• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது காதல் காவியம் - 28

நிதனிபிரபு

Administrator
Staff member
“எத்தனை நாளைக்கித்தான் ஆருக்கும் தெரியாம பார்ப்பாய்? கேட்டா விஷர் பிடிச்சவள் மாதிரி கத்துவாய்.உனக்குத்தான் இந்த உடுப்பு போட்டவங்கள பார்த்தாலே ஆகாதே. உன்ட நன்றிக்கடனுக்கு முடிவே இல்லியா?

“டேய் கத்தாத.இன்றைக்குத்தான் கொஞ்சம் ரெண்டு கரண்டி கூடவா சாப்பிட்டு இருக்கார்”..அவன் கேள்விக்கும் அவள் பதிலுக்கும் சம்பந்தமே இல்லாதிருந்தது.

அவள் சொன்னதைக் கேட்டு எதிரே முறைத்தபடி நின்ற நந்தனை பார்த்தவள்,
“நந்தா,இவர் முன்னரை விட நல்லா தேறிட்டாரு.உடைஞ்ச கால் சரியா வந்துட்டு.அதுவரைக்கும் இவரை பார்த்துக்க வேண்டிய கடமையை நான் சரியா செஞ்சுட்டேன்.அது நன்றிக் கடன்.இதுக்கு ஏன்டா முறைக்கிறாய்?”

“அப்படி என்றால் இன்டையோட இவரை அனுப்பிடலாம் என்று சொல்றியா?” நந்தனின் குரலில் சந்தோஷம் கலந்த எதிர்பார்ப்பு.

வெறுமனே “ம்ம்” என்று மட்டும் சொன்னாள் சத்யா.

“சத்யா…நாம இயக்கத்தில் இருக்குறம் என்பதை மட்டும் மறந்துடாத.வேறு ஒன்றும் சொல்றதுக்கு இல்ல.முதல்ல எப்படி இவரை வெளியே அனுப்புறது என்பது மட்டும் யோசி.”

“அது அவ்வளவு கஷ்டம் இல்ல.இவர கூட்டிட்டு போய் நானே விடுறன்.அவங்கட ஆட்கள் வார மாதிரி ஏற்பாடு செய்தா பிறகு அவங்க பார்த்துப்பாங்க.நீ அலட்டிக்காத டா”

சத்யா எதார்த்தமாகப் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள் என்றே கூற வேண்டும்.அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.அவளைப் பற்றி இந்த உலகத்தில் அவள் மட்டும் தானே நன்கு அறிவாள்.எல்லா பெண்களைப் போல தனக்கு உணர்ச்சியை வைத்து கடவுள் படிக்கவில்லை என்று ரொஷானைப் பார்க்கும் வரைக்கும் நம்பிக்கொண்டிருந்தவளுக்கு எல்லாமே புதிதாக இருந்தது.அதுவே கவலையாகவும் இருந்தது.

சத்யா..?

“சத்யா.? எவ்வளவு நேரமா தான் நானும் கூப்பிட்டு இருக்கன்.உன்ட சிந்தனை அடிக்கடி எங்க போகுது.நீ பழைய சத்யாவே இல்ல.”

“போதும். நந்தன் நிப்பாட்டு.கூடவா அட்வைஸ் பண்ணாத.நீ சொன்ன மாதிரியே செஞ்சிடலாம் நமக்கு இப்போதைக்கு சண்டைக்கி நேரமே இல்லை.ராணுவம் எப்ப எங்க அடிக்கும் என்று தெரியாமல் இருக்கு.அநியாயமா இவருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது.முதல்ல நீ வெளியே போ.பின்னால இவர விட்டுட்டு நான் வாரன்” என்றாள் சத்யா.

“பின்னால வாறியா?.இன்றைக்கு நாமெல்லாம் எங்க போகணும் என்று தெரியும்தானே? இனிமேல் நடக்கப் போறது தான் முக்கியமான தாக்குதல்கள்.இதுக்காகத்தான் இவ்வளவு நாளா நாம ட்ரெயினிங் எடுத்தம்.”

