என் மன்னவன் நீதானோ - 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,569
6,512
113
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 8

கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களுடன் விடைபெற்றுக் கொண்டு, சௌமிகாவுடன் காரில் ஏறினான் அகிலன். கார் பிரதான சாலையில் நுழைந்த சற்று நேரத்தில் “நீங்கள் அவையள் இரண்டு பேரையும் சேர்த்து வைச்சது எனக்கு சந்தோசம்” என்றாள் சௌமிகா.

“ம்...” என்றவன் சற்று நேரத்தின் பின்னர் “ஏன்…?” என்றான் தெருவில் கவனத்தை செலுத்தியவாறு.

“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையா ஒருத்தரை ஒருத்தர் நேசித்தால், அவர்கள் எக்காரணத்தாலும் பிரியிறதில எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை… உண்மையான காதல் ஜெயிக்க வேணும்… அதோட இவை அதுக்கும் ஒரு படி மேல போய், அந்தப் பெண் ஒரு கருவைச் சுமந்து கொண்டிருக்கிறாள்...” என்றாள் தீவிரமான குரலில்.

“ம்...” என்ற அகிலன் “காதல் உண்மையா இருக்கலாம்… ஆனால் படிக்கிற வயசுல, காதல் ...பிள்ளை… இதெல்லாம் படு முட்டாள் தனமான வேலை” என்றான்.

“அவை இரண்டு பேரின்ர கண்களிலுமே உண்மையான காதல் இருந்ததை நான் பார்த்தனான்...” என உணர்ந்து சொன்னாள் அவள்.

“ம்...”

“நீங்களும் அதை கவனிச்சீங்களா?” என ஒரு விதமான ஆர்வத்துடன் கேட்டாள் அவள்.

“நான் அதை ஒண்டும் கவனிக்கேல்ல… அவைக்கு எது சரியான நிவாரணமாக இருக்குமோ அதைச் செய்தனான்” என்றான் அவன்.

“ஓ...” என சுரத்தில்லாமல் இழுத்தாள் அவள்.

“என்ன?”

“ காதல்.... அது மிக மிக உன்னதமான விசயம்… நாம ஒருத்தரை காதலிக்கிறதும்..., ஒருத்தரால காதலிக்கப்படுறதும் மிகவும் அற்புதமான விசயம்...” என அனுபவித்து சொன்னாள் அவள்.

அவளது குரலை வைத்து அவளை உணர்ந்து கொண்ட அவன் அவளைத் திரும்பிப் பார்த்து, “ஓ…அப்பிடியா…? அந்த அனுபவம் உமக்கு இருக்கோ…?” என ஆர்வத்துடன் கேட்டான்.

தான் விரும்புபவனிடம் தனது காதலை மறைமுகமாக தன்னும் வெளிப்படுத்துவதில் ஏற்பட்ட இதத்துடன், முகம் பிரகாசிக்க “ம்...” என்றாள் அவள்.

அவளின் பதில் ஏனோ அகிலனுக்கு உவப்பானதாக இருக்கவில்லை.
சற்று நேரம் இருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் மௌனமாக இருந்தார்கள்.

“உங்களுக்கு…?” என ஓர் வித ஆவலுடன் கேட்டு அந்த மௌனத்தை கலைத்தாள் சௌமி.

“இல்லை” என்றான் சாதாரணமாக.

நல்ல உயரமும், கம்பீரமும், கவர்ச்சியான முக அமைப்பும் உடைய அகிலன் , தனது தோற்றத்திலும் உடைகளிலும் மிகுந்த கவனம் செலுத்துவான். விலை உயர்ந்த தனக்குப் பொருத்தமான ஆடைகளையே தேர்வு செய்து அணிவான். தனது உடலையும் மிக அழகாக பராமரிப்பான். அவனது தோற்றம் எல்லோரையும் ரசிக்க வைக்கும். அவன் படிக்கும் காலத்தில் அவனுடன் கூடப் படித்த ஓர் சிலர் அவனது, திறமையிலும், கம்பீரத்ததிலும் மயங்கியது உண்டு. படிப்பிக்கும் காலத்தில் அவனின் ஆளுமையிலும், வசீகரத்திலும் கவரப்பட்ட ஒரு சிலர் அவனுடன் நெருங்கிப் பழக விரும்பிய போது அவன் அதை தவிர்த்து உள்ளான். இப்ப கூட அவனிடம் படிக்கும் சில மாணவிகள் அவனிடம் மிகுந்த ஈடுபாடு காட்டுவதை அவன் அறிவான். அப்பிடியானவர்களிடம் இருந்து அவன் விலகி நடப்பான். இது வரைக்கும் அவனுக்கு அவர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ அந்த மாதிரி ஓர் ஈர்ப்பு ஏற்படவில்லை.

