• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வழியிலே இதயத்தின் நிழலாய் - 22

ஷாரிகா

Member
Staff member
VIN-22

இப்போது அடிபட்ட இடத்தில் ஓரளவுக்கு வலி குறைந்திருந்தது.
மெல்ல எழுந்தவன் காலை ஊன்றத் தடுமாறினான். ஷோபனாவின் உதவியோடு நடந்து அறைக்குள் சென்றான்.

குளித்து உடைமாற்றி வந்தவன், கட்டிலில் அமர்ந்திருந்தவளிடம் சென்று "சோ?" என்று புருவம் உயர்த்த,

அவளுமே "சோ...?" என்றாள் தலையாட்டி.

"டைம் ஃபோர் ஸ்டெப் வன், அப்படித்தானே?"

அவளுக்கு உண்மையாகவே ஒன்றும் புரியவில்லை. அவனைக் குழப்பமாக பார்த்தாள்.

"அதுக்குள்ள மறந்தாச்சா?? டேய் பை டேய்.. ஸ்டெப்.." மெல்ல நினைவூட்டினான்.

இப்போது புரிந்தது.
அவள் கன்னக்கதுப்புக்களில் குப்பென்று செம்மை .

உதடுகளில் நெளிந்த குறுஞ்சிரிப்போடு அதை ரசித்திருந்தவன் மெல்ல அவளருகில் வந்தமரவும் உடனே, "உங்களுக்கு தான் கால்ல அடிபட்டு இருக்கே.. நம்ம ஏன் ஸ்டெப் வன்ன நாளைக்குத் தள்ளிப் போடக் கூடாது??" முகத்தில் எதுவும் காட்டாமல் அப்பாவியாய் வினவினாள்.

"அப்ப, அது உனக்கு தெரியாதா ஷோபா?"

"என்னது?!!"

"Don't wait until tomorrow to begin. Start today. Start now. Procrastination delays the process.." படுசீரியசாய் அவன் சொல்லியதில் ஒருநொடி அவனை உற்றுப் பார்த்த ஷோபனா,
பற்கள் நெறிபட கண்களைச் சுருக்கி முறைத்தாள்.

"எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க?"

"யம்மா தாயே..." என்று இரு கைகளையும் கூப்பியவன், "நா.. எந்த முடிச்சும் போடல. நீ வேணுமென்டா நைட் ஃபுல்லா கதையளக்குற மூட்ல இருக்கலாம். நான் ரொம்ப டயர்டா இருக்கேன். ஆளவிடு. குட் நைட்.." என்றுவிட்டு உடனே எழுந்து கொள்ள, அவன் கையைப் பிடித்து தடுத்தவள், "எனக்கு ஓகே.." என்றாள் மெல்லிய குரலில் முகம் தாழ்த்தி.

வணுக்குக்குத்தான் ஒரு மாதிரியாய் போனது. குறும்பும் கேலியும் கலந்திருந்த முகம் சட்டென மென்மையடைய,
"ஹேய்.!!"
என்று அவளருகே மீண்டும் அமர்ந்தவன், "உனக்கு விருப்பமில்லா..."

"எனக்கு விருப்பம் தான்." ஷோபனாவிடமிருந்து உடன் பதில் வந்தது.
" அதெல்லாம்.. முதல்ல அப்படி .. வேணாம் என்டுதான் சொல்லுவம்..." ஓரக்கண்ணால் அவன் முகம் பார்த்தபடி முணுமுணுத்தாள்.

"ஓஹ்!?"

"ஹ்ம்ம்.." வெட்கம் கலந்த அழகிய ஒப்புதலில் அவளை மெல்ல நெருங்கி கன்னங்களில் உதடுகள் ஒற்றி எடுத்தவனுக்கும் வெட்கமாகிவிட்டது போல. விலகியவன் உடனே எழுந்துநின்று தலையை அழுந்தக் கோதிக்கொண்டு மறுபக்கமாய் வந்து படுத்துக் கொண்டான்.

சில நொடிகள் அமைதியில் கழிந்தன.

"ஷோபா..?"

"ஓம்.."

"தூங்கல்லையா?"

"தூங்கத்தான் போறன்..."என்றுவிட்டு அதுவரை இருந்த தயக்கஉணர்வை உதறியவள், கணவனின் கைவளைவில் இயல்பாய் புகுந்துகொண்டு தோளில் தலைசாய்த்துக் கண்கள் மூடினாள்.

