வழியிலே இதயத்தின் நிழலாய் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷாரிகா

Well-known member
Staff member
Apr 26, 2026
61
267
53
Srilanka
VIN- 15

நகர சலசலப்பிலிருந்து கொஞ்சம் உள்ளே பிரியும், குறுக்குச்சாலை ஒன்றின் ஓரத்தில் அமைந்திருந்தது "Nuwara Dream Archs" நிறுவனம்.

கருமை கலந்த சாம்பல்நிற வெளித்தோற்றத்துடனான அந்த இருமாடிக்கட்டடத்தின் முன்புறம் மட்டும் முழுஉயரக் கண்ணாடி சுவர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருந்த அலங்காரப் பூச்செடிகளின் நடுவேசெல்லும், கற்கள் பதிக்கப்பட்ட சிறியபாதையின் வழியே நடந்துவந்து அந்த கண்ணாடிக் கதவைத்தள்ளி உள்ளே நுழைந்தான் வருண்.

வெள்ளை நிறச் சுவர்களில் மாட்டப்பட்டிருந்த, ஆங்காங்கே முடிக்கப்பட்ட ப்ரொஜெக்ட்களின் சட்டமிடப்பட்ட புகைப்படங்கள் அவனை சத்தமின்றி வரவேற்க, ரிசப்ஷனில் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்த சீனியர் ஆர்க்கிடெக்ட் சம்பத், அவனைப் பார்த்ததும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்.

"பலன்னக்கோ! அ(ப்)பே அலுத் மணாலயா எனவா... வெல்கம் பெக் வருண் மல்லி!"
( இங்க பாருங்கப்பா! நம்மட புது மாப்பிள்ள வாரார்..)

அலுவலகத்திலிருந்த எல்லோரும் ஒருசேர திரும்பிப் பார்த்ததில், அவனுக்கு வெட்கமாகிவிட்டது. என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், இதழ்களில் கோடான புன்னகையுடன் அனைவரையும் பார்த்து தலையசைத்தவன், சம்பத்துக்கு ஒரு "குட் மார்னிங் சேர்"ஐயும் போட்டுவிட்டுத் தன் இருக்கைக்கு வந்தான்.

அவர் புது மாப்பிள்ளை என விளித்ததில், புதுப்பெண்ணின் நினைவுகள் கேளாமல் வந்துசேர்ந்ததோடு, அவனிதழ்களில் கோடாய் இருந்த புன்னகையை தாறுமாறாய் நெளியச் செய்தன.

கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். நேற்றிரவு கண்டி வந்துசேர்ந்ததும் அவன் "ரீச்ட்" என அனுப்பியதற்கு, காலையில் 'தம்ப்ஸ் அப்' ரியாக்ட் பண்ணியிருந்தாள் அவன் மனைவி. அதன் பிறகு அவளிடத்திலிருந்து எதுவும் இல்லை.

இன்று அவளும் பள்ளிக்கு செல்கிறாள் தானே. வேலையில் பிஸியாக இருப்பாள். பெருமூச்சு விட்டுக்கொண்டான் வருண்.

ஒருவரின் மெசேஜிற்காக எதிர்பார்த்திருப்பது, இதுவே முதல்முறை. அது மட்டுமா..?? கடந்த மூன்று நாட்களில் பேசியதுபோல், சிரித்ததுபோல் இதற்குமுன் எப்போதும் இருந்ததில்லையே. பெண்கள் என்றில்லை, விடுதியிலிருந்த சமயத்தில்கூட ஆண்நண்பர்களுடனான கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் எல்லாவற்றிற்குமே ஓர் எல்லை வைத்திருந்தான்.

ஆனால் இந்த ஷோபனா அவனிடம் என்னென்னவோ பேசினாள்.
'...அதப்பத்தி சொல்லுங்க... இதப்பத்தி சொல்லுங்க..' எனக் கேட்டுக்கேட்டு அவனையும் எல்லையின்றி பேசவைத்தாள்.

'ஆனா நேத்து காலையில கொஞ்சம் சைலன்ட்டாவே சுத்தினாளே. உண்மையாவே நான் விட்டுட்டுப் போறேன்டுதான் அப்செட்டாகி இருப்பாளோ...?'

