• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு - 9

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-9


அலைபாய்ந்த மனதோடு சீரான உறக்கம் இன்றி அன்றைய இரவைக் கழித்தான் ரவி.

காலையிலும் தெளியாத மனதுடனேயே பள்ளிக்கு கிளம்பியவனிடம், "இன்றும் பள்ளி முடிந்ததும் வீடு வந்துவிடுவாயாடா?" என்று கேட்டார் சகுந்தலா.

"தெரியவில்லை அம்மா, ராஜ் நேற்று பள்ளிக்கூடம் வரவில்லை. இன்று வந்தான் என்றால் அவனுடன் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வருகிறேன்..."

ராஜுடன் பழகுவது தாய்க்குப் பிடிக்காது என்று தெரிந்தாலும், அவரிடம் எதையும் மறைக்கமாட்டான் ரவி. அதனால் உண்மையைச் சொன்னான்.

"என்னவோ செய்....! ஆனால் இந்த வெள்ளியாவது பள்ளி முடிந்ததும் நேரே வீட்டுக்கு வா! பெரியார் மலையில், அதுதான் உன் நண்பன் ராஜின் கிராமத்துக் கோவிலில் நமது பூசை இருக்கிறது. நான் போகமுடியாது. அதனால் நீதான் போகவேண்டும்!"

அந்த நாட்கள் சகுந்தலாவின் மாதவிடாய் நாட்கள் என்பதால் ரவியை போகசொல்லி சொன்னார் அவர்.

"சரிம்மா. அதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறதே. இப்போதே ஏன் சொல்கிறீர்கள்?"

"நீதான் எபோதும் ஓய்வில்லாமல் வேலை பார்ப்பவன் ஆயிற்றே....! முதலே சொன்னால் தானே உன்னால் உன் முக்கிய வேலைகளுக்கு மத்தியில் அம்மா சொல்லும் வேலைக்கு நேரம் ஒதுக்க முடியும்...! அதனால் தான் மூன்று நாட்களுக்கு முதலே சொல்லி இருக்கிறேன்." என்றவர் "முக்கிய" என்பதில் அழுத்தம் கொடுத்துக் கிண்டலாகச் சொன்னார்.

தான் ஊர் சுற்றுவதைத் தாய் கிண்டல் செய்வது புரிந்து, அவரைச் செல்லமாக முறைத்தவன், "பார்ப்போம், எனக்கு நேரம் கிடைத்தால் போகிறேன்..." என்றான் மிடுக்காக.

அவனின் அந்தத் துடுக்கில் சிரித்தவர், "கவனமாகப் போய்வாடா வாயாடி..." என்றார் செல்லமாக.

"சரிம்மா..." என்றவனின் முகமும் மலர்ந்தது. அந்த நொடி நேற்றைய கலக்கங்களை மறந்திருந்தான் ரவி.

அந்தச் சிரிப்புடனேயே அவன் அவர்கள் வீட்டுக் கேட்டை தாண்டவும், அவனோடு வந்து இணைந்துகொண்ட கண்ணனைக் கண்டதும் நேற்று நடந்தவைகள் மீண்டும் நினைவுக்கு வந்தது. ரவியின் முகம் சிறு வாட்டத்தையும் காட்டியது.

"என்னடா, ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று கண்ணன் கேட்கவும்,

"ஒன்றும் இல்லையே. எங்கேடா தேவன்?" என்று பேச்சை மாற்றினான் ரவி.

"என்னைப் போகச் சொன்னான். அவன் பிறகு வருகிறானாம். ஏன் என்று தெரியவில்லை...." என்று பேசியபடி ராஜின் கிராமத்துக்குச் சென்றார்கள்.

எப்போதும் ராஜுக்காக காத்திருக்கும் இடத்தில் சைக்கிளை நிறுத்தியதும் ரவியின் கண்கள் அவனை அறியாமலேயே கவியைத் தேடியது.

எதற்காக இந்தத் தேடல்? ஏன் இந்தத் தவிப்பு? தெரியவில்லை! ஆனாலும் மனதில் ஒருவித தாகம் அவனுக்கு! காரணம் புரியவில்லை. அது புரியாத வயதோ அவனுக்கு?

ராஜுக்காக காத்திருக்கிறேன் என்கிற பெயரில் சாலையையே பாத்திருந்தவனின் கண்கள் தேடியதோ கவியை! அதோ வருகிறாள் என்று மலர்ந்த முகத்தை, அருகில் இருந்த கண்ணனுக்கு காட்டிவிடாது மறைக்க முயன்றபடி அவளையே பாத்திருந்தான் ரவி.

