• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 3

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-3


"நா..நாங்கள் தான் சமைத்தோம்..." என்றும் இல்லாமல் இன்று தடுமாறியது கவியின் குரல்.

"ஓ… நீங்கள் தான் சமைத்தீர்களா?"

"பாவை! பேசியது போதும், அங்கே கண்மணி தனியே இருக்கிறாள், அவளுடன் போய் விளையாடு! எனக்கு நிறைய வேலை இருக்கிறது." பாவையை மேலே பேசவிடாது தடுத்த கவிநயா, விரைந்து வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள்.

தாயின் தடுமாற்றத்தில், தேவையில்லாத அந்த கடுமையில் திகைத்த பாவை, 'அப்பாவை நினைவு படுத்திவிட்டேன் போலவே. சே! நான் ஒரு விசரி(லூசி), அம்மா பாவம். இனி அப்பா தொடர்பான எதையும் அம்மாவிடம் கேட்கக்கூடாது' என்று தனக்குத்தானே ஒரு விதியை வகுத்துக்கொண்டது அந்த தேன்சிட்டு.

தாயை வருத்திவிட்டோம் என்று நினைத்து தன் தலையிலேயே தட்டியவள், இடையில் விட்ட விளையாட்டை கண்மணியுடன் விளையாடச் சென்றாள்.

அடுத்தநாளும் அதன் பாட்டுக்கு நகர, திங்கள் காலையில் பள்ளிக்குத் தயாரான பாவை, கவியிடம், "அம்மா, இன்று பொதுநூலகத்தில் அங்கத்தவராக சேர்வதற்கு பதியலாம் என்று சொன்னீர்களே, எப்போது போவது?" என்று கேட்டாள்.

பாவைக்கு பதினெட்டு வயது இன்னும் நிரம்பாததால், அவளின் பெயரில் அங்கத்தவ அட்டை எடுக்க முடியாது. அதனால் கவி தான் எடுத்துத்தருவதாகச் சொல்லி இருந்தாள். வேலைகளின் நடுவே அவள் மறந்திருந்தபோதும், மறக்காது நினைவு படுத்திய மகளின் நினைவாற்றலில் மகிழ்ந்தவள், "இன்று பள்ளி முடிந்ததும் பள்ளிக்கூட வாசலிலேயே நில். அம்மா வந்து அழைத்துப் போகிறேன்." என்றாள் அன்புடன்.

மகிழ்வுடன், "சரிம்மா. நான் அங்கேயே நிற்கிறேன். மறக்காமல் வந்துவிடுங்கள். மணியிடமும் சொல்லவேண்டும் எனக்காக காத்திராமல் வீட்டுக்கு போகச்சொல்லி." என்றவள், கவியிடம் சொல்லிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினாள்.

இரட்டை பின்னலிட்டு வெள்ளை சீருடையில், நெற்றியில் பூசிய திருநீறுடன் புன்னைகையை ஆபரணமாக அணிந்து செல்லும் மகள், அவளின் மனதை அப்படியே அள்ளினாள். கவியின் வாழ்வில் எது இல்லாதபோதும் எதுவும் கிடைக்காதபோதும் அவளின் வாழ்வுக்கே வரமாக வந்த வசந்தம் அவள் மகள்!

அன்றைய வேலைகளைப் பார்த்த கவிநயா, பாவையின் பள்ளி விடும் நேரமானதும் தனது ஸ்கூட்டியை பள்ளிக்கு விட்டாள். சாதாரண ஸ்கூட்டிதான். ஆனாலும் அதில் ஏறும் ஒவ்வொருமுறையும் அவள் மனதில் தோன்றும் ஒருவித பெருமை, நிறைவு, மனதின் அமைதி அப்போதும் தோன்றியது. இருக்காதா பின்னே, வேர்வையை சிந்தி, கஷ்டப்பட்டு உழைத்து, சேமித்து சேர்த்த பணத்தில் அவள் வேண்டிய பெறுமதிமிக்க வாகனம் அது!!

