• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசமுகை உதிரும் இளவேனில் - 5

Vishakini

Moderator
Staff member
நேசமுகை - 5

ஆசியாவிலேயே அதிக வேகமாக காற்று வீசக்கூடிய ஊர் என்ற சிறப்பு நாஞ்சில் நாட்டின் எல்லை என்று அழைக்கப்படும் 'ஆரல்வாய்மொழி'க்கு உண்டு. இது கன்னியாகுமரியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.

அறிஞர் அண்ணா பல்கலைக் கழகம் அமைந்துள்ள பழங்கால மன்னர்களின் கோட்டை மண்டபங்களுக்கு எதிர்புறம் இருந்த ஒரு சிறிய உணவகத்தில் மதிய உணவு தடபுடலாக பரிமாறப்பட்டிருக்கும் நேரம் அப்பெண்ணின் குரல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

" அண்ணே.. ஹலோ அண்ணே.. எம்புட்டு நேரம் கூப்பிடுரேன்? ஒரு ஆம்லெட் எடுத்துட்டு வாங்க. பரோட்டா இன்னும் இரண்டு வேணும். சீக்கிரம் கொண்டாங்க"

அந்தக் குரலுக்கு சொந்தகாரி இளவேனில். திருமணத்திற்கு மறுநாள் ஆளாளுக்கு ஊர்சுற்றிப் பார்க்க கிளம்ப இவர்கள் இருவரும் மட்டும் தனியாக சுற்றினர் இணைபிரியா நண்பர்களாய்.

"டி எல்லாரும் பாக்குறாவ்வ, செத்த சத்தம் போடாம இரியேன்டி"

மெல்லிய குரலில் மன்றாடினாள் அவளது தோழி நன்மதி. இருவரும் 5 வயதில் அரைகிளாஸ் வகுப்பில் இருந்தே ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரே கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்திருந்தனர். கூடவே நட்பையும் இணைத்துக் கொண்டனர்.

நன்மதி அமைதியான அன்பானவள் என்றால் இளவேனி அதிரடியான அன்பானவள். கொஞ்சம் கோவகாரியும் கூட.

"இத்தனை சத்தத்துல நீ பேசுன மாதிரி நான் கூப்பிட்டிருந்தா எவன் காதுலயாது விழுகுமாட்டி? பசி எடுக்குனு சொன்னியல்ல."

"அதுக்கு? இப்ப பாரு எல்லாம் நம்மளயே பாக்க மாதிரி குறுகுறுப்பா இருக்கு"

"எவட்டி இவ? உன் வவுத்து பசிக்கு நீ தின்ன போற. இதுல எவன் பாத்தா என்ன பாக்காலனா என்ன?"

"உன்ட்ட பேசி ஜெயிக்க முடியுமா வேணி? சரி சாப்பிட்டு அடுத்த பிளான் என்ன?"

"ம்ம்ம் நெக்ஸ்ட் ரெஸ்ட் தான். ரூமுக்கு போயிடலாம்டி. செம டயர்டா இருக்கு. நீ கூப்பிட்டியேனு தான் சித்தகிரி மலைக்கு வந்தேன். நல்லாதான் இருந்தது அதுக்காக நான் எல்லாம் நான்வெஜ் சாப்பிடாமல் இருக்க மாட்டேன். சாமி ஒன்னும் சொல்லாது "

'பரோட்டாவும் ஆம்லெட்'டும் வரவும் இருவரும் உண்டு விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வர, நன்மதிக்கு அலைபேசி வரவே அவள் உணவகத்தின் வாயிலில் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.

கல்லாவில் அமர்ந்து இருந்தவரிடம் பணத்தைக் கொடுத்தவள் அங்கு இருந்த சிறு டப்பாவை திறந்து அதிலிருந்து 'சுகர் கோட்டிங்' செய்த பெருஞ்சீரகம் சிறிது எடுத்து வாயில் போட்டவள் திரும்ப அங்கு நின்றிருந்தான் நெடுநெடு இளைஞன்.

'அட இவனா? இங்க என்ன பண்றான்?'

'நீ எதுக்கு வந்தாயோ அதுக்கு தான் வந்திருப்பான்' என்று மனசாட்சி உள்குத்துடன் குட்டு வைக்க அப்படியே திரும்பிக் கொண்டாள்.

