• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Episode 18

வரம் 18
“திடுதிப்புன்னு கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சுன்னு சொன்னா உன் வீட்டு ஆளுங்களுக்கு வருத்தமா இருக்கும். புள்ள ஒரு வாரம் சுற்றுலா போறதா தானே ஏற்பாடு. ஒருவாரம் இங்கேயே இருக்கட்டும். ஒருவாரம் கழிச்சு நாங்க குடும்பத்தோட வந்து சமாதானப்படுத்துறோம்.” என்கிற நண்பனின் பேச்சைக் கேட்டு மகளை தனியாக விட்டுவிட்டு வீடு திரும்பினார் காத்தவராயன்.

சிறிது கூட அறிமுகம் இல்லாத அந்தக் குடும்பத்தோடு ஒட்டமுடியாமல் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தார் மாதங்கி. பெற்றெடுத்த அன்னை இல்லாமல் உயிராய் நினைக்கும் அண்ணன், அண்ணி இல்லாமல் தனக்குக் கிடைத்த அந்த வாழ்க்கை அவருக்கு முழுத் திருப்தியைத் தந்திருக்கவில்லை.

அவருக்கு இல்லாத பூரிப்பும், சந்தோஷமும் காத்தவராயனுக்கு இருந்தது. எல்லாம் நன்மைக்கு என்கிற நினைப்போடு நடந்ததை தன் குடும்பத்தினரிடம் மறைத்திருக்க, ஒரு வாரத்திற்குப் பிறகு கிடைத்த செய்தி அவரை மொத்தமாக வேரோடு அறுத்துப் போட்டது.

மகளும், மருமகனும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நினைப்போடு காத்தவராயன் வீட்டில் காத்திருக்க பைரவனிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுங்க தம்பி.” என வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதையோடு சேர்த்து பவ்யமும் காட்டி இருந்தார் காத்தவராயன்.

“என்னை மன்னிச்சிடுங்க அங்கிள். என்னால் அப்பாவை எதிர்த்து ஒன்னும் பண்ண முடியாது. உங்க பொண்ணை எனக்கு நிஜமாவே பிடிச்சிருந்தது. பிடிச்சு தான் அவளோட வாழ்ந்தேன். ஆனா உனக்கு அவ வேண்டாம் னு என் அப்பா சொன்னா அதைத் தாண்டி அவளை நினைக்க என்னால் முடியாது.” என்று சொல்லி பெரும் இடியை இறக்கினார் பைரவன்.

“என்ன சொல்றீங்க தம்பி?” காத்தவராயன் பயத்தோடு கேட்க, “அப்பா உங்களோட நண்பர். அவரைப் பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும். நடந்த எதையும் அத்தனை சீக்கிரம் மறக்கக் கூடிய குணம் கிடையாது அவர்கிட்ட. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடக்க இருந்த முதல் கல்யாணத்தை தடுத்து நிறுத்த நீங்க வேற என்ன வேண்ணா செஞ்சிருக்கலாம். ஆனா அப்பாவோட கேரக்டரை தப்பா காட்டி இருக்கக் கூடாது. அதனால் அவர் பட்ட அவமானம் இப்பவரைக்கும் அவரை விட்டுப் போகல. செஞ்ச தப்பை உணர்ந்து மொத்தமா அப்பாவை விட்டு விலகி இருந்திருக்கலாம். ஆனா அம்மாவோட மறுமணத்துக்கு மாப்பிள்ளையே கிடைக்காத மாதிரி மறுபடியும் அப்பாகிட்ட வந்து இருக்கீங்க.”

“அப்பா அந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சதே கிடைச்ச அவமானத்துக்கு பழி தீர்க்க தான். அம்மா ஒருநாள் கூட அவரோட சந்தோஷமா வாழ்ந்தது கிடையாது. ஏதாவது ஒன்னை சொல்லி அவங்களை அழ வைச்சு பார்க்கிறது தான் அவரோட வழக்கம். நான் பிறந்த பின்னால் கூட எந்த மாற்றமும் இல்ல. என்னை அவரோட மகனா இல்லாம அடிமையா தான் வளர்த்தார். என்னோட காலேஜில் மாதங்கியைப் பார்த்ததும் அவருக்கு உங்களையும் பழிவாங்க ஆசை வந்திடுச்சு.

உங்களைப் பழிவாங்கி அவர் ஆசையை நிறைவேத்தினா எனக்கும், அம்மாவுக்கும் அவர்கிட்ட இருந்து நிம்மதியான பிரிவைக் கொடுப்பதா கடவுள் மேல் சத்தியம் பண்ணி இருக்கார். எங்களுக்கு அது பல வருஷ தவம். அதனால் வேற எந்த யோசனையும் இல்லாம ஒத்துக்கிட்டேன்.”

“என்னோட கல்யாணம், பொண்ணு ஓடிப்போனது எல்லாமே நாடகம் தான். உங்களையும் உங்க பொண்ணையும் ஏமாத்த அப்பா போட்ட காஸ்ட்லியான நாடகம். நீங்களும் அதில் ஏமாந்து உங்க பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுட்டீங்க. அப்பாவோட ஆசை நிறைவேறிடுச்சு. தாலிகட்டின நாள் அப்பவே அவ ஒரு வாரத்துக்கு மட்டும் தான் உனக்குப் பொண்டாட்டின்னு சொல்லத் தான் செஞ்சார். என்னால் அவரை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியல.

இன்னைக்கு மாதங்கிகிட்ட நடந்த எல்லா உண்மையையும் சொல்லி என்னை விட்டுப் போகச் சொன்னேன். அவங்க கேட்காம பிரச்சனை பண்ணவும் கொஞ்சம் கைகலப்பாகிடுச்சு. உங்க ஊர் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் தான் சேர்த்திருக்கேன். உங்க பொண்ணை உங்களோட கூட்டிட்டு போயிடுங்க.”

“என்னை நீங்க என்ன நினைச்சாலும் பரவாயில்லை. உங்ககிட்ட நான் சொல்ல வேண்டியது ஒன்னே ஒன்னு தான். எந்தக் காரணத்துக்காகவும் நீதி கேட்டு எங்க வீட்டுக்கு வராதீங்க. என் அப்பா ஊர் உலகத்துக்கு முன்னாடி உங்களையும், மாதங்கியையும் அவமானப்படுத்தக் காத்திருக்கார்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து இருந்தார் பைரவன்.

ஒடிந்து போய் அமர்ந்துவிட்டார் காத்தவராயன். மகளின் வாழ்க்கை கெட்டுப்போய்விட்டது என்பதைத் தாண்டி, தான் ஏமாற்றப்பட்டோம் என்பது வெளியே தெரிந்தால் ஊர் உலகம் தன்னைக் கேலி கிண்டல் செய்வார்களே என்பது தான் அவரின் பெரிய கவலையாக இருந்தது. என்னென்னவோ யோசித்தவர் கடைசியில் தன் மானத்திற்காக மகளின் மானத்தை கௌரவக்கொலை செய்ய முடிவெடுத்து, கனத்த மனதோடு மருத்துவமனை சென்றார்.

மாதங்கி என்ன செய்வது என்று புரியாமல் விடாமல் அழுதுகொண்டிருக்க, “டூர் போன நேரம் உன்னை யாரோ கெடுத்துட்டாங்க. அது யாரு என்னன்னு உனக்குத் தெரியாது. இதுதான் நடந்தது. இதைத் தவிர உனக்கு எதுவும் தெரியாது. யார் கேட்டாலும் இதை மட்டுமே சொல்லு. இது அப்பா மேல சத்தியம்.” என்றவரை பரிதாபமாகப் பார்த்தார் மாதங்கி.

“அப்பாவுக்கு வேற வழி இல்லம்மா. உன் அப்பா ஒருத்தனை நம்பி ஏமாந்துட்டேன்னு ஊர் உலகம் சிரிச்சா அதைக் கேட்டுக்கிட்டு ஜடமா இருப்பதை விட பொணமா மாறுவதை தான் நான் விரும்புவேன். அப்பாவுக்காக அமைதியா இரும்மா. நான் சொல்றதைக் கேளும்மா.” என்க, விபரீம் புரியாத மாதங்கியும், கணவன் என்கிற பெயரைப் பெற்றவனும் அதை அவனே அறுத்துக்கொண்டவனுமான பைரவன் என்பவன் இனி என்றும் தன்னைத் தேடி வர மாட்டான். கதைகளிலும் திரைப்படங்களிலும் கட்டிய மனைவிக்காக குடும்பத்தை எதிர்த்து நிற்பார்கள் ஆண்கள். ஆனால் நிஜத்தில் தன் குடும்பத்திற்காக அடுத்த குடும்பத்தில் இருந்து வந்த மனைவியை எப்போது வேண்டும் என்றாலும் கைவிடுவார்கள் என்கிற கொடூர நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு தந்தை போட்டுக்கொடுத்த வழியைப் பின்பற்றினார்.

ஆனால் அந்தப் பாதை நினைத்ததை விட மிக மோசமாக இருந்தது. வாய்க்கு வந்த படி தூற்றினார்கள், வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்றார்கள், மற்ற ஆண்கள் தங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று பார்த்தார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தாயின் இறப்பு என எல்லாம் சேர்ந்து மாதங்கியை மொத்தமாக அடித்து சாய்த்திருந்தது.

“அப்பா, எல்லோரும் பேசுறது ரொம்ப அசிங்கமா இருக்குப்பா. உண்மையை சொல்லிடலாமே.” என அவர் பலமுறை அழுதாலும், “உண்மையைச் சொன்னா அப்பாவுக்கு அசிங்கம் மா.” என்று சொல்லியே கட்டிப்போட்டு வைத்தார் காத்தவராயன்.

துவாரகா கருவில் உருவான நேரம், “இந்த விஷயத்தை அவர்கிட்ட சொன்னா குழந்தைக்காகவாச்சும் என்னை ஏத்துப்பாராப்பா.” கடைசி நம்பிக்கையோடு கேட்டார் மாதங்கி.

“அந்த பைரவனுக்கு வேற கல்யாணம் ஆகிடுச்சு மா. இப்ப அவன் அவன் அம்மா, பொண்டாட்டி மூணு பேரும் ஒரு குடும்பமா வாழுறாங்க. சுந்தரம் அவன் அண்ணனோட இருக்கான். அவங்க உன்னை ஏத்துக்கிறதுக்கு வாய்ப்பே இல்லம்மா. உனக்கு வேற கல்யாணம் பண்ண நினைச்சாலும் இந்த ஊரும் உலகமும் என்னை கேலி பேசத்தான் செய்யும். நீ கடைசி வரைக்கும் என் பொண்ணாவே இருந்திடு. வேற யாரும், எதுவும் உனக்கு வேண்டாம். அப்பா உன்னை நல்லா பார்த்துக்கிறேன்.” எனக் காத்தவராயன் சொன்ன போது தான் தந்தையின் உச்சகட்ட சுயநலத்தையும், மானம் மரியாதைக்காக அவர் எந்த எல்லைக்கும் போவார் என்பதை உணர்ந்துகொண்டார் மாதங்கி.

தன்னோடு சேர்த்து தன் பெண்ணிற்கும் இதுதான் கதி என்று ஏற்றுக்கொண்டார். வேறு திருமணம் முடித்தவன் தான் அவன் மனைவி என்றும் தன் மகள் அவனுக்கம் மகள் தான் என்றும் ஒப்புக்கொள்ள மாட்டான் என்கிற நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டார். அப்படியொரு தகப்பனுக்கு மகளாக இருப்பதற்குப் பதில் தகப்பன் பெயர் தெரியாதவளாகவே மகள் இருந்துவிட்டுப் போகட்டும் என அவர் எடுத்த முடிவு எத்தனை கொடூரத்தில் வந்து முடிந்திருக்கிறது என்பதை நவநீதனிடம் சொல்லி முடித்தார்.

நவநீதனால், தான் ஹீரோவாக நினைத்துக்கொண்டிருக்கும் தாத்தாவின் மோசமான பக்கத்தை ஜீரணிக்க முடியவில்லை. அத்தைக்கு நடந்ததே அநியாயம் என்னும் போது துவாரகா என்பவள் யாருடைய மகள், அவள் எப்படி பிறந்தாள் என அனைத்தும் தெரிந்திருந்தும் தகப்பன் பெயர் தெரியாதவள் என்று பொய் சொல்லி தன்னோடு நடக்க இருந்த திருமணத்திற்கு தடை விதித்த காரணத்தை யோசிக்கையில் அவர் மேல் கொலைவெறியே வந்தது.

அவன் மனம் படும் பாடு போதாது என்று நினைத்தார் போலும் துவாரகாவுக்கு அவள் புகுந்த வீட்டில் என்னென்ன நடந்துகொண்டிருக்கிறது என்று விளக்கமாக சொல்லி முடித்தார் மாதங்கி.

மரணப்படுக்கையில் இருந்தது என்னவோ மாதங்கி தான். ஆனால் மரணத்தை தழுவியது தான் என்பது போல் துடித்தது நவநீதனின் ஆவி. ‘நீ அவளை நிஜமாவே உன் வீட்டுப் பொண்ணா நினைச்சிருந்தா இப்படித்தான் அவ பொறுப்பை வேற யார்கிட்டையும் கொடுத்திருப்பியா?’ என்கிற அத்தையின் கேள்வி நேர்மையாளன் அவன் நெஞ்சை சுட்டது.

தன்னால் தான், தன் அஜாக்கிரதையால் தான் துவாரகா மாயவன் வீட்டில் சிரமப்படுகிறாள் என்பதை அவன் ஏற்றுக்கொண்ட நொடி, இந்த விஷயத்தை நீ எப்படி சரிசெய்யப் போகிறாய் என்று மனசாட்சி கேள்வியை முன்வைக்க சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை அவனுக்கு.

மற்ற யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் குறிஞ்சிப் பூ போன்ற மிக அரிதான துவாரகாவின் தன் மீதான ஆசைப்பார்வை, ஆராய்ச்சிப் பார்வையை அவன் உணர்ந்திருக்கிறான். வயதுப்பெண், திருமணம் முடித்துக்கொடுக்கும் உறவில் இருக்கும் ஆண் தன் மீது ஈர்ப்பு வருவது சகஜம் தான் என நினைத்து அதைக் கடந்திருக்கிறான் இப்போது அதை நினைக்கும் போது இன்னமும் தான் நெஞ்சம் வலித்தது அவனுக்கு.

மிகப்பெரிய முடிவுகள் எல்லாம் எதிர்பாராத தருணங்களில் தான் நடக்கிறது என்று சொல்வதற்கு இணங்க, மனதின் உந்துதலில் மரணத்தின் பிடியில் தன் வார்த்தைக்காக ஏங்கிக்கிடக்கும் தன் அத்தையின் கரங்களை எடுத்து தன் நெஞ்சோடு பொத்திக்கொண்டவன், “துவாரகாவை அந்த நரகத்தில் இருந்து மீட்டுக்கொண்டு வருவேன். அவளுக்கு எந்த பாதகமும் இல்லாம நானே அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். இந்த உலகத்தில் இருக்கும் எல்லாப் பொண்ணுங்களை விடவும் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை அவளை வாழ வைக்கிறேன்.” என்க, நிஜமாகவா என்று ஆச்சர்யமாகப் பார்த்தார் மாதங்கி.

“நம்புங்க அத்தை. உங்களோட அப்பா உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்காம இருக்கலாம். ஆனா உங்க மருமகன் உங்களுக்கு நிம்மதியான சாவையாச்சும் கொடுக்க நினைக்கிறேன். உங்க பொண்ணு வாழுற வாழ்க்கையைப் பார்க்க அவளோட வயித்திலே பொண்ணா வந்து பிறங்க.” என்க, முன்பு போல அவன் மீது தீராத நம்பிக்கையை வைத்து சிரித்த முகத்தோடு நிம்மதியாய் உயிர் விட்டிருந்தார் மாதங்கி.

அவர் முகத்தில் இருந்த நிம்மதி நவநீதனை அமைதியாக இருக்கவே விடவில்லை. முதல்முறை அவர் நம்பிக்கையைத் தொலைத்துவிட்டோம். இந்த முறை என்ன செய்தாகினும் அதை தொலைத்துவிடக்கூடாது என்று தீர்மானித்தான்.

மரணம் என்ற ஒன்று நெருங்கவில்லை என்றால் அவருக்கும் நடந்ததைச் சொல்லும் துணிவு வந்திருக்காது. தனக்கும் துணிந்து இப்படி ஒரு முடிவு எடுக்க நினைப்பு வந்திருக்காது என்று புரிந்துகொண்டான் நவநீதன்.

தன்னையே எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருந்த மாதங்கியின் விழகளை மூடிவிட்டான். அவர் இறந்து போன தகவலை வீட்டினருக்குத் தெரியப்படுத்திவிட்டு, துவாரகாவை இல்லை அவன் வருங்கால மனைவியைப் பார்ப்பதற்காக கிளம்பினான். அவளானால் சுரேகாவின் பெற்றோரிடம் தயங்கி தயங்கி தங்கள் வீட்டில் நடப்பதை சொல்லிக்கொண்டிருந்தாள்.
 
Top Bottom