அத்தியாயம் 8
“அனன்யா… ஐ லவ் யூ” என்றான் அஸ்வின்.
“நோ…” என்றாள் அனன்யா.
“நீ என்னை காதலிக்க ஆரம்பித்து பல நாள் ஆகுது டியர்.” என்றான்.
“ இல்ல… எனக்கானவரை எங்க அம்மா பார்த்துட்டாங்க.” என்றாள்.
அலாரம் சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து உட்கார்ந்தாள் அனன்யா.
'கனவா… அப்படியே நிஜம் போல இருந்தது. விளையாட்டுக்கு கூட காதலை சுவாதியிடம் சொல்ல முடியாது என்று சொன்னவன், நேற்று நீ அங்க வேலை பார்க்கிறீயான்னு கேட்டதுக்கே லவ் அது இதுன்னு பேசினானே. இப்ப கனவுல வேற வர்றேன். இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். இனி அஸ்வின் கிட்ட ரொம்ப கவனமா இருக்கணும் போலயே.’ என்று நினைத்துக் கொண்டு தயாரானாள் அனன்யா.
டே - 5
காலை பொழுதை கடற்கரையில் போக்குவதே இனிமையாக இருக்கும்.
பேருக்கு ஏற்றது போல் இந்த கடற்கரை மண் கருப்பாக இருக்கும். இங்கு மற்ற பீச்சை ஒப்பிடும் போது கூட்டம் குறைவாக தான் இருக்கும்.
கடல் அலையில் விளையாடிவிட்டு வந்து உட்கார்ந்தனர் நண்பர்கள் பட்டாளம்.
“ஏதாவது விளையாடலாமா?” என்றான் தீபக்.
“கண்டிப்பா… இதோ பாருங்க” என்று அனன்யா காட்டிய இடத்தில் நெட், வாலி பால், பாட்மின்டன், எல்லாம் இருந்தது.
அதை பார்த்ததும், வேகமாக அங்கு சென்றனர். ரோஜா பாட்மின்டன் எடுத்துக் கொண்டாள்.
மற்ற எட்டு பேரும் இரண்டு டீமாக பிரிந்துக் கொண்டனர். அஸ்வின் தியா, தேவ் அருகில் உட்கார்ந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்தான்.
ஹரிஷ் ஒரு டீம், அனன்யா ஒரு டீமாக விளையாட ஆரம்பித்தனர்.
அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு நன்றாக விளையாடினர்.
வருவோர் போவோர் கூட நின்று இவர்களின் விளையாட்டை பார்த்துவிட்டே சென்றனர்.
கடைசியாக ஒரு பாலை மிஸ் செய்தனர் ஹரிஷின் டீம்.
அனன்யா டீம் மகிழ்ச்சியில் கத்தினர். “கனி அக்கா… ரொம்ப சூப்பரா விளையாடுனீங்க.” எனறாள் அனன்யா.
“பின்ன டிஸ்ட்ரிக்ட் லெவல் பிளேயர் இல்லையா' என்றான் ஜெய்.
“சான்ஸ்ஸே இல்லை. நான் இதை உங்களிடம் எதிர்ப்பார்க்கலை கா” என்றாள் சுவாதி.
“ரொம்ப நாள் கழித்து இன்னைக்கு தான் விளையாடுறேன். நானுமே நல்லா விளையாடுவேன்னு எதிர்ப்பார்க்கலை.
வாழ்க்கையே காலேஜிற்கு பிறகு மாறி போயிடும். கல்யாணம், குழந்தைனு வாழ்க்கையில் ஓட ஆரம்பித்ததும், விளையாட ஏது நேரம்? இதுமாதிரி டூர் வர இடத்தில் விளையாடுறது மனசுக்கு நிறைவா இருக்கு.” என்றாள் கனி.
“கொஞ்சம் பிரேக் எடுத்துட்டு வந்து இன்னொரு ஆட்டம் விளையாடலாம்.” என்றான் ஹரிஷ்.
ராஜேஷிற்கு அவ்வளவாக பாட்மின்டன் விளையாட வரவில்லை. இருந்தும் அவளோடு விளையாடி கொண்டிருந்தான்.