மீண்டும் மெதுவாக அவனைத் திரும்பி பார்க்க யாரிடமோ அலைபேசியில் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அலைஅலையாய் காற்றில் பறக்கும் அவனது கேசம் முன்நெற்றியில் விழ அதை கைகளால் வாரிக் கொண்டவனின் விழிகளில் அத்துனை சந்தோஷம். அதில் இலயித்து ரசித்திருந்தன அவளது மான்விழிகள்.

அவனையே 'சைட்' அடித்ததில் அவன் திரும்பி இவளைப் பார்த்ததையோ அவளருகே வந்தததையோ கவனிக்கவில்லை.

"ஹாய் 'ஹாட்டி'.. ஐ அம் இளநேயன். 'இளா'னு எல்லாரும் கூப்பிடுவாங்க"

என்று அவன் மொழியும் வரைக்கும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் சொன்ன 'ஹாட்டி'யில் மலையேற ஆரம்பித்தாள்.

"வ்வாட் 'ஹாட்டி'? வாட் யூ திங்க் அபவுட்..."

"ஹேய் ஹேய் கூல்மா. இதோ எரிமலையா பொங்குறியே அதை தான் 'ஹாட்'னு சொன்னேன். விட்டா எரிச்சிடுவ போலயே" கிண்டல் போலவேச் சொல்லி சிரித்திருந்தான்.

"நல்லாதான்டா பேசுரீங்க."

"எதே "டா"வா ஏம்மா உன்னை விட வயசுல மூத்தவன்மா. கொஞ்சம் கூட மரியாதை தெரிலயே" என்றவன் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தான்.

பில்கவுண்டர் மேஜையில் கைகளை ஊன்றியவள்

"அச்சோ மன்னிச்சிடுங்க தாத்தா. வணக்கம் தாத்தா. சாப்டீங்களா தாத்தா?" என்று அடுக்க குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் இளநேயனுக்கு புரையேறி இருமல் வந்தது.

"இந்த மரியாதை போதுமாங்க தாத்தா" என்று அட்டகாசமாக சிரித்தாள். இடுப்பில் கையூன்றி அவளைப் பார்த்தவன்

"இதுக்கு 'டா'வே பராவல" என்க

'அப்படி வாடா வழிக்கு' எனும் விதமாக பார்த்தவள்

"சரி சொல்லுங்க இங்கே என்ன பண்றீங்க?"

"புட்பால் மேட்ச் ஆட வந்தேன்"

"ஆஆஆ சரி சரி சாப்பிட வந்தீங்க ஓகே பட் என்னை ஏன் பாலோ பண்றீங்க?"

"ஹலோ மிஸ் இளா.."

"இளவேனில்"

"என் வாழ்வின் வசந்தமே.."

"என்ன?"

"நைஸ் நேம்னு சொல்ல வந்தேன்"

"நம்பிட்டேன்"

"நம்பனும்னா நான் என்ன செய்யனும் சொல்லு? எத்தனையோ பேர் வந்து போற ஹோட்டலுக்கு நான் ஏன் உன்னை பாலோ பண்ண போறேன் சொல்லு?"

சரியென்பதாக தலையசைத்தாள்.

"என் நம்பர் தரவா?சேவ் பண்ணிக்க"

"இதோ பார்ரா.. ஆஹான் சொல்லுங்க பாப்போம்" என்றவள் அலைபேசியில் நம்பர் தட்டச்சு செய்து பெயரில் 'நெடுமங்காடு' என்று தட்டச்சு செய்ய

"ஹே இளவேனி என்ன இது?"

மெலிதாக புன்னகைத்தவள் "ஓகே நான் கிளம்புறேன்"

"உன் நம்பர் சொல்லு"

"98765 4321.."

"லாஸ்ட்ல என்ன நம்பர்?"

