இமைக்க மறந்தேன் உயிரே 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Stn49

Member
May 6, 2026
35
58
18
Chennai

"வாரண மாயிரம் சூழவ லம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்."


பெற்றவர்களிடம் தனது காதல் வாழ்வு பற்றியும்,அதன் பிரதிபலிப்பாக பெற்று வைத்திருக்கும் ஸ்ரீதயா பற்றியும் எப்படி சொல்லுவது என்று யோசனையில் ஆழ்ந்தான் . சகாம்பரியின் அப்பாவுக்கு கண்டிப்பாக வித்யாசாகரின் பெற்றவர்களிடமும் வீட்டில் இருக்கும் மற்ற பெரியவர்களிடமும் பேசியாகவேண்டும். இதில் மாறுவதற்கும்,மாற்றுவதற்கும் ஒன்றும் இல்லை என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

நமது பெண் திருமணம் செய்துகொண்டு அங்கே தான் சென்று வாழ்ந்தாக வேண்டும்.இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள், குழந்தை பெற்று வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று முடிவு செய்து திருமணத்தை நடத்தி விட முடியாது.

வெளியே வேறொரு மாப்பிள்ளை பார்த்தாலும் அவர்கள் வீட்டினரிடம் தெளிவாக பேசி ,அவர்களது உடன்பாட்டை அறிந்து கொண்ட பிறகுதானே பெண்ணை கொடுப்பேன்.அப்படி இருக்கும் பொழுது வெளியே மாப்பிள்ளை பார்ப்பதற்கும் ,வித்யாசாகருக்கும் என்ன வித்தியாசம்.?எங்களுக்கு எங்கள் பெண் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாகவும்,சந்தோசமாகவும் வாழ வேண்டும் அவ்வளவு தான்! என்பதுதான் அவர்களின் மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

வித்யாசாகர் அங்கிருந்து அமைதியாகவே கிளம்பி விட்டான்.அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. விழி பிதுங்கியது. மனமோ,"எப்போ சாகம்பரி சம்மதிச்சு,ரெண்டு பக்க வீடு பெரியவர்களும் ஒப்புக்கிட்டு கல்யாணம் செஞ்சுக்கிறது? எங்களோட பெண்ணே பெரிய பொண்ணாகிடுவா .அவளுக்கும் கல்யாண வயஸு வந்திரும் போலிருக்கு " என்று நொந்து போய் புலம்பியது. அவன் மனம் எப்போதடா அவளுடன் தனது வாழ்க்கை தொடங்கும் என்று தவிக்க அதற்க்கு முற்றிலும் எதிர்மறையான மன நிலையில் இருந்தாள் சாகம்பரி. அவளுக்கு முதல் நாள் வித்யாசாகரனை சென்று பார்த்துவிட்டு வந்தது கூட நினைவுக்கு வராத அளவுக்கு வேலை நெட்டித் தள்ளியது. லிப்ட் சரியாக வேலை செய்யாததில் இரண்டு தளங்களுக்கும் அவள் ஏறி இறங்கியாக வேண்டிய நிலைமை. மதியம் தான் சரியாகும்.இருக்கும் இரண்டு லிஃப்டுகளும் அங்கே தங்கி இருக்கும் விருந்தினர்களுக்கு மட்டும் தான் என்று காலையிலேயே அறிவிப்பு வந்து விட்டது. ஆறாம் தளத்துக்கு வருவதற்க்கு மட்டும் தான் அவளால் லிஃப்டை பயன்படுத்த முடிந்தது.

மதியம் வரை நடையாய் நடந்ததில் இடுப்பும் காலும் வலி பின்னி எடுத்தது. அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுர் விடலாம் என்று கூட நினைத்தாள் .மதியத்திற்கு மேல் லிப்ட் சரியாகி விட,மீதமிருக்கும் வேலைகளை செய்வதற்கு

சரியாக இருந்தது.எதற்க்காக தேவையற்று அரைநாள் விடுமுறை எடுத்து வீண் செய்யவேண்டும் என்று யோசித்தவளாக இருந்து விட்டாள் .

அவளுக்கு மதியம் வரை வித்யாசாகரின் நினைவு வரவே இல்லை. அதற்குப் பிறகு உணவு இடைவேளையின் பொழுதுதான் வித்யாசாகரின் முகம் மனதில் மின்னல் அடித்தது. அவனுக்கு முடிவாக என்ன பதில் சொல்லுவது என்று புரியவில்லை. அவனுடனான திருமணம் அவள் கனவில் நினைத்து பார்க்க தயாராகவில்லை.