"ஓமோம். உண்மையா தான்டா. அதத்தவிர வேறென்ன எலவா இருக்கப்போகுது..." என்று போனில் யாரிடமோ பேசிக்கொண்டே வருணின் பக்கத்திருக்கையில் வந்தமர்ந்துகொண்ட குமரன், வருணைப் பார்த்ததும் "ஒருக்கா கட் பண்ணு. பிறகு எடுக்குறன்" என்று உடனே போனை வைத்துவிட்டு,

இருக்கையிலிருந்து ஸ்லோமோஷனில் எழுந்தவன், ஒரு கையை கன்னத்தில் வைத்து, வாயை ஆவெனப் பிளந்து, விழிகளை விரித்து, இமைகளை அடிக்கடி சிமிட்டியவாறு - வருணைப் பார்த்து, பழைய நடிகைகளின் பாணியில் ஆச்சரியம் காட்டினான்.

நண்பனின் செய்கையில் தலையைச் சரித்து அவனை முறைத்த வருண், "ஆக்ஷன் பண்ணது போதும். ஒழுங்கா இருந்து வேலையப் பாரு" என்க,

"ஏலாதுடா. ஏலவே ஏலாது. இப்படி மூஞ்சி ஃபுல்லா பல்ப்பா மாட்டிட்டு வந்தா எவனுக்காச்சும் உனக்குப் பக்கத்தில் இருந்து இனிமே வேலசெய்ய ஏலுமா? ஐயோ! அந்த கல்யாண ஒளிவட்டத்துட பிரகாசம் தாங்கேலாம கண்ணக் கூசுதே..! மயக்கம் வரப்போகுதே!" என்று நிலைகுலைந்து, காற்றில் அங்கும் இங்குமாக இருகைகளையும் நீட்டி அலுவலகத்தின் நடுவில் நின்று கதகளி ஆடினான் அவன்.

அவனின் கையைப் பிடித்திழுத்து இருக்கையில் அமரச் செய்த வருண், "என்னடா உன்ட பிரச்சன? மூடிட்டு சும்மான்டு இரன். நீ பண்ற கூத்துல எல்லாரும் சிரிச்சுக்கொண்டு பாக்குதுகள்."

"ம்க்கும். எல்லாருமென்டு சொல்லாத. அந்த சிங்கள பெட்டைகள் ரெண்டும் 'ஐயோ வட போச்சே..' என்டு கவலையாத்தான் பார்க்குதுகள்." என்ற குமரன் நண்பனுக்குக் கண்களைக் காட்ட,

"அப்படியா குமரா? சம்பத்சேர் 'ரெண்டு நிமிஷத்துல வாரன்' என்டு சொல்லி வெறும் ரெண்டே நிமிஷந்தான் ஆகுது. வேணுமென்டா நீங்க போய் ஆறுதல் சொல்லிட்டு வாங்களன்." என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்லி முடிக்கவும், சம்பத் அவர்களிடம் வரவும் சரியாக இருந்தது.

குமரன் உடனே படு சீரியசாய் லேப்டாப்பில் கவனமானான்.

சம்பத், வருணின் டெஸ்க்கின் மீது ஒரு ஃபைலை வைத்துவிட்டு,
"வருண், இது மாத்தளை-ப்ரொஜெக்டோட ரிவைஸ்ட் பிளான். பெட்ரூம இரண்டடி பெருசாக்கணும்... கிச்சன ஓப்பனா மாத்தணும். செஞ்சிட்டு பேசிக் 3D Render எடுத்து வை. மூன்டு மணிக்கு வேறொரு மீட்டிங்கும் இருக்கு......" என்று அது சம்பந்தமாக செய்ய வேண்டிய வேலைகளையும் அடுக்கிவிட்டு, போகத் திரும்பியவர் மீண்டும்வந்து குமரனருகில் நின்று "மிஸ்டர் குமரவேல், வருண டிஸ்டர்ப் பண்ணாம உங்கட வேலையையும் ஒழுங்கா செஞ்சிங்கன்டா, ரொம்ப சந்தோஷப்படுவேன்." என சிரித்த முகமாய் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

"எப்புர்றா...?" நக்கலாய் சிரித்த நண்பனிடம் கேட்டான் குமரன்.

"அதூ.. பழமொழிடா"

"ஏ!... பழமொழியா?"

"மொச புடிக்கிற டோக்க மூஞ்சப் பார்த்தா தெரியுமாமே... அதான் அவருக்கும் தெரிஞ்சிருக்கு போல." சிரிப்பை அடக்கும் குரலில் கிண்டலாய் சொன்னான் வருண்.