"அங்கே பார், அந்தக் குண்டு கத்தரிக்காய் வருகிறாள்...." கண்ணனின் நக்கலில் உண்டான கோபத்தை அடக்க முடியாமல் தவித்தான் ரவி.

அவளைக் கேலி செய்யாதே என்று அவனிடம் எப்படிச் சொல்வது. இதுநாள் வரை அவன் செய்ததை இன்று கண்ணன் செய்கிறான். ஏன் அவளைக் கேலி செய்யக் கூடாது என்று கண்ணன் கேட்டால் என்ன காரணம் சொல்வான் ரவி. அவனுக்கே தெரியாத காரணத்தை என்னவென்று சொல்ல?

மனம் படபடக்க, உடல் பஞ்சாய்ப் பறக்க, அந்தப் பெரிய விழிகள் இன்னும் விரிய, தன்னை ஒரு முறை முறைத்து பார்க்கமாட்டாளா என்று ஏங்கியது அவனின் இளம் மனது! தன்னை மறந்து பாத்திருந்தவனின் மனமோ 'என்னைப் பாரடி, ஒரு தடவை… ஒரே ஒரு தடவை. என்னைப் பார் கவி. ஏமாற்றிவிடாதே.ஒரே ஒரு பார்வை...' என்று தவித்தவனின் தவிப்புக்குரல் அவளை சென்றடையவில்லை போலும்! எதிர்பார்ப்பு நிறைந்த விழிகளால் அவளையே பாத்திருந்தவனை நிமிர்ந்து பாராது, குனிந்த தலையோடு அவர்களைக் கடந்து சென்றாள் அவள்.


அவனைக் கடந்துசென்று அவன் பார்வையிலிருந்து மறைந்தே விட்டிருந்தாள் கவி!

மனம் சோர முகம் களையிழக்க திரும்பியவனைக் கண்ணனின் ஏளனம் நிறைந்த பார்வை எதிர்கொண்டது.

"பார்த்தாயா.. உன்னை அவள் பார்க்கவே இல்லை. இப்போதாவது புரிந்துகொள், பெண்கள் மத்தியில் உனக்கான மதிப்பு என்ன என்பதை." என்ற கண்ணனின் குரலில் கேலி இருந்தது.

அவனின் பேச்சில் விளைந்த கோபத்தை வெளியே காட்ட முடியாமல் அடக்கியதில் ரவியின் முகம் இறுகியது. அதுவும் கண்ணனின் முன்னிலையில் அவள் அவனை அலட்சியப்படுத்தியதாகத் தோன்றியது அவனுக்கு.

மனதில் பயத்துடன், தாயின் கண்ணீருக்குப் பயந்து, வாயையும் கண்ணையும் இறுக மூடியபடியே கவி அவனைக் கடந்து சென்றாள் என்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லையே!

ஒரு பார்வை பார்த்தால் குறைந்தா போவாள். இப்படி இவன் முன்னிலையில் என்னை அவமானப்படுத்திவிட்டாளே. அவன் சொன்னது போல அவள் பார்க்கும் அளவில் கூட நான் இல்லையா.. அந்த அளவுக்கு அழகற்றுப் போனேனா என்று தவித்தவனின் மனது காயப்பட்டுப் போனது.

"அவள் என்ன உலக அழகியா? என்னைப் பார்க்காமல் போகிறாளே என்று நான் தவிக்க....." முயன்று அலட்சியமாகச் சொன்னான் ரவி.

அதைக் கேட்டதும், பெரிய நகைச்சுவையைக் கேட்டவன்போல் பெரிதாகச் சிரித்தான் கண்ணன்.

"இவளே உன்னை நிமிர்ந்து பார்க்கவில்லை! இதில் உலக அழகி அளவுக்கு போய்விட்டாயே நீ..." என்றவனின், அந்த ஏளனச் சிரிப்பு ரவியின் மனதை இன்னும் இன்னும் ரணப்படுத்தியது.

"என்னை யாரும் பார்க்கவும் தேவை இல்லை! நானும் யாரையும் பார்க்கவில்லை!" ரவி இதைக் கண்ணனுக்குச் சொன்னானா அல்லது தனக்கே சொன்னானா? அவனே அறியான்!

"ராஜைக் காணவில்லை. வா போகலாம். இன்றும் அவன் வருவான் போல் தெரியவில்லை....." என்ற ரவி சைக்கிளை மிதிக்க, அதற்கு மேல் எதுவும் பேசாது நகர்ந்த கண்ணனுக்கு மனதில் சிரிப்பாக இருந்தது. சிறு கேலியைத் தாங்காது கோபிக்கிறானே என்று நினைத்தான்.

