அத்தியாயம் 20
டோர்ட்மண்ட் நகரின் சற்று உள்ளே கிராமமும் அல்லாத நகர்ப்புறத்தின் வாடை பெரிதாக வீசாத ஊர் அது. அங்கேதான் நாவினியின் வீடு இருந்தது. அதன் முன்னே காரைக் கொண்டுவந்து நிறுத்தினான் உதயன். முகம் நிறைந்த புன்னகையோடு வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வந்தார்கள் சிவதாசனும் மேனகாவும். கூடவே உதயனின் மகன் சாருகனும்.
அதுவே, இவர்கள் வரவை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக்கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள் என்று சொல்லிற்று. ஓட்டுனருக்குப் பக்கத்து இருக்கையிலிருந்து இறங்கிய கேசிகனை, “வாங்கோ தம்பி, பயணமெல்லாம் சுகமா இருந்ததா?” என்று சொந்த மருமகனை வரவேற்கும் வாஞ்சையோடு அணைத்து வரவேற்றார் சிவதாசன்.
“எங்க எங்கட பெரிய மனுசன், அவரையும் வரவேற்கோணும்தானே?” என்றுகொண்டு மேனகா பின் கதவைத் திறக்க, “ஓமோம், நானும் வந்திருக்கிறன்.” என்றுகொண்டு இறங்கினான் சஜிதன்.
“பயணம் சுகமா இருந்ததா சஜுக்குட்டிக்கு?” அவனை அள்ளித் தூக்கிக் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே வினவினார் மேனகா.
“ஓம் சுகமா இருந்தது. அப்பும்மா மட்டும் வரேல்ல. ஃபிளைட்ல இடம் இல்லையாம். எங்களை முதல் போகச் சொன்னவா. பிறகு அப்பும்மா வருவா.” செல்ல மொழியில் பெரிய பதில் சொன்னான் குழந்தை.
“ஓமய்யா. நானும் விசாரிச்சனான். ஆனா அடுத்த ஃபிளைட்ல கட்டாயம் பிள்ளையின்ர அப்பம்மாவை கூட்டிக்கொண்டு வருவம் என்ன.”
உதயனின் மகன் சாருகனை இலங்கை வந்தபோதே பழக்கம் என்பதில் மேனகாவிடமிருந்து நழுவி அவனிடம் ஓடினான் சின்னவன்.
கொண்டுவந்த பெட்டிகளைக் காரிலிருந்து இறக்கி, வீட்டினுள் வந்து, சிறிய வரவேற்பு போன்ற முன்பகுதியில் ஷூக்களைக் கழற்றினர். அது குளிர்காலம் என்பதில் எல்லோரும் அணிந்திருந்த மேலங்கிகளைக் கழற்றி அவற்றுக்கான தாங்கிகளில் கொழுவிவிட்டு, உள்ளே வந்து அந்த வீட்டின் சோஃபாவை நிறைத்தபோது நாவினியின் மனமும் நிறைந்துபோயிற்று.
இலேசாக அரும்பிய விழி நீருடன் அங்கே புகைப்படங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த பெற்றோரிடம் அவள் பார்வை சென்று நிலைத்தது.
“நவி, தண்ணி கொஞ்சம் தா!” என்று கேட்டு அவள் மோனத்தைக் கலைத்தான் கேசிகன்.
விரைந்து சென்று நீண்ட கண்ணாடிக் குவளையில் கொண்டுவந்து கொடுத்தாள் அவள். வாங்கிப் பருகிவிட்டு வெறும் குவளையை அவளிடமே நீட்டினான் கேசிகன்.
பெற்றவர்களைப் பார்த்துக் கலங்கி நின்ற நாவினியை மேனகாவும் கவனித்தார்தான். அவர் அவளைத் திசைதிருப்ப முதல், இயல்பாக அவளைக் கையாண்டிருந்தான் கேசிகன். அதன் மூலம் அவர் உள்ளத்தின் நன்மதிப்பையும் நொடியில் பெற்றுக்கொண்டிருந்தான்.