இதை எதிர்பார்க்காதவன், உதடுகளில் அரும்பிய மந்தகாசப் புன்னகையோடு அவள்புறம் சற்றுசரிந்து உச்சியில் இதழ் பதித்து "குட் நைட்" என்றான் மென்மையாக .

கண்களைத் திறவாமல் அவளும் "குட் நைட்.." என்றாள் அதே மந்தகாசப் புன்னகையோடே.

இதம் தொலைத்து அலைந்திருந்த இதயத்திற்கு, சாய்ந்து இளைப்பாற ஒரு நிரந்தரநிழல் கிடைத்த நிம்மதியில், தூக்கம் அவளைத் தேடி தானாகவே வந்தது. அன்றிரவு தூக்க மாத்திரைகளின் தேவைப்பாடு இருக்கவில்லை.

*******************

அடுத்த நாள்.

காலை முதலே சமையலறையில் தடபுடலாக இருந்தது.

பெருந்தன்மையாய் ஒருவர் தானாகவே முன்வந்து உதவியாளர் வேடத்தை ஏற்றுக் கொண்டிருந்ததால், மற்றவர்தான் சமையல் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

காய்கறி நறுக்குவது, தேவையான பொருட்களை எடுத்துக் கொடுப்பது, பயன்படுத்திய பாத்திரங்களை ஒழுங்குபடுத்துவது, இடையிடையே சமைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஜூஸ் கலந்து நீட்டுவது என்று எடுபிடி உதவியாளர் ஷோபனாவின் வேலைப்பட்டியல் நீண்டுகொண்டே போனது.

மதிய உணவு முடிந்ததும், அந்தச் சின்னச் சின்ன வேலைகள் கொடுத்த களைப்போ, இல்லை கணவனின் கைப்பக்குவத்தில் தயாரான இறால் பிரியாணி கொடுத்த மயக்கமோ தெரியவில்லை...

ஷோபனா கட்டிலில் சாய்ந்த சில நிமிடங்களிலேயே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

வருணும் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு எழுந்தவன், மாலைத் தேநீருக்குப் பிறகு, கண்டிக்குப் புறப்படத் தயாரானான்.

கிளம்பும் முன்,

"ஸ்டெப் டூ..."

என்று மிக முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டவன்,

அவளது இதழ்களில் மென்மையான ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு,
மனம் நிறைந்த புன்னகையோடு விடைபெற்றிருந்தான்.

*************


"................."

ஷோபனாவை பேசவிட்டு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் டாக்டர் மதிவதனி.

அவ்வப்போது சில குறிப்புகளை எழுதிக்கொண்டவர், இறுதியில் பேனாவை மூடிவைத்து நிமிர்ந்து அவளைப் பார்த்தார்.

"ஓகே...." என்று சிறிது இடைவெளி விட்டவர், புன்னகையுடன் தொடர்ந்தார்.

"முன்ன உங்கட மனசு ஒரு wild monkey மாதிரி இருந்துச்சு."

"டாக்டர்!!" என்று சிரித்தாள் அவள்.

"இல்ல. அதாவது... ஒரு பிரான்ச்லருந்து இன்னொரு பிரான்ச்க்கு டக்டக்கென்டு தாவிட்டே இருக்கும்- அதை சொன்னன். இப்ப... அந்த monkeyக்கு கொஞ்சம் டிசிப்ளின் வந்திருக்கு."

"அப்போ இப்ப monkey இல்லையா?" குறும்பாக கேட்டாள்.

"இப்பவும் தான். ஆனா கொஞ்சம் ட்ரெயினிங் எடுத்த மங்கி."

அவர் சொல்ல இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

அந்தச் சிரிப்பு அடங்கியதும் மதிவதனியின் குரல் மென்மையானது.
"சீரியஸ்லி... குட் ஜாப் ஷோபனா." என்றார் மனப்பூர்வமாக.

அவள் அமைதியாய் புன்னகைத்தாள்.

இடையே சில கேள்விகளும், சில புன்னகைகளுமாக அவர்களின் உரையாடல் இன்னும் கொஞ்ச நேரம் நீண்டது.

"ஓகே. இன்டைக்கு இவ்வளவுதான். So.. இனி ID சஜஷன் பார்த்து...?" கேட்க வந்ததை முழுதாக முடிக்காமல் ஷோபனாவின் முகத்தை உற்றுநோக்கி கேள்வியாக நிறுத்தினார்.

ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டே
" ID என்ன டாக்டர்... பெரிய ID... ஆளே வந்து நிண்டாலும், அசால்ட்டா கடந்து போவம் நாங்க" என்றாள் ஷோபனா கண்களில் மிதப்புடன்.

"அதுதான் வேணும்." பாராட்டுதலாய் தலையசைத்து விடை கொடுத்தார் .

மனது நிறைந்த ஒரு இலகுவுடன் அறையை விட்டு வெளியேறினாள் ஷோபனா.

வருண் கடைசியாக கண்டிக்குச் சென்று, இரு வாரங்கள் கழித்து மீண்டும் வந்திருந்தான். அவர்கள் பல மாதங்களாக உழைத்துக்கொண்டிருந்த பெரிய மால் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. வேலை முடிந்த மறுநாளே ஒரு நாள் விடுப்புக் கேட்டவனுக்கு, அது உடனடியாகக் கிடைத்துவிட்டது.

அதன் பயனாகத்தான் இப்போது, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்த காரின் மீது சாய்ந்து நின்றபடி மனைவிக்காகக் காத்திருந்தான்.
கண்களில் கூலர்ஸ். கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நின்றிருந்தவனிடம் வழக்கத்தை விட அதிகமான ஸ்டைல் ஒட்டிக்கிடந்தது.

அவனைக் கண்டமாத்திரத்தில் ஷோபனாவின் நடை தன்னிச்சையாக மெதுவானது.

காணொளி அழைப்பில் தினமும் பார்க்கும் முகம்தான்.
காலையிலும் பார்த்திருந்தாள்.
ஆனால் சில தருணங்களில், சில மனிதர்கள் புதிதாகத் தெரிந்துவிடுகிறார்கள்.
இப்போதும் அப்படித்தான்.
தனக்காகக் காத்திருப்பவனைப் பார்க்கையில், இதயம் நிறைய ஏதோ மென்மையான உணர்வு பரவியது.

வழக்கத்தைவிட இன்னும் வசீகரனாகத் தெரிந்தான் வருண்.

இதழ்களில் பூத்த புன்னகையோடு கணவனை ரகசியமாய் ரசித்தபடியே அன்னநடையிட்டு வந்தாள்.

இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.

"யாழி அக்கா வெளிக்கிட்டாச்சாமா?" சீட் பெல்டை மாட்டிக்கொண்டே ஷோபனா கேட்டாள்.

"ஹ்ம்ம்... யாழிய போக சொல்லிட்டேன். நாங்க போய் அபியக்கூட்டிட்டு, அப்டியே கடையில சாப்பாட எடுத்துட்டு போனமென்டா சரி." காரை ரிவர்ஸ் எடுத்தபடியே பதில் சொன்னான்.

சனிக்கிழமை- என்பதால், எல்லோருமாக சேர்ந்து சின்ன பிக்னிக் செல்வதாக திட்டம்.

"எங்க... அபி என்டவர் வரமாட்டன் என்டு புதுனம் பிடிக்கிறேரோ தெரியாது...?" என்றாள் ஷோபனா பெருமூச்சுடன்.

"பாசமலர்கள சேர்த்து வைக்குறத்துக்காகத்தான் இந்த பிக்னிக் பிளானே. அதெல்லாம் நான் கூப்பிட்டா வருவான்." அலட்டலின்றி பதில் அளித்தான் வருண்.

"போய் கூப்பிட்டு பாருங்க. வராட்டி, நான் வாழ்க்கையிலயும் கதைக்க மாட்டேன் என்டு சொல்லுங்க."

"ஷோபனா! என்ன கத இது...?" மென்மையாய் கடிந்தான்.

"பின்ன என்ன வருண்? அபி என்னோட கதச்சே கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கும் மேல ஆகிட்டு. நான் கேட்டாக்கூட ஒழுங்கா பதில் சொல்லுறதில்ல. இதுதான் என்டு எனட்ட சொல்றதுக்கென்ன அவருக்கு?"
என்றாள் ஆற்றாமையாய்.

அவளது குரலில் இருந்த ஆதங்கம் வருணுக்குப் புரிந்தது.