“நந்தன் உனக்குத் தெரிந்ததை விட எனக்கு இது எவ்வளவு முக்கியம் என்று தெரியும்.கண்ணுக்கு முன்னால என்ட அப்பா அம்மாவையெல்லாம் பறிகொடுத்தவள் நான்.என்ட மனசுக்குள்ள ஆறாத காயம் இன்டைக்கும் இருக்கு.”.கண்களில் கோபமும் வஞ்சகமும் மின்னப் பேசியவளின் பார்வை எதையுமே அவனைப் பேச விடாமல் போகவைத்தது.

கருப்பு நிற டீசர்ட்,கரும்பச் பச்சையில் மங்கிய வெள்ளைக் கோடு போட்ட நீளமான பேண்ட் உச்சந்தலையில் போடப்பட்ட கொண்டை,இடுப்பில் ஒரு பட்டி கழுத்தில் சைனைட் தொங்கவிடப்பட்ட மாலை இவ்வளவுதான் சத்யா.பராமரிக்கப்படாத அவளது வெள்ளை நிறத் தோல் வெயிலுக்கு மங்கியிருந்தாலும் அழகில் அவள் பட்டைதீட்டாத வைரம்.

நந்தன் சென்றதும் தன் முன்னால் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனை நோக்கி வந்தாள்.இதுதான் அவனைப் பார்க்கும்கடைசி தருணம்.மெல்லியதாய் அடித்த காற்றோ “சத்யா உனக்கு ராசி இல்லடி”என அவளது அம்மா ஒரு நாள் சொன்னதை நினைவுபடுத்தியது.

உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று வைத்திய துறைக்கு தெரிவானாள் சத்யா.அன்று மொத்தக் குடும்பமும் அவளைக் கொண்டாடியது.முதல் இரண்டு வருடங்கள் பல்கலைக்கழகத்திலும் படித்தாள். செமஸ்டர் லீவில் வந்த நாளன்று செல்தாக்குதலில் அவள் வீடு மொத்தமாகப் பற்றி எரிந்தது மட்டுமில்லாமல் அப்பாவின் இரு கால்களும் இல்லாமலும் போனது.போக வழியில்லாமல் முல்லைதீவில் உள்ள தாய் மாமனின் வீட்டில் தஞ்சம் புகுந்தார்கள்.தன்னை விட ஒரு வயது பெரிய அண்ணணால் குடும்பத்தை பார்க்க முடியாமல் போக அவள் டொக்டர் கனவை பாதியில் கைவிட்டாள்.

அதாற்காக அவள் அம்மா தான் அழுதாளே ஒழிய அவள் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடவில்லை.” உனக்கு ராசியில்லடி.இரவிரவா எப்படியெல்லாம் படிச்சாய்.உன்னப் படிப்பிக்க உன்ட அப்பா எப்படியெல்லாம் பாடுபட்டாரு.கடசில இப்படி ஆகிட்டே.” தலையில் அடித்துக்கொண்டு அவள் அம்மா அழுதாள்.

“அம்மா அழுகாத. நான் இயக்கத்துக்கு போறன்.என்னப் பத்தி யோசிக்காத.நம்ம சத்யாவ படிக்க சொல்லு.நான் எப்டியாவது பணம் அனுப்புவன்” என்றான் நந்தன்..அத்தனை பேரும் மறுத்தும் கூட அவன் யாரின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டான்.

சத்யாவிற்கு படிப்பைத்தொடர கொஞ்சமும் ஆர்வம் வரவில்லை.தன் குடும்பமம் இருக்கும் நிலையில் அவள் மட்டும் பாதுகாப்பாகப் போய் படிப்பதா?அறவே மறுத்துவிட்டாள்.

பிறகு வந்த நாட்கள் சொல்லொணாக் கொடுமை.
ராணுவத்தின் வாகன சத்தமோ தூரத்தில் ஒரு வெடிச்சத்தம் கேட்டால் கூட ஆண்கள் காவல் காக்க பெண்கள் பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர்.
சிலசமயங்களில் ஆண்கள் கூட சேர்ந்து இறங்க வேண்டியிருந்தது.சாப்பாடடு தண்ணி ஏன் கழிவகற்றக்கூட முடியாத ரத்தக்கறைபடிந்த நாட்களவை.

