• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகுடம் சூட்டும் காதல் - 7

அத்தியாயம் - 7


கார் ஒரு பிரம்மாண்டமான இரும்புக் கேட்டைத் தாண்டி, பெரிய புல்வெளித் தோட்டம் அமைந்திருந்த மாளிகையின் போர்டிகோவில் வந்து கம்பீரமாக நின்றது.

இந்த மாளிகை விஸ்வநாதன் பங்களாவை விடப் பெரியது.. பாரம்பரியமிக்க அரசியல் கௌரவம் நிறைந்தது.

தேர்தலில் இவர் தான் ஜெயித்திருக்க வேண்டும்.. ஆளுங்கட்சி சதி செய்து ஜெயித்திருக்க, இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

இன்னும் சில மாதங்களில் வரும் தேர்தலில் இவர் தான் ஜெயிப்பதும் உறுதியாகி இருந்தது.

காரின் கதவு திறக்கப்பட, முதலில் கர்ணன் இறங்கிட, அடுத்து விருசாலியும் இறங்கினாள்.

பங்களாவின் பிரம்மாண்டமான முகப்பில், வாசலிலேயே அர்ஜுன் மற்றும் விருசாலியின் பெற்றோர் மணமக்களை மலர்ந்த முகத்தோடு வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தனர்.

விருசாலியின் அம்மா கையில் ஆரத்தித் தட்டுடன் நின்றிருந்தார். அவருக்குப் பக்கத்தில் விருசாலியின் பெரியப்பாவும் நின்றிருந்தார்.

"வாப்பா கர்ணா... உள்ள வா விருசாலி.." என்று விருசாலியின் அம்மா அன்போடு வரவேற்று மணமக்களுக்குத் திருஷ்டி சுத்தி ஆரத்தி எடுத்தார்.

சின்ன வயதிலேயே விபத்தில் பெற்றோரை இழந்த விருசாலியை, தங்களின் சொந்த மகளை விட ஒரு படி மேலாக, சகல பாசமும் கொடுத்து வளர்த்தவர்கள் இவர்கள்.

அதிகமாக இவர்களுடன் அர்ஜுன் இருந்ததில்லை. அர்ஜூன் கிராமத்தில் இருந்தாலும், மகளின் மறுவீட்டுக்காக வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

"வாப்பா கர்ணா.." என்று பெரியப்பாவும் அழைத்திட, விருசாலி தன் அம்மாவைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளது முகத்தில் அதுவரை இல்லாத ஒரு நிஜமான புன்னகையும், நிம்மதியும் அப்போது தெரிந்தது.

"தம்பி கர்ணா.. விருசாலிக்கு யாரும் இல்லைனு நினைக்காத .. அவ எப்பவும் என் பொண்ணு தான்.. எனக்கு பிறகு இந்த கட்சியை பார்க்க போறதும் இவ தான்.. விருசாலி தான் என் அரசியல் வாரிசு.. அவ எங்களுக்குப் பொண்ணு இல்லை எங்க வீட்டு மகராசி..

இவ உன்னைய தான் கல்யாணம் பண்ணுவேனு நின்னப்ப கூட எனக்கு கோவம் வரல.. ஏன்னா உன்னைய பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அதனால தன் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்.. அவளை நாங்க எப்படி வளர்த்தோம்னு உனக்குத் தெரியும்.. அவ கரம் பிடிச்ச நீயும் இப்போ எங்க வீட்டுப் பிள்ளை தான்" என்று சாதாரணமாகவே பேசினார்.

இந்த கட்சியில் கர்ணன் இருந்தாலும் அவரிடம் அதிகமாக பேசியதில்லை. கட்சியாளர்களிடம் எப்போதும் சீறும் பாம்பாக தான் இருப்பார். அதனால் தான் என்னவோ இவருக்கு பயந்து அமைதியாக இருக்கிறார்கள்.

கர்ணன் அந்தப் பெரிய தலைவரின் பேச்சில் இருந்த எளிமையைக் கண்டு ஒரு நொடி வியந்தான். விஸ்வநாதன் பங்களாவில் இருக்கும் அந்த அரசியல் பகட்டும், அதிகாரத் தோரணையும் இந்த மாளிகையின் தலைவரிடம் இல்லை. மாறாக ஒரு குடும்பப் பெரியவரின் பாசம் மட்டுமே அவரிடம் தெரிந்தது.