ஆரம்பகாலத்தில் வவுனியாவுக்கு கவி வந்தபோது அவளிடம் பணம் என்று இருந்தது சில நூறு ரூபாய்களே. அவளின் தாய் மரகதம் அவளுக்கென்று தன் உழைப்பில் சேமித்து வாங்கி வைத்திருந்த ஒரு பவுன் சங்கிலியும் இரண்டு பவுனில் செய்திருந்த மெல்லிய ஒரு சோடி காப்புமே அவளின் சொத்தாக இருந்தது.

இவற்றோடு வந்தவள், இன்று சொந்த காணிக்கும், அழகிய சிறு வீட்டுக்கும், இந்த ஸ்கூட்டிக்கும் உரிமை உடையவள் ஆகிவிட்டாள். போதாக்குறைக்கு கைமேல் வருமானம் தரும் தொழில் கையில். மல்லிகையாய் அவள் வாழ்வில் மணம் பரப்பும் மகவாய் ஓவியப்பாவை.

வாழ்க்கையல் இதை விட வேறு என்ன வேண்டும். பாவையை நன்றாக படிக்கவைத்து நல்ல வேலை ஒன்றில் அவளை அமர்த்திவிட்டால், என் கடமை முடிந்தது என்று நினைத்தவளின் முகத்தில் மெல்லியதாய், நிறைவாய் அழகிய சிறு புன்னகை!!

கவி பள்ளிக்கூடத்தின் வாசலுக்கு செல்ல ஓவியப்பாவையும் வெளியே வர சரியாக இருந்தது.

"அம்மா, வந்துவிட்டீர்களா?" முகம் மலரக் கேட்டபடி, தாயின் பின்னே பள்ளி பாகை வைத்துவிட்டு ஏறிக்கொண்டாள் பாவை.

"கவனமாக அம்மாவை பிடித்துக்கொள் பாவை." என்றபடி, மகளை ஏற்றிக்கொண்டு பொது நூலகத்துக்குச் சென்றாள்.

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற கவி, நூலகத்துக்கு பொறுப்பாக இருந்த வயதானவரிடம் சென்று, தனது மகள் அங்கே அங்கத்தவர் ஆகவிரும்புவதைக் கூறவும், அவர் கணனியில் இவர்களது விபரங்களை பதிந்தார்.

பெயர் விலாசம் கவியின் தொழில் என்று எல்லாவற்றையும் பதிந்தவர்,

"எத்தனை வயதம்மா உனக்கு?" என்று கவியைப் பார்த்துக் கேட்டார்.

"இருபத்தியேழு வயது முடிந்துவிட்டது." என்றாள் கவி.

"சின்னப்பெண்ணே உன் வயது என்னம்மா?" என்று கேட்டவரிடம், "எனக்கு பதினொன்று முடிந்துவிட்டது தாத்தா. இப்போது பன்னிரண்டு நடக்கிறது..." என்றவளின் குரலில், நான் பன்னிரண்டு வயதான பெரிய பெண்ணாக்கும் என்கிற பெருமிதம் கலந்திருந்தது.

"அப்படியானால், நீ சின்னபெண் அல்ல பெரியபெண், சரிதானா?" நகையோடு கேட்டுவிட்டு, அவளின் வயதை கணனியில் பதியப்போனவர் திகைத்துப்போனார்.

அதிர்ச்சி அடைந்தவர், "அப்படியானால் உன்.. உன்.. பதி......." அவரின் தடுமாற்றத்தில், அவர் கேட்கப்போவதை உணர்ந்த கவி, பாவையிடம் திரும்பி, "உனக்குப் படிக்கத் தேவையான புத்தகங்களை, புத்தகங்கள் இருக்கும் இடத்தில் போய்ப்பார். அதற்கிடையில் நான் இங்கே பதிந்துவிடுவேன்..." என்று மகளை அந்த இடத்தில் இருந்து அனுப்பினாள்.

"சரியம்மா..." ஆர்வத்துடன் தலையாட்டிவிட்டு பாவை செல்லவும், அதன் பிறகு நூலகப்பொறுப்பாளரின் பக்கம் தன் பார்வையை திருப்பினாள் கவிநயா.

அப்போதும் முழுதாக அதிர்ச்சி விலகாது அவளையே பார்த்திருந்தவரிடம், "ஆமாம்! என்னுடைய பதினாறாவது வயதில் பிறந்தவள் என் மகள் ஓவியப்பாவை." தலையை நிமிர்த்தி தைரியமாக சொன்னாள் கவிநயா.