சத்யாவின் மனது முழுக்க அவ்வளவு விரக்தி கோபம் வெறுப்பு.
அவள் மெளனித்து மாதங்களாகியிருந்தது.நாட்கள் இப்படியே போக,அவள் வாழ்க்கையில் இன்னுமொரு கோர அத்தியாயத்தை அன்று கடவுள் எழுதியிருந்தார்.

“என்ன மாமா ஓடி வாரீங்க?என்னமும் பிரச்சினையோ?” எனக்கேட்டாள் சத்யா

“எல்லாரையும் ஒரு மணி நேரத்துக்குள்ள வெளியாகட்டாம்.ஆர்மி நேவி என்டு குவிஞ்சிட்டு நிக்கானுகள்.நிறைய சனங்கள் போக வெளிக்கிட்டுகள்.வாங்க நாமளும் போக.எல்லாரையும் முகாமுக்குள்ள அடைக்கப் போறானுக போல.நம்மட தலையெழுத்து இப்படியாகிட்டே.வேடிக்க பாக்குற கடவுள் ஒரு நாள் அவனுகள கழுவேத்தமாட்டாரா.”எனப் புலம்பினார் அவள் மாமா.

“அண்ணா அழாதீங்க….வாங்க அவங்க சொன்ன மாதிரியே போவம்.சுணக்கம் ஆபத்தாகிடும்”. என பதட்டத்துடன் சொல்லியபடி “இவர வண்டில தூக்கி வைப்பம் வா சத்யா..”என அவள் அம்மா அழைக்கவும் எதிர்பாராத குண்டுமழை பொழியவும் சரியாக இருந்தது.அப்போது அவர்கள் அனைவரும் வெளியே நின்றுதான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஐயோ… அப்பா “ என சத்யா உள்ளே ஓடினாள்.காலில்லாத அவள் அப்பாவை வெளியே கூட்டி வரவே விரைந்தாள்.ஆனால் அவளது காதுக்குப் பக்கத்தில் வெடிச்சத்தம் கேட்க வீட்டுக்குள் பாதிதூரம் சென்றவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே, அவளது அம்மா மாமா அத்தை என அனைவரும் உடலெங்கும் பொத்தல் விழுந்து குருதிவடியக் கிடந்தனர்.

அம்மா….என சத்தமாக அலறியபடி வெளியே ஓடி வந்தாள்.

“இப்பதானேம்மா பேசினம். ஐயோ..அதுக்குள்ளயா இப்படி நடந்துட்டு.அம்மா…..
கண்ணத் திறவுங்களன்.நீங்க என்னவிட்டு போனா எப்படிம்மா..ம்மா.பயமா இருக்கம்மா.சத்யாவிற்கு உடல் நடுங்கியது.

“ச….யா உக்கு ராராராசி ல்லலல.உன்ன விட்டு எல்லாம் போயிட்டு.உன உனக்…..கு ஆருமில்ல..நீயும் இ…….யக்கத்த்த்து…கு போ

“ம்மாமாமா.. இல்லம்மா.. அப்படிப் பேசாதீங்க.எனக்கு நீங்க அப்பா எல்லாரும் இருப்பீங்க.உங்களுக்கு நான் இருக்கன்.இந்த ஊரு வேணாம்.வேறறெங்காவது போவம்.பிச்ச எடுத்தாவது உங்களப் பார்ப்பனம்மா..” சத்யாவின் கண்களில் கண்ணீரில்லை.ஆனால் குரல் நடுங்கிப்போனது.ஆம் அவள் அம்மா அவளைவிட்டுப் போய்விட்டாள்.

அவளுக்கு அழ நேரமில்லை. இத்தனை நாள் தங்க இடம் உணவு கொடுத்த அத்தை மாமாவின் உயிரற்ற உடல்களுக்குப் பக்கத்திலும் போகவில்லை.உள்ளே காலில்லாத அவள் அப்பாவை நோக்கி ஓடினாள்.சத்தம் கேட்டுப் பயந்திருப்பாரா?ஓடவும் முடியாதே.