“ம்… அந்த அதிர்ஷ்டசாலி யாரோ…?” எனக் கேட்டான் அகிலன், அவளை பார்த்தவாறு.

“அப்ப அந்த ஆள் அதிர்ஷ்டசாலி எண்டதை நீங்கள் ஒத்துக் கொள்ளுறீங்களா...?” என்றவாறு புன்னகையுடன் அவனை பார்த்தாள்.

“நிச்சயமாக....” என அவன் உடனேயே ஒத்துக் கொண்டான்.

“அது… என்னவோ தெரியேல்ல… ஆனால் நான் விரும்புறது எல்லாம் நிறைவேறினால் கண்டிப்பாக நான் தான் அதிர்ஷ்டசாலி...” என்றாள் அவள் கற்பனையில் மிதந்தவாறு.

“அப்ப அந்த அதிர்ஷ்டசாலியைப் பற்றி இப்போதைக்கு ஒண்டும் சொல்றதுக்கு இல்ல… அப்படித்தானே....” என அவளைக் கேட்டான்.

‘அது நீங்கள் தான்’ என்று சொல்ல அவள் பெரிதும் விரும்பினாலும், அதை சொல்லாமல் தவிர்த்து “ம்....” என்றாள் மெதுவாக.

அவளைப் பார்த்தவன், அவளின் முக மலர்ச்சியை கண்டு, அவளின் நிலையை புரிந்தவாறு “உம்முடைய காதல் வெற்றி பெற எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என அவன் உண்மையான அன்புடன் வாழ்த்தினான்.

அவள் மௌனமாக அவனையே சற்று நேரம் பார்த்துவிட்டு, வீதியைப் பார்த்தாள்.

இப்போது எல்லாம் சௌமிகா, அகிலனுடன் சற்று நேரமாவது செலவிட விரும்பினாள். ஒரு நாளில் அவனை ஒரு தடவையாவது நேரில் பார்க்காவிட்டாலோ அல்லது அவனின் குரலைக் கேட்காது விட்டாலோ அந்த நாளை அவளால் நிம்மதியாக கடத்த முடியாது, அன்றிரவு அவள் உறங்க முடியாமல் தவிப்பாள். அதற்காக அவன் பல்கலைக்கழகம் செல்லும் நேரம் அறிந்து, அவளும் தயாராகி கிளம்பி செல்வாள். லிஃப்டிலோ அல்லது அவனது வாகனத்தரிப்பிடத்திலோ அவனைக் கண்டால் அவனுடன் சேர்ந்து, அவளும் பல்கலைக்கழகத்துக்கு செல்வாள். அவ்வாறு செல்ல சந்தர்ப்பம் கிடைக்காத நாட்களில் மாலை வேளைகளில் அவளின் பெரியம்மாவிடம் ஏதாவது ஓர் காரணத்தைக் கூறி விட்டு, அவனின் வீட்டுக்குச் சென்று விடுவாள். சில நாட்கள் அவன் அங்கு இருப்பான், அப்பிடியான நாட்களில் அவனுடனும் அவனின் தாயாரிடமும் சற்று நேரம் இருந்து கதைத்து விட்டு வருவாள். அவ்வாறான நாட்களில் அவன், அவளிடம் சற்று நேரம் கதைத்துவிட்டு, பின்னர் தனது வேலைகளை கவனிக்க சென்றுவிடுவான். அவ்வாறு அவன் உடனேயே சென்று விட்டால், ‘நான் அவனைப் பார்ப்பதற்கு தானே என்ர படிப்பையும் விட்டிட்டு வந்திருக்கிறன், என்னோட கதைக்காமல் அவனுக்கு அப்பிடி என்னதான் வேலையோ’ என்று அவனை மனதுக்குள் திட்டியவாறு அவளும் தனது வீட்டுக்கு வந்துவிடுவாள். அங்கு அவன் இல்லாவிட்டால், அவனது கைப்பேசிக்கு அழைத்து, ஏதாவது தகவல் கேட்பது போல ஓரிரு நிமிடங்களாவது கதைத்துவிடுவாள்.

ஒரு சில நாட்களில் அவள் மேலும் ஒரு படி சென்று, அவன் அணியும் ஆடைகளைப் பற்றியும் அது எவ்வாறு அவனுக்கு பொருந்தி இருக்கிறது என்பது பற்றியும் அவனிடம் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவாள். அவன் அவள் கூறுபவற்றை ஓர் விதமான ரசனையான உணர்வுடன் கேட்டுக் கொள்வான். அவள் ‘இந்த சேட் உங்களுக்கு நல்லா இல்லை என்றோ அல்லது இந்தப் பான்டுக்கு இந்த சேட் பொருத்தமாக இல்லை என்றோ சொல்லி விட்டால், அவன் அதை அணிவதை விட்டுவிடுவான்.

அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான், என்ன சாப்பிடுகிறான், பல்கலையில் என்ன விஷயம் சுவாரஸ்யமாய் இருந்தது போன்ற தகவல்களையும் அவனிடமிருந்து கேட்டு அவள் அறிந்து கொண்டு விடுவாள். அவளும் தன்னைப் பற்றியும், தன்னுடைய படிப்பைப் பற்றியும், தனது குடும்பத்தைப் பற்றியும் அவனுடன் கதைப்பாள்.

அவன் தன்னிடம் படிக்கும் மாணவிகளை பற்றி அல்லது அவனுக்குப் பழக்கமான ஏதாவது ஓர் பெண்ணை பற்றி, ஏதேனும் ஓர் சுவாரசியமான விஷயத்தை பற்றி, கூறினால் அவள் மனம் அமைதி இழந்து விடும். அவள், அப்பெண்ணைப் பற்றி, தோண்டித் துருவி விசாரித்து, அகிலனுக்கு அப்பெண்ணின் மீது ஆர்வம் ஏதும் இருக்கிறதா என அறிய முயற்சிப்பாள். இது எதுவும் தெரியாத அவனும் சாதாரணமாக பதிலளிப்பான். ஆரம்பத்தில் எல்லா விடயங்களையும் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, அவளுடன் நட்புடனும், அன்புடனும் பழகிய அகிலன், ஒரு நாள் காரில் அவளை பல்கலைக்கழகத்துக்கு, அழைத்துக் கொண்டு செல்லும் போது, முதல் நாள் மாலை சட்ட பீடத்தில் நடந்த கலை விழாவில், ஓர் மாணவி, விவாதப் போட்டி, கவிதைப் போட்டி போன்ற சகலதிலும் முதலாம் பரிசு பெற்றாள் என்றும் அவளின் திறமையைப் பற்றியும் சௌமியிடம் கூறிவிட்டு, “நானும் படிக்கிற காலத்தில அவளைப் போலத் தான் அநேகமான போட்டிகளில பரிசு வாங்குவன் ” என்றான் தனது பல்கலைக்கழக காலங்களை மகிழ்வுடன் எண்ணியவாறு.

அன்று அவன் அணிந்திருக்கும் புது சேட்டை பற்றி கூற வாய் திறந்த அவள், அவன் ஒரு பெண்ணைப் பற்றி கூறியதில் அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவனின் முகத்தில் தெரிந்த இதத்தை கண்டவளுக்கு சலிப்பு ஏற்பட “ம்...” என்றாள்.




உற்சாகமான மனநிலையில் இருந்தவன் அவளின் குரலில் தெரிந்த சலிப்பை உணரவில்லை. “அவள் படிப்பிலையும் சரியான கெட்டிக்காரி, எல்லா விசயத்தையும் நல்லா விளங்கிப் படிப்பாள். என்னைப் போல ஃபர்ஸ்ட் கிளாசில பாஸ் பண்ணுவாள்” என்றான்.

“சமூகத்திலும் அவளுக்கு அக்கறை இருக்கு…, ஒரு நல்ல லோயரை உருவாக்கிறதில எனக்கும் பங்கு இருக்கிறதில எனக்கு சந்தோஷம்” என அந்தப் பெண்ணைப் பாராட்டினான் அவன்.

அகிலன் அந்தப் பெண்ணைப் பற்றி புகழ்ந்ததில் அவளுக்கு பொறாமை ஏற்பட “அவள் பார்க்க எப்பிடி இருப்பாள்…? வடிவா இருப்பாளோ…?” எனக் கேட்டாள் சௌமி.

நான் அந்தப் பெண்ணின் கெட்டித் தனத்தையும் திறமையைப் பற்றியும் கதைக்க இவள் ஏன் அவளின் அழகைப் பற்றிக் கேட்கிறாள் என்று அவனுக்குப் புரியாவிட்டாலும், அந்தப் பெண்ணின் அசாதாரண திறமையை மனதில் நினைத்தவாறு “ம்...” என்றான் அவன்.

அவன் ஓர் பெண்ணைப் பற்றி பெருமையாக கதைத்ததால் சினம் ஏற்பட “நீங்கள் அவளை லவ் பண்றீங்களா…?” எனக் கேட்டவளின் குரலில் கோபம் வெளிப்படையாகவே தெரிந்தது.

அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் அவளின் கண்களிலும், குரலிலும் தெரிந்த மாற்றத்தை கவனித்தவன் “லவ்வா…?” எனக் கேட்டான்.