"அதை நீங்க தான் தாத்தா கண்டு பிடிக்கனும்" என்று கிளிக்கி சிரித்தவள் நன்மதி அருகே வந்திருந்தாள். அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள்

"யார்டி அவன்? கல்யாண வீட்டில் இருந்து பாலோ பண்றான்"

"ஹேய் விடுடி நான் பாத்துகிறேன். நான் பேசுற பேச்சிலேயே தெறிச்சி ஓடிருவான். எல்லாம் நம்ம எப்படி நடந்துகிறோம்ன்றதுல தான் இருக்கு. வா போலாம்"

இருவரும் கிளம்பி போனதும் இளநேயனின் நண்பன் அவன் தோளில் தட்ட

"வாடா முடிஞ்சது போலாம்" நேயன்

"மச்சி இது சிட்டி கிடையாது வில்லேஜ். பாத்தல்ல அந்த பொண்ணு 'ஆம்லெட்' கேட்டத. இத்தனை ஆம்பள இருக்கும் போது இவ்வளவு சவுண்டா கூப்பிட்டு ஆர்டர் பண்ணுதுனா அது சரியான பஜாரியா இருக்கும் போல. தேவை இல்லாத வேலை வேணாம்டா. ஒழுங்கா ஊர் போய் சேருவோம் வா"

"ஏன்டா ஒரு ஆம்லெட் கேட்டது குத்தமாடா? நீயெல்லாம் என்ன சிட்டில பொறந்து வளந்த? ஷி இஸ் இண்ட்ஸ்டிங்க்"

"அதோட நிறுத்திக்க" என்றவன் இரண்டு புகையிலை பூஞ்சுருளை வாங்கி விட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.

நண்பர்களின் திருமணத்திற்கு வந்தவர்கள் அவர்களை வாழ்த்தி விடைபெற்று ஊர் சுற்றி விட்டு அவரவர் ஊருக்கும் சென்றிருந்தனர்.

இளநேயன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எண் மாற்றி அழைப்பு விடுக்க ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

திருநெல்வேலி
அன்று ஞாயிற்றுக்கிழமை. வழமையாக ஆலயம் சென்று வந்த இளவேனில் நன்மதி வீட்டுக்கு சென்று அவளுடன் பேசிக்கொண்டு இருந்தாள். அப்பொழுது அலைபேசியில் அழைப்பு வந்து 'நெடுமங்காடு' என்று ஒளிர்ந்தது. சிறு புன்னகையுடன் அழைப்பு ஏற்றவள்

"ஹலோ யாரு?" மிடுக்காகவேக் கேட்டிருந்தாள்.

"ஹேய் வேணி நான் இளா பேசுறேன். தேங்க் காட் பைனலி ஐ காட் யூ கேர்ள்" என்று உற்சாகமாக பேசியிருந்தான் இளநேயன்.

"ஹேய் ஹலோ ஹலோ யோவ் என்ன பேசிட்டே போற? இங்க வேணி எல்லாம் இல்லை. ராங் நம்பர் கட் பண்ணுயா போனை" என்று கத்தியிருந்தாள். அவளது கூற்றில் உற்சாகம் வடிய

"ஏங்க நான் தான் நெடுநெடுனு போன்ல சேவ் பண்ணீங்களே? ஆபு கல்யாணத்தில் மீட் பண்ணோமே?"

"எனக்கு எந்த அபுவும் தெரியாது ஆபுவும் தெரியாது போயா" என்றவள் அவன் 'ஹலோ ஹலோ ' என்று சொல்வதைப் பொருட்படுத்தாமல் அழைப்பைத் துண்டித்திருந்தாள். மாறாக அவளது வதனத்தில் புன்னகை.


"யாருட்டி?" நன்மதி

"அவென் தான் 'நெடுமங்காடு' " என்று சிரித்தாள்.

"அப்படியா? பாரேன் நம்பர் போட்டு போட்டு கண்டுபிடிச்சிருக்கான் பாரு" அவளோ ஆச்சரியத்தில்.

"இது லேட்டுடி. நான் முன்னாடியே எதிர்பாத்தேன். இந்த பசங்களே இப்படி தான். ஒரு பொண்ண பாக்கனும் பேசனும் பழகனும் அப்புறம் கழட்டி விட்ருவான்க" சலிப்பாய்.

