• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மை டியர் ராவணா வித் லவ் சீதா - 18

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 18

சீதாவை வேண்டுமென்றே இடிக்க வந்த தடியனை போட்டு புரட்டி எடுத்துக் கொண்டிருந்த ராவணனை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் சீதா தன்னை மறந்து பொது இடம் என்று கூட பாராமல்..!!

மெய் மறந்து எத்தனை நேரம் நின்றாளோ தெரியவில்லை ஆனால் அந்த தடியன் வாயில் வெத்தலை பாக்கு போட்டு கொண்ட பிறகு தான் அவள் சுய நினைவுக்கு மீண்டு வந்தாள்..

' முதல்முறையா நமக்காக இத்தனை பேர் முன்னாடி எதிர்த்து நின்னு ஒருத்தன் சண்டை போடுறத பார்க்கவும் அப்படியே மெய் மறந்து நின்று விட்டோமோ?? இவன் என்னடான்னா மூக்குல வாயில ரத்தம் வழிந்து போய் நிக்கிறானே.. அந்த அளவிற்கு அடித்து விட்டானா இந்தர் ?? இருந்தாலும் அந்த தடியனுக்கு இது தேவை தான் இப்படித்தானே எல்லா பெண்களையும் வேண்டுமென்றே இடித்து வம்புக்கு இழுத்திருப்பான் இவனுக்கு தேவையான தண்டனை தான் இது.. நல்லா அடிக்கட்டும்..

ஆனால் இதற்கு மேல் அடித்தால் ஒருவேளை போலீஸ் கேஸ் ஆகி இராவணனை பிடித்து சென்று விடுவார்களோ?? வேண்டாம் வேண்டாம்.. நம்மால் இவனுக்கு எந்த பிரச்சினையும் வேண்டாம் முதல்ல இவனை இங்கிருந்து இழுத்துட்டு போகலாம்.. ', ,என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வேகமாக அவனை நோக்கி சென்றாள்.

" சொன்னா கேளு எல்லாரும் பாக்குறாங்க இந்தர்..ரொம்ப அடிக்காதே போதும் அவனை விட்டு விடு, சொன்னா கேளு வா இந்தர் போகலாம்", என்று சொல்லி வலுக்கட்டாயமாக அவன் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றாள் அவள்.

" நீ என்னை விடு சீதா நான் அவனை ஒரு கை பார்க்கிறேன் என்ன தைரியம் இருந்தால் அவன் என் கண் முன்னாடியே உன்னை வம்புக்கு இழுப்பான்.. அதுவும் உன்னிடம் அப்படித்தான் வம்புக்கு வருவேன் என்று என்னிடமே கூறுகிறான்..இவனை சும்மா விடுவதா??

எல்லா பெண்களிடத்திலும் அவன் இப்படித்தான் நடந்து கொள்வான் போல.. இவனை இப்பொழுது கண்டிக்காவிட்டால் நாளை வேறு வேறு பெண்களிடமும் இதே போல் வம்பிழுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் எதற்காக என்னை பாதியில் இழுத்து வந்தாய் சீதா?? இன்னும் நான்கைந்து குத்துகள் விட்டிருந்தால் இந்நேரம் அவன் மயங்கி கிடந்திருப்பான்.. இப்படி குறுக்கே வந்து என்னை தடுத்து விட்டாயே", என்றான் அவன் கோபத்தோடு.

" அது சரி நீ பாட்டுக்கு அவனை போட்டு கன்னா பின்னான்னு அடிச்சிட்டா அப்புறம் நாளைக்கு போலீஸ் கேஸ் ஆயிடுச்சுன்னு வச்சுக்கோ அப்புறம் நாம தான் கோர்ட்டு ஜெயிலு அப்படி இப்படின்னு சுத்தணும் இதெல்லாம் நமக்கு தேவையா சொல்லு??"

" என்ன கூறுகிறாய் எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே??"

" அது சரி அப்பப்போ மறந்தே போயிடுறேன் நீ இந்த காலத்தை சேர்ந்தவன் கிடையாது என்பதையே.. அதாவது சிறையில் அடைத்து விடுவார்கள் உன்னை, இந்த மாதிரி எல்லாம் பொது இடத்தில் செய்தால்..", என்று அவனுக்கு புரியும் படியாக எடுத்துக் கூறினாள் அவள்.

" இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் தவறு என் மீது இல்லையே.. ?? தவறு செய்தவர்களுக்குத்தானே தண்டனை வழங்க வேண்டும் என் ஆட்சியில் எத்தனை பேரை நான் சிறையில் அடைத்து சித்திரவதை செய்திருக்கிறேன் தெரியுமா??"

சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் அதிர்ச்சியுடன்..!!

" உனக்கு பழசெல்லாம் ஞாபகம் இருக்கா?? இல்ல ஏதாவது ஞாபகம் வருதா??", அப்படியே அதே இடத்தில் உறைந்து போய் நின்று விட்டவள் கேள்வி மேல் கேள்வி கேட்டாள் அவனை..

