலையை ஆட்டினாள்.

“போக என்ன செய்ய நான்? மற்றப் பக்கமும் கிஸ் பண்ணவா?” என்றவனை நன்றாக முறைத்தவள் திரும்பவும் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். சிரித்தபடி விலகியவன் அவள் முன்னேயே அப்படியே முட்டுக்காலில் அமர்ந்து, குறுகுறு என்று அவளையே பார்த்தான்.

“மொகத?(என்ன?)” பொய் முறைப்புடன் சிங்களத்தில் கேட்டாள் நிரல்யா.

அவளுக்குப் பதில் சொல்லாமல், அந்த மரத்தின் கொடியில் இருந்த குட்டிப் பூவொன்றை எட்டிப் பறித்து அவளிடம் நீட்டி, “கெமதித?(பிடிச்சிருக்கா?)” என்றான்.

“பூவப் பிடிச்சிருக்கு!” என்று வாங்கக் கையை நீட்ட, படக்கென்று பூவைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு, “இந்தப் பூவைத் தாற சிசிர பண்டாரய?” என்றான்.

கட்டிப்பிடித்து முத்தமெல்லாம் தந்துவிட்டுக் கேட்கிறவனுக்கு இல்லை என்று சொல்லிப் பார்ப்போமா என்றுதான் அவளுக்குள் ஓடியது. பளபளக்கும் அவள் கண்கள் அவளின் மனவோட்டத்தைச் சொல்லியிருக்க வேண்டும். அவள் மூக்கோடு தன் மூக்கை உரசி, “கருணாகரலா கெமதிய் கியலா கியன்ன.(பிளீஸ், பிடிச்சிருக்கு எண்டு சொல்லு!)” என்றான் கெஞ்சலாய்.

அவனின் ஆர்ப்பரிப்பான அன்பில் அவள் விழிகள் மீண்டும் கலங்கி போயின. “பயமா இருக்கு!” என்றாள் விழிகளில் கலக்கத்தோடு.

அவனும் விளையாட்டை விட்டுவிட்டு, “எய்?(ஏன்?)” என்று வினவினான்.

“என்ர அப்பா பொல்லாத ஆள். எனக்கு ஒரு மச்சான் இருக்கிறார். அவர் அப்பாவை விடக் கோவக்காரன்.”

“அப்பிடி என்ன செய்வினம் எண்டு நினைக்கிறாய்?”

என்னவும் செய்வார்கள். இவர்களால் கணிக்க முடியாத எதையும் செய்வார்களே! மளுக்கென்று நிறைந்துவிட்ட கண்ணீரை அவள் வேகமாகத் துடைத்துக்கொள்ள, “மகே பெடியோ (petiyo) நிரா, அன்டன்ன எபா!(என்ர செல்லம் நிரா, அழாத ப்ளீஸ்!)” என்று மென்மையாய் அணைத்துக்கொண்டு, “எனக்கு ஏதும் நடந்திடும் எண்டு பயப்பிடுறியா?” என்று மென் குரலில் வினவினான்.

தலையை நிமிர்த்தாமல் ஆம் என்பதுபோல் அசைத்தாள்.

“அதெல்லாம் ஒண்டும் நடக்காது. பயப்பிடாத. நாங்களும் இண்டைக்கோ நாளைக்கோ கலியாணம் கட்டப் போறேல்ல. நல்ல நிலைக்கு வந்த பிறகுதான்.”என்றான் அவளைத் தேற்றும் விதமாய்.

அவனுக்கு அவர்களைப் பற்றித் தெரியாதே. சாதாரண தமிழ்க் குடும்பம் என்றாலே தலை கீழாய் நிற்பார்கள். அவள் வீட்டில்… நினைக்கவே நெஞ்சு நடுங்கியது.

“நிரா!” என்று அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான். “இண்டைக்குத்தான் நாங்க லவ்வர்ஸா மாறி இருக்கிறோம். இண்டைக்கே இதையெல்லாம் நினைச்சுக் கவலைப் படுவியா? வா, அக்பர் பாலத்துக்குப் போயிற்று வருவம்.” என்று அழைத்துச் சென்றான்.

மனத்தின் மூலையில் அந்தப் பயம் இன்னுமே இருந்தாலும் அவனோடான அந்தப் பொழுதைச் சந்தோசமாகவே அனுபவித்தாள்.

அடுத்து வந்த நாள்களில் பல்கலையில் அவளால் முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை. அவன் காதலைச் சொன்ன அழகில் மொத்த விவசாய பீடத்துக்குமே இவர்கள் கதை தெரிந்திருந்ததே. பார்க்கும் முகங்கள் எல்லாம் சீண்டிச் சிரித்தன. “சிசிர எப்பிடி இருக்கிறான்?” என்று வேண்டுமென்றே கேட்டனர். மகிந்த அண்ட் கோ கூப்பிட்டு வைத்து எங்கே பார்த்தீர்கள், எப்படிக் கதைத்தீர்கள், அவன் என்னவெல்லாம் சொன்னான் என்று அவளைப் பேட்டி எடுத்தன.

ஒரு வழியாக இரண்டாம் செமஸ்டர் முடிந்தது. அன்று உன்னைக் கொண்டுவந்து விட வரவா என்று கேட்ட சிசிர, இந்த முறை கூடவே வந்து இரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தான். புறப்படும் அந்த நொடியில் அவளின் புறங்கையில் அவன் பதித்த முத்தம் பயணம் முழுமைக்கும் தித்தித்துக்கொண்டே வந்தது.

அங்கே வவுனியாவில் கட்டட வேலைகள் பெருமளவில் முடிந்திருந்தாலும் பூச்சு வேலைகள், எலக்ட்ரிக் வேலைகள், யன்னல் கதவுகள் வைக்கும் வேலைகள் என்று இன்னுமே இருந்தன. அதில் சுந்தரலிங்கமும் அனந்தனும் இருக்க நிற்க நேரமில்லாமல் இன்னுமே ஓடிக்கொண்டிருந்தனர். அது அவர்களை எதிர்கொள்ளப் பயந்துகொண்டிருந்த நிரல்யாவுக்கு வசதியாயிற்று.

அவளுக்காகவே இத்தனை பாடுபடும் அனந்தனும் அவளை ஊன்றிக் கவனிக்கத் தவறினான்.

அந்த விடுமுறையும் முடிந்து அவளுக்கு இரண்டாவது வருடமும் அவனுக்குக் கடைசி வருடமும் ஆரம்பமாயிற்று.

நேரம் கிடைக்கிற பொழுதுகளில் நன்றாகவே வெளியில் சுற்றினார்கள். கண்காணிக்க யாருமில்லா நிலையும், வீட்டினர் அருகிலில்லாததால் உண்டான தைரியமும் அவர்களைச் சுதந்திரமாகவே உலவ வைத்தது. மகாவலிகங்கைக் கரையோரம் நடப்பது, தாவரவியல் பூங்காவிற்குப் போவது, சுற்றியிருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பது என்று நன்றாகவே ஊர் சுற்றினார்கள்.

அன்று பல்கலையின் உள்ளக விளையாட்டு அரங்குக்கு பாட்மிண்டன் விளையாட இருவரும் வந்திருந்தார்கள். அதில் அவள் தோற்றால் தண்டனையாக அவள் சொல்வதை அவன் செய்ய வேண்டும். அவன் தோற்றால் அவன் சொல்வதை அவள் செய்ய வேண்டும். புதிரான அவர்களின் பந்தயத்தில் பட்மிண்டனின் அகரவரிசை கூடத் தெரியாத நிரல்யா தோற்றுவிட, அவனுக்கான தண்டனையாக, “ஒரு டான்ஸ் ஆடுங்க!” என்றிருந்தாள்.

“அவ்வளவு தானே!” என்றவன் அணிந்திருந்த சேர்ட்டை தூக்கி மார்பில் முடிந்துகொண்டு, வயிறு முழுமையாகத் தெரியுமளவுக்கு ஜீன்ஸை இறக்கி விட்டு, அவள் போட்டிருந்த சுடிதாரின் ஷோலை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு தமன்னாவின் காவலா பாட்டுக்குப் போட்ட ஆட்டத்தில் அரண்டு, “அம்மாடி, எனக்கு டான்ஸே வேண்டாம்!” என்று ஓடப் போனவளை விடவேயில்லை அவன்.

“நிண்டு பார்!” என்று பிடித்து நிறுத்திவிட்டு, தமன்னாவைப் போலவே பின் பக்கத்தையும் முன் பக்கத்தையும் அவன் ஆட்டிய ஆட்டில் அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வெட்கம் கெட்டவன், முன்னே நிற்பவள் ஒரு பெண் என்றுகூட யோசிக்கவில்லை. தமன்னாவை விட இரண்டு மடங்கு ஆடினான். சிரிப்பையும் அடக்க முடியாமல், அவனின் கன்றாவி டான்ஸை பார்க்கவும் முடியாமல் அவள் முகத்தைப் பொத்திக்கொண்டு சுவர் பக்கம் திரும்பியிருந்தாள். அவன் விடவில்லை. அவள் கைகளை எடுத்து விட்டுவிட்டு, தொப்புள் தெரியும் வயிற்றை வைத்து ஆடிய பெல்லி டான்சில், சிரிப்பு ஒரு பக்கம் கோபம் இன்னொரு பக்கம் என்று அடி வெளுத்திருந்தாள் நிரல்யா.

“நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க இந்தக் கருமத்தை நிப்பாட்டுங்க முதல்!” என்றபிறகுதான் அடங்கினான்.

“பாட்டும் டான்சும் எப்பிடி இருந்தது?” அவளின் இரு பக்கமும் சுவரில் கையூன்றி, மூச்சிறைக்க வினவியனின் மூச்சுக் காற்று அவள் முகத்தில் வந்து மோதிற்று.

உணர்வுகள் மாற, உள்ளத்தில் படபடப்புக் கூட அவள் வேகமாய் விலக முயல அவன் விடவில்லை.

“அண்டைக்கு தண்டனை தருவன் எண்டு சொன்னேனே. தரவா?” என்றான் அவள் முகத்தருகில் குனிந்து.

அவளுக்குப் பதற்றமும் வெட்கமும் சரிசமமாய் வந்துவிட, “உங்கட பக்கம் லவ்வரையும் அய்யே எண்டுதான் சொல்லுறது.” என்றாள் வேகமாக.

“எனக்கே சிங்களம் சொல்லித் தாறியா?” என்றான் அவன். அவள் உதட்டைக் கடித்து முகம் திருப்ப, “உண்மையச் சொல்லு, அந்த ‘அய்யே’ய என்ன அர்த்தத்தில் சொன்னனீ?” என்றான் அவன் இன்னும் அவளை நெருங்கி.

“அ…” என்று ஆரம்பித்தவளைப் பேச விடாது இடையிட்டு, “பொய் சொல்லுற வாய்க்குத் தண்டனை ரெண்டாக் கிடைக்கும்.” என்றான் எச்சரிக்கும் குரலில்.

