கண்ணம்மா.
அத்தியாயம் 21.
சென்னை மாநகரத்தின் காவல்துறையானையர் மார்த்தாண்டத்தின் வீட்டு அலுவலக அரை வழக்கத்திற்குமாறாக அதீத பரபரப்புடன் காணப்பட்டது. கமிஷனர் மார்த்தாண்டம்,
டிசிபி கரிகாலன், இடைத்தரகர் வாஞ்சிநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேதநாயகம் உட்பட நான்குபேர் அங்கு குழுமியிருந்தனர். அவர்களுக்கிடையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று அவசரக் கதியில் நடைபெற்றது.அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் கலவையான உணர்வுகள் வெளிப்பட்டன.
"எதிராளி யாருன்னு இப்பவரைக்கும் கண்டுபிடிக்கமுடியல. நடக்கிறதயெல்லாம் பார்த்தா
அவன் ஒன்னும் சாதாரணமான ஆளுமாதிரித் தெரியல. நமக்கே பொறிவச்சிருக்கான்னா
அவனுடைய இலக்கும் சின்னதா இருக்கமுடியாது. நாம அவன ரொம்பவே குறைச்சு எட போட்டுட்டோம். இல்லாட்டா நம்மளோட அடிமடியிலேயே கைய வைக்கிற தைரியம்
எவனுக்கு இருக்கு இந்த ஊர்ல?ஆனா இவன் எல்லாத்துக்கும் துணிஞ்சுதான் உள்ளே இறங்கியிருக்கான். இத்தனக் கண்றாவிக் கருமாந்திரமும் எதுக்குன்னுதான் தெரியல." என்று புலம்பினான் இடைத்தரகர் வாஞ்சிநாதன்.
இருக்காதா பின்னே? நடைபெறும் அத்துனை அநியாயங்களிலும் இவனது தலையீடுதானே முதன்மையாகத் திகழ்கிறது? பெண் குழந்தைக் கடத்தல், உடல் உறுப்புத் திருட்டு, போதைப்பொருள் பரிவர்த்தனை போன்றக் குற்றச் செயல்கள் அனைத்திற்கும் இடைத்தரகனாகநின்று, இம்மாதிரியான கேடுகெட்டச் செயல்களில் அதீத நாட்டமுடைய இரு பெருந்தலைகளுக்கிடையே ஒப்பந்தங்களைப் பேசி, இறுதி விலையினைத் தீர்மானித்து, அனைத்துமே சரியாகத்தான் நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் இவன் வேலை. அதற்கான சன்மானத்தையும் இருபக்கத் தரப்பினரிடமிருந்தும் தவறாமல் பெற்றுவிடுவான்.
சடகோபன் மற்றும் வேதநாயகத்தை முறையாக அறிமுகம் செய்து, அவர்களுக்கிடையில் பலகோடி மதிப்புடைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, அவர்களைத் தொழில்முறை நன்பர்களாக்கியது வாஞ்சிநாதன்தான்.சுடரொளிப் பெண்கள் பள்ளிக்கூடத்தில் பயின்ற மலை கிராமத்தைச் சார்ந்தப் பெண் குழந்தைகளை சடகோபன் வேதநாயகத்திடமே நல்லவிலைக்குப் பேசிவிட்டார்.