ப்பாபா…. அவள் மனது தவித்துப்போனது.பத்து வயது வரைக்கும் தோளில் வைத்துத் தூக்கிச் சென்ற அப்பா..படிக்கும் போதெல்லாம் கூடவே கண் விழித்த அப்பா,சத்யம்மா அப்பா இருக்கன்டா இடிக்கெல்லாம் பயப்படாத.. என்ற மந்தி ரவார்த்தையால் அவளுக்கு தைரியம் தந்த அப்பா…இத்தனை வருஷ நினைவுகளை எல்லாம் கணப்பொழுதில் நினைத்தவாறே பாய்ந்து உள்ளே சென்றாள்.

அங்கே அவள் அப்பாவின் முகத்தில் தெரிந்த சாந்தத்திற்கும் வெளியே கேட்கும் சத்தங்களுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது.இறந்துவிட்டாரா…? அவள் மனது அதை ஏற்கவில்லை.கண்கள் சொருக மயங்கி விழுந்தவளை யாரோ தாங்கிப்பிடிக்க,சத்யாவிற்கு வாய்கோணி வலிப்பும் வந்தது.

“ஏய்ய்… பேசுடி”

“தண்ணி வேணுமா?”

“பசிக்கிதா.?” அவளை உலுக்கினான் கூடப்பிறந்த அண்ணன் நந்தா.அவனின் கண்கள் அழுதழுது ரத்தமாய் சிவந்திருந்தது.இங்கே ராணுவம் சுற்றிவளைப்பு நடக்கப் போவதை அறிந்தவன் யாருக்கும் தெரியாமல் இயக்கத்தின் விதிமுறைகளை மீறித்தான் மாமா வீட்டுக்கு வந்தான்.அங்கே கண்ட காட்சிகள் ஆண் மகனான அவனையே நிலைகுலைய வைத்தது.ஆனால் அந்த சூழலில் எதற்காகவும் நேரமிழக்க முடியவில்லை.சத்யாவை மட்டுமே பார்க்க முடிந்தது.அவளை ஒரு வழியாக நிதானத்திற்குக் கொண்டு வந்தான்.ஆனால் அவளது நீண்ட அமைதி??? அவள் பேசினால்தான் உண்டு.

“நந்தா நானும் உன்னோட வாறன்.என்னையும் சேர்த்துக்க.” என்றாள்.அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனையே பயப்படச்செய்தது.

“சத்யா….யோசிச்சி பேசு.உணர்ச்சிவப்பட்டிருக்காய்.நீ நினைக்கிற மாதிரில்லடி.அது ஆபத்தான வலி நிறைஞ்ச பாதை..நான் இரவில தூங்கி பல மாசமென்டா நம்புவியா.எங்காவது ஓடிரலாமென்டு நினைப்பன்.ஆனா நம்மட அப்பா குடும்பம் உன்ட டொக்டர் கனவு எல்லாமே சிதைச்சவங்கள பழிவாங்கனுமென்டு தோணும்.”

“நீ மட்டும் தான் அந்தக் குடும்பத்துல பிறந்தியா?.எந்தப் பிள்ளையும் பார்க்கக்கூடாததல்லாம் பார்த்துட்டன்.எனக்கு கண்ணீரே வரல்ல நந்தா.அப்பா அம்மா உடலுக்கு முறைப்படி எதுவுமே செய்ய முடியாத தரித்திரங்களா மாற்றினவைகள நானும் விடப்போறல்ல.”

அதற்குப்பிறகு எதுவும் பேச தலைவிதி விடவில்லை.தாக்குதலில் காயமடைந்தவர்களை மருந்திட்டு கவனிப்பதற்கே இயக்கத்தில் அவளை சேர்த்துக்கொண்டார்கள்.