“ம்… அவளை நீங்கள் லவ் பண்றீங்களா எண்டு கேட்டனான்...” என அழுத்திக் கேட்டாள்.

வழக்கமாக விஞ்ஞான பீடத்தின் அருகில் அவளை இறக்குபவன், அன்று அவள் கேட்ட கேள்வியில் சினம் ஏற்பட அவன் வழமையாக வாகனம் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தியவன் அவளைப் பார்த்து, “நீர் என்ன கதைக்கிறீர் எண்டதை விளங்கித் தான் கதைக்கிறீரா…? நான் ஆரையுமே அப்பிடியான கண்ணோட்டத்தில பார்க்கிற இல்ல… அதுவும் என்னட்ட படிக்கிற பிள்ளையளைப் பற்றி கனவில கூட அப்பிடி நினைக்க மாட்டன்... அந்தப் பிள்ளைக்கு என்னைவிட பத்து வயசாவது குறைவாக இருக்கும், அது சின்ன பிள்ளை…, அந்தப் பிள்ளையின்ர அறிவு, முயற்சி, படிக்கிற ஆர்வம் என்னை பிரமிக்க வைச்சது… அது தான் அந்த பிள்ளையைப் பற்றி உம்மட்ட சொன்னனான்…, வேற ஒண்டும் இல்ல…, இப்படி எல்லாம் என்னோட கதைக்காதையும்… எனக்கு பிடிக்காது” என்றான் கோபத்துடன்.

முதன் முதலாக அவளிடம் கோபத்தைக் காட்டுபவனிடம் பயம் ஏற்பட்ட போதும், “நீங்கள் அந்தப் பிள்ளையையும் உங்களையும் ஒப்பிட்டுக் கதைச்சீங்கள்.... அதோட வடிவான பிள்ளை எண்டும் சொன்னீங்கள்… உங்கட முகத்திலையும் ஒரு மலர்ச்சி தெரிஞ்சுது… அது தான் கேட்டனான்” என்றாள் துணிவுடன். அவன் வயது வித்தியாசத்தைப் பற்றி கதைத்ததும், அவளுக்கும் அவனுக்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து மனதில் ஒரு சிறு நெருடல் ஏற்படத் தான் செய்தது அவளுக்கு.

“ஒரு பிள்ளையின்ர அதி புத்திசாலித்தனம் என்ர மனதை கவர்ந்தது உண்மை தான் அதுக்காக.... இப்பிடியா கதைக்கிறது...? ” என்றான் அவன் கோபம் சற்றும் குறையாமல்.

அவனது கோபத்தில் அவனுக்கு அப்படியான எண்ணம் எதுவும் இல்லை என அறிந்தவள் “உங்கட மனசில என்ன இருக்கு எண்டு அறியத் தான் அப்பிடி கேட்டனான்… “ என்றாள் , அவனை சமாளிக்கும் விதமாக.

“என்ர மனதில இருக்கிறதை அறிஞ்சு என்ன செய்யப் போறீர்…?” அவளை முறைத்து பார்த்தவாறு கேட்டான்.

“ அறிஞ்சு வைச்சிருக்கிறது நல்லம் தானே...” என்றாள் தலையை சரித்து அவனைப் பார்த்தவாறு.

ஏதோ நினைத்தவனாக “அது எல்லாம் உமக்குத் தேவையில்லாத விஷயம்” என்றான் சிறு எரிச்சலுடன்.

“அதை எப்பிடி நீங்கள் சொல்லலாம்...” என்றாள்.

“அதை நான் தானே சொல்லோணும்…”என்றவன் தொடர்ந்து “இப்படியான கதையள் எனக்குப் பிடிக்காது…” என்று கூறி அவளைச் சற்று நேரம் ஏறிட்டுப் பார்த்து விட்டு “சரி… நான் கிளம்புறேன்… நீர் போவீர் தானே...” எனக் கேட்டவாறு காரில் இருந்து இறங்கி பின்பக்க கதவை திறந்து அவனது பையை எடுத்தான். அவளும் அவனை முறைத்துப் பார்த்து “ம்....” என்றவாறு இறங்கி விஞ்ஞான பீடத்தை நோக்கி நடந்தாள். அவன், அவள் செல்வதை சற்று நேரம் பார்த்துவிட்டு, தனது பீடத்திற்கு சென்றான்.
 

Author: Vishakini
Article Title: என் மன்னவன் நீதானோ - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இவன் என்ன இவளோ கோவக்காரனா இருக்கான்.....
சௌமி இவனே தான் வேணுமா உனக்கு.....
 
  • Like
Reactions: STN - 78

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online