"இந்த தேவனையும் இன்று காணவில்லையேடா..” ரவி கோபமாக இருப்பது தெரிந்து,சமாதானத் தூதாக அந்தக் கேள்வியைக் கேட்டான் கண்ணன்.

"என்னவென்று தெரியவில்லை.." என்றவனின் சுருக்கமான பதிலே, அவன் கோபம் போகவில்லை என்பதைக் காட்டியது.

"வருவேன் என்று சொன்னான்டா. சிலவேளை பள்ளிக்கு நேரே வருகிறானோ தெரியவில்லை.." என்று, ரவி கொஞ்சம் கோபமாகவும் கண்ணன் சமாதானமாகவும் பேசியபடி பள்ளிக்குச் சென்றார்கள்.

ஒருபக்கம் கவியின் மௌனம் ஏன் என்று புரியாமல் குழப்பம் என்றால் மறுபக்கம் கண்ணன் தேவனின் கிண்டலால் தாழ்வு உணர்ச்சி என்று, ரவியின் மனது இனம்புரியா உணர்வுகளில் சிக்கித் தவித்தான். அது போதாது என்று புதிதாக உண்டான ஒருவித உணர்வொன்று ஓர் உறவுக்காய் ஏங்கியது. தான் என்ன எதிர்பார்க்கிறோம்? எதற்கு இந்தக் குழப்பம்? ஏன் இந்தத் தவிப்பு? அவனால் படிப்பில் கவனத்தைச் செலுத்தவே முடியவில்லை.

இனிக் கவியைப் பர்க்கச்செல்லக் கூடாது என்று முடிவு எடுத்தான். அடுத்த நாள் பெரியார்மலைக்குச் செல்லாமல் பள்ளிக்குச் சென்றவனுக்கு, பெரிதாக எதையோ இழந்துவிட்டது போல் மனது கிடந்து தவித்தது. இதற்கு அங்கே சென்று அவளையாவது பார்த்துவந்திருக்கலாம் என்று நினைத்தவனின் மனம் அவளின் தரிசனத்துக்காக ஏங்கியது.

அன்றும் ராஜ் வராததால் பள்ளி முடிந்தும் கவியைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. மனதில் சோர்வுடன் வீடு சென்றவனை அதிசயமாகப் பார்த்தார் சகுந்தலா.

ராஜ் வரவில்லை போலும் அதுதான் சோர்வுடன் வந்திருக்கிறான் என்று நினைத்தவருக்கு, அவனை நினைத்துச் சிறு பரிதாபம் கூடத் தோன்றியது. ஒற்றைப் பிள்ளையாகவே வளர்ந்தவனுக்கு சிறு வயது முதலே நண்பர்கள் தான் எல்லாமும்!

அவரும் அதைத் தடுப்பதில்லை. வீட்டில், தன் முகத்தை அவனும் அவன் முகத்தைத் தானும் பார்த்துக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, வெளியே சென்றால் சந்தோசமாக நண்பர்களுடன் பேசி, விளையாடி பொழுதைப் போக்குவானே என்று விட்டுவிட்டார்.

அப்படிப் பழகியதில் அவன் மனதுக்கு மிகவும் நெருங்கிய நண்பன் ராஜ் மட்டுமே! காதலுக்கு மட்டுமல்ல நட்புக்குமே கண்ணில்லை! அதனால்தான் வசதியான வீட்டு ரவிக்கு ஏழை வீட்டு ராஜ் நெருங்கிய நண்பனானான்.

ராஜின் வீட்டுக்கு ரவி செல்வது சகுந்தலாவுக்கு பிடிக்காது என்பதால், தாயின் சொல்லையும் மீறாது, நட்பையும் விட முடியாது ராஜின் கிராமத்துச் சாலைவரை அவனுடன் செல்வது இவனின் வழக்கம். இதுவரை ஒரு தடவை கூட ராஜின் வீட்டுக்கு ரவி சென்றதில்லை.

ஆனால் ராஜிற்கு அப்படி எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததால் தேவை என்று வந்தால் மட்டும் செல்வான்.

அதனால் ராஜின் வீட்டுக்குச் சென்று பார்க்கவும் முடியாமல், அவனுக்கு என்ன ஆனது என்றும் தெரியாமல் தலையை வலித்தது ரவிக்கு. இந்தக் கவி ஊமை போல் கதைக்காமல் செல்கிறாள். இந்த ராஜோ பள்ளிக்கும் வராமல் அதற்கான காரணத்தையும் சொல்லாமல் இருக்கிறான் என்று நினைத்தவனுக்கு சலிப்பாக இருந்தது.
 

