• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

14. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறை நீர்..!! - 14

காளிங்கன் ஒரு வக்கீல்.. அநியாயம் செய்பவர்களுக்காக பலவித பித்தலாட்டங்கள் செய்து வாதாடி அவர்களை அவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்புவித்து ஒன்றுமறியாத நிரபராதிகளை குற்றவாளிகள் என பொய்யான ஆதாரங்களை உருவாக்கி நிரூபித்து அவர்களுக்கு தண்டனையும் பெற்றுத் தரும் கோல்மால் வக்கீல்..

காளிங்கன் ஒருவருக்காக வாதாடுகிறான் என்றால் நூறு சதவீதம் அந்த குற்றத்தை அந்த நபர் செய்து இருக்கிறான் என்று அடித்து சொல்லுவார்கள் காளிங்கனை அறிந்தவர்கள்..

சிந்துவுக்கு ஆறு மாதம் ஆனபோது ஒரு கேஸ் விஷயமாக காளிங்கன் ஜெகந்நாதனை வீட்டில் பார்க்க வந்தான்.. ஜெகநாதன் அப்போது வீட்டில் இல்லை.. பூமா தான் இருந்தாள்..

"என்ன விஷயம்?" என்று காளிங்கனிடம் அவள் கேட்க

காளிங்கனும் "மேடம் நீங்க எப்படி மேடம் இப்படி ஒரு வீட்ல இருக்கீங்க? உங்க ஹஸ்பண்ட் இருக்கிற போஸ்டுக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணாருன்னா எப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழலாம்..!!? ஆனா அவர் ரொம்ப பிடிவாதமா இருக்கிறார்.. அவர் பிடிவாதத்துனால மகாராணியா ராஜபோக வாழ்க்கை வாழ வேண்டிய உங்களை இப்படி குருவிக்கூடு மாதிரி ஒரு வீட்ல வாழ வெச்சு கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்காரு.. நான் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன்.. இப்ப கூட ஒரு பெரிய கையோட அடியாளை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கிறார்.. அவரை கோர்ட்டுக்கு கூட்டிட்டு போய் ஆஜர் படுத்தியே தீருவேன்னு அடம் பிடிக்கிறார்.. அவர் பெரிய பிசினஸ் மேக்னட் மேடம்.. இவருக்கு ஒரு கோடி ரூபாய் வரைக்கும் கொடுக்கிறதுக்கு ரெடியா இருக்காரு அவரு.. அதுக்கு பதிலா அந்த ஆதாரத்தை எல்லாம் இல்லாம பண்ணி அந்த ஆள ரிலீஸ் பண்ணா போதும்.. அதோட சாருக்கு பிரமோஷனும் வாங்கி கொடுத்திடுவார்.. நானும் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன்.. எதுக்கும் ஒத்து வர மாட்டேங்குறாரு உங்க புருஷன்.. அந்த ராஜரத்தினம் என்னை எப்படியாவது பேசி இவரை கன்வின்ஸ் பண்ண சொல்றாரு.. என்னால முடியல.. நீங்களாவது கொஞ்சம் அவரோட பேசி அந்த ஆளை விட சொல்லுங்க மேடம்.."

ஒரு கோடி என்று கேட்ட உடனேயே வாயை பிளந்தாள் பூமா.. பேராசையில் கண்கள் தெறித்து வெளியே விழுந்து விடும் அளவுக்கு விரிந்து கொண்டது..

"அவ்வளவு தானே.. அந்த ஆளு நிச்சயம் வெளியே வந்துருவார்.. நீங்க கவலைப்படாதீங்க.. நான் எப்படியாவது அவர்கிட்ட பேசி இதுக்கு சம்மதிக்க வைக்கிறேன்.." என்று நம்பிக்கையோடு காளிங்கனிடம் சொல்லி அனுப்பியவள் எவ்வளவு பேசியும் ஜெகன்நாதனை வழிக்கு கொண்டு வர முடியவில்லை..

மறுபடியும் காளிங்கன் வந்து கேட்டபோது தன்னால் ஜெகந்நாதனை சம்மதிக்க வைக்க முடியவில்லை என்று பூமா சொல்ல "சரி.. அப்ப நீங்க இன்னொரு வேலை பண்ணுங்க.. அவரை பத்து நாள் எங்கேயாவது வெளியில கூட்டிட்டு போயிருங்க.. அவரோட ஸ்டேஷன்ல இருக்குற சப்-இன்ஸ்பெக்டரை வச்சு நான் இந்த வேலையை முடிச்சுக்குறேன்.." என்க

"அப்படின்னா அவரை வெளியில கூட்டிட்டு போனா எனக்கு என்ன கிடைக்கும்..? அந்த ஒரு கோடியை என்கிட்ட கொடுத்துருவீங்களா?" என்று பேராவலோடு கேட்க

அந்நேரம் பூமாவை ஏற இறங்க பார்த்த காளிங்கனின் கிறக்க பார்வையில் நெளிந்தாள் பூமா..

