• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நெஞ்சில் நிறைந்தவள் - 33

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் 33

டெல்லி சர்வதேச விமான நிலையம் அந்த காலை வேலையும் மிக பரபரப்பாக இருந்தது, தமிழகத்தில் இருந்து வந்த அந்த இரும்பு பறவை தனது இட பக்கத்தை திறந்து விட அதிலிருந்த மனித குஞ்சுகள் வெளிய குதிக்க ஆரம்பித்தார்கள்.

குமரனின் வாழ்வில் நீண்ட நாள் கனவாக இருந்த விமான பயணம் இன்று தேவயானியின் மூலம் நிறைவேறியது, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் பொருட்டு மக்கள் கூட்டம் இறங்கி முடிக்கும் வரைக்கும் அவனது இருக்கையிலேயே அமர்ந்து இருந்தான். அவனது குழந்தை தனமான இந்த குணத்தை தேவயானி ரசிக்குறோம் என்பதை அறியாமலே ரசித்து கொண்டிருந்தாள்.

அவனது செய்கை ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டிருந்தாள். அவள் அறிந்து விட்டாள் அது தான் அவனது முதல் விமான பயணம் என்பதை அவன் சொல்லிவிட்டான் என்றாலும் கூட அதற்கு முன்னமே அவள் அறிந்து கொண்டாள் தான்.

மக்கள் கூட்டம் முக்கால் பங்கு காணாமல் போயிருக்க மெல்ல அழைத்தாள்,

" குமரா " அழகாய் அமைதியாய் குழந்தையை கொஞ்சுவது போல, அவனது செய்கை மற்றும் முகபாவனை அவளை அப்படி அழைக்க வைத்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது

" என்ன தேவா குழந்தையை கூப்டுற மாதிரி கூப்டுறீங்க " சிரித்து கொண்டே கேட்டான்

" பின்ன இப்படி குழந்தை மாதிரி இருந்தா எப்படி கூப்டுறதாம் "

" குழந்தை மாதிரியா? "

ஆமாம் என்பதை அவளது மை வருடிய கண்களை சிமிட்டி சொல்ல,
அந்த இரு ஜோடி இமைகள் தொட்டு பிரிந்த அழகில் குழந்தை குமரன் நிஜமான குமரனாக மாறி இருந்தான். விமான நினைப்பு எல்லாம் எங்கோ போயிருக்க விரிந்த விழியை சுருக்காமல் அந்த விழியில் விழுந்து இருந்தான். அவனது இமைக்க மறந்த பார்வை அவளுக்குள்ளும் ஏதோ ஒரு உணர்வை கிளப்பி விட சற்று சுதாரித்து,

" குமரா நாமளும் இறங்கலாமா எல்லாருமே இறங்கிட்டாங்க " என்று சொன்ன போது தான் குமரன் சுயத்திற்கு வந்தான்

" ஹான் தேவா இறங்குவோம் " சற்று திணறினாலும் கூட சட்டென சொல்லிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து விட்டான்.
இருவரும் டெல்லி விமான நிலைய மக்கள் கூட்டதோடு கலந்து வெளியே வந்து தங்களுக்கான வாகனத்தில் ஏறி கொள்ள அது அவர்களை ஏற்றி கொண்டு பயணமானது, வழி நெடுக வேடிக்கை பார்த்து கொண்டே வந்தான் குமரன் தன்புறம் சில நேரமும் மறுபுறம் சில நேரமும் பார்வையை செலுத்திய போதெல்லாம் தேவயானியின் மீது தனது பார்வை நின்று நின்று போனதை தவிர்க்க நினைத்தாலும் கூட முடியாது போகவே பார்வை நிலைக்கும் போதெல்லாம் கள்ளத்தனமாய் ரசித்து அவள் பார்க்கும் பொழுது மட்டும் சாதாரணமாக சிரித்து ஒரு நடிப்பை காட்டி விட்டு பார்வையை மாற்றிக் கொள்வான். ஆனால் அவனை போல தான் அவளும் அவனை பார்க்கிறாள் என்பதை மட்டும் அவன் அறியவில்லை பாவம் அறிந்து இருந்தாள் இந்த பயணம் இன்னும் வேறு மாதிரி இருந்து இருக்குமோ என்னவோ.