"ஹ்ம்ம்... நானும் வந்ததிலருந்தே பாக்குறேன். வருண் சாரோட பேச்செல்லாம் ஒரு மாதிரித்தான் இருக்கு." என்றவன்,

"வருணை, நிக்க வைத்தாள்...
பேச வைத்தாள்...
நெஞ்சோரம் பனித்துளி...
ஓஹோ...ஹோ..
தார...." என குமரன் பாடவேறு செய்யவும்,

"தாரத்தா...
தாரத் தாரத் தாரத்தா...
சம்பத் சேர்ட்ட சொல்லட்டா...
தாரத் தாரத் தாரா..."
என்று வருணும் அவன் விட்டதிலிருந்து பதில் பாட்டுப் பாட, நண்பர்கள் இருவருமே சத்தமாய் சிரித்து, பின் உடனே சுதாரித்து, குதூகலமான மனநிலையில் வேலை பார்க்கத்தொடங்கினர்.

**********************

மணி இரண்டைத்தொட்டது.
'ஸ்கூல் முடிஞ்சிருக்குமே..' வருண் போனை எடுத்துப் பார்க்க, திரையில் வெறுமை.

'சரி. முதல்ல அவ வீட்ட போய் சேரட்டும்...'என நினைத்து மேலும் அரைமணி நேரத்தை நெட்டித்தள்ளிவிட்டு மீண்டும் போய்ப் பார்த்தான்.
அப்போதும் ரிசல்ட் ஜீரோ தான்.

'நாமளே போடுவமே..' நினைத்தவன்,
"என்னங்க மேடம்! கண்டுக்க மாட்றிங்க..' என டைப் பண்ணிவிட்டு, ஏனோ... முழுதாக அழித்தான்.
பின்னர் "வீட்ட வந்தாச்சா?" என்று மட்டும் அனுப்பிவிட்டான்.

உடனே பார்த்தவளின் பதிலுக்காக, கைப்பேசி திரையையே பார்த்திருந்தான். நிமிட தாமதத்தின் பின் ஒரு ஃபோட்டோ வந்தது. நாற்காலி எங்கே என்று தேடவைக்கும் அளவிற்கு அதன்மேல் கையில் கிடைத்த அத்தனை பொருட்களையும் குவித்திருந்தாள். டேபிள் ஃபேன் முதற்கொண்டு கைப்பை, டவல், சிலசேலைகள், பெட்ஷீட், தலையணை எல்லாவற்றுக்கும் மேல் Cherry on top கணக்கில் அவளது செந்நிற தலைக்கவசம் வேறு.

பார்த்தவன் அவனையறியாமல் சிரித்திருந்தான். பின் ஓரக்கண்ணால் மெல்லமாய் அருகிலிருந்தவனைப் பார்க்க, டெஸ்க்கில் முழங்கையை ஊன்றியவாறு கன்னத்தில் கைவைத்து வருணையே ஆவென்று பார்த்திருந்த குமரன்,

"நீ இப்போ சிரிச்சியே அத நான் பாக்கலடா. ஆனா ஒன்டு தெரிஞ்சிது."

"என்ன தெரிஞ்சிது?"

"மொச புடிக்கிற டோக்கோட மூஞ்சி"

"ஓ...ரொம்ப தேங்க்ஸ். உங்கட ஸ்டீல் ரூலர ஒருக்கா தர்றிங்களா..?"என்று வருண் கேட்க, அவன் ஒன்றும் சொல்லாமல் எடுத்துக் கொடுத்தான்.

வாங்கியவன், ரூலரினால் குமரன் கன்னத்தில் செல்லமாய்த் தட்டிவிட்டு, மேசையில் வைத்து அதைப்படமெடுத்து அவளுக்கு அனுப்பிவிட்டான். உடனே பார்த்தவளிடமிருந்து பத்துப்பதினைந்து நிமிடங்கள் ஆகியும் பதில் இல்லை.

வருணும் அதன் பிறகு மீட்டிங் சென்றுவிட்டான்.

****************************

போனைப் பிடித்திருந்த ஷோபனாவின் கைவிரல்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன.

