• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 29

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 29

அன்று மாலை, வசீகரனின் குடும்பத்தினரும் அவரது அத்தையின் குடும்பத்தினரும் மதுமதியின் வீட்டிற்கு வந்தனர். வித்யா மட்டும் லலிதாவுடன் வந்திருந்தாள். அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்ட கோபத்தில் நித்யா வரவில்லை. ஏதையோ, யாரையோ தவிர்ப்பதற்காக பாலமுருகனும் ஏதோ வேலை இருப்பதாகச் சொல்லி வரவில்லை.

“பரிமளம், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்துட்டாங்க… வா!” என்று அழைத்தார் கணேசமூர்த்தி.

“வாங்க மச்சான், வாங்க தம்பி, வாம்மா மீனா, வாங்க அண்ணி…” என்று அனைவரையும் வரவேற்றார் கணேசமூர்த்தி. அவருடன் சித்ரா, சித்தார்த் மற்றும் முகுந்தனும் வரவேற்று நின்றனர்.

சித்ராவைப் பார்த்த சொக்கலிங்கத்திற்கு அவரை உடனே அடையாளம் தெரிந்தது.

“அட என்னம்மா சித்ரா, எப்படி இருக்கே? சிவனேசன் வரலையா?” என்று கேட்டார்.

“இல்லைங்க மச்சான், அவர் வரலைங்க. தம்பியும் நானும் மட்டும் தான் வந்தோம்,” என்றார் அவர்.

அனைவரும் மெல்லிய தலையசைப்புடன் உள்ளே வந்து அமர, பரிமளம் நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

“எங்க என் வீட்டு மருமக?” என்று மீனாட்சி கேட்க, பரிமளம் சிரித்தபடி அவரை மதுமதியின் அறைக்குள் அனுப்பினார்.

அறைக்குள் சென்ற மீனாட்சியை பார்த்ததும், மதுமதி அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

“ஆண்ட்டி… நீங்க இங்க?”

“ஆண்ட்டி இல்ல… அத்தைன்னு சொல்லணும்,” என்றார் மீனாட்சி மென்மையான சிரிப்புடன்.

அந்த ஒரு வார்த்தை… அவளது மனதில் இருந்த அனைத்து சஞ்சலங்களையும் கலைத்தது.

“மாப்பிள்ளை… வசீகரனா?”

இன்னும் நம்ப முடியாமல் இருந்தாலும், அந்த நொடியில் அவள் உள்ளம் முழுவதும் பரவிய நிம்மதி—அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத இதத்தை அவளுக்கு அளித்தது.

வசீகரனை பார்த்த சித்தார்த் சங்கடமாக உணர்ந்தான். அதே சமயம், வசீகரனின் உள்ளத்தையும் ஒரு மெல்லிய குற்ற உணர்வு ஆக்கிரமித்திருந்தது. “அவனை வைத்து தான் அவளிடம் சண்டை போட்டேன் …” என்ற எண்ணம் அவனை விடாமல் துரத்தியது.

“இதை எல்லாம் சரி செய்ய வேண்டியது நான்தான்…” என்று மனதில் உறுதி கொண்டவன், அந்த உணர்ச்சிகளை வெளியில் காட்டாமல் சித்தார்த்தை பார்த்து பழையபடி சிரிக்க முயன்றான்.

“அண்ணா…?” என்ற சித்தார்த்தின் குரலில் இன்னும் ஒரு தயக்கம் ஒலித்தது.

சிறு தலையசைப்புடன் அவன் கைகளைப் பற்றியவன்,
“எப்படி இருக்க, சித்தார்த்? எங்கே வேலை பண்ற?” என்று இயல்பாகக் கேட்டான்.

அவனின் அந்த இயல்பான குரலும், பழைய பாசம் கலந்த அணுகுமுறையும் சித்தார்த்தின் உள்ளத்தில் இருந்த பதட்டத்தை மெல்ல அகற்றியது. அவனும் மெதுவாக மனம் திறந்து வசீகரனின் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.

சித்தார்த்தை அழைத்துப் பேசியபோது, மதுமதி மிகவும் பதற்றமாக இருந்தாள்.

அன்று மாலை காப்பி ஷாப்பிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மதுமதியிடமிருந்து அழைப்பு வந்தது.

“சித்…” என்ற அவள் குரலில் அவ்வளவு பதற்றம்.

“என்னடி… இப்ப தான் பார்த்தோம், அதுக்குள்ள கால் பண்ணியிருக்க?”

