தேன் நாட்டு பைங்கிளி - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,450
113
Germany
அத்தியாயம்: 5

“What is your qualification?" என்றவனின் குரல் உயரவில்லை. ஆனால் அதிலிருந்த அதீத அழுத்தத்தையும், அடக்கப்பட்ட கோபத்தையும் வானதியால் நன்கு உணரமுடிந்தது.

அத்தோடு அலுவலக ஊழியர் மத்தியில் நிற்க வைத்து,‌ குற்றவாளியிடம் விசாரிப்பதுபோல் கேள்விக்கணைகளைத் தொடுப்பது அவமானமாக இருந்தது வானதிக்கு.

எண் வரிசையில் ஐந்திற்கும் இரண்டிற்கும், ஒன்றுக்கும் ஏழுக்கும் வித்தியாசம் தெரியாது, மாற்றி அழுத்திவிட்டாள் தட்டச்சுப் பொத்தானை.

‘எழுதித் தந்தவன்ர கையெழுத்து அப்படித்தான் இருந்தது. ஒன்றுக்கும் ஏழுக்கும் வித்தியாசம் காண எலாத மாதிரி.’

எண்ணிலும் எழுத்திலும் வேறு வேறான அமௌண்ட் இடம்பெற்றதால் சுங்கத்துறை அதை நிறுத்திவைத்தது. அது நிறுவனத்தின் மீதிருக்கும் நன்மதிப்பிற்கும் கரும்புள்ளியாக அமைந்தது.

அதனால் அவளின் சிறு கவனக்குறைவை Executive Manager ஆனா அருள்மொழிவர்மன் கேள்விகேட்டான். சரக்குகளைச் சரியான நேரத்தில் எடுத்து, வினியோகிக்கும் மேலாண்மை பணி அவனுடையது.

"Look at me." என்று தாமைரை மொட்டாய் கவிழ்ந்து கிடந்தவளின் முகத்தை நிமிர வைத்தவன்,

“உனக்கு நம்பர்ஸ்ல ப்ராப்ளம் இருக்குன்னா மறுபடியும் படிக்க போ. இல்லன்னு ஐ டாக்டரப் பாரு. வேலைக்கு வந்திட்டு தப்பு தப்பா செய்யக்கூடாது.‌" என்றவனுக்குப் பதிலாக,

"வர்மா, இது வானதி மிஸ்டேக் இல்ல. இட்ஸ் மை..." என ஜெய் வாய்த் திறக்கும் போதே,

"நீங்க தான் வானதியா?" என புருவம் உயர்த்த, ஜெய்யின் தலை தானா அசைந்தது.

"இல்லேல்ல. அப்ப அமைதியா இருங்க மிஸ்டர்.ஜெய்சூர்யா. உங்க கிட்டயும் கண்டிப்பா வருவேன். அப்ப வாயத்திறங்க." என்றவன், வானதியைப் பார்க்க,

"சாரி... இனி பிழை இல்லாமல் கவனமாச் செய்றன். பிராமிஸ்."

"குட்... மறுபடியும் இதே தப்பு ரிப்பீட் ஆனா! அதுக்கு உண்டான இழப்ப நீங்க தான் குடுக்கவேண்டி இருக்கும். இது இவங்களுக்கு மட்டுமில்ல‌. உங்க எல்லாருக்கும் தான். நீங்க விடுற சின்ன மிஸ்டேக் குடுக்குற பாதிப்பு ரொம்ப பெருசு. சோ, உங்க மிஸ்டேக்கால நிறுவனம் சந்திக்கிற இழப்புக்கு, நீங்க மட்டும்தான் பொறுப்பு. உங்க பொறுப்பை உணர்ந்து வேலைய பாருங்க." என்று அனைவரையும் எச்சரித்து விட்டுசென்றான் வர்மா.

அதெல்லாம் நடந்து மாதங்கள் பல உருண்டோடி விட்டாலும், பயிற்சியாளருக்கான கேபினை வந்துசேரும் ஒவ்வொரு முறையும் நினைவிற்கு வந்து நிற்கும் வானதிக்கு.

