• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 28

STN-116

Member
MTN 28

தரிந்து மற்றும் மேகலாவின் திருமண வாழ்வு தொடங்கி ஒரு மாதம் இனிதே உருண்டோடியது. அவர்களது ஒவ்வொரு நாளும் காதல் சொட்டச் சொட்ட, தேன் கலந்த தித்திப்பாய் நகர்ந்தது.

கண்டியின் குளிரும், அந்தப் பனிமூட்டமான காலைப் பொழுதுகளும் அவர்களின் காதலை மேலும் மெருகூட்டின. ஒவ்வொரு சிறு தீண்டலிலும், சொல்லப்படாத ஆயிரம் வார்த்தைகளிலும் ஒருவரையொருவர் ஆழமாக உணர்ந்து கொண்டனர். புதிய பந்தத்தின் தயக்கங்கள் மெல்ல மறைந்து, ஒருவருக்கொருவர் நிழலாய் மாறிப்போன அந்த ஒரு மாத காலம், அவர்களது வாழ்க்கைப் புத்தகத்தின் மிக அழகான அத்தியாயமாகத் திகழ்ந்தது.

அவர்களின் நிரந்தர இருப்பு கண்டியில் அமைந்திருந்தாலும், அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்வதை இருவரும் வழக்கமாக்கிக் கொண்டனர். மேகலாவிற்குத் தனது தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம் சிறிதும் தெரியாதவாறு, வத்சலாவும் ஜகத்தும் அவளைத் தங்கள் சொந்த மகளாகவே நடாத்தினர். அவர்களின் குடும்ப ஒற்றுமைக்குச் சான்றாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனைவரும் இணைந்து கோவிலுக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் விகாரைக்கும் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

புதிய சூழல், புதிய மனிதர்கள் என்ற எந்தத் தயக்கமுமின்றி, தரிந்துவின் வீட்டில் மேகலா மிக இயல்பாகப் பொருந்திப் போனாள். அவளது வரவு அந்த வீட்டிற்கு ஒரு புதிய பொலிவையும் மகிழ்ச்சியையும் தந்திருந்தது.

அனுஷ்கா பலாலி விமானப்படைத் தளத்திற்கு மாறுதல் பெற்று வந்திருந்தாள். மேகலாவின் திருமணத்திற்குப் பிறகு முரளியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், அவனது அன்னை மகேஸ்வரியுடன் அலைபேசியில் அடிக்கடி கடலை போடுவதை அவள் நிறுத்தவில்லை.

அன்று ஒரு ஓய்வு நேரத்தில், எதேர்ச்சையாகப் புலனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது முரளியின் பதிவு ஒன்று கண்ணில் பட்டது.

'என்னடா இது... இவர் என்ர நம்பர் எல்லாம் சேவ் பண்ணி வெச்சிருக்கிறாரா...? இண்டைக்குத்தான் இவரின்ர வட்ஸெப் ஸ்டேட்டஸ் காட்டுது... இவ்வளவு நாளா நான் மட்டும் தான் சேவ் பண்ணி வெச்சிருந்தனான்... பரவாயில்ல... குட் இம்ப்ரூமெண்ட்...'
என்ற முணுமுணுப்புடன் அதைத் திறந்து பார்த்தாள்.

அதில்,

'சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது...
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா...'

என்ற மென்மையான காதல் பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது.

அதற்குக் கீழே,

'லவ் மை தேவசேனா'

என்று ஆங்கிலத்தில் அவன் பதிவிட்டிருந்த கெப்ஷன் அனுஷ்காவின் அடிவயிற்றில் தீயை வாரிக் கொட்டியது.

ஆத்திரம் தலைக்கேற,

"ஆர்...?"
என்று ஒற்றை வார்த்தையில் தட்டச்சு செய்து அவனுக்கு அனுப்பினாள்.