“அடி வாங்குவீங்க! எங்க நிண்டு என்ன கதை பேச்சு இது?” என்று முறைத்தாள் அவள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது!” என்று அவளைப் பற்றியவன் அவள் முகம் நோக்கிக் குனிய, “ப்ளீஸ்… இதெல்லாம் வேண்டாம். எனக்குப் பயமா இருக்கு!” என்றவள் கெஞ்சலில் இடத்தை மாற்றி, கன்னக் கதுப்பில் தன் உதடுகளை அழுத்தி ஒற்றினான் அவன்.

அதற்கே அவள் தேகம் நடுங்கிப் போயிற்று. அவன் விடவில்லை. நிறுத்தி நிதானமாய் தன் முத்தங்கள் ஒவ்வொன்றும் அவள் முகத்தில் வரையும் கோலங்களை ரசித்தபடி அவள் முகம் முழுக்க முத்தமிட்டான். இதழ்களை மட்டும் நெருங்கவே இல்லை. வேண்டாம் என்றவள்தான் ஏங்கிப் போனாள்.

அவள் முகமே அவள் நிலையைக் காட்டிக் கொடுத்துவிட, “இப்ப இந்த நிமிசம் உன்ர விருப்பம் என்ன எண்டு எனக்குத் தெரியும். அது நிறைவேறின பிறகு அதுக்காகக் கவலையும் படுவாய். அதால வெளில எங்கயாவது தானா இன்னொரு சந்தர்ப்பம் அமையட்டும். அப்ப உன்ர ஆசை நிறைவேறும்!” என்று சொல்ல, “முதல் உடுப்பை ஒழுங்கா போடுங்க!” என்று முகம் சிவக்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் நிரல்யா.

அவனும் சிரித்துக்கொண்டு விலகினான்.



*****
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
மூன்றாவது செமஸ்ட்ரை முடித்துக்கொண்டு அவள் வவுனியாவுக்கு வந்தபோது, அவர்களின் நகைக்கடை திறப்புவிழா கொண்டாடுவதற்குத் தயாராய் நின்றது.

காலை எட்டுத் தொடக்கம் ஒன்பது நல்ல நேரமாம் என்று சொன்னதில் எட்டு மணிக்கே அங்கே நிற்பதுபோல் மனைவியையும் மகளையும் வந்துவிடும்படி சொல்லிவிட்டு, அதிகாலையிலேயே அனந்தனோடு கடைக்கு வந்திருந்தார் சுந்தரலிங்கம்.

இரண்டு மாடிக் கட்டடம். கீழே நகைக்கடையும் மேலே லொக்கர் அறைகளோடு சேர்த்து அவர்களின் தனிப்பட்ட தேவைக்கென்றும் ஒதுக்கியிருந்தார்கள்.

அவர் அழைப்பு விடுத்த முக்கிய பிரமுகர்கள் எல்லோரும் வரத்தொடங்கியிருந்தனர். கடையைத் திறக்கும் வரைக்கும் அமர்ந்திருப்பதற்கு ஏற்ப, கடையின் ஒரு பக்கமாகத் தற்காலிகக் கொட்டகை ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. அங்கு வைத்து வந்தவர்களுக்குப் பலகாரங்கள், அருந்துவதற்கு எல்லாம் கொடுத்துக் கவனித்துக்கொண்டான் அனந்தன்.

“மகனுக்குச் சமனா மருமகன் இருக்கிறதால உனக்குப் பெரும் பலம்தான் சுந்தரம்.” சுந்தரலிங்கத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சொல்ல, “அது எண்டா உண்மைதான். இப்ப சும்மா பெயருக்குத்தான் நான் முதலாளி. மற்றும்படி அவன்தான் எல்லாம்.” என்றவரின் பார்வையும் பிரியத்துடன் வேட்டி சட்டையில் ஓடி ஓடி எல்லோரையும் கவனித்துக்கொண்டு இருந்தவனில்தான் படிந்தது.

வசதிக்கு என்றுமே அவருக்குக் குறையிருந்ததில்லைதான். ஆனால், நகைக்கடை என்று சொல்கையிலும் இவ்வளவு பெரிய கடையாகப் பார்க்கையிலும் கிடைக்கும் அந்த மலைப்பும் பெருமிதமும் அடகு கடை இருந்தபோது கிடைத்ததில்லை. இது எல்லாம் அவன் விடாமல் நின்று, அவரிடம் சம்மதம் வாங்கிச் செய்ததால் உண்டானதாயிற்றே.

“என்னடா, இன்னும் ஏன் வெய்ட் பண்ணுறாய்?” என்று அந்த நண்பரே கேட்கவும், “வீட்டில இருந்து இன்னும் வரேல்ல மச்சான்!” என்றவர் எழுந்து அனந்தனிடம் வந்தார்.

“எங்க இவே ரெண்டு பேரையும் இன்னும் காணேல்ல?”

“கார்ல ஏறிட்டோம் எண்டு அப்போதையே மாமி சொன்னவா. வந்திருப்பினம் மாமா. நான் போய்க் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு வெளியில் வந்தவனுக்கும் அவளைக் கண்டுவிடும் ஆர்வம்தான்.

அவன் வீதிக்கு வர அவர்களின் காரும் சரியாக அவன் காலடியில் வந்து நின்றது.

காரின் தன் பக்கக் கதவைத் திறந்தான் அனந்தன். அதிலிருந்து இறங்கினாள் நிரல்யா.

மென் நாவல் நிற சில்க் சேலையில் மெல்லிய வெள்ளிக் கொடிகள் படர்ந்திருக்க, முந்தானையை லூசாக விட்டிருந்தாள். அவளின் மெல்லிய மேனியில் கொடியெனப் படர்ந்திருந்தது அந்தச் சேலை. அளவான முக அலங்காரமும், பொருத்தமாய் அணிந்துகொண்ட நகைகளும், மேல் பாதியை மட்டும் கிளிப்பில் மாட்டி விரித்துவிட்ட கூந்தலுமாக நின்றவளைக் கண்டு, அனந்தன் ஒரு நொடி தடுமாறிப் போனான்.

நிரல்யாவும் ‘நிரல்யா ஜுவல்லரி’ என்று கம்பீரமாக எழுந்து நிற்கும் நகைக்கடையைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள். அடகு கடையாக இருந்தவரையில் அமிர்தம் என்றுதான் இருந்தது. இப்போது எதற்குப் பெயரை மாற்றி இருக்கிறார்கள்? நெஞ்சில் எதுவோ அடைத்துக்கொண்டு வந்ததில் பெயர்க் காரணத்தை அவளால் அவர்களிடம் கேட்க முடியாமல் போயிற்று.

“நேரமாச்சோய்யா? மாமா பேசினவரோ?” மற்றப் பக்கத்திலிருந்து இறங்கிய அமிர்தவல்லி கேட்ட கேள்வியில் வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இல்ல மாமி. சரியான நேரத்துக்கு வந்திட்டிங்க. வாங்க!” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு நடந்தான்.

யாரும் திட்டமிடாமலேயே அவனருகில் நிரல்யா நடந்து வர, ஹாண்ட் பாக், கைப்பேசி எல்லாம் எடுத்துக்கொண்டோமா என்று கவனித்த அமிர்தவல்லி இரண்டடி பின் தங்கியிருந்தார்.

இவர்களை அழைத்து வருகிறேன் என்று போனவனையும் காணவில்லையே என்று எட்டிப் பார்த்த சுந்தரலிங்கம், மகளைச் சேலையிலும் அவள் அருகில் வேட்டி சட்டையில் கம்பீரமாக நடந்துவந்த அனந்தனையும் கண்டுவிட்டு ஒருகணம் அப்படியே நின்றுவிட்டார். அப்படி இருந்தது அவர்களின் சோடிப் பொருத்தம். இத்தனை நாள்களும் இல்லாத எண்ணமாக, அவர்களை உண்மையாகவே சோடியாக்கினால் எப்படி இருக்கும் என்று தானாகவே தோன்றிப்போயிற்று.

அங்கே ஒருவர் தம்மைக் கவனிக்கிறார் என்று அறியாமல், “கடை எப்பிடி இருக்கு?” என்று அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான் அனந்தன்.

“நல்ல வடிவா இருக்கு.” என்று நிமிர்ந்து பார்த்த நிரல்யா, “ஆர் என்ர பெயர் வைக்கச் சொன்னது?” என்று விசாரித்தாள்.

“ஆர் சொல்லோணும்? எங்க மூண்டு பேருக்கும் நீதான் முக்கியம். அப்ப உன்ர பேர்தானே வைப்பம்.” என்றதும் ஒருகணம் அவள் நடை நின்று போயிற்று.

“ஏன் நிக்கிறாய்? நட!” இதற்குள் அமிர்தவல்லியும் அவர்களோடு சேர்ந்துகொள்ள அவர்களின் பேச்சும் நின்று போயிற்று.

அடுத்த சில நிமிடங்களில் கடையின் ரிப்பன் வெட்டும் கத்தரிக்கோல் அவள் கையிலேயே கொடுக்கப்பட்டது. ஊரின் முக்கிய புள்ளிகளும் நிற்குமிடத்தில் அவளா என்று அவள் திகைத்துப் பார்க்க, “என்ன பாக்கிறாய் பிள்ளை? வெட்டு!” என்றார் அவளருகில் நின்ற அமிர்தவல்லி.

என்னவோ அவளால் முடியவில்லை. நெஞ்சில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அழுத்த, “நீங்க வெட்டுங்கோவன்.” என்று தழுதழுத்தாள்.

“கடைக்குச் சொந்தக்காரியே நீங்கதான். பிறகு என்னத்துக்கு அம்மா வெட்ட?” சுந்தரலிங்கம் சிரிப்புடன் சொல்லவும் கண்ணீர் திரையிட்ட விழிகளோடு ரிப்பனை வெட்டி, கடையைத் திறந்து வைத்தாள் நிரல்யா.

மின்னும் விளக்குகளும், கட்டித் தொங்க விடப்பட்டிருந்த பலூன்களும், கலர்கலர் மின்மினி பேப்பர்களும் என்று கடை ஜொலிக்க, மூன்று பக்கச் சுவர்களிலும், அதன் முன்னே இருந்த இடுப்பளவு உயரத்திலான நீண்ட கண்ணாடி மேசைகளுக்குள்ளும் புத்தம் புது நகைகள் கண்களைப் பறித்தன.

இதில், முதல் வியாபாரத்தையும் அவள் கையாலேயே சுந்தரலிங்கம் ஆரம்பித்து வைக்கச் சொன்னதில் அவளுக்குக் கன்னத்தில் உருண்டோடிய கண்ணீரைத் தவிர்க்க முடியாமல் போயிற்று.

வந்தவர்களுக்குக் கடையைச் சுற்றிக் காட்டுவதிலும், அவர்களைக் கவனிப்பதிலும் அவர்கள் மூவரும் கவனமாகிவிட, தன்னைச் சமாளித்துக்கொள்ள எண்ணி கடையைச் சுற்றிப் பார்ப்பதுபோல் தனியாக நடந்தாள் நிரல்யா.

உள்ளமோ சொல்ல முடியா உணர்வுகளில் சிக்கித் துடித்துக்கொண்டிருந்தது. அங்கே அவள், காதல் என்று வேறோர் உலகில் சுற்ற, இங்கே அவர்கள் அவளை மையமாக வைத்தே தம் உலகை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருக்கையில் வீட்டில் சொல்லி, சம்மதம் வாங்கி எப்படி சிசிரவோடு சேரப்போகிறேன் என்று கலங்கியவள், இங்கே இவர்கள் காட்டிய அன்பில் இவர்களுக்கு நான் செய்வது துரோகம் இல்லையா என்று எண்ணித் துடித்தாள்.