தன்னையே அனைவரும் பார்த்து கேலி செய்வதுபோல் ஒரு மாய பின்பம் உண்டாகி அவளைக் கூனி குறுக வைக்கும்.

"வானு, நடந்து முடிஞ்ச எதையும் நினைக்காத. தப்பு நடந்திடுச்சி. திட்டிட்டாரு. பிரச்சனை முடிஞ்சி பல மாசம் ஆச்சி." என்றாள் மிருதுளா.

தரைத் தளத்தில் குடோன், முதல் தளத்தில் வாடிக்கையாளர் பிரிவு, மூன்றாம் தளத்தில் அலுவலகம். மற்றவற்றில் வேறு நிறுவனங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. ஏழாவது மாடியில் அனைவருக்கும் பொதுவான கேண்டின்.

சித்ராவைத் தவிர்த்து மற்ற இருவருக்கும் மூன்றாவது தளத்தில் வேலை.

வானதியும் மிருதுளாவும் நடக்க, இருவருடன் சித்ராவும் மின் தூக்கி இருக்கும் இடத்தை நோக்கி பேசியபடி நடந்துவந்தாள்.

வானதியின் அமைதியைக் கண்ட மிருதுளா, "அதை மறந்திடு வானு. அதையே நினைச்சிட்டு இருக்காத. தப்பு எல்லாரும் பண்றது தான்.”

“என்ர பிழைக்காக கவல பட இல்ல”

“பின்ன!”

“என்னக் கறித்துக் கொட்டிவன பார்க்கணுமே எண்டு வருந்துறன். இவ்வளவு காலம் என்ர பார்வையில் அவன் சிக்கல, வேறு வேறு தளம் எண்டதால். இனி நான் அவனுக்குக் கீழ வேலை செய்யணும். ஒவ்வொரு நாளும் முள் மேல் நடக்கிறா மாதிரி இருக்க போகுது”

மிருதுளா, “நான் கேள்விபட்ட வரை வர்மா சார் ரொம்ப கடுமையானவர் கிடையாது. எல்லார் கிட்டயும் சிரிச்சி சிரிச்சி பேசுற ஜாலி டயிப் இல்லன்னாலும் good heart person. Rational thinker. வேலைன்னு வரும் போது உறவுக்கும் உணர்வுக்கும் முக்கியத்துவம் தராத ஆளு." என்க, அதிர்ந்து திரும்பினர் மற்ற இருவரும்.

'யாரு அந்த மூஞ்சூறு காட்டான் குட் ஹார்ட் பர்ஷனா!' என்று கோபம் வரப்பெற்ற வானதி,

"உன்ட ஐ சைட்டில் கோளாறு எண்டு நினைக்கிறன்."

"கண்ணுல மட்டுமில்ல மூளைலயும் பிரச்சனை இருக்கு." என்றாள் சித்ரா.

"ஓம்... நீ விசர் தான். அந்த மூஞ்சூறை நீ நல்லவன் எண்டு கதைக்கிறாயே! அண்டைக்கு அவ்வளவு ஆக்களுக்கு முன்னுக்கு என்னக் கண்ட மாதிரி ஏசின காட்டானுக்குப் பாராட்டு பத்திரம் வாசிக்கிறாய். அவன் ரீசப்சன்ல இருக்குற மகாவைப் புடிச்சி கத்தினதக் கண்ட தானே நீ. ரெண்டு வாரத்துக்கு முதல் நம்ட கோ-ட்ரெய்னி சமரை, மாட்டைப் போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சித் தூக்கிப் போட்டான். இரக்கமில்லாத அரக்கன். ஜெய் சாருக்கு இப்பவரை ப்ரமோசன் கிடைக்காம இருக்க அவன் தான் ரீசன்.

