தேன் நாட்டு பைங்கிளி - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,450
113
Germany
அத்தியாயம்: 12


வீசுகமழ் நீ எனக்கு...

விரியுமலர் நான் உனக்கு...

பேசுபொருள் நீ எனக்கு...

பேணுமொழி நான் உனக்கு...

நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன்...

ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....

இது பாதிரியார் காதலுக்குத் தந்த கவிதை.

நான் உனக்கு, நீ எனக்கு என்று காதல் உணர்வை கொட்டி, எதுவெதுவாக நாம் இருப்போம் என்று கண்ணம்மாவை வைத்து கொண்டாடித் தீர்த்தவர் அவர்.

முதல் முதலில் ஏதோ ஒரு வானொலியில் தான் அந்தப் பாடலைக் கேட்டான். RJ வாக இருந்தவர் அழகாய் வாசித்து காட்ட, அதன் பொருள் புரிந்தவனுக்குக் காதலும், காதலிப்பதும், காதலிக்கப் படுவதும் எத்தனை பேரின்பத்தைத்தரும் என்ற கற்பனையைத்தந்திருந்தது.

ஆதலால் பள்ளிப் பருவத்திலேயே அவனின் கண்ணம்மாவைத் தேடினான்.

கனவில் காதல் செய்த பாரதியைப்போல் நிஜத்திலும் காதல் செய்ய நினைத்தான். ஆனால் ஒரு கானல் நீரிடம் மொத்தமாகத் தன் காதலைக் கொட்டித் தீர்ப்பான் என்று எண்ணியிருக்கமாட்டான். காகிதங்களைத் தீக்கிரையாக்குவதுபோல் காதல் உணர்வை இரையாக்கி சாம்பலாக்கியவன், இனி காதல் என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது என்ற மனநிலைக்கு வந்திருந்தான்.

‘உடல் இச்சைக்குப் பெயர் காதல். காமத் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள காதல் என்ற கள், பாலாகப் பாவித்து பருகப்பட்டு வருகிறது.‌ எல்லாம் அபத்தமானது. ஏமாற்று வேலை. பித்தலாட்டம்.

கபட நாடகமாடிய தந்திரக்காரியை நினைத்து நினைத்து, நினைவுச் சிறைக்குள் வாழ்வதைவிட, அதிலிருந்து விடுபட்டு யாரையும் காதல் செய்யாது வாழ்வதே மேல்.’ என்பவனுக்கு, நிஜத்தில் வாழும் பெண்கள் தேவையே இல்லை.

ஆனால் வானதி சொல்லாதக் காதல் அவனை எதுவோ செய்து.

அவள் உரைக்காத காதல் அவனுக்குள் காதலை உணர்த்தியது.

"எத்தனை தூரம் நான் உங்களைக் காதல் செய்தேனோ. அத்தனை தூரம் வெறுக்கிறேன்." என்று சொன்னவளின் கண்களின் தெரிந்த வெறுப்பு, அவள் உண்மையைத் தான் சொல்கிறாள் என்றது.

"தைரியம் டி உனக்கு. கரிகாலன் தங்கச்சில. அப்படித் தான் இருப்ப. அவன மாதிரியே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு வெளிப்படையாத்தான் இருக்கு உன்னோட பேச்சு.‌" என நினைத்துக்கொண்டவன் கடல் காற்று வேண்டி பால்கனிக்குச் சென்றான்.

நிலவு எட்டிப்பார்க்கும் வானமும், அதைத் தொட முடியாவிட்டாலும் முயன்று கொண்டே இருப்பேன் என்று உயர எழுந்த ஓதமும் வானதியின் வார்த்தைகளை ஞாபகப்படுத்தியது.

"What!! Come again..." என்றவன் வானதி சொன்னதன் பொருள் புரியாது விழிக்க,

"மீண்டும் மீண்டும் வார்த்தைய படிச்சி விளங்கப்படுத்த நான் ஒண்டும் ஸ்கூல் டீச்சர் இல்லை! உங்கட காதில சரியாத்தான் விழுந்திருக்கு. விளங்கல்ல எண்டு கள்ளக் கதை கதைக்க வேணாம்." என்றாள் குடித்த கோப்பையை மேஜையில் வைத்தபடி.

கனத்த மௌனம் நிலவ,

"காதலிச்சன்னா… எங்கிட்ட ஏன் அதைச் சொல்லல?" என்ற கேள்வி அவனே அறியாது உள்ளிருந்து வந்தது.