“நீயென்ன கடையக் கூட்டிக்கொண்டு நடக்கிறாய்?” தனக்குப் பின்னால் திடீர் என்று கேட்ட அனந்தனின் குரலில் வேகமாகத் திரும்பினாள் நிரலயா.

அவள் கவனிக்காமல் விட்ட அவளின் முந்தானையைத் தூக்கி, அதில் ஒட்டிக்கொண்டிருந்த ஜிகினா பேப்பர்களை எல்லாம் தட்டிவிட்டுவிட்டு, அதை அப்படியே இழுத்து மறுப்பாக அவள் கையில் திணித்து, “இப்பிடியே பிடிச்சுக்கொண்டு நட! கீழ விடாத.” என்றுவிட்டு நிமிர்ந்த அனந்தன், அவள் விழிகளில் தெரிந்த கலக்கத்தில், “என்ன? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்றான் உடனேயே.

என்ன என்று சொல்லுவாள்? குற்றவுணர்ச்சி என்னைக் கொல்கிறது என்றா? என்னை அறியாமலேயே மனத்தைப் பறிகொடுத்துவிட்டுப் படாத பாடு படுகிறேன் என்றா? நினைக்க நினைக்கக் கண்ணீர் பெருகப் பார்த்தது. அவனுக்குக் காட்டாமல் அதை அடக்க முயல அவள் முகம் சிவந்தே போயிற்று.

“என்ன பிரச்சினை நிரல்? ஏன் அழுறாய்?” என்றவனுக்கு அது அங்கே வைத்துக் கதைக்கும் விசயமன்று என்று தோன்றிவிட, “நீ மேல போ, வாறன்.” என்றான்.

“இல்…”

“மேல போ!” என்றான் அழுத்தமாய்.

பயத்தில் அவள் விறுவிறு என்று மேலேறினாள்.

‘கடவுளே, இப்ப வந்து கேப்பானே. என்ன சொல்லுறது?’ கையைப் பிசைந்துகொண்டிருக்கையில் வந்து சேர்ந்தான் அனந்தன்

“இப்ப சொல்லு!”

“இல்ல, ஒரு பிரச்சினையும் இல்ல.”

“நிரல்!”

“அது உண்மையா என்ன எண்டு தெரியா. கடைக்கு என்ர பெயர் வச்சது… இவ்வளவு நாளும் அம்மான்ர பெயர்தான் இருந்தது. அதான்… அதோட ரிப்பன் வெட்டச் சொன்னது, முதல் யாவாரம் எல்லாம் நானே செய்ததால…” என்று அவசரம் அவசரமாகத் தேடிப்பிடித்துச் சொன்னாள்.

அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளைப் பார்த்தான் அனந்தன்.

அவள் சொன்னவற்றை உண்மை என்று நம்ப அவன் தயாராயில்லை. ஊரை அடித்து உலைக்குள் போட்ட பணம் என்று அவள் வாயாலேயே சொன்ன காசில் திறந்த கடைக்காக, அதற்கு அவள் பெயரை வைத்ததற்காக இந்தளவுக்கு உணர்ச்சிவசப் படுகிறாளாமா? ரிப்பன் வெட்ட மாட்டேன் என்று முரண்டு பிடித்திருந்தாள் என்றால் நம்பியிருப்பான். அதைவிட இங்கே இருந்த காலத்தில் கூட நேராகப் பார்த்து, பார்வையாலேயே அவனை எரித்துவிட்டுத்தான் போவாள். அப்படியானவள் இன்று ஏன் அவன் பார்வையைச் சந்திக்க மறுக்கிறாள்?

இது வேறு என்னவோ என்று அவன் மனம் அடித்துச் சொல்லிற்று.

அவர்கள் இருவரும் சோடியாக நடந்து வந்ததைப் பார்த்ததில் இருந்தே சுந்தரலிங்கத்தின் பார்வை, அவரையும் மீறி அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டேதான் இருந்தது. என்னவோ இருவரையும் சேர்த்துப் பார்க்கிற ஒவ்வொரு பொழுதிலும் அவருக்குள் மெல்லிய சந்தோசம். இப்போதும் இயல்பாக மகளின் சேலை முந்தானையில் ஒட்டியிருந்த பேப்பர்களை அவன் விடுவித்ததும், அதைச் சுற்றிப் பிடிக்கச் சொல்லி அவளிடம் கொடுத்ததையும், அவளை மேலே அனுப்பிவிட்டுப் பின்னால் அவன் போனதையும் பார்த்துக்கொண்டு இருந்தவர், மனம் கேளாமல் தானும் மேலே வந்தார்.

அங்கே அவர்கள் நின்ற நிலை புருவங்களைச் சுருங்க வைக்க, “என்ன நந்தா?” என்றார் ஒன்றும் விளங்காமல்.

“ஒண்டுமில்லை மாமா. அவளின்ர பெயர்ல கடை திறந்ததில் ஆள் கொஞ்சம் ஷொக் ஆகிட்டா.” என்று அவரிடம் சொன்னவன், “நீ போய் மாமியோட இரு!” என்றான் அவளிடம்.

விட்டால் போதும் என்று அவள் ஓடியதும் அவனுக்குச் சரியாகப் படவில்லை.

“என்ன நந்தா?” என்றார் மீண்டும்.

“என்னவோ சரியில்ல மாமா. கேட்டாலும் சொல்லுறாள் இல்ல.”

“என்னப்பு திடீரெண்டு இப்பிடிச் சொல்லுறாய்? படிக்கிற இடத்தில ஏதும் பிரச்சினையோ?” பெண் பிள்ளையாயிற்றே. நொடியில் பயந்து, பதறினார் மனிதர்.

“அப்பிடி ஏதும் எண்டால் சொல்லி இருப்பாள் மாமா. மாமிட்டயாவது கதைச்சிருப்பாள். அதைவிட ஒவ்வொரு முறையும் அங்க போக அவள் யோசிச்சதே இல்லையே. மூண்டு நாலு நாள் லீவு கிடைச்சாலும் வந்து போற பயணம் அலுப்பா இருக்கும் எண்டு சொல்லி வரமாட்டாளே. அங்கேயேதானே நிக்கிறவள். இது வேற என்னவோ…” என்று நெற்றியைத் தேய்த்துவிட்டவனுக்கும் என்ன என்று பிடிபட மாட்டேன் என்றது. கடை வேலையில் இவளைக் கவனிக்காமல் விட்டது தவறோ என்று இப்போது யோசித்தான்.

ஒரு பெரிய மூச்சுடன் நிமிர்ந்தவன், “வாங்க முதல் வந்திருக்கிற ஆக்களைக் கவனிப்பம். பிறகு அவளைப் பாக்கலாம்.” என்று அவரையும் அழைத்துக்கொண்டு கீழே இறங்கினான்.





கருத்திட

மக்களே, சொறி லேட் பண்ணினதுக்கு. அதோட திருப்பி வாசிக்கவும் இல்ல. என்ன வந்ததோ அதை எழுதிட்டேன். பிறகு பார்த்து எடிட் பண்ணி விடுறேன். எப்பிடி இருக்கு என்று சொல்லுங்க. இனி திங்கள்தான் அடுத்த எபி.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

அத்தியாயம் 11

எப்போதடா விடுமுறை முடியும் என்று காத்திருந்து பேராதனைக்கு ஓடி வந்திருந்தாள் நிரல்யா. நகைக்கடை திறப்பு விழாவுக்குப் பிறகு, வீட்டினரிடம் காட்டிக்கொள்ளாதபோதும் அவர்கள் முகம் பார்த்துக் கதைக்க முடியாமல் திணறினாள். அதுவும், பாசத்தை மட்டுமே பொழியும் அமிர்தவல்லி, அவள் குற்றவுணர்ச்சியை இன்னுமே அதிகமாக்கினார்.

இங்கே வந்த பிறகுதான் ஒரு ஆசுவாசம். ஆனாலும், எப்படித் தம் காதலைத் திருமணத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கப் போகிறோம் என்கிற பயம் அதிகமாயிற்று. எப்படி யோசித்தாலும் எந்த வழியும் புலப்படமாட்டேன் என்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்த இரண்டு இனங்களுக்கிடையிலான காதல். இனம், மதம், மொழி எல்லாமே வேறு வேறு! பிடிபட முதலே இந்தப் பயம் பயப்பிடுகிறோம், தப்பித்தவறி வீட்டுக்குத் தெரிய வந்தால்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. முதலில் எப்படித் தன் மனதை அவர்களிடம் சொல்லுவாள்? சொன்னால் மட்டும்?

சிசிரவுக்கும் இது கடைசி வருடம், கடைசி செமஸ்ட்டர் என்றானதில் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டி இருந்தது. அவன் செய்துகொண்டிருக்கும் ரிசேர்ச் முடிக்க வேண்டியிருந்தது, பிரசன்டேஷனுக்குத் தயாராக வேண்டும். புதிதாக வந்து சேர்ந்துகொண்ட காதலும், அவள் வீட்டினரை எண்ணி அவள் பயப்படுவதும் அவன் நல்ல நிலைக்கு வந்தேயாக வேண்டும் என்கிற உத்வேகத்தைத் தந்திருந்தது. அதற்கு அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்பதில் இன்னும் முனைப்பாகவே கற்றான்.

இருவருக்குமே தமக்காக நேரம் ஒதுக்க நேரமில்லை. பல்கலையிலும் கண்டீனிலும் பார்ப்பது மட்டுமே! கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஒட்டியிருந்தன. அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அது போயா நாளாக(விடுமுறை நாள்) அமைந்து போனதில் சனி, ஞாயிறோடு சேர்த்து மூன்று நாள்கள் விடுமுறையாகக் கிடைத்திருந்தன.

வீட்டுக்கு வந்துவிட்டுப் போகச் சொல்லியிருந்தார் அமிர்தவல்லி. மாதத்தில் ஒரு தடவையாவது வந்து வந்து போகும் மகள் இப்போதெல்லாம் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாள்கள் கிடைத்தால் மட்டுமே வந்து போவது அவருக்குப் பெரும் குறை. அதில் எப்போதும் கலண்டரை கவனித்து முதலே சொல்லிவிடுவார். இந்த முறையும் அவர் அழைத்தபோது படிப்பதற்கு நிறைய இருக்கிறது என்று சொல்லித் தவிர்த்துவிட்டிருந்தாள்.

காரணம் சிசிர. இந்த முறையை விட்டால் இனித் தனக்கு நேரமிருக்காது, படிக்க வேண்டும் என்று அவன் சொல்லியிருந்தான். அவளுக்கும் அது தெரியும். அவனா அன்னையா என்று வந்தபோது அவள் தராசு அவன் பக்கம்தான் சரிந்திருந்தது.

அன்று காலையிலேயே பேராதனை, தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்தார்கள்.