பேச்சற்று சில நிமிடங்களைப் போக்கியவர், தனது அதிர்ச்சியை ஒருவாறாக தொண்டைக்குழியில் விழுங்கி, "உன் கணவர்...?" என்று இழுத்தார். சிரமத்துடன் வந்தது அவரின் கேள்வி.

"இறந்துவிட்டார்..." இப்போதும் கலங்காது தைரியமாக வந்தது பதில் கவியிடம் இருந்து.

முழங்கையை மேசையில் ஊன்றி, கைவிரல்களிலே தனது நெற்றியை தாங்கிகொண்டார். அவருக்கே சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவள் சொன்னதை ஜீரணிக்க. சற்று நேரத்தில் நிமிர்ந்து, "எப்போதம்மா?" என்றவரின் குரல் அடைத்து அனுதாபத்துடன் வந்தது.

"மகள் மூன்று மாதக்கருவாக இருக்கும்போது..." பிசிறில்லாமல் இருந்தது அவளின் குரல்.

அவளின் விபரங்களை கேட்டவர்தான் தடுமாறிப்போனாரே தவிர அவள் திடமாகவே நின்றாள்.

கவி பதில் சொன்ன விதமே அவளின் தைரியத்தையும் நிமிர்வையும் காட்ட, வெகு சிரமப்பட்டு புன்னகைத்தவர், "என்றும் நீங்கள் இருவரும் நன்றாக இருக்கவேண்டும் அம்மா..." என்றார் உள்ளன்போடு.

மெல்லிய இதழ் விரிப்போடு, "நன்றி...!" என்றாள் கவி.

அந்த நன்றியிலும் இருந்த நிமிர்வு அவரை வியக்கவைத்தது.

பின்னர் விரைவாக அவர் பதிந்து கொடுக்கவும், அங்கத்தவ அட்டையை பெற்றவர்கள், தேவையான புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார்கள்.


தனது காரில் தாயுடன் வவுனியாவுக்குள் நுழைந்து, பேருந்து நிலையத்தைக் கடக்கையில், அன்று தான் திட்டிய அந்தச் சிறு பெண்ணின் நினைவுகள், அவனை அறியாமலேயே ரவியை தீண்டிச்சென்றது. துடினமான பெண்ணாக இருந்தாலும், அவளின் வாய் சரியில்லை என்று எண்ணிக்கொண்டான் அவன்.

இன்று மொத்தமாக ஊர் மாறி வந்துகொண்டிருக்கிறார்கள் ரவியும் அவன் தாய் சகுந்தலாவும். இதற்கு முதலும் தாயுடன் வவுனியா வந்தவன், வீட்டினை தாயின் பெயரில் வாங்கி பதிவு செய்திருந்தான். காஞ்சனாவின் கணவர் கனகேந்திரனும் மகனின் திருமணத்தை முன்னிட்டு வேலைகளை ஒதுக்கிக்கொண்டு வவுனியா வந்துவிடவே, காஞ்சனா குடும்பத்துடன் சில நாட்கள் தாங்கிச்சென்றார்கள்.

அதன்பிறகு அங்கிருந்து இங்கு கொண்டு வரவேண்டிய பொருட்களை இங்கே நந்தனின் பொறுப்பில் அனுப்பி வைத்துவிட்டு, இப்போது தாயுடன் வசிக்க என்று வந்துகொண்டிருகிறான் ரவி.

"என்ன இருந்தாலும் எங்கள் சொந்த இடம்போல் வராது இல்லையா ரவி..." என்ற தாயின் கேள்வியில் சிரித்தவன்,

"அம்மா, நீங்கள் விரும்பியதால் தான் இங்கு இடம் மாறி வந்திருக்கிறோம். அதோடு காஞ்சனா ஆன்ட்டியும் இருப்பதால் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள் என்று எண்ணியதால் தான் நானும் சம்மதித்தேன். உங்களுக்கு பிடிக்காவிட்டாலோ அல்லது அலுத்துவிட்டாலோ நாம் மறுபடியும் மலையகத்துக்கே போய்விடலாம். நம் வீடு தொழில் எல்லாம் இப்போதும் அங்கே இருக்கிறது தானேம்மா. அதனால் கவலை வேண்டாம். உங்களுக்கு எப்போது அங்கு போகவேண்டுமோ அப்போது போகலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் எனக்கு...." என்றவனின் அன்பில் அந்தத் தாயுள்ளம் நிறைந்து, மகனை பாசத்துடன் அவர் விழிகள் தடவியது.