இது 1980களோ, 1990களோ இல்லை. இப்போது நிறைய காலம் மாறிவிட்டது.மற்றவர்களுக்காக வாழ முடியாது.சுற்றி இருப்பவர்கள் என்ன பேசுவார்கள்,எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்காகவெல்லாம் பயந்து காலத்தை கடத்த முடியாது.விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டுமா... அது தனக்கு சரிவருமா என்று முடிவு எடுக்கும் உரிமையும்,தெளிவும் எல்லோருக்கும் இருக்கிறது.

நான் எதற்க்காக தயங்க வேண்டும்? யாருக்காக யோசிக்க வேண்டும்? ஸ்ரீதயாவுக்காகவா..என்னிடம் வேலை இருக்கிறது. இந்த வேலை விட்டால் அடுத்த வேலை தேடிக்கொள்ளும் திறமையும் தைரியமும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பு என்று பார்த்தல் 'சிங்கிள் 'மதராக இருப்பதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?

திருமண வாழ்க்கை சிறப்பாக எல்லோருக்கும் அமைந்து விடுகிறதா என்ன?எனக்கு வரும் வரன்களில் எத்தனை விவாகரத்து பெற்றவர்களின் ஜாதகங்களை அப்பா பார்க்கிறார்? அதில் நிறைய ஆண்கள் குழந்தை இருந்தாலும் கூட அதன் பொறுப்பை மனைவியிடம் தள்ளி விட்டுவிட்டு, குழந்தை வளர்ப்புக்காகவும்,எக்ஸ் மனைவிக்காகவும் பராமரிப்பு செலவு என்று கணக்கிட்டு ஒரு தொகையை மாதா மாதமோ , மொத்தமாகவோ கொடுத்துவிட்டு மீண்டும் புது மாப்பிள்ளையாக வந்து மனையில் உட்கார தயாராகி விடுகிறார்கள்.இது போன்ற ஒருவனால் எப்படி வேறு ஒரு ஆணுக்கு பிறந்த தயா போன்ற குழந்தைக்கு தகப்பனாக நடந்து கொள்ள முடியும்?

அவர்கள் பெற்ற குழந்தையின் பொறுப்பையே அவர்களால் கவனிக்க முடியவில்லை என்று மனதில் அங்கலாய்த்து கொண்டாள் சாகம்பரி.அவள் மனவோட்டம் பொய்யல்லவே! அவளுக்கு வரும் வரன்கள் பெரும்பாலும் விவாகரத்து பெற்றவர்களாகவும்,மனைவியை இழந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

இது போன்ற ஆணை திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்வதில் என்ன இருக்கிறது?

அதுபோல ஆயிரம் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்து, ஜோசியரிடம் பொருத்தம் பார்க்க ஒரு ஜாதகத்திற்கு ஐநூறு என்று பணம் கொடுத்து ,அவர் வெகுவாக பொருந்தியிருக்கு என்று சொல்லும் ஜாதகத்தில் திருமணம் முடித்து நடுவில் கணவனை பறிகொடுத்துவிட்டு மீதமுள்ள வாழ்க்கையை குழந்தைகளை வளர்த்து கரை சேர்ப்பதில் கழிக்கும் பெண்கள் எத்தனை?

அவர்களெல்லாம் தனியாக வாழும் பொழுது நான் இப்போது திருமணம் செய்து கொள்ளவேணடிய அவசியம் என்ன ?என்று தனக்குத்தானே மனதுக்குள் ஆயிரம் வாதங்களை செய்து கொண்டு,ஒருவழியாக அம்மா செய்து அனுப்பியிருந்த மதிய உணவை சாப்பிட்டு முடித்தாள் சாகம்பரி.

சில விஷயங்களை அவள் யோசிக்காமல் விட்டிருக்கிறாள். யாராவது எடுத்து சொன்னால் ஒருவேளை புரிந்து கொள்ளவும் கூடும்.


மாலை அவளது வேலை நேரம் முடியும் சமயத்தில் வந்து சேர்ந்தாள் சாரா. அவளது பார்வையில் இவள் மீதான அதிருப்தியும்,நக்கலும் படிந்து இருந்ததை சாகம்பரியால் நன்றாகவே உணர முடிந்தது. சாராவிடம் நேராகவே கேட்டு விடலாம் தான் .எதற்கு தேவையில்லாத வேலை என்று அமைதியாக கடந்தாள் சாகம்பரி. முக்கியமாக அவளுக்கு நிற்கவும் முடியாத அளவுக்கு இடுப்பு கடுத்தது .கொஞ்சநேரம் வெறும் தரையில் மல்லாக்க படுத்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று இருந்தது. அதனாலேயே நின்று சாராவிடம் எதுவும் பேசிக்கொண்டு இருக்கவில்லை.