" பழைய விஷயங்களா ?? என்ன கூறுகிறாய் ?? பழையது என்றால் எதை குறிப்பிட்டு கேட்கிறாய்??"

" அதாவது உன்னுடைய ஊரு, உன்னுடைய நாட்டு மக்கள், உன்னுடைய ராஜ்ஜியம், இப்படி..."

" அது எனக்கு சரியாக நினைவுக்கு வருவதில்லை.. ஆனால், அவ்வப்போது ஏதோ ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் மட்டும் நினைவுக்கு வந்து போகிறது அவ்வளவே அதற்கு மேல் என்னால் யோசிக்க முடியவில்லை சீதா.. யோசித்தால் தலை மிகவும் வலிக்கிறது"

" சரி சரி வேண்டாம் விட்டுவிடு அதற்கு மேல் நீ எதுவும் யோசிக்க வேண்டாம்.. ஆனா உன்கிட்ட நான் ஒரு விஷயத்தை சொல்லியாகணும் என்னால் இதை இப்போ சொல்ல முடியாமல் போய்விட்டால் அப்புறம் பின்னாடி எப்பவுமே சொல்ல கூடிய சூழ்நிலை அமையாமல் போய்விடுமோ என்கிற பயம் மனசுக்குள்ள இருக்கு.. அது என்னன்னே தெரியல எனக்கு உன்னை பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி இருக்கு இந்தர்.. இது எந்த வகையான உணர்வு என்று சொல்லி உனக்கு புரிய வைக்க முடியாது இப்போதைக்கு.. ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன்..

எனக்காக நீ ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் பொழுது எனக்கு என்னுடைய அம்மாவுடைய நினைவு தான் வரும்.. என் மேல எப்பவும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பும் அக்கறையும் அவங்க தான் காட்டுவாங்க.. நான் சாப்பிடற சாப்பாடு முதற்கொண்டு நான் போடுகிற ஆடை வரைக்கும், ஏன் என்னை யாரும் தவறான எண்ணத்தோடு நெருங்காதப்படி அவங்க தான் பத்திரமா பாத்துப்பாங்க..

இங்க வேலைக்கு வந்த விஷயம் கூட அம்மாவுக்கு பிடிக்கல அவங்களும் வந்து தங்குவதா சொன்னாங்க நான் தான் அடம் பிடித்து தனியா வந்து தங்கியிருக்கேன்.. அவங்க கிட்ட நான் உணர்ந்த அன்பை பாதுகாப்பை அதன் பிறகு நான் உன் கிட்ட மட்டும் தான் உணர்கிறேன்..", என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன்னிச்சையாக அவளுடைய கைகள் அவன் கரத்தோடு கோர்த்துக் கொண்டது..💞💞

எப்போதும் இயல்பாக அவள் கைகளை பற்றும் போது இருக்கும் அந்த எதார்த்தம் இப்பொழுது இல்லாமல் போனதை அவனும் உணர்ந்து கொண்டான் போலும், விசித்திரமான உணர்வை அவன் மனதிற்குள் விதைத்தது அந்த தொடுகை..!!

அவனும் அவளை குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தான்.. அவள் கண்களில் தென்பட்டது காதலா?? ஆசையா?? ஆர்வமா?? எதுவென்று புரியவில்லை ஆனால் ஏதோ ஒன்று அவன் மனதை ஆழமாக தாக்கியது..!!

வா இந்தர்.. என்று சொல்லி இயல்பாக அவனை ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்லும்போதும் சரி ஷாப்பிங் அழைத்து செல்லும்போதும் சரி அவன் மனதிற்குள் எந்தவித சலனமும் இருந்ததில்லை அவள் தொடும்போதெல்லாம்..

ஆனால் இப்பொழுது பேசிக் கொண்டே உணர்ச்சி வசப்பட்டு அவன் கைகளை மெதுவாக அவள் தயக்கத்தோடு இறுக்கமாக பற்றி கொள்ளும் போதே அவன் மனதிற்குள் சொல்லொண்ணாத உணர்ச்சிகள் பொங்கி பிரவாகமெடுத்தது..!!

அவளிடமிருந்து கைகளை விடுவித்துக் கொள்ள அவனும் நினைக்கவில்லை விடுவிக்க வேண்டும் என்று அவளும் யோசிக்கவில்லை..

" இந்த மாதிரி நடு ரோட்ல யாருடைய கையையும் பிடிச்சிட்டு நான் நடந்து போனதே கிடையாது என்னை மறந்து என் மனதில் இருக்கும் விஷயங்களை ஒரு நாளும் எவனிடமும் நான் இப்படி வெளிப்படுத்தியது கிடையாது.. ஆனால் அப்போ எதையெல்லாம் நான் பண்ணலையோ இப்போ அது எல்லாவற்றையும் பண்ணிட்டிருக்கேன் அதுக்கு காரணம் நீதான்.. உன்கிட்ட இருக்கிற ஏதோ ஒரு விஷயம் என்னை கட்டிப்போடுது இந்தர்..

