• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 13

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 13

அத்தியாயம் 13.1
வீட்டுக்கு வந்தவள் தனது பெரிய தாயாரிடம் ‘குளிக்கப் போறன்’ என்று விட்டு நேராக தனது அறையினுள் நுழைந்து, துக்கம் சிறிது மட்டுப்படும் வரையும் அழுது தீர்ததாள். அழுதவளின் மனம் முழுதும் ‘ஏன் அவன் என்னை மறுக்கிறான்?’ என்ற கேள்வி தான்...

அவனது நடவடிக்கைகளிலிருந்து, எனது அவன் மீதான விருப்பத்தை அறிந்தால் அவனும் என்னை நேசிப்பான் என நான் எண்ணியது தப்போ....! என நினைத்தவளுக்கு நெஞ்சில் கடுமையாக வலித்தது.

சிறிது நேரத்தின் பின்னர், என்ன தான் அவன் தன்னை மறுத்தாலும் தான் அவனை விட்டு விலக முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவள் எழுந்து குளிக்கச் சென்றாள்.

வீட்டுக்கு வந்த அகிலன் சற்று சோர்வாக காணப்பட்டான். அவனது சோர்வை அவதானித்த பத்மா “என்ன தம்பி களைப்பா இருக்கா…?” எனக் கேட்டார் அக்கறையுடன்.

புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடுகளில் அலைந்து திரிந்ததிலேயே சற்று களைத்திருந்தாலும், சௌமிகாவிடம் கதைத்திலிருந்து அவனின் மனதில் உற்சாகம் குறைந்து விட்டது. எனவே “ம்...” என்றான்.

“இவ்வளவு நாளும் உனக்கு ஒரே அலைச்சல்…, இண்டைக்காவது ஆறுதலாய் வீட்டில இருப்பாய் எண்டு பார்த்தன்…, காலையில போனனீ இப்பத்தான் வாறாய்...” என்றார் குறையாக.

“ஹாலுக்கு அட்வான்ஸ் மட்டும் தான் கொடுத்தனான்… அது தான் அங்க போய் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வந்தனான்” என்றான் அவன்.

அவருக்கு தனது மகன் எந்த நேரமும் ஏதோ வேலையுடன் இருப்பதை பார்த்தவர் சலிப்புடன் “தம்பி… எந்த நேரமும் வேலை வேலை எண்டு ஓடாமல் ஒரு நாளைக்காவது கொஞ்சம் ஆறுதலாக இரு” என்றார்.

அவனும், அவரைப் பார்த்து “சரியம்மா...” என்றான்.

“வயசு முப்பத்திரண்டாகப் போகுது…, உன்ர ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் குடும்பம், குழந்தை இருக்கு… நீ தான் தனியாளாய் இருக்கிறாய்.. நான் ஆரோக்கியமாய் இருக்கேக்க உன்ர கலியாணத்தை முடிச்சிட வேண்டும் தம்பி... ” என்றார் அவர்.

ஒரு திருமணத்தை செய்தால் அம்மாவும் சந்தோஷப்படுவார், அத்துடன் சௌமியும் என்னைப் பற்றி நினைக்காமல் தனது வேலையை பார்ப்பாள் என்ற நினைப்புடன் “ம்...” என்றான் அவன்.

இவ்வளவு நாளும் ஏதோ ஓர் காரணத்தை சொல்லி தட்டிக் கழிக்கிறவன் இன்னைக்கு ‘ஓம்’ என்கிறானே… அவன் மனம் மாறுவதற்குள் இதைப் பற்றி கதைப்பம் என நினைத்தவர் “பெண் எப்பிடி இருக்கோணும் எண்டு ஏதாவது எதிர்பார்ப்பு உனக்கு இருந்தா சொல்லு தம்பி... ” என்றார்.

அவர் அவ்வாறு கூறியதும் அவனது மனக் கண்ணில் சௌமி ஓர் கணம் வர, தலையை சிலுப்பியவன் “எனக்கு அப்பிடி ஏதும் இல்லை...., உங்களுக்குப் பிடிச்சால் சரியம்மா...”என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் பத்மாவிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ‘இவனுக்கு ஏற்ற மாதிரி மிகவும் நல்ல படித்த ஒரு பெண்ணைக் கண்டு பிடிக்க வேண்டும்’ என நினைத்தவர் “அப்ப சரி தம்பி… நான் உனக்கு ஏற்றமாதிரி ஒரு நல்ல பிள்ளையாக பார்க்கிறன்...., இப்ப நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன் சாப்பிட வா” என்றவர் சமையலறைக்குள் சென்றார்.