Vishakini

Moderator
Staff member
அடுத்த நாளும் அவனுக்குச் சலிப்போடும் எரிச்சலோடும் கழிந்தது. வெள்ளி அன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு நேரே வந்தவனை, "இன்று கோவிலுக்குப் போகவேண்டும் ரவி, தலைக்குக் குளித்துவிட்டு வா....." என்றார் சகுந்தலா.

"ப்ச்! போங்கம்மா.. எனக்குக் கோவிலுக்குப் போக அலுப்பாக இருக்கிறது. நீங்களே போய்வாருங்கள்!" என்றான் சோர்வுடன்.

"உனக்கு என்னடா ஆகிவிட்டது? இரண்டு மூன்று நாட்களாக ஒரே சலிப்பாக இருக்கிறாய். ராஜ் எங்கே? அவன் இன்னும் பள்ளிக்கு வரவில்லையா?"

"இன்றும் பள்ளிக்கூடம் வரவில்லை அவன். ஏன் என்றும் தெரியவில்லை... அவனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னான். அதுதானா அல்லது வேறு எதுவுமா, எதுவும் தெரியவில்லை. நீங்கள் வேறு அவன் வீட்டுக்குப் போகக்கூடாது என்று சொல்லி இருக்கிறீர்கள். அதனால் போய்ப் பார்க்கவும் வழி இல்லை..." என்றவனின் குரலில், ராஜ் வீட்டுக்குப் போய்வரவா என்கிற கேள்வி ஒழிந்திருந்தது.

அதை உணர்ந்த சகுந்தலா, அதற்குப் பதில் சொல்லாது, "நேரமாகிறது, குளித்துவிட்டு வா ரவி..." என்றார் மீண்டும்.

"நான் கோவிலுக்குப் போகவில்லை என்றேனே! நீங்களே போய்வாருங்களேன்.... எப்போதும் நீங்கள் தானே போவீர்கள்..." என்றான் அப்போதும் சோர்வுடன்.

"என்னால் போகமுடியும் என்றால் நான் எதற்காக உன்னைக் கெஞ்சிக்கொண்டு இருக்கிறேன்? நான் போகமுடியாது! நீதான் போகவேண்டும்! போ ரவி நேரமாகிறது..." என்றார் அவர் வற்புறுத்தலாக.

"அம்மா… ஏன்.."

"உன்னால் கோவிலுக்கு இப்போது கிளம்ப முடியுமா முடியாதா?" கேட்டவரின் குரலில் கண்டிப்பு சேர்ந்திருக்கவே,

"போகிறேன்..." என்று முணுமுணுத்துவிட்டு தனது அறைக்குள் புகுந்துகொண்டான்.

தாய் எப்போதும் எதற்கும் அவனை வற்புறுத்துவது கிடையாது. அதனாலேயே அவரின் பேச்சை ஒரு அளவுக்கு மேல் அவனால் தட்ட முடியவில்லை.

"வேட்டியை கட்டிவா ரவி...!" விறாந்தையில்(ஹால்) இருந்து குரல் கொடுத்தார் சகுந்தலா.

"அதுவேறா....." என்றான் முனகலாக.

தலைக்குக் குளித்து, வேட்டி அணிந்து கம்பீரமாக வெளியே வந்தவனைப் பார்த்த சகுந்தலாவுக்குப் பெருமையாக இருந்தது.

"என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறது. ராஜா மாதிரி இருக்கிறாய் ரவி..!" என்றார் நெகிழ்வோடு.

"ப்ச் போங்கம்மா. பொய் சொல்லாமல்...." என்று தாய் சொன்னதை நம்பாமல் சலித்தவன், "சரிம்மா. பூசைப்பொருட்களைத் தாருங்கள்...." என்றான் அந்தப் பேச்சைத் தவிர்த்து.

தயாராக வைத்திருந்த பொருட்களைக் காட்டி, "அங்கே வைத்திருக்கிறேன் பார்! எடுத்துக்கொள்...!" என்றார் சகுந்தலா.

முதலே சொல்லி வைத்திருந்த ஆட்டோவும் வந்துவிட, மகனை அதிலே அனுப்பி வைத்தார்.

பூசைப் பொருட்களுடன் களையாகச் செல்லும் மகனையே பாத்திருந்தவரின் மனது நிறைந்திருந்தது.

சினத்துடன் கோவில் சென்றவனுக்கு அங்கே கருணையுடன் வீற்றிருந்த அம்மனை பார்த்தபோது, மனதில் அமைதி மெல்ல மெல்லக் குடிவந்தது.

கண்கள் மூடித் தன்னை மறந்து அம்மனைத் தரிசித்தவனின் உள்ளம், எதை வேண்டியது என்பதை உலகை ஆளும் அந்தத் தாய் மட்டுமே அறிவாள்!