உன்னை பார்த்தவுடன் என் மனதிற்குள் தோன்றிய எண்ணம் கிடையாது இது.. உன்னோடு பழக ஆரம்பித்து உன்னை கொஞ்சம் கொஞ்சமாக புரிஞ்சுக்க ஆரம்பிச்ச பிறகு என் மனதிற்குள் வந்த நேசம் இது.. இதுக்கு பெயர் காதலா ஈர்ப்பா இல்லை சும்மா ஆர்வத்தில் வந்த பந்தமா அப்படின்னு கேட்டா எனக்கு சரியா சொல்ல தெரியல.. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன்.. இனிமேல் நீ இல்லாத ஒரு நிமிஷத்தை கூட என்னால் யோசித்து பார்க்க முடியல.. எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. உனக்கு எப்படின்னு எனக்கு தெரியல.. எப்ப பார்த்தாலும் பேட்டரி போட்ட பொம்மை மாதிரி நடக்கிற பேசுற.. உன் மனசுல இதுபோல உணர்ச்சி ஏதாவது இருக்கா இல்லையான்னு எதுவும் எனக்கு தெரியல..

இப்ப எனக்காக நீ யாரோ ஒருத்தனை தூக்கிப்போட்டு மிதிச்சியே அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. நான் சாப்பிடுற பீட்சா பர்கரில் ஆரோக்கியம் கிடையாது அது எனக்கு நல்லது கிடையாதுன்னு நெனச்சு எனக்காக கஷ்டப்பட்டு அன்னிக்கு உணவை தயாரிச்சு கொடுத்தியே அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது..

எத்தனையோ ஆண்கள் என் பின்னாடி சுற்றி வந்து , வாய்ப்பு கிடைத்தால் என் இடையில் கை போட்டு பேச துடிக்கும் ஆட்கள் மத்தியில் அத்தனை நெருக்கத்தில் ஒரே அறையில் என்னுடன் நீ இரவெல்லாம் இருந்த போதும், உன்னுடைய நுனி விரல் கூட என் மீது தவறான எண்ணத்தோடு படாமல் தள்ளியிருந்ததே அது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது..

உன்னை ஒரு பொண்ணு சைட் அடிக்கிறதை கூட கண்டுபிடிக்க தெரியாத அளவிற்கு எதார்த்தமா இருந்தியே.. இதோ இப்ப கூட முகத்தை வச்சிருக்க பாரு குழப்பத்தோடு, இந்த அம்மாஞ்சி மூஞ்சி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. என்ன இந்த முறுக்கு மீசை தான் என்னை கொஞ்சம் பயமுறுத்தது", என்று சொல்லிக்கொண்டே அவனுடைய மீசையை முறுக்கி விட்டாள் செல்லமாக.

" சரிதான் ரெண்டு பேரும் லவ் பண்றதுக்கு நடு ரோடு தான் கிடைச்சுதா?? இந்தாம்மா அந்த பக்கம் நகரு.. அவனவனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு இதுங்க நடுரோட்டில் நின்னுட்டு டூயட் பாடிக்கிட்டு இருக்குதுங்க.. எல்லாம் கலிகாலம்", என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டே ஒரு முதியவர் அவர்களை கடந்து சென்றார்..

அதை கண்டதும் சிரிப்புடன் அவன் கையை விடுவித்துவிட்டு அவள் முன்னே நடக்க.. அவளைத் தொடர்ந்து இவன் பின்னே சென்றான் அதே குழப்பத்தோடு..!!

பின்னாடி தான் வருகிறான் என்கிற நினைப்பில் அவளும் மிதப்பாக சற்று முன்பு நடந்த சண்டை காட்சியை நினைத்துக் கொண்டு முன்னே நடக்க..

ரோட் கிராஸ் செய்யுமிடம் வரவும் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் அவன் கையைப் பிடிப்பதற்காக.. ஆனால் காற்றில் அலை பாய்ந்தது, அவன் கரங்கள் கிடைக்காமல் அவளுடைய கைகள்..!!

' இங்க தானே நின்னுட்டிருந்தான்?? மறுபடியும் எங்கே போனான்?? அட கடவுளே.. மறுபடியும் யார்கிட்டயாவது சண்டை போட போயிட்டானா ??', என்று பயத்துடன் யோசித்துக் கொண்டே சுற்றிலும் பார்வையை அலைய விட்டாள் அவள்..!!

எங்காவது யாருடனாவது சண்டை போட்டுக் கொண்டிருப்பான் என்று சண்டை காட்சியை எதிர்பார்த்து அவள் ஒவ்வொரு பக்கமாக தேடிக் கொண்டிருக்க..

அங்கு அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சி அடைய செய்தது..!!

- தொடரும்..

 
Top Bottom