மறுமுனையிலிருந்து அடுத்த நொடியே பதில் வந்தது.

"என்ர வருங்காலம்..."
அவ்வளவுதான், இவளது கோபம் எல்லை மீறியது.

"அப்ப நான்...?"
என்று ஆத்திரத்தைக் காட்டும் எமோஜிகளுடன் பதில் அனுப்பினாள்.

அதற்கு முரளியிடமிருந்து வந்த பதில் அவளைச் சுக்குநூறாக உடைத்தது.

"உன்ன லவ் பண்ணுறன் எண்டு எப்ப சொன்னனான்...? நான் தேவசேனாவைத்தான் லவ் பண்ணுறன்... நீ டைம் வேஸ்ட் பண்ணாம, ஒரு பாகுபலியைப் பார்த்துக் கல்யாணம் கட்டு..."
பதிலை அனுப்பிவிட்டு அவன் ஓஃப்லைன் சென்றுவிட, இங்கு அனுஷ்காவின் கண்கள் கலங்கி, முகம் ஆத்திரத்தில் சிவந்து போயிருந்தது.

அழுகையும் கோபமும் ஒன்றாக முட்டிக்கொண்டு வர, இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்ற வைராக்கியத்துடன், மேகலாவின் எண்ணிற்கு அழைத்தாள்.

அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும், எடுத்தவுடனே படபடவெனப் பட்டாசாய் வெடித்தாள் அனுஷ்கா.

"என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறார் உங்கட அண்ணன்...? என்னைப் பார்த்தால் விசரி மாதிரி தெரியுதா அவருக்கு...?"

"என்ன சொல்லுறீங்க அனு... அண்ணா என்ன செய்தவர்...?"
என்று மேகலா பதற்றமாகக் கேட்டாள்.

"என்ன செய்யேல்ல...? இஞ்ச ஒருத்தி அவரையே நினைச்சுக்கொண்டு இருக்கேக்க.. அவர் அங்க இன்னொருத்தியோட டூயட் பாடுறார்.."
என்று ஆவேசப்பட்டாள் அனுஷ்கா.

"என்ன... டூயட்டா? ஆர்கூட?"
என்று மேகலா குழப்பமாய்க் கேட்க, அனுஷ்கா கண்ணீர் மல்க முறையிட்டாள்.

"நான் தானே உங்களுக்கு அண்ணி...??? ஓம் தானே...??? ஆனால் உங்கட அண்ணன் என்னை லவ் பண்ணேல்லயாம்... ஆரோ தேவசேனாவை லவ்வுறாராம்... எனக்கு மெஸேஜ் அனுப்பியிருக்கிறார்..."

அனுஷ்கா நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூற, அதைக் கேட்ட மேகலா கடகடவெனச் சிரித்தாள்.

"நான் என்ர கவலைய உங்கட்ட சொன்னால் சிரிக்கிறீங்க என...?"
என்று பொருமினாள் அனு.

"பிறகு சிரிக்காம... முதல்ல பாகுபலி படத்தில தேவசேனா கெரெக்டரில ஆர் நடிச்சது எண்டு சொல்லுங்க...?"
என்று மேகலா எதிர் கேள்வி கேட்டாள்.

அனுஷ்கா யோசனையுடன் தேடுதளத்தில் தேடிப் பார்த்துவிட்டு, கண்கள் மின்னக் கூறினாள், "அனுஷ்கா...".

"இப்ப விளங்குதா என்ர அண்ணான்ர தேவசேனா ஆரெண்டு...?" என்று மேகலா சீண்டினாள்.

"நானா...???"
என்று ஆச்சரியத்துடன் கேட்டவள், உடனே சுதாரித்துக் கொண்டு,

"நீங்க போனை வைங்கோ அண்ணி... இண்டைக்கு ஒரு ஆளுக்கு இருக்கு பூசை..."
என்று போனை வைத்துவிட்டு, கார் சாவியை எடுத்துக்கொண்டு மின்னலெனப் புறப்பட்டாள்.