சாப்பிட்டு விட்டு தனது அறைக்குள் சென்றவனுக்கு சௌமியும் அவள் கதைத்ததும் தான் மனதில் நின்றது.

நான் திருமணத்திற்கு சம்மதித்த விஷயம் எப்பிடியும் நாளைக்கு அவளுக்கு தெரிய வரும், அதற்கு என்ன சொல்லப் போறாளோ! என யோசித்தவனுக்கு இதழ்களில் புன்னகை அரும்பியது.

அவளைச் சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என எண்ணியவாறு தனது வேலைகளை கவனித்தான்.

சகல விடயங்களையும் சகுந்தலாவிடம் கலந்தாலோசிக்கும் பத்மா, அகிலனுக்குப் பெண் பா்க்கும் விடயத்தையும் கூறத் தவறவில்லை.

அன்று சௌமிகா பல்கலைக்கு சென்று திரும்பி வந்ததும் சகுந்தலா “பத்மா ஆண்டி அகிலனுக்கு பொண்ணு பார்க்கிற விசயமாக புறோக்கர் வீட்டை போகப்போறா, நானும் அவாவோட அங்க போட்டு வாறன்…, ” என அவளிடம் கூறி விட்டுச் செல்ல, சற்றுத் தணிந்திருந்த சௌமியின் சினம் அதிகரித்தது.

சினத்துடன் பால்கனி வழியாக வெளியே எட்டிப் பார்த்த சௌமிக்கு அவர்கள் இருவரும் வெளியே செல்வது தெரிந்தது.

கதவை இழுத்துப் பூட்டிய அவள் விறுவிறுவென அகிலனின் வீட்டுக்குச் சென்றாள்.

அவள் அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருக்க, அப்போது தான் பல்கலையில் இருந்து வந்திருந்த அகிலன், கதவைத் திறந்தான்.

அவளைப் பார்த்ததும் அவனது உதட்டில் ஓர் சிறு புன்னகை அரும்பியது.

உடை கூட மாற்றாமல் நிற்பவனைப் பார்த்துக் கொண்டே உள் நுழைந்த அவள் “என்ன மாப்பிள்ளை கலியாணத்துக்கு ரெடியா இருக்கிறார் போல...” என்றாள் நக்கலாக.

“ம்…, ஒரே மகனுக்கு கலியாணம் செய்து, பேரப்பிள்ளையளோட விளையாட வேணும்னு அம்மா ஆசைப்படுறா… அது தான்...” என்றான் அவனைப் பார்த்தவாறே.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “இவ்வளவு நாளும் இல்லாமல் இப்ப திடீரெண்டு என்ன நடந்தது…? அவ்வளவு அவசரஅவசரமாக அம்மான்ர ஆசையை நிறைவேத்தப் போறீங்களோ...”என்றவளின் குரலில் குத்தல் வெளிப்படையாகத் தெரிந்தது.

அவளின் நக்கலைப் புரிந்தவன் “அம்மா தன்ர கடமையை முடிக்கோகணும்னு, என்ர இருபத்தைஞ்சாவது வயசிலிருந்து கலியாணத்துக்கு கேட்டுக் கொண்டுதான் இருந்தவா…, நான் கலியாணத்துக்கு ரெடியா இல்லாததால் சம்மதிக்கேல்ல… எனக்கு இப்ப கலியணத்துக்கு இது தான் சரியான நேரம் எண்டு தோணுது… அதாலதான்.. ” என இழுத்தான் அவன்.

“ஓ… அப்பிடியா…? மாப்பிள்ளைக்கு இப்ப சரியான நேரம் வந்திட்டுதோ… அல்லது என்னிடமிருந்து தப்பிக்கிறதுக்கானா பிளானா…?” என சீற்றத்துடன் கேட்டாள் அவள்.

அவள் கதைக்கும் பாணியில் அகிலனின் இதழ்களில் புன்னகை தவழ “உம்மிடமிருந்து தப்பிக்கிறதுக்கு என்ன இருக்கு…?” புருவத்தை உயர்த்தி வினாவினான் அவன்.

அவனது புன்னகையைப் பார்த்தவள் கடுப்புடன் “அதை நீங்கள் தான் சொல்லணும்” என்றாள்.
அத்தியாயம் 13.2
சிறு பிள்ளை என நான் நினைத்திருக்க அவள் என்னவெல்லாம் கதைக்கிறாள் என நினைத்த அவன், அவளையே பார்த்தவாறு நின்றான்.

“என்னிடம் வராத அந்த மென்மையான உணர்வு… ஆண்டி தெரிவு செய்யிற கேர்ளில வருமா…?” தலையைச் சரித்துக் கேட்டாள் அவள்.