அர்த்தமாகக் கணவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அம்மாவோட எடுத்துக் கதைச்சனீங்களா கேசிகன்?” என்று விசாரித்தார்.
“ஓம் அன்ட்ரி. இஞ்ச வந்து இறங்கினதும் கதைச்சனான். அவா இன்னும் அங்க அழுதுகொண்டுதான் இருக்கிறா. எங்கட பெரிய மனுசனுக்கும் கொஞ்சம் மனம் சரியில்ல.” சாருகனின் கார்கள் சிலது எப்போதுமே இங்கே நாவினியின் வீட்டு விறாந்தையின் சுவரோரமாகப் பார்க் பண்ணபட்டிருக்கும். அவற்றை வைத்துச் சாருகனோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த மகனைக் காட்டிச் சொன்னான்.
“பாவம்தான். வேற பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தா கூடச் சமாளிக்கலாம். இது சின்னவரைக் கைக்கையே வச்சு வளத்ததும் அவா எல்லோ. அவருக்குப் பின்னாலயேதானே திரிவா. கவலைதான். ஆனா அவசரமா செய்றதுக்கும் ஒண்டும் இல்லையே.” ஒரு பெருமூச்சுடன் உணர்ந்து சொன்னார் மேனகா.
கேசிகனுக்கும் அன்னையின் பேச்சு வந்ததும் உள்ளம் பாரமாயிற்று. வயதுபோன காலத்தில் துணைக்கு ஒருவரும் இல்லாமல், அயலட்டை மனிதர்களை மாத்திரமே நம்பி வாழ்வது எவ்வளவு கொடுமை? முதுமை என்பதே கொடுமை. அதனோடு தனிமையும் சேர்ந்தால்?
அவன் மனவோட்டத்தைக் கணித்த சிவதாசன், “தம்பிய மேல கூட்டிக்கொண்டு போங்கோமா. குளிச்சுக்கிளிச்சு வரட்டும். சாப்பிடலாம்.” என்று சொன்னார்.
அவ்வளவு நேரமும் அவர்களைப் பேச விட்டுவிட்டுப் பதுமையாக நின்றிருந்தவள் வருகிறாயா என்பதுபோல் கேசிகனைப் பார்த்தாள். அவனும் எழுந்துகொண்டான். அவள் பெட்டி ஒன்றைத் தூக்கப்போக, “நீ விடு!” என்றுவிட்டு இரண்டு பெட்டிகளையும் கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு மாடியேறினான்.
“சஜுக்குட்டியும் வாங்கோ. உடுப்பு மாத்திக்கொண்டு வருவம்.” என்று அவனைத் தூக்கிக்கொண்டு கேசிகனின் பின்னால் சென்றாள் நாவினி.
அப்படி மூவரும் ஒரு குடும்பமாக மேலே சென்ற காட்சி மிகுந்த நிறைவாக இருந்தது. “ஒரு பிள்ளை இருக்கே எண்டு யோசிச்சன். இப்ப பாத்தா நவிய மாத்துறதுக்கு எண்டே அந்தக் குழந்தை வந்த மாதிரி இருக்கு.” என்று தமக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார் மேனகா.
“ஷ் மேனகா!” மேலே அவர்களுக்குக் கேட்டுவிட்டாலும் என்று எண்ணி மனைவியை அடக்கினார் சிவதாசன்.
“கேக்காது மாமா. ஆனா, அவர்தான் இவேய சேத்து வைக்கப்போற ஆள்.” பார்வை ஒரு முறை மேலே சென்றுவர ரகசியமாகச் சொன்னாள் பிரியா.
“என்னவோ சந்தோசமா இருந்திடோணும். ‘என்ர பிள்ளையை விட்டுடாதீங்கோ மேனகா’ எண்டு அபி கடைசியா என்ர கையப் பிடிச்சுக்கொண்டு சொன்னதுதான் கண்ணுக்கையே நிக்குது.” என்று கண் கலங்கினார் மேனகா.
“அம்மா! அதுதான் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நவி கட்டி, அவரும் வந்திட்டார் எல்லா. சும்மா சும்மா அதையே கதைக்கிறேல்ல.” என்று அதட்டி அடக்கினான் உதயன்.