"சமையல்காரங்க இன்னைக்குக் காலைல இருந்து உங்களுக்காகத் தான் சமைச்சுட்டு இருக்காங்க.. சாப்பிட்டுட்டே பேசலாம்" என்று பெரியம்மாவும் கூறிட, அவனும் லேசாக தலையசைத்தான்.

"சாப்பிடுப்பா கர்ணா.. உனக்கு முருங்கைக்காய் சாம்பார் பிடிக்கும்னு விருசாலி சொன்னா.. அதான் ஸ்பெஷலா வெக்க சொன்னேன்.." என்ற விருசாலியின் அன்னைக்கு சின்ன சிரிப்பை உதித்தான்.

இவனுக்கு இப்படி யாரும் பரிமாறியது இல்லை.. மங்களம் எல்லாம் செய்வார் தான். ஆனால் விஸ்வநாதனுக்கு பயந்து கொண்டு நிற்க மாட்டார். அவனின் கண்கள் லேசாக கலங்கியது.

"தம்பி கர்ணா... இந்த டைனிங் டேபிள்ல எப்பவும் என் இரண்டு பக்கமும் விருசாலியும் அர்ஜூனும் உட்கார்ந்து சாப்பிடுவாங்க.. இப்போ இந்த இரண்டு நாற்காலி காலியா இருக்கறது தான் கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்று தனக்கு இடப்பக்கம் இருந்த வெற்று நாற்காலியைக் காட்டி லேசாகப் புன்னகைத்தார் அவர்.

கர்ணன் அந்த நாற்காலியைப் பார்த்து விட்டு "ஏன் ஐயா அர்ஜுன் தம்பி ஊர்ல இல்லையா.?" என்று எதார்த்தமாக கேட்டான். அவனிடம் சவால் விட்ட போது கூட அவன் எங்கு சென்றான் என்பது தெரியாது.. விஸ்வநாதனுக்கு பல கிராமங்களில் ரசாயன ஆலை உள்ளது. அவன் நெல் வயல் கிராமத்தில் இருக்கிறான் என்ற செய்தி கர்ணன் அறியவில்லை.

விஸ்வநாதன் வீட்டில் எப்போதும் அதிகாரப் போட்டியும், அடுத்தவனை எப்படி வீழ்த்துவது என்ற திட்டமிடுதலும் மட்டுமே உணவருந்தும் போது பேசப்படும். ஆனால் இங்குப் பேச்சே வேறாக இருந்தது.

"அவன் என் பையன்ங்கிறதை அவனே மறந்து ரொம்ப நாளாச்சுப்பா.. நான் நினைச்சுருந்தா அவனுக்குக் கட்சில பெரிய பதவியோ, இல்ல ஒரு பெரிய பிசினஸோ ஆரம்பிச்சு கொடுத்திருக்கலாம்.. ஆனா அவனுக்கு இந்த அதிகாரமும், சத்தமும், அரசியல் பகட்டும் கொஞ்சம் கூடப் பிடிக்கல..

எனக்கு பிடிச்ச வேலையை தான் செய்வேன்.. என் போட்டோ எங்கையும் வர கூடாது.. உங்க பையன் நான் தானு யாருக்கும் தெரியக் கூடாதுனு பல கட்டளையை எனக்கே போட்டு ஊர் ஊரா சுத்திட்டு இருக்கான்.. இப்ப நெல்வயல் கிராமத்துல ஸ்கூல் டீச்சரா இருக்கேனு போன் பண்ணி சொல்றான்..

அவன் அங்க போனதே எனக்கு தெரியாதுப்பா.. எல்லாம் அக்காவும் தம்பியும் பேசிக்குவாங்க.. நான் எங்கடா ஒரு வாரமா நம் பையனை காணோம்னு போன் பண்ணுனா தான் அவன் எங்கிருக்கறானு விசயமே எனக்கு தெரிய வரும்.. அவன் அவன் என்னைய கண்டு பயந்துட்டு இருந்தா வீட்டுல நான் ஜோக்கரா இருக்கேன் பாருப்பா.." என்று சாதாரணமாக கூறி சிரித்தார்.


"ப்ச் பெரியப்பா அவனுக்கு அது தான் பிடிச்சுருக்குனு சொல்றப்ப என்னால எப்படி தடுக்க முடியும்.? நான் உங்க பக்கத்துல இருக்கறப்ப அவன் எதுக்கு பயப்பட போறான்.? அவனுக்கு பிடிச்சதை அவன் பண்ணட்டுமே.?" என்று விருசாலியும் தம்பிக்கு ஆதரவாக பேசினாள்.