அபரஞ்சியின் தற்கொலை விடயத்தில் சடகோபன் தடுமாறியபோது வேதநாயகம்தான் அவரோடு தொடர்புடைய சில பெண்கள் பள்ளிக்கூடங்களையும், கருணையில்லங்களையும் சடகோபனுக்குக் காண்பித்துக் கொடுத்தார் சடகோபனால் விற்கப்படும் பெண் பிள்ளைகளைத் தன்னால் முடிந்தவரை அனுபவித்துவிட்டுத்,
தங்களுக்குக் கீழிருக்கும் மருத்துவர் சுந்தரலிங்கத்தின் வழிகாட்டுதலின்பெயரில்,
தகுந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுப், பெண்களின் உடல் ஆரோக்கியத்தினடிப்படையில், அவர்களது உடல் உறுப்புக்கள் வேறு மாநிலங்களுக்கு விற்கப்படும். தவிர கிடைப்பதற்கறிய எதிர்மறை ரத்தவகைகளான "ஓ நெகட்டிவ், ஏன் நெகட்டிவ், பி நெகடிவ், ஏ பி நெகடிவ்"போன்ற ரத்தவகைகளைக் கொண்டக் குழந்தைகளிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி, வெளிமாநிலங்களைச் சார்ந்தத் தனியார் ரத்த வங்கிகளுக்கு அனுப்பிவைக்கும் ஈனச் செயல்களே வேதநாயகத்தின் தொழில். இவரது இத்தகையப் பாவச் செயல்களுக்குச் சட்டரீதியான சிக்கல்கள் ஏதும் ஏற்படாதவண்ணம் பக்கப் பலமாகநின்று அனைத்தையும் சரிக்கட்டுவது நாட்டினைப் பாதுகாக்கவேண்டிய மகத்தான பொறுப்பினை வகிக்கும் காவல்துறையைச் சார்ந்த உயரதிகாரிகள். குற்றச் செயல்களுக்கு அடியோடு தீ வைக்கவேண்டிய இவர்களே குற்றங்களுக்குத் துணைநின்றால்? வகிக்கும் பதவிக்கு நேர்மையாக இருக்காமல் இவர்களே பாவச் செயல்களை மேற்கொண்டால்? இந்தச் சமூகம் எங்கனம் முன்னேற்றத்தைக் காணும்?
ஆம். நிகழ்ந்திடும் அத்துணை அநீதிகளையும் சமூகத்தின் பார்வையிலிருந்து பக்குவமாக மறைத்துவைக்கும் பணியினைத்தான் மார்த்தாண்டமும் கரிகாலனும் செய்துவருகிறார்கள்.
"மண்ணாங்கட்டி இப்பமட்டும் நல்லா பாயிண்ட் புடிச்சுப் பேசு. எல்லார்கிட்டயும் பல்ல இழிச்சுக்கிட்டுக் கைநீட்டிக் காசு வாங்கறதான? அதுக்கு நாணயமா இருக்கவேணாமா?
சடகோபன் செத்த ஒருநாள்ளையே அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் ஒன்னுவுடாம அந்தக் கருமம்பிடிச்சச் சமூக வலைத்தளத்தில் வெளியாயிருச்சு
ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் தொழில் செய்யுற ரெண்டு தரப்பினரையும் தாண்டி
உனக்குமட்டும்தான் அத்துபடி. அது சார்ந்த முக்கிய ஆதாரங்களும் உன்கிட்டதான் இருக்கு. அப்படின்னா நீதான சூதானமா இருந்திருக்கணும்? இப்ப சடகோபனோட அள்ளக் கைகளும் பயந்துபோய்த் தூக்குமாட்டித் தற்கொலை பண்ணிக்கிட்டானுங்க. அந்த கணேசனோட போன்லயிருந்துதான் ஏதோ ஒரு பிரைவேட் நம்பருக்குக் கொஞ்சம் தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கு. அது என்னன்னு கூடச் சரியாக் கண்டுபிடிக்கமுடியல.
அவனுங்களுக்குமே வேதநாயகத்தப் பத்தி எல்லாமே தெரியும். அப்படியிருக்க அந்த பிரைவேட் நம்பருக்கு என்னத்த அனுப்பித் தொலைச்சாங்களோ?நினக்க நினக்க ரத்த அழுத்தம் எகுறுது. எல்லாம் நடந்து முடியிறவரைக்கும் அப்படி எதடா நாயே கழட்டிகிட்டிருந்த? இப்படி ஒன்னுவொன்னா வெளியவந்தா எங்கப் பதவிப் பறிபோகாம ஒங்கப்பனா பாத்துக்குவான்?" என வெறிபிடித்ததுபோலக் கத்தினார் மார்த்தாண்டம்.
"எவன்மேலையோ இருக்கிற கோபத்த ஏன் சார் என்மேலக் காட்டுறீங்க? என்கிட்டக் கொடுக்கப்பட்ட எல்லா ஆதாரங்களும் இப்பவரைக்கும் ரொம்ப ரொம்ப பாதுகாப்பாத்தான் இருக்கு. என் பக்கத்துலயிஇருந்து தப்புநடக்கத் துளிகூட வாய்ப்பே இல்ல." என்றவன் முக்கிய ஒப்பந்தங்கள் சார்ந்தக் கோப்புகள் அனைத்தையும் மேசையின்மீது வைத்தான். அவற்றை ஆராய்ந்து அனைத்தும் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட கரிகாலன், "இனி இதையெல்லாம் வேறொரு இடத்துல மாத்திவைக்கிறதுதான் சரியா இருக்கும். யார்யார்க்கிட்ட என்னென்ன ஆதாரங்கள் இருக்கோ, எல்லாத்தையும் ஒரு பென்டிரைவ்ல மட்டும் காப்பிப் பண்ணிவச்சுக்கிட்டு,
ஒரிஜினல் பைல்ஸப் பத்திரப்படுத்தனும்." என்றான் அழுத்தமாக.