இலங்கையின் தேசிய பூங்காக்களில் ஒன்றாக இருக்கும் அங்கே ஏறத்தாழ 4000 வகையான உள்ளூர் மற்றும் வெளியூர் தாவரங்கள் இருந்தன. ஓக்கிட், அந்தூரியம் வளர்ப்பில் புகழ்பெற்ற இப்பூங்காவில் அரிய வகை மூலிகை மரங்கள், வாசனைத் திரவியத் தாவரத் தோட்டம், கற்றாழை வகைகள் அனைத்தும் சிறப்பம்சங்கள் ஆகும். மகாவலி கங்கையை அண்டி வளரும் விசேட மூங்கில் மரங்கள், மகாவலி கங்கையின் குறுக்கே அமைந்துள்ள தொங்கு பாலம், பாக்கு மரப்பேரணி என்று அதன் அழகைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

கால்போன போக்கில் சுற்றிவிட்டு பூங்காவின் தொங்கு பாலத்தில் வந்து அமர்ந்துகொண்டார்கள். கீழே மகாவலிகங்கை சத்தமில்லாது ஓடிக்கொண்டிருந்தது. எதிரெதிரில் இருவர் வந்தால், ஒருவர் திரும்பி நின்று வழிவிட்டால் மட்டுமே மற்றவர் கடக்க முடியும் என்கிற அளவிலான ஒடுங்கிய பாலம். அதில், ஒரு பக்கக் கம்பியில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்திருந்தனர்.

அவள் இடைவெளி விட்டு அமர்ந்திருக்க, “இது எதுக்கு?” என்று கேட்டு நெருங்கி, அவளை உரசிக்கொண்டு அமர்ந்தான் அவன். அப்படியே அவளின் கரத்தைப் பற்றி விரல்களோடு தன் விரல்களையும் கோர்த்துக்கொண்டான்.

மெல்லிய சிரிப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் நிரல்யா. “என்ன?” என்றான் அவன் புருவங்களை உயர்த்தி. இருவருக்குமே தவறுகள் இருந்தாலும் மற்றவரின் மொழி பேச வந்தது.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவளின் பார்வை இப்போதும் அவனில்தான். மிகவும் மென்மையான குணம் கொண்டவன். இதுவரையில் அவளிடம் கோபப்பட்டதில்லை. எதற்குமே! அணைத்து அவன் தரும் கன்னத்து முத்தங்களில் கூட ஒரு மென்மை இருக்கும். என்ன ஒற்றை நாளில் ஓராயிரம் முத்தங்கள் தந்துவிடுவான். அந்த நினைப்பில் அவள் உதட்டில் முறுவல் அரும்ப, அவள் நெற்றியில் முட்டி, “இப்பிடிப் பாத்தியோ அண்டைக்கு மாதிரி ஒரு டான்ஸை போட்டுடுவன்!” என்றான் அவன்.

அரண்டு போனாள் நிரல்யா. “நான் பாக்கவே இலை. நீங்க பேசாம இருங்க!” என்றுவிட்டுத் திரும்பியவள் பார்வையில் பட்டது ஒரு குரங்கு.

மகாவலியின் கரைப்பகுதியில் வளர்ந்திருந்த மூங்கில் மரமொன்று தொங்குபாலத்தையும் தாண்டி உயர்ந்து நின்றது. அதன் உச்சியில் அமர்ந்திருந்தது அந்தக் குரங்கு.

நிரல்யாவுக்கு அதைப் பார்க்கப் பயமாயிற்று.

“எழும்பிப் போவமா?”

“அது அதுபாட்டுக்கு இருக்குது. அதைப் பாத்து நீ ஏன் பயப்பிடுறாய்?” என்று அவன் கேட்டு முடிக்க முதலே, குரங்கு குரங்கின் வேலையைக் காட்டியிருந்தது. அது திடீரென்று அவர்கள் மீது பாய, மின்னல் விரையில் அவளை இழுத்துத் தனக்குள் பொத்திக் கொண்டு தானும் குனிந்திருந்தான் சிசிர. அது, குனிந்திருந்த சிசிரவின் பிடரியில் மீது காலை வைத்து, அடுத்த பக்கம் பாய்ந்து சென்றிருந்தது.

“அவுச்!” பிடரியைத் தடவியபடி நிமிர்ந்து பார்க்க, அது இருந்த அடையாளமே இல்லை. “இதுக்குத்தான் போவம் எண்டு சொன்னனான். நீங்க கேக்கேல்லை.” என்றபடி அவன் தலையைத் திருப்பிப் பார்த்தாள். சுருண்ட அடர்ந்த கேசத்துக்குள் இருந்து எதுவும் தெரியவில்லை.

“எனக்கு ஒண்டும் நடக்கேல்ல நிரா. விடு!” என்று அவன் சொன்னதைக் கேளாமல், பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்காத குறையாக ஆராய்ந்து, உண்மையில் ஒன்றுமில்லை என்று கண்ட பிறகே விட்டாள்.

அப்போதும், “இனி இங்க இருக்க வேண்டாம். வாங்க நீங்க!” என்று எழுந்தவளை அவன் பிடித்து இழுக்க, தொப்பென்று அவன் அருகில் மீண்டும் விழுந்தாள் அவள். கூடவே பாலம் வேறு அப்படியும் இப்படியுமாக ஆடிற்று. “அம்மாடி!” என்றபடி அவனை இறுக்கி கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள். பாலம் அறுந்து விழுந்தால் என்னாகும் என்று யோசிக்கவே முடியாமல் அவளுக்கு நடுங்கிற்று. சும்மாவே ஒரே தடவையில் ஆறுபேர் மட்டுமே அதில் நிற்கலாம் என்று அறிவிப்புப் போட்டிருக்கிறார்கள்.

அவனிடம் சத்தமே இல்லை. பாலம் தன் அசைவை மெல்ல மெல்ல நிறுத்தியபிறகே அதை அவள் உணர்ந்தாள். முகம் சூடாக, உதட்டைப் பற்றியபடி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவன் பார்வை அவனையும் மீறி அவள் பற்றியிருந்த உதட்டுக்குச் சென்று மீண்டது. சின்ன சிரிப்புடன் அவளைப் பார்க்கப் பயந்துபோனாள் நிரல்யா. படக்கென்று அவனிடமிருந்து தன்னைப் பறித்துக்கொண்டு விலகி அமர்ந்தாள். அவனால் சிரிப்பை அடக்க முடியாமல் போயிற்று. கூடவே ஒரு வெட்கமும்! அவளுக்கு எதிர்ப்புறம் முகத்தைத் திருப்பித் தலையைக் கோதிக்கொடுத்தான். வாலிபம் தன் விளையாட்டைக் காட்டியிருந்தது.

அவளாலும் அவனைப் பார்க்க முடியாமல் போயிற்று. முகத்தில் ஏறிவிட்ட சிவப்பை மறைக்க முயன்றாள்.

இருவருக்கும் மற்றவரின் முகம் பார்க்க முடியாமல் சின்ன தடுமாற்றம். அவன் கை மட்டும் வந்து அவள் கையுடன் கோர்க்க முயன்றது. சங்கடத்துடன் விடுவித்துக்கொள்ள அவள் முயல, திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான் அவன்.

“போவமா?” தயங்கி வினவினாள்.

“கிட்ட வா, ப்ளீஸ்!” என்றவன் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு, அவளைத் தன்னிடம் கொண்டு வந்தான்.

“இல்ல இது வேண்டாம்…” எல்லை மீறிவிடுவோமோ என்கிற பயம் அவளுக்குள் முளைத்திருந்தது.

“ஆசை இருக்குத்தான். அதுக்காக உன்னச் சங்கடப் படுத்தமாட்டன் எண்டு சொல்லி இருக்கின்றன்தானே?” என்றான் மென் குரலில்.

அதன் பிறகுதான் இயல்பானாள். அவளே அவன் தோளில் சாய்ந்துகொள்ளவும் தலையைச் சற்றே சரித்து, குனிந்து அவள் முகம் பார்த்தவன் அவள் நெற்றியில் தன் உதடுகளை மீண்டும் பதித்துவிட்டுத் தானும் அவள் தலையில் இலேசாகச் சாய்ந்துகொண்டான்.

அழகான அமைதி, மெல்லிய காற்று, மேலே வானம், கீழ மகாவலி. இடையில் அவர்கள். இதைவிட வேறென்ன வேண்டும் என்று கேட்டது மனது.

விடுதிக்குத் திரும்ப இருவருக்கும் மானதேயில்லை. அதற்கென்று அப்படியே இருக்கவா முடியும்? இனி எப்போது இப்படியான ஒரு தருணம் அமையுமோ என்கிற ஏக்கத்துடன் திரும்பினர்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அடுத்தநாள் காலையில் எழுந்து, குளித்து, காலை உணவையும் முடித்துக்கொண்டு படிக்க அமரப் போக, விடுதியில் தங்கியிருக்கும் இன்னொருத்தி ஓடிவந்தாள்.

அவள் முகத்தில் பெரும் பதற்றமும் கலவரமும். “சிசிரவ உன்ர அப்பாவும் இன்னொரு ஆளுமா சேர்ந்து அடிக்கினம் நிரா. கெதியா ஓடு!” என்றாள் பேச முடியாமல் மூச்சு வாங்கியபடி.

“என்ன?” அவளுக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போலாயிற்று. அவர்கள் எங்கே இங்கே, வருவதாகச் சொல்லவே இல்லையே, அப்படியே வந்தாலும் எப்படி அவர்களின் விசயம் தெரிந்தது என்று ஓராயிரம் கேள்விகள் நொடியில் மண்டைக்குள் ஓடின.

“ஐயோ, உன்ர அப்பாக்கு உங்கட விசயம் தெரிஞ்சிட்டுது போல. சிசிரவ கிரவுண்ட்ல வச்சு அடிக்கினம். ஓடு!” என்றாள் திரும்ப.

“கடவுளே!” அவள் கால்களுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு வேகம் வந்ததோ! அப்படி ஓடினாள். நெஞ்சு பரிதவித்துத் தொண்டை உலர்ந்து போனது. அங்கே அந்தப் பெண் சொன்னதுபோல, உதடு கிழிந்து, தரையில் முட்டுக்காலிட்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தான். எப்போதும் சிரித்த முகமாகவே இருக்கிறவன் முகம் இன்று கன்றிச் சிவந்திருந்தது. அவமானத்தில் குறுகிப்போயிருந்தான்.

அவளால் அவனை அப்படிப் பார்க்க முடியவில்லை. உள்ளம் துடிக்க, “சிசிர!” என்று கத்தியபடி அவனை நோக்கிப் பாய்ந்தவளை இடையில் வந்து தடுத்துப் பிடித்தார் சுந்தரலிங்கம்.

“எங்க போறாய்?” அவர் குரல் உறுமியது.

“ஐயோ என்னை விடுங்கப்பா. ஏன் அப்பா இப்பிடி அடிச்சிருக்கிறீங்க? பாவம் அப்பா விடுங்க அப்பா!” அடிபட்ட மானாய்க் கதறியபடி அவரிடமிருந்து விடுபட்டு அவனிடம் ஓடிவிடத் துடித்தாள். அவர் விடவில்லை.

“உன்னப் படிக்க அனுப்பினா என்ன வேல பாத்து வச்சிருக்கிறாய் நீ? முதல் அந்தச் சிங்களவனுக்கு என்ர மகள் கேக்குதா? அவனுக்கு ரெண்டு போடு நந்தா!”