அங்கே மேலே சென்றதும் எந்த அறை என்பதாக அவளைப் பார்த்து நின்றான் கேசிகன். மூன்று அறைகளும், சகல வசதிகளுடனும் கூடிய பெரிய குளியலறையும் மேலே இருந்தன.
“அது பாத்ரூம். இது என்ர அறை. இது அம்மா அப்பா இருந்தது. இது தம்பியாக்களின்ர. இதத்தான் உங்கள் ரெண்டு பேருக்கும் ரெடி பண்ணினனான்.” என்றபடி அந்த அறையின் கதவைத் திறந்து காட்டினாள் அவள்.
பொருள் விளங்காப் பார்வை ஒன்றை அவள் புறமாக வீசியபடி அந்த அறைக்குள் உள்ளிட்டான் கேசிகன். விசாலமான அறைதான். நடுவில் பெரிய கட்டில் ஒன்று. அதன் எதிர்ப்புறத்தில் சுவரோடு பெரிய அலமாரி.
“நவி அன்ட்ரி, இனி நாங்க எல்லாரும் இஞ்சயா படுக்கப்போறம்.” அந்தக் கட்டிலில் ஏறி அமர்ந்தபடி வினவினான் குட்டிக் கண்ணன்.
கேசிகனின் பார்வையும் இவளில் படிய, பதிலுக்காகத் திணறினாள் நாவினி. சின்னவனுக்கு அது தேவை இல்லை போலும். மற்ற அறைகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்க ஓடினான்.
நாவினியும் அங்கிருந்து நழுவி அவன் பின்னால் போக முயன்றாள். அதற்கு விடாமல் அவள் கரம் பற்றிக் கொண்டுவந்து தன் முன்னே நிறுத்தினான் கேசிகன்.
அவளிடத்தில் ஒரு பதற்றம். விமான நிலையத்தில் வைத்து அவன் இலேசாக என்றாலும் அணைத்து விடுவித்ததிலேயே அவளுக்கு உதறல் எடுத்திருந்தது. மனத்தின் படபடப்பு முகத்திலும் தெரிய நின்றவளின் கன்னத்தை ஒற்றை விரலால் அவன் வருட அவள் விழிகள் இரண்டும் விரிந்துபோயின.
அவன் உதட்டில் சின்ன முறுவல். அவள் பார்வையும் விழிகளை விரித்த அழகும் ஈர்க்க அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டிவிட்டு, “எப்பிடி இருக்கிறாய்?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.
அவளுக்குத் தொண்டையெல்லாம் உலர்ந்துபோயிற்று. தலையை இருபுறமுமாக ஆட்டி நன்றாக இருப்பதாகச் சொன்னாள்.
சஜிதனைப் போலவே இருந்த அவள் செய்கையில் அவன் உதட்டில் சன்னமான முறுவல்.
“அதென்ன பொக்கே?”
“அது… பிரியா அக்காதான்…” அவன் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னாள் அவள்.
அவள் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “அப்ப நீயா தரேல்ல?” என்றான் அவன்.
“இல்ல… அது…” பேசமுடியாமல் அவள் இதழ்களை ஈரப்படுத்த அவன் பார்வை அவற்றில் படிந்தது.
நாவினிக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. இதற்குள், “அப்பா! அந்த அறைக்க டிவி இருக்கு.” என்றபடி ஓடிவந்த சின்னவனால் வேகமாக இரண்டடி விலகி நின்றாள்.
கேலி இழையோடும் பார்வையால் அவளை ஒருமுறை உரசிவிட்டு மகனிடம் திரும்பினான் அவன். அவனுக்கு அங்கிருக்கும் எல்லாமே ஆச்சரியத்தை மூட்டின. அதுவும் இவள் பெற்றோரின் அறையில் இருந்த மசாஜ் செய்யும் இருக்கையை விட்டு அவன் அசைவதாகவே இல்லை. பெரும் சிரமப்பட்டுத்தான் அதிலிருந்து அவனைக் கிளப்பினார்கள்.