அனன்யாவின் அருகில் வந்த அஸ்வின், “எனக்கு ஒரு முக்கியமான வேலை முடிக்க வேண்டி இருக்கு. நான்
இன்னைக்கு போயிட்டு, நாளைக்கு வந்துடுவேன்.” என்றான்.
“நோ ப்ராப்ளம் அஸ்வின். டேக் யுவர் ஓன் டைம்” என்றாள் அனன்யா.
'அதானே பார்த்தேன். என்னால் தான் இவளை விட்டு போக முடியலை.ஹூம் ஆனா இவ இப்படி சந்தோஷமாக போயிட்டு வா என்று சொல்கிறாளே.’ என்று நினைத்தான் அஸ்வின்.
“நீங்க நாளைக்கே வரணும்னு எந்த அவசியமும் இல்லை. பொறுமையா உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க.” என்று ஹரிஷ் வேறு வெறுப்பேற்றும்.
அவனை முறைத்தவன், பதில் சொல்லாது வேகமாக நடந்து சென்றுவிட்டான் அஸ்வின்.
வேன் டிரைவர் ஃபோனில் அழைக்க. “ஹரிஷ்… டிரைவர் அண்ணா ஏதோ பேசணும்னு வர சொல்றார். நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்” என்றாள் அனன்யா.
“நான் உன்னோடு வரவா பியூட்டி.”
“இல்லை நான் பார்த்துக்குறேன்.” என்றவள் சென்றுவிட்டாள்.
அவள் பார்க்கிங் செல்ல. அங்கு அஸ்வின் பிஎம்டபிள்யூ காரில் ஏறிக் கொண்டிருந்தான்.
'இவன் என்ன டூருக்கு வந்த ஊரில் இவ்வளவு விலை உயர்ந்த காரில் போய் கொண்டிருக்கிறான்.
இவனை நாம் ரொம்ப சாதாரணமா நினைச்சுட்டோமோ? இவன் ரொம்ப பெரிய இடம் போல. நான் இன்று காலை எடுத்த முடிவு சரி தான்’ என்று நினைத்துக் கொண்டே வேனை தேடி சென்றாள்.
அவரோ பார்க்கிங்கில் வேனை நிறுத்துவதில் பிரச்சினை, பணம் அதிகமாக கேட்பதாக சொல்ல. அதை சரி செய்துவிட்டு, மீண்டும் பீச்சிற்கு சென்றாள் அனன்யா.
எல்லோரும் விளையாட தயாராக இருக்க. இவளும் அவர்களோடு விளையாட ஆரம்பித்தாள். இந்த முறை கனியை தன்னோடு அணியில் இணைத்துக் கொண்டான் ஹரிஷ்.
இந்த முறையும் ஆட்டம் நீண்டுக் கொண்டே சென்றது. ரோஜா வேண்டும் என்றே பந்து வந்த இடத்தில் வந்து நிற்க. அனன்யாவால் பந்தை அடிக்க முடியாமல் போனது.
“ஆன்ட்டி …” என்று ஈஸ்வர் சண்டைக்கு போக தயாராக.
அவனை தடுத்த அனன்யா, “விடுங்க ஈஸ்வர். இது சாதாரண விளையாட்டு தான்.” என்றாள்.
“அடுத்து அக்வாரியம் போகலாம். இங்கிருந்து பக்கம்.” என்றாள்.
நிறைய வகையான மீன்கள் இருந்தது. இந்த இடம் தியாவுக்கும் தேவ்விற்கு பிடித்து போனது.
மேல் மாடியில் இருந்து பார்க்கும் போது அரபியன் சீயும் வர்கலா கிளிஃப்பும் அழகாக தெரிந்தது. ஒரு மணி நேரம் அக்வாரியத்தில் இருந்துவிட்டு ஹோட்டல் சென்றனர்.
“ஈவினிங் லைட் ஹவுஸ் போகலாம். சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.” என்ற அனன்யா வேன் டிரைவரிடம் பேசிவிட்டு லிஃப்டில் ஏற.