திடீரென்று முறைத்துக்கொண்டு வந்து நின்ற அனுவைப் பார்த்த மகேஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சி.

"வாங்கோ மகள்... என்ன திடீரெண்டு இந்தப்பக்கம்?"
என்று கேட்டார்.

"எங்க உங்கட சீமந்தப்புத்திரன்...? அவருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் குடுக்க வந்தனான்..."
என்று செல்லக் கோபத்துடன் கேட்க,

"அவர் பின்னுக்கு கிணத்தடியில..."
என்று மகேஸ்வரி முடிக்கும் முன்னே பின்பக்கத் தோட்டத்திற்குச் சிட்டாகப் பறந்தாள்.

அங்கே முரளி வெறும் சாரத்தை (லுங்கி) மடித்துக் கட்டியபடி கிணற்றில் நீர் அள்ளிக் குளித்துக் கொண்டிருந்தான்.

இவளைக் கண்டதும்,

"ஏய்... இஞ்ச எதுக்கு வந்தனீ...???"
என்று அதட்டினான்.

அவனை அந்தக் கோலத்தில் முதல் முறையாகப் பார்த்த அனுஷ்கா,

"அச்சோ... சொறி சொறி..."
என்று வெட்கம் கலந்த சங்கடத்துடன் அங்கிருந்து திரும்பி ஓடினாள்.

அவள் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவதைப் பார்த்த முரளி,

"இதுக்கே இந்த ஓட்டம்... ஆனால் வாய் மட்டும் எட்டு ஊருக்கு நீளும்..."
என்று சிரித்தபடி அவளது வெக்கத்தை ரசித்தான்.

கன்னங்கள் சிவக்க, மூச்சுவாங்க வீட்டுக்குள் ஓடிவந்த அனுஷ்காவை மகேஸ்வரி விசித்திரமாகப் பார்த்தார்.

"தம்பியைப் பார்த்தனீங்களாமா...?" என்று அவர் எதேச்சையாகக் கேட்க,

"அவர்... அவர்... குளிக்கிறார் மாமி..."
என்று சொற்கள் தடுமாற திணறினாள் அனுஷ்கா.

சற்று நேரம் கழித்து, தலையைத் துவாலையால் துடைத்தபடி உள்ளே வந்த முரளியின் கூர்மையான லேசர் விழிகள் அவளை ஆழமாக அளவிட்டன.

அவன் அங்கே இருப்பதை உணர்ந்தும், அவனைத் திரும்பிப் பார்க்கக் கூடத் தைரியமில்லாமல் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் அவள். அவளது இந்தத் தவிப்பைக் கண்டு, ஒரு நமுட்டுச் சிரிப்புடன் அவன் உள்ளே சென்றான்.

முரளி உடைமாற்றிவிட்டு மீண்டும் வரவேற்பறைக்கு வந்தபோது, மகேஸ்வரி சமையலறைக்குள் இருந்தார். வரவேற்பறையில் அனுஷ்கா மட்டுமே அமர்ந்திருக்க, அவள் இன்னும் அந்தச் சங்கடத்திலிருந்து மீளாமல் தலைகுனிந்தபடி தனது நகங்களைக் கிள்ளிக் கொண்டிருந்தாள். முரளி மெல்ல அவளருகே வந்து அமர்ந்தான்.

"என்ன மெடம் இந்த பக்கம்...? என்ர தேவசேனாவைப் பத்தி தெரிஞ்சிக் கொள்ள வந்தனீங்களா...? இல்ல அம்மாகிட்ட போட்டுக் குடுக்க வந்தனீங்களா...?"
என்ற அவன் குரலில் குறும்புத் தெறித்தது.