"நீ சகுந்தலாவின் மகன்தானே..." அங்கே வந்த ஐயர் கேட்கவும்,

"ஆமாம் ஐயா. இன்று எங்கள் பூசை. அம்மாவால் வரமுடியாததால் நான் வந்தேன்." சிறு புன்னகையோடு பதில் சொல்லிக்கொண்டே பூசை பொருட்களை அவரிடம் கொடுத்தான்.

"அப்படியே உன் அப்பாவைப் போலவே இருக்கிறாய் தம்பி. நிறம் மட்டும் கொஞ்சம் குறைவு...." என்றவரின் பேச்சில் மெலிதாக மனம் வாடினாலும், புன்னகைத்தான் ரவி.

அவர் பூசையைத் தொடங்க, தான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றவன், அவர் பூசையை முடிக்கும் வரை கோவிலுக்கு வந்து செல்பவர்களை வேடிக்கை பாத்திருந்தான்.

ஒரு வழியாக பூசை முடியவும், "அம்மனை கும்பிட்டுவிட்டு இந்தப் பூசைத் தட்டை வாங்கு தம்பி..." என்று ஐயர் சொல்லவும், ஒரு நிமிடம் கண்மூடி வணங்கியவன் கண்ணைத் திறக்க, திருநீறு சந்தனத்தை அவன் நெற்றியில் பூசிவிட்டு அவன் கையில் பூசைத் தட்டை கொடுத்தார் ஐயர்.

"சரி ஐயா. நான் வருகிறேன்..." என்றவனிடம், "உடனேயே போகவேண்டாம் தம்பி. ஒரு நிமிடம் கோவில் பிரகாரத்தில் இருந்துவிட்டு போ..." என்றவர், தனது வேலைகளைப் பார்க்கச் சென்றார்.

பிரகாரத்தில் இருக்க அமர்ந்துகொள்ள கொஞ்சம் கூச்சமாக இருந்தது அவனுக்கு. ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் வரச்சொன்ன ஆட்டோகாரனும் இன்னும் வராத படியால், கோவிலின் பக்கத்தில் ஓடிய ஆற்றின் கரைக்கு சென்றான்.

அங்கே இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தவனுக்கு அந்த இடமே ரம்மியமாகக் தெரிந்தது. கோவில், பக்கத்திலேயே ஓடும் அழகிய ஆறு, அதன் அருகில் செழித்து வளர்ந்திருந்த மரங்கள் என்று பார்க்கப் பார்க்க அவனின் கண்களை நிறைத்தது அங்கிருந்த குளிர்ச்சி.

அவனருகில் வந்த ஐயர், "தம்பி, சற்று இங்கேயே இருக்கிறாயா? அவசரமாக வீடு வரை போய்வருகிறேன். இன்னும் இருட்டாதபடியால் யாராவது வருவார்கள். அதனால் கோவிலை நான் பூட்டவில்லை. விரைவாக வந்துவிடுவேன். இருக்கிறாயா..?" என்று நயமாகக் கேட்டவரிடம், "சரி ஐயா. நான் இருக்கிறேன். நீங்கள் போய்வாருங்கள்...." என்று அனுப்பி வைத்தான்.

"நன்றி தம்பி! போவதும் வருவதுமாக விரைவாக வந்துவிடுகிறேன்..." என்றவர் வீட்டுக்கு விரைந்தார்.

அது ஒரு மிகச் சிறிய அம்மன் ஆலயம். அவன் தந்தை இருந்தபோதே அவர்கள் இங்கு வருவதால், அவர் மறைந்தபின்னும் இங்கு வருவதை சகுந்தலா நிறுத்துவது இல்லை.

எங்கே இந்த ஆட்டோக்கார அண்ணாவை இன்னும் காணவில்லையே என்று யோசித்தபடி கோவில் வாசலுக்கு வந்தவனின் விழிகள் வியப்பால் விரிந்தது.

அவன் நினைத்தே பார்க்கவில்லை. கவியை அங்கே பார்ப்பான் என்று. அதுவும் பாவாடை தாவணியில், தலைமுடியில் கொஞ்சத்தை மட்டும் எடுத்து கிளிப் குத்தி, மிகுதியை விரித்துவிட்டபடி, பொட்டு மட்டுமே குடிகொண்ட முகத்துடன் அமைதியாக வந்தவளின் முகத்தில் இருந்து பார்வையை அவனால் விலக்கவே முடியவில்லை.