ஊரில் பாதிப் பேருக்காவது முன் காதலென்று ஒன்று இருக்கும் தானே...
ஆனால் அவளுக்கு மட்டும் ஏன் இப்படி? நேற்றிரவும் ஓர் கனவு. நள்ளிரவில் பதறி விழித்தவளுக்கு , காலையில் பள்ளிசென்று இயல்புநிலைக்கு மீண்ட பின்னால்தான் வருணின் மெசேஜ்க்கு பதில் போடவே முடிந்தது.

இப்போதும் 'வீட்டுக்கு வந்தாச்சா?' என்று அவன் கேட்டதில் அலாதி சந்தோஷம் ஏற்பட எல்லாம் மறந்து, துடுக்குத்தனமாய் பதிலனுப்பிவிட்டாள்.

ஆனால்...

'எக்ஸ நினச்சி ஃபீல் பண்றியா என்டு அவன் கேட்ட உடனே ஏதோ உத்தமி மாதிரி அடிச்சியே.. நீ பெரிய ஒழுங்கா..?' என்று கெக்கலித்தது அவன் பதிலாக அனுப்பிய புகைப்படம்.

உண்மை தான். இப்போது ஜோனத்தன் மீது எந்தவித எண்ணமும் இல்லையென்பது உண்மைதான். என்றாலும்அவனை மறந்துவிட்டாளா எனும் கேள்விக்கு 'ஆம்' என்றால் அது சுத்தப்பொய்.

வருண் நல்ல மனிதன். அவனைப் பிடித்திருக்கிறது. கூச்சல் நடுவிலே மெல்லிசை போன்ற தூய்மையானவன். தூசி உறைந்திருக்கும் உள்ளத்தோடு அவனுடன் பேசிச்சிரித்தல் என்பது மா பாவம்; துரோகம்!!

வருணுடன் பேசவே பயமாக இருந்தது. அவளின் உள்ளக்கறைகள் தெரிந்தால் கேவலமாய் ஓர் பார்வை பார்ப்பானே. அதன் வீச்சை அவளால் தாங்க முடியுமா..?

அதையும் இதையும் நினைத்துப் பார்த்தவளுக்கு தலை வலித்து. இதயமும் இயல்புவீதம் மீறித்துடித்தது.

***********************
மாலையில், தங்கியிருக்கும் அறைக்கு வந்த வருணுக்கு, ஷோபனாவின் மீது துளியாய்க் கோபம். இதென்ன பதில் போடாமலிருக்கும் பழக்கம்? போனையெடுத்து அவளுக்கு அழைப்பு விடுத்தான். எடுக்கப்படவில்லை.

இரவு சாப்பிட்ட பின்னர் மீண்டும் அழைத்துப் பார்த்தான். இம்முறை எடுத்தவள் ஏதோபோல் பேசினாள். கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள்.

இவனுக்கு எரிச்சல் எல்லை கடக்க,
"என்ன இப்ப?" காட்டமாகக் கேட்டான்.

"கொஞ்சம் தலவலி"

"சரி, வை." என்று உடனே அவனும் வைத்துவிட்டான்.

அடுத்து வந்த நாட்களிலும் ஷோபாவிடம் இருந்து எந்த தகவலுமே வரவில்லை. 'சரிதான் போடி' என்றுவிட்டு வருணும் அமைதியாகவே இருந்துவிட்டான்.

ஒருமுறை யாழினியிடம் பேசுகையில்
"என்னவாம் உங்கட மச்சாள்?" என்று கேட்டுப் பார்த்தான்.

"ஏன்டா சண்டையா பிடிக்கிறா அவளோட. எங்கட வீட்டுப்பக்கமே வர்றாள் இல்லையே. ஸ்கூல் முடிய அம்மாவ எட்டிப் பாத்துட்டு போயிருவாங்க மேடம்."

யாழினியிடம் போக இயலாத அளவுக்கு என்ன பிரச்சனை? மனம் கேட்காமல் ஷோபனாவுக்கு அழைப்பு விடுக்கவும், துண்டித்தவள், நாளை அழைப்பதாக செய்தி அனுப்பினாள். ஆனால் அந்தநாளைக்குப் பின்னும் பல நாட்கள் சென்றுவிட்டன அவளிடமிருந்து எதுவும் வரவில்லை.

ஷோபனா எதையோ நினைத்து குழம்புகிறாள் என தெரிந்தது. அது எதுவென போனில் பேசி இந்நாளில் அறிய முடியாது. நேரில் போகலாம் என்றாலும் வந்து பத்தே நாட்களில் விடுமுறை கேட்டுநிற்க ஒருமாதிரி இருந்தது.