“அது உடன வராது தான்… ஆனால் கலியாணம் செய்த கொஞ்ச நாளில, பழகப் பழக வந்திடும் என நினைக்கிறன்… ” என்றான்.

“அப்பிடி எண்டால் அது ஏன் என்னில வராது...., என்னிலையும் வரத்தானே வேணும்...” யோசிப்பது போல கேட்டாள்.

“சௌமி…, கலியாணம் எண்டுறது ஒரு விளையாட்டான விசயம் இல்லை...சீரியஸான விசயம்...இது இரண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டது…, எல்லாரும் விரும்பி ஒரு கல்யாணத்தை நடத்த வேண்டும், ஒருத்தருக்கும் மனக்கசப்பு இருக்க கூடாது, சரியா…?, எல்லாரும் என்னை நம்பித்தான் உம்மை என்னோட பழகவிட்டவை… அவையிட அந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்ய விரும்பேல்ல…நான் அப்பிடியான ஆளும் இல்ல…, அதோட உமக்கும் எனக்கும் வயசுப் பொருத்தமும் இல்லை… இந்தளவு வயசு வித்தியாசத்தில கலியாணம் செய்ய உங்கட வீட்டில சம்மதிக்க மாட்டினம்…எனக்கும் ஒரு சின்னப் பிள்ளையை கலியாணம் செய்யுறதில கொஞ்சமும் விருப்பம் இல்லை. என்னை விட இரண்டு அல்லது மூண்டு வயசு குறைவாக உள்ள ஒரு பிள்ளையைத் தான் நான் விரும்புவன். அது தான் குடும்பம் நடத்துவதுக்கு ஈஸியா இருக்கும்…,குழந்தை பிள்ளையை கட்டி நான் என்ன செய்யுறது…?, என்ர அப்பாவுக்கும் அம்மாவை விட பத்து வயசு கூட… இப்ப அம்மா தனியா இருக்கிறா…, தனிய இருந்து அம்மா பட்ட கஸ்ரத்தை நான் பக்கத்தில இருந்து பார்த்தனான்… அதால கலியாணம் செய்யுற ஆணுக்கும் பெண்ணுக்கும் வயசு வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது எண்டு நான் எப்பவும் நினைப்பன். அப்பிடி நினைச்ச நானே அதை மீற விரும்பேல்ல… பொறுமையா யோசிச்சா உமக்கும் இதெல்லாம் விளங்கும் ” என்றான் அகிலன் சிறு பிள்ளைக்கு கூறுவது போல்.

“நான் குழந்தை இல்லை” என கோபத்துடன் கூறியவள் தொடர்ந்து “என்னில ஏதாவது குறையை கண்டு பிடிக்கணும்னு நினைச்சு, தேடிப்பிடித்து வயசைக் கண்டு பிடிச்சு காரணம் காட்டுறீங்க...” என்றாள் அலுப்புடன்.

“அப்பிடி இல்லை…” என்றான் உடனே.

“எனக்கு முப்பது வயசு எண்டு நீங்கள் நினையுங்க...” என்றாள் அவள் ஆத்திரத்துடன்.

தோளைக் குலுக்கியவாறு “நான் மட்டும் நினைச்சால் காணாது...” என்றான் அவனும்.

“வயசு ஒரு பிரச்சினையே இல்லை...பத்து வயசு வித்தியாசத்தில கலியாணம் செய்த பலரை நான் பார்த்திருக்கிறன்… அவை ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்லாத் தான் இருக்கினம்… ஆண்டிக்கு மட்டும் தான் இப்பிடி நடந்துச்சு… அங்கிளுக்கு ஏதோ சுகம் இல்லாமல் போய்விட்டது. மற்றது இதை ஏன் நம்பிக்கை துரோகம் எண்டு பாக்கிறீங்க… அப்பிடி எல்லாம் சொல்லேலாது... ” என்றாள் அவள் பதிலாக.

அவளுக்கு தான் சொல்வது புரியவில்லை என்பதில் ஆயாசமடைந்த அவன்.

“நீர் முதலில உம்மட அம்மா அப்பாட்ட இதை பற்றி சொல்லிப் பாரும்… கண்டிப்பா அவை விரும்ப மாட்டினம்” என்றான்.

“உங்கட சப்போர்ட் இருந்தால், நான் தைரியமா சொல்வன்... ” என்றாள்.

“அப்ப.. அவை விரும்ப மாட்டினம் எண்டு உமக்கே விளங்குது தானே...” எனக் கேட்டான்.

“நான் அப்பிடிச் சொல்லேல...” என்றாள் அவசரமாக.

“ம்…?” என்றவனிடம் கேள்வி இருந்தது.

