அத்தியாயம்: 1
விடியலை எதிர் நோக்கி காத்திருக்கும் வைகறைப் பொழுது அது.
அலைகள் அதிகம் புரளாது, தேக்கி வைக்கப்பட்ட தொட்டி நீராய் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாது காட்சி தந்தது அந்த ஆறும் கடலும் கலக்கும் முகத்துவாரப் பகுதி. ஆற்றுக்கும் கடலுக்குமான இடைவெளியை மணல் திட்டுகள் நிரப்பியிருக்க, மரத்தால் செய்யப்பட்ட மிதவைகள் அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தன.
மிதவையில் இருந்த மீனவர்கள் எழுந்து நின்று, தாங்கள் சுருட்டி வைத்திருந்த வலையை நீரிற்குள் அள்ளி வீச, அது குடை போல் அழகாய் விரிந்து நீரில் அமிழ்ந்தது.
அதை வைத்தக் கண் வாங்காது பார்த்தபடி நின்றிருந்தாள் ஒரு மங்கை.
மீன் பாடும் தேன் நாடு என்ற வர்ணனை வார்த்தைகளைச் சொந்தம் கொண்டாடும், கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு மாகாணம் அது. எவ்வித கலப்பும் இல்லாத தூய தமிழை, அங்குள்ள மனிதர்களின் வாய் மொழியாகக் கேட்கலாம். அத்தனை இனிமையாக இருக்கும்.
இலங்கை என்றாலே இனிமையும் அழகும் ரம்மியங்களும் கொட்டிக் கிடக்கும் நாடு தானே!
பல ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையின் நீண்ட பாலம் என்ற பெருமையை இழந்திருந்தது கல்லடி பாலம். அந்த லேடி மனிங் பாலத்தின் இரும்பு தடுப்புகளில் சாய்ந்து நின்று கொண்டு, காலைக் கதிரவன் உச்சி ஏறிக் கொண்டிருக்கும் அழகைக் கவனித்துக் கொண்டிருந்தாள் வானதி.
கவலைகொண்டு, இரு கரத்தையும் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அவள். இருளைக் கிழித்து, தகதகவெனப் பொன் மஞ்சள் கீற்றை ஆசியாய் அவளின் முகத்தில் அள்ளி வீசிய ஆதவன், பெண்ணவளை மட்டுமல்லாது இந்தப் பூரண ஜகத்தையே வண்ணமயமாய் மாற்றியது.
காலை வேளை என்பதால் சாலையில் ஜன நடமாட்டம் அரிதாகத்தான் இருந்தது. ஆனால் நேரம் செல்லச் செல்ல, வெயிலின் தாக்கத்தைப் போல் மனித நடமாட்டமும் கூடிக் கொண்டே போனது.
சர் சர் என்ற வேகத்தில் வாகனங்கள் கடந்து செல்ல, அவரவர், அவரவர் அலுவலுக்காகப் பரபரத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் மட்டும் எவ்வித சலனமும் இன்றி வெகு நேரமாக நின்றிருந்தாள் அங்கு. முகத்தில் கண்ணீர் வடிந்தோடிய வடுக்கள் காணப்பட்டன.
அசைவற்று நின்றவள், அழுது முடித்து விட்டாள் போலும். இமைகளை மூடி, விழிகளுக்குள் தேங்கி நின்ற கண்ணீரை மொத்தமாக வெளியேற்றி விட்டுத் திரும்பியவளுக்காக அவளின் மிதிவண்டி காத்திருந்தது.
மணி முள்ளின் வேகத்தில் மிதிவண்டியை அவள் மிதித்துக் கொண்டிருக்க, உதடுகள் மட்டும் மெல்லிய அசைவுடன் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.
"ஏன்? இந்தக் கடவுளுக்கு என்னில இவ்வளவு கோபம் எண்டு விளங்கல்ல. நான் என்னவும் பிழ செஞ்சிருந்தா, பிழைக்கானத் தண்டனை எனக்குத் தர வேணும். ஏன் என்ர தாய் தகப்பனுக்கு தந்து, என்னை... என்னை... இப்படி… இப்படியொரு ஒரு நிர்க்கதியான சூழலில் நிக்க வச்சி வேடிக்கை பார்க்க வேணும்." என்று வெதும்பிக் கொண்டிருந்தவளின் வயதோ வெறும் பதின்மூன்று.