அவனுக்கு, தான் தான் இந்த நிர்வாகத்தைத் தூக்கிச் சுமக்குறதா நினைப்பு. ஓனர் எண்ட மாயையோட திரியுறான். மத்த ஆக்கள மதிச்சுப் பழக்கம் இல்ல. திமிர், ஆகங்காரம் எல்லாம் இருக்கு. கூடுதலுக்கும் கூடுதலாவே இருக்கு. மூஞ்சூறு காட்டான்..." என்று கண்டபடி வர்மாவைத் திட்டிக்கொண்டே பாதையை நிரப்பி நிற்க,

"Excuse me..." என்ற குரல் மூவரையும் ஒரு சேர திரும்பி பார்க்கவைத்தது.

அருள்மொழிவர்மன் தான் நின்றுகொண்டிருந்தான்.

அரக்கு நிற சட்டை மற்றும் சந்தன நிற கால் சட்டை வர்மாவிற்குப் பாந்தமாகப் பொருந்தி, வசீகரனாகக் காட்டியது. உதட்டில் சிரிப்பில்லை. மாறாக, 'சீக்கிரம் வழிய விட்டு நில்லுங்க.' என்ற அவசரமும் அலட்சியமும் இருந்தது.

'ஐயோ! நாம பேசினத கேட்டிருப்பானோ! கேட்டிருந்தா என்னாகும்? ஜெய் சார் மாதிரி நமக்கும் ப்ரமோஷனே இல்லாம பண்ணிடுவானோ!’ என்று சித்ரா நொந்துகொண்டு நிற்க, மிருதுளாவிற்கும், வானதி திட்டியதைக் கேட்டிருப்பானோ! என்ற சந்தேகம் தொற்றிக்கொண்டது.

மேலே வானதி சொன்ன காரணங்கள், பயிற்சி நிலையில் இருந்த சித்ரா போன்ற சிலருக்கு, வர்மாவிடம் வாலாட்டக்கூடாது என்ற ஞானத்தைத் தந்திருந்தது.

சமர், அங்கு பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய காரணத்தால் துரத்தி விடப்பட்டவன். வரவேற்பாளர் மகாலட்சுமி வாடிக்கையாளர்களின் விவரங்களை மாற்று நிறுவனத்திற்கு விலை பேசியதால் தண்டிக்கப்பட்டவள். இதையெல்லாம் அறிந்த மிருதுளா போன்ற சிலருக்கு, வர்மாவின் மீது மரியாதை.

மற்ற இருவரும் வர்மாவைக் கண்ட வேகத்தில் பாதையைவிட்டு நகர்ந்து, இடைவெளி கொடுக்க, வானதி மட்டும் நகராது இரு கரத்தையும் கட்டிக்கொண்டு வர்மாவை நேருக்கு நேராக ஏறிட்டபடி இருந்தாள். அவளுக்கு அவன் ‌மீது மரியாதை, பயம் என எதுவும் இல்லை.

'இவ ஏன் டி உறைஞ்சி போய் நிக்கிறா?' எனச் சித்ரா மிருதுளாவைப் பார்த்து கண்காட்ட, வானதியைப் பிடித்திழுத்தாள். ஆனாலும் வானதி முறைப்பைக் கைவிடாது வர்மாவின் முதுகையே வெறித்தபடி நின்றாள்.

இங்கு ஒருத்தி தன்னை உக்கிரப் பார்வை பார்க்கிறாள் என்பதே தெரியாது, வர்மா லிஃப்ட்டிற்குள் தன் அலைபேசியை நோண்டியபடி ஏறிக்கொண்டான்.

"நீ எதுவும் சொன்னீயா?" என்று வர்மாவின் புருவங்களை முடிச்சிட வைத்தான் உடன் வந்த ஆகாஷ்.

"என்ன?"

"மறுபடியும் திட்டினியான்னு கேட்டேன்?"

"யாரை? என்ன சொல்லணும்." நிமிராது கேட்டான்.

"எதுவும் சொல்லலயா?"

"ம்ச்... என்ன டா வேணும் உனக்கு?"

"இல்ல மச்சான் அந்தப் பொண்ணு..."

"எந்தப் பொண்ணு?"

"அதான் கரிகாலன் தங்கச்சி..." என்றதும் அதுவரை திரையில் விளையாடிக் கொண்டிருந்த விரல்கள் ஒரு நொடி நின்று பின் மீண்டும் அசையத்தொடங்கியது.