“என்ர பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் நீங்கள் என்றால் ரொம்ப ரொம்ப இஷ்டம்… அவை உங்களை தங்கட மகனாகத் தான் நினைக்கினம்… நான் இதை சொன்னால் அவை நல்லா சந்தோசப்படுவினம்… அம்மா அப்பாவும் அவை சொன்னால் கட்டாயம் சம்மதிப்பினம்...” என்றாள் அவள் நம்பிக்கையுடன்.

“ம்… நீர் சொன்னது போல அங்கிளும் ஆண்டியும் என்னை தங்கட மகனாகத் தான் நினைக்கினம்…, அது எனக்குத் தெரியும் அதால தான் நான் அவைக்கு சங்கடம் தரக்கூடிய எதையும் செய்ய மாட்டேன்” என்றான் அவன்.

“ஏன் அவைக்கு சங்கடம் தரும் எண்டு நினைக்கிறீங்க…”

“அவையும் சேர்ந்து தானே எனக்கு பெண் பார்க்கினம்…, இப்பிடி ஏதாவது ஐடியா இருந்தால் அதை சொல்லி இருப்பினம் தானே...”

“நீங்கள் எனக்கு பக்கபலமாக இருந்தால் நான் எல்லாரோடையும் சந்தோசமாகவும் தைரியமாகவும் கதைச்சு அவையளை சம்மதிக்க வைப்பன்” என்றாள் ஓர் வித எதிர்பார்ப்புடன்.

“அது என்னால முடியாது எண்டு நான் ஏற்கனவே உமக்கு சொல்லிட்டேன் தானே....?” என்றவன் தொடர்ந்து “ எனக்கு ஒரு விசயம் தேவை எண்டால் நானே அதைப் பற்றி மற்றவர்களிடம் கதைப்பன்… எனக்கு ஒருத்தரின்ர துணையும் தேவையில்லை...” என்றான் அவன் சிறு சினத்துடன்.

“ஓ… அப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்கேல்ல… அப்பிடித் தானே... ” என்றவள் ஓர் கண அமைதியின் பின்னர் ,“உண்மையை சொல்லாமல் ஏன் அது இது எண்டு சும்மா சாக்குப் போக்கு சொல்லுறீங்க...” என்றாள் கோபமாக.

“இதையே திரும்ப திரும்ப கதைச்சு எனக்கு டயர்டா இருக்கு...” என்றான் சோர்வுடன்.

சினம் அதிகரிக்க “நான் முக்கியமான விசயத்தைப் பற்றி கதைக்கிறன் உங்களுக்கு டயர்டா இருக்கா…?” என கேட்டாள்.

“சௌமி… எனக்குப் பசிக்குது… நான் சாப்பிட வேணும் ” என்றான் அவன் பசியுடன்.

“இப்ப என்ன நான் போகணும் அப்படித் தானே…” என கேட்டாள் ஆத்திரத்துடன்.

என்ன சொல்வது என்று தெரியாமல் அவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னை வீட்டை விட்டு கலைக்கிறீங்க… அந்தளவுக்கு நான் வேண்டாதவள் ஆகிட்டேன்... என்ன...” கேட்டாள் சீற்றத்துடன்.

அவன் கண்களை மூடித் திறந்தவாறு “நான் அப்படிச் சொல்லேல்ல சௌமி…, பசிக்குது எண்டு தான் சொன்னேன்…, நீர் இங்கேயே இரும், நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடப் போறன் ” என்றான் அவசரமாக.

“எனக்கு மரியாதை இல்லாத இடத்தில ஒரு நிமிசம் கூட நான் நிற்க மாட்டேன்… நான் இப்பவே போறன்…ஆனால் ஒன்றை ஞாபகம் வச்சுக்கோங்க நான் தான் இந்த வீட்டில வாழப்போறது...” என சீற்றத்துடன் கூறியவள் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினாள்.

அவன் புருவம் இடுங்க “சௌமி...” என்றவன், அவள் செல்வதைப் பார்த்து பெரு மூச்சு விட்டவாறு தனது அறைக்குள் சென்றான்.
 
Last edited:

Gowri Karthikeyan

Well-known member
அவன் சொல்றது எல்லாமே valid point தான்.....அவனை பத்தி என்ன நினைப்பாங்கானு இவளுக்கு யோசனை இல்ல....

இவளுக்கு வேணும்னா வேணுமா
 

STN - 78

Member
Staff member
அவன் சொல்றது எல்லாமே valid point தான்.....அவனை பத்தி என்ன நினைப்பாங்கானு இவளுக்கு யோசனை இல்ல....

இவளுக்கு வேணும்னா வேணுமா
Thank you sister
 
Top Bottom