எந்த வயதிலும் யாரும் வாழ்க்கையில் இழக்கக் கூடாத தாயையும் தந்தையையும் ஒருங்கே அந்த வயதில் கடவுளிடம் தூக்கிக் கொடுத்து விட்டு யாருமற்று நிற்பவளுக்கு ஆறுதல் அவளும் அவளின் எட்டு வயது தம்பி பார்த்திபேந்திரனும் தான். தாய் வழி, தந்தை வழி சொந்தங்கள் என இரத்த உறவுகள் இருந்த போதும், தாய் தந்தைக்கு அவர்கள் நிகராக மாட்டார்கள் என்பதைக் கடந்த சில மாதங்களாக உணரத் தொடங்கியிருந்தாள் வானதி.
நத்தை வேகத்தில் பயணப்பட்டாலும், வீடு வந்து சேர்ந்துவிட்டாள்.
சாலையின் தொடக்கத்திலேயே கண்டு விட்டாள் அந்தச் சிவப்பு நிற மகிழுந்தை. தன் வீட்டு வாசலில் ஏன் அது நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது அவளுக்கு நன்கு தெரியும்.
கடந்த ஒரு மாதமாகவே அந்த காரையும் அதில் வருபவர்களையும் அறவே வெறுத்திருந்தாள் அவள். ஆதலால் ஆர்வமில்லாது, வந்து வீட்டார்களா! என்று எரிச்சலுடன் மிதித்தாள் மிதிவண்டியை.
எரிச்சல் தான்…
அவர்களால் தானே இத்தனை நேரம் பாலத்தில் நின்று நகர் பார்வை செய்தது.
சென்ற முறை போல் இந்த முறையும் காலம் கடத்தினால் சென்று விடுவார்கள் என்று நினைக்க, அதற்கு நேர்மாறாக வந்து காத்திருந்தனர். திரும்பி எங்காவது சென்று விடலாமா என்று கூட யோசனைகள் வர,
அவளின் மூளையோ, 'அடியே! மட்டி வானு!... உன்ர புத்திய யாருட்டயாவது கடன் குடுத்து வச்சிருக்கியா?. கொடுத்திருந்தா உடனே அதை மீட்டு, அதைத் தட்டி, கசக்கிப் பிழிந்து பார். அது சொல்லும் உன்ர முயற்சி ஒண்டும் பலிக்காது எண்டு. தப்பி எங்கயுமே போக ஏலாது எண்டு.
அப்படியே செல்ல வேண்டும் எண்டாலும் எங்கு செல்வாய்? யார் இருக்கா உனக்கும் உன்ர தம்பிக்கும் புகலிடம் தர. கொடுக்க முன்வாரவங்களயும் நீ அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாய். இப்படியெல்லாம் செய்து விட்டு பிறகு என்ன தான் செய்யப் போகிறாய் நீயும் உன்ர தம்பியும்?' என்று அது கேள்விகள் கேட்க, மனம் சுணங்கிப் போய்விட்டது.
வெறுப்புடன் தன் மிதிவண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றாள். செல்லும் முன் மகிழுந்திற்குக் கோபமான ஒரு உதையைக் கொடுக்கத் தவறவில்லை.
"எங்க போன பிள்ளை? நேரம் ஆகவும், காண இல்ல எண்டு பயந்திட்டம். அவங்க வந்து காத்துக் கிடப்பாங்க எண்ட நினைப்பு இருக்கா உனக்கு!. வீட்ட அடையாம ஊர் சுத்திக் கொண்டிருக்காய்… கழுதை..." என்று வசைபாடினார் தமிழ்செல்வி. அவளின் அப்பம்மா... அவரைக் கவனியாது கடந்து செல்லப் பார்க்க, குரல் உயர்த்தி அவளின் பாதங்களை நிலத்தில் வேர் விடச் செய்தார் அவர்.
"ஒரு வார்த்த சொல்லிப் போட்டு போறதுக்கு என்ன? பொம்பளப்பிள்ளைக்கி பொறுப்பு இருக்க வேணும். திமிரும் அகம்பாவமும் இருக்க கூடாது. இதுவர எப்படியோ இருந்த, அது படி இனியும் இருக்கலாமெண்டு நினைக்காத. உன் ஒருத்திய நம்பித்தான் உன்ட தம்பி இருக்கான். அவனுக்கும் அப்பனும் அம்மையும் இல்லை. அக்கா எண்ட ஒருத்தி தான். அதையும் இல்லையெண்டு ஆக்கி விடாதே.” என்று ஆதங்கத்தைக் கொட்டினார் அவர்.
அத்தனை நேரம் கண்ணீருடன் அறையில் இருந்த பார்த்திபன், வேகமாக வந்து தமக்கையின் கரத்தைக் கட்டிக் கொண்டான்.