அவர் சொல்லி முடிக்க முதலே பளார் பளார் என்று இரண்டு விழுந்தது அவனுக்கு. துடித்துப் போனாள் அவள். “ஐயோ அடிக்காதீங்க! ப்ளீஸ் அவருக்கு அடிக்காதீங்க.” என்று கதறினாள்.

“அவனை அடிக்கக் கூடாது எண்டா சொல்லு, இனி அவனோட கதைக்க மாட்டன், எந்தத் தொடர்பும் இல்லாம இருப்பன் எண்டு சொல்லு. அப்ப விடுறன்!”

அவளின் அத்தனை இயக்கமும் நிற்கத் துடித்து நிமிர்ந்தாள். அது எப்படி அவளால் முடியும்? நெஞ்சு வெடிக்கும் வேதனையோடு அவனைப் பார்த்தாள்.

“சொல்லாத நிரா! நீ எனக்கு வேணு…” எனும்போதே அவன் பிடரியில் பளார் என்று திரும்ப ஒன்று போட்டான் அனந்தன்.

“உனக்கு அவள் கேக்குதா? எனக்கு முன்னாலேயே சொல்ல எவ்வளவு தைரியம் உனக்கு?” கேட்டு கேட்டு அவன் போட்ட அடியில் சுருண்டு விழுந்தான் சிசிர. அடிக்காதீர்கள் என்ற அவள் கதறல் அவன் காதில் விழவேயில்லை. வெறி வந்தவன் போன்று அடித்து உதைத்தான்.

“இனி உனக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. சொல்லு! அவன் இருக்கிற பக்கமே திரும்பிப் பாக்க மாட்டன் எண்டு சொல்லு. இவள் சொல்லுற வரைக்கும் அவனுக்கு அடி நந்தா!” சுந்தரலிங்கமும் விடுவதாயில்லை.

அவளால் தாங்கவே முடியவில்லை. ஐயோ ஐயோ என்று உயிர் துடித்தது. உயிரானவன் வலியில் துடிப்பதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. கதறித் துடித்தாள். கெஞ்சினாள். கண்ணீர் விட்டு அழுதாள். சுந்தரலிங்கத்தின் கையிலிருந்து விடுபடப் படாத பாடு பட்டாள். அவர் விடவேயில்லை. வேடனிடம் சிக்கிய மானாகிப்போனாள் நிரல்யா. அங்கிருந்த அத்தனை நெஞ்சங்களையும் அவள் கதறல் உலுக்கியபோதும் இளகவேண்டிய இருவரும் இரும்பாய் நின்றனர்.

விடுமுறை நாள் என்றபடியால் பெரிதாக யாரையும் காணவும் இல்லை. நின்ற ஒன்றிரண்டு பேருக்கும் முரட்டு உருவத்தில், கண்கள் சிவந்து, வெறி வந்தவன் போன்று சிசிரவை அடித்து நொறுக்கிய அனந்தனை நெருங்கும் தைரியமில்லை. மகிந்த கூட ஊருக்குப் போயிருந்தான்.

“நீ சொல்லாம அவனை விடமாட்டன். சொல்லு! இல்ல அவனை உருத்தெரியாம அழிப்பன். அதுதான் உனக்கு வேணுமா?” சுந்தரலிங்கமும் விடாமல் உறுமினார்.

“ஐயோ இல்ல இல்ல! விடுங்க போதும். இனி அவரோட கதைக்க மாட்டன், அவரைப் பாக்க மாட்டன். விடச் சொல்லுங்க அப்பா. ஐயோ விடச் சொல்லுங்கோ. நான்தான் சொல்லுறனே, இனி நான் அவரோட கதைக்கேல்ல. கடவுளே அவரை விடுங்கப்பா, போதும்!” அவர் தரையில் விழுந்து அழுதாள் நிரல்யா.

“சரி வெளிக்கிடு!”

“ஆ?” திடுக்கிட்டு நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.

“நீ படிச்சுக் கிழிச்சது எல்லாம் காணும்! இப்பவே இந்த நிமிசமே என்னோட வரவேணும். நட காருக்கு!”

‘இல்ல! இல்ல என்னால ஏலாது!(முடியாது)’ மனம் அரற்றித் துடிக்க, திரும்பி அவனைப் பார்த்தாள்.

“போகாத நிரா!” என்று அழுதான் அவன்.

அப்படிப் போகாமல் இருக்க முடியுமா? அவளை விட்டுவிட்டு அவர்கள்தான் போவார்களா? அவளாகப் போனால் அவனுக்கு விழும் அடியாவது குறையும். இயலாமையுடன் அவனைப் பார்த்தவள் மெல்ல எழுந்து அவரோடு நடந்தாள்.

அவனால் நம்பவே முடியவில்லை. நொடி நேரம் திகைத்து நின்றுவிட்டு, “நிரா ப்ளீஸ்! என்ன விட்டுட்டு போகாதடி. நிரா…! என்னைப் பார். நிரா!” அவ்வளவு அடியை வாங்கிய பின்னும் கதறினான் அவன்.

அவள் போய்க்கொண்டே இருந்தாள். கண்ணீர் மார்பை நனைத்தாலும் திரும்பிப் பார்க்கவில்லை.

“நிரா! நீயில்லாம நான் வாழமாட்டன் நிரா. இதுக்கு நீ என்னைக் கொன்டே போடலாம். நிரா!”

“அப்ப சாகடா!” என்று அனந்தன் போட்ட அறையில் விருட்டென்று திரும்பிப் பார்த்தாள் நிரல்யா. உதட்டில் இரத்தம் சொட்ட, அவளையே பார்த்தபடி தரையில் விழுந்தான் சிசிர.

“சிசிர!” என்று ஓடப்போனவளை அப்போதும் இழுத்துப் பிடித்து நிறுத்தினார் சுந்தரலிங்கம். அவரை உதற முயன்றுகொண்டே, “அதுதான் நான் வாறனே, பிறகு என்னத்துக்கு அவருக்கு அடிக்கிறீங்க?” என்று சீறினாள்.

“அவரை விடச் சொல்லுங்க. இல்ல என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு இந்த இடத்தை விட்டு நகர மாட்டன். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க ரெண்டுபேரும்? அந்தக் காட்டு மிராண்டியப் பேசாம இருக்கச் சொல்லுங்க!” ஆங்காரம் கொண்டவள் போன்று அடித்தொண்டையிலிருந்து கத்தினாள்.

அனந்தனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இனி அவன் அடிக்கமாட்டான். நீ நட!” என்றார் அவர்.

அவளுக்கு வேறு வழியில்லை. தரையில் கிடந்தவனைக் கண்ணீருடன் திரும்பிப் பார்த்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டாள்.

கார் புறப்பட்டது. அனந்தன் வரவில்லை என்றதும் நடுங்கிபோனாள்.

“அவர் ஏன் வரேல்ல? அப்பா அதுதான் நான் வாறனே. பிறகும் ஏன் அவர் அங்க நிக்கிறார்? திரும்பவும் அடிக்கவா? ஏன் இப்பிடி மிருகத்தனமா நடக்கிறீங்க?” என்றவள் பரிதவிப்பு அவரை அசைக்கவே இல்லை.

“நீ வந்தா எல்லாம் முடிஞ்சா? இனி மறந்தும் அவன் உன்னத் திரும்பியும் பாக்கக் கூடாது. அதுக்குப் பாடம் படிப்பிக்க வேண்டாமா அவனுக்கு?”

“ஐயோ அப்பா நானும் தானே பிழை செய்தனான். அவரை மட்டும் ஏன் அடிக்கிறீங்க? என்னாலதான் அப்பா அவருக்கு இந்த நில. விடுங்கப்பா பாவம் அப்பா அவர்.” அவள் எத்தனை கெஞ்சியும் அவர் அசையவில்லை.

அத்தனை ஆவேசம், அவ்வளவு ஆத்திரம். சுந்தரலிங்கத்துக்கு இன்னுமே கோபத்தில் உடல் நடுங்கிக்கொண்டு இருந்தது.

நகைக்கடை திறப்பு விழாவில் வைத்து அனந்தன் என்னவோ சரியில்லை என்று சொன்னதில் இருந்தே அவருக்கு மனத்தில் உருத்திக்கொண்டேதான் இருந்தது. படிக்க என்று அனுப்பி வைத்துவிட்டு எட்டியும் பாராமல் இருந்துவிட்டோமே, அது தவறோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. விடுதி, பாதுகாப்பான இடம் என்றுதானே விட்டோம். அப்படி விட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. புதிதாகத் திறந்த கடையை விட்டு அவராலும் அவனாலும் அரக்கவே முடியவில்லை. கட்டடத்தை எழுப்பிக் கடையைத் திறந்திருந்த போதிலும் மிச்ச சொச்ச வேலைகள் என்று ஓராயிரம் இருந்தன.

ஆனால், அவருக்கிருந்த அதே யோசனை அனந்தனுக்கும் இருந்திருக்க வேண்டும். அதில் இரண்டு நாள்களுக்கு முதல் வந்து, “மாமா, நகை பாக்கிற விசயமாக் கொழும்புக்குப் போகோணும். அப்பிடியே நிரலையும் போய்ப் பாத்துக்கொண்டு வருவம் எண்டு நினைக்கிறன். மாமிட்டையோ அவளிட்டையோ ஒண்டும் சொல்லாதீங்க.” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு வந்திருந்தான் அவன்.

அவர்களின் கெட்ட நேரமோ என்னவோ, தாவரவியல் பூங்காவிற்குச் சென்றுவிட்டுக் கைகோர்த்தபடி திரும்பி வந்தவர்களை நேராகப் பார்த்திருந்தான் அனந்தன். அதன் பிறகு பெரிதாக மெனக்கெட வேண்டிய தேவையே ஆனந்தனுக்கு இருக்கவில்லை. சின்ன விசாரணை. மொத்த விவசாய பீடமும் அறிந்திருந்த அவர்களின் காதல் கதையை அவனும் தெரிந்துகொண்டிருந்தான்.

அது சுந்தரலிங்கத்தின் காதுக்கும் வந்து சேர, உடனேயே புறப்பட்டு வந்தவர் இதோ அவளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

காரினுள் கதறி கதறி ஓய்ந்தவளின் தேகம் மெல்லிய விக்கல் விசும்பலில் வந்து நிற்க வவுனியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.

“இனி இவள் எங்கயும் போகக் கூடாது! எல்லாம் உன்னால வந்தது. அப்பவே நான் சொன்னனான். இங்க எங்கயாவது படிக்கட்டும் எண்டு. இனியும் ஏதாவது நடந்திது…” என்று அமிர்தவல்லியிடம் அவளைத் தள்ளி விட்டுவிட்டுப் போனார் சுந்தரலிங்கம்.