“சித்… பொண்ணு பார்க்க வராங்களாம் டா…”

“என்ன? பொண்ணு பார்க்கவா? யாரை?”

“என்னை தான்டா…”

“யாரு வராங்க?”

“எனக்கு தெரியலை டா…”

“நீ யாருன்னு அத்தை கிட்ட கேக்கலையா?”

“இல்ல டா… எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். அப்படி இருக்க, நான் கேக்க போய்ட்டு ஆர்வமா இருக்கேன்னு அம்மா நினைச்சுட்டா?”

“சரி இரு… என் வீட்டு குலதெய்வத்துக்கு ஏதாவது தெரியுதான்னு கேட்டு பார்க்கிறேன்,” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அவன் தன் அம்மாவிடம் கேட்டபோது, “தூரத்து சொந்தம்… உனக்கு பெரியப்பா பையன் தான்,” என்று சொன்னாரே தவிர, வேறு பயனுள்ள தகவல் கிடைக்கவில்லை.

என்ன செய்வது என்று தெரியாமல் அவனும் குழப்பத்தில் இருந்தான். ஆனால் வசீகரனை பார்த்தவுடன் அவனுக்குள் ஒரு பெரிய நிம்மதி பரவியது.

மதுமதியின் வீடும் சிறியது அல்ல. பெரிய வரவேற்பறை, உணவருந்தும் கூடம், அதனுடன் இணைந்த சமையலறை, மேலும் மூன்று படுக்கையறைகள் கொண்ட விசாலமான வீடு.

அங்கு வந்தவுடன் லலிதாம்பிகை முகத்தை சுளித்தார்.
“வீடு என்ன… இவ்வளவு சின்னதா இருக்கே…” என்றார்.

சொக்கலிங்கம் அவரை ஒரு பார்வையிலேயே அடக்கி அமைதியாக்கினார். உடன் வந்திருந்த வித்யா, தனது அம்மாவை முறைத்து பார்த்தாள்.

அவளை பார்த்த லலிதா, “இவ ஒருத்தி முறைத்துக்கிட்டே இருக்கறாளே…” என்று மனதில் எண்ணி, உதட்டை சுளித்தபடி அமர்ந்திருந்தார்.

சொக்கலிங்கம்தான் பேசத் தொடங்கினார்:
“சரி மா, பேசிக்கிட்டே இருக்கீங்க… பொண்ணை வரச் சொல்லுங்க. பாக்கலாம். எங்களுக்கும் எங்க மருமகளை பார்க்கணும்னு ஆசை இருக்கும் இல்ல?” என்றார் புன்னகையுடன்.

“என்னங்க மச்சான், தினமும் தான் பொண்ணு உங்க வீட்டுக்கு வேலைக்கு வருது. பார்த்து பேசுறீங்க… இப்போ என்னமோ புதுசா பார்க்கற மாதிரி சொல்றீங்க!” என்று சித்ரா சிரித்தார்.

“அது வேலைக்குப் வந்த பொண்ணா பார்த்தது… இது எங்க வீட்டு மருமகளா பார்க்கப் போறோம்,” என்று அவரும் சிரித்துக் கொண்டே கூற . .

மற்றவர்களும் சிரிக்க, லலிதாவுக்கு இவையெல்லாம் ரசிக்கவில்லை.

அப்போது மோகனும் அங்கு வந்துவிட,
“வா மோகன்,” என்று கணேசமூர்த்தியும் சொக்கலிங்கமும் ஒரே நேரத்தில் அழைத்தனர்.

அவரும் புன்னகையுடன் வந்து சொக்கலிங்கம் அருகில் அமர்ந்தார்.

சித்ரா மதுவின் அறைக்குச் சென்று, “வா மது,” என்று அவளை அழைத்து கொண்டு வந்தார்.

அடர் பச்சை பட்டுப்புடவை சரசரக்க மெதுவாக நடந்து வந்தாள் அவள். கழுத்தில் மெல்லிய செயின்… காதுகளில் ஆடும் ஜிமிக்கி… தலையில் ஒற்றை மல்லிகைச் சரம் என வந்தவளது அழகோடு முகத்தில் தெரிந்த நாண சிவப்பும் வசீகரனை கட்டிப்போட்டது.

அந்த நொடி—அவன் இமைக்க மறந்தவனாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். .
அவன் பார்வை அவளைத் தாண்டி வேறெங்கும் செல்லவில்லை.

மதுமதி மெதுவாக வந்து அனைவரின் முன்பும் நின்றாள்.