“குளிக்கோணும் நவி.” பெரிய பெட்டியைத் தூக்கிக் கட்டிலில் வைத்துத் திறந்தபடி சொன்னான் கேசிகன்.
“சஜுக்குட்டிய நான் குளிக்க வாக்கவா?”
“இல்ல இல்ல! சஜுக்குட்டி பெரிய மனுசன். அப்பாவோடதான் குளிப்பான்.” கட்டிலில் ஏறி அமர்ந்து, பிரித்த பெட்டியிலிருந்து தானும் பொருள்களை வெளியே எடுத்துவைக்க உதவியபடி சொன்னான் சின்னவன்.
“எல்லாத்தையும் இப்பவே எடுக்க வேணாம் தம்புடு.” என்று அவனைத் தடுத்துவிட்டு, ஒரு பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினான் கேசிகன்.
“உனக்காம் எண்டு அம்மா தந்துவிட்டவா.”
அவளுக்கு மாசிச் சம்பல் விருப்பம் என்று செய்து கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருந்தார் பிரேமா. அவரின் அன்பில் நெகிழ்ந்தபடி வாங்கிக்கொண்டாள். அவர்களுக்கான மாற்றுடைகளை எடுத்துவிட்டுப் பெட்டியை மூடி வைத்தான் அவன்.
அதற்குள் ஓடிப்போய்த் துவாய் எடுத்து வந்து கொடுத்தாள் நாவினி. அப்படியே குளிர் நீர், வெந்நீர்க் குழாய்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப எப்படிப் பயன்படுத்துவது என்று காட்டிக்கொடுத்தாள்.
“பெரிய மனுசன் கெதியா(விரைவா) குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடுவம்.” சின்ன சிரிப்புடன் சொன்னாள் நாவினி.
“கோழி இறைச்சிதானே? இண்டைக்கு வெள்ளிக்கிழமை இல்லை.” என்றான் அவன் அதற்கும்.
நாவினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “கோழி இறைச்சிதான். பிள்ளைக்கு விருப்பமான றால் பொரியலும் இருக்கு.” அந்தச் சிரிப்பினூடே சொல்லிவிட்டு இறங்கினாள்.
எல்லோருக்கும் சேர்த்துச் சமைக்கிறேன் என்று மேனகா சொன்னபோது இவற்றைச் செய்து தரச்சொல்லிச் சொல்லியிருந்தாள் நாவினி.
சிரித்த முகமாகவே இறங்கி வந்தவளைக் கண்டு, “என்னம்மா?” என்றார் மேனகா தன்னை மீறிய ஆவலோடு.
“குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடலாம் எண்டு சொல்ல, கோழி இறைச்சியா எண்டு உடனே கேக்கிறார் அன்ட்ரி. இதுல அவர் பெரிய மனுசனாம், அப்பாவோடதான் குளிப்பாராம்.” என்று சொல்லி இப்போதும் சிரித்தாள் அவள்.
இனியாவது இந்த முகத்தில் அந்தச் சிரிப்பு நிலைத்துவிட வேண்டும் என்கிற வேண்டுதலுடன், “நல்ல வடிவா இருக்கிறீங்கம்மா.” என்று எழுந்து வந்து, அவள் கன்னம் வழித்துச் சொன்னார் அவர்.
அவரை இதமாக அணைத்து, “எல்லாத்துக்கும் தேங்க்ஸ் அன்ட்ரி. அங்கிள் உங்களுக்கும்தான்.” என்று கண் கலங்கினாள் அவள்.
“அப்ப எங்களுக்கு?”
“உங்களுக்கும்தான் அக்கா.”
“அடிதான் வாங்கப்போறாய்.” என்று செல்லமாக அதட்டிவிட்டு, “வா, சாப்பாட்டை எடுத்துச் சூடாக்குவம்.” என்று அவளையும் அழைத்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள் பிரியா.