"உன்னை முறைச்சிட்டே நிக்கிறா. அன்னைக்கி மாதிரி இன்னைக்கும் திட்டினியான்னு கேக்குறேன்?"

தோழிகள் மூவரும் முணுமுணுவெனப் பேசிக்கொண்டதால் வர்மாவைத் தொடர்ந்து வந்த ஆகாஷின் காதில் எதுவும் விழவில்லை. ஆனால் வானதியில் தீப்பார்வைத் தெரியாமல் எப்படிப்போகும். ஒருவேளை வர்மா திட்டியிருப்பானோ என்று சந்தேகித்து கேட்டான்.

"ஏன் உன்னை உன் முறைப் பொண்ணு முறைக்கிறான்னு தெரியுமா?" என்று கேட்க, சட்டென தலை தூக்கியவன்,

"அடுத்த வாரம் ‘ஸ்பைசோ கார்கோ’ வருது. அதுல ஏத்த வேண்டிய சரக்கு தயாரா இருக்கான்னு ஜெய்ட்ட கண்பார்ம் பண்ணிக்க. சொதப்பிடக் கூடாது." என்று வேலைகளை அடுக்கினான்.

அவனை ஏற இறங்கப்பார்த்த ஆகாஷ், இவனிடம் இருந்து எந்தப் பதிலயும் வாங்கமுடியாது என்பதால் வழக்கம்போல் அமைதியாகிப்போனான்.

சரியாக லிஃப்ட்டின் கதவுகள் மூடும் சமயம் வர்மாவின் பார்வை வெளியே சென்றது. அது வானதியின் மீது பட்டதா என்றால் அவனுக்கு மட்டுமே தெரியும்.

மின் தூக்கி கீழே வந்து, ஏறி, மூன்றாம் எண் பொத்தானை அழுத்தி, அது மூடும்வரை, சித்ரா வானதிக்கு அறிவுரைகள் பல சொல்லிக்கொண்டு நின்றாள்.

"சப்பா... இடி இடிச்சி ஓஞ்ச மாதிரி இருக்கு. எப்படி இவளால பேசிட்டே இருக்க முடியுதோ!" என்ற மிருதுளா, வழக்கத்திற்கும் மாறாக அமைதியாக இருந்த வானதியை ஓரக்கண்ணால் பார்த்தாள்‌.

வாய் ஓயாது சித்ராவைப் போல் பேசிக்கொண்டே இருப்பதில்லை என்றாலும் வானதி அமைதியான பெண் கிடையாது. அதிலும் அவள் புருவங்கள் நெளிந்தபடி இருப்பது அவள் சிந்தனையில் இருக்கிறாள் என்றது.

"உனக்கும் வர்மா சாருக்கும் இடைல..."

"ஒண்டுமில்லை." என்றாள் வெடுக்கென.

"அப்படியா!!" என ஆச்சரியம்போல் கேட்டவள்,

"அப்றம் ஏன் அவரப் பாக்குற ஒவ்வொரு டயமும் உன்னோட முகம் ஒவ்வொரு மாதிரி மாறுது. அத்தை பையன்ங்கிறதுனால…" எனக் கேலியாக பேசியவள் வாக்கியத்தை முடிக்கும் முன்,

"அத்தை மகனா! அப்படி எண்டு ஆர் சொன்ன? என்ர மாமிகளுக்குப் பெடியன்களே இல்ல. மச்சாள் மட்டும் தான். அதோட மச்சான்கள் எங்களுக்கு அண்ணனுக்குச் சமம். கலியாணம் கட்டிக்கொள்ள வேணும் எண்ட எண்ணம் வராது."

"ஓ... அப்ப வர்மா சார் உனக்கு அண்ணன் முறையா!."

"அவனெல்லாம் என்ர உறவே கிடையாது என்றன். நீ அதுக்கு பெயர் வைக்கிறாய்."

"ஓகே... ப்ளெட் ரிலேட்டிவ் இல்லை. தத்து ரிலேட்டிவ்..."