அவனின் கவலை தோய்ந்த முகம் 'என்னை அநாதையாக விட்டு விட்டு சென்று விடாதே அக்கா.' என்றது. அவனுக்காகவாவாது இவர்களின் பேச்சைக் கேள் என்று அவளின் மனம் இறைஞ்ச, அமைதியாகத் தமிழ்செல்வியின் வசவுச் சொற்களைக் கேட்டபடி நின்றாள்.
செவியில் அவரின் குரல் கேட்டாலும், அவளின் பார்வை வட்டம், நாற்காலியில் பொறுமையற்று அமர்ந்திருந்த இளைஞனைச் சுட்டிக் காட்டியது. அவனின் முகம், அடக்கப்பட்ட கோபத்தால் கன்றி சிவந்திருப்பதைப் பார்க்காமலேயே உணரமுடிந்தது வானதியால். அதற்காகவே இன்னும் தாமதமாக வந்திருக்கலாம் என்று தோன்றி உள்ளுக்குள் ஒரு வித குதுகலிப்பைத் தந்தது.
"உன்ட தம்பியெல்லாம் நல்ல பிள்ளையாய் எல்லாத்தையும் எடுத்துப் போட்டு வெளிக்கிட்டு தயாராய் நிக்கிறான். நீ மட்டும் சொன்னதக் கேட்டு, ஊர் சுத்தாம பொறுப்பா இருந்தால் அவன்ட பாரம் குறைஞ்சிருக்கும். எங்க போய் இருந்தாய் இவ்வளவு நேரம்?" என்றதற்குப் பதில் இல்லை அவளிடம். அது அவரின் கோபத்தை அதிகமாக்க,
"உன்னட்ட தான் கதைச்சுக் கொண்டு இருக்கன் பிள்ளை. எங்கே போயிருந்த நீ?" என்று கோபமாய்க் கேட்ட தமிழ்செல்விக்கு,
"ஊரெல்லாம் சுத்த இல்ல அப்பம்மா. சும்மா... பாலத்தில நிண்டு போட்டு வந்தன்." என்று சின்னக் குரலில் சொன்னவள்,
"இங்க இருக்கவே எனக்கு மூச்சு முட்டுது. சுத்தமானக் காத்து வேணும் எண்டு போனன்." என்றாள் அந்த இளைஞனை முறைத்துப் பார்த்தவாறு. அமர்ந்திருந்த இளைஞன் எழுந்து கொண்டான்.
"நான் வெளிய இருக்கேன் சித்தப்பா." என்று விட்டு அவளை முறைத்தபடி வெளியேறினான்.
'காத்து வாங்கப் போனாளாம்... ஹிம்... எங்களுக்கும் தான் இவளால மூச்சு முட்டுது. எந்தப் பாலத்து மேல நின்று காத்து வாங்கன்னு தான் தெரியல. இருக்குற சூழ்நிலை தெரியாம ஜாலியா ஊர் சுத்திட்டு வந்திட்டு கதை அளக்குறா! இடியட்...' என்று முணுமுணுத்தபடி அவன் செல்ல,
"ஜாலியாச் சுத்திக் கொண்டு வர்றதை நீங்கள் பாத்தீங்களா? வாய் இருக்கு எண்டு கண்டதைக் கதைக்க வேணாம். கதையளக்கிறேனாம் கதை... உங்கட நிலமையைக் காட்டிலும் எங்கட நிலை தான் மோசமா கிடக்கு. அதை எப்படிச் சொல்லி விளக்கினாலும், விளங்கவே விளங்காது உங்களுக்கு." என்று அவள் கத்த, கேட்க அவன் இல்லை.
"எங்களுக்கு நல்லாவே புரியுது வானதி... அதுனால தான் உங்க மனசு மாற நேரம் கொடுத்து காத்திருக்கோம்." என்று செந்தூரம் சொல்ல, அவரை முறைக்க முடியாது வெற்றுப் பார்வை பார்த்து வைத்தாள் வானதி.
அவர் சொல்வது உண்மை தானே.
அவர்களுக்காகத் தானே இங்கே கூடாரமிட்டிருக்கிறார்கள் இருவரும்.
அவரையும் அவரின் அண்ணன் மகன் கரிகாலனையும் விரட்டி அடிக்க வேண்டி, பலவற்றைப் செய்து பார்த்து விட்டாள். அவள் அடித்த வேப்பில்லைக்குக் கரிகாலனுக்கு ஆத்திரம் வந்து வெகுண்டெழுந்து விட்டான். ஆனால், செந்தூர் மட்டும், ஆணி அடித்தார் போல் உறுதியுடன் நிற்கிறார்.
அவரின் பிடிவாதத்திற்கு இசைந்து கொடுப்பதில் வானதிக்குத் துளியில் விருப்பமில்லை. ஆனால் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில் தற்போதிருக்கும் சூழலில் அவர்கள் தான் அவளுக்கும் அவளின் தம்பிக்கும் உதவ முன் வந்த உறவுகள்.
அத்தோடு கல்லூரி செல்லும் வயதில் இருக்கும் கரிகாலன் தான் வானதியின் பெரியம்மா மகன். கரிகாலனின் அன்னை ஆண்டாளும் வானதியின் அன்னை உமையாளும் ஒரே கருவூலத்தில் பிறந்தவர்கள்.
செந்தூரத்திற்கு வானதியின் தந்தை யோகராசாவின் வயதிருக்கும். அவளின் தந்தையின் சாயலில் இல்லை என்றாலும் செந்தூரத்தின் குரலில் இருக்கும் கனிவும், அன்பும், அவளின் சிடுசிடுத்த பேச்சையும், முறைப்பையும், சாரல் மழை பொழிந்து தணிய வைத்தது. அது மட்டுமல்ல வேறு சில காரணமும் இருந்தது செந்தூரத்திடம் தன் கோபத்தைக் காட்ட முடியாது பணிந்து செல்ல.
"கோர்ட்டுல வாங்க வேண்டிய எல்லாம் பேப்பர்ஸ்ஸும் வாங்கியாச்சி. நாங்களும் இங்க வந்து ஒரு மாசமாகுது. அங்க போட்டது போட்ட படி கிடக்குது. காலனுக்கும் காலேஜ் திறந்திடுவாங்க. இதுக்கு மேலயும் விரையம் பண்ண நேரமோ காசோ எங்க கிட்ட இல்லை. அதுனால இந்த முறை புரிஞ்சுக்க வேண்டியது நீ தான்ம்மா." என்றவர், அர்த்தம் பொருந்திய பார்வை ஒன்றை அந்த இரு சிறார்களின் மீது வீசி விட்டு,
"நாளைக்கி காலைல கொழும்புல இருந்து ஃப்ளைட். இப்பவே புறப்பட்டாத்தான் சரியா இருக்கும்." என்று பயணச் சீட்டை தமிழரசியிடம் காட்டி விட்டு, தன் சட்டைப் பைக்குள் பத்திரப் படுத்தினார்.
ஏனெனில், "உங்கட உதவி ஒண்டும் தேவை இல்லை. எங்கள கவனிச்சுக் கொள்ள யாரும் வேணாம். நானே என்ர தம்பிய பாத்துக் கொள்வன். உங்கட கூட வாரதுல துளியும் விரும்பம் இல்லை. இனி ஒரு தரம் எங்குக்கு முன்னுக்க வந்து இது போல் கதைச்சிக் கொண்டு நிக்காதீங்க." என்று ஆத்திரத்துடன் மொழிந்து கிழித்தெறிந்து விட்டாள்.
இப்பொழுது அவளுக்கு வேறு மார்க்கம் இல்லை.
"பத்து நிமிஷம் வேணும்." என்க, செந்தூரத்தின் அதரங்கள் அழகாய் விரிந்தன.
"கார்ல வெய்ட் பண்றோம்." என்றவர் பார்த்திபனை அழைத்துக் கொண்டு பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.
"என்ன சொன்னா?" என்ற கரிகாலன் முகத்தில் எரிச்சல்.
"ம்… வெய்ட் பண்ணு. வந்திடுவா." என்றார் நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டபடி. உச்சுக் கொட்டி இறுகி அமர்ந்திருந்தவனிடம்,
“பொறுமைய விட்டுடாம இறுக்கி பிடிச்சு வை கரிகாலா. ஊர் போய் சேந்த பின்னாடியும் தேவைப்படும்." என்றவர் அவனின் முறைப்பைச் சம்பாதிப்பதற்கு முன் பார்த்திபனிடம் பேசத் தொடங்கினார்.
அறைக்குள் சென்றவள் தன் தாய் தந்தையின் புகைப்படச் சட்டம் மற்றும் அவர்களின் நினைவுகளைத் தாங்கிய பல பொருள்களை ஒரு பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
"இதையெல்லாம் என்னத்துக்கு எடுக்கிற பிள்ளை. விமானத்துல இவைகள அனுமதிப்பாங்களா?" என்ற கேட்டுக் கொண்டே வந்த தமிழ்செல்வி,
"நல்ல பிள்ளையாய் இருக்கணும். என்னிட்ட முரண்டு பிடிச்சி பதிலுக்குப் பதில் கதைக்கிற மாதிரி அங்குள்ள ஆக்களுட்டயும் கதைக்காத. அங்க இருக்கிறவங்களுக்கு உன்ன பெத்தவங்கள்ள கோபம் இருக்கும். உன்ர அம்மா செய்த காரியம் அப்படி.
கட்ட மாட்டன் எண்டு பத்திரிக்கை அடிச்ச பிறகு, குடும்பத்த விட்டு உன்ர அப்பனோட ஓடி வந்தவ தான் அவ. செந்தூரம்… அந்தப் பெடியன் தான் அது. விரும்பப்பட்டு கட்டக் கேட்டவ அவமானப்படுத்திட்டு போன பிறகும், உங்கட அம்மா மேல வச்சிருக்குற காதலுக்காக வேண்டி உங்க ரெண்டு பேரயும் கூட்டிக் கொண்டு போறார்.
அவருட வீட்டு சூழலும் சீரா இருக்கும் எண்டு நினைக்க ஏலாது. மனவருத்ததுல ஒண்டு ரெண்டு வார்த்தை பேசி வச்சா கொஞ்சம் பொறுத்துப் போ பிள்ளை.
என்ன வளர்ப்பு எண்டு உன்ர அம்மாவையும் அப்பாவையும் மத்தாள்கள் பழிக்காமல் நட. தம்பியையும் பத்திரமா பாத்துக்கோ." என்று அறிவுரைகளை வழங்க, அவரை வெறுப்புடன் பார்த்து விட்டு பெட்டியுடன் நடக்கத் தொடங்கினாள். வெளியேறும் முன்,
"இவ்வளவு அக்கறை இருக்குறவங்க எங்களை ஏன் அவங்களோட அனுப்பி வைக்கணும்?. சொந்த பேரனையும் பேத்தியையும் வளக்க ஏலாது எண்டு சொல்லி போட்டு, இப்ப பொறுமை கவனம் எண்டு நடிப்புக் காட்டி கண்ணீர் விட்டா துடைக்க விரல் எப்படி வரும்?" என்று சூடாகக் கேட்க, அவளின் பேச்சு அவருக்குச் சுருக்கென்றிருந்தது.
மகன் வழி பேத்தி தான்... ஆனால் அவருக்கு மகன் மட்டும் இல்லயே. மகள்களும் உண்டு.
இப்பொழுது வரை அவர்களை அண்டி வாழ்ந்து கொண்டிருப்பவர், எப்படி இந்தப் பிள்ளைக்களுக்கும் சேர்த்து வயிற்றை நிறைப்பார். மகள்களின் சுடு சொல்லிற்குப் பதில் சொல் சொல்லாது, அடங்கி அமைதியாக வானதி இருப்பாள் என்ற நம்பிக்கை கடுகளவும் அவரிடத்தே இல்லாத போது, நித்தமும் வழக்காடுவது எங்கனம்?
பிள்ளைகள் நல்ல முறையில் வளர்கிறார்களோ இல்லையோ பிரச்சனைகள் நெடுநெடுவென வளர்ந்து கொண்டே போகும்.
அதனால் தான் யோகராசன் இறந்து போகவும் உமையாள் பிறந்த வீட்டார் பார்த்துக் கொள்ளட்டும் என்று பொறுப்பை ஒப்படைத்து அனுப்பி வைக்கிறார்.
காரில் ஏறி அமர்ந்த வானதிக்கு நெஞ்செல்லாம் அடைத்தது. நான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுச் செல்வது துக்கத்தைத் தூக்கி தொண்டைக்குள் வைத்தது போல் பாரமாக இருந்தது.
கழுத்தை வளைத்து தன் வீட்டைப் பார்த்தாள். வாசலில் நிறுத்தியிருந்த சைக்கிள் அவளின் தந்தையின் பரிசு.
"முதல் பிள்ளையா வந்தா வாங்கித் தருவன் எண்டு தானே சொன்னீங்க. காசு எடுத்து வச்சிக் கொள்ளுங்கள், நாளைக்கி இன்னேரம் ரிசல்ட் வந்திடும்." என்று ஆர்ப்பரித்த மகளுக்கு, கடை கடையாக அழைந்து வாங்கித் தந்தார் யோகராசன்.