'சொல்லிருந்தால் மட்டும் என்ன செய்திருப்பாய்?' என்று மனம் கேட்டாலும் அவளின் பதிலை அறியும் ஆவல் இருந்தது அவனிடம்.

"ஆசைபடவும், தகுதி வேணும் தானே." என்றது வர்மாவிற்குச் சுள் என்றிருந்தது.

"அது என்ர விஷயத்துல இல்ல. அந்தச் சூரியனப்போல நிறைய உசரத்துல இருக்காய். எட்டிப் பிடிக்க முடியாத உசரம். அப்படியே பிடிச்சாலும் கைக்குள்ளயே பத்திரப்படுத்த முடியாது. அதான் நமக்குள்ள இருக்குற இடைவெளியா நினைக்கிறன்." என்றவள், எழுந்து நின்று அவனின் முகம் பார்த்து,

"Hate செய்து..." என்று சொல்லிவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

தகுதி என்றாளே அதை அவளிடம் பார்த்திருக்கிறான். அவளின் தகுதியைச் சுட்டிக்காட்டி கேலி செய்தவர்களை வேடிக்கையும் பார்த்திருக்கிறான். அவளின் தகுதிதான் அவளுடன் பழக விடாது தடுத்தது அவனை.

இப்பொழுது அதைச்‌ சுட்டிக்காட்டுபவளிடம் எப்படிப் பிரதிபலிப்பது என்ற குழம்பத்தை மனம் தத்தெடுத்தது. தன் முட்டாள்தனத்திற்காக,

"I am sorry... நான் உங்கிட்ட... அப்ப… தகுதிலாம்..." என்று அவன் தடுமாறி மன்னிப்பைக் கேட்கும்போதே,

"வெளிக்கிடுறப்ப கதவைச் மூடிட்டு போங்க. என்ர ஃப்ரெண்ட் மெசேஜ் செய்திருக்காங்க. அவங்க வார நேரம் நீங்க நிக்கிறது சரி இல்ல" என்றவள் 'வெளியே போ' என்ற இரு வார்த்தைக்கு சாயம் பூசி மொழிந்துவிட்டு போர்வையால் தலை கூடத் தெரியாதவாறு மூடிக்கொள்ள, விறுவிறுவென வெளியேறிவிட்டான்.

அவள் சொன்ன hate அவனுக்கு வலியைத்தந்தது.

அந்த வலியைப் போக்க, இந்த இரண்டு நாளும் அந்தக் கடிதங்களுடன் தான் வாசம் செய்கிறான்.

அவனையும் அறியாது அவனின் எண்ண ஒட்டங்களுக்குள் ஓடிக் கொண்டிருந்தாள் வானதி.

"இதுல உங்கட சைன் இல்ல.”

“எண்ணால எழுதின காசுக்கும், எழுத்தால கிறுக்கின காசுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு.”

“Denomination போடுங்க.”

“திகதி பிழையா போட்டிருக்கீங்க.”

“கணக்கு எண் சொல்லுங்க." என்று எதிரில் இருப்பவர்கள் நீட்டும் சலானை நிரப்பிகொடுக்கும் வானதிக்குப் பதினாலு வயதிருக்கும்.

செந்தூர் வேலை பார்க்கும் வங்கி அது. விடுமுறை விடும் கிழமை தோறும் அங்கு சென்று அமர்ந்துவிடுவாள்.

'வீட்டில் அந்த ஈஸ்வரி சகோதரிகளுடன் குத்து சண்டை போட நான் எப்பொழுதும் தயார்தான். வெற்றி கிட்டினாலும் கிட்டாவிட்டாலும் ஒரு வழி செய்து விட்டுத்தான் நிம்மதி காற்றைச் சுவாசிப்பன். ஆனால்!!! ஆண்டாள் பெரியம்மா அழுவா! ஏன் சண்டை பிடிக்காய் எண்டு என்னைத்தான் சொல்வா! நான் என்ன சொன்னாலும், 'அவைகள் அப்படித்தான் பொறுத்துபோ மகள்' என்பார். அது எனக்குச் சிரமம். ஏன் இந்த மண்டையடி எண்டு இங்க வந்தன்.' என்பாள்‌ வானதி.

செந்தூருக்கும் அதுவே சரி என்றுதான் பட்டது. கரிகாலனுக்குச் சென்னையில் தான் கல்லூரி என்றாலும் விடுதியில் தங்கி படிப்பைத் தொடர்ந்ததால் அவரிடம் ஆதரவு கரம்நீட்டி விட்டாள்.