"அப்படியும் இல்ல. எப்ப சொத்தக் கையில தந்து விரட்டி விட்டாங்களோ! அண்டே தத்து உறவும் முடிவுக்கு வந்திட்டு. அஞ்சி வருஷம் கெதியா ஓடிட்டு. இனி அவனை என்ர ரிலேட்டிவ் எண்டு ஒரு காலமும் சொல்லாத. அவன் யாரோ!" என்றபோது அவர்கள் இறங்கவேண்டிய தளம் வந்திருந்தது.

முதல் ஆளாக வானதி இறங்கிச்சென்றாள்.

'எதுவும் இல்லன்னு சொல்றா! ஆனா தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடுற இவளோட ஆக்டிவிட்டிய பாத்தா ஏதோ இருக்குன்னு தோணுது!' என்று தோளைக் குளுக்கியபடி சென்றாள்.

வானதி, வலப்பக்கம் சென்றாள் என்றால், மிருதுளா இடப்பக்கம்.

எங்கே யாரைப் பார்ப்பது என்று சற்று தயங்கிய நடையுடன் வானதி நடக்க,

"வானதி?" என்றாள் மமதி.

"ஓம்… நான் தான் அது."

"இப்பத்தான் ஜானகி மேம் சொன்னாங்க. ஐ ஆம் மமதி. உன்னோட டீம் லீடர்.” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவள்,

"Guys this is Vanathi. இனி நம்ம கூட தான் வொர்க் பண்ணப் போறாங்க." என்றாள் பெருங்குரலில்.

வானதிக்கென ஒதுக்கிய தனி கியூபிக்ளுக்கு அழைத்து சென்று, அவளின் பணிகளை விலக்கி கணினியின் முன் அமர்த்தினாள்.

“ஹாய்…” “ஹலோ…” என்று சக ஊழியர்கள் ஒவ்வொருவராக அறிமுகமாக, வானதி இதழ்களை இழுத்துப்பிடித்தாள்.

"உன்னோட நம்பர் சொல்லு வானதி. எங்க வாட்சப் க்ரூப்ல அட் பண்ணி விடுறேன்." எனத் தோழமையுடன் மமதி அளவலாவியது வானதிக்குச் சௌகரியத்தைத் தந்தது.

மாலை வரை வானதியின் கண்களுக்கு வர்மா தென்படவே இல்லை. அவளுக்கும் அவனைத் தேடும் எண்ணமும் இல்லை போலும். அவனை மறந்து போய் தன் சகாக்களுடன் லயித்திருந்தாள்.

துறைமுகம், சேமிப்பு கிடங்கு என மாற்றி மாற்றி அலைவதால் அவனின் கேபினில் அவனைக் காண்பது அரிது தான்.

சரியாகப் பணி முடிந்து புறப்படும் சமயத்தில், கையில் வைத்திருந்த கோப்புகளை மமதியிடம் ஒப்படைக்கச் செல்ல, அவள் வர்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு சமைந்து நின்றாள்.

கவனத்தை மமதியின் பேச்சில் வைத்துக்கொண்டு, ஒரு காலை நிலத்தில் ஊன்றி மற்றொரு காலை சுவரில் வைத்து, கைக் கட்டி நின்றுகொண்டிருந்தான். மெல்ல அசைந்துகொண்டிருந்த தாடை, இதழ்களுக்குள் எதையோ மென்றுகொண்டிருக்கிறான் என்றது.

மமதி எதுவோ சொல்ல, தலையசைத்தபடியே கட்டியிருந்த கரத்தை விரிந்து தோள்களைக் குளுக்கியவன், பேண்ட் பாக்கெட்டிற்குள் பதித்துக்கொள்ள, மமதி சிரித்தாள். சிரிக்காது இரும்பாய் நின்றவனை ரசிக்காது வானதியால் இருக்கவே முடியவில்லை.

அழகன் என்று நின்று ரசிக்கத்தோன்றும் தோற்றம். அதைவிட ஆடவனின் கம்பீரமான குரலும், பேச்சும், அவளை அவன் பால் ஈர்க்க வைக்கும் ஆயுதம்.