கருத்திட


சொறி மக்களே! இந்த எபி லைட்டா உங்களைக் காயப்படுத்தி இருக்கலாம். இந்தக் கதை கொஞ்சம் இப்படித்தான். மெல்லிய பெயினோடyeதான் நகரும். எப்பிடி இருக்கு என்று சொல்லுங்க. கருத்திடும் அனைவருக்கும் நன்றி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 12



அது ஒரு தனியார் கிளினிக். ஒருசில பொய்களைச் சொல்லி அங்கே சிசிரவைச் சேர்த்திருந்தான் அனந்தன். அவனுக்கு உள்ளே வைத்தியம் நடந்துகொண்டிருந்தது. வெளியே இருந்த கொரிடோரின் இடுப்பளவிலான சுவரில் கைகளை ஊன்றி நின்றிருந்தவனின் உள்ளத்தில் வீசும் புயல் இன்னும் அடங்கவேயில்லை. உக்கிரத்துடன் வீசிக்கொண்டுதான் இருந்தது.

அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை. அவனின் நிரலா? அவளா இன்னொருவனின் கையைக் கோர்த்தபடி நடந்து வந்தாள்? அந்த வலி இப்போதும் அவன் உயிரையே குடைந்தது. அவர்களை அப்படிப் பார்த்த கணத்தில் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் அடக்க முடியாமல் அங்கிருந்த மரத்தில் குத்தி குத்தி கையைப் புண்ணாக்கியிருந்தான்.

இதோ இப்போது கூட அதை நினைக்கையில் சுவரைப் பற்றியிருந்தவனின் கை நரம்புகள் புடைத்தன. நெஞ்சு கொதிப்புடன் மேலும் கீழுமாய் ஏறி இறங்கிற்று.

அவன் அவளைத் தன்னிலிருந்து பிரித்து, இன்னொருத்தியாய்ப் பார்த்ததே இல்லை. அவனிடமிருந்து விலகி நின்ற நாள்களில் கூடக் காலம் கனியட்டும் என்றுதான் காத்திருந்தான். அவள் மனம் தன்னைத் தாண்டி இன்னொருவனிடம் சாயும் என்று எண்ணியதேயில்லை. அப்படி இலேசாகவேனும் யோசனை வந்திருக்க இங்கே அனுப்பியே இருக்க மாட்டானே!

அவள் கொஞ்சமாய் முகம் திருப்பினாலே அவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வந்துவிடும். கோபித்துக்கொண்டு கதைக்காமல் இருந்ததற்குத்தான் முழு முரடனாகி நிற்கிறான். அவளானால் அவனை மொத்தமாகக் கை கழுவிட்டு இன்னொருவனின் கையில் சேர நினைப்பாளா? என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள் அவனைப் பற்றி? எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடுவான் என்றா? அவள் அவனின் நிரல்! அவன் சொந்தம். அவன் உயிர். அவள் இன்னொருவனோடா? இப்போது நினைக்கையிலும் பல்லைக் கடித்தான். உள்ளே வைத்தியம் பார்க்கும் அவனை இழுத்து வைத்து, அவள் கையைப் பிடிப்பியாடா என்று கேட்டு, அந்தக் கையையே உடைக்கும் வெறி கிளம்பிற்று.

அவர்களை அப்படிப் பார்த்ததிலிருந்து என்ன செய்வது என்ன செய்வது என்று ஒரு பைத்தியக்காரனைப்போலவே சுற்றி சுற்றி நடந்தவனுக்குச் சுந்தரலிங்கத்திடம் மறைக்கும் எண்ணம் மருந்துக்கும் இல்லை. முதலில் இது மறைக்கும் விடயமன்று! அவள் அவர்கள் வீட்டுப் பெண். இப்படி ஒரு சிங்களவனோடு சுற்றுவதைக் கண்ணால் பார்த்த பிறகும் பேசாமல் இருக்கவா முடியும்?

சுந்தரலிங்கம் அமைதியாக இருந்திருந்தால் கூட அவன் விட்டிருக்க மாட்டான்! அந்தளவுக்கு மிருகமாகியிருந்தான். அவன் அவனாய் இல்லை. நிதானம் இழந்திருந்தான். என்ன செய்தாவது அவர்களின் அந்த உறவை முற்றிலுமாகத் துண்டித்துவிடும் வெறியே உண்டாகியிருந்தது. அதன் பலனாகத்தான் இப்போது உள்ளே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான் சிசிர.

அவளுக்காக அவன் இவ்வளவு துடிக்க அவள் சொன்ன வார்த்தை? அவன் காட்டுமிராண்டியா? அவனின் நிரலுக்கு அவன் காட்டுமிராண்டியா? உதட்டோரம் கசந்த புன்னகை ஒன்று வழிய, விழிகளின் ஓரம் கோடாய்க் கண்ணீர் அரும்பிற்று! “ச்சேய்!” என்றபடி வேகமாகத் துடைத்துக்கொண்டான்.

திடீரென்று ஒரு துக்கம் பெருகியது. ஆழ்மனத்தை ஒரு பயம் கவ்விப் பிடித்தது. அவள் கிடைக்காமல் போய்விடுவாளோ? பிறகெப்படி அவன்? கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பழகிய ஒருவனுக்காக அவனைத் தூக்கி எறிவாளா? எறிந்துவிட்டாளே!

என்னவோ திடீரென்று அநாதரவாகிப்போனதுபோல் உணர்ந்ததான். மனம் அன்னையின் மடியைத் தேடிற்று. அவன் முன்னே விரிந்திருந்த வானத்தில் அவரைத் தேடினான். அவன் மனம் எப்போதெல்லாம் தனக்கென்று யாருமில்லை என்று உணர்கிறதோ அப்போதெல்லாம் அவரைத் தேடினான்.

அவன் சிந்தனைகளுக்குள் இடையிட்டு, “நீங்க அவரைப் போய்ப் பாக்கலாம்.” என்று தாதிப்பெண் ஒருத்தி வந்து சொல்லிவிட்டுப் போனாள்.


*****

சிசிரவுக்குக் காயம் என்று பெரிதாய் இல்லை. உதடு இலேசாக வெடித்திருந்தது. கண்ணோரத்திலும் ஒரு கட்டுப் போன்று வீங்கி, அதிலும் ஒரு காயம். ஆனால், கண்களைத் திறக்கவே முடியவில்லை. அந்தளவில் தலை விண் விண் என்று வலித்தது. எந்த ஆயுதத்தையுமே அவன் பயன்படுத்தவில்லை. கையால்தான் அடித்தான். ஒவ்வொரு அடியும் இடியாகத்தான் இறங்கி இருந்தது. கன்னங்கள், கண், மூக்கு, வாய் என்று எதையும் அசைக்க முடியவில்லை. அத்தனை பற்களிலும் கூட பல்வலி வந்தாற்போல் உயிர்போனது. அவர்கள் தந்த எந்த வலி நிவாரிணிகளும் உதவியதுபோல் தெரியவேயில்லை. சுவாசிக்கும்போதுகூட எங்கோ வலித்தது.

அதையும் தாண்டிய வலி நெஞ்சில். அவன் நிரா எப்படி இருக்கிறாள்? அவனையே இந்த அடி அடித்தவர்கள் அவளை என்ன செய்தார்களோ? அடிபட்ட புறாவாய் அவனுக்காக அவள் துடித்த காட்சி இன்னும் அவன் உயிரை வதைத்தது. மலர்வதே தெரியாமல் மலரும் பூவைப் போன்று அழகாய் மலர்ந்த காதல் இனி என்னாகும்? அவளைப் பார்க்க முடியுமா? அவனால் எதையும் நிதானமாக யோசிக்கக் கூட முடியவில்லை. மெதுவாகக் கையை உயர்த்தி நெற்றிப் பொட்டை அழுத்திவிட்டான்.

இரவிரவாகப் படித்துவிட்டுக் காலையில் வந்து கிரவுண்டில் எப்போதும்போல் ஓடிக்கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்து எப்படி வந்தான் என்று தெரியாத அனந்தன் விட்ட அறைகளில் நிலை குலைந்து, தரையில் விழுந்திருந்தான். ஏன் அடிக்கிறான் என்று புரிந்துகொண்டபோது எழுந்துகொள்ளவே முடியாத அளவுக்கு உடல் புண்ணாகியிருந்தது. அவ்வளவு அடி. இப்போது நினைக்கையிலும் தேகமெல்லாம் நடுங்கிற்று.

அப்போது கதவைத் திறந்துகொண்டு வந்தான் அனந்தன். அவனை அறியாமலேயே அவன் தேகத்தில் ஒரு நடுக்கம் மீண்டும் ஓடி மறைந்தது. தொண்டை உலர, நெஞ்சு நடுங்க அவனையே பார்த்தான். அறைக்குள் வந்தவன் இவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த அறையைச் சுற்றி விழிகளைச் சுழற்றினான். அங்கே ஒரு மூலையில் இருந்த முக்காலியை எடுத்து வந்து, இவன் கட்டிலின் முன்னால் போட்டுவிட்டு அமர்ந்துகொண்டான். தொடைகள் இரண்டிலும் கைகளை ஊன்றிக் கோர்த்துக் கொண்டவனின் பார்வை கோர்த்திருந்த கைகளில். விழிகளில் ஏதோ ஒரு தீவிரம். ஒரு கால் மட்டும் இலேசாய் உயர்ந்து உயர்ந்து பதிந்தது.

அதுவே என்னவோ ஆழ்ந்து சிந்திக்கிறான் என்று சொல்லிற்று. என்ன யோசிக்கிறான், என்ன சொல்லப் போகிறான், இனி என்னாகும் என்று தெரியாது ஒருவிதத் திகிலுடன் அவனையே பார்த்திருந்தான் சிசிர.

எவ்வளவு நேரம் கடந்ததோ, சுளித்திருந்த புருவங்களுடன் நிமிர்ந்து சிசிரவைப் பார்த்தான் அனந்தன். இமைக்காது பார்த்துக்கொண்டே இருந்தான். சிசிரவிற்கு அவனையும் மீறி நெஞ்சு சில்லிட்டது.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“காலி, தலாப்பிட்டிதானே உனக்குச் சொந்த இடம்?” நிதானமாய் அவன் வினவியதில் இவனுக்கு ஒருமுறை நெஞ்சு நின்று துடித்தது. அவன் குடும்பத்திற்கு என்னானதோ? அதைவிட அவன் பேசிய சிங்களம்? பயத்தில் இமைக்க மறந்து அவனையே பார்த்தான்.

“ஒரு தங்கச்சி இருக்கிறா. கஷ்டப்பட்ட குடும்பம் உன்னையே நம்பி இருக்க உனக்கு இங்க…” என்றவன் மேலே பேசாமல் பல்லைக் கடித்தான். அவனுக்கு நிரல்யாவோடு இவனுக்குக் காதல் என்று சொல்வதை நினைத்தாலே ஆவேசம் பொங்கிற்று. “உன்னக் கொல்லோணும் மாதிரி இருக்கு. ஆனா…” என்றவன் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்த முயன்றான்.

“அவளிலயும் பிழை இருக்கிறதாலதான் உன்ன இங்க வரைக்கும் கூட்டிக்கொண்டு வந்தனான். இனி உனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்க கூடாது. இருந்துது… பிறகு நீ இருக்க மாட்டாய்!”