"எனக்கு ஒரு குறையும் இல்லை ரவி. என்ன இருந்தாலும் இதுவரை வாழ்ந்த ஊரை விட்டு வருவது கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறது. நாளாக அதுவும் சரியாகிவிடும். ஆனால் எனக்கு நிஜமான மகிழ்ச்சி எது தெரியுமா? உன் திருமணத்தை பார்ப்பதுதான் ரவி..." என்றார் எதிர்பார்ப்புடன்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன், "திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டேனே அம்மா. பிறகு என்ன? நீங்கள் உங்களுக்கு பிடித்தமாதிரி பெண்ணை பாருங்கள்...." வாழ்வில் எல்லாவற்றையும் கடப்பதுபோல இந்த திருமணத்தையும் கடக்கத்தான் வேண்டும் என்கிற தொனி இருந்தது அவன் குரலில்

"நீ திருமணத்திற்கு சம்மதித்ததும் நானும் காஞ்சனாவிடம் சொல்லிவிட்டேன். சாந்தினியைப் போல எனக்கும் ஒரு நல்ல மருமகளைப் பார்க்கச்சொல்லி..." என்றவரின் குரலில் சிறு பிள்ளையின் குதுகலம் நிறைந்திருந்தது. பின்னே கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக மகனிடம் மன்றாடியதில் இப்போதல்லவா அவன் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறான். அவனின் சம்மதமே அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.

"அம்மா, நாங்கள் இங்கே இடம் மாறும்வரை ஆன்ட்டியிடம் சொல்லாதீர்கள் என்று சொன்னேனே. பிறகும் ஏனம்மா இவ்வளவு அவசரம்?" என்றவனின் குரலில் கொஞ்சமே கொஞ்சம் எரிச்சல் கலந்திருந்தது.

"திருமணம் செய்வது என்று முடிவாகிவிட்டது. பிறகு எதற்கு நாளைக் கடத்துவான். அதோடு வீட்டை வாங்க வந்தபோதுதான் நானும் காஞ்சனாவிடம் சொன்னேன். அவளும் நந்தனின் திருமணம் முடியட்டும் என்று சொன்னாள். அதனால் உனக்கொன்றும் நாளைக்கே திருமணம் நடக்காது. அதனால் சிடு சிடுக்காமல் பேசாமல் இரு!" என்றவரின் குரலிலும் கொஞ்சம் கோபம் கலந்திருந்தது.

சரிதான், சம்மதம் சொல்லியாகிவிட்டது. திருமணமும் நடக்கத்தான் போகிறது. அது எப்போது நடந்தால் என்ன? என்று அலட்சியப்படுத்தியது அவன் மனம்.

மனிதராய் பிறந்த அனைவரின் வாழ்விலும் உண்டாகும் அழகிய தருணம் திருமணம். இருமனம் கூடி திருமணம் ஆகி உடலும் உணர்வும் சங்கமிக்கும் அழகிய கூடல்நகரமே அது!

திருமணம் என்று ஒன்று நடந்து அதன் பின்னர் உண்டாகும் பிரச்சினைகளையும், வாழ்வின் மாற்றங்களையும் கண்ணெதிரே கண்டபோதும், அந்தத் திருமணத்தை எதிர்நோக்கும் அனைவரின் கனவுகளும், எதிர்பார்ப்புக்களும், எண்ணங்களும், ஆசைகளும் மாறுவதே இல்லை.

என்னதான் பிரச்சினைகள் வந்தாலும், அந்தத் திருமணத்தில் தோன்றும் நிறைவு, காதல், மகிழ்ச்சி, சந்தோசம் மற்ற எதிலும் கிடைப்பதில்லை! அதனால்தான் திருமணத்தின் மீதான எதிர்பார்ப்பு யாருக்குமே குறைவதில்லை.