"ஒரு டீச்சரா உனக்குத் தெரியாததா? டீனேஜர்ஸ் என்டா.. கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க. எல்லாம் சொல்லுவான் என்டு எதிர்பாக்கேலாது. நாமளும் பொறுமையா நிதானமாத்தான் விசாரிக்கணும்"

"தோ... வந்துட்டார் கருத்தூசி அடிக்கிறதுக்கு." என்று சலிப்பாய் முணுமுணுத்தவள், சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

அவளது குழந்தைத்தனமான புலம்பலில் வருணின் உதடுகளில் சிரிப்பு அரும்பியது.

அதன் பின் எதுவும் பேசாது காரை செலுத்தினான்.

***********

ஷோபனாவின் சித்திவீட்டுக்கு முன்பாக காரை நிறுத்தினான் வருண்.

ஹோலில் வந்து அமர்ந்து கொண்டவள், வருணை அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்க எழுந்து அபியின் அறைக்குள் சென்றான்.

சித்தியிடம் விஷயத்தை சொல்லி கபிஷை அழைத்துச் செல்வதாக கூறினாள்.

அதற்குள், சென்று இரு நிமிடங்களிலேயே திரும்பியிருந்தான் வருண்.

"என்ன வரமாட்டாராமா?" அருகில் வந்தமர்ந்தவனிடம் கேட்டவளது குரலில் ஏகத்துக்கும் கடுப்பு.

"அங்கப் பாரு." என்று வருண் கண்களை காட்ட, திரும்பிப் பார்த்தாள்.

ஷோபனா வாங்கிக் கொடுத்திருந்த டார்க் ப்ளூ டி-ஷர்ட்டில் தயாராகி, மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் அபித்ரன்.

தமக்கையைப் பார்த்து குறும்பாக சிரித்துக் கை காட்டியவனை, கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் முறைத்து விட்டு,

" எப்டி?? முந்தநாளும் இங்க வந்தனான். என்ட முகத்த நிமிர்ந்து கூட பார்க்கல. இன்டைக்கு இந்த இளி இளிக்கிறானே. போய்...ஒரு டூ மினிட்ஸ்ல வந்துட்டீங்களே. அப்படி என்ன சொன்னீங்க?" வருணிடம் கிசுகிசுப்பாக கேட்டாள்.

" தெரியலையே. நான் போய், விஷயத்தை மட்டும்தான் சொன்னன். உடனே ஓம் என்டுட்டான். இன்டைக்கு பின்னேரம் உன்னப்பாக்க வரத்தான் இருந்தவனாம்." என்றான் வருணும் அதே கிசுகிசுப்போடு.

அபி இறங்கி வந்தவன் ஷோபனாவை இடித்துக்கொண்டு அவளருகே ஒட்டி அமர்ந்தான்.

முறைப்போடு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "அப்புறம் என்ன அபித்ரன், மலையிறங்கின மாதிரி தெரியுது? உங்கட கேர்ள் ஃபிரண்டோடா Pபெட்ச்-அப் ஆகிட்டீங்க போலயே...?" என்றாள் நக்கலாய்.

அதிர்ச்சி அடைவான் என்று பார்த்தால், சின்னதாய் வாய்விட்டு சிரித்தான் அபி.

"ஓஹ்!! அருள் என்டவர் 'சொல்லாதீங்க அக்கா' என்டு எனட்ட கெஞ்சிப்போட்டு, நான் விசாரிச்சென்டு உனட்ட வந்து சொல்லிட்டேர் என?"

அணிந்திருந்த டி ஷர்ட்டினை இழுத்துக்காட்டி "எங்கட செல்ல அக்கா வாங்கித் தந்தது, எப்டி இருக்கு?" சம்பந்தமில்லாமல் வேறு கேள்வி கேட்டான் அபி.

ஷோபனா கன்னம் சுளித்து, "நல்லாவே இல்ல.." என்க,

அதுவரை அவர்களின் சம்பாஷனையைக் கண்டும் காணாததும் போலிருந்த வருண், அவளது தோளில் சின்ன அடி போட்டுவிட்டு, செல்லமாய் முறைத்தான்.

வசந்தியும் அவர்களது மோதலைப் புரியாமல் பார்த்துவிட்டு, "என்னவோ பிரச்சனை என்டு தெரியும்.. அபிக்கு என்னவாம்டி ஷோபா?" என்று கேட்க,

"அதூ... அமெரிக்கா - ஈரான் பிரச்சினையை விட பெருசு. உங்களுக்கு விளங்காது." என்றாள் ஷோபனா.