ஆனால் அவன் அவளிடம் எத்தனை வார்த்தைகள் பேசியிருப்பான் என்றால் குறைவு தான். ஆனாலும் அவனின் குரல் கேட்கும் போதெல்லாம் அஸ்திரம் தாக்கப்பட்ட உணர்வில் நெஞ்சுக்கூடு சில்லென்கும்.

இப்பொழுதும் அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டவள், அவனையே பார்த்தபடி நடந்து வர,

“ஹே வானு… கம்.” என்று அழைத்த மமதி, வானதியை அறிமுகம் செய்துவைத்தாள் வர்மாவிற்கு.

‘நீ தான் வானதியா?’ என்பது போல் பார்த்து வைத்தான் வர்மா. அது வானதிக்குத்தான் அதிர்ச்சியாக இருந்தது.

‘நான் ஆர் எண்டு இவனுக்கும் தெரியும் தானே. பின்ன ஏன் தெரியாதுபோல் நடிக்கிறான்? மூஞ்சூறு காட்டான். அந்நியன் படத்திட வாரது மாதிரி வினோத நோயா இருக்கும்.’ என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே வர்மா வானதியை நோக்கி சிநேகமாகக் கரம் நீட்டியிருந்தான்.

வர்மாவின் நடவடிக்கைகளில் இருந்தே தெரிந்துகொள்ளலாம் அவனுக்கு வானதியைத் திட்டியது எதுவும் நினைவில் இல்லை என்று.

கோபத்தில் திட்டினால் கூட, அது அந்த நேர உணர்வு என்று உடனே மறந்துபோவான்.

ஆனால் வானதி...

“Nice to meet you Sir.” என்று வர்மாவின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் குளுக்கினாள்.

பற்றும் முன் தன் ஒற்றைக் கல் வைத்த வெள்ளி மோதிரத்தின் கூர்மையானப் பகுதியை, உள்ளங்கையைப் பார்த்தவாறு திரும்பி வைத்துக்கொண்டாள்.

அவள் உள்ளம் குளிரும் வண்ணம், அது வர்மாவின் விரல் இடுக்கைப் பதம் பார்த்து சிறு துளி ரத்தத்தைத் தலைகாட்ட வைத்தது.

“ஸ்… ஆ…” என்று அவன் கையை உதற,

“சாரி சார். நான் கவனிக்கல்ல. குத்திட்டா… வலிக்கிதா… வெரி சாரி.” என்று வருத்தக் குரல் கொடுத்தாலும் உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது உள்ளம்.

‘என்னையா ஆர் எண்டு தெரியாத மாதிரி நடிக்கிறாய்!!’ என்று உதட்டுக்குள் புன்னகையைப் பூட்டிவிட்டு ஏதும் அறியாதது போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

அது தான் வானதி.

அவளுக்கு மறதி என்பதே கிடையாது. பழி வாங்கும் குணமும் உண்டு. எதையும் அத்தனை எளிதாக கடந்துசென்று விடமாட்டாள். அதிலும் தன்னைக் கண்ணீர் வடிக்க வைத்துவிட்டால்… சொல்லவே வேண்டாம். உள்ளுக்குள் பொருமிக் கொண்டே இருப்பாள். தக்க சமயத்தில் அதை வெளிக்காட்டத் தயங்கவும் மாட்டாள்.

அன்று அவன் திட்டியதில் தன் பக்கத் தவறும் உள்ளதால் பொறுமையாக இருந்தவள், இன்று தன்னைத் தெரியாததுபோல் காட்டிய வர்மாவிற்குத் தண்டனையாகக் கீறல் போட்டுவிட்டுள்ளாள்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
294
265
63
India
அடிப்பாவி இப்படியா செய்வது? வானதி இது சரியில்லை அப்புறம் எங்க ஹீரோ ஆரம்பித்தால் நீ தாங்க மாட்டாய்
 
  • Haha
Reactions: STN - 48