வங்கிக்கு ஏதோ வேலையாக வந்த வர்மாவின் காதில் அவளின் குரல் தான் முதலில் கேட்டது.

வட்டாரத் தமிழ் என்று தமிழ், பல விதமான உச்சரிப்புகளிலும், சுவைகளிலும் பேசப்படும் என்பது அருள்மொழிக்குத் தெரியும். அவனின் தென்னாட்டு நண்பர்கள் பலர் பேசிக்கேட்டிருக்கிறான். ரசிக்கவும் செய்வான்.

அவனுக்கு வானதி பேசிய இலங்கைத் தமிழ் பிடித்திருந்தது‌. யார் அந்தத் தேன் குரலுக்குச் சொந்தக்காரி என்று பார்வையைச் சுழலவிட்டான்.

பட்டி தொட்டி எங்கும் கல்வி சென்றுவிட்டது. எழுத படிக்க தெரியாத மக்களே எங்க தேசத்தில் இல்லை. நாங்கள் வளர்ந்து விட்டோம் என்று ஆட்சியாளர் சொல்லிக்கொண்டாலும் வங்கியில் கொடுக்கும் பாரத்தை நிரப்புவது இன்றும் நன்கு படித்த பலருக்கு சவால் தான்.

பணம் எடுக்க எந்தச் சலானை நிரப்பவேண்டும். எந்த நிறத்தில் இருக்கும், பணம் போட உதவும் சலான். பணம் களவாடப்பட்டு விட்டது என்றால் எப்படிக் கடிதம் எழுதிக்கொடுப்பது. வங்கிக் கணக்குத் திறக்க என்னென்ன வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை யாரிடம் சென்று நீட்டுவது என்பதுபோன்ற பல சந்தேகங்கள் வங்கிக்குள் வந்த பின் முளைத்துவிடும். ஆதலால் அவர்களுக்கு வழி காட்ட வங்கியில் சிலர் உண்டு.

எல்லா வங்கிகளிலும் உண்டா என்றால் கிடையாது. செந்தூர் வேலை செய்யும் வங்கியில் இருந்தார் ஒரு பெண். தனியாக மேஜை போட்டு அமர்ந்திருப்பார். அவருக்கு உதவுகிறேன் என்று அருகிலேயே நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொள்வாள் வானதி.

அன்று புதிதாக வங்கிக் கணக்கு திறக்கவேண்டி, ஏகப்பட்ட படிவங்கள் அந்தப் பெண்ணின் முன் இருந்தன. அதில் இரண்டை வானதியிடம் கொடுத்து,

"எல்லா பேப்பர்ஸ்ஸும் இருக்கான்னு பாரும்மா." என்றார்.

படிவங்களை ஆராய்ந்தவள்,

"கணபதிராஜ்..." என்று உரக்க அழைக்க, முன்வந்து நின்றான் அருள்மொழி.

அவன்தான் கணபதி என்று நினைத்துக்கொண்டவள், "நாமினி எண்ட இடம் நிரப்பாம இருக்கு. ஆர்ர பேரையாது எழுந்துங்க. என்ன உறவெண்டும் மென்சன் செய்யுங்க. நான் பெருக்கல் அடையாளம் வச்ச இடங்கள்ல உங்கட கையெழுத்து வேணும். எல்லாம் செய்திட்டு நாலாம் எண் கவுண்டருல குடுங்க." என்று படிவத்தை நீட்ட, வர்மா வாங்காது அவளையே குறுகுறுவெனப் பார்த்தபடி நின்றான்.

விழிகளை உயர்த்தாது, அடுத்த படிவத்தைப் புரட்டியபடி இருந்தவள், அவன் வாங்கி விட்டான் என்ற எண்ணத்தில் படிவத்தைவிட, அது மேஜையில் விழுந்தது.

"ம்ச்..." என்று எரிச்சலோடு நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு, மீண்டும் எடுத்து நீட்ட, அவனுக்குள் மென்நகை மலர்ந்தது அவளின் கோவத்தில்.

'ஏன் இவன் விசராட்டம் பாக்குறான்?' என்று குழம்பித்தான் போனாள் வானதி.