கள்ள பார்வையை ஒரு அளவுக்கு மேல் தவிர்க்க முடியாத குமரன் அதை மறைக்க அவளிடம் பேச்சை கொடுத்தான்.

" தேவா இன்னும் எவ்ளோ தூரம் போகணும்? "

" கிட்ட வந்துட்டோம் குமரா "

" நாம அமைச்சர எத்தனை மணிக்கு பாக்க போறோம் "

" நமக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கு நேரம் கொடுத்து இருக்காங்க " என்று அவள் சொன்ன நேரம் அவர்கள் வந்த வண்டி தனது வேகத்தை குறைத்து அந்த பயணியர் விடுதி முன்னால் நின்றது. அங்கு அவர்களை வரவேற்க தண்டாயுதபாணி தயாராக இருந்தார்.

" என்னடா பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா? "

" ரொம்ப நல்லா இருந்தது மாமா ஒரு பிரச்சனையும் இல்லை "

" சரி டா அப்போ நாம நேர மந்திரிய பார்க்க போயிறலாமா? உள்ள அறைக்கு போய் தயாராகி வாறீங்களா? "

" ம்ம் சரி மாமா. வாங்க குமரா உள்ள போவோம் "

அடுத்த பதினைந்து நிமிடங்களில் தயாராகி விட அங்கிருந்து அமைச்சர் மாளிகை நோக்கி அவர்களது பயணம் தொடங்கி அங்கிருந்து இன்னொரு பதினைந்து நிமிட பயணத்தில் இடத்தை அடைந்தார்கள்

தண்டாயுதபாணிக்கு மத்திய சர்க்காரிடம் நல் மதிப்பு இருந்த காரணத்தினால் நான்கு நாட்களில் இந்த விஷயத்தை எல்லாம் சிறப்பாக செய்திருந்தார்.

" தேவயானி இந்த தம்பி யாருனு சொல்லலையே டா, உன்கூட உன்னோட உதவியாளர் அந்த பொண்ணு ஒருத்தி இருக்குமே அது தான் வரும்ன்னு நினைச்சேன் " குமரன் பார்த்து கொண்டே பேச,

" எல்லாரும் வந்தா அது வீண் விளம்பரம் கூடவே செலவு தான மாமா அதான் நாங்க மட்டும் வந்தோம். அப்புறம் இவர் பேர் குமரன் மாமா நா இன்னைக்கு இந்த திட்ட வரைவு தயார் செஞ்சு உங்கள வந்து பாக்க முழு காரணம் இவர் தான் மாமா. இந்த விளம்பரத்தை பாத்து இத நாம செஞ்சே ஆகணும்ன்னும் நம்மளால இத செய்ய முடியும்ன்னு எனக்கு முன்னமே தீர்க்கமா முடிவு எடுத்ததும் இவர் தான். அது மட்டும் இல்ல மாமா இந்த ஒப்பந்ததுல அடுத்து அடுத்து என்ன செய்யணும்ன்னு பக்காவா ஒரு திட்டத்தை தயார்ப்படுத்தி வச்சிட்டாரு மாமா அதனால இவர் வந்தா தான் இது சரியா இருக்கும்ன்னு முடிவு செஞ்சு தான் இவரோட வர முடிவு எடுத்தேன் மாமா "

" ஓ அப்படியா டா, ரொம்ப பிரமாதம் தம்பி உங்க வேலை வாழ்த்துக்கள் " கையை நீட்டினார் தண்டாயுதபாணி.