பெரும்பாலும் சாகம்பரி யாரிடமும் தேவைக்கு அதிகமாகவோ,தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ பேசியது இல்லை.தனது தனிப்பட்ட விபரங்களை வைத்துக் கொண்டு அடுத்தவர் என்ன செய்ய வேண்டும்? அதே போல அவர்களது விபரங்களை தெரிந்து கொண்டு நான் என்ன செய்ய போகிறேன் என்பாள்.

இந்த இயல்பு தான் அவளை இவ்வளவு காலமாக மரியாதையுடன் நிமிர்ந்து நிற்க வைத்தது .அவள் ஒரு சிங்கிள் மதர் என்பது அங்கிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதன் பின்னே இருக்கும் அவளது வாழ்க்கை இன்று வரை யாரும் அறிந்திராத ஒரு விஷயம். தனது மகளின் புகைப்படத்தை சாகம்பரி மறைத்து எல்லாம் வைத்து இருக்கவில்லை.அவளது ட்ராவில் தான் இருக்கிறது. அன்று சாரா கூட எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாளே ! அவ்வளவு வெளிப்படை தன்மைதான்.அதற்க்காக அவள் தனது குடும்ப வாழ்க்கையை கடை விரிப்பாள் என்று யாரவது நினைத்தால் அது சரியில்லை .

இதோ ,அவள் தனது வேலை தளத்தை விட்டு வெளியே எக்ஸிட் கேட்டின் வழியாக தனது துவி சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும் வழியில் இரண்டு டிரைவர்கள் இவளை காண்பித்து ஏதோ பேசிக்கொண்டு இருப்பதை கவனிக்கிறாள். இவளுக்கு அதில் ஒன்றும் தவறாகப் படவில்லை. ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கடந்து வந்து விட்டாள் .

அவள் நிற்காமல் தனது வாகனத்தில் கடந்து சென்றது அங்கே பேசிக்கொண்டு இருந்த இருவருக்கும் தலைக்கனமாகத் தெரிந்தது. உள்ளே வன்மத்தை ஏற்றி விட்டது.முன்பெல்லாம் அவள் தங்களை கடந்து செல்லும் பொழுது ,எவ்வளவு அழகாக இருக்கிறாள். "எங்கேயாவது மறைவிடத்தில் மச்சம் இருந்தா தான் இவளை மாதிரி அழகிய கட்ட முடியும்டா " என்று பேசியவர்கள் இப்போது,"பாமபை போல அழகு என்றார்கள். மச்சமெல்லாம் வேணாண்டா... பையில பசை இருந்தாலே போதும். பார்ட்டி மடிஞ்சிரும். வயசு, அழகு,இதெல்லாம் தேவையே இல்லடா." என்று பேசினார்கள்.

அன்று அடையாறு ஹோட்டலில் பார்த்துவிட்டு வந்த மானேஜர்களும் கூட விதிவிலக்கு இல்லை.அவர்களும் தங்கள் வட்டாரத்தில் பழகும் மற்ற மானேஜர்களிடம் சொல்லி சிரித்து கொண்டார்கள்.

"பெரிய கற்புக்கரசி மாதிரி நடந்துப்பா இல்லே.. கடைசில பார்த்தா நம்ம ஆறாவது பிளோர்ல தங்கி இருந்தாரே..மிஸ்டர்.வித்யாசாகர். அவரை இங்கேயே வளைச்சிட்டா போல.அவர் இங்கேந்து காலி செஞ்சுட்டு வேறே ஹோட்டலுக்கு போயிட்டாரு . அப்போதானே எல்லாத்தையும் மெயின்டைன் செய்ய முடியும்! பணக்காரனா இருந்தா போதும்.இந்த பொம்பளைங்களுக்கு வேறே எதுவும் வேணா. அந்த மனுஷனுக்கும் இந்த பொண்ணுக்கும் வயசு வித்தியாசம் அதிகமாவே இருக்கும் போலயே!என்று பேசி வக்கிரமாக சிரித்துக் கொண்டார்கள்.அதன் உட்பொருள் புரியாத அளவுக்கு யாருமில்லை என்று நம்புகிறேன் .

வீடு வந்து சேர்ந்தவளுக்கு அலுப்பு தாங்க முடியவில்லை. ஸ்ரீதயா ஹாலில் தாத்தாவுடன் ஏதோ பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தாள் .

நேரே சென்று ஒரு குளியலை போட்டுவிட்டு வந்தவள் கொஞ்சநேரம் குழந்தையுடன் நேரத்தை செய்லாவிட்டுவிட்டு ,"ம்மா..எனக்கு நைட்டுக்கு பால் போதும். தூங்கணும்.இடுப்பு வலி என்றுவிட்டு அம்மாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் தூங்க சென்று விட்டாள் . பெற்றவளுக்கு பெருமூச்சு தான் வந்தது.இந்தப் பெண்ணுக்கு இப்படி என்ன தலையெழுத்து?எங்கள் காலத்துக்குப் பிறகு யார் இருக்கிறார்கள் .. எப்படி சமாளிப்பாள் என்றெல்லாம் திரும்பவும் மனம் தவிக்க ஆரம்பித்து விட்டது. பேத்திக்கு சாப்பிடும் நேரம் என்பதால் தோசையை ஊட்டிவிட்டு தூங்க அனுப்பினார்.இன்று ஸ்ரீதயா மதியமே சொல்லிவிட்டாள் ,"நான் இன்னிக்கு அம்மாவோட தான் தூங்குவேன்"என்று.

அடுப்பு வேலைகளை முடித்து பெரியவர்களும் சாப்பிட்டு முடித்த பிறகு ஒரு பெரிய கோப்பையில் ராகி கஞ்சியை காய்ச்சி எடுத்துக்கொண்டு மகளின் அறைக்கு சென்றார் அவளின் அம்மா. மகளை இறுக்கி அணைத்துக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சாகம்பரியை கண்டதும் கண்களில் கண்ணீர் கரை கட்டியது .அதை சமாதானம் செய்து, மகளை உலுக்கி எழுப்பி கஞ்சியை குடிக்க வைத்தார். தூங்கி கொண்டே குடித்தவளிடம்,ஒரு வலி நிவாரணி மாத்திரையை கொடுத்து விழுங்க செய்து தண்ணீர் கொடுத்து ,மீண்டும் அவள் படுத்துக்கொண்ட பிறகு விடிவிளக்கை எரிய வைத்து அறைவிளக்கை அணைத்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தவருக்கு நிலை கொள்ளவில்லை.அவரது நினைவு முழுவதும் வித்யாசாகரின் பேச்சிலேயே நின்றது.

வித்யசகரின் வீட்டில் என்ன சொல்வார்களோ...ஒப்புக்கொள்வார்களா இல்லை மறுத்துவிடுவார்களா..அப்படி ஒருவேளை அவர்கள் மறுத்து விட்டால் அடுத்து என்ன செய்வது?மகளின் நிலை என்னவாகும்? அவரை தவிர வேறு ஒருவர் இவள் வாழ்க்கையில் நுழைய நிச்சயம் சாகம்பரி அனுமதிக்கப் போவதில்லை. அப்படியே அவர்கள் வீட்டில் சரி என்றாலும் சாகம்பரி திருமணம் செய்துகொள்ள வேண்டுமே!

இவர்கள் இருவரின் பையித்தியகாரத் தனமான நடவெடிக்கைகளில் பாதிக்க பட்டுக் கொண்டிருப்பது பேதி ஸ்ரீதயா மட்டும்தான்.இப்படி வாழ்கிறவர்கள் எதற்கு குழந்தையை பெற்றுக்கொண்டு அலைக்கழிக்க வேண்டும் என்று கோவம்தான் வந்தது.அது செல்லாவிடத்து கோவம் என்று நன்றாகவே தெரியும். கணவரிடம் புலம்பித தள்ளினார்.

சாகம்பரியின் அம்மவின் நிலைமையை பார்த்து அவளின் அப்பாவுக்கு பாவமாக இருந்தது.அவருக்கும் மனதில் மனைவிக்குள் இருக்கும் அதே எண்ணங்கள்தான் சுழல்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை. மகளின் வாழ்க்கையும்,பேத்தியின் எதிர்காலமும் சேர்ந்து மிரட்டுகிறது.

பெற்றவர்கள் பயம் கொள்வதில் அர்த்தம் இருக்கிறதே!இதோ அவள் வேலை செய்யும் தளத்தில் சில விஷமிகளால் அவளை பற்றிய தவறான விஷயங்கள்,அவதூறுகள் பரப்பப் பட்டிருக்கிறது. அதிலிருந்து சாகம்பரி மீண்டாக வேண்டும்.அவள் உடைந்து போனால் நிலைமை என்னாகும்?அப்போது வித்யாசாகர் அவளை தாங்கவென்று வருவானா..அவன் வந்தாலும் பெண் வரவேற்ப்பாளா..?
 

Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
620
480
63
Pondicherry
சாகம்பரி நன்றாக யோசித்து வித்யாசாகருடன், அத்தனை விஷமிகளுக்கும் பதில் சொல்வது போல் வாழ வேண்டும்.
 
  • Like
Reactions: Stn49