டோர்ட்மண்ட் நகரின் சற்று உள்ளே கிராமமும் அல்லாத நகர்ப்புறத்தின் வாடை பெரிதாக வீசாத ஊர் அது. அங்கேதான் நாவினியின் வீடு இருந்தது. அதன் முன்னே காரைக் கொண்டுவந்து நிறுத்தினான் உதயன். முகம் நிறைந்த புன்னகையோடு வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வந்தார்கள் சிவதாசனும் மேனகாவும். கூடவே உதயனின் மகன் சாருகனும்.
அதுவே, இவர்கள் வரவை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக்கொண்டு நின்றிருந்திருக்கிறார்கள் என்று சொல்லிற்று. ஓட்டுனருக்குப் பக்கத்து இருக்கையிலிருந்து இறங்கிய கேசிகனை, “வாங்கோ தம்பி, பயணமெல்லாம் சுகமா இருந்ததா?” என்று சொந்த மருமகனை வரவேற்கும் வாஞ்சையோடு அணைத்து வரவேற்றார் சிவதாசன்.
“எங்க எங்கட பெரிய மனுசன், அவரையும் வரவேற்கோணும்தானே?” என்றுகொண்டு மேனகா பின் கதவைத் திறக்க, “ஓமோம், நானும் வந்திருக்கிறன்.” என்றுகொண்டு இறங்கினான் சஜிதன்.
“பயணம் சுகமா இருந்ததா சஜுக்குட்டிக்கு?” அவனை அள்ளித் தூக்கிக் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே வினவினார் மேனகா.
“ஓம் சுகமா இருந்தது. அப்பும்மா மட்டும் வரேல்ல. ஃபிளைட்ல இடம் இல்லையாம். எங்களை முதல் போகச் சொன்னவா. பிறகு அப்பும்மா வருவா.” செல்ல மொழியில் பெரிய பதில் சொன்னான் குழந்தை.
“ஓமய்யா. நானும் விசாரிச்சனான். ஆனா அடுத்த ஃபிளைட்ல கட்டாயம் பிள்ளையின்ர அப்பம்மாவை கூட்டிக்கொண்டு வருவம் என்ன.”
உதயனின் மகன் சாருகனை இலங்கை வந்தபோதே பழக்கம் என்பதில் மேனகாவிடமிருந்து நழுவி அவனிடம் ஓடினான் சின்னவன்.
கொண்டுவந்த பெட்டிகளைக் காரிலிருந்து இறக்கி, வீட்டினுள் வந்து, சிறிய வரவேற்பு போன்ற முன்பகுதியில் ஷூக்களைக் கழற்றினர். அது குளிர்காலம் என்பதில் எல்லோரும் அணிந்திருந்த மேலங்கிகளைக் கழற்றி அவற்றுக்கான தாங்கிகளில் கொழுவிவிட்டு, உள்ளே வந்து அந்த வீட்டின் சோஃபாவை நிறைத்தபோது நாவினியின் மனமும் நிறைந்துபோயிற்று.
இலேசாக அரும்பிய விழி நீருடன் அங்கே புகைப்படங்களாகத் தொங்கிக்கொண்டிருந்த பெற்றோரிடம் அவள் பார்வை சென்று நிலைத்தது.
“நவி, தண்ணி கொஞ்சம் தா!” என்று கேட்டு அவள் மோனத்தைக் கலைத்தான் கேசிகன்.
விரைந்து சென்று நீண்ட கண்ணாடிக் குவளையில் கொண்டுவந்து கொடுத்தாள் அவள். வாங்கிப் பருகிவிட்டு வெறும் குவளையை அவளிடமே நீட்டினான் கேசிகன்.
பெற்றவர்களைப் பார்த்துக் கலங்கி நின்ற நாவினியை மேனகாவும் கவனித்தார்தான். அவர் அவளைத் திசைதிருப்ப முதல், இயல்பாக அவளைக் கையாண்டிருந்தான் கேசிகன். அதன் மூலம் அவர் உள்ளத்தின் நன்மதிப்பையும் நொடியில் பெற்றுக்கொண்டிருந்தான்.
அர்த்தமாகக் கணவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அம்மாவோட எடுத்துக் கதைச்சனீங்களா கேசிகன்?” என்று விசாரித்தார்.