ஆயுதப்பயிற்சிக்காக வந்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தந்த கடமையைச் செய்தாள்.காயம்பட்டு விழுந்து கிடப்பவர்களை உரிய இடத்துக்கே சென்று தனியாக இழுத்துவருவாள்.அவளது வேகத்தைப் பார்த்ததும் ஆயுதப்பயிற்சிக்காக இணைக்கப்பட்டாள்.சத்யா சேர்ந்து ஒரு வருடத்திலேயே தனியாக மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பவளாகவும் மாறியிருந்தாள்.
கரப்பான் பூச்சிக்குப் பயப்படும் தன் தங்கையா இது என நந்தனே ஆச்சரியப்பட்டான்.

“கல்யாணிக்கா..அவசப்பட்டு எதையுமே செஞ்சிராதீங்கோ..? எனக்குப்பின்னால நீங்கதான் வரப்போறீங்க.நிதானமா இருக்கோனும்.கடைசியா எல்லாரும் கவனியுங்க..” தொண்டைக்குள்ளிருந்து வந்த அவளது தொனி அப்படியே ஒரு பறவையின் ஒலியாக வந்தது.

“இதான் எங்கள்ட ரகசிய சத்தம்.இப்படி கத்தினா யாரும் நின்ட இடத்த விட்ட அசையக்கூடா.பத்து சொடக்கு சத்தத்துக்குள்ள திருப்பவும் இதே சத்தம் வந்தா எல்லாரும் வந்த வழியாலயே திரும்பிப் போயிடுங்க.அது ராணுவத்தால ஆபத்து என்டு அர்த்தம்.யாருமே திசை மாறி போயிடாதீங்க.

சரி சத்யா… என்றார்கள்.பத்துப்பேர் கொண்ட அந்தக் குழுவில் இருக்கும் எல்லாருக்குமே ஒவ்வொரு விரக்தி நிறைந்த சரித்திரங்கள்.யாரிடம் சொல்லித்தான் என்னாகப் போகுது என்ற எண்ணமே அவர்களை உணர்ச்சிகள் தொலைத்த பெண்களாக்கிவிட்டது.

“நம்மட குறி அந்த மூணாவது முகாம்.அதுக்குள்ளதான் ராணுவம் சில சப்போர்ட் ஆயுதங்களை பதுக்கி வச்சிருக்காங்க.எப்டியாவது அத அழிச்சிட்டுத் தான் திரும்பனும்..முதல் ரெண்டு முகாமுக்குள்ளயும் எதுவும் இல்லை.நம்மள திசை திருப்புறதுக்காக அத உருவாக்கி இருக்காங்க.ஆனாலும் நாம அலர்ட்டா இருக்கனும்.எப்படியும் அந்த இடத்துக்குப்போக இரண்டு மணிநேரம் எடுக்கும்” என்றாள்.

அதிகாலை நாலு மணிக்கு சத்யாவின் அந்தக்குழு புறப்பட்டது.சத்யாவின் ஒவ்வொரு அடியிலும் போரின் உக்கிரம் நிசப்தமாய் பதிந்தது.

ஒவ்வொருவரும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தனர்.
ஒவ்வொருவருக்குமிடையில் இருபது எட்டு வைக்கும் தூரம் இருந்தது.முதல் ஐந்து பேர் வலது பக்கம் நகர, இரண்டாவது ஐந்து பேர் சற்று இடைவெளி விட்டு இடது பக்கமாய் நடந்தனர்.சத்யாதான் எல்லாரையும் விட முன்னே நடந்தாள்.அனைவரின் முகம் முழுக்க கறுப்பாகப் பூசப்பட்டிருந்தது.