விழியோரம் கசிய அவனையே பார்த்தான். அவனால் பேச முடியவில்லை. முடிந்தால் மட்டும்? ஆனால், அவனால் எப்படி அவளை மறந்து வாழ முடியும்? நிச்சயமாக முடியாது. உடலின் ஒவ்வொரு அணுவும் வலியில் துடிக்கும் இந்த நிமிடத்தில் கூட அவள் வேண்டுமே வேண்டும் என்றுதான் அவன் உள்ளம் துடித்தது. விழிகளை ஒருமுறை இறுக்கி மூடித் திறந்தான். ஒற்றை கண்ணிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் கசிந்து ஓடிற்று.

“இங்க பார். இனி உன்ர குடும்பம் வாழுறதுக்கு இருக்கிற ஒரே வழி நீ மட்டும்தான். அதாலதான் விட்டுட்டுப் போறன். ஒழுங்காப் பிழைச்சுப்போய்க் குடும்பத்தைப் பாக்கிற வழியப் பார். இல்ல…” என்றவன் மேலே பேசவில்லை. அங்கிருந்து எழுந்து வெளியேறினான்.

*****

இடிந்துபோய் அமர்ந்திருந்தார் அமிர்தவல்லி. அவரால் கணவர் சொன்னதை நம்பவே முடியவில்லை. அவர் மகளா? அவரின் செல்ல மகளா? அவர்களை எல்லாம் நம்ப வைத்து ஏமாற்றினாளா? மும்முரமாகச் சிங்களம் பயின்று, அவரிடமே பேசிப் பயிற்சி எடுத்ததெல்லாம் இதற்குத்தானா? அன்றே கணவர் சொல்லியும் அவர்தானே கவனமற்று விட்டுவிட்டார். அவ்வளவு நம்பிக்கை. என் மகள் சின்ன பிள்ளை, அவள் உலகமறியாதவள், வழி தவறிப் போகமாட்டாள், நான் அப்படி வளர்க்கவில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை! அதனால்தானே மேலோட்டமாக விசாரித்துவிட்டு அப்படியே விட்டார்.

விடுமுறை இருந்தும் அவள் வீட்டுக்கு வராமல் இருந்த பொழுதுகளில் எல்லாம் தனிமை அவரை வாட்டினாலும் கூட, அவள் சொன்ன பொய்யை நம்பி, படிக்கிறாள் என்று நினைத்தாரே! எவ்வளவு பெரிய ஏமாற்று. அவளால் அது முடிந்திருக்கிறதே! ஒவ்வொரு முறையும் இங்கே வருகையில் ஓடிவந்து கட்டிக்கொண்டு கொஞ்சுவாளே! அவர் பின்னாலேயே சுற்றுவாளே! அதெல்லாம் நடிப்போ?

அவருக்கு மனம் தாங்கவே மாட்டேன் என்றது. என்னவோ முழுமையாக நம்பிய மகள் மொத்தமாய் ஏமாற்றியது போல் தோன்றிவிட்டதில் ஏன் இப்படி நடந்தாய் என்றுகூட அவர் கேட்கப் போகவில்லை. கேட்டு மட்டும்? அதுதான் ஒரேயடியாகத் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டாளே!

வந்ததிலிருந்து அறைக்குள்ளேயே கிடந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள் நிரல்யா. எது நடந்துவிடுமோ என்று பயந்தாளோ அது நடந்தே விட்டதே! சிசிரவை நினைத்து நினைத்துக் குலுங்கி அழுதாள். அவளால் சும்மாவேனும் கண்களை மூட முடியவில்லை. மூடினால் நிரா போகாதடி என்று சிசிர வந்து கதறினான்.

இதில் அன்னையின் ஒதுக்கமும் விலகளும் அவளை இன்னுமே கொன்றது. அவர்மடி சாய்ந்து, அழுது தீர்க்க நினைத்தாள். அவராவது உன் மனத்தில் இருப்பது என்ன, உன் விருப்பம் என்ன என்று கேட்கமாட்டாரா என்று ஏங்கினாள். அப்படி என்ன பெரிதாகத் தவறு செய்து விட்டாளாம்? மனத்துக்குப் பிடித்தவனை நேசித்தது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? வேற்றினத்தவன் என்கிற ஒற்றைக் காரணம் போதுமா ஒரு நல்ல மனிதனைத் தள்ளி வைக்க? இதையெல்லாம் அவளால் யாரிடம் சென்று கேட்க முடியும்? முதலில் அதற்குத் தைரியம் வேண்டுமே!

திடீரென்று அவளின் அறையின் கதவு திறந்துகொண்டது. உள்ளே வந்த அமிர்தவல்லி, அவள் முகத்தையும் பாராமல், “சாப்பிடு!” என்று உணவைக் கொண்டுவந்து அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு போனார்.

“அம்…மா…” நலிந்த குரலில் அழைக்கும்போதே உடைந்து அழுதாள். ஒரு நிமிடம் அமிர்தவல்லியின் பெற்ற மனம் துடித்தது. ஆசையாசையாய்ப் பெற்றெடுத்து, கண்ணுக்குள்ளேயே பொத்தி வைத்து வளர்த்த மகள் கதறுகிறாள். எப்படித் தாங்குவார்? ஆனால் அவள் செய்தவை? நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு அவளைத் திரும்பியும் பாராது அங்கிருந்து வெளியேறினார்.

அரை மணி நேரம் கடந்து வந்து பார்த்தபோது உணவு அப்படியே இருந்தது. மெல்லிய கோபம் ஒன்று முகிழ்க்க, “இப்பிடிச் சாப்பிடாம இருந்து என்னத்த நிரூபிக்கப் பாக்கிறாய்?” என்றார் அவளை நேராக நோக்கி.

அவள் விழிகள் மளுக்கென்று நிறைந்து வழிந்தன. அவர் அசையவில்லை. “சும்மா அழாம எழும்பிச் சாப்பிடு. உன்ர இந்தக் கண்ணீர் நீ செய்த எதையும் நியாயப் படுத்தாது!” என்றுவிட்டுப் போனார்.

மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்த்தபோது அரைவாசி சாப்பிட்டிருந்தாள். தற்போதைக்கு இதுவே போதும் என்று விட்டுவிட்டார்.

இரவானது. வீடு வந்த சுந்தரலிங்கத்தின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அந்தளவில் இறுகி, கோபத்தில் சிவந்திருந்தது. எதைப் பேசவும் அமிர்தவல்லி பயந்தார். தவறான முடிவுகள் ஏதும் எடுத்து விடுவாளோ என்று மகளைக் குறித்தும் ஒரு பயம் அவரை ஆட்டியது. உறங்க முடியவில்லை. அடிக்கடி எழுந்துபோய் அவள் அறையை எட்டி எட்டிப் பார்த்துவிட்டு வந்தார். சுந்தரலிங்கமும் உறங்கவில்லை என்று அவர் புரண்டு புரண்டு படுத்ததிலேயே விளங்கிற்று. அடுத்த முறை பார்க்க அவர் வந்தபோது அனந்தன் அவளை வந்து பார்த்துவிட்டு மாடியேறிக்கொண்டிருந்தான்.

அவன் அக்கறையில் மனம் கசிய தானும் ஒருமுறை அவளை எட்டிப் பார்த்துவிட்டு வந்து படுத்தவருக்கு மகள் மீது மிகுந்த ஆற்றாமை. இப்படி அவளுக்காய் அவர்கள் எல்லோரும் துடிக்க என்ன காரியம் செய்துவிட்டாள்? இனி அவளின் எதிர்காலம் என்னாகும்? அவர் கணவர் என்ன முடிவை எடுப்பாரோ என்று ஓராயிரம் சிந்தனைகள் ஓடிற்று.

அடுத்தநாள், “தம்பி! சாப்பிட வாய்யா!” என்று அமிர்தவல்லி அழைத்ததை வைத்து அனந்தன் வந்துவிட்டதை அறிந்துகொண்ட நிரல்யா, சற்றே நிம்மதியாய் உணர்ந்தாள்.

ஆனால், என்ன செய்து முடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று தெரியாமல் நெஞ்சு நடுங்கிற்று.

சிரித்த முகமாகவே இருக்கும் அவளின் சிசிர எப்படி இருக்கிறானோ? மெல்லிய கடுமையைக் கூடக் காட்டத் தெரியாதவன் அவள் பார்க்கவே எவ்வளவு அடியை வாங்கினான். ‘சொறி சிசிர. எல்லாம் என்னால. என்ர குடும்பத்தைப் பற்றித் தெரிஞ்சும் நான் உங்கள விரும்பி இருக்கக் கூடாது. விரும்பியே இருக்கக் கூடாது!’ என்று அழுதாள்.

ஆனால், அது அவள் கையிலா இருந்தது? அவன் கேட்க முதலே அவள் இதயம் களவு போயிருந்ததே! அவள் மனது எப்போதோ அவளையும் மீறி அவனிடம் விழுந்திருந்ததே. பிறகு எப்படி மறுப்பாள்? போட்டு வைத்திருக்கும் அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்துக்கொண்டு பீறிட்டுப் பாய்வதுதானே காதல்?

ஒரு வாரம் அப்படியே கடந்து போயிற்று. யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் நிரல்யா. யாரும் எதையும் அவளிடம் கேட்டுக்கொண்டு வரவில்லை. என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள் என்று கேட்கும் தைரியம் அவளுக்கும் இல்லை. சிசிரவின் நிலை என்ன, இனி என்னாகும் என்கிற கேள்விகள் அவளை மருட்டியது.




கருத்திட

ஹாய் ஹாய்,

திருப்பி வாசிக்கவே இல்ல. எழுதினதை அப்படியே போட்டுட்டேன். அந்தளவில் மண்டை சூடாகிப்போய் இருக்கு. ஹாஹா. முடிந்தால் புதன் இரவு அத்தியாயம் வரும். ஆனா எதிர் பாக்காதீங்க. வியாழன் கட்டாயம் போடுவேன். கருத்திடும் அனைவருக்கும்மிக்க மிக்க நன்றி!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 13


சுந்தரலிங்கம் வெளியுலகத்துக்குப் பொல்லாதவர்தான். சிலருக்குக் கெட்டவர்தான். வீட்டில் அப்படியில்லை. மனைவிக்கு நல்ல கணவர். மகளுக்கும் நல்ல தந்தையே! இந்த முறையோ மனைவி மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தார்.

தான் சொன்னதைக் கேட்டு, நிரல்யாவை இங்கே எங்கேயாவது படிக்க விட்டிருக்க இதெல்லாம் நடந்திருக்காதே என்கிற எண்ணம் அவரை விட்டு நீங்கவே மாட்டேன் என்றது. பெண்பிள்ளை விசயம், ஒரு கறை படிந்துவிட்டது போன்ற அந்த உணர்விலிருந்து அவரால் வெளியே வரவே முடியவில்லை.

யாழ் பல்கலைக்கழகமாக இருந்திருந்தால் கூட அவர்களின் கண்காணிப்பில் இருந்திருப்பாள். அவளுக்கும் ஒரு பயம் இருந்திருக்கும். ஒழுங்காக இருந்திருப்பாள். அங்கே அவருக்குப் பெரிதாகச் செல்வாக்கும் இல்லை. ஆனாலும் இங்கிருக்கும் பெரிய கைகளோடு பேசி, அவர்களைக்கொண்டு அங்குப் பேச வைத்து, சிசிரவை அடித்தது போலீஸ் கேஸாகாமல் பார்த்துக்கொள்வதற்குள் இந்தப் பத்து நாள்களில் ஒரு வழியாகிப்போயிருந்தார்.