தாகம் கொண்டு தவித்த மனதுக்குத் தண்ணீராக இருந்தது அவள் வரவு. கண்வெட்டாது அவளையே பாத்திருந்தன். தன்னை யாரோ உற்றுப் பார்ப்பதுபோல் தோன்ற, நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளும் ஆச்சர்யத்தில் விரிந்தது. ஒவ்வொரு வெள்ளியும் அவள் அம்மனைக் கும்பிட வருவாள். இதற்கு முதல் ஒரு தடவை கூட அவனை அவள் பார்த்ததே இல்லை.

இன்றானால் கோவிலில் அதுவும் வேட்டியில் முழுமையான ஆண்மகனாக அவள் கண்களுக்குத் தெரிந்தான் ரவி. அவனையே பார்த்தபடி கோவிலுக்குள் நுழைந்தவளை, "ஹாய் கவி..." என்று எழும்பாத குரலில் சந்தோசத்தோடு அழைத்தான் ரவி.

அவளுக்கு மீண்டும் ஆச்சரியம். ‘இவனுக்கு என்னாவாகிற்று.... சாதரணமாகப் பேசுகிறானே, அதுவும் என்னிடம். திருந்திவிட்டானோ.. இருக்காதே..! இவனெல்லாம் திருந்தும் ஆளில்லையே..’ என்று நினைத்தவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கோவிலுக்குள் செல்லவும், ரவியின் முகம் கருத்தது.

பெரிய ரதிதேவி! ஒரு ஹாய் சொன்னால் பதிலுக்கு ஹாய் சொல்ல மாட்டாளாமா என்று நினைத்தவனுக்கு சுறுசுறு என்று கோபம் ஏறியது.

கண்ணன் சொன்னது போல் இவளுக்கு என்னைக் கணக்கில்லையா..... என்று யோசித்தபடி அவளையே விழிகளால் தொடர்ந்தான்.

அவன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தும் அதைக் கவனியாதது போல் அம்மனைக் கும்பிட்டவள் விரைவாக வீட்டுக்குச் செல்ல நினைத்தாள்.

மரகதம் கோவிலுக்கே வரமாட்டார். மனதில் இருந்த விரக்தி, அவரை கடவுளிடம் கோபம் கொள்ள வைத்திருந்தது.

கவி எப்போது கோவிலுக்கு வந்தாலும், அம்மனைக் கும்பிட்டுவிட்டு ஆற்றங்கரையில் தன்னை மறந்து அமர்ந்திருப்பது அவளின் வழமை. ஊரை விட்டு ஒதுங்கி இருப்பதாலும், மக்கள் நடமாட்டம் பெரிதாக இல்லாமல் இருப்பதாலும் அந்தக் கோவிலின் அமைதி அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஏதோ ஒருவிதப் பற்று அந்த அம்மனிடம் அவளுக்கு உண்டு.

இவன் இருப்பதால் இன்று ஒன்றும் செய்யமுடியாது வீட்டுக்குச் சென்று விடுவதே நல்லது என்று நினைத்து, கோவிலை விட்டு வெளியே செல்லத் திரும்பியவள், தன் பின்னே அதுவும் தன்னை முறைத்துக்கொண்டு நின்ற ரவியைப் பார்த்துத் திடுக்கிட்டு,சில அடிகள் பின்னால் நகர்ந்தாள்.

"என்னடி, பெரிய இவளா நீ...?" கோபமாகக் கேட்டவனின் கேள்வி அவளுக்குப் புரியவில்லை.

கண்களில் கேள்வியைத் தாங்கி அவனைப் பார்த்தாள்.

"என்ன பார்க்கிறாய்? என்னோடு பேச மாட்டாயோ... பேசினால் உன் வீட்டுச் சொத்தா குறைந்துவிடும்...?பெரிய அழகி என்கிற நினைப்பு...!" மனதில் இருந்த கோபத்தை அவளிடம் கொட்டினான் அவன்.

அவளுக்கோ, அவளின் ஏழ்மையை அவன் குத்திகாட்டுவதாகத் தோன்றவே, "வாயை மூடு வர்மா.....! உன் பணத்திமிரை என்னிடம் காட்டாதே..." என்றாள், கவியும் கோபமாக.

"என்னது? நான் பணத்திமிரைக் காட்டுகிறேனா....லூசாடி நீ.." அவள் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவன் அதட்ட,

"நீதாண்டா லூசு! முதலில் வழியை விடு. உன்னுடன் கதைக்க எனக்கு விருப்பம் இல்லை..." என்றாள் அவள்.

‘உன்னுடன் கதைக்க எனக்கு விருப்பம் இல்லை’ என்று அவள் கூறியது அவனைப் பெரிதும் காயப்படுத்தியது.

