• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேன் நாட்டு பைங்கிளி - 14

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்: 14

நள்ளிரவு நேரம்...

ஆழ்ந்த உறக்கத்திற்கு அப்பொழுது தான் ட்ராவல் செய்ய ஆரம்பித்திருந்தாள் வானதி. அப்பொழுது 'டொய்ங்... டொய்ங்...' என்ற சத்தம் அவளின் தூக்கத்தைத் தொந்தரவுசெய்தது.

"ம்ச்..." என்று காதுகளை அடைத்துக்கொண்டு தூங்கமுயன்றாள். ஆனால் விடாது வந்த சத்தத்தால் கடுப்பாகிப்போனவள்,

"எந்த நாய் இன்னேரம் செமேஜ் அனுப்புதுகள்.." என்று எரிச்சலுடன் தலையணைக்கு அடியில் வைத்திருந்த ஃபோனை எடுத்தாள்.

புலனத்தில் பத்திற்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்திருக்கும் போலும்.
யாரோ!! என அசட்டையாகத்தான் திறந்துபார்த்தாள். ஆனால் இருந்த செய்தி அவளின் தூக்கத்தை மொத்தமாக விரட்டி அடித்து எழுந்து அமரவைத்தது.

அனுப்பியது அவன்தான்...

"Hey, it’s me." என்று ஆரம்பித்து, அன்று அவன் தந்த உடையை நாளை அலுவலகம் வரும்போது எடுத்து வா என்று சொல்லியிருக்கிறான்.

"நானா அபயக் குரல் கொடுத்தன் காப்பாற்று எண்டு! அவனா வந்தான். தண்ணியில குதிச்சான். உடுப்பு மாத்தி விட்டான். இப்ப அல்பத்தனமா T-shirtடை கொண்டு வா என்றான்! அத வச்சிக்கொண்டு நான் என்ன சரவணா ஸ்டோரா திறக்கப் போறன்!." என்று முசுமுசுவென கோபமேறியது. இதில் அவளை அதிகமாகக் கடுப்பாக்கியது என்னவென்றால்...

ஒவ்வொரு வார்த்தைக்களும் ஒவ்வொரு செய்திகளாக அனுப்பப்பட்டிருந்தது.

'Hey,' என்று ஒரு செய்தி, "it’s' என்று ஒன்று 'me.' என்றது மற்றொன்று.'I need.' 'my T-shirt.' 'bring them...' 'when you' 'come' 'to the office' 'tomorrow' இப்படியாக பிரித்து பிரித்து அனுப்பியிருந்தான்.

"மெசேஜ் எண்டால் குறுஞ் செய்தி எண்டு தானே அர்த்தம். இத்தின குறுகலா அனுப்பணும் எண்டு என்ன அவசியம்?" என நொடித்தபடி கட்டை விரல் உயர்த்தி இருக்கும் எமோஜியை அனுப்பி விட்டு, மீண்டும் அதை வாசித்தாள். மீண்டும் கடுப்பு வந்தது.

"மொத்தமா ஒரே மெசேஜில் அனுப்பிக்கலாமே! டொங் டொங் எண்டு கத்தி என்ர நித்திரையக் கெடுத்திட்டான். காட்டான்... கண்ட நேரத்துக் கோட்டான்." என்று திட்டிவிட்டு, அவனின் DP ஐ ரசித்தபடி உறக்கம் தொலைக்க இருந்தாள் பாவை.

பின், "வேண்டாம் இந்தக் காட்டான். அடக்கம் செய்து நினைவு நாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் காதலுக்கு உயிர் கொடுத்து சோம்பி-யாகத் திரிய விடக்கூடாது." என்று அலைபேசியை அணைத்துவிட்டு நித்திரைக்குள் ஆழ்ந்தாள்.

விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே மெல்லிய நூல் அளவில் தான் வித்தியாசம் என்று சொல்வர். ஆனால் வானதிக்கு வர்மாவின் மேல் இருக்கும் வித்தியாசம் இரும்புத் துண்டு அளவிற்கு இருக்கிறது. எப்படி அது செல்லரித்து! எப்பொழுது அவனின் பிரியத்தை எடுப்பாளோ! அவளுக்குத் தான் இந்தப் பாடு. வர்மாவிற்கு இல்லை. அவன் தன் மனத்தை வெளிக்காட்டத் தொடங்கியிருந்தான்.

மறுநாள் காலையில் ரயில் நிலையத்திலேயே அவளுக்காகக் காத்திருந்தான்.

பைக்கை முன்னிருத்தி, ஏறுமாறு தலையசைக்க, அன்று ஜெய்க்குச் சொன்ன மறுப்பை இவனிடம் சொல்ல நா எழவில்லை.

'இவன் எதற்கு டிரைவர் வேலை செய்கிறான். எனக்கு மட்டுமா! ஆஃபிஸ்ஸில் இருக்கும் மற்றாட்களுக்குமா!' என யோசித்தபடி, அவள் நிற்க, "ஏறு..." என்று அழுத்தமான அடிக்குரலில் சொல்லவும், வேகமாக ஏறி அமர்ந்துகொண்டாள்.