அவர் சிரித்தபடி தலையசைத்தார்.

"சரி, சரி டைமில்ல." என்று எழுந்த வருண்,

" இரண்டு பேரும் கெதிய சமாதானமாகுங்க. அக்காக்கு கை குடு அபி." என்றும் சொல்ல,அபித்ரனும் கைகளை நீட்டினான்.

ஷோபனாவும் இறங்கி வந்தாள். அவளுக்கும் தம்பி தன்னுடன் பேசியதில் மிகுந்த சந்தோஷமே.

காரில் கபிஷை வருணுக்குப் பக்கத்தில் அமர்த்திவிட்டு, ஷோபனாவும் அபியும் பின்பக்கம் ஏறிக்கொண்டனர்.

"அப்புறம்... உங்கட லவ் ஸ்டோரியையும் கொஞ்சம் சொல்லுங்களேன். கேட்போம்..." என்று மெல்லத் தொடங்கினாள் ஷோபனா.

அபித்ரன் ஒரு நொடி அமைதியாக இருந்தான்.

"அதெல்லாம் இப்ப எதுவும் இல்லக்கா... எல்லாத்தையும் விட்டாச்சு." என்றான் எங்கோ வெறித்துப் பார்த்தபடி. அவனது குரலில் இருந்த சோர்வு, அந்த வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஏதோ சொல்லியது.

"படிக்கிற வயசுல முத்தல் வேலைகளும் பார்த்துக் கொண்டு, ஏதோ வாழ்க்கையையே பார்த்த பெரிய ஆள்ட கணக்குல, ஃபீலிங்கா பதில் சொல்றதப் பார்!" என்று அவனது ஒற்றைக் காதைப் பிடித்துத் திருகினாள்.

"ஆஹ்...!" என்று அலறினான் அபி.

அந்தச் சத்தத்தைக் கேட்டு வருண் பின்னால் திரும்பிப் பார்க்க, உடனே காதை விட்டுவிட்டாள் ஷோபனா.

"உண்மையாவே இப்போ எதுவும் இல்லையென்டா அது நல்ல விஷயம் தான் அபி. ஒரு சின்ன பாதிப்பு எண்டாலும் ஆழமாப் பதியிற வயசு இது. தயவுசெஞ்சி இந்தக் காதல், கத்திரிக்காய் எல்லாம் இப்போதைக்கு, வேண்டவே வேண்டாம். நான் இப்படி அட்வைஸ் பண்ணுவன்னு தெரிஞ்சதாலதான் எனட்ட சொல்லாம இருந்தியோ என்னவோ..." என்று சிரித்தவள், அடுத்த கணமே குரலை மென்மையாக்கினாள்.

"ஆனா, ஒரு அக்காவா சொல்ல வேண்டியதைச் சொல்றது என் கடமை தானே..."

அபித்ரன் மெதுவாகத் தலையசைத்தான்.

"இனிமேல் எந்தப் பிரச்சனையா இருந்தாலும், முகம் காட்டாம ஒளிஞ்சு திரியக்கூடாது. தப்பு செஞ்சா எப்படியாவது திருத்தப் பாக்கணும். தப்பில்லையா, தைரியமா ஃபேஸ் பண்ணப் பாக்கணும். பிழையோ சரியோ, இதானக்கா விஷயமென்டு சொன்னியென்டால் கட்டாயம் நான் ஹெல்ப் பண்ணுவன். சரியாடா? விளங்கிச்சா?"

அவளது குரலில் இருந்த அக்கறை, அபித்ரனின் மனதை எங்கோ தொட்டது.

கண்கள் மெல்லக் கலங்கின.

அடுத்த நொடியே, அவனது விழிகளிலிருந்து இரண்டு துளி கண்ணீர் வழிந்தன.

அதை மறைக்க நினைத்தவன் அவசரமாகத் தலையைச் சரித்து, தோள்பட்டையில் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் கார் மெதுவாக நின்றது.

வருண் பின்னால் திரும்பிப் பார்த்தான்.
"இந்தச் சந்திதானே அபி?"

அபித்ரன் முன்பே தன் அத்தானிடம், அருளையும் தங்களுடன் கூட்டிச் செல்லும்படி கேட்டிருந்தான். அருளின் வீடு இருந்த சந்தியில்தான் கார் நின்றிருந்தது.