“ஓம் அன்ட்ரி. இஞ்ச வந்து இறங்கினதும் கதைச்சனான். அவா இன்னும் அங்க அழுதுகொண்டுதான் இருக்கிறா. எங்கட பெரிய மனுசனுக்கும் கொஞ்சம் மனம் சரியில்ல.” சாருகனின் கார்கள் சிலது எப்போதுமே இங்கே நாவினியின் வீட்டு விறாந்தையின் சுவரோரமாகப் பார்க் பண்ணபட்டிருக்கும். அவற்றை வைத்துச் சாருகனோடு சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்த மகனைக் காட்டிச் சொன்னான்.
“பாவம்தான். வேற பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ இருந்தா கூடச் சமாளிக்கலாம். இது சின்னவரைக் கைக்கையே வச்சு வளத்ததும் அவா எல்லோ. அவருக்குப் பின்னாலயேதானே திரிவா. கவலைதான். ஆனா அவசரமா செய்றதுக்கும் ஒண்டும் இல்லையே.” ஒரு பெருமூச்சுடன் உணர்ந்து சொன்னார் மேனகா.
கேசிகனுக்கும் அன்னையின் பேச்சு வந்ததும் உள்ளம் பாரமாயிற்று. வயதுபோன காலத்தில் துணைக்கு ஒருவரும் இல்லாமல், அயலட்டை மனிதர்களை மாத்திரமே நம்பி வாழ்வது எவ்வளவு கொடுமை? முதுமை என்பதே கொடுமை. அதனோடு தனிமையும் சேர்ந்தால்?
அவன் மனவோட்டத்தைக் கணித்த சிவதாசன், “தம்பிய மேல கூட்டிக்கொண்டு போங்கோமா. குளிச்சுக்கிளிச்சு வரட்டும். சாப்பிடலாம்.” என்று சொன்னார்.
அவ்வளவு நேரமும் அவர்களைப் பேச விட்டுவிட்டுப் பதுமையாக நின்றிருந்தவள் வருகிறாயா என்பதுபோல் கேசிகனைப் பார்த்தாள். அவனும் எழுந்துகொண்டான். அவள் பெட்டி ஒன்றைத் தூக்கப்போக, “நீ விடு!” என்றுவிட்டு இரண்டு பெட்டிகளையும் கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு மாடியேறினான்.
“சஜுக்குட்டியும் வாங்கோ. உடுப்பு மாத்திக்கொண்டு வருவம்.” என்று அவனைத் தூக்கிக்கொண்டு கேசிகனின் பின்னால் சென்றாள் நாவினி.
அப்படி மூவரும் ஒரு குடும்பமாக மேலே சென்ற காட்சி மிகுந்த நிறைவாக இருந்தது. “ஒரு பிள்ளை இருக்கே எண்டு யோசிச்சன். இப்ப பாத்தா நவிய மாத்துறதுக்கு எண்டே அந்தக் குழந்தை வந்த மாதிரி இருக்கு.” என்று தமக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார் மேனகா.
“ஷ் மேனகா!” மேலே அவர்களுக்குக் கேட்டுவிட்டாலும் என்று எண்ணி மனைவியை அடக்கினார் சிவதாசன்.
“கேக்காது மாமா. ஆனா, அவர்தான் இவேய சேத்து வைக்கப்போற ஆள்.” பார்வை ஒரு முறை மேலே சென்றுவர ரகசியமாகச் சொன்னாள் பிரியா.
“என்னவோ சந்தோசமா இருந்திடோணும். ‘என்ர பிள்ளையை விட்டுடாதீங்கோ மேனகா’ எண்டு அபி கடைசியா என்ர கையப் பிடிச்சுக்கொண்டு சொன்னதுதான் கண்ணுக்கையே நிக்குது.” என்று கண் கலங்கினார் மேனகா.
“அம்மா! அதுதான் நீங்க ஆசைப்பட்ட மாதிரி நவி கட்டி, அவரும் வந்திட்டார் எல்லா. சும்மா சும்மா அதையே கதைக்கிறேல்ல.” என்று அதட்டி அடக்கினான் உதயன்.