அப்படி இருந்தும் அந்த திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்க்க மறுத்தது ரவியின் மனது.

மகனின் திருமணம் பற்றிய கனவுகளுடன் சகுந்தலாவும், என்னவென்றே அறியாத சிந்தனைகளுடன் ரவியும், அவர்கள் இனி வாழப்போகும் புது வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

அன்றைய உணவுடன் நந்தனும் வரவே, "சோபா முதல் கட்டில் வரை எல்லாவற்றையும் அதன் அதன் இடத்தில் வைத்து, என் வேலையை சுலபமாக்கிவிட்டாய் நந்தா. மிக்க நன்றிடா..." என்றான் ரவி.

"ஆன்ட்டி, நாய் எதுவும் வளர்க்கிறீர்களா?"

நந்தனின் கேள்வியின் பொருள் புரியாது, "இல்லையே நந்தா. ஏன் கேட்கிறாய்?" என்று சகுந்தலாவும், "இல்லையேடா.." என்று ரவியும் பதில் கொடுத்தனர்.
 

Vishakini

Moderator
Staff member
சகுந்தலாவைப் பார்த்து, "இல்லை, நாய் இருந்தால் இவன் சொல்லிய நன்றியை அதற்கு கொடுக்கலாமே என்று கேட்டேன். ஆனால் அதுகூட இவன் அதை ஏற்றுக்கொள்ளாது..." என்றான் கடுப்புடன்.

பெரிதாக சிரித்த ரவிவர்மன், நந்தனின் முதுகில் ஒரு அடியைப் போட்டு, "சரிதான். என் நன்றியை நானே வைத்துக்கொள்கிறேன். வரும்போது எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தவேண்டுமே என்று யோசித்துக்கொண்டு வந்தேன். இங்கே நீ எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கவே, எனக்கு வேலை மிச்சமே என்கிற மகிழ்ச்சியில் தெரியாமல் நன்றியை சொல்லிவிட்டேன். சரி விடு. இனிச் சொல்லவில்லை. முதலில் சாப்பாட்டைத் தா. வயிறு கத்திக் கூச்சல் போடுகிறது.." என்றான் சமாதானமாக.

ஒரு வழியாக நந்தனை சமாதானப்படுத்தி, சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்க காஞ்சனாவும் கனகேந்திரனும் வந்து சேர்ந்தனர்.

"வாருங்கள் அண்ணா. வா காஞ்சி...." என்று சகுந்தலா வரவேற்கவும், சகுந்தலாவை அணைத்துக்கொண்ட காஞ்சனா, "நீ இங்கேயே இருக்க வந்ததில் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா சாக்கு." என்றார் சந்தோசமாக.

"எனக்கும்தான் காஞ்சி. நீயும் அண்ணாவும் இருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையில் தான் நான் இங்கே வந்தது..." என்று அவர்களின் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்கள் அந்தத் தோழிகள்.

மிகுதிப் பொருட்களை பொருத்தமான இடங்களில் வைப்பதும், அரட்டை அடிப்பதும், களைப்பாறுவதுமாக அன்றைய நாள் கழிந்தது.

அடுத்தநாளில் இருந்து, காலையில் எழுந்து தாயை நந்தன் வீட்டில் விட்டுவிட்டு, தன்னுடைய தொழிலையும், நந்தனுடன் சேர்ந்து அவன் திருமண வேலையையும் பார்த்தான் ரவிவர்மன்.

காஞ்சனாவுக்கும் சகுந்தலாவுக்கும், நந்தனின் திருமண வேலைகளோடு பொழுது கழிந்தது.


நாட்கள் அதன் பாட்டிற்கு நகர, பாவைக்கு பரீட்சையும் நெருங்கியது. அவள் படிப்பில் தன்னை மூழ்கடிக்க, கவியோ நடக்கப்போகும் சாந்தினியின் திருமணத்திற்கு செய்யும் சமையல் வேலைகளை கவனித்துக்கொண்டாள் சந்தோசமாக.

பரீட்சைகள் முடிந்து பள்ளியில் விடுமுறையும் விடவே, கவியின் வேலைகளுக்கு உதவியாக தாயுடன் பாவையும் இணைந்துகொண்டாள்.