வருணின் கேள்விக்குப் பதிலாக,

"ஓம்... ஓம்..." என்று அவசரமாகத் தலையசைத்தவன், ஷோபனாவின் கைப்பேசியை வாங்கி அருளுக்கு அழைத்தான்.

சில நிமிடங்களிலேயே, சந்தியின் உள்ளிருந்து ஓடி வந்தான் அருள்.

அதற்குள் கபிஷ் பின்சீட்டிற்கு இடம் மாறியிருந்தான்.

காரிலிருந்து இறங்கிய ஷோபனா, திருதிருவென முழித்தபடி சங்கடமாகத் தலையைச் சொறிந்துகொண்டு நின்ற அருளைப் பார்த்து, செல்லமாக ஒரு முறைப்புடன் தலையசைத்துவிட்டு சென்றவள், முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

***************
 
Last edited:

ஷாரிகா

Member
Staff member
அந்தப் பார்க்கின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும், ஆங்காங்கே சீரற்ற இடைவெளியில் நின்றிருந்த மரங்களின் கிளைகளிலிருந்து வீசிய தென்றல், மதிய வெயிலின் உஷ்ணத்தை வெகுவாகக் குறைத்தது.

பெரிய மரம் ஒன்றின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த பொலித்தீன் விரிப்பின் மீது, கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களைப் பரப்பிவைத்து, வருண் மற்றும் யாழினியின் குடும்பத்தினர் வட்டமாக அமர்ந்து மதிய உணவை முடித்துக் கொண்டிருந்தனர்.

உணவு முடிந்ததும், சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள் கிரிக்கெட் விளையாடலாம் என்று முடிவு செய்தனர்.

ஆட்கள் குறைவாக இருந்ததால் அணிகளாகப் பிரியாமல், ஆறு பந்துகளில் யார் அதிக ஓட்டங்கள் எடுக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர் என்ற விதிமுறையுடன் போட்டி தொடங்கியது.

ஆதி தனது மைக்கும் ஸ்பீக்கரையும் கொண்டு வந்திருந்ததால், சிவா உடனடியாக அம்பயர் மற்றும் வர்ணனையாளர் என இரட்டை அவதாரம் எடுத்துக் கொண்டான். யாழினியும் அவ்வப்போது அவனுடன் இணைந்து கொண்டாள்.

"ஆமாம் நண்பர்களே... ஒரு முக்கிய அறிவிப்பு!" என்று மைக்கில் கம்பீரமாக ஒலித்தது சிவாவின் குரல்.

" ஆதி, கபிஷ் வரிசையில் அடுத்ததாகக் களமிறங்கப் போகும் வீராங்கனையின் பேட்டிங் திறமையைக் கருத்தில் கொண்டு, BackUp ஆக இன்னும் ஒரு பந்தை வைத்திருக்குமாறு விளையாட்டு வீரர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில் அவருடைய ஓங்கி அடிக்கும் அடியில் பந்து பறந்துபோய், நேராக திருகோணமலைக் கடற்கரையில் விழுந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆமாம்! அடுத்ததாகக் களமிறங்கப் போவது... தி ஒன் அண்ட் ஒன்லி... ஷோபனா! எங்கே உங்கள் கரகோஷம்?"
என்று அறிவிப்பாளருக்கே உரிய ஏற்ற இறக்கத்துடன் அவன் கத்த, ஷோபனாவிடமிருந்து குபீர் சிரிப்பு வெளிப்பட்டது.

சின்னஞ்சிறுசுகள் கைதட்டித் ஆரவாரம் செய்தனர்.

அவளோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்து மாய்ந்தவள், ஒருவழியாக பேட்டிங் செய்யும் இடத்தை அடைந்தாள்.

அப்போது அபித்ரன்,
"ஏற்கனவே சொன்னது போல எங்களுக்கெல்லாம் அந்தப் புளியமரம் தான் பவுண்டரி!" என்று சற்று தூரத்தில் இருந்த மரத்தைக் காட்டினான்.
பின்னர் ஷோபனாவை நோக்கி,
"ஆனா ஷோபிக்காக மட்டும் ஸ்பெஷல் ரூல். இந்தா.. இந்த மர பெஞ்ச் வரைக்கும் அடிச்சாலே பவுண்டரி!" என்று எல்லாருக்கும் கேட்கும்படிக்கு சத்தமாக சொன்னான்.