"எல்லாரும் அப்படி கிடையாது வேணி"

"அப்படி நீ வேணும்னா நம்பிக்கோ. சரி சரி வா சோறு வை. நீ செஞ்ச சாம்பாரும், உங்க வீட்டு நெய்யும், அப்பளமும் சாப்பிட்டா தான் எனக்கு ஞாயிற்று கிழமையே நிறையும்"

"உக்காருட்டி எடுத்துட்டு வரேன்"

சென்னை
"டேய் மச்சான் இவனுக்கு என்னமோ ஆகிடுச்சி. இங்க பாரு வந்ததுல இருந்து ஊதி தள்ளிட்டு இருக்கான். இதோட நாலாவது" ரகுபதி

"என்னாச்சுடா? வீட்டில் எதுவும் பிரச்சினையா?" மாறன்

"இல்லைடா மச்சி. நாம ஆப்ரஹாம் மேரேஜ்க்கு போனோமே ஞாபகம் இருக்கா?"

கையிலிருந்த புகையிலை பூஞ்சுருளை தரையில் போட்டு செருப்பணிந்த காலால் நசுக்கியப்படியே வினவினான்.

"புரிஞ்சுபோச்சிடா. இன்னும் அந்த பொண்ணதான் நினைச்சிட்டு இருக்கியா?" ரகு

"கால் பண்ணி பேசுனா யாருனே தெரியாத மாதிரி பேசி கட் பண்ணிட்டா மச்சி. மனசுக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சி." இளநேயன்

"நீ வேறு யாருக்கும் தெரியாம நம்பர் போட்டிருப்பியா இருக்கும்டா. 'ஆபு'க்கு கால் பண்ணி அவன் ஒய்ப்கிட்டே நம்பர் சரியானு கிராஸ்செக் பண்ணிக்கடா" ரகுபதி

நண்பன் சொல்லியது சரியென்று எண்ணிய நேயன் உடனே ஆப்ரஹாம் எண்ணிற்கு அழைத்து விஷயத்தை சொல்லி நான்சியிடம் கேக்க சொல்ல, அவளோ முடியவே முடியாது என்று மறுதலித்தாள்.

"சிஸ்டர் நான் தப்பான பையன் எல்லாம் கிடையாது. அவள் தான் நம்பர் கொடுத்தா பட் இப்ப கால் பண்ணா ராங் நம்பர்னு கட் பண்றா. நம்பர் சரியானு மட்டும் சொல்லுங்க சிஸ்டர்"

"எங்க கல்யாணத்துக்கு வந்துட்டு உங்க கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டு போயிருகீங்க போல. ஐ அம் ரியலி சாரி ப்ரோ. என்னால நம்பர் ஷேயர் பண்ண முடியாது. அவளே நம்பர் கொடுத்துட்டு பேசாமல் இருக்கானா அவளுக்கு அதில் விருப்பம் இல்லைனு தானே அர்த்தம். நான் ஆபு கிட்டே குடுக்கிறேன் பேசுங்க" என்ற நான்சி ஆபுவிடம் கொடுத்து விட்டு நகர்ந்தாள். மீண்டும் ஏமாற்றத்துடன் நேயன்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கொக்கிரகுளம் போகும் பேருந்தில் அன்றைய தினம் கூட்டம் வழிந்தது. பேருந்து நகர்ந்த பின் இரு பெண்கள் ஓடி வந்து குதித்து ஏறினர்.

"ஏட்டி மதி ஸ்டெப்ல நிக்காத மேலே ஏறி நின்னு" ஓடி வந்து ஏறிய வேகத்தில் மேலே ஏறிய இளவேனில் அவளுக்கு பின்னதாக ஏறிய நன்மதியிடம் சொல்லியிருந்தாள்.

ஆனால் அவள் நகர முடியாதபடிக்கு அவளுக்கு அருகில் ஒருவனும், கீழ் படிக்கட்டில் ஒருவனும் நின்று பேருந்து ஆடும் ஆட்டத்திற்கு நெருக்கமாக வருவது போல 'பாவ்லா' செய்ய நன்மதிக்கு சங்கடத்தோடு கூட கண்கள் கலங்கியது. அதைப்பார்த்த இளவேனியின் இரத்தக்கொதிப்பு அதிகரிக்க,

"கொஞ்சம் வழி விடுங்க." என்று கீழே இறங்கி படிக்கட்டில் நின்று கொண்டு

"என்னேலே என்னங்கேன்? ஆங்... ஏட்டி கண்ண கசக்காம மேலே ஏறுட்டி. வழி விடுல"

அவள் கத்தியதும் நகர்ந்த வாலிபர்கள் அவளது இடுப்பு பக்கத்தில் கையைக் கொண்டு சென்று பேருந்தின் கம்பியை பிடிப்பது போலக் கொண்டு செல்ல, அமைதிக் காத்தவள் அடுத்து அவன் பாடிய பாடலில் கடுப்படைந்தாள்.

"இடையா இது இடையா மெல்லிடையா..." வாலிபன் 1

"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்.." வாலிபன் 2

"எடு செருப்ப. ஏம்லே உனக்கு என்னலே பிரச்சினை? பஸ்குள்ள ஒழுக்கமா வரமாட்டியலா? உன் அம்மைகிட்ட இப்படி தான் பாடுவியலா?" காட்டமாக கேள்வி கேட்க வாலிபர்கள் இருவரும் பம்மியபடி வேறு பக்கம் திரும்பி கொண்டனர்.


"வேணி கத்தாத எல்லாரும் பாக்குதாவ" பதற்றத்தில் நன்மதி.

"பாத்தா பாக்கட்டுமுட்டி. அவிய அவிய வீட்டு பொண்ணுகளுக்கு ஏதாவதுனா தான் குரல் குடுப்பாவ. நமக்கு நாமதேன் குரல் கொடுக்கனும். இல்லனா இதுமாதிரி கிறுக்கனுவ திருந்தமாட்டானுவ" என்று சத்தமாக பேச அதன் பிறகே சொரணை வந்த சில ஆடவர்களும் பெண்களும் அந்த வாலிபர்களை சத்தம் போட்டு பேருந்தில் இருந்து இறக்கிவிட்டனர். இதையெல்லாம் இரு விழிகள் தூரத்தில் நின்று இரசித்திருந்தன.

இருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு கணினி துறையில் பயில்கின்றனர். கல்லூரி வளாகத்தில் இளவேனி பெருஞ்சினத்துடன் நின்றிருந்தாள். அவளது பலமும் பலவீனமும் சினம் மட்டும் தான்.

"வேணி கோவப்படாதட்டி அந்த நேரம் எனக்கு அழுகை வந்துட்டு. அடிக்க வேணா செஞ்சிக்க பேசாமல் இருக்காத பேசுட்டி" கெஞ்சி சமாதானம் செய்ய முயன்றுக் கொண்டிருந்தாள் நன்மதி வேணியிடம்.

"எத்தனை தடவை உனக்கு சொல்றேன். ஒருத்தன் உன்னை ஹர்ட் பண்றானு பீல் ஆனா கண்ணை கசக்காத தூக்கி போட்டு மிதி. வாரத பொறவு பாக்கலாம். ராஸ்கல்ஸ் இந்த நாய்களால தான் இன்னும் பல பெண்கள் வெளியே வரவே பயந்து வீட்டில் இருகாங்க"

"வேணி உன் அளவுக்கு எனக்கு தைகிரியம் கிடையாது. நீ இறங்கி நின்னு பேசினமாதிரிலாம் எனக்கு பேச வராது. அது உனக்கே தெரியும். என்னை பாத்துக்க தான் நீ இருக்கல்ல விடேன்ட்டி"

"பழகிக்க மதி. இப்ப நான் இருக்கேன். நாளைக்கு நான் இல்.."

சொல்லி முடிப்பதற்குள் கைகளால் வேணியின் வாயை மூடிய நன்மதி

"அப்படி எல்லாம் பேசாத வேணி" என்க அவளது விழிகளோ மழையென பொழிந்தது.

"ஏட்டி பேச்சுக்கு சொன்னா உடனே அழுவியா. கண்ணத் தொட மொத" என்றவள் அணைத்து கொண்டாள்.

இவர்கள் பேசியது எதுவும் கேட்கவில்லை என்றாலும் தூரத்தில் நின்று அதே விழிகள் இரசித்திருந்தன.

அன்று மாலை கல்லூரி முடிந்து இருவரும் பேசிக்கொண்டே பேருந்து நிலையத்திற்கு நடந்துச் செல்ல, அவர்கள் இருவரையும் பார்த்து 'ஹாய்' என்று கையை அசைத்து அவர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தான் இரசனை விழிகளுக்கு சொந்தக்காரனவன்.

முகை உதிரும்...
 
Top Bottom