“மது, எல்லாருக்கும் வணக்கம் சொல்லிக்கோ,” என்று சித்ரா சொல்ல, அவள் அனைவருக்கும் வணக்கம் வைத்தாள். அவளது கண்கள் வசீகரனை கண்டவுடன் இமை தாழத்திக்கொண்டான. .

“மது, இங்க வாம்மா… இங்க வந்து உட்காரு,” என்று மீனாட்சி அம்மாள் கூப்பிட, அவரருகில் சென்று அமர்ந்தாள். லலிதா அவளை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

வசீகரனின் ஒரு புறம் வருணும், மறுபுறம் வித்யாவும் அமர்ந்திருந்தனர்.

வருண் தன் அண்ணனை நெருங்கி அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில் ,
“அண்ணா, மது எங்கையும் ஓடிட மாட்டா… கண்ணதான் கொஞ்சம் சிமிட்டி பாரு ,” என்று சொல்ல,
“சும்மா இருடா,” என்று அவனை அதட்டினான் வசீகரன்.

மறுபுறம் இருந்த வித்யாவோ ,
“மாமா, அக்காவை இப்பவே இப்படி பார்த்துட்டு இருந்தா, கல்யாணத்துக்குப் பிறகு ஃபுல் டைம் ரொமான்ஸ் மோட்ல தான் இருப்பீங்க போல!” என்று கேலி செய்தாள்.

“ஏய் வாலு, சும்மா இரு,” என்று வசீகரன் அவளை அடக்கினான் .

“ஏன் மாமா, எங்களை தான் அதட்ட முடியும்… அக்காவை இப்படி அதட்ட முடியுமா?” என்று மீண்டும் கேலி செய்ய,

வசீகரன் கடைகண்களால் மதுமதியை பார்த்தான்.
“அவளை அதட்டுவதா… இப்ப இருக்கிற என் நிலைமைக்கு , அவளதுகடை கண் பார்வை கிடைக்காதா என்று ஏங்கிட்டு இருக்கேன் …” என்று உள்ளுக்குள் முனகினான்.

மதுமதி தலையை குனிந்து கொண்டு மீனாட்சி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“மாமா, மைண்ட் வாய்ஸ்ன்னு சத்தமா பேசிட்டீங்க!” என்று வித்யா நமட்டு புன்னகையுடன் சொல்ல .

“வித்யா…” என்ற அவன் குரலில் இருந்த கண்டிப்பை அவள் உணர்ந்தாள் தானே .

இப்போது வருண்தான் ஆரம்பித்தான்:
“பொண்ணு பாட்டு பாட வருமா?”என்றான்

“எங்க அக்கா விட்டா கச்சேரியே பண்ணுவா!” என்று முகுந்தன் பெருமையாகச் சொன்னான்.

“கச்சேரி எல்லாம் வேண்டாம் ப்ரோ… ஒரு பாட்டு மட்டும் போதும்,” என்றாள் வித்யா.

அப்போது அனைவரின் கவனமும் அவர்களிடம் திரும்பியது.

“அப்ப பாடறது,” என்று வருண் மதுவை நோக்கி சொன்னான்.

சித்தார்த் மனதில், “அவ பாட்டில்தான்டா உங்க அண்ணன் அவகிட்ட விழுந்தார் …” என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

வசீகரன் எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அதற்குள்ளாக பரிமளம் அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து வந்து பரிமாறினார். வந்தவரை பரி இங்க வந்து இரு என்று மீனாட்சி தனகருக்கில் அமர்த்திக்கொண்டார்.

மதுவுக்கு சற்று சங்கோஜமாக இருந்தது. அவள் தயங்க,
“என்னடா மது, நீதான் நல்லா பாடுவியே… அப்புறம் என்ன?” என்று மோகன் கூற .

அவள் மெதுவாக பாடத் தொடங்கினாள்—

முகுந்தா முகுந்தா…
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா…
வரம் தா வரம் தா…
பிருந்தாவனம் தா வனம் தா…

வெண்ணை உண்ட வாயால்…
மண்ணை உண்டவா…
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு…
மருந்தாக வா…
அவள் பாடியபோது, பெரியவர்கள் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர்.