"அதெப்படி? அப்படி எல்லாம் ஏலாது."
கையில் இருந்த பந்தை ஸ்டைலாக மேலே தூக்கிப் போட்டுப் பிடித்தபடி வருண் உடனே எதிர்த்தான்.

கணவனைக் கண்களால் எரித்துக் கொண்டே அவனிடம் விரைந்து நெருங்கிய ஷோபனா, "ஹலோ! நாங்க வழமையாவே அப்படித்தான் விளையாடுறது. இதுல, உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று படபட பட்டாசாய்ப் பொறிந்தாள்.

"அப்டியா செல்லம்! எனக்குத் தெரியாதே.." என்று கொடுப்புக்குள் நெரித்த சிரிப்புடன் கொஞ்சியவனை நோக்கி கையில் இருந்த பேட்டினை உயர்த்தி, கவனம் காட்டினாள்.

"நீயே சொல்லு ஷோபா, ஆண், பெண் பாகுபாடு காட்டுறது சரியா? எல்லா விஷயத்துலயும் சம உரிமை வேணும்னு சொல்றீங்களே. அப்படியிருக்க, பவுண்டரியிலும் சம உரிமை இருக்கணும். அதனால ரெண்டு பேருக்குமே சேம் பவுன்டரிஸ் தான்." என்றான் வருண் தீர்மானமாய்.

"அதெல்லாம் நேரத்துக்கு நேரம், ஆளுக்கு ஆள் மாறுபடும். எனக்கு சமையல்வேல, வீட்டுவேலைல மட்டும் சமஉரிமை தந்தாப் போதும். இப்ப, நடுவெயிலுக்க நிண்டு கருத்தூசி அடிக்காமலுக்கு ஒழுங்காப்போய்... b போல் போடுற வேலையப் பாருங்க. ஹோய்.. பாத்து, ஸ்லோவாப் போடனும்." என்றாள் கட்டளையாய்.

"சரிங்க மெடம்... அப்டியேங்க மெடம்..." கையை நெஞ்சுக்கு குறுக்காகக் கட்டி, தலை தாழ்த்தி பவ்வியத் தோரணையில் சொன்னான் வருண்.

"அன்பார்ந்த விளையாட்டு ரசிகர்களே... ஒரு முக்கிய அறிவிப்பு!

சற்று முன்னர் விளையாடுவதற்காக களமிறங்கிய, நமது பந்துவீச்சாளரும் துடுப்பாட்ட வீராங்கனையும் போட்டியை மறந்து, பவுலிங்-பேட்டிங்கையும் மறந்து, லவிங் மோடில் இருப்பது போல் தெரிவதால், கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விருவரும் இன்னும் ஒரு நிமிடத்திற்குள் கிரிக்கெட்டுக்கு திரும்பாவிட்டால், பேட்டையும் பந்தையும் பறிமுதல் செய்து அவர்களை மேட்ச்சிலிருந்து நீக்கிவிட்டு, வீட்டுக்கு அனுப்பிவைக்க விளையாட்டுக் குழு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

நன்றி!"

ஆதி கொண்டு வந்திருந்த சிறிய மைக்கும் ஸ்பீக்கரும், அவர்களைச் சுற்றியிருந்த சில மீட்டர் தூரத்திற்கு மட்டுமே கேட்கும் வகையில் இருந்தது. அதனால் சிவாவின் கமெண்ட்ரி அருகிலிருந்த தங்கள் கூட்டத்தினரை மட்டுமே சிரிக்க வைத்ததே தவிர, பார்க்கில் இருந்த மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

சிவா மைக்கில் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த கணம், ஷோபனா வேகமாக ஓடிச் சென்று பேட்டை தரையில் பதித்துக் கொண்டு பந்தை எதிர்நோக்கி நின்றாள்.

வருணும் மெதுவாகவே பந்து வீச, அவளும் ஓரளவு ஓட்டங்களை எடுத்திருந்தாள்.

அதன் பின்னர் மற்றவர்களும் மாறி மாறி விளையாடினர்.

இறுதியில் அதிக ஓட்டங்கள் எடுத்திருந்த அருள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டான்.

அதன்பிறகு, மைக்கும் ஸ்பீக்கரும் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. பாடல்கள் ஒலிக்க, சிலர் பாடியும் சிலர்

ஆடியும் மாலை வரை உற்சாகமாக நேரத்தைக் கழித்தனர்.
 
Last edited:
Top Bottom