அவரின் மனைவியும் குறுக்கிட்டு "ஆமாப்பா கர்ணா.. அவன் சின்ன வயசுல இருந்தே அப்படித் தான். ஆடம்பரம்னா அவனுக்கு ஆகாது.. இவ்வளவு பெரிய பங்களா, கார், அதிகாரம் எதுவுமே எனக்கு வேணாம்ங்கற முடிவுல உறுதியா இருக்கான்.. சொல்லபோனா எனக்கே இந்த ஆடம்பரத்துல விருப்பமில்ல தான்.. இந்த மனுசனுக்காக எல்லாம் பொறுத்துட்டு இங்கையே கிடக்கறேன்..

அவனால அப்படி முடியல.. இப்படி எங்கையாவது போய்ருவான்.. அவனுக்கு அதிகமா பிடிச்ச வேலையே டீச்சர் வேலை தான்ப்பா.. இப்படி அடிக்கடி வேற வேற பக்கம் டீச்சரா இருந்துருக்கான்.. எப்பவும் சொல்லிட்டு தான் போவான்..

இந்த தடவை தான் ஒன்னும் சொல்லாம போய்ருக்கான்.. நேத்து கூட போன் பண்ணுனான்...அப்ப அங்க இருக்கற பள்ளிக்கூடத்தைப் பத்தியும், பசங்களோட திறமையைப் பத்தியும் தான் பெருமையா பேசுனான்.." என்று தன் மகனை நினைத்து உருகினார்.

அர்ஜுனைப் பற்றி இவ்வளவு பாசமாகவும், எதார்த்தமாகவும் இவர்கள் பேசுவதைக் கேட்ட கர்ணனின் கை, உணவை வாய்க்குள் கொண்டு செல்லாமல் அப்படியே நின்றது.

எத்தனை பேரை அடக்கி ஆள்பவர் இவர்.. அப்படி இருந்தும் மனைவிக்குரிய அங்கிகாரத்தையும் மகனுக்குரிய சுதந்திரத்தையும் குடுத்திருக்கிறார்.. அதுமட்டுமில்லாமல் மகள் தன்னை விரும்புகிறாள் என்று தெரிந்ததுமே தன்னை மாப்பிள்ளையாக்கியும் இங்கு அமர வைத்திருக்கிறார்.

இவரோடு தன் அண்ணனை ஒப்பிட்டு பார்க்கும் போது அவனுக்கே உவப்பாக இருந்தது.

இவர்கள் ஒன்று கூறுகிறார்கள்.. அர்ஜூன் வேறொன்று அல்லவா தன்னுடன் பேசினான்.. எது உண்மை.? என்று குழம்பினான்.

அதே சமயம் ஆகாஷ் எந்தத் தகுதியும் இல்லாமல் அடுத்த முதலமைச்சர் நாற்காலியில் அமரத் துடித்துக் கொண்டிருக்கிறான். அதற்காகப் பல கோடிகளைச் சுருட்டத் திட்டமிடுகிறான். ஆனால் நிஜமாகவே அந்த கட்சியின் மகனோ சகல வசதிகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒரு எளிய கிராமத்துத் டீச்சராகப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறான்..

இந்த முரண்பாடு கர்ணனை ஒரு நிமிடம் நிலை குலைய வைத்தது. அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த விருசாலி, தன் பெரியப்பாவையும் கர்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளது உதடுகளில் ஒரு புன்னகை அரும்பியது.

கர்ணனின் மனதுக்குள் ஓடும் அந்த எண்ண ஓட்டங்கள் அவளுக்கும் புரிந்திட, 'இதையை தான் நானும் எதிர்பார்த்தேன்..' என்பதை போல் அவளின் இதழ்கள் லேசாக வளைந்தன.

தலைவர் மாளிகையில் இருந்து விடைபெற்று, கர்ணனும் விருசாலியும் மீண்டும் அந்த கறுப்பு நிறச் சொகுசு காரில் ஏறினர். கார் விஸ்வநாதன் பங்களாவை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்தது.