அலுவலக நேரத்தில் அடிக்கடி வாட்சப்பில் தவமிருக்கும் நண்பனைப் பார்த்து,
"அழைப்பாயா..? அழைப்பாயா..?
அலைபேசி அழைப்பாயா?
தலைகீழாய் குதிக்கின்றேன்.
குரல் கேட்கவே... அழைப்பாயா?"
என்று குமரன் கிண்டலாய்ப் பாட அவனிடம் எரிந்து விழுந்தான் வருண்.

"ஐய... அடுத்த வசனம் தெரியலனா மூஞ்சி மேல சொல்லுங்க ப்ரோ." என அவன் கத்தியதைப் பெரிது படுத்திக்கொள்ளாமல் பேசிய நண்பனிடம் மன்னிப்பு வேண்டியவன், பிரச்சனை பற்றி மேலோட்டமாக மனம் திறந்தான்.

அவனை இழுத்துக்கொண்டு சம்பத்திடம் சென்று அவசரம் என்று லீவ் கேட்டான் குமரன்.

"வந்து டூ வீக்ஸ் தானே ஆகுது.."என்று இழுத்தவர் பின், "ஓகே நாளன்டைக்கு ஒரு சைட் போகனும். அதுமுடிய அப்டியே போங்க" என அனுமதி கொடுத்தார்.

வருணும் போய், அன்று சந்தோசமாய்த் தூங்கியவன், இ
ரவு ஒன்றரை மணியளவில் அமுதாவிடமிருந்து வந்த போன்கோலில் சொல்லப்பட்ட செய்தியில், காரை மட்டக்களப்பு நோக்கி படுவேகமாய் செலுத்திக் கொண்டிருந்தான்.
 

Author: ஷாரிகா
Article Title: வழியிலே இதயத்தின் நிழலாய் - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷாரிகா

Well-known member
Staff member
Apr 26, 2026
61
267
53
Srilanka

ஹாய் அக்காஸ்💕.
எல்லாரும் எப்டி இருக்கீங்க?

நானும் டெய்லி Epi போடுவோமென்டு தான் பாக்குறேன்.
எங்க..?
அதுக்கு தீயா வேலை செய்யணும். நான்தான் தீயில நின்னு வேல செய்யுறேனே.
அதாவது, சமையல.. இல்லையில்லை, சமையல் பழகுறத சொன்னேங்க.

" என்னது... இப்பத்தான் பழகுறியா? முந்தின எபில ஏதோ சுவைக்குறிப்பு சொன்னியேமா..?" அதெல்லாம் சித்திமாரின் உபயத்தில் சொன்னது.

இவ்ளோ நாள் ஹோஸ்டெல் வாசம், ஒரு எக்ஸாம்முடிய இன்னொன்டா எழுதித் தள்ளிட்டு இருந்தன். எங்கம்மா கிச்சன்பக்கம் சாப்பாடு எடுக்க மட்டும்தான் கூப்டுவாங்க ♥.

எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கும் வந்து சேர்ந்து, அம்மாக்கு ஒருகை கொடுப்போம் என்ற நல்லெண்ணத்துல சமையல் பழகலாம்னு முடிவெடுத்தேன்.

வெங்காயம் கட் பண்ணா கண்ணு வேர்க்குது; கரட் கிரேட்பண்ணா பாத்திரத்துக்கு வெளில தெறிக்குது; புட்டுக்குழல்ல நிறைய நேரமா ஆவியக்காணாம, அப்பதான் ஃபோன் எடுத்து சும்மா பாத்தேன், ஆவி வரல, கடைசியில தேங்காய்ப்பூ கருகின வாசம்தான் வந்திச்சு; கத்தியால தேங்காய் மேல ஒரே போடாப்போட்டா அது உடையல்ல, என் மோதிரம்தான் உடஞ்சிது🥴.

இப்படியெல்லாம் தட்டுத்தடுமாறி, எப்படியோ ஒருநாள் பருப்புக்கறி ஆக்கிவெச்சன்.
பெரிய தம்பி ஒத்த வார்த்த சொன்னான்-'வேணாம்.'
அதுக்கென்ன எங்க அப்பா சாப்டாங்க. அவர் ஒரு வாய் வெச்சதும்,

"எப்டி இருக்குப்பா?"