" அய்யயோ தேவா ஏன் இவ்ளோ பெரிய புகழ்ச்சி, இது என்னோட வேலை தான, நீங்க கொடுக்குற ஊதியதுக்கு உரிய வேலையை பாக்குறேன் அவ்ளோ தான "
" நிச்சயமா அப்படி இல்ல குமரா இந்த பயணத்துக்கு முழுக்க முழுக்க காரணம் நீங்க மட்டும் தான். உங்களோட ஆர்வமும் பங்களிப்பும் தான் என்னை இதை செய்ய வச்சுச்சு ஒருவேளை நம்மளோட இலக்கு வெற்றிகரமா முடிஞ்சதுன்னா அந்த வெற்றிக்கு முழு காரணம் நீங்களா மட்டும்தான் இருப்பீங்க "

" தேவா தேவா,
ரொம்ப பெரிய விஷயமா எல்லாம் பேசாதீங்க நான் உங்களுக்கு ஒரு தகவல் கொடுத்தேன் அவ்வளவு தான் மத்தபடி இதுல என்னோட பங்களிப்புன்னு உங்கள தாண்டி என்ன பெருசா இருந்தர போகுது? "

" இருக்கு குமரா இந்த திட்டம் நமக்கு சரியா வருமா வராதான்னு நான் யோசிக்கிற நேரத்துல அது சரியா வரும்னு முடிவு பண்ணி அடுத்து அந்த திட்டத்தில் என்ன செய்யணும்ங்கிற வரைக்கும் நீங்க தயார் செஞ்சு வச்சிருக்கீங்க " முந்தைய நாட்களில் குமரன் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை தேவயானியிடம் கொடுத்திருந்தான் அதைத்தான் அவள் சுட்டிக்காட்டி பேசினாள்.

" நெஜமா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்க குமரா உங்களோட ஆர்வம் பங்களிப்புன்னு பாக்கும் போது "

" இதுல ஆச்சரியமாக ஒன்னும் இல்ல தேவா எனக்கு உங்களோட வெற்றி முக்கியம் " என்று குமரன் சொல்ல தேவயானியோடு தண்டாயுதபாணியும் கவனித்து கொண்டு தான் வந்தார்.

" ஆனா தம்பி தேவயானி ஏற்கனவே வெற்றி பாதையில தான பயணம் செஞ்சுட்டு இருக்கா? "

" ஆமாங்க அய்யா அத நா இல்லனு மறுக்கல, இந்த வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டது தேவாவோட அப்பான்னு தான இன்னைக்கு இந்த சமூகம் பேசுது.. " கேள்வியை கேட்டு நிறுத்த

" ஆமாம் " என்று தலையை ஆட்டினார்

" அய்யா எங்க தேவா தனித்துவம் நிறைஞ்சவங்க இன்னைக்கு எங்க நிறுவனம் இத்தன சிறப்பா போய்ட்டு இருக்க காரணம் அவங்களோட தனித்துவமான சிந்தனை தான், அந்த தனித்துவத்துக்கு தனியா ஒரு சிறப்பு இருக்கு அத செய்யணும்னு நினைக்கிறேன். ஏன்னா நா இதுவரைக்கும் இப்படி ஒரு பெண்ணை என் வாழ்நாள்ல சந்திச்சது இல்ல இனிமேலும் சந்திக்க போறது இல்ல அதனால தான் நா வாழ்கையில சந்திச்ச இந்த ஒரு பொண்ண என்னைப்போல இந்த உலகமும் கொண்டாடணும்... " என்று குமரன் சொல்ல நெகிழ்ந்து போனாள் தேவயானி. ஆனால் அவனது அந்த வார்த்தை தண்டாயுதபாணியை கடுமையான யோசனையின் பக்கம் தள்ளியது....


நெஞ்சில் நிறைவாள்.....