லிஃப்டில் இருந்த ராஜேஷை பார்த்து, தடுமாறி இறங்கி விடலாமா என்று நினைத்த அனன்யா பின் லிஃப்ட் பட்டனை அழுத்துவிட்டு அமைதியாக நின்றாள்.
“எந்த ஆளை கரெக்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டியா? அஸ்வினா? ஹரிஷா? அழகு, பணம் எல்லாம் அஸ்வின் கிட்ட தான் அதிகமாக இருக்கு. கண்டிப்பா அவனை தான் நீ ஓகே பண்ணுவ.” என்றான் ராஜேஷ்.
தன் அறை இருக்கும் ப்ளோர் வந்துவிட அமைதியாக வெளியே வந்துவிட்டாள் அனன்யா. ஆனால், அவன் கிடைத்த வாய்ப்பை விட விரும்பவில்லை. அவள் பின்னே சென்றான்.
“என்ன் பதில் சொல்லாமல் போற?” என்றான்.
“ஒழுங்க போறீயா? இல்ல உன்னோட ரோஜாவ கூப்பிட வா.”
“வா உன்னோட ரூமுக்கு போய் பேசலாம்.” என்றான்.
“உன்னை போய் எப்படி நான் லவ் பண்ணேன்னு தெரியலை. எப்போ நான் புண்ணியம் செய்து இருக்கேன் போல, அதான் நீ என்னை விட்டு போயிட்ட. நீ இங்க வரதுக்கு முன்னாடி கூட உன் காதலை இழுந்தது நினைத்து கொஞ்சம் கவலைப்பட்டேன். ஆனா இப்போ அந்த கில்ட் கூட எனக்கில்ல.ரொம்ப சந்தோஷப்படுறேன். நீயா ஒழுங்கா போறீயா இல்லை ரோஜாவை கூப்பிடவா” என்றவள் ஃபோனில் அவளின் நம்பரை எடுத்து காட்ட. அவன் சென்றுவிட்டான்.
அவளின் மனம் மட்டும் ஆறவே இல்லை. ‘எப்படி தான் இவன் இவ்வளவு கீழ்தரமா நடந்துக்குறானோ?’ என்று நினைத்தவள். சுத்தம் செய்து வந்து படுத்துக் கொண்டாள்.
அன்னையின் புகைப்படத்தை கையில் எடுத்தவள், “அம்மா… ட்ரிப் ஆர்கனைஸ் பண்ணனும்னு நான் எடுத்தது தப்பான முடிவோன்னு தோணுது. ஏன்மா?
ஒருத்தனை ஏன்டா காதலிச்சோம்னு தோணுது?. ஒருத்தன் என்ன திட்டத்தோடு வந்ததிருக்கானே தெரியலை? ஒருத்தன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை காட்டுறான்.” என்று அன்னையோடு பேசினாள்.
“நான் தான் அன்று புத்தி கெட்டு போய் ஒரு பையனை லவ் பண்றேன்னு சொன்னேன். நீயாவது, ‘எனக்காக ஒருமுறை நான் பார்த்த பையனை பாருன்னு சொல்லி இருக்க கூடாதா?’. நான் இப்போ அவனை எங்கன்னு போய் தேடுறது?” என்றவளுக்கு அன்று நடந்தது ஞாபகம் வந்தது.
'காலையில் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்த அனன்யாவை பார்த்த கவியரசி,
“ஏன் பாப்பா இந்த மாதிரி சுடிதார், ஆஃபீஸ்க்கு போட்டுட்டு போற? கொஞ்சம் டீசண்டா வெஸ்டர்ன் டிரஸ் போட்டா என்ன?” என்றார்.
“போமா. இந்த சொசைட்டி ஈஸியா உன்னை தப்பா பேசும். சிங்கிள் பேரன்ட்டோட வளர்ப்பு இப்படித்தான் இருக்கும்னு சொல்லுவாங்க.”