அனந்தனுக்கும் அலைச்சல். இடைப்பட்ட நாள்களில் இரண்டுமுறை பேராதனை சென்று வந்திருந்தான். இதெல்லாம் தேவையா என்று மனம் கொதித்துக்கொண்டிருந்தது. நிம்மதி மொத்தமாய்ப் போயிற்றே. இனி அவளை ஒரு கரை சேர்க்கும் வரையில் அவருக்கு அது திரும்ப வரப்போவதில்லை. பழையபடி அவளை நம்பப்போவதும் இல்லை.

நிரல்யா அவளின் அறையின் வெறும் தரையில் சுருண்டு கிடந்தாள். பார்வை யன்னலினூடாகத் தெரியும் அந்த வான் வெளியில் இலக்கற்று வெறித்திருந்தது. இதுதான் கடந்த பத்து நாள்களாக அவள் நிலை. கட்டிலில் படுத்து படுத்து அலுத்துவிட்டது.

சொந்த வீட்டில் இருந்தாலும் அந்நியமாகிப் போயிருந்தாள். யாரும் அவளோடு கதைப்பதில்லை, அவள் முகம் பார்ப்பதில்லை. அவளுக்கும் அவர்களிடம் சென்று தானாகப் பேசும் தைரியம் இல்லை. மடிக்கணனி, கைப்பேசி எல்லாமே இந்த வீட்டுக்குள் வந்த நிமிடமே சுந்தரலிங்கத்தால் பறிமுதல் செய்யப் பட்டிருந்தது. அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதும், கையில் கைப்பேசி இல்லா நிலையும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலும் ஒருவித அழுத்தத்துக்குள் சென்றுகொண்டிருந்தாள்.

எதையும் யோசிக்க முடியாததுபோல் ஒரு உறைந்த நிலை. உயிரின் ஆழத்தில் மட்டும் ஒரு வலி நிரந்தரமாய்த் தங்கி நெஞ்சைப் பிசைந்துகொண்டே இருந்தது.

இதற்கு அவர்கள் ஏதாவது திட்டி, நான்கு அடியைக் கூடப் போட்டிருக்கலாம். ஒதுக்கி வைத்து ஒரு மனநோயாளியாக்கி வைத்திருந்தார்கள். மூக்கை ஊடறுத்துக்கொண்டு கண்ணீர் அதுபட்டதுக்கு வழிந்து ஓடியது.

சிசிர நினைவில் வந்தான். மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தவளை முட்டுக்காலில் நின்றபடி அள்ளியணைத்துக் கொஞ்சிவிட்டு அவள் முகம் பார்த்துச் சிரித்தான். ஒற்றைப் பூவை நீட்டி, ‘பிடிச்சிருக்கா?’ என்று கேட்டான். அவள் மூக்கோடு மூக்கை உரசி ‘ப்ளீஸ், பிடிச்சிருக்கு எண்டு சொல்லு!’ என்றான். அதற்குமேல் அவளால் முடியவில்லை. குலுங்கி அழுதாள். எப்படி இருக்கிறானோ? அவன் காயங்கள் ஆறியிருக்குமா? எப்படியும் பல்கலை முழுக்க செய்தி பரவியிருக்கும். எப்படி எதிர்கொண்டிருப்பான்? முதல் அவன் படிப்புக்கு எந்தக் குந்தகமும் வராமல் இருக்க வேண்டும். அடுத்து என்ன செய்வது என்று சத்தியமாய் அவளுக்கு தெரியவேயில்லை.

*****

உடல் இன்னுமே புண்ணாக நொந்தாலும் இரண்டு நாள்கள்தான் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான் சிசிர. வீட்டிலிருந்து வந்த அழைப்பு அவனை எழுந்து அமர வைத்திருந்தது.

அங்கே காலியில் அவன் தந்தை நடத்திவந்த தேநீர்க் கடையை யார் என்று தெரியாத நபர்கள் இரவோடு இரவாக அடித்து நொறுக்கிவிட்டார்களாம். இனிப் பிழைப்புக்கு என்ன செய்வதோ தெரியாது என்று அன்னை அழவும் துடித்துப் போனான்.

அப்போதுதான் அனந்தன் சொன்ன, ‘இனி உன்ர குடும்பம் வாழுறதுக்கு இருக்கிற ஒரே வழி நீ மட்டும்தான்.’ என்றதன் பொருள் முழுமையாய்ப் புரிந்தது. மனம் கொந்தளித்தது. உங்கள் கோபம் என்னோடுதானே, ஏனடா என் வீட்டுச் சாப்பாட்டில் கையை வைத்தீர்கள் என்று கொதித்தான். ஆனால், இந்த ரோசமும் ஆக்ரோசமும் என்ன செய்துவிடும்? அவனால் அவர்களை என்ன செய்ய முடியும்?

அனந்தனோடு நேருக்கு நேர் நின்று, நெஞ்சை நிமிர்த்திச் சண்டையிடும் அளவுக்கு அவன் உடலில் வலு இல்லை. அவர்களின் பணபலம், செல்வாக்கின் முன்னால் அவனால் எதிர்த்து நிற்கவும் முடியாது. நடந்ததை அறிந்து ஓடி வந்த மகிந்த கொடுத்த போலீஸ் கேஸ், ஒன்றுமே இல்லாமல் போனதிலேயே அது தெரிந்து போயிற்று.

அது எல்லாவற்றையும் விட, அவசரப்பட்டு எதையாவது செய்து, அவளை முழுமையாக இழந்துவிட அவன் தயாராயில்லை. அவளுக்காகவே அத்தனையையும் கடந்து வந்தான். தனக்கு நடந்ததைச் சொல்லாமல் வீட்டினரை எப்படியாவது சமாளிக்கச் சொன்னான்.

மனத்தில் மட்டும் ஒரு உறுதி இரண்டு மடங்காய் எழுந்து நின்றது. எல்லோரும் பரிதாபத்துடன் பார்ப்பார்களே என்று ஒரு மாதிரி இருந்தாலும் அடுத்த நாளே பல்கலைக்குப் புறப்பட்டுவிட்டான்.

நேராக அவன் சென்றது சரண்யாவிடம்தான். நிரல்யாவோடு பேசும்படி கெஞ்சிக் கேட்டிருந்தான். அவளுக்கோ அதற்குத் தைரியம் இல்லை. இரண்டு நாள்கள் அவளைத் தேடி வந்தவன் அவள் பயத்தில் அழைக்கவில்லை என்றதும் அதன் பிறகு வரவில்லை. அவன் நிராவின் நிலை என்னவோ, எப்படி இருக்கிறாளோ என்று மனம் பதறினாலும் அவர்களின் பிரச்சனைக்குள் அவளை இழுத்துவிடவும் பயந்தான்.

தன் வீட்டினர் பொல்லாதவர்கள் என்று நிரல்யா பயந்தபோதெல்லாம் அவன் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. அதுவே பட்ட பிறகு தனக்குப் போன்ற ஒரு நிலை, பெண் பிள்ளையான சரண்யாவுக்கு வந்துவிட்டால் என்னாவது என்றெண்ணி தன் வேதனையைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முயன்றான்.

அது இலகுவாய் இல்லை. அவள் கண்ணீர் அவனை நிம்மதியாக விடவேயில்லை. அவள் நிலை என்ன என்று தெரியாமல் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. பல்கலை முழுவதும் அவளோடு அவன் கழித்த பொன்னான நேரங்களையே சுமந்து வந்தன. அவர்களின் காதலைக் கொண்டாடிய அதே கிரவுண்டில் வைத்துத்தான் பிரித்துக் கூட்டிப் போனார்கள். மரங்களின் அணிவகுப்பு, அதன் கிளைகள், பூத்துக் குலுங்கும் பலவர்ண மலர்கள், விடாமல் சிணுங்கும் மழை, திரும்பும் பக்கமெல்லாம் தெரியும் குடைகள் என்று எங்கு திரும்பினாலும் அவள் நினைவுதான். அதையெல்லாம் மறந்து படிப்பில் கவனம் செலுத்தப் படாத பாடு பட்டான்.

அப்படி அவன் திரும்பவும் வந்து கேட்காமல் விட்டதே சரண்யாவைப் பாதித்தது. அவள் பார்க்க வளர்ந்து செழித்த நேசம் அவர்களது. இப்படி ஒருவன் தன்னையும் நேசிக்க வரமாட்டானா என்று ரகசியமாக ஏங்கியிருக்கிறாள். அப்படியானவனுக்குத் தன்னால் முடிந்ததாக எதையாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதல், நாளாக நாளாகக் கூடிக்கொண்டு போயிற்று.

ஒருநாள் அசட்டுத் துணிச்சலில் எதையும் யோசிக்காது வேகமாக நிரல்யாவின் இலக்கங்களை அழுத்தியிருந்தாள். அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.

அடுத்து அமிர்தவல்லிக்குத்தான் அழைக்க வேண்டும். நீ கூட ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லையேம்மா என்று அவர் கேட்டால் என்ன பதில் சொல்வது என்கிற பயத்திலேயே இன்னும் இரண்டு நாள்களைக் கடத்தினாள். பிறகு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அமிர்தவல்லிக்கு அழைத்தாள்.

அவள் பெயரைப் பார்த்ததும் அமிர்தவல்லிக்குக் கோபம்தான் வந்தது. பெற்ற மகளே ஏமாற்றுகையில் அடுத்த வீட்டுப் பிள்ளையோடு கோபித்து என்ன காணப் போகிறார்? அழைப்பை ஏற்று, “எப்பிடி இருக்கிறீங்கம்மா?” என்று எதையும் காட்டிக்கொள்ளாமல் வினவினார்.

அப்படி, கோபப்படாமல் சாதாரணமாக அவர் கேட்டது ஒருவிதமாய் அவளைக் குற்றவுணர்வில் தள்ள, “நல்லாருக்கிறன் அன்ட்ரி(ஆண்ட்டி). நீங்க?” என்று பெரும் தயக்கத்துடன் வினவினாள்.

“என்னவோ இருக்கிறமம்மா.” அவருக்கு அவள் எதற்கு அழைத்திருப்பாள் என்கிற ஒரு ஊகம் இருந்ததில் அவளாகவே வாயைத் திறக்கட்டும் என்று சுருக்கமாகவே முடித்தார்.

“அன்ட்ரி அது… நிரல்யா என்ன செய்றாள்? படிப்பு… எக்ஸாம்ஸ் வரப்போகுது. அதான்… எடுத்தனான்.”

“படிக்கட்டும் எண்டு நம்பி அனுப்பினதுக்குத்தான் எங்களுக்கு நல்லா பாடம் படிப்பிச்சிட்டாளே. இனி அவவின்ர அப்பா என்ன யோசிச்சு வச்சிருக்கிறார் எண்டு தெரியாதம்மா. ஆனா, அங்க வருவா எண்டு நான் நினைக்கேல்ல.!” அவள் பேசுவது சிசிரவின் ஏற்பாட்டினால்தானோ என்று தோன்றியதும் அவர் குரலில் ஒரு கோபம் தானாக வந்திருந்தது.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom