• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

7. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறை நீர் - 7

தமிழ் கார்த்தியை அழைத்துச் சென்ற பிறகு மூன்று பெண்களும் அந்த அறையின் வெளியிலேயே அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.. அப்போது பெரும்பாலும் சூர்யா அமைதியாக தான் இருந்தாள்.. சுனிதா தான் அரசியிடம் தமிழைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தாள்.. அவளும் அவளை சமாதானப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கி இருந்தாள்..

அரை மணி நேரம் கழித்து மூன்று பேரும் நிலாவின் அறைக்குள் வந்தனர்.. அப்போது சூர்யாவின் கையில் கார்த்தி இல்லாததை பார்த்து நிலா

"ஹேய் சூரி.. கார்த்தி எங்கடி..?" என்று கேட்க

"ஏய் பயப்படாதே டி.. கார்த்திக்கை தமிழ் சார் தான் கூட்டிட்டு போயிருக்காரு.." என்று சூர்யா சொன்னது தான் தாமதம்..

"என்ன.. அவர் கூட்டிட்டு போய் இருக்காரா? எதுக்கு அவரோட அனுப்பின.. அவனை கூட்டிட்டு போய் வச்சுட்டு அப்படியே என்னையும் அந்த வீட்டுக்கு வர வெச்சுடலாம்னு பிளானா.. ஹான்..? என்ன ஆனாலும் சரி.. நான் அங்க வரமாட்டேன்... கார்த்தி என்னோட தான் இருப்பான்.. எங்கேயும் போகக் கூடாது.. நான் அவனோட ஹாஸ்டல்லையே போய் இருக்கேன்.. அந்த போலீஸ் வீட்டுக்கு நீங்க வேற யாரையாவது அனுப்பிக்கோங்க.." என்று சொல்ல

அவளை தீவிரமாய் முறைத்த படி "ஓ மேடத்துக்கு திடீர்னு தம்பி மேல அப்படியே பாசம் பொங்கிருச்சோ..?" என கேட்டுக்கொண்டே அறையின் உள்ளே வந்த தமிழ்..

"இவ்வளவு நேரம் மொத்தமா அவனை அனாதையா விட்டுட்டு போக இருந்த.. இப்ப மட்டும் அப்படியே தம்பி பாசம் ரொம்ப பொங்குதா? வாயை மூடு.." நிஜமாகவே அவனுக்கு கோவம் வந்துவிட்டது..

சூர்யாவும் நிலா விழித்ததை பார்த்து உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்..

அதை கவனித்திருந்த நிலா அவளை முறைக்க அவளோ "எதுக்குடி முறைக்கிற? அவர் சொன்னது கரெக்ட் தானே..? இத்தனை நேரம் மொத்தமா உன் தம்பியை விட்டுட்டு பரலோகம் போகப் பார்த்த இல்ல..? ஆமா.. எந்த நம்பிக்கையில அவனை விட்டுட்டு போலாம்னு நினைச்சே.. 24 மணி நேரமும் என்னால அவனை பார்த்துக்க முடியுமா? இதுவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் மாறி மாறி அவனை பார்த்துக்கிட்டோம்.. நீ போய் சேர்ந்து இருந்தன்னா நான் இல்லாதப்போ அந்த டில்லிபாபு இவனையும் அவனை மாதிரி ஒரு மாமா பையனா வளர்த்துருப்பான்.. இதுதான் உனக்கு வேணுமா? அவனை நல்லா படிக்க வைக்கணும்.. கௌரவமான எடத்துல கொண்டு போய் வெக்கணும்னு தானே நீ எவ்வளவோ கொடுமையெல்லாம் அனுபவிச்ச? கடைசியில மொத்தத்தையும் பாழாக்கற மாதிரி அவனை விட்டு மொத்தமா போக பார்த்தே.."

அவளும் அவள் பங்குக்கு பாடம் எடுக்க நிலாவுக்கு தன் தவறு புரிந்தாலும் எல்லோரும் அவளை திட்டுவதை தாங்காமல் தலையை குனிந்து ஏதோ முணுமுணுவென பேசிக் கொண்டிருந்தாள்.

இதே நேரம் தன் பிள்ளையை தொடர்ந்து அங்கு வந்திருந்த தெய்வானை அவளருகே வந்து "ம்ம்.. இவ தான் அந்த பொண்ணா?" என்று கேட்டுக்கொண்டே நிலாவின் உச்சியை மெதுவாக வருட அவரை நிமிர்ந்து பார்த்தாள் நிலா..

"இவங்க யாரு?' கேள்வியாக அவள் அவரை பார்க்க தமிழ் அவளிடம் "இது எங்க அம்மா தெய்வானை.. கார்த்தியை வீட்டுக்கு கூட்டிட்டு போயிருந்தேன்.. உன்னை பத்தி அவங்க கிட்ட சொன்னேன்.. அவனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு உன்னை பாக்கணும்னு கிளம்பி வந்துட்டாங்க.." அவன் விவரமாய் சொல்ல

"அப்ப கார்த்தி..?" என்று அவனை கேள்வியை பார்த்தாள் நிலா..

"கார்த்தி பத்திரமா இருக்கான்.. எங்க அத்தை பூமா அவனை பார்த்துக்கறாங்க.." என்றான்..

"அவனை அங்க விட்டுட்டு நீங்க எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க? அவனையும் கூட்டிட்டு வர்றது தானே..?"

நிலா கோபமாய் தமிழிடம் கேட்க அவள் தலையை மெல்ல வருடிய தெய்வானை "ஏன்டா இவ்வளவு கோபம்? நான் தான் உன்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு அவனை அங்க விட்டுட்டு வந்தேன்.. எங்களை பார்த்தா உனக்கு ஏதாவது கெடுதல் பண்ணுவோம்னு தோணுதா? என் மகன் உன்னை அந்த இடத்தில இருந்து காப்பாத்தி வெளிய கூட்டிட்டு வந்திருக்கான்.. அவன் தப்பானவன் கிடையாது.. அவனுக்கும் ஒரு தங்கச்சி இருக்கா.. எங்க வீட்ல அவனோட ரெண்டு முறை பொண்ணுங்க இருக்காங்க.. முறை இருந்தும் அவங்களை ஒருநாளும் அவன் தப்பா பார்த்தது கிடையாது.. நான் வளர்த்த புள்ள அவன்.. பொண்ணுங்க கிட்ட என்னிக்குமே கண்ணியம் குறைஞ்சு நடந்துக்க மாட்டான்.. அவன் மட்டும் இல்ல.. எங்க வீட்ல இருக்குற எந்த ஆம்பளையுமே எந்த பொண்ணையும் தப்பான பார்வை பார்க்க மாட்டாங்க.."

தெய்வானை இப்படி பேசிக் கொண்டிருக்க சுனிதாவோ "அட ஏங்க அத்தை.. நீங்க வேற? மத்த பொண்ணுங்களை பார்க்கலன்னா கூட பரவாயில்ல.. கட்டிக்க போறவளையே தப்பா ஒரு பார்வை பார்க்க மாட்டார் உங்க ரிஷி புத்திரன்.." என்க அதைக் கேட்டு சூர்யாவோ களுக்கென சிரித்தாள்..

ஒரு புன்னகையோடு "அடியே என் ஆசை மருமகளே.. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பொண்டாட்டிக்கு புருஷனா எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துப்பான் என் புள்ள.. அவன் சரியா தான் இருக்கான்.. நீதான் வாலு.. ஒழுங்கா இருக்கிறவனை கெடுத்து வைக்கிற" என்று சுனிதாவின் காதைப் பிடித்து திருகியபடி சொல்ல..

"ம்க்கும்.. நல்ல நாள்லயே நாயகம்.. இப்படி வேற அர்ச்சனை பூவை அந்த தேவபுத்திரன் மேல தூவிட்டிங்களா? இனி வெளங்குன மாதிரி தான்.." என்றவள் கெத்தாய் அவளை மேற்கண்ணால் பார்த்தபடி நின்று இருந்த தமிழை பார்த்து உதடு சுழித்தாள்..

அவள் துடுக்குத்தனத்தை ரசித்தபடியே நிலாவின் பக்கம் திரும்பிய தெய்வானை "இப்போதைக்கு உனக்கு அந்த வீட்டை விட பாதுகாப்பான இடம் வேற எதுவும் இருக்க முடியாது.. நீ அங்க வா.. உனக்கு யாராலயும் எந்த தொந்தரவும் வராம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு.. என்னை நம்புறியா..?"

தெய்வானையின் தெய்வீகம் நிறைந்த முகத்தை பார்த்தவளுக்கு அதற்கு மேல் அவருக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை.. ஆமோதிப்பாகத் தலை ஆட்டியவள் "நான் வரேன்.. ஆனா என்னோட சூர்யாவும்.." என்று இழுக்க

தெய்வானை எதுவும் பதில் சொல்வதற்குள் அரசியோ "சூர்யாவும் அங்கதான் வந்தாகணும்.. வேற வழி இல்லை.. அந்த ஹாஸ்டல்ல தான் வேற இடம் இல்லையே.. நிச்சயமா ரெண்டு பேரையும் எங்க வீட்ல தான் தங்க வைக்க போறோம்.. கூடவே குட்டி வாண்டு கார்த்தியையும்.." என்று சொல்ல வெகு நேரத்திற்கு பிறகு முதன்முதலாய் லேசாக இதழ் விரித்தாள் நிலா..

அந்த சிறிய புன்னகையே அவ்வளவு நேரம் இறுக்கத்தை சுமந்து இருந்த அவள் முகத்திற்கு அவ்வளவு அழகைக் கூட்டி இருந்தது..

தெய்வானை அவள் நாடியை பிடித்து "சிரிச்சா எவ்வளவு அழகா இருக்க நீ.. இனிமே பழசை எல்லாம் மறந்துட்டு இப்படியே எப்பவும் சிரிச்சிட்டு இரு.. உங்க அம்மா இறந்துட்டாங்கன்னு சொன்னாங்க.. என்னை உன் அம்மாவா நினைச்சுக்க.. அம்மான்னே கூப்பிடு"

அவர் சொல்ல "இல்ல.. உங்களை மாதிரி நல்லவங்களை நான் எங்க அம்மாவா நினைக்க மாட்டேன்.. அவங்க தன் பொண்ணு வாழ்க்கைக்கே உலை வச்ச துரோகி.. உங்களை வேற என்ன வேணா சொல்லி கூப்பிடுறேன்.. ஆனா அம்மானு மட்டும் கூப்பிட சொல்லாதீங்க.." என்றவளின் மனதில் இருந்த ஆறாத காயம் புரிந்தது தெய்வானைக்கு..

அந்த நேரம் அதைப்பற்றி மேலும் பேச வேண்டாம் என்று முடிவுக்கு வந்தவர்

"ம்ம்.. அம்மான்னு கூப்பிட இஷ்டம் இல்லனா இதோ நம்ம சுனிதா மாதிரி அத்தைன்னு கூப்பிடு.. ஆனா உன்னை பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு.." என்று அவர் சொல்ல அவரை நன்றி உணர்வோடு கண்களில் நீர் தளும்ப பார்த்திருந்தாள் நிலா..

அதன் பிறகு மருத்துவமனையிலிருந்து தான் வந்த காரிலேயே நிலாவையும் சூர்யாவையும் அழைத்துக்கொண்டு போனார் தெய்வானை.. அவர் காரின் பின்னால் அரசியின் பைக்கில் அவளும் சுனிதாவும் வர தமிழும் அவனுடைய ஜீப்பில் அந்த வண்டிகளை தொடர்ந்தான்..

"ஆனாலும் உங்க அண்ணன் இப்படி வடிகட்டின சாமியாரா இருக்கக் கூடாதுடி.. ஜீப் அஃபீஷியல் யூஸூக்கு மட்டும் தானாம்.. அதுல என்னல்லாம் ஏற விட மாட்டாராம்.. உங்க அண்ணனோட வெளில போகணும்னா நான் ஏதாவது குத்தம் செஞ்சுட்டு அரெஸ்டாகி அந்த ஜீப்புல அவனோட ஜெயிலுக்கு போனா தான் உண்டு.." அவள் அங்கலாய்ப்பாய் சொல்ல அரசி அதை கேட்டு சத்தமாக சிரித்து வைத்தாள்.

"ப்ச்.. என் புலம்பல் உனக்கு சிரிப்பா இருக்குது இல்ல.. உன்னை சொல்லி குத்தமில்ல.. எனக்கு வாய்ச்சது அப்படி.." என்று சலித்துக்கொண்டாள்.

"சரிடி.. ரொம்ப புலம்பாத.. அம்மா சொல்ற மாதிரி கல்யாணத்துக்கு பிறகு சரியாகிடுவாரு.." என்றாள் ஆறுதலாக..

"சரியாகணும்.. இல்லைன்னா தெனமும் ரொமான்டிக்கா திணற திணற கிஸ் அடிச்சு டார்ச்சர் பண்ணியே சரியாக்கிடுவோமில்ல..?" என்றவள் பேச்சை கேட்டு காதை பொத்திக் கொண்ட அரசி

"அபச்சாரம் அபச்சாரம்.. ஒரு நாத்தனார் கிட்ட பேசற பேச்சாடி பேசற.. ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுடி.. என் காதுல ரத்தம் வருது.."‌ என்றவள் தன் அண்ணனுக்கு அவளை விட சிறந்த மனைவி எங்கு தேடினாலும் கிடைக்கவே மாட்டாள் என்று எண்ணிக் கொண்டாள்.

வீட்டுக்கு வந்ததும் காரில் இருந்து இறங்கிய தெய்வானை காருக்குள்ளே நிலாவும் சூர்யாவும் தயங்கியபடி அமர்ந்திருக்க "வாங்கம்மா.. இனிமே இது உங்க வீடு.. இந்த வீட்ல நீங்க சுதந்திரமா இருக்கலாம்.. உள்ள வாங்க.." என்று அவர்களை இறங்கச் சொல்ல அவர்களும் வண்டியிலிருந்து சிறிது தயக்கத்தினூடே இறங்கி நின்றார்கள்..

"ரெண்டு பேரும் எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க?" என்றவர் இருவர் கையையும் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.. கார் கேட்டுக்குள் நுழையும் போதே அந்த வீட்டை வாய்ப் பிளந்து பார்த்திருந்தார்கள் சூர்யாவும் நிலாவும்.. அதை வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்றே சொல்ல வேண்டும்..

உள்ளே அவர்களை தெய்வானை அழைத்துச் செல்ல அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை கண்களால் பிரமிப்பாய் அளந்தபடியே இருவரும் செல்ல அவர்களை பின் தொடர்ந்தார்கள் சுனிதா அரசி தமிழ் மூவரும்..

வீட்டுக்குள் சென்றதுமே நிலா தெய்வானையிடம் "கார்த்தி..?" என்று கேட்க "உன் தம்பி தானே..? என் தம்பி ரூம்ல இருக்கான்.. அந்த ரூம்தான்.." என்று ஒரு அறையை காட்ட உடல் கொஞ்சம் சோர்ந்து இருந்தாலும் தன் சக்தியை திரட்டி சற்று வேகமாகவே அந்த அறையை நோக்கி நடந்தாள் நிலா..

அங்கே கட்டிலில் ஏதேதோ விளையாட்டு சாமான்களை வைத்துக்கொண்டு கார்த்தி விளையாடிக் கொண்டிருக்க அவன் முன்னே தமிழின் அத்தை பூமா அவன் மழலை மொழியில் மயங்கி தானும் ஒரு மழலையாகவே மாறி ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தார்..

சட்டென அவர் பின்னால் இருந்த குளியலறையை திறந்து கொண்டு வந்து நின்ற உருவம் கண்ணில் பட அந்த நபரை பார்த்ததும் அதிர்ந்து அந்த அறை வாயிலிலேயே மயங்கி விழுந்திருந்தாள் நிலா..

நீர் உறையும்..
 
Top Bottom