"ஏன் ஆணி அடிச்ச மாதிரி நிக்கிறிங்க. அகௌண்ட் ஓப்பன் செய்யவேணும் தானே. ம்... வாங்கிக்கொண்டு போங்க. நாலாவது கவுண்டர்." எனும்போது ஒரிஜினல் கணபதிராஜ் வந்து வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். செல்லும் அவரையே ஒருகணம் பார்த்தவள்,

"நீங்கள் கணபதிராஜ் இல்லையா?" என்க, இரு கரங்களைக் கட்டிக் கொண்டவன், தலையை இடம் வலமாக ஆட்ட, அது பருவத்தின் ஆரம்பக்கோட்டில் நின்றவளுக்கு உள்ளக் கிளர்ச்சியைத் தந்தது. அவனின் அமர்த்தலான சிரிப்பு ரசிக்க வைத்தது.

"பிறகு ஏன் நான் கணபதி எண்டு சொன்னதும் முன்னுக்கு வந்து நிண்டிங்க?" என்றாள் உற்சாகக் குரலில் கன்னங்கள் பூப்பூத்தபடி.

மேஜையின் மீது இரு கரத்தையும் ஊன்றச் செய்தவன், குனிந்து, "இந்தத் தேன் குரலுக்கு சொந்தக்காரி யாருன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சி. வந்தேன். பக்கத்துலயும் பாத்திட்டேன்." என்க, அன்னாந்து அவனின் முகம் பார்த்தவளுக்குத் தன் கதுப்புகளின் சிவப்பை மறைக்கும் வழி தெரியவில்லை போலும்‌.

அவளின் மாநிறக் கன்னத்தில் வண்ணக் கோலம் போட்டிருந்த வெட்கம், பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது கண்முன்னே விரிந்தது வர்மாவிற்கு.

அது தான் வானதியுடனான முதல் சந்திப்பு. ஈர்ப்பு இல்லை என்றாலும் ஓர் ஆர்வமிருந்தது அவனிடம். அவள் பேசும் தமிழின் மீது. அவ்வளவுதான்.

அதன்பின் சிவதாண்டவத்தின் வீட்டில்தான் பார்த்தான். தாய் வீடு என்று அடிக்கடி வெண்மதி வந்து அமர்ந்துகொள்வார். சிறு வயதில் வெண்மதியுடன் வருவான்தான். ஆனால், சற்று வளர்ந்தபின் அங்கு அதிகமாக செல்வது இல்லை.

அப்படியே வந்தாலும் வானதியைச் சந்திக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் நாகேஸ்வரிக்கு வானதியின் வனப்பின் மீது பொறாமை இருந்தது. முகலட்சணங்களைப் பார்ப்பவர்களின் கண்ணுக்கு சுஜித்ராவைக் காட்டிலும் வானதி பேரழகியாகத் தெரிவாள். ஆதலால் அந்த ஈஸ்வரி சகோதரிகள் வானதியைத் தங்களின் உறவுகள் முன் வரவிட்டதில்லை. வரும் சந்தர்ப்பம் அமைந்தாலும் வேலைக்காரி என்று அசிங்கப்படுத்திதான் அறிமுகம் செய்துவைப்பர்.

வானதியும், அவமானப்பட்டு இவர்களுக்குப் பணி விடைசெய்து, சேவகியாக இருப்பதைக் காட்டிலும் அறைக்குள்ளேயே முடங்குவது நல்லது என்று வெளியே தலை காட்டுவதில்லை.

அது சுஜித்ராவின் +2 ரிசல்ட் வந்திருந்த நேரம். தேறி விட்டதற்காக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தாள். அப்பொழுது வர்மா, பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தான்.

"மச்சி! வா மச்சி. நீ இல்லாம பார்ட்டியே நல்லா இருக்காது. நீ தான் என்னோட பார்டி பார்ட்னர்." என்று சுஜித்ரா வர்மாவிற்கு அழைப்பு விட்டுக்கொண்டிருந்தாள்.

சென்ற முறை பார்ட்டி என்று ஒரு விடுதிக்குச் சென்றிருந்தபோது, குடி வெறியில் பாட்டில்களை உடைத்து, தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை நொறுக்கி, வருபவர் போபவரிடம் வம்பிழுத்து, வாகனங்களை நாய் போன்று துரத்திச்சென்று பயங்காட்டியதுபோன்ற செயல்களைச் செய்ததால், காவல்துறை அவர்களைக் கொத்தாகத் தூக்கிச்சென்று ஸ்டேசனில் வைத்திருந்தது.