“இருக்குறது ஒரு லைப் டா பாப்பா. அதை உனக்கு பிடிச்சது போல் வாழணும். அடுத்தவங்க ஆயிரம் சொல்லட்டும் அதை மனசில் ஏற்றிக் கொள்ளாதே. இப்போ கூட நீ எனக்கு சுடிதார் தான்மா போட பிடிச்சிருக்குன்னு சொல்லலயே.”
“ஆமா மா. எனக்கும் வெஸ்டர்ன் டிரஸ்தான் வியர் பண்ண பிடிக்கும். அதை போட்டுட்டு உலகத்தை சுற்றி பார்க்கணும்னு ஆசையும். ஆனா அதை எல்லாம் செய்ய இந்த சொஸைட்டி விடுமா?”
“ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு. நீயும் நானும் பணம் சேர்த்து வைத்து கண்டிப்பா இந்த உலத்தையே சுற்றலாம்.”
“நீங்க நல்லா கனவு காணுங்க அம்மா. எனக்கு ஆபீஸ்க்கு நேரம் ஆகுது”
“சொல்ல வந்ததையே சொல்ல மறந்துட்டேன் பாரு.”
“என்னமா?”
“எனனோடு வேலை செய்ற ஒரு பையனை பார்த்த முதல் நாளில் இருந்தே எனக்கு பிடிச்சி போச்சு. அவருக்கும் உன்னை பிடிச்சிருக்கு. இன்னைக்கு ஈவினிங் உன்னை பெண் பார்க்க வரச் சொல்லியிருக்கேன்” என்றார்.
“என்னமா இப்படி திடீர்னு சொல்லுறீங்க? நான் ஒருத்தரை லவ் பண்றேன்”
“நீ தான் எனக்கு காதல், கல்யாணம் மேல் நம்பிக்கை இல்லைனு எப்பவும் சொல்வியே.” என்றார் கவியரசி.
“நீ தான் சொல்வியேமா ராஜா மாதிரி ஒருத்தன் வந்தா நீ கண்டிப்பா லவ் பண்ணுவேன்னு.”
“எவ்வளவு நாளா லவ் பண்ற?”
“ஒரு வருஷமா லவ் பண்றேன்.”
“என்கிட்ட எதுவும் மறைக்க மாட்டியே பாப்பா.”
“சாரி அம்மா. எனக்கும் உன் கிட்ட சொல்லாம இருந்தது கஷ்டமா இருந்தது.அது அவர் தான், உடனே சொல்ல வேண்டாம். இப்போவே கல்யாணம், கமிட்மெண்ட்னு இருக்க முடியாது அப்புறமா வீட்ல சொல்லிக்கலாம்னு சொன்னாரு. வீட்டில சொன்னா உடனே கல்யாணம் செய்துடுவாங்கனு சொன்னார்.”
“இதிலே ஏதோ தப்பு இருக்குன்னு உனக்கு தோணலையா?”
“அம்மா… நான் லவ் பண்றவரை தப்பானவர்னு சொல்றீங்க.”
அவரின் முகமே மாறி போனது. “அம்மா என்னைக்குமே உன்னோட விருப்பத்துக்கு மாறா நடந்துக்கிட்டது கிடையாதுடா. நீ விரும்புற பையனையே உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்.”
“லவ் யூ அம்மா. இப்போ ஆஃபீஸுக்கு நேரமாகுது பாய்” என்ற அனன்யா சென்றுவிட்டாள்.’
பழைய நினைவிலிருந்து வெளிவந்தவள், “அம்மா அன்னைக்கு அவங்க என்கிட்ட என்ன சொல்லியிருப்பாங்க. அந்த பையன் யாரு? அவரை பத்தி டீடெயில்ஸ் சொல்லக்கூட அம்மாவ நாம விடலையே. இப்போ அவருக்கு கல்யாணம் ஆகி இருந்தா என்ன செய்றது?ஹும்! நம்ம விதி என்ன வைத்திருக்கோ அதன்படி தான் போகணும்.” என்றவள் அப்படியே தூங்கி போனாள்.
*****
“இங்கு என்ன பிரச்சினை?” என்று கர்ஜித்தான்.
“சார்…” என்றான் பி.ஏ ரவி.