சாந்தினி, நந்தன் ஜோடியின் குடும்பங்கள் இரண்டுமே வசதியில் குறையற்றவர்கள் என்பதால், பிரபல திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதுவரை சமைத்த அளவுகளிலேயே மிகப் பெரிய சமையல் இதுதான் என்பதால், உதவிக்கு என்று தினக்கூலிக்கு பலரை நியமித்து வெகு கவனத்துடன் சமையல் செய்தாள் கவி.

திருமணநாளும் விடிந்து, மண்டபத்துக்கு சாந்தினி குடும்பத்தினர் வந்ததும், வேலைகளை சிறிது ஒதுக்கி சாந்தியிடம் சென்றவள், அவளை இறுக்கி அணைத்து, "இன்றுபோல என்றுமே நீ மிகவும் நன்றாக வாழவேண்டும் சாந்தி..." என்றாள் அன்போடு.

"ஹேய்.. என்ன இப்போது வந்து வாழ்த்துகிறாய்?" என்ற சாந்தியின் கேள்விக்கு, "சாப்பாடு கொடுப்பதில், பிறகு என்னால் வர முடியுமோ தெரியாது சாந்தி. அதனால்தான்." தயக்கத்துடன் சொன்னாள் கவிநயா.

அவளின் தயக்கம் எதற்கு என்பது புரிந்தது சாந்திக்கு. காலம் மாறி கணணி உலகில் நாம் மிதந்தாலும், படித்து அறிவுகள் பல பெற்றாலும், மூட நம்பிக்கைகளை மட்டும் மூட்டை கட்டி மூலையில் போட முடியவில்லை நம்மால். கணவன் இல்லாத ஒரு பெண்ணின் நிலை இன்றுவரை பரிதாபத்துக்கு உரியதே!

"இங்கேபார் கவி, இது என் திருமணம். என் தோழி நீ மேடைக்கு கட்டாயம் வரவேண்டும்! அது என் விருப்பம். அதோடு நந்தனுக்கும் உன்னை நான் அறிமுகப்படுத்த வேண்டும்..." என்றாள் இதமாக.

"சரிதான் சாந்தி. ஆனால் நேரம் கிடைக்குமோ தெரியாது. அதனால் இப்போதும் சொல்லிவிடுகிறேன். நீயும் நந்தன் அண்ணாவும் பல்லாண்டுகாலம் நிறைவான வாழ்க்கை வாழவேண்டும்.." என்று வாழ்த்தினாள்.

"மிக்க நன்றி கவி..." குரல் நெகிழ்ந்திருந்தது சாந்திக்கு.

"தேவதை போல இருக்கிறாய். நந்தன் அண்ணா பார்த்தார், அப்படியே மயங்கிவிடுவார்.."

"கிண்டல் செய்யாதே கவி. எனக்கு வெட்கமாக இருக்கிறது.." அழகாய் வெட்கப்பட்ட சாந்தியை சிறிது கேலி செய்தவள், "சரி சாந்தி, நான் கிளம்புகிறேன். சமையலறையில் வேலைகள் நிறைய இருக்கிறது. ஆனாலும் உன்னை வாழ்த்திவிட வேண்டும் என்று ஆசையில் ஓடி வந்தேன். பிறகு பார்ப்போம்..." என்றபடி தன் வேலைகளைப் பார்க்கச்சென்றாள்.

சமையலறைக்கு வந்த பாவை, "அம்மா, சாந்தி ஆன்ட்டி வந்துவிட்டார்களா? நான் அவர்களை போய்ப்பார்க்கவா?" ஆர்வத்துடன் கேட்டாள்.

"வந்துவிட்டாள் பாவை, ஆனால் நீ தொந்தரவு செய்யக்கூடாது. அவளுக்கு இன்று நிறைய வேலைகள் இருக்கும்..." என்ற கவியிடம்

"அம்மா, நான் என்ன தொந்தரவு செய்யப்போகிறேன். சாந்தி ஆன்ட்டியைப் பார்த்துவிட்டு, அவர்களிடம் நான் அணிந்திருக்கும் சோளியைக் காட்டிவிட்டு வருகிறேனே..." என்றாள் கெஞ்சலாக.