மதுமதி வசீகரனை நினைத்து பாடிக் கொண்டிருந்தவள் ,

“என்ன செய்ய நானும்…
தோல் பாவைதான்…
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும்…
நூல் பாவைதான்…”

இந்த வரிகளை பாடும்போது, அவள் வசீகரனின் கண்களைச் சந்திக்க . ஒரு கணம் அவளது விழிகள் கலங்க பார்த்தது.. சட்டென தன்னைச் சமாளித்துக் கொண்டு முழு பாடலையும் பாடி முடித்தாள்.

வசீகரனுக்கு மனம் தாங்கவில்லை.
“அவளை என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்? அவளுக்கு யோசிக்க அவகாசமே கொடுக்காமல்… அவளது உணர்வுகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறேனா?” என்ற எண்ணம் அவனை வாட்டியது.

“அவள் என் கைகளால் ஆட்டப்படும் நூல் பொம்மையா? இல்லையே … நான் அப்படி அவளை ஆட்டுவிக்க நினைக்கவே இல்லையே … அவள் சொல்லுக்கு ஆட்டுவிக்கும் பொம்மையாகதானே காத்திருக்கிறேன் ”

என்னை எப்படி அவளுக்கு உணர்த்த எண்ணியவன் மனம் சமன்படவில்லை சட்டென எழுந்துவிட்டான்.

அனைவரும் அவனை என்னவென்று பார்க்க , பிறகுதான் உணர்ந்தான் தான் எழுந்து நின்றுகொண்டிருப்பதையே.

“என்ன வசீ, ஏதாவது வேணுமா?” என்று மீனாட்சி கேட்டார்.

சிறிது தடுமாறியவன்,
“அம்மா… நான் கொஞ்சம் மதுவுடன் தனியாக பேசணும்,” என்றான்.

இவர்கள் இருவரின் காதல்—சிறியவர்களில், சித்தார்த்; பெரியவர்களில் மீனாட்சி, மோகன், சொக்கலிங்கம் ஆகியோருக்கே தெரியும். மற்றவர்களுக்கு இது பெரியவர்கள் பார்த்த சம்பந்தம் மட்டுமே.

“மது, தம்பியை கூட்டிக்கிட்டு போமா,” என்றார் கணேசமூர்த்தி.

வசீகரனை ஒரு கணம் பார்த்தவள், விழிகளில் அவனை அழைக்கும் செய்தி இருக்க அவனும் அவளை பின் தொடர்ந்தான்.

வித்யா சிரித்தபடி,
வித்யாதான்,
“இப்பவே என்னமா கண்ணுலயே பேசிக்கிறாங்க பாருங்க! நீயும் தான் இருக்கிறயே… நான் கிழக்க பார்த்தா, நீ மேற்க பார்ப்பே!” என்று உதட்டை சுளித்து சொன்னாள்.

அவளருகில் அவளையே பார்த்துக் கொண்டிருந்த வருண், அவளது காதருகில் குனிந்து,
“இப்படியே பேசுற வாயை எப்படி அடைக்கணும்னு எனக்கு தெரியும்…” என்று மெதுவாகச் சொன்னான்.

அவன் பார்வை அவளது உதடுகளில் நிலைத்தது.

அவனது பார்வையும், அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தமும் புரிந்த வித்யா, யாரும் பார்க்காதபடி அவன் தொடையில் கிள்ளினாள்.

“ஆ…!” என்று வருண் சத்தமாகக் கத்த ,

“என்னடா வருண், என்ன ஆச்சு?” என்று மற்றவர்கள் கேட்டனர்.

“ஒன்னும் இல்லை… ஒன்னுமே இல்ல… எறும்பு கடிச்சிருச்சுன்னு நினைக்கிறேன்…” என்று மழுப்பினான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சித்து, அவனது காதருகில் குனிந்து,
“என்ன வருண்… எறும்பு கொஞ்சம் பெருசா இருக்கும் போல?” என்று கிசுகிசுத்தான்.

“பார்த்துட்டீங்களா…” என்று அவன் அசடுவழிய சிரித்தான், சித்தார்தை பார்த்து.

“ஆமாம்,” என்று சித்தார்த் தலையசைத்துக் கொண்டு,
“பார்த்து இரு வருண்… அடுத்த முறை அந்த எறும்பு பெருசா கடிச்சிடப் போகுது,” என்றான் கிண்டலாக.

“ப்ரோ… மீ பாவம்… விட்டுடுங்க,” என்று வருண் சமாதானமாகச் சொன்னான்.

அவனது பாவனையை பார்த்த சித்தார்த் சிரித்தபடி தலையசைத்து, முகுந்தனிடம் சென்று நின்றுகொண்டான்.
 
Last edited by a moderator:

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom