• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Episode 5

வரம் 5
பேருக்கும், புகழுக்கும், பராம்பரியத்திற்கும் பெயர் போன மதுரை மாவட்டத்தில், சொக்கநாதபுரம் என்னும் அழகான கிராமம் தான் காத்தவராயனின் சொந்த ஊர். அவர் அந்த ஊரின் முன்னாள் ஊர்த் தலைவர் என்பது கூடுதல் தகவல்.

தனக்கென்று பெயரும், புகழும், சொத்தும் மற்றவர்களை விட அதிகமாக சம்பாதித்து வைத்திருந்தார். ஊர் மக்கள் அனைவரும் அவரை மரியாதையோடு நடத்தும் பாங்கு அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த கால கட்டம் போய், ஒருமுறை கிடைத்தால் மீண்டும் மீண்டும் எடுத்துக்கொள்ளத் தூண்டும் போதையைப் போல், தான் செல்லும் அனைத்து இடங்களிலும் நாளும் பொழுதும் தனக்கு மரியாதை கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்னும் அளவிற்கு மாறிஇருந்தார்.

தான் சாகும் வரை ஊர்மக்கள் தனக்குக் கொடுக்கும் மரியாதையில் துளி அளவு கூட குறைந்துவிடக் கூடாது என்பதாய் மனதிற்குள் சூளுரைத்துக்கொண்டவர், அதற்காக செய்ததும், இழந்ததும் ஏராளம்.

ஊரில் பணத்திற்காக கஷ்டப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக பணஉதவி செய்வார், படிக்க ஆசைப்படும் குழந்தைகளைப் படிக்க வைப்பார், ஊருக்கு பாத்தியப்பட்ட கோவிலுக்கு ஏராளமான நன்கொடைகள் செய்வார், மற்றவர்களின் மருத்துவ செலவுகளையும் தயக்கமில்லாமல் செய்வார். இவை அனைத்துமே மற்றவர்களிடம் நல்லபெயரை பெறுவதற்காக என்பது தான் உண்மை.

வலது கை கொடுப்பது இடது கைக்கு கூட தெரியக்கூடாது என்று சொல்வதை மீறி, இந்தப் பக்கம் செய்வதை எல்லாம் செய்துவிட்டு மறுபக்கம் தற்செயலாகச் சொல்வது போல் பார்க்கும் அனைவரிடமும் தன் பெருமையைச் சொல்லி வைப்பார்.

ஊர் மக்களில் பாதி பேர் அவரை வெள்ளந்தி மனிதர் என நினைத்தாலும், சிலருக்கு அவரின் உண்மையான முகம் தெரிந்திருந்தது. ஆனால் அதைக் கூட செய்வதைத் தானே சொல்கிறார் என்று இயல்பாகக் கடந்து செல்லப் பழகிக்கொண்டனர்.

தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் ஒருவன் தானம் செய்தால், அதன் பலன் அவனுக்குக் கிடைக்காது என்று வேதநூல்கள் சொல்கிறது. காத்தவராயனுக்கு அதைப் பற்றிய கவலை எல்லாம் இல்லை.

அவருக்கு தங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் மீது தீராத விருப்பம் இருந்தது. ஆனால் அந்தப் பெண்ணோடு திருமணம் நடந்தால், மாற்று ஜாதியோடு கலந்துவிட்டான் என ஊரார் மரியாதை தர மாட்டார்கள் என பயந்து, தானே முன்னே நின்று அவளை வேறு ஒருவனுக்கு மணமுடித்து வைத்தார். ஒரே நாள் இரவில் மொத்தமாக அழுது தீர்த்து சோகத்தோடு சேர்த்து அந்தப் பெண்ணின் நினைவுகளையும் ஒதுக்கித் தள்ளினார்.

கண்ணகியம்மாள் என்னும் பெயர் கொண்ட தன் ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கண்ணப்பன், மாதங்கி என இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். தனக்குக் கிடைக்கும் மரியாதை, தான் பெற்ற பிள்ளைகளால் அதிகரிக்க வேண்டுமே தவிர குறையக்கூடாது என்பதில் அத்தனை உறுதியாக இருந்தவர் தன் பிள்ளைகளை அதற்கு ஏற்ப தயார்படுத்தினார்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பது போல் கண்ணப்பன், மாதங்கி இருவருமே எந்த தவறும் செய்யாத பிள்ளைகளாகவே வளர்ந்தனர்.

‘வாழ்ந்தா காத்தவராயன் மாதிரி வாழனும், பிள்ளைங்க பெத்தா காத்தவராயன் மாதிரி பெத்து வளர்க்கணும்.’ என்று ஊரார் அனைவரும் பேச, சொல்ல முடியாத சந்தோஷத்தில் திளைத்தார் மனிதர்.

மகன் கண்ணப்பன் தான் தன் பரம்பரைப் பெருமையைக் காப்பாற்றப் போகிறவன் என்று மீசையை முறுக்கிவிட்டு கர்வமாய் சொன்னாலும், காத்தவராயனின் அன்பு மொத்தமாய் குடிகொண்டிருந்தது என்னவோ மகள் மாதங்கியிடம் தான்.

மகள் பெரிய மனிதியான விழாவை, ஊர் திருவிழா தோற்றுப்போகும் வகையில் ஒரு வாரம் வரை ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து அளித்து கொண்டாடினார். இத்தனை செய்தவர் பத்திரிக்கை, பேனர் என எதிலும் மாதங்கியின் முகத்தை பிரசுரிக்க அனுமதிக்கவில்லை.

பத்திரிக்கை, பேனர் இரண்டும் விழா நடந்து முடியும் வரை பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட்டாலும் விழா முடிந்த பிறகு பெரும்பாலும் குப்பையில் தான் கிடக்கும். தன் மகளின் அழகு முகம் அப்படி குப்பைக்குப் போகக்கூடாது என்பதற்காகவே அவர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தந்தையின் கண்மூடித்தனமான அன்பைக் கண்டு சிரித்தபடியே விலகிப்போனார் மாதங்கி.

ஏற்கனவே அழகி, இப்போது வயதுக்கு ஏற்ப அழகும் ஏற ஊர் கண் முழுக்க மாதங்கி மேல் தான் இருக்கும். என்ன வேலையில் இருந்தாலும் மாதங்கி இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் அவருக்கு சுற்றிப்போடத் தவறியதே இல்லை காத்தவராயன். அப்படி அருமை பெருமையாய் வளர்ந்த மாதங்கியின் வாழ்க்கை ஒரு வார சுற்றுலா பயணத்தில் மொத்தமாய் சீர்கெட்டுப்போனது.

தன்னுடைய இருபதாம் வயதில் கல்லூரியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவிற்குச் சென்ற இடத்தில் காணாமல் போன மாதங்கி யாரென்று தெரியாத மர்ப நபரால் பலவந்தப்படுத்தப்பட்டு ஒருவாரம் கழித்து சொக்கநாதபுரத்தின் அரசு மருத்துவமனையில் வைத்து கண்டெடுக்கப்பட்டு வாடிய கொடியாக வீடு திரும்பினார்.

மகளின் நிலைமை ஒருபக்கம் என்றால், இன்னொரு புறம் தன் முதுகின் பின்னால் இனி ஊர்மக்கள் தன்னைக் கேலி செய்வார்களே என்று துடித்துப் போய் செய்வதறியாது நிலைகுலைந்து போய் அமர்ந்துவிட்டார் காத்தவராயன். கண்ணகியம்மாள் மகளை நினைத்து அழுது அழுதே மாரடைப்பு வந்து இறந்து போனார். மாதங்கி அடங்கி ஒடுங்கி அறைக்குள்ளேயே அமர்ந்துகொண்டார்.

கண்ணப்பனுக்கு மட்டும் தங்கைக்கு நடந்தது விசித்திரமாக இருந்தது. எங்கோ சுற்றுலா போன தங்கை எப்படி சொக்கநாதபுரத்தின் அரசு மருத்துவமனையில் கிடைக்க முடியும் என்று யோசித்து தங்கையிடம் எவ்வளவோ பேசிப்பார்த்தார்.

எப்படியாவது தன் குடும்பத்தை அழ வைத்த கயவனுக்கு உரிய தண்டனையை வாங்கிக்கொடுத்துவிட வேண்டும் என்று பதறியது அந்த அண்ணனின் மனம்.

ஆனால், தனக்கு என்ன நடந்தது என்பது தனக்கே புரியவில்லை என்று சொல்லி அழுத தங்கையை அதற்கு மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் அப்படியே விட்டுவிட்டார். கண்ணகியம்மாளின் இறப்பு அந்த வீட்டில் யாரும் எதிர்பாராத ஒன்று என்பதால் கவனம் மொத்ததும் அவரின் இறுதிக்காரியங்களில் திரும்பியது.

சிலர் காத்தவராயனை கிண்டல் கேலி செய்தாலும் பலர் அவருக்காகவும் மாதங்கிக்காகவும் வருத்தப்பட அதில் ஓரளவு சமாதானம் அடைந்து ஊருக்குள் தலைகாட்டத் துனிந்தார் காத்தவராயன். ஆனால் அதற்கும் ஆப்பு வைக்கும் விதத்தில் அடுத்த மூன்றாம் மாதம் மாதங்கியின் கர்ப்ப செய்தி அவர் நெஞ்சத்தில் இடியாய் இறங்கியது.

மருத்துவமனையில் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்யப்பட்ட போது, மாதங்கியின் உடல் பலவீனமாக இருப்பதால் கருவைக் கலைப்பது அவர் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என்று எச்சரித்தார் மருத்துவர்.

“அப்பன் பெயர் தெரியாத குழந்தையோட வாழ்ந்து கஷ்டப்படுறதுக்குப் பதில் என்பொண்ணு நிம்மதியாக செத்தாவது போகட்டும்.” என்று மருத்துவமனையில் தன் தந்தை சொன்னதைக் கேட்ட மாதங்கி, தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

“எனக்கு இனி கல்யாணம், காட்சின்னு எதுவும் கிடையாது. என்ன தான் அப்பாவாவும், அண்ணனுமா இருந்தாலும் ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் நான் உங்களுக்கு வேண்டாத சுமையா தான் தெரிவேன். அதனால் எனக்குன்னு ஒரு உறவா இந்தக் குழந்தை எனக்கு வேணும்.” என உறுதியாகச் சொன்னார்.

“பைத்தியம் பிடிச்சிடுச்சா மாதங்கி உனக்கு. இந்தக் குழந்தை உன்னோட அழுகையில் உருவானது. அதை நீ சுமக்கத்தான் வேணுமா?” கோபமாகக் கேட்டார் அண்ணன் கண்ணப்பன்.

இன்னும் சில காலங்கள் போன பின்பு, உள்ளூரில் இல்லாமல் போனாலும் வெளியூரில் இரண்டாம் தாரமாக ஆயினும் தங்கைக்கு நல்ல வரனை ஏற்பாடு செய்து கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தவரின் நினைப்பில் நெருப்பை அள்ளிப் போட்ட தங்கை மேல் கோபம் வராமல் இருந்தால் தான் அதிசயம்.

கண்ணப்பனின் கோபம் மாதங்கியை துளியும் பாதிக்கவில்லை. எத்தனைக்கு எத்தனை அன்பானவளோ, அந்த அளவில் பிடிவாதக்காரியும் கூட. தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்துவிட்டால் என்ன ஆனாலும் அதில் இருந்து பின்வாங்க மாட்டாள். குழந்தை விஷயத்திலும் அவளின் முடிவை மாற்றும் வல்லமை யாருக்கும் இருக்கவில்லை.

நடக்கும் எதிலும் கண்ணப்பனுக்குத் துளியும் உடன்பாடு இல்லை. எவனோ ஒருவன் செய்த தவறுக்கு தன் தங்கை காலத்திற்கும் தனியாகக் கிடந்து தண்டனை அனுபவிக்க கூடாது எவ்வளவோ போராடிப்பார்த்தார் பலன் தான் கிடைக்கவில்லை. துவாரகாவும் பிறந்தே விட்டாள்.

காலம் கடந்தது. எதுவும் மாறவில்லை என்றாலும் எல்லாம் பழக்கப்பட்டுப் போனது. மாதங்கியின் வயிற்றில் இருந்தவரை துவாரகா மேல் இருந்த இனம் புரியாத கோபம் அவள் பிறந்து அவள் முகத்தைப் பார்த்ததும் பறந்து போனது கண்ணப்பனுக்கு. அந்த நேரத்தில் தளிர்நடை நடந்து கொண்டிருந்த தன் மகனுக்கே அவளை மணம் முடித்துவிடலாம் என அவளை முதன்முதலாகக் கையில் வாங்கிய நேரமே சொல்லிவிட்டார். மாதங்கிக்கு நெடுநாள்களுக்குப் பிறகு மனதில் சின்னதாய் ஒளி வந்தது.

அந்த ஒளி மகள் துவாரகா வளர வளர வளர்ந்தது. என்ன தான் நவநீதன், துவாரகா இருவரும் ஒரே வீட்டில் வளர்ந்தாலும் அவர்கள் சேர்ந்தது போல் இரண்டு நிமிடம் தனியாகப் பேசியது கிடையாது. அந்த அளவு மகளுடைய நிழல் போல் எப்போதும் மாதங்கி இருப்பார். தனக்கு நடந்தது தன் மகளுக்கு நடக்கக் கூடாது என்பதில் அத்தனை தீர்க்கம் காட்டினார். தன் கைக்குள் தன் தமையன் மற்றும் தகப்பனின் பாதுகாப்பிற்குள் மகளை வளர்த்தார். அவளும் பெரிதாக வெளியுலகம் தெரியாத அப்பாவியாகவே வளர்ந்தாள்.

விவரம் தெரியத் துவங்கிய நாளில் இருந்து நவநீதனுக்கு பிடித்தது, பிடிக்காதது சொல்லிக்கொடுத்து முழுக்க முழுக்க அவனுக்காகவே மகளை வளர்த்தார் மாதங்கி. அவருடைய வாழ்நாள் கனவே மகளை அண்ணன் மகனுக்கு மணமுடித்து பார்க்க வேண்டும் என்பதாகத் தான் இருந்தது.

அண்ணன் வார்த்தை மற்றும் அண்ணி அஞ்சனையின் குணம் இரண்டின் மீதும் இருந்த மரியாதையைக் கொண்டு நிம்மதியாக இருந்தார் மாதங்கி. ஆனால் மகளின் அந்த நிம்மதியை தந்தை காத்தவராயனே சுக்கல் சுக்கலாக நொருக்கிப்போட்டார்.

“பாப்பா இதைப் பத்தி அப்பா உன்கிட்ட முன்னாடியே பேசி இருக்கணும். ஆனா மகன் கொடுத்த வார்த்தையை மீற வேண்டாம் னு என்னை நானே சமாதானம் பண்ணிக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா முடியல. உனக்கே தெரியும். ஊருக்குள்ள உன்னோட விஷயத்தில் எனக்கு நிறைய தலைகுனிவு.” என்று நிறுத்த, மாதங்கி அவரை ஆழமாக ஒரு பார்வை பார்த்தார்.

“அதில் உன்னோட தப்பு எதுவும் இல்லை கண்ணா. ஆனா ஊர் வாயை அடைக்க முடியாதே. உன்னோட அண்ணன் நிலையும் அப்படித்தான். ஆனா நம்ம சாமி நவநீதன் வளர்ந்து நம்ம தொழிலைக் கையில் எடுத்ததில் இருந்து ஊருக்குள்ள அவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் ரொம்ப நல்ல பேர். படிப்படியா நம்ம குடும்பத்து மேல விழுந்த அவப்பெயர் மறைஞ்சு புதுப்பெயர் கிடைக்க ஆரம்பிச்சு இருக்கு.

இந்த நேரத்தில் சாமிக்கு நம்ம துவாரகாவைக் கல்யாணம் பண்ணி வைச்சு பழைய கதைக்கு நாமளே புதுவண்ணம் பூசணுமா? வேண்டாமே. நாளைப்பின்னே ஊருக்குள்ள யாராவது ஒருத்தர் அப்பன் பெயர் தெரியாதவளைத் தானே கல்யாணம் பண்ணி இருக்கன்னு நம்ம சாமியைப் பார்த்துக் கேட்டுட்டா அதை அவராலும் தாங்க முடியாது என்னாலும் தாங்க முடியாது. அப்பா சொல்ல வரது உனக்குப் புரியுது தானே மாதங்கி.” காத்தவராயன் கேட்க, கசப்பாகச் சிரித்த மாதங்கி, “புரியுதுப்பா, இனி என் பொண்ணை நானே பார்த்துக்கிறேன்.” என்றார்.

“என்னம்மா வார்த்தை இது. என் பேரனுக்கு கட்ட மாட்டேன்னு சொன்னதால் அவ என்பேத்தி இல்லன்னு ஆகிடாது. அவ எப்பவும் என் பேத்தி தான். என் சொத்தில் சரிபாதியை அவளுக்கு எழுதிக்கொடுத்து நல்ல இடமா பார்த்து நானே” என்றவர் தன் வார்த்தையை முடிப்பதற்கு முன்னர், அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்ற மாதங்கி தந்தை தன்னைப் பார்க்கும் பார்வையை உணர்ந்தும் அதை அலட்சியப்படுத்தி அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டார்.

மகள் இப்படி வெடுக்கென்று எழுந்து சென்றது வருத்தத்தை தந்தது என்றாலும், இது தான் அனைவருக்கும் சரி என்று தோன்றியது காத்தவராயனுக்கு.

அறைக்குள் நாளையைப் பற்றிய பயம் இல்லாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த மகள் துவாரகாவைப் பார்க்க பார்க்க வருத்தமாக இருந்தது மாதங்கிக்கு. மகள் எப்படியும் தன் பிறந்த வீட்டில் தானே வாழப்போகிறாள் என்று வெளியுலகம், அதில் இருக்கும் நடப்புகள், சம்பிரதாயங்கள் என எதையும் அவளுக்குக் கற்றுக்கொடுக்காத தன் மூடத் தனத்தை அறவே வெறுத்தார். அந்த நொடி அவர் மனதில் தீர்மானமாய் ஒரு எண்ணம் குடியேறியது.

விஷயம் கேள்விப்பட்ட கண்ணப்பனோ, “என்னப்பா நீங்க? இந்தக் காலத்தில் போய் ஜாதி, குலம் மரியாதைன்னு. யாரோ எவரோ பண்ண தப்புக்கு மாதங்கியே பொறுப்பாக முடியாதுங்கும் போது துவாரகா என்ன பண்ணுவா?

எப்ப அவளைக் கையில் தூக்கி சேனைத்தண்ணீ வைச்சோமோ, அப்பவே அவ நம்ப வீட்டுப் பொண்ணு. நம்ப பையனுக்கு அவ எந்த வகையில் குறைஞ்சவன்னு நினைச்சீங்க?” தந்தையைக் கண்டித்தார்.

“உங்களுக்கே அவளை ஏத்துக்க மனசு வரலன்னா ஊருக்குள்ள யாரு அவளைக் கல்யாணம் பண்ணுவா மாமா?” என்ற அஞ்சனையின் வார்த்தைகள் காதில் விழ காதைப் பொத்திக்கொண்டார் மாதங்கி.

அடுத்து வரும் இரண்டாம் நாளில் நெல் அறுவடைக்கான வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு நவநீதன் அப்போது தான் இல்லம் திரும்பினான். தாய், தந்தை, தாத்தா என மூவரும் நின்றிருந்த தோற்றமே ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்த, மூவரில் தாத்தாவின் தலை தாழ்ந்திருந்ததை வைத்து அவரைத் தான் மற்ற இருவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டான் அவன்.

தன் பிரியத்திற்குரிய தாத்தாவைப் பேசுவது அவர்கள் மகனும், மருமகளுமே ஆனாலும் அது பிடிக்காமல் அருகே வந்தவன், “என்னய்யா பிரச்சனை?” தாத்தாவிடமே கேட்டான்.

“இல்ல தம்பி, நான் உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன். அதைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம்.” என்று மகனையும், மருமகளையும் காப்பாற்றினார் காத்தவராயன்.

“அவ்வளவு தானா? இதுக்காக ஏன் விசனப்பட்டு நிக்கணும். எப்ப இருந்தாலும் என் கல்யாணத்துக்கு நீங்க தானே பொண்ணு பார்க்கணும்.” இலகுவாகக் கேட்டவன் கை, கால் கழுவச் சென்றுவிட, “அவனுக்கும் கூட தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை.” என்பதைப் புரிந்து கொண்ட மாதங்கிக்கு மனம் வலித்தது.

“இது தன் வீடு இல்லையா? இங்கு உள்ளவர்கள் தன் உறவினர்கள் இல்லையா? நாளையே எனக்கு ஏதாவது நடந்தால் என் மகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்தேனே அது எதுவும் நடக்காதா? வேறு வீட்டுக்குப் போய் என் மகள் எப்படி பிழைக்கப் போகிறாள்.” என்று நினைத்தவருக்கு கண்ணீர் கரையுடைத்து வர, அதைத் துடைக்கும் எண்ணம் கூட இல்லாது அப்படியே மகளின் அருகே படுத்துக்கொண்டார்.

அந்த அறையின் வாசலில் நின்று இந்தக் காட்சியைப் பார்த்தது கனவு போல் நினைவு வர, நிஜத்தில் பதறிப்போய் எழுந்து நின்றார் காத்தவராயன். அந்த நேரம் சரியாக ஆள்கள் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தனர் கண்ணப்பன், அஞ்சனை இருவரும்.
 
Top Bottom