"ம்ம்.. அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல கொடுத்துடலாம்.. ஆனா அந்த ஒரு கோடியை வாங்கிக்கிட்டு நீங்க என்ன பண்ண முடியும்? ஜெகந்நாதனுக்கு தெரிஞ்சா அதை உங்களை அனுபவிக்கவே விட மாட்டார்.. அவர் அவ்வளவு ஸ்ட்ரைட் ஃபார்வர்ட்.. பொழைக்கத் தெரியாத ஆளு.. உங்களை மாதிரி அழகான அறிவான ஸ்மார்ட் பொண்ணோட அருமை அவருக்கு தெரியல.. நீங்க எல்லாம் இந்த மாதிரி ஒரு ஓட்டை வீட்டில இருந்து கஷ்டப்பட வேண்டியவங்களே கிடையாது.. அரண்மனை மாதிரி வீட்ல பல பேரை ஏவல் செய்யற மகாராணி மாதிரி வாழ வேண்டியவங்க நீங்க.. ஆனா ஜெகந்நாதன் இந்த ஜென்மத்துல அப்படி ஒரு வாழ்க்கையை உங்களுக்கு கொடுக்க மாட்டார்.. உங்களுக்கு ஒகேன்னா அப்படி ஒரு ராஜபோக வாழ்க்கையை உங்களுக்கு நான் கொடுக்க முடியும்.. இந்த பத்து நாள் ஜெகந்நாதனோட வெளியே போயிட்டு திரும்பி வந்ததும் ஜெகந்நாதனை விட்டு பிரிஞ்சு வந்துருங்க.. நானே உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. உங்களை மாதிரி அழகானவங்கள்லாம் இப்படி ஒரு புறா கூண்டுல இருந்து கஷ்டப்படக்கூடாது.. என்னோட பெரிய பங்களா உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கு.. ஆனா அதுக்கு முன்ன இந்த பத்து நாள் வேலையை கரெக்டா முடிச்சுட்டு வரணும்.."

ஏற்கனவே அந்த வீட்டில் தான் வாழ்கின்ற நடுத்தர வாழ்க்கையில் நொந்து இருந்தவளுக்கு பணம் வசதியான வாழ்க்கை அணிகலன் ஆடம்பரம் என தனக்கு தேவையானதெல்லாம் அவனிடம் கிடைக்கும் என்று தெரிந்த பிறகு காதல் கணவன் நேர்மை என பேசி அந்த வாழ்க்கையை புறந்தள்ள அவள் ஒன்றும் சீதா இல்லையே..

விட்டில் பூச்சியாய் காளிங்கனின் வலையில் விழுந்திருந்தாள் மறுபடியும்..

சொன்னபடியே அடம் பிடித்து பத்து நாட்கள் குழந்தையோடு ஜெகந்நாதனை அழைத்துக் கொண்டு மலை பிரதேசத்திற்கு சென்றவள் 10 நாள் கழித்து திரும்பி வரும் போது காளிங்கன் அந்த ராஜரத்னத்தின் வேலையை செவ்வனே முடித்து இருந்தான்..

விஷயம் தெரிந்து அந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் ஜெகந்நாதன் நியாயம் கேட்க அவனோ "இதுக்கெல்லாம் பிளான் போட்டதே உங்க பொண்டாட்டி தான்.. போயி அவங்களை என்னன்னு கேளுங்க.." என்று சொல்லிவிட வீட்டிற்கு கோவமாய் வந்த ஜகந்நாதனுக்கோ அடுத்த அதிர்ச்சி..

வீட்டில் பூமா இருக்கவில்லை.. ஜெகநாதனோடு வாழ்ந்தால் தான் வாழ்க்கை முழுக்க கஷ்ட ஜீவனம் தான் நடத்த வேண்டும் என்றும் இனியாவது தான் காளிங்கனோடு சொகுசான சுகபோக வாழ்க்கை வாழப் போவதாகவும் ஒரு பெரிய கடிதம் எழுதி வைத்துவிட்டு கிளம்பி போயிருந்தாள்..

உலகமே ஸ்தம்பித்து போனது ஜெகந்நாதனுக்கு.. நிச்சயம் செய்த பெண் எவனுடனோ ஓடிப் போய் விட்டாள் எனச் சொன்னார்கள்.. இப்போது திருமணம் செய்த பெண்ணும் வேறு ஒருவனுடன் சொகுசு வாழ்க்கையைத் தேடிப் போய்விட்டாள் என்றால் என்னதான் செய்வான் அவன்.. உடைந்து போனான் ஜெகந்நாதன்..

பூமாவோ நடுக் கூடத்தில் குழந்தையை அழ விட்டு விட்டு தான் மட்டும் சென்றிருந்தாள்.. அவள் தாய்மை கூட அவளுக்கு எந்த வித அழுத்தத்தையும் கொடுத்திருக்கவில்லை.. காளிங்கனால் அனுபவிக்கப் போகும் பகட்டான வாழ்க்கையிலேயே அவள் கவனம் மொத்தமும் குவிந்திருந்தது.. காளிங்கன் அவர்களின் வாழ்க்கையில் மாற்றானுடைய குழந்தைக்கு இடம் கிடையாது என்றும் தன்னை பொறுத்தவரை தன் உதிரத்தில் பிறந்தது மட்டும்தான் தன் வாரிசாக இருக்க முடியும் என்றும் சொல்லிவிட வேறு வழியின்றி குழந்தையை அங்கேயே விட்டுப் போயிருந்தாள் பூமா..

ஆறு மாத குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து போனான் ஜெகந்நாதன்..

வேறு புகலிடம் இன்றி தன் அக்காவை தேடித்தான் வந்தான்.. விஷயத்தை அவர்களிடம் சொல்ல அவர்கள் சிந்துவை தாங்களே வளர்ப்பதாக சொல்லி தமிழ், அழகன் மற்றும் அரசியோடு சிந்துவையும் தங்கள் குழந்தையாகவே பாவித்து வளர்த்திருந்தனர்..

வாழ்க்கையே வெறுத்துப் போன ஜெகன்நாதனோ நிம்மதி இழந்து அந்த ஊரிலேயே இருக்க முடியாமல் வடக்கு பக்கம் வேறு இடத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போயிருந்தார்.. மாதத்திற்கு ஒரு முறை வந்து மகளை மட்டும் ரகசியமாய் பார்த்துவிட்டு போனார் அவர்.

தமிழுக்கு கிட்டதட்ட ஐந்து வயதாகி இருந்தது.. புரிந்தும் புரியாத வயது.. அவனிடம் பூமாவை பற்றிய விஷயத்தை சொல்ல முடியவில்லை... தன் அன்னையிடம் மாமா அத்தை ஏன் வீட்டுக்கு வருவதே இல்லை என்று கேட்டு துளைத்தவனிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிப் போனார் தெய்வானை.. ஆனால் ஏதேதோ சொல்லி சமாளித்து இருந்தாள் அவனிடம்.. பூமாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் ட்ரீட்மென்ட்காக பூமாவை அழைத்துக் கொண்டு ஜெகநாதன் வெளிநாடு சென்று இருப்பதாகவும் சொல்லி வைத்திருந்தார்கள் அவனிடம்..

இப்படியே இரண்டு மாதங்கள் போக எதிர்பாராத சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது அப்போது..

தான் போன இடத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட போகும்போது அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்களுக்கு நடுவில் சீதாவை பார்த்த ஜெகந்நாதன் துடித்து போனான் அவள் நிலையை கண்டு.. அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.. பின்னே உயிருக்கு உயிராய் விரும்பியவள் ஆயிற்றே.. இப்படி ஒரு நிலையிலா அவளை பார்க்க வேண்டும்..?! மனம் தவித்து போனது..

கிழிந்த சேலையும் கலைந்த கேசமும் ஒடுங்கிப் போன தேகமும் வேலை செய்து களை இழந்து இருந்த முகமும் என சீதா அடையாளம் தெரியாத படி உரு மாறி போயிருந்தாள்.. அங்கிருந்து அவளை வெளிக்கொணர்ந்து உண்மையில் அன்று என்ன நடந்தது என்று ஜெகந்நாதன் கேட்க அவள் நடந்த அத்தனையும் சொன்னாள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஜெகந்நாதனுக்கு..

மாயன் அவளைக் கடத்தி வந்தது பெரிய பணக்காரருக்கு அவளை விருந்தாய் படைக்க..

"ஃபிரெஷ்ஷா ஒரு ஐட்டம் வந்திருக்கு.. உங்களுக்குன்னே ஒரு ஸ்பெஷலான அழகு தேவதை ரெடியா இருக்கு.." என்று சொல்லி பேரம் பேசி பெரிய தொகையை வாங்குவதற்காக அவளை கைப்படாத ரோஜாவாக இரண்டு நாட்கள் தன் இடத்தில் வைத்திருந்தான் அவன்..

ஆனால் இரண்டாவது நாள் எப்படியோ அங்கிருந்து வேறு ஒரு பெண்ணின் உதவியால் தப்பி இருந்தாள் சீதா..

மறுபடியும் தன் ஊருக்கு பேருந்தில் பயணப்பட்டு வந்துக் கொண்டிருந்தவள் காதில் விழுந்த செய்திகளோ அவளை அந்த ஊருக்குள் நுழைய விடவே இல்லை..

சீதா பணக்காரனோடு ஓடிப் போன பிறகு அவள் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட அதன் காரணமாக தங்கைக்கு அப்போதே அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு திருமணம் முடிந்து விட்டது என்றும் அதன் பிறகு அவர் தந்தையும் காலம் ஆகிவிட்டார் என்றும் எவரோ பேசிக்கொண்டு இருந்ததை கேட்டு துடித்துப் போனாள் பாவை..

"அப்பாவோட உயிரை எடுத்து அப்படி என்ன பணம் சந்தோஷம் வேண்டி இருக்கு இந்த பொம்பள பிள்ளைக்கு..? சாமிநாதன் சாவுக்கு காரணமான அந்த சீதா மறுபடியும் இந்த ஊருக்கு வந்தா கல்லால அடிச்சே விரட்டணும்.." என்று அவர்கள் சீதாவை பற்றி நாராசமாக பலவிதமாய் பேசி வசவு பாட அதற்கு மேல் அந்த ஊருக்குள் போனால் தனக்கு ஒரு மரியாதையும் இருக்காது என்று தெரிந்து போனது சீதாவுக்கு..

ஊருக்கு வராமல் பாதி வழியிலேயே திரும்பியவள் கை வசமிருந்த நகைகளை வைத்து கொஞ்சம் பணத்தை பிரட்டினாள்.. அதை வைத்து கண்காணாத இடத்திற்கு போக வேண்டும் என்று தான் வட இந்தியாவில் இருக்கும் அந்த ஊருக்கு வந்து ஏதோ ஒரு ஹோட்டலில் மேஜை துடைப்பது தட்டெடுப்பது பாத்திரம் கழுவுவது என்று வேலை செய்ய தொடங்கியிருந்தாள்..

அப்போதுதான் ஜெகந்நாதன் அவளை சந்தித்தது.. அப்போதும் தன் தங்கை பூமா எப்படி இருக்கிறாள் என்று கவலையோடு விசாரித்தாள் ஜெகந்நாதனிடம்.. பூமாவின் பெயரைக் கேட்ட நொடி அவன் கண்கள் கோவத்தில் சிவக்க அவன் புரியாமல் பார்த்தாள் சீதா..

நடந்த அத்தனையையும் சீதாவிடம் சொல்ல தன்னாலே அந்த நல்லவரின் வாழ்க்கை இப்படி மொத்தமாய் பாழாகி விட்டதே என்று நொந்து போனாள் சீதா..

ஜெகந்நாதனுக்கு அதற்கு மேல் அவளை கஷ்டத்தில் உழல விடுவதில் மனமே இல்லை.. எப்படியும் பூமா தனக்கான வேறு ஒரு வாழ்க்கையை தேடி போய்விட்டாள்.. இனி அவள் எப்படியும் திரும்பி வரப்போவதில்லை.

தன் காதலை தன் முன்னால் திரும்பவும் அந்த விதி காட்டி இருக்க திகட்ட திகட்ட காதல் வாழ்க்கை வாழ்வதற்கான இந்த வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்று நினைத்தான் ஜெகநாதன்.

"சீதா.. உனக்கான என் காதலை வேற வழி இல்லாம பூமாவுக்காக புதைச்சு வச்சிருந்தேன்.. அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு உன்னை நினைச்சுக்கிட்டு இருந்தா அது நான் அவளுக்கு செய்யற துரோகம்னு நெனச்சேன்.. ஆனா இப்ப என் வாழ்க்கையில சிந்துவை தவிர வேற பிடிப்பே இல்லை.. எனக்கு என்னோட முதல் காதல் திரும்ப கிடைக்குமா சீதா? ப்ளீஸ்.."

தன் காதலை யாசகமாய் அவளிடம் கேட்க சீதாவோ அப்போதும் தன்னிடம் காதலுக்காக மன்றாடி நிற்கும் அந்த உன்னதமான மனிதனுடைய காதலின் கனத்தை தாங்கமுடியாமல் அவர் கைகளில் முகத்தை புதைத்து ஓவென கதறி அழுதாள்..

தன் கையை விடுவித்து அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர் அதன் பிறகு கொஞ்சமும் தாமதிக்கவில்லை.. விஷயத்தை தெய்வானையிடமும் சிவநேசனிடமும் சொல்லி அவர்கள் முன்னே மணமுடித்து அவர்களோடு போய் வாழலாம் என்றும் ஜெகந்நாதன் சொல்ல முற்றிலுமாக அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாள் சீதா..

பிள்ளைகளிடம் அதுவரை பூமா வேறு ஒருவனுடன் போன விஷயத்தை மறைத்து தான் வைத்திருந்தார்கள்.. பூமாவுக்கு உடல்நிலை சரியில்லை.. அதனால் சிந்து இனி அவர்கள் வீட்டிலேயே இருப்பாள்.. என்று சொல்லி இருக்க இனியும் பூமாவை பற்றிய ரகசியம் அவர்களுக்கு தெரியக்கூடாது என்றும் தனக்கும் அவருக்கும் நடக்கும் கல்யாணம் பற்றி யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம் என்றும் தீர்மானமாக சொல்லி இருந்தாள் சீதா..

சிந்து அந்த குடும்பத்தில் மரியாதையோடு வாழ வேண்டும் என்ற நோக்கமே அதிலிருந்தது.. சிந்துவின் அம்மா இப்படி வேறு ஒருவனோடு சென்று விட்டார் என்று தெரிந்தால் மற்றவர்கள் பேசும் பேச்சில் அந்த குழந்தை மனம் என்ன பாடு படும் என்று யோசித்தாள் அவள்..

சிந்துவுக்காக அந்த குடும்பத்தினரிடம் இருந்து தன்னை தானே மறைத்துக் கொண்டாள் சீதா.. அது மட்டுமன்றி அவ்வளவு நாள் ஜெகந்நாதன் அனுபவித்த அத்தனை துயரங்களுக்கும் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவளுக்கு தெய்வானையை சந்திக்க முகமே இல்லை.. என் தம்பி வாழ்க்கையில் இப்படி ஒரு அலங்கோலத்தை நிகழ்த்தி விட்டாயே என்று கேட்க வேண்டாம்.. மாறாக ஒரு பார்வை பார்த்தாலே செத்து விடுவாள் அவள்.. அந்த நினைப்பே அவளை கொன்றது.. அதனாலேயே தெய்வானையை நேர்கொள்ள முடியாமல் முற்றிலுமாய் அவர்களை சந்திப்பதையே தவிர்த்து இருந்தாள்..

ஆனால் தெய்வானையிடமும் சிவனேசனிடமும் அந்த திருமணத்தை பற்றி சொல்லாமல் மறைப்பதற்கு ஜெகந்நாதனின் மனம் ஒப்பவில்லை.. சீதாவுக்கு தெரியாமல் அவர்களை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி இருந்தான் அவன்..

இருவருக்கும் திருமணம் நடந்து அவர்கள் இருந்த ஊரிலேயே சந்தோஷமாக வாழத் தொடங்கினார்கள்.. அடுத்த வருடத்திற்க்குள்ளாகவே இப்போது நிலாவாய் இருக்கும் நவ்யா அவர்களுக்கு மகளாய் பிறந்திருக்க தன் அன்னை தந்தை அள்ளிக் கொடுத்த பாசத்தில் இளவரசியாகவே வளர்ந்து கொண்டு இருந்தாள் நவ்யா..

நவ்யா பிறந்ததும் அந்த விஷயத்தை சீதாவுக்கு தெரியாமல் சிவனேசனிடமும் தெய்வானையிடமும் ஜெகந்நாதன் சொல்லி இருக்க சிவனேசனும் தெய்வானையும் சிந்துவிற்கு ஒரு தங்கை பிறந்திருக்கிறாள் என்று மட்டும் சொன்னார்கள் குழந்தைகளிடம்..

அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகவே நகர்ந்தது.. ஆனால் அந்த ஆனந்தமும் நவ்யாவின் ஐந்தாவது வயது வரையே நீடித்தது..

நீர் உறையும்..
 
Top Bottom