அனுஷ்கா மெல்லத் தலைநிமிர்ந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

"அவாவைத் தான் பிறந்ததுல இருந்து பார்க்கிறனான் தானே... நான் இஞ்ச வந்தது என்ர பாகுபலிக்கு ஒரு சின்ன செர்ஜெரி செய்யத்தான்..."

என்று ஆவேசமாகக் கூறிவிட்டு, சட்டென்று எம்பி அவனது தொடையில் பலமாகக் கிள்ளினாள்.

அவன் வலி தாங்க முடியாமல் "ஆ..." என அலறியபடி, "ராட்சசி..." என்று அவளைத் திட்டினான்.

"உங்கட தேவசேனா நான் தான் எண்டு சொல்ல உங்களுக்கு அவ்வளவு ஈகோ என...? நீங்க சொன்னதைக் கேட்டு, எனக்கு கொஞ்ச நேரம் நெஞ்சே அடச்சுப் போச்சு... அப்பத்தான் நீங்க என்ர மனசுல எவ்வளவு ஆழமா ஊடுருவியிருக்கிறீங்க எண்டு எனக்கே விளங்கினது..."
என்று சொல்லும்போதே அவளது கண்கள் லேசாகக் கலங்கின.

அவளது கலங்கிய விழிகளைக் கண்ட முரளி, அவளை நேருக்கு நேர் ஆழமாகப் பார்த்தான். அவனது கேலி மறைந்து முகம் சட்டென்று தீவிரமானது.

பின்பு மெல்லக் குரலைச் செருமிக்கொண்டு,

"எனக்கு உன்னோட கொஞ்சம் கதைக்கோணும்... பின்னுக்கு தோட்டத்துக்கு வா..."
என்று கூறிவிட்டு முன்னால் சென்றான்.

மகேஸ்வரி கொண்டு வந்து கொடுத்த தேநீர் மற்றும் சிற்றுண்டித் தட்டுகளை ஏந்திக்கொண்டு, அனுஷ்காவும் ஒருவித எதிர்பார்ப்புடன் அவன் பின்னால் தோட்டத்தை நோக்கிச் சென்றாள்.

மாலை நேரத் தென்றல் இதமாக வருடிக்கொண்டிருக்க, பின்புறத் தோட்டத்தின் தென்னை மர நிழலில் போடப்பட்டிருந்த அந்த மர இருக்கைகளில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

முரளி தனது கையில் இருந்த தேநீர் கோப்பையின் விளிம்பை விரல்களால் வருடிக் கொண்டே, ஆழ்ந்த சிந்தனையோடு அவளையே பார்த்திருந்தான். அனுஷ்கா அவனை நிமிர்ந்து பார்ப்பதும், அவன் பார்வை பட்டதும் சட்டென்று கீழே குனிவதுமாக இருந்தாள்.

பேச வேண்டும் என்று அழைத்து வந்த முரளிக்கு, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் வார்த்தைகள் வராமல் தவித்தான். ஒரு வழியாகத் தைரியத்தைத் திரட்டிக்கொண்டு,

"அனு... எனக்கு இப்ப முப்பத்தஞ்சு வயசு..."
என்று மெல்ல ஆரம்பித்தான்.

"அதுதான் ஏற்கனவே தெரியுமே... அரக்கிழவன் எண்டு... அதுக்கு என்ன இப்ப...?"
என்று தனது வழக்கமான துறுதுறுப்போடு கேட்டாள்.

"அடிங்... ஆரு அரக்கிழவன்...? நாங்க எலிஜிபிள் பெச்சுலர் மா..."
என்று அவன் பதிலளிக்க,

"எலிஜிபிளா இல்லையா எண்டு பார்க்கத்தானே கல்யாணம் கட்டுவம் எண்டு சொல்லுறன்..."
என்று அவனைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்தாள் அனுஷ்கா.

அவளது குறும்பை ரசித்தபடியே, "உனக்கும் எனக்கும் எட்டு வருசம் வித்தியாசம்..."
என்று முரளி அவளை ஏறிட்டுக் கூறினான்.