“ஒரு வேலையை செய்ய சொன்னா ஒழுங்கா செய்ய மாட்டீங்களா? நான் என்ன டீச்சரா? நீங்க என்ன ஸ்டூடண்ட் ஸா? எப்போ பார்த்தாலும் உங்களுக்கு சொல்லி தந்துட்டே இருக்க முடியுமா? ”
“...”
“பேஷன் ஷோ நடக்க இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. எனக்கு எல்லாம் ஒழுங்கா நடக்கணும். மீட்டிங் ஓவர்.”
எல்லோரும் வெளியே சென்றனர். “ரவி நில்லுங்க.” என்றான்.
“சார்.”
“உங்களுக்கு தெரியும் தானே. இந்த பேஷன் ஷோ எனக்கு எவ்வளவு முக்கியமானதுன்னு. எனக்கு முக்கியமான வேலை இருக்கு.இப்ப நான் அந்த வேலைய பார்க்க அங்க போகணும். இங்க நான் என்னென்ன செய்யணும்னு சொல்லிட்டேன். நீங்க அதன்படி செய்தா போதும். என்னை இன்னொரு முறை கூப்பிடாதீங்க.”
“ஓகே சார்.”
அதன் பின் அவன் முக்கியமான வேலைகளை செய்துவிட்டே ஊருக்கு திரும்பினான்.
*****
அனன்யாவின் ஃபோன் இசைத்தது. தூக்கத்தில் தேடி எடுத்தவள், “ ஹலோ…” என்றாள்.
“பியூட்டி…”
“எல்லோரும் வந்துட்டீங்களா? நான் தூங்கிட்டேன். இதோ அஞ்சு நிமிஷத்தில் வந்துடுறேன்.” என்றாள் அனன்யா பதட்டமாக.
“இன்னும் டைம் இருக்கு பியூட்டி. நான் சும்மா பேசலாமான்னு கேட்க தான் ஃபோன் பண்ணேன். நீ தூங்கறதுனா தூங்கு.”
“இல்ல ஹரிஷ். தூக்கம் கலைஞ்சுடுச்சு. என்ன பேசணும்?”
“நீ ரெப்ரஷ் ஆகிட்டு கீழே டைனிங் ஏரியா வா.”
“ஓகே.”
ஐந்து நிமிடத்தில் கீழே இறங்கி வந்தவள், சேரில் உட்கார, அவள் முன் காஃபியை நீட்டினான் ஹரிஷ். அனன்யாவிற்கும் அது தேவைப்பட புன்னகையோடு வாங்கிக் கொண்டாள்.
“சொல்லு ஹரிஷ். என்ன விஷயம்?”
“உனக்கும் ராஜேஷிற்கும் ஏதாவது சண்டையா? அவன் கிட்ட நீ கோபமா பேசிட்டிருந்ததா ரோஷிணி சொன்னா? அவன் திரும்ப உன் கிட்ட வம்பு பண்ணுறானா?”
“கொஞ்சம் ஓவரா தான் பேசினான். நான் அவனை சமாளிச்சிட்டேன்.”
“நீ அப்பவே எனக்கு கால் பண்ண வேண்டியது தானா?”
“ஹரிஷ்… இன்னும் ஐந்து நாள் தான் நீ என் கூட இருப்ப. எனக்கு உன்னோட அன்பு புரியுது. ஆனா, உன்னால் என்னை எப்பவும் பார்த்துக்க முடியாது. எங்க அம்மாவே என்னை விட்டு போயிட்டாங்க. நம்ம வாழ்க்கையை நாம தான் வாழணும். ராஜேஷை விட பெரிய பொறுக்கிகளை நான் சமாளித்திருக்கேன். நீ என்னை நினைத்து கவலைப்படாதே. எனக்குன்னு ஒரு நல்ல நண்பன் இருக்கான் என்ற எண்ணமே எனக்கு போதும்.” என்றாள் அனன்யா.
“இந்த அஸ்வின் இல்லாததும் நல்லா தான் இருக்கு.”