அவனுள்ளே இருந்த தாழ்வு மனப்பான்மை அவனைத் தாக்க, "என்னோடு கதைக்காமல் வேறு யாருடன் கதைப்பாய்? வெள்ளைத் தோலுடன் இருக்கும் எவனிடமா?” என்று, கிட்டத்தட்ட உறுமினான் ரவி.
 

Vishakini

Moderator
Staff member
அவளுக்கு அவன் பேச்சின் பொருள் ஒன்றுமே புரியவில்லை. அதைப் புரிந்துகொள்ளவும் விரும்பாமல், "விசராடா உனக்கு? தள்ளு நான் போகவேண்டும்.." என்றவள், அவனை சுற்றி நடக்க முயன்றாள்.

எட்டி அவளின் கையைப் பிடித்த ரவி, "என்னுடன் கதைத்துவிட்டுப் போ....." என்றான் ஆத்திரத்துடன்.

"வர்மா! முதலில் மரியாதையாகக் கையை விடு!" அவன் கையைப் பிடித்ததில் அதிர்ந்து, கோபத்துடன் சொன்னாள்.

"கையை விடமுடியாது! என்னடி செய்வாய்?." என்றவன், தன் பிடியை இன்னுமே இறுக்க, கோபத்தில் நிலை இழந்தவள் மறு கையால் அவனை அடிக்க ஓங்கினாள்.

அந்தக் கையையும் வேகமாகப் பற்றினான் ரவி. அவள் அடிக்கக் கையை ஓங்கியதில் தன்னிலை மறந்து, "என்னடி திமிரா? ஒரு ஆண்பிள்ளையை அடிப்பாயா நீ? அதுவரை நான் என்ன பூவா பறிப்பேன்...." என்று கோபத்தில் கத்தினான்.

"கிழிப்பாய்! முதலில் விடுடா கையை கரிவாயா....." மனதில் பயம் எட்டிப் பார்த்தாலும் அசட்டுத் தைரியத்தில் அவனை எதிர்த்துப் பேசினாள் கவி.

அவளின் 'கிழிப்பாய், கரிவாயா...' என்கிற சொற்கள் அவனைச் சீண்டியது. இவளை அடக்கியே ஆகவேண்டும் என்கிற வெறியே உண்டானது.

"நான் எதைக் கிழிக்கிறேன் என்று உனக்குக் காட்டுகிறேன்....." என்று பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் கண்களில், அம்மனின் காலடியில் கிடந்த மஞ்சள் கயிறு பட்டது.

கண்கள் வெற்றியில் மின்ன, "வாடி..." என்று அவளை இழுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றான் ரவி.

"விடுடா என்னை! விடு எருமை. நான் வீட்டுக்குப் போகவேண்டும்..." என்று அவனுடன் போராடியவளை சட்டை செய்யாது இழுத்துச் சென்றவன், அவளை ஒருகையால் பிடித்துக்கொண்டே, குனிந்து மறுகையால் தாலியை எடுத்தான்.

"என்னடா செய்கிறாய். விடு என்னை..." என்று கத்தியவளுக்கு, அவன் செய்ய நினைக்கும் காரியம் முழுதாகப் புரிய மறுத்தது.

"பொறடி. எதற்கு அவசரப்படுகிறாய்....!" என்று நிதானமாகச் சொன்னவன், அவளை ஒற்றைக் கையால் வளைத்துப் பிடித்து, மறுகையால் அந்த மஞ்சள் கயிறை அவளின் கழுத்தை சுற்றிக் கொண்டுவந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று முடிச்சைப் போட்டும் விட்டான்.

கனவிலும் எதிர்பாரா ஒன்று நிஜத்தில் நடக்கையில் அதை சட்டென்று புரிந்துகொள்ளும் இயல்பை மனித மனம் இழந்துவிடுகிறது. அனுபவம் மிக்க பெரியவர்களுக்கே அது முடியாத போது பதினைந்து வயதே நிரம்பிய சிறு பெண்ணால் முடியுமா என்ன?

நடந்தது என்ன என்பதே அவளுக்குப் புரிய மறுத்தது. தன் நெஞ்சில் தொங்கும் கயிறை எடுத்துப் பார்த்தவள் கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"இப்போது நீ போகலாம்..." என்றவனின் குரலில் வெற்றிக்களிப்பு நிறைந்திருந்தது.

எதையோ வென்றுவிட்ட உணர்வு. இனி எவனாவது என்னைக் கறுப்பன் என்று சொல்வானா? எனக்கு மனைவி என்று ஒருத்தி வரமாட்டாள் என்று சொல்வானா? என்று நினைத்தவனின் மனதில் பொங்கிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதுவரை அவள் காட்டிய பாராமுகத்துக்குப் பதிலடி கொடுத்திவிட்ட திருப்தியுடன், அவளை நன்றாக நிமிர்ந்து பார்த்தான். "இனி நீ என் மனைவி! இனிமேல் என்னைத் தவிர வேறு எவனையும் நீ நிமிர்ந்து கூடப் பார்க்கக்கூடாது! புரிந்ததா?" என்று அதட்டியவனை, அப்போதும் விழி விரிய அதிர்ந்த பார்வை பார்த்தாள் கவிநயா.

அவனையும் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிறையும் மாறி மாறி பார்த்தவள், "என்னடா இது...?" என்று மெல்லிய குரலில், மஞ்சள் கயிறைக் காட்டி அவனிடமே கேட்டாள்.

"லூசு, தாலிடி அது! நீ என் மனைவி என்று சொல்லும் தாலி அது!" என்றவனின் குரலில், எதையோ பெரிதாகச் சாதித்துவிட்ட மிதப்பு ஒட்டி இருந்தது.

"என்னது? நான் உன் மனைவியா...? எப்படி?" என்றவளுக்கு மூளை வேலை செய்ய மறுத்தது.

அவள் கழுத்தில் இருந்த தாலியைத் தூக்கிக் காட்டியவன், "இதை நான் கட்டியபடியால் நான் உன் கணவன். நீ என் மனைவி!" என்றான் கர்வத்துடன்.

அவன் தாலியைத் தொடுகையில் அவளைத் தீண்டிய அவன் விரல்களால் சிலிர்த்த தேகத்தில் நடுக்கம் ஓட, "என்னடா சொல்கிறாய்? உளறாதே! நான் உன் மனைவியாவது மண்ணாங்கட்டியாவது! முதலில் இதைக் கட்டியது போல் மரியாதையாகக் கழட்டி விடு!" என்றவளின் குரலில், இனம்புரியா நடுக்கமும் அதட்டலும் இருந்தது.

"முடியாது!" வீம்புடன் பதில் சொன்னான் ரவி.

அவன் செய்கைகளின் பொருள் புரிய ஆரம்பித்ததும் அவனை முறைத்த விழிகளில் கண்ணீர் நிரம்பியது.

"என்ன காரியம் செய்திருக்கிறாய்? இது அம்மாவுக்குத் தெரிந்தால் என்னை அடித்தே கொன்று விடுவார்கள். தயவு செய்து இதைக் கழட்டு வர்மா.எனக்குப் பயமாக இருக்கிறது..." என்று அழுதாள் கவி.

தாலியின் அர்த்தம் கூடப் புரியாத வயதில் அதைச் சுமந்தவளுக்கு அதை அறிந்தால் தாய் தன்னை அடிப்பார் என்பது மட்டுமே உறைத்தது.

"கழட்டுவதற்கா இதைக் கட்டினேன். இப்படியே வீட்டுக்குப் போ...." என்றவனுக்குக் கூட, தான் செய்த செயலின் ஆழம் முழுதாகப் புரியவில்லையோ....

"இப்படியேவா..? நான் போகமாட்டேன். முதலில் இதைக் கழட்ட வேண்டும்..." என்றபடி அவள் தாலியைக் கையில் எடுக்கவும், அதைத் தட்டி விட்டவன், "அதைக் கழட்டினாயானால் உன்னை அடித்தே கொன்றுவிடுவேன்!" என்று ஒற்றை விரல் நீட்டி உறுமினான்.

பயத்தில் நடுங்கியவள், "என்ன சொல்கிறாய் வர்மா? இப்படியே நான் எப்படிப் போகமுடியும். என்னால் முடியாது! அம்மா அடிப்பார்கள் வர்மா.....! அன்று உன் மண்டையை உடைத்ததுக்கே விறகுக் கட்டையால் என்னை அடித்து விட்டார்கள். இதற்கு என்ன செய்வார்களோ. எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைக் கொன்றே விடுவார்கள்.." என்று கதறியவளின் நிலை, அவனுக்கு அப்போதுதான் சிறிதாகப் புரிய ஆரம்பித்தது.

சாதித்துவிட்டேன் என்கிற மிதப்பில் இருந்து வெளியே வந்தவனுக்கு தனது தாயின் நினைவும் அப்போதுதான் வந்தது.

தான் என்ன செய்திருக்கிறோம், அதன் விளைவு என்ன? இனி என்ன செய்வது? கவியின் கேள்விக்கு என்ன பதில் என்று சிந்தித்தவனுக்கு, தன் வாழ்க்கையை மட்டுமல்லாது அவளின் வாழ்க்கையையும் திசை திருப்பி விட்டது அப்போதுதான் புரிந்தது!

 
Top Bottom