காரை ஓட்டிக் கொண்டிருந்த கர்ணனின் மனதுக்குள் ஒரு பெரிய போர்க்களமே ஓடிக் கொண்டிருந்தது. 'என் மகன் அர்ஜுன் அந்த நெல்வயல் கிராமத்துல சாதாரண டீச்சரா இருக்கான்பா' என்று சொன்ன வார்த்தைகள் அவனது காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன.

நெல்வயல்.. அது வெறும் ஒரு கிராமம் அல்ல கர்ணன் பிறந்து வளர்ந்த அவனது சொந்த ஊர்.. அங்கேதான் அவனது வேர்கள் இருக்கின்றன.

இவனின் தந்தை அரசியலுக்காக சொந்த ஊரை விட்டு வந்து விட்டார். மனைவி இறந்து விட்டதால் மகனையும தன்னோடு அழைத்து வந்திருக்க, இப்போது அவனுக்கு சொந்த ஊரில் எந்த உறவுகளுடர் தொடர்புகள் இல்லை.

'அர்ஜுன் எதற்காக அந்த ஊருக்குப் போயிருக்கிறான்.? அங்க என்னமோ பிரச்சனை நடக்குதுனு சொன்னானே.? அது உண்மையா.?' என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்தினான்.

"விருசா அர்ஜுன் தம்பி நெல்வயலுக்கு எதுக்காகப் போயிருக்கான்.? அங்க என்னமோ நடக்குதுனு சொன்னான்.? ஆனா உங்க பெரியப்பாவும் பெரியம்மாவும் அவன் அங்க ஒரு சாதாரண ஸ்கூல் டீச்சரா மட்டும் தான் இருக்கானு நினைச்சு இவ்வளவு பாசமா உருகிப் பேசுறாங்க.. அவனோட நிஜமான நோக்கம் அவங்களுக்குத் தெரியாதா.? முதல்ல அவன் அங்க என்ன பண்ணிட்டு இருக்கான்.? என்னைய ஏமாத்தற மாதிரி இவங்களையும் ஏமாத்திட்டு இருக்கானா.?" என்று கேட்டான்.

அவனது குரலில் அர்ஜுன் மீது ஒரு லேசான ஆத்திரமும், அதே நேரத்தில் தலைவர் குடும்பத்தின் மீதான ஒரு விசித்திரமான சந்தேகமும் கலந்திருந்தது.

அவனது கேள்வியை எள்ளளவும் எதிர்பார்க்காத விருசாலி, தன் பட்டுப்புடவையின் முந்தானையை நிதானமாகச் சரிசெய்தபடி ஜன்னல் வழியே வெளியே தெரிந்த போக்குவரத்து நெரிசலைப் பார்த்தாள்.

அவளது உதட்டோரத்தில் ஒரு மெல்லிய, புன்னகை முளைத்தது. கர்ணன் அர்ஜுனைப் பற்றிக் கேட்பது இதுதான் முதல் முறை என்பதால், இந்தத் தருணத்தை அவனுக்குப் பதிலடி கொடுக்க மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள்.

காரில் இருவரும் மட்டும் இருப்பதால் அவள் பேச வேண்டியது பேசி விடலாம் என்று நினைத்து மெதுவாகத் திரும்பி, கர்ணனின் கோபமான கண்களைத் தன் தீர்க்கமான கூர்மையான கண்களால் நேராகப் பார்த்தபடி "ஏமாத்துறதா.? என் தம்பி அர்ஜுன் யாரையும் ஏமாத்தல கர்ணா.. குறிப்பா பெத்தவங்களை ஏமாத்த வேண்டிய அவசியம் அவனுக்குக் கிடையாது" என்றாள் விருசாலி அழுத்தமான குரலில்.

உன் அண்ணன் எந்த தப்பும் பண்ண மாட்டாருனு சவால் விட்டீயே இப்ப மட்டும் இதைய தெரிஞ்சு என்ன பண்ண போற.?அவனுக்கு உங்க அண்ணன் விஸ்வநாதனோட பண பலமும், ரவுடி பலமும் நல்லாவே தெரியும்..

நெல்வயல் கிராமத்துக்கு அவன் போற ஐடியாவே இல்லை.. ஆகாஷூம் இன்னொருத்தனும் பேசிட்டு இருக்கறதை பார்த்து தான் அவன் அங்க போகவே முடிவெடுத்தான்.. அவனுக்கு அரசியல் பிடிக்காது தான்.. அதுக்காக மக்கள் எப்படியோ போகட்டும்னு விடற குணமில்லை..

விசயம் சிறுசுனு நினைச்சு அவன் அங்க போனா அங்க போனதுக்கு அப்புறம் தான் உங்க அண்ணன் விஸ்வநாதனோட அந்த நச்சுத் தொழிற்சாலையைப் பத்தின கொடூரமான உண்மைகளே தெரிய வந்துச்சு.." என்றாள் நிதானமாக.

"விருசா வார்த்தையை அளந்து பேசு.. எங்க அண்ணனைப் பத்தி தப்பா பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன்.. எங்க தப்பு நடந்தாலும் அதுக்கு காரணம் என் அண்ணன் தானா.? எப் பார்த்தாலும் எல்லாத்துக்கும் என் அண்ணன் தான் காரணம்னு சொல்லிட்டு இருக்க.? அவரை பத்தி எனக்கும் தெரியும்.. ஒன்னு ரெண்டு தப்பு செய்வாரு தான்.. அதுக்காக இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க மாட்டாரு.." என்று தன் அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசினான் கர்ணன்.

"உண்மை எப்பவுமே கசக்கத். தான் செய்யும் கர்ணா.." என்று அவளது குரலை ஒரு படி உயர்த்தி கூறியவள் "நெல்வயல்ல விஸ்வநாதனோட அந்தப் புது கெமிக்கல் ஃபேக்டரி கழிவுகளால, அந்த ஊர் மண்ணும் தண்ணியும் முழுசா விஷமாகிட்டு இருக்கு.. அங்க இருக்கற புதுமணத் தம்பதிகளுக்குத் தீவிரமான மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படுது.. ஒரு தலைமுறையையே உங்க அண்ணனோட பணவெறி அழிச்சுட்டு இருக்கு..

அது உனக்கு புரியுதா.? இல்லையா.? அங்க நடக்கறதை நேர்ல பார்த்தா தான் உனக்கும் புரியும்.." என்று நிலைமையை அவனுக்கு விளக்க முயன்றாள்.

கர்ணன் சட்டெனச் சிரித்து "என் அண்ணன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்துருக்காரு.. சட்டப்படியாக தான் அந்த ஃபேக்டரி அங்கே நடக்குது..

அன்னைக்கு நீயும் அர்ஜுனும் போன்ல ஏதோ ரகசியமா சதித் திட்டம் போடறதை நான் அரைகுறையாகக் கேட்டுட்டுத் தான் உன் தம்பிகிட்ட சண்டைக்குப் போனேன்.. எங்க பிரச்சனை நடந்தாலும் அதுக்கு காரணம் என் அண்ணன் என் அண்ணன் தான்.. அவரு உன்னைய வேணாம்னு சொன்னதுக்காக அவரை பழி வாங்கிட்டே இருப்பீயா.?

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்க அண்ணனோட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப் பார்க்கறீங்க. அதுதான் நிஜம்.." என்றவனை என்ன செய்தால் தகுமென்ற ரீதியில் முறைத்தாள்.

"வளர்ச்சியா.? அடுத்தவங்களோட கருப்பையை அழிக்கறது தான் வளர்ச்சியா கர்ணா.? என் பெரியப்பாகிட்ட ஒரு வார்த்தை சொன்னாலே போதும்.. ஆனா.அவன் அப்படி செய்யல.. அங்க நடக்கறதை ஆதாரத்தோட நிரூபிக்கணும்னு போராடிட்டு இருக்கான்.. நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க.?" என்று எரிச்சலுடன் வினவினாள்.

"வாயை மூடிட்டு வா.." என்று விட்டான் கர்ணன்.

கார் விஸ்வநாதன் பங்களாவின் போர்டிகோவில் வந்து நின்றதும், கர்ணன் கதவைத் திறந்து கொண்டு ஆத்திரத்துடன் இறங்கினான். அவனுக்கு இணையாக விருசாலியும் காரில் இருந்து அதே கோவத்தில் இறங்கினாள்.

காரில் அவளோடு நடந்த அந்த ஏட்டிக்குப் போட்டியான விவாதம் அவனது இரத்தத்தை இன்னும் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் பங்களாவின் பிரம்மாண்டமான
இரும்பு வாயிலைத் தாண்டி அவர்கள் உள்ளே நுழைந்த அந்த வினாடி அங்கே ஒரு மிகப்பெரிய பூகம்பமே வெடித்திருந்தது.



தொடரும்..
 
Top Bottom