அத்தியாயம் 34


தேவயானியை பற்றி குமரன் கூறிய விஷயங்கள் தண்டாயுதபாணியை யோசனையில் தள்ளி தேவயானியை நெகிழ்ச்சியின் பக்கம் தள்ளி அதை வார்த்தையாய் வர வைத்தது,

" அச்சோ குமரன் ஏன் இப்படி " லேசான குழைவு அவளது பேச்சில் அதை பார்க்க பார்க்க தண்டாயுதபாணியின் மனம் வேறு ஒரு கணக்கை போட்டது, அதை பேச நினைத்த போது மந்திரியின் உதவியாளர் பாண்டி அவரை அழைக்க வந்தான், அவனை பார்த்ததும் குமரன்,

" பாண்டி அண்ணா " என்று முகத்தில் மகிழ்ச்சி காட்டி அழைக்க

பாண்டியோ அத்தனை மகிழ்ச்சி காட்டவில்லை என்றாலும் கூட பெயருக்கு ஒரு சிரிப்பை உதிர்த்து,

" தம்பி, என்ன டா எப்படி இருக்க? என்ன இங்க? " என்று கேட்டவன் அவனோடு நின்ற தண்டாயுதபாணியின் முகத்தை பார்க்க சற்றே குழம்பி போனான். அவனது குழப்பத்தை தெளிய வைக்க எண்ணியது போல தண்டம் பேச ஆரம்பித்தார்

" தம்பி உனக்கு கும்ரனை தெரியுமா? "

" ம்ம் நல்லா தெரியுமே அய்யா, தம்பியும் நானும் சேர்ந்து சில காலம் தொழில் செஞ்சோம், அது நாங்க நினைச்ச அளவுக்கு சரியா போகலை அதனால அப்படியே அத நிறுத்திட்டு வேற வேற திசையில போய்ட்டோம் " சுருக்கமாக சொல்லி முடித்தான். அவன் முடிக்கும் முன்பே தேவயானி அறிந்து கொண்டாள் குமரனின் தொழிலில் திருட்டு வேலை செய்த கயவன் இவன் தான் என்று. ஆனால் தண்டம் வேறு விதமாக கேட்டு கொண்டிருந்தார்

" அப்படியா "

" ஆமாங்க அய்யா அதெல்லாம் பழைய கதை விடுங்க இன்னைக்கு நாம ஆக வேண்டிய விஷயத்தை பாப்போம் " என்று சொன்னவன்,
" அய்யா குமரன் உங்க கூட எப்படி? " உண்மையை அறியும் எண்ணத்தோடு கேட்கவும் செய்தான்.

" இந்த குமரன் தான் இப்போ எங்க நிறுவனத்தில் ஏற்றுமதி பிரிவு மேலாளர். "

" ஓஹோ அப்படியா விஷயம்...
ஹ்ம்ம், தம்பி குமரன் நல்ல பையன் தான் ஆனா கொஞ்சம் பொறுப்பு கம்மியே.,
அவனுக்கு போய் நீங்க இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்து இருக்கீங்க? " வினையமாய் பேச ஆரம்பித்தான் பாண்டி.

" என்ன தம்பி சொல்றீங்க குமரன் தான் இப்போ அலுவலகத்தில் நல்ல பொறுப்பா இருக்கக்கூடிய பையன்னு என்னோட மருமக சொல்றா ஆனா நீ இப்படி சொல்லுற? "

" ஐயா நான் ஒன்னும் பொய் சொல்லல அப்படி சொன்னா குமரனே அத மறுப்பான் தான? " கேள்வியோடு நிறுத்தியவன் மேலும் தொடர்ந்தான்,

" ஐயா கொஞ்ச காலம் நானும் அவன் கூட சேர்ந்து தொழில் செஞ்சி இருக்கேன், அந்த அனுபவத்துல தான் சொல்லுறேன்.
கொஞ்ச காலம் நல்லா இருந்தான் வேலையும் சிறப்பா போச்சு ஆனா அதுக்கு அப்புறம் தான் அவன் வேலையை காட்ட ஆரம்பிச்சான். அதுக்கு பின்ன நிலைமை தலைகீழா போய்ட்டு. அதுக்கு காரணம் முகப்புத்தகம் " என்று சொன்ன போது "" முகப்புத்தகமா? " என்ற கேள்வி தண்டத்தை முந்தி வந்தது தேவயானியிடமிருந்து.