“இப்போ ஏன் டா அவரை பத்தி பேசுற?”
“எனக்கு அந்த ஆளை பார்த்தாலே கோபமா வருது. பெரிய அப்பாடக்கரா இருக்காரு.”
“சரியான பெயர் தான் வைத்திருக்க.” என்று சிரித்தாள் அனன்யா.
“என்ன நடந்தது?”
“நான் பீச்சில் பார்க்கிங் போன போது, அஸ்வின் பிஎம்டபிள்யூ காரில் ஏறி போனார்டா. அவர் பணக்காரர்னு தெரியும். ஆனா, புது ஊரில், செல்லும் இடத்திற்கு எல்லாம், நினைத்த நேரத்தில் பிஎம்டபிள்யூ வருவது எல்லாம் டூ மச்.” என்றாள்.
“சரி வா. எல்லோரும் வராங்க. நாமும் போய் வேனில் உட்காருவோம்.” என்றாள் அனன்யா.
இருபது நிமிட பயணத்தில் லைட் ஹவுஸ் வந்துவிட்டது.
டிக்கெட் வாங்கி உள்ளே வந்தவர்கள் இருநூறு படிகளை ஏறி அந்த மொத்த ஊரின் அழகிய காட்சியை ரசித்தனர்.
ஒரு பக்கம் அரேபியன் சீ, ஒரு பக்கம் பேக் வாட்டர் லேக், ஒரு பக்கம் தென்னை மரங்கள், ஒரு பக்கம் மதில் சுவர் கோட்டை எல்லாம் தெரிந்தது.
இந்த காட்சியே மனதுக்கு நிறைவை தந்தது. கொஞ்சம் நேரம் அங்கே இருந்துவிட்டு, அனைவரும் கீழே இறங்கினர்.
இயற்கை அழகின் முன் சில படங்கள் எடுத்துக் கொண்டனர். ஈஸ்வர் தன் ட்ரோன் கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டான்.
“ப்ரெண்ட்ஸ் பக்கத்தில் தான் அஞ்செங்கோ ஃபோர்ட் (Anjengo Fort) இருக்கு. போவோமா? கோட்டையோட மதில் சுவர் மட்டும் தான் இருக்கும். சும்மா நடக்கலாம். இப்போ கூட மேலே பார்த்தோமே.” என்றாள் அனன்யா.
“சும்மா நடந்துட்டு வரலாம் பியூட்டி.”
“சரி வாங்க போகலாம்.”
அங்கேயும் சென்று, அரை மணி நேரம் இருந்துவிட்டு திரும்பினர்.
“காய்ஸ் நாளைக்கு ரூம் வேக்கேட் பண்ணணும். சோ உங்க பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைக்கு நாம கொல்லம் போறோம்.”
“ஒ… ஓ…” என்று கத்தினர்.
சரியாக அப்பொழுது அஸ்வினும், “டூமாரோ பிளான்?” என்று மெசேஜ் அனுப்பி இருந்தான்.
அவனுக்கு பதில் அனுப்பியிருந்தாள் அனன்யா.
“டைம் நிறையா இருக்கு வர்கலால ஆயில் மசாஜ், கேரளா மசாஜ் எல்லாம் ஃபேமஸ். போக விரும்பிறவங்க போயிட்டு வாங்க. அங்கிருந்து நம்ம ஹோட்டல் பக்கம் தான், மசாஜ் முடிந்ததும் நடந்தே வந்துவிடலாம்.” என்றாள் அனன்யா.
“உடம்பெல்லாம் வலிக்குது கண்டிப்பா நான் போறேன் பியூட்டி.” என்றான் ஹரிஷ்.
“ஹரிஷ்… இது தாய்லாந்து இல்லை. பாய்ஸ்க்கு பாய் தான் பண்ணுவாங்க.” என்றாள் சிரிப்புடன் அனன்யா.
“என்னை நம்பு பியூட்டி. நிஜமா உடம்பு தான் வலிக்குது, அதுக்கு தான் மசாஜ்.”
“நம்பிட்டேன்.” என்றாள் அனன்யா. அவள் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்தனர்.