"இருந்துட்டுப் போகட்டும்..."
என்று அதற்கும் ஒரு முட்டுக்கட்டை போட்டாள் அவள்.

"நான் பக்கா நைன்டீஸ் கிட்... நீ ஜென் ஸீ..."
என்று அவன் இழுக்க,

"அதாவது... நீங்க பூமர்.. நான் யூத்... அதுதானே...? ஆனாலும் சைக்கிள் கெப்பில உங்களையே கிட் எண்டு சொல்லிட்டீங்க..."
என்று கிண்டல் செய்தாள்.

முரளி எம்பி அவளது தலையில் மெல்லக் கொட்டி,

"கொஞ்சம் குறுக்க கதைக்காம நான் சொல்லுறத முழுசா கேளடி.."
என்று அதட்டினான்.

அவளும் முகத்தைச் சுருக்கிக் கொண்டு, தலையைத் தடவியபடியே,
"சொல்லும்... சொல்லித் தொலையும்..."
என்று அமைதியானாள்.

"அடங்கவே மாட்டியா நீ...?"
என்று கேட்ட முரளி, சற்று நிதானமாகத் தொடர்ந்தான்.

"எங்கட வயசு வித்தியாசத்தால, கருத்து முரண்பாடுகள் வரலாம்... சிலசமயம் நான் சொல்லுறது உனக்கு அடக்குமுறையாவும், நீ சொல்லுறது எனக்கு அதிகப்பிரசங்கித்தனமாவும் தோணலாம்... அதையெல்லாம் மேனேஜ் பண்ணி ஒண்டா வாழோணும்... முக்கியமா... என்ர இருப்பு இஞ்ச தான்... மேகியும் போயிட்டா... அம்மா அப்பா தனியா இருப்பினம்... அதால என்னால உன்ர வீட்டில வந்து இருக்கேலாது... நீ இஞ்ச தான் இருக்கோணும்... ஆனா அடிக்கடி உன்ன அங்க கூட்டிப் போவன்..."
என்று அவர்களது திருமணத்தால் ஏற்படும், நடைமுறைச் சிக்கல்களை விளக்கினான்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட அனுஷ்கா,

"இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா..?"
என்று நக்கலாகக் கேட்டுவிட்டு, முகபாவனையை மாற்றினாள்.

"முதல் விசயம்... சண்டை ஆருக்குத்தான் வாறேல்ல...? நான் பிழை செய்தா என்னை ஏசுங்கோ.. நான் எல்லாம் கோவிக்க மாட்டன்... நீங்க பிழை செய்தால், நான் ஏசவெல்லாம் மாட்டன்... நேரடியாக எட்டேக் தான்..."
என்று மீண்டும் கண்ணடித்தாள்.

தொடர்ந்து,

"ரெண்டாவது விசயம்... அண்ணி, அண்ணா வீட்டில இருக்கேக்க, நான் உங்கட வீட்டில தானே இருக்கோணும்...? எனக்கு அதிலெல்லாம் விருப்பம் தான்... என்ர அம்மே தாத்தே (அம்மா அப்பா) பத்தி கவலைப்படாதீங்கோ... அங்க என்ர அக்கா இருக்கிறா... அவ்வளவுதானா...? வேற ஏதாவது மிச்சம் இருக்கா..?"
என்று புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதாகத் தீர்வு சொன்ன அவளை முரளி வியப்போடு பார்த்தான்.

அவனது பார்வையின் மாற்றத்தை உணர்ந்த அனுஷ்காவிற்குள் மீண்டும் வெட்கம் பரவியது. அவன் அவளுக்கு இன்னும் நெருக்கமாக நகர, அந்த இடத்தின் நிசப்தம் அவர்களின் இதயத் துடிப்பால் நிறையத் தொடங்கியது.
 
Last edited:
Top Bottom