" ம்ம் ஆமா அவனுக்கு முகப்புத்தகம் தான் உலகம் அதுல அவனுக்கு என்ன தோணுதோ அதை கிறுக்குத்தனமா கிறுக்கிக்கிட்டு இருப்பான். அந்த கிறுக்கல ஆரம்பிச்சிட்டான்னா வேற எந்த வேலையும் பாக்க மாட்டான், இப்படி இருக்காத டா மாத்திக்கோன்னு எத்தனையோ முறை சொல்லி சத்தம் போட்டுட்டேன் ஆனா அவன் கேட்கிற மாதிரியே இல்ல அவனோட அலட்சியம் என்னையும் சேர்த்து நஷ்டத்துல கொண்டு போய் விட்டுருச்சு. அதனாலதான் நானே அந்த நிறுவனத்தை விட்டுட்டு வெளியே வந்தன் என்னைக்கு அந்த நிறுவனத்தை விட்டும் என் தம்பி குமரன விட்டும் வெளியே வந்தேனோ அன்னையில இருந்து என்னோட நிலைமை மேல மேல போய்க்கிட்டே இருக்கு அதுக்கு ஆதரமா தான் இன்னைக்கு டெல்லியில அமைச்சருக்கு உதவியாளரா இருக்கேன். " என்று சிறிது இடைவெளி விட்டவன் மீண்டும் தொடர்ந்தான்,

" இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆச்சுன்னு நினைக்கிறீங்க முழுக்க முழுக்க என்னோட உழைப்பு. அது இல்லாம இந்த அளவுக்கு வர முடியுமா? அப்போ என்னோட உழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் அப்படி இருந்தும் அந்த நிறுவன நஷ்டத்தில் போயிருக்குன்னா தம்பி குமரனோட அலட்சியம் எந்த அளவுக்கு இருந்திருக்கும்ன்னு நீங்களே யோசிச்சு பாருங்க " என்று மொத்தமாக குமரனின் மேல் பழியை இறக்கினான் பாண்டி.

அவனது இத்தனை குற்றசாட்டுக்கும் குமரன் பதில் ஏதும் சொல்லவில்லை அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டேன் நின்றான் கூடவே இதழில் சிறு சிரிப்பும்.
அவன் பார்க்கும் பார்வையை தான் தேவையானியும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
குமரனின் பார்வையில் எந்த சலனமும் வருத்தமும் தெரியவில்லை எனக்கு நீ செய்திட்டு போன துரோகத்தை விடவா இப்போ நீ பேசுற பேச்சு பெருசு அப்போ கூட இருந்து கெடுத்த இப்போ எதிரில் நின்னு கெடுக்கிற என்ற எண்ணம் குமரனின் மனதில் ஓடியது அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதை தேவயானி சரியாகத்தான் கவனித்து கணித்துக் கொண்டிருந்தாள் அந்த அமைச்சரின் உதவியாளன் தனது பேச்சை மேலும் நீட்டிக்க போக அவனது குரலை இடைவெட்டினாள் தேவயானி.

" கொஞ்சம் உங்க பேச்சை நிறுத்துறீங்களா " சற்று உஷ்ணம் கூடி வந்த குரலால் அமைதியாகி அவளை பார்த்தான் பாண்டி.

" இப்போ என்ன நடக்கணுமோ அந்த வேலையை பார்ப்போமா என்னோட நிர்வாகத்துல இருக்கக்கூடிய சக ஊழியர நீங்க இப்படி பேசுறத நான் ஒரு காலமும் அனுமதிக்க முடியாது. என்னோட நிர்வாகிகளை பேசறதும் என்னைய பேசுறதும் ஒன்னு தான் அதனால நீங்க உங்களோட பேச்சை இதோட நிறுத்திக்கிட்டா நல்லது " உஷ்ணம் எச்சரிக்கையாக மாறியிருக்க தண்டாயுதபாணியும் அதை பார்த்துக் கொண்டே பேச முன்வந்தார்,