காலை 5.50.சத்யாவிற்குப் புரிந்து விட்டது.மேலே நகர்வது ஆபத்தானதென்று.காரணம் கீழே கிடந்த சாணத்தில் பல கோணத்தில் பூட்ஸின் அடையாளங்கள் இருந்தது.நிச்சயமாக இந்த இடத்தில் நிறைய ராணுவம் இருக்க வேண்டும்.தற்போது இருக்கும் ஆயுதமும் ,ஆளணிகளும் போதாது.உணர்ச்சி வசப்பட்டுப் போய் மாட்டிக்கொள்வதை விட விவேகமாக செயற்படுவதே முக்கியம் என்பதால் சொன்னது போல் இரண்டாவது சமிக்ஞை ஒலி எழுப்பினாள்.ஆனால் அவளுக்குப் பின்னால் வந்த கல்யாணி முன்னே நகர்வதைப்பார்த்த சத்யாவிற்கு பதட்டமாகிவிட்டது.அவளின் அவசரக் குணம் தெரிந்துதான் அவளின் பெயரை அடிக்கடி உச்சரிப்பதே.
இதில் மாட்டி உயிர்விடுவது கல்யாணி மட்டுமல்லவே. கூட இருக்கும் மற்றவர்களுமே.

சத்யா நினைத்ததைப் போலவே கல்யாணி மாட்டிக்கொண்டாள்.
எங்கிருந்துதான் அவ்வளவு ராணுவம் பதுங்கியிருந்தார்கள் என்று சொல்லுமளவிற்கு பூனைபோல சத்தமே இல்லாமல் வெளிவந்தார்கள்.இதற்கிடையில் மாட்டிக்கொண்ட கல்யாணியோ சைனற்றை தின்று சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டாள்.

உடைந்து இடிபாடுகளாய்க்கிடந்த இரு சுவர்களுக்கிடையில் பதுங்கியிருந்த சத்யாவிற்கு உயிர்விட்ட கல்யாணிமேல் கொஞ்சமும் இரக்கம் வரவில்லை..எல்லாத்தையும் குழப்பி போட்டாளே என்ற எரிச்சல் வந்தது.மற்றவர்களைப் பற்றிய கவலை வந்தாலும் வெளியே போய் எல்லா ராணுவத்தையும் அடித்துப்போட்டு விட்டு கூட வந்தவர்களை காப்பற்றுவதும் சாத்தியமில்லை.அவளது கடமை நிறைவேறும் வரைக்கும் அவள் உயிர் அவ்வளவு முக்கியம்.

டப் டப்… என்று மாறி மாறி வெடிச்சத்தங்கள் வெளியே கேட்டுக்கொண்டிருந்தது.சில நொடி அமைதியாக இருக்க ,சத்யாவிற்கோ ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருந்தது.அவள் நின்ற இடத்தில் இருந்து சற்றுத்தூரத்தில் ஏதோ ஒன்று விழுந்து அந்த இடமே தீப்பிழம்பானது.சத்யாவிற்கு புரிந்துவிட்டது.அது AGNISTRIKE M12 என்னும் ஒளிக்குண்டு ஆயுதமென்று.நிறைய இடங்களில் போட்டிருப்பார்கள் போல தூரத்திலிருந்தெல்லாம் புகை வந்து கொண்டிருந்தது.

அவள் நின்று கொண்டிருந்த இடமோ மிக மோசமான இடிபாடடைந்த கட்டிடம் என்பதால் மொத்தமாக தன்மேல் விழலாம். நீண்ட நேரம் நிற்பது ஆபத்து.அதுமட்டுமில்லாமல் காய்ந்த பனைமரமொன்றில் விழுந்த தீ ஒரு பக்கம் வேகமாக பரவிக்கொண்டிருந்தது.அது எதிர்பாராத விதமாய் சத்யா அணிந்திருந்த டீசர்ட்டின் அடிப்பகுதியில் பற்றிக்கொள்ள ஆரம்பிக்க சத்யா என்னசெய்வதென்றே தெரியாமல் தோள் பையை கீழே போட்ட அடுத்த வினாடியே அதீத பதற்றத்துடன் டீசர்ட்டை கழற்றி அப்படியே தூரப்போட்டாள்.இல்லாவிட்டால் டீசர்ட்டின் உட்புறம் இருந்த வெடிகளுடன் சேர்ந்து அவளும் வெடிக்க நேரிட்டிருக்கும்.

நின்ற இடத்தை விட்டு நகர முடியாதவளாய் தன் மானம் காக்க இரு கைகளையும் தோளுக்குக் குறுக்காக மறைத்துக் கொண்டாள்.வெளியே கும்பலாக நின்ற ராணுவத்திடம் மாட்டிக்கொள்வதை விட கருகிச்சாவது மேல் என்று அவள் பெண்மை சொன்னது.அவளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் எரிமலையை விட இந்தத் தீயின் வெம்மை அவ்வளவு பெரிதில்லையே..சுவற்றோடு சாய்ந்து கொள்வதைத் தவிர எந்த அரணும் இல்லை.அவள் மனம் கிடந்து துடித்தது.என்னை இதற்குத்தான் படைத்தாயா?? நான் யாருக்கும் பயன்படாத பிறவியா? அப்போதுகூட அவளுக்கு அழுகை வரவில்லை.கோபமும் ஆத்திரமும் வந்தது.சத்தமாய் கத்தலாம் போலிருந்தது.அவள் வாய் திறந்த கத்த ஆரம்பிக்கவும் ராணுவ உடையில் ஒருத்தன் அவளை நெருங்கவும் சரியாக இருந்தது.

அவளுடையை குடும்பம்,அவளது கனவு என அத்தனையையும் அழித்தது அவன் தான் என்பதைப்போல சுவற்றில் முன்னால் சாய்ந்தவாறே ஒற்றைக்கையால் இயன்ற பலம் கொண்டு அவன் நெஞ்சில் அடித்தாள்.இதற்கிடையில் தீவிரமாக நெருப்பு அவளைச் சுற்றிக்கொண்டது.அவளால் தான் இம்மியும் அசையமுடியாதே.

அப்பா…என அலறியவளின் வாயை பொத்திக்கொண்டு அப்படியே அவளை தூக்கி நகர்த்தினான்.அப்போது,அவள் சாய்ந்து நின்ற அந்த சுவர் கீழே விழுந்தது.சத்யாவிற்கு எதுவும் தோன்றவில்லை. தன்னை காப்பாற்றியிருக்கிறான் என்ற எண்ணமே வரவில்லை.இத்தனை நாள் அவளுக்குள் இருந்த கோபம் அனைத்தையும் தன் வாயை மூடியிருந்த அவன் உள்ளங்கையை கடிப்பதில் காட்டினாள்.

அவன் காதருகில் குனிந்து சொன்ன எதுவும் அவளுக்கு விளங்கவில்லை.
இவனை எப்படியாவது கொன்றுவிடு சத்யா என அவள் மனம் உந்தியது.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் கடிப்பதை கொஞ்சமாய் நிறுத்தி மூச்சுவாங்கினாள்.

“நிறைய ராணுவம் நிக்கிது.சத்தம் போட்டா அரெஸ்ட் பண்ணிடுவாங்க.இந்த நிலையில…எல்லார்ட திங்கிங்கும் சேம் இல்ல.”அவன் கறுப்பு நிற டீசர்ட்டை கழற்றியவாறே பேசினான்.சத்யா அப்படியே ஸ்தம்பித்துப்போனாள்.அவனது டீசர்ட்டை சத்தமே இல்லாமல் வாங்கிப்போட்டாள்.அவளது உடலில் இருந்த மொத்த சக்தியும் வடிந்து விட்டதைப் போலிருந்தது.

சத்யாவோ தன்னைச்சுற்றி நடந்தது,நடந்து கொண்டிருப்பது என அத்தனையையும் மறந்தவளாய்,அங்கிருந்து நகர்ந்த அந்த உயரமானவனை இமைகொட்டாது பார்த்து நின்றாள்.அவள் பார்வையில் என்ன இருந்ததோ அவன் மேல் உடைந்த சுவரொன்று எதிர்பாராமல் விழ அப்படியே முகம் குப்புற வீழ்ந்தான்.வெளியே துருத்திக் கொண்டிருந்த இரும்புக்கம்பி ஒன்று அவன் வாய் வழியே குத்திப்போனது.வெண்ணிறத்தில் புழுதிமயமாக இருந்த அந்த இடத்தில் அவன் காணாமலே போனான்.
 
Top Bottom