பெரிய இடம் என்று கதறியும் விடவில்லை. ரவியும் சிவதாண்டவமும் வெளியே கொண்டுவந்தது.

வர்மாவிற்குத்தான் அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுவது பிடிப்பதில்லையே.

அதனால் வேண்டாம் என்க, "பப் இல்ல மச்சி. வீட்டுல நடக்கப்போது‌."

"வீடா... நோ சுஜி... அங்க ப்ரைவசியே இருக்காது. ஆன்டி இருப்பாங்க. அவங்க முன்னாடி… அதெல்லாம் நமக்கு செட்டாகாது. என்னைப்பத்தி என்ன நிறைப்பாங்க!" என்று வரமறுத்தான் வர்மா.

"வீடுன்னா வீடு இல்ல மச்சி... ஹெஸ்ட் ஹவுஸ்... அங்க எல்லாத்தையும் அரேஜ் பண்ணித் தர்றதா daddy-யே சொல்லிட்டாரு. யாரும் நம்மல எதுவும் சொல்லமாட்டாங்க. நாம free bird-டா இருக்கலாம்."

"அப்ப ஓகே..." என்றவன் அங்குதான் வானதியை இரண்டாவது முறையாகக் கண்டான்.

அவர்களின் வீட்டிற்குப் பின்னால் நீச்சல் குளத்துடன் கூடிய சிறிய குடிலில் இளைஞர் கூட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. காதைக் கிழிக்கும் அளவிற்கு வந்தது இரைச்சல்.

"ஹே...ஹே... " எனக் குதித்துக் கொண்டும், பாட்டிலைக் குலுக்கி நுரை பொங்க விட்டு, குடித்துக்கொண்டும் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தனர்

ஆண்டாள், வானதி கையில் குளிர்பான ட்ரோயைக் கொடுத்துவிட, எரிச்சலுடன் கதவைத் தட்டினாள். திறந்தது வர்மா தான்.

"ஹே... நீ... நீ அன்னைக்கி பேங்க்ல..."

"ஓம்... நான் தான். இந்தாங்க." என்றாள்.

அவளின் சுழித்த புருவமும், முகத்தை அஷ்டகோணத்தில் வைத்துக்கொண்டு நீட்டிய தட்டும் அவளைச் சுவாரசியமாகப் பார்க்கவைத்தது.

"நீ எங்க இங்க? அதுவும் கூல்ரிங் தட்டோட! வழி மாறி வந்திட்டியா?." எனக் கேலியாக கேட்க,‌

"ஆரும் கண்ணாடி டம்ளர்ல் ஜூஸ் ஊத்தி எடுத்துக் கொண்டு ரோட் மாறி நகர்வலம் வர மாட்டாங்க. பிடியுங்க. நான் போகோணும்." என்றாள் அருவருப்பில்.

ஏனெனில் உள்ள ஆண் பெண் பேதமின்றி கட்டி அணைத்து அடிக்கொண்டிருப்பதைப் பார்க்க சகிக்காது அவள் அவசரப்படுத்தினாள்.

ஆனால் அவனோ! தட்டை வாங்காது பேச்சை வளர்த்துக் கொண்டு நிற்க, "யாரு மச்சி?" என்றபடி வந்தாள் சுஜித்ரா.

"நீயா!" என அலட்சியமாக புருவம் உயர்த்தியவளிடம்,

"பெரியம்மா குடுக்கச் சொன்னாவு!" என்று ட்ரேயை நீட்ட,

"உள்ள வந்து வச்சிட்டு போ." என்றுவிட்டு வர்மாவின் தோளைக் கட்டுக்கொண்டு உள்ளே இழுத்துவந்தாள்.

வர்மாவின் பார்வை மட்டுமல்ல அங்கிருந்த விடலை அத்தனை பேரின் கண்களும், தலை நிமிராது மேஜையில் ட்ரேயை வைத்துவிட்டு சென்ற வானதியின் மீதே இருந்தது. கூசிப்போனாள் பெண்.
 

Author: நிதனிபிரபு
Article Title: தேன் நாட்டு பைங்கிளி - 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
ஆஹா...என்ன ஒரு அற்புதமான குடும்பம்.....
பெத்த பொண்ணு பார்ட்டி வெச்சி குடிச்சி கும்மி அடிக்க அப்பாவே எல்லாம் செய்து தராரா.....
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
303
265
63
India
வர்மா இப்பொழுது நினைத்து பார்த்து என்ன செய்வது