மகளின் அந்த செல்லக்கெஞ்சல் மனதை அள்ளவே, "சரிடா, போய்ப்பார்த்துவா. கவனமாக இரு சரிதானா..." என்று சொல்லி அனுப்பினாள்.

தலையாட்டிவிட்டு செல்லும் மகளின் அழகில் அவள் மனம் பெருமிதம் கொண்டது. கறுப்புநிற ரோஜாவுக்கு தங்கநிற துகள்களை தூவியதுபோல, அவள் அணிந்திருந்த தங்கநிற ஆடையும் நெத்திசுட்டியும் விரித்துவிட்ட அடர்ந்த முடியும், பாவையை நடமாடும் ரோஜாக்கூட்டமாய் காட்டியது.

அனைத்து சடங்குகளும் முடிந்து, எந்தக் குறையும் இன்றி திருமணமும் முடிய, சொந்தபந்தம் நெருங்கிய நட்புக்கள் மட்டுமே எஞ்சிய நிலையில், "இன்றைய சாப்பாடு மிகவும் ருசியாக இருந்தது காஞ்சி..." என்றார் சகுந்தலா.

"ஆமாம் சக்கு, எனக்கும் மிகவும் பிடித்தது. சமைத்தவருக்கு நல்ல கைமணம்...." என்று இன்னொருவர் கூற, "சமைத்தது சாந்தியின் தோழி ஒருத்தி. நான் கூடக் கொஞ்சம் பயந்தேன், இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்கிறோமே, சாப்பாடு விசயத்தில் பிழை விட்டுவிட்டேனோ என்று. ஆனால் மிக நன்றாக இருந்ததாக எல்லோருமே சொன்னார்கள்..." நிறைவும் பெருமையுமாகச் சொன்னார் சாந்தியின் அப்பா வேல்முருகன்.

பின்னே சம்மந்தி வீட்டாரே புகழ்ந்துவிட்டார்களே. அதில் பெரும் திருப்தி அவருக்கு.

"அப்படியானால் நம் ரவியின் நிச்சயத்துக்கும், திருமணத்திற்குமே அந்தப் பெண்ணையே பிடித்துவிடலாம் அண்ணா..."

"அடுத்த பலியாடு நீதானடா..." என்றான் நந்தன், கேலியாக ரவியை பார்த்து.

"உங்களை???? பிறகு உங்களுக்கு இருக்கிறது பொறுங்கள்.." என்று ஊடலுடன் நந்தனை மிரட்டினாள் சாந்தி.

"சும்ம்ம்மாடா செல்லம்..." என்று உதடுகளை மெதுவாக அசைத்தவனின் கண்களோ ஆசையுடன் அவளைக் களவாடியது.

அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைத் திருப்பிய சாந்தி, அங்கே கண்மணியுடன் நடந்துசென்ற பாவையை பார்த்துவிட்டு, "பாவை, இங்கே வா...." என்று அழைத்தாள்.

சாந்தி கூப்பிட்டதும் முகம் மலர, "என்ன சாந்தி ஆன்ட்டி.." என்றபடி ஓடிவந்தாள் பாவை.

வருபவளைப் பார்த்த ரவி சற்றுத் திகைத்துத்தான் போனான். இதுவரை எண்ணெய் பூசி, இரட்டைப் பின்னலிட்டு, வெள்ளைச் சீருடையில் பார்த்தவளை, இன்று அழகிய ஆடையில், மலர்ந்த கண்களுடன், முகம் நிறைந்த சிரிப்புடன் அசைந்தாடும் பூங்காவாய் ஓடி வந்தவளில் இருந்து, அவனால் பார்வையை அசைக்கவே முடியவில்லை.

"சாப்பிட்டாயா பாவை....? எப்படி எங்கள் கல்யாணச்சாப்பாடு உனக்குப் பிடித்ததா?" என்று குறும்புடன் கேட்டாள் சாந்தி.

"ஆன்ட்டி!” என்று செல்லமாய்ச் சிணுங்கியவள், “என் அம்மா சமையலில் சுவை இல்லாமல் இருக்குமா....? நான் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டேனாக்கும்...." என்று, கலகலத்துச் சிரித்தபடி கதை பேசியவளைத் தன்னை மறந்து பாத்திருந்தான் ரவி.

"எவ்வளவு அழகாகப் பேசுகிறாள். இப்படி ஒரு குழந்தை கிடைக்க அவளின் அம்மா கொடுத்து வைத்திருக்கவேண்டும்..." சகுந்தலா காஞ்சனாவின் காதில் மெதுவாகச் சொன்னார்.

காஞ்சனாவின் தலையும் ஆம் என்பதாக ஆடியது.

"உன் பெயர் பாவைதானா?" பாவையின் செயலில் கவரப்பட்ட நந்தனும் ஆர்வத்துடன் அவளிடம் கேட்டான்.

"என் முழுப்பெயர் ஓவியப்பாவை நந்தன் மாமா..." பதில் சொல்லியவாறே நந்தனின் புறமாகத் திரும்பியவள், அவனின் அருகில் இருந்த ரவியைக் கண்டதும் கொஞ்சம் வியந்துபோனாள்.

அவள் ரவியைப் பார்ப்பதைக் கண்டு, "அவன் என் நண்பன் பாவை. அவனுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது. அதற்கும் உன் அம்மாதான் சமையல் செய்யவேண்டும். செய்வார்களா?" என்றான் கேள்வியாக நந்தன். அவனுக்கு ஏனோ அவளுடன் கதைப்பதில் ஓர் ஆர்வம் ஏற்பட்டிருந்தது.

"ஓ.. நிச்சயம் சமைப்பார்கள் நந்தன் மாமா. ஆனால் அந்தத் திகதிகளில் வேறு விசேசம் ஏதும் இருக்கிறதா தெரியவில்லை. அதனால் நீங்கள் அம்மாவிடமே பேசுங்களேன்..." என்றவளின் பொறுப்பான பதிலைப் பார்த்து, அங்கிருந்த அனைவருக்குமே அவளை பிடித்துப்போனது.

"அட! உனக்குத் தெரியாதா? நான் நினைத்தேன் நீ பெரிய பெண்ணாக இருப்பதால், உனக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று..." இதைச் சொன்ன ரவியின் குரலில், சீண்டல் பிரதானமாக இருந்தது.

அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தவள், "நான் பெரிய பெண்தான். எனக்கு பதினொரு வயது முடிந்து இப்போது பன்னிரண்டு நடக்கிறது. ஆனாலும் நான் படித்துக்கொண்டிருப்பதால் அம்மா தன் சமையல் விபரங்களை எனக்குச் சொல்வதில்லை. அதனால்தான் எனக்கு இதைப்பற்றித் தெரியாது..." என்றவளின் குரலில் ரோசம் நிரம்பி வழிந்தது.

எல்லோரினது முகமும் புன்னகையைப் பூசிக்கொண்டது அவளின் பேச்சை கேட்டு.

"பாவை, நீ உன் அம்மாவை வரச் சொல்கிறாயா? நாங்கள் இதைப்பற்றி அவளிடமே பேசுகிறோம்..." என்ற சாந்தியிடம், "சரி ஆன்ட்டி. ஆனால் அம்மாவால் இப்போது வர முடியுமா தெரியவில்லை. அங்கே வேலை இன்னும் முடியவில்லை என்று சொன்னார்கள். ஆனால் நான் சொல்லிவிடுகிறேன்.." என்றாள் பாவை.

"அப்படியானால் நாங்களே பிறகு அங்கே வருகிறோம். உன் அம்மா இவ்வளவு சுவையாக சமைத்ததற்கு நான் நன்றியும் சொல்லவேண்டும். நீ, உன் அம்மாவிடம் நாங்கள் வந்து பார்ப்பதாக மட்டும் சொல்லிவிடு..." என்று வேல்முருகன் தனது தாயைப் பாராட்டியதில் பூவாக மலர்ந்தவள், 'பார்த்தாயா என் அம்மாவை எல்லோரும் பாராட்டுகிறார்கள்' என்பதுபோல் ரவியின் புறம் பார்வையைச் செலுத்திவிட்டு, "நான் என் அம்மாவிடம் சொல்கிறேன் தாத்தா..." என்றுவிட்டு, சிட்டாக அந்த இடத்தைவிட்டுப் பறந்தாள்.

 
Top Bottom