"அப்படின்னா சுந்தரலிங்கத்தையும் இப்பவே இங்க வரச்சொல்லி, அவங்கிட்ட இருக்கிற டாக்குமெண்ட்ஸய்யும் வாங்கிவைக்கணும். நம்ம எல்லாத்தையும்விட இதுசார்ந்த அதிக அளவிலான ஆதாரங்கள் அவங்கிட்டதான் இருக்கு. தப்பித் தவறி அதுமட்டும் எதிராளியோடக் கைக்குக் கிடைச்சிருச்சுனா அவ்வளவுதான் ஒண்ணுமே பண்ணமுடியாது." எனப் பதற்றத்துடன் கூறினார் வேதநாயகம்.
சிறிதுநேரத்திலேயே மார்த்தாண்டத்தின் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார் சுந்தரலிங்கம். அவரிடமிருந்தக் கோப்புகளையும் சரிபார்த்துத் தன்னுடன் வைத்துக்கொண்டான் கரிகாலன். ஒருவழியாக மேற்கொண்டு தாங்கள் எதிர்கொள்ளவேண்டியவற்றைக் குறித்துப் பேசிவிட்டு ஒவ்வொருவராகஅவ்விடத்தைவிட்டுக் கிளம்பினர்.
"அங்கிள் உங்ககிட்ட இருக்கிற பைல்சய்யும் குடுங்க. முதல்ல ஒவ்வொன்னையும் நிதானமா உக்காந்து பென்டிரைவில் காப்பிப் பண்ணனும். அடுத்து எல்லாத்தையும் சேர்த்துப் பாதுகாப்பா ஒரு சேப்டி லாக்கர்ல வைக்கணும். ஆனா இந்த ஊர்ல கிடையாது." என்றான் கரிகாலன். தன்னிடமிருந்தக் கோப்புகளை கரிகாலனின் கையில் ஒப்படைத்த மார்த்தாண்டம், கோப்புகளைப் பத்திரப்படுத்துவதற்கான ஆயத்தங்களைப் பார்க்கத் துவங்கினார். பலமணிநேரங்களைச் செலவழித்து,ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி விரலி ஒன்றில் பதிவிறக்கினான் கரிகாலன்.
அதற்கிடையில் மார்த்தாண்டமும் தடயங்களைத் தாங்கள் எப்படிப் பாதுகாக்கவேண்டும்
என்பதைக் குறித்தத் திட்டத்தைத் தீட்டியிருந்தார்.
"வேலுநாச்சி! கரிகாலனுக்கு ஸ்ட்ராங்கா ஒரு மசாலா டீயும், எனக்கு அந்த ஹெல்த் ட்ரிங்க்கும் உடனே வேணும். லேட் பண்ணாம ஆபீஸ் ரூமுக்குக் கொண்டுவா."என்று உரக்கக் கத்திவிட்டு, கரிகாலனுடன் வெளியே செல்லத் தயாரானார்..
அடுத்த பத்தாவது நிமிடம் மார்த்தாண்டம் கேட்டவற்றை அலுவலக அறைக்குக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்ற வேலுநாச்சியின் விழிகள்
கரிகாலனைச் சுட்டுப் பொசிக்கியது. அவரை உணர்ந்தவனாக ஒருவிதக் கோணல் சிரிப்புடன் அவனது தலை முடியை இழுத்துக்காட்டி இல்லை என்பதாகத் தலையசைத்தான்.
"உங்களால என் முடியைக் கூடப் பிடுங்கமுடியாது." என்ற செய்தியைத் தாங்கிநின்றது
கரிகாலனின் செய்கை.