"நல்லம்மா."

"ஓ.. ஓகே. சாப்பிடுங்க"

"சரி, அந்த... உப்பு போத்தல கொஞ்சம் எடுத்து தர்றியாமா?" என்டு கேட்க,
உடனே தம்பி நக்கலா சிரிச்சான்.

ஓங்கி அடிச்சிட்டு சிக்சரா, ஃபோரா என்டு வாயப்பிளந்து பாத்துட்டு நின்டவன (b)போலக்கேட்ச் பண்ணி மனச உடைச்ச மாதிரி இருந்திச்சு.( It's okay... வீரனுக்கு விழுப்புண் தானே அழகு)

எனக்கொரு சின்ன தம்பியும் இருக்கான். நான் எப்டி Tea ஊத்திக்குடுத்தாலும் "நல்லா இருக்கு" அந்த வார்த்தை மட்டும் தான்வரும் அவன் வாய்லருந்து. அது புள்ள.
ஒரு நிமிஷம்....
சின்னதம்பி எண்டா பாப்பா இல்லீங்க. அவனுக்கு பதினஞ்சு வயசு.

பெருசு இருக்கே, அது காலைல குடுத்த டீக்கு "சீனி காணாது" என்டிச்சு.
அதனால பின்னேரம் சுகர் ஒரு ஸ்பூன் அதிகமாப்போட்டுக் கொடுத்தா , " சீனி கூடிட்டு" என்றான்.

"என்ன தம்பி நீ மாத்தி மாத்திக் கதைக்கிறா..?

"உண்மைய சொன்னேன். Simple, அம்மா மாறி சீனிய அளவாப்போடு. வரலையா... Give Up பண்ணு" என்டு நக்கலா சொல்லிட்டுப் போறான்.

'என்ன கஷ்டப்பட்டு என்றாலும் பழகி, விதம்விதமா சமச்சி, டேஸ்டில அசத்தி, உன் மூஞ்சில கரி பூசல....' இப்படியெல்லாம் ரோஷநரம்புல ரத்தம் பாய்ந்தமாதிரி எந்த உறுதியும் எடுக்கவே இல்ல நான்.
ம்ச், தோனவே இல்ல. இந்த சமையல் ஜர்னி இப்படி மந்தகதிலயே ஆறுதலா போகட்டும்.🫠

அதாகப்பட்டது,
நீங்க ஒரு சுவையாவோ, சுமாரவோ... அதெல்லாம் கேள்வியே இல்ல, சமைக்கிறிங்களா? இந்தாங்க , காத்துல கைகுலுக்கி கொள்றேன் & Hats off to you 💐💐

கடைசியாக கதை பத்தி வாரன்.

Epi ரொம்ப சின்னதென்டு ஒருத்தங்க சொல்லி இருந்தாங்க. Yess, எனக்கே விளங்குது. சீனி, உப்பு அதே மாதிரி எழுத்து விஷயத்திலயும் அந்த அளவு தான் நம்ம பிரச்சனையே. போகப்போக பெருசாவே தர முயற்சிபண்றேன்.

நல்லா இருந்தாலும் சொல்லுங்க. நல்லா இல்லையா.. எங்க பிழைக்குறேன்னும் சொல்லுஙக. எழுத்துலகில் இப்போதைக்கு வெறும் சின்ன குழந்தை தானே நான், கட்டாயம் திருத்திக்கொள்ளவே முயற்சிப்பேன்.

இதுவரை வாசித்து அனைத்துப் பதிவுகளுக்கும் லைக்கிட்டு, பதிலிட்டு ஊக்குவித்த அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் நன்றி🥰.

இனியும் உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்த்தபடியே இருப்பேன்...
 
Last edited:

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
638
499
63
Pondicherry
வருணும் குமரனும் 🤣🤣🤣🤣🤣.. காமெடி நன்றாக எழுதி இருக்கீங்க..

கதைய விட நீங்க சமையல் பழகிய அனுபவம் ரொம்ப சுவாரசியமா இருந்தது😉😉..

எபி சின்னதா தான் வருது.. It's ok..கன்னி முயற்சி என்று சொல்ல முடியாத அளவுக்கு story flow and way of expressing ரொம்ப நல்லாருக்கு.. 💐💐💐💐💐 வாழ்த்துகள்..
 
  • Love
Reactions: ஷாரிகா