" தேவயானி அவசரப்படாதே டா இந்த பையன பத்தி நமக்கு பெரிய அளவுல ஒன்னும் தெரியாது தானே இப்போ இந்த தம்பி இவ்வளவு விஷயம் சொல்றானே அதுக்கு கொஞ்சமாவது குமரன் மறுத்து பேசினானா பாத்தியா? ஏன்னா இந்த தம்பி பேசுனதுல உண்மை இருக்கு போல தான் எனக்கு தோணுது " தனது கருத்தை கூற

" மாமா வந்த வேலையை பாப்போம் அவர் பார்த்த அதே வேலையை ( அதாவது குமரனை குறை கூறும் வேலையை ) நீங்களும் பார்க்க வேண்டாம். இந்த வேலை சம்பந்தமா உங்களோட உதவி எனக்கு தேவைப்பட்டுச்சு அதனால உங்களோட உதவிய கேட்டேன் இதை செஞ்சு கொடுக்க முடியும்னா செய்ங்க இல்ல முடியாதுன்னு சொன்னா விட்டுடுங்க என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் பாத்துக்கிறேன். " என்று அவரிடமும் சீறியவள்,
" மறுபடியும் சொல்றேன் குமரன பேசுறது என்ன பேசுறதுக்கு சமம் அதனால குமரன் பேசுறத நான் அனுமதிக்க மாட்டேன் இதுக்கு மேலயும் நீங்க பேசிட்டு இருந்தா இப்பவே நான் இங்க இருந்து கிளம்புறேன் " தேவயானி மொத்தமாக இருவரையும் மிரள விட்டு விட,

" என்னடா உனக்காகத்தானே மாமா இவ்வளவு தூரம் பேசி செஞ்சி எல்லாம் தயார் செஞ்சிருக்கேன் அப்படி இருக்கும்போது நீ பாட்டுக்கு இப்படி பேசினா என்ன அர்த்தம்? "

" நீங்க ரெண்டு பேரும் பேசுற பேச்சுல அர்த்தம் இல்லைன்னு அர்த்தம் மாமா அர்த்தமில்லாத பேச்சுக்களை எப்பவும் நான் பேச விரும்பறதும் இல்ல கேட்க விரும்பறதும் இல்லை அது உங்களுக்கே நல்லா தெரியும் அது தெரிஞ்சி இருந்தும் நீங்க இப்படி பேசிட்டு இருக்கறதுல எந்த அர்த்தமும் இல்லை " இதற்கு மேல் இருவரும் பேசவே கூடாது என்பதை போல் பேசி முடித்தாள் தேவயானி.

" தேவயானி யானைக்கும் அடி சறுக்கும் அதை புரிஞ்சுக்கோ நீ எடுத்த முடிவு எல்லா நேரமும் சரியா இருக்கணும்னு அவசியம் இல்ல அதே நேரம் இவனுக்காக நீ இவ்வளவு பேச வேண்டிய அவசியமும் இல்லை என்னவோ மாமாவுக்கு தெரிந்ததா சொல்லிட்டேன் அதுக்கு மேல உன்னோட விருப்பம் சரி வாங்க உள்ள போய் அமைச்சர் பாப்போம் " தண்டாயுதபாணியும் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

அங்கு நடந்த அத்தனை பேச்சுகளையும் கேட்டுக் கொண்டிருந்த குமரனின் முகம் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாது அமைதியாக இருந்தது அதை சரி செய்வதற்காக குமரனின் கையை பற்றி தனது உள்ளங்கைக்குள் வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து,

" குமரா வாங்க போவோம் " என்று முகம் மலர்ந்து சொல்ல அவளது அந்த அழுத்தமும் அந்த சிரிப்பும் அங்கிருந்த அந்த சூழலை கொஞ்சமாக மாற்றி குமரன் அமைச்சரை பார்க்கும் எண்ணத்திற்கு கொண்டு வந்தது.....




நெஞ்சில் நிறைவாள்.....
 
Top Bottom