"என்னதான் நீ ஒரு கேடுகெட்ட ஜென்மமா இருந்தாலும்
உனக்கு நான் நன்றி சொல்லக் கடமப்பட்டிருக்கேன் கரிகாலன்." என்று சொன்ன வேலுநாச்சி, பொருள்விளங்காப் புன்னகையொன்றை அவனை நோக்கிச் செலுத்திவிட்டுக் கீழே சென்றார். வேலுநாச்சியின் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளில் குழம்பிய கரிகாலன், மார்த்தாண்டம் தயாராகிவரவும் தனது குழப்பத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, ஆதாரங்களை எடுத்துக்கொண்டு மார்த்தாண்டத்துடன் புறப்பட்டான்.
"மதுரா சாப்பாடு தயாராயிருக்கு வந்து சாப்பிடு." என்று தனதுமகளின் அறைக் கதவைத் தட்டி அழைத்தார் வேலுநாச்சி. மார்த்தாண்டம் மற்றும் வேலுநாச்சியின் ஒரே மகள்தான் மதுரா. தற்போது அவள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறாள்.
"இல்லமா எனக்குப் பசிக்கல வேணும்னா அப்புறமா பாலமட்டும் குடிச்சுக்கிறேன்." என்று தாய்க்குப் பதில் தந்தாள் மதுரா.
"ஒருதடவ கதவத் திற என் ராஜாத்தி." எனக் கனிவுடன் கேட்ட வேலுநாச்சி, வேகமாகச் சென்று மகளுக்கு உணவை எடுத்துவந்தார். மதுராவுக்கும் அவளிருக்கும் நிலைக்குத் தாயின் கதகதப்புத் தேவையா இருந்தது. எனவே சென்று அறைக் கதவைத் திறந்தாள்.
கையில் உணவுத் தட்டுடன் நுழைந்தத் தன் அன்னையைப் பார்த்து லேசாக முறைத்தாள் மதுரா.
"என்ன முறைப்பு? இப்படிச் சாப்பிடாம இருந்தாமட்டும் உன்னால எல்லாத்தையும் சரிபண்ணிடமுடியுமா?"எனக் கேட்டுக்கொண்டே மகளைத் தன்னருகில் அமர்த்தி,
அவளது வாயில் உணவைத் திணித்தார் வேலுநாச்சி.
விழிகளில் தேங்கிய நீருடன் அன்னையை ஏறிட்டாள் மதுரா. அவளது விழிகளைத் துடைத்துவிட்ட வேலுநாச்சி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் மகளுக்கு உணவு ஊட்டுவதிலேயே கவனம் செலுத்தினார்.
"அம்மா நான் என்ன செஞ்சாலும் எங்கூட நிப்பீங்கதானே?அப்பாலாம் எனக்கு ஒரு பொருட்டேயில்ல. ஆனா உங்கள நினைச்சாதான் எனக்குக் கவலையா இருக்கு." என்று சொன்னவளின் விழிகளில் பெரும் பரிதவிப்பு.
"நீ எதப் பத்தியும் யோசிக்காதடா தங்கம். உனக்கு என்ன தோணுதோ அதச் செய். அம்மா எப்பவுமே உன் கூடத்தான் இருப்பேன். எக்காரணத்தக் கொண்டும் கரிகாலன் கூடமட்டும் உனக்குக் கல்யாணம் நடந்துரக் கூடாதுடா. அத எப்படியாவது தடுத்து நிறுத்திடு." என்றார் உறுதியாக.
"நடக்காதுமா இவங்க நினைக்கிற எதுவுமே நடக்காது."என ஒருவிதத் தீவிரத்துடன் கூறியவள், அப்படியே அன்னையின் மடியில் தலை சாய்த்தாள். வேலுநாச்சிக்குத்தான் மனமே சரியில்லை.
யாரிடமும் எதைப் பற்றியும் கலந்துபேசாமல் திடீரென்று கரிகாலனுக்கும் மதுராவுக்கும்தான் திருமணம் செய்துவைக்கப் போவதாக அறிவித்தார் மார்த்தாண்டம்.
அவரை எதிர்த்துப் பேசிய வேலுநாச்சிக்கு அடி விழுந்தது. அதனாலேயே மதுரா வீட்டிற்கு வரவைக்கப்பட்டிருந்தாள்.