அங்கே மேலே சென்றதும் எந்த அறை என்பதாக அவளைப் பார்த்து நின்றான் கேசிகன். மூன்று அறைகளும், சகல வசதிகளுடனும் கூடிய பெரிய குளியலறையும் மேலே இருந்தன.
“அது பாத்ரூம். இது என்ர அறை. இது அம்மா அப்பா இருந்தது. இது தம்பியாக்களின்ர. இதத்தான் உங்கள் ரெண்டு பேருக்கும் ரெடி பண்ணினனான்.” என்றபடி அந்த அறையின் கதவைத் திறந்து காட்டினாள் அவள்.
பொருள் விளங்காப் பார்வை ஒன்றை அவள் புறமாக வீசியபடி அந்த அறைக்குள் உள்ளிட்டான் கேசிகன். விசாலமான அறைதான். நடுவில் பெரிய கட்டில் ஒன்று. அதன் எதிர்ப்புறத்தில் சுவரோடு பெரிய அலமாரி.
“நவி அன்ட்ரி, இனி நாங்க எல்லாரும் இஞ்சயா படுக்கப்போறம்.” அந்தக் கட்டிலில் ஏறி அமர்ந்தபடி வினவினான் குட்டிக் கண்ணன்.
கேசிகனின் பார்வையும் இவளில் படிய, பதிலுக்காகத் திணறினாள் நாவினி. சின்னவனுக்கு அது தேவை இல்லை போலும். மற்ற அறைகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்க ஓடினான்.
நாவினியும் அங்கிருந்து நழுவி அவன் பின்னால் போக முயன்றாள். அதற்கு விடாமல் அவள் கரம் பற்றிக் கொண்டுவந்து தன் முன்னே நிறுத்தினான் கேசிகன்.
அவளிடத்தில் ஒரு பதற்றம். விமான நிலையத்தில் வைத்து அவன் இலேசாக என்றாலும் அணைத்து விடுவித்ததிலேயே அவளுக்கு உதறல் எடுத்திருந்தது. மனத்தின் படபடப்பு முகத்திலும் தெரிய நின்றவளின் கன்னத்தை ஒற்றை விரலால் அவன் வருட அவள் விழிகள் இரண்டும் விரிந்துபோயின.
அவன் உதட்டில் சின்ன முறுவல். அவள் பார்வையும் விழிகளை விரித்த அழகும் ஈர்க்க அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டிவிட்டு, “எப்பிடி இருக்கிறாய்?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.
அவளுக்குத் தொண்டையெல்லாம் உலர்ந்துபோயிற்று. தலையை இருபுறமுமாக ஆட்டி நன்றாக இருப்பதாகச் சொன்னாள்.
சஜிதனைப் போலவே இருந்த அவள் செய்கையில் அவன் உதட்டில் சன்னமான முறுவல்.
“அதென்ன பொக்கே?”
“அது… பிரியா அக்காதான்…” அவன் பார்வையைத் தவிர்த்தபடி சொன்னாள் அவள்.
அவள் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “அப்ப நீயா தரேல்ல?” என்றான் அவன்.
“இல்ல… அது…” பேசமுடியாமல் அவள் இதழ்களை ஈரப்படுத்த அவன் பார்வை அவற்றில் படிந்தது.
நாவினிக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. இதற்குள், “அப்பா! அந்த அறைக்க டிவி இருக்கு.” என்றபடி ஓடிவந்த சின்னவனால் வேகமாக இரண்டடி விலகி நின்றாள்.
கேலி இழையோடும் பார்வையால் அவளை ஒருமுறை உரசிவிட்டு மகனிடம் திரும்பினான் அவன். அவனுக்கு அங்கிருக்கும் எல்லாமே ஆச்சரியத்தை மூட்டின. அதுவும் இவள் பெற்றோரின் அறையில் இருந்த மசாஜ் செய்யும் இருக்கையை விட்டு அவன் அசைவதாகவே இல்லை. பெரும் சிரமப்பட்டுத்தான் அதிலிருந்து அவனைக் கிளப்பினார்கள்.