சிறுவயதிலிருந்தே மதுராவுக்குத் தந்தையை அதிகம் பிடிக்காது. வளரவளர மார்த்தாண்டத்தின் குணங்கெட்டப் பண்பை வெறுத்தாள். அதற்காகவே தாயைப் பிரிவதில் மனம் சுணங்கியபோதும், விடுதியிலேயே தங்கிப் படித்தாள். இப்போதுகூட
வேலுநாச்சியின் தாய்வீடு மதுராவின் வசிப்பிடமாகிப்போனது. ஏற்கனவே கரிகாலனைக் கண்டால் மதுராவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அது நன்கு தெரிந்தும் ஏன் இந்த அவசரத் திருமணம்? அதுவும் இன்னும் இரண்டே நாட்களில்? ஒன்றும் பிடிபடவில்லை வேலுநாச்சிக்கு. மகள் எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்திவிடுவாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் தன் மடியில் தலைவைத்துப் படுத்திருந்த மகளை ஆதுரமாகப் பார்த்தார் வேலுநாச்சி.
அதேசமயம் மார்த்தாண்டத்தின் வீட்டிலிருந்து புறப்பட்ட வாஞ்சிநாதன் செல்லும் வழியிலேயே மர்மக் கும்பலால் கடத்தப்பட்டான். என்ன ஏதென்று உணர்வதற்குள் அவனது உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. இருந்தும் மசியவில்லை வாஞ்சிநாதன். அந்தக் கயவர்களின்மீதான தனது விசுவாசத்தை நிலைநாட்ட முயன்றான். "ம் எவ்வளவு நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கும் என்று நானும் பார்க்கிறேன்."என்று சொல்லி, அறையை அதிரும்வகையில் சத்தமாகச் சிரித்தது அந்த ஆண் குரல்.
வாஞ்சிநாதனின் செவிகளில் விழுந்த வார்த்தைகளுக்குச் சொந்தமான அந்தக் குரல் அவனது மண்டையைப் போட்டுக் குடைந்தது.
"இல்ல; நீங்க என்ன பண்ணாலும் நான் வாயத் திறக்கமாட்டேன்."எனக் கூறினான் வாஞ்சிநாதன் பல்லைக் கடித்துக் கொண்டு.
"ஓஹோ" என இழுத்தது அந்தக் குரல். சற்றுநேரத்திலேயே
"வாஞ்சிநாதனின் கூக்குரல் அந்தக் கட்டிடத்தையே உலுக்கியது. அந்த உருவம்
அறையின் மூலையிலிருந்தச் சிறியக் குச்சியொன்றில் மெல்லியத் துணி சுற்றி, அதை மண்ணெண்ணையில் தொய்த்தெடுத்தது. "நீ அப்பவே வாயைத் திறந்து பேசியிருந்தா இத்தனை அவசரப்பட்டிருக்க மாட்டன்?"என்றதோடு "உனக்கெல்லாம் இது தேவதாண்டா. ஈவு இரக்கமே இல்லாம ஒவ்வொரு உயிரையும் துடிக்கவச்சுச் சாகடிக்கத் தரகர் வேல பார்த்திருக்க.எதப் பத்தியும் கவலப்படாம பணத்தமட்டும் நாக்கத் தொங்கப் போட்டுட்டு வாங்குனல்ல. இப்ப இதையும் சந்தோஷமா அனுபவி." என்று கர்ஜித்துவிட்டு
நெருப்பைப் பற்றவைத்து
வாஞ்சிநாதனின் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுட்டுப் பொசுக்கியது. ஒருகட்டத்தில் வலிதாங்காமல் நடந்தவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் ஒப்பித்திருந்தான் வாஞ்சிநாதன். சுற்றியிருந்த அடியாட்களால் வாஞ்சிநாதனின் வாக்குமூலம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டது.
தனக்கு வழங்கப்படும் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் துடித்துத் துவண்டு மரணத்தை யாசிக்கத் துவங்கினான் வாஞ்சிநாதன். அதேநொடியில்
துப்பாக்கித் தோட்டாவொன்று அவனது இதயத்தைப் பதம் பார்த்தது.. குருதிவெள்ளத்தில் தன் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த வாஞ்சிநாதன், தன்னெதிரே
புன்னகையுடன் நின்றிருந்த உருவத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே "பிறைசூடன்;" என முகமூடியை அகற்றிவிட்டு நின்றவனின் பெயரைத் திக்கித் திணறி உச்சரித்தவாறு உயிரைவிட்டான் வாஞ்சிநாதன்….