“குளிக்கோணும் நவி.” பெரிய பெட்டியைத் தூக்கிக் கட்டிலில் வைத்துத் திறந்தபடி சொன்னான் கேசிகன்.
“சஜுக்குட்டிய நான் குளிக்க வாக்கவா?”
“இல்ல இல்ல! சஜுக்குட்டி பெரிய மனுசன். அப்பாவோடதான் குளிப்பான்.” கட்டிலில் ஏறி அமர்ந்து, பிரித்த பெட்டியிலிருந்து தானும் பொருள்களை வெளியே எடுத்துவைக்க உதவியபடி சொன்னான் சின்னவன்.
“எல்லாத்தையும் இப்பவே எடுக்க வேணாம் தம்புடு.” என்று அவனைத் தடுத்துவிட்டு, ஒரு பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினான் கேசிகன்.
“உனக்காம் எண்டு அம்மா தந்துவிட்டவா.”
அவளுக்கு மாசிச் சம்பல் விருப்பம் என்று செய்து கொடுத்துவிடுவதாகச் சொல்லியிருந்தார் பிரேமா. அவரின் அன்பில் நெகிழ்ந்தபடி வாங்கிக்கொண்டாள். அவர்களுக்கான மாற்றுடைகளை எடுத்துவிட்டுப் பெட்டியை மூடி வைத்தான் அவன்.
அதற்குள் ஓடிப்போய்த் துவாய் எடுத்து வந்து கொடுத்தாள் நாவினி. அப்படியே குளிர் நீர், வெந்நீர்க் குழாய்களை அவர்களின் தேவைக்கு ஏற்ப எப்படிப் பயன்படுத்துவது என்று காட்டிக்கொடுத்தாள்.
“பெரிய மனுசன் கெதியா(விரைவா) குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடுவம்.” சின்ன சிரிப்புடன் சொன்னாள் நாவினி.
“கோழி இறைச்சிதானே? இண்டைக்கு வெள்ளிக்கிழமை இல்லை.” என்றான் அவன் அதற்கும்.
நாவினியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “கோழி இறைச்சிதான். பிள்ளைக்கு விருப்பமான றால் பொரியலும் இருக்கு.” அந்தச் சிரிப்பினூடே சொல்லிவிட்டு இறங்கினாள்.
எல்லோருக்கும் சேர்த்துச் சமைக்கிறேன் என்று மேனகா சொன்னபோது இவற்றைச் செய்து தரச்சொல்லிச் சொல்லியிருந்தாள் நாவினி.
சிரித்த முகமாகவே இறங்கி வந்தவளைக் கண்டு, “என்னம்மா?” என்றார் மேனகா தன்னை மீறிய ஆவலோடு.
“குளிச்சிட்டு வாங்கோ சாப்பிடலாம் எண்டு சொல்ல, கோழி இறைச்சியா எண்டு உடனே கேக்கிறார் அன்ட்ரி. இதுல அவர் பெரிய மனுசனாம், அப்பாவோடதான் குளிப்பாராம்.” என்று சொல்லி இப்போதும் சிரித்தாள் அவள்.
இனியாவது இந்த முகத்தில் அந்தச் சிரிப்பு நிலைத்துவிட வேண்டும் என்கிற வேண்டுதலுடன், “நல்ல வடிவா இருக்கிறீங்கம்மா.” என்று எழுந்து வந்து, அவள் கன்னம் வழித்துச் சொன்னார் அவர்.
அவரை இதமாக அணைத்து, “எல்லாத்துக்கும் தேங்க்ஸ் அன்ட்ரி. அங்கிள் உங்களுக்கும்தான்.” என்று கண் கலங்கினாள் அவள்.
“அப்ப எங்களுக்கு?”
“உங்களுக்கும்தான் அக்கா.”
“அடிதான் வாங்கப்போறாய்.” என்று செல்லமாக அதட்டிவிட்டு, “வா, சாப்பாட்டை எடுத்துச் சூடாக்குவம்.” என்று அவளையும் அழைத்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள் பிரியா.