இருவரும் ஒன்றாக வந்திறங்கியதைக் கண்டு அனைவரும் வாயைப் பிளக்க, ஜெய் கேட்டுவிட்டான் நேரடியாக.

"அவர்... அவர்... என்ர ரிலேட்டிவ். அவங்கட ஃபேமிலிக்கும் எங்கட ஃபேமிலிக்கும் ஒத்து வாராததால் ஆரிட்டயும் சொல்ற இல்ல." என்று சொல்லி சமாளிக்க,

"இப்ப ஒத்து வந்திடுச்சா?"

"உங்களுக்குள்ள எந்த மாதிரியான உறவுன்னு சேத்து சொல்லு வானு."

"அண்ணா வா? அத்தானா?" எனச் சித்ராவும் மிருதுளாவும் கேலி செய்ய, ஜெய் சுருங்கிய முகத்துடன் நடையைக்கட்டினான். செல்லும் ஜெய்யைச் சமாதானம் செய்யும் எண்ணம் வரவில்லை வானதிக்கு.

ஏனோ அந்தச் சூழல் அவளுக்குப் பிடிக்கவில்லை. வர்மாவுடன் தன் பெயரை இணைத்து இவ்வாறான கேலிகளும் விளக்கங்களும் அவளுக்கு அசௌகரியத்தைக் கொடுத்தது.

மின்தூக்கியில் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி ஏறியவன், அவளுக்கு அருகிலேயே வந்து நின்றுகொண்டு, "Hey..." என்க, ஆகாஷ் கூட வித்தியாசமாக வர்மாவைப் பார்த்துவைத்தான்.

ஆகாஷ், வானதிக்கு வணக்கம் வைக்க, “உங்கள ஆர் நான் இவருக்கு சொந்தம் எண்டு அறிக்கை விட சொன்ன?” என்று மெல்லிய குரலில் அவனுடன் சண்டைக்குச் செல்ல, திரும்பிப் பார்த்தான் வர்மா.

“இனி இதப் பரப்ப வேணாம்.” என்று காட்டமாகச் சொல்ல,

“உண்மையத்தான் சொன்னான். நாம ரிலேட்டிவ்ஸ் தான.” என்றான் வர்மா.

“என்னிடமா பேசுகிறான்!” என்பதுபோல் பார்த்தாள்.

அவன் தந்த உடை தான் அவனின் விசித்திர நடவடிக்கைகளுக்கு காரணம். அதைத் தந்து விட்டால் மெசேஜ் செய்வது தொடராது. தன்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க மாட்டான். பேச மாட்டான். குறிப்பாக தனக்கு மட்டும் ஓட்டுனர் வேலை செய்யமாட்டான் என நினைத்து, தன் கைப் பையில் இருந்த ஐநூறு ரூபாய் தாள்களை எண்ணத்தொடங்கிவிட்டாள் பெண்.

அவனின் வாசமும் அவளின் சுகந்தமும் ஒன்றாக கலந்த அந்தச் சட்டையை அவன் வசம் ஒப்படைப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. ஆதலால் சட்டைக்கு ஈடாக பணத்தைக் கொடுத்துவிடும் நோக்கத்தில் ஆறு தாள்களை எடுத்துக்கொண்டு தலை நிமிர, அவனைக் காணவில்லை.

மூன்றாம் தளம் வந்து விட்டதால் அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டனர்.

செல்லும் அவனை உரக்க கத்தி பெயர் சொல்லி அழைக்கச் சங்கடப்பட்டு, "ஆகாஷ் அண்ணா!!!" என்றாள் பெருங்குரலில்.

அவள் நினைத்தது போலவே ஆகாஷ் உடன் சென்ற வர்மாவும் திரும்பிப்பார்த்தான்.

அவனிடம், "இந்தாங்க." என்று ரூபாயை நீட்ட,

அதை வாங்காது, 'எதற்கு இது?' என்பதுபோல் அவன் பார்வையால் வினாத் தொடுத்தான்.

"புது உடுப்புக்கு."

"புதுசா?"

"ஓம்... மூண்டாயிரம். கூட வேணும் எண்டாலும் கேளுங்க. தாரன்."

"என்னோட பழைய டிசர்ட்டுக்கு என்னாச்சி?"

"அது.... அது.... அது வேணாம். அதுக்கு பதிலாத் தான் இது."

"நான் என்னோடத கேட்டேன்."

"புது துணி வாங்கினா! அதுவும் உங்கடது தானே." என்றவளை உற்று நோக்க,

"அது... நான் போட்டது." என்றாள் தயக்கமாக,

"அதுக்கு?"

"அத எப்டி உங்களுக்கு...." எனச் சங்கடத்துடன் இழுக்க,

"I never mind." என்றதும் விருட்டென விழிகளை இடுக்கி அவனை முறைத்தாள் பெண்.

இவன் புரிந்து கொண்டு பேசுகிறானா அல்லது புரியாது பிதற்றுகிறானா என்றெண்ணியவள்,

"நான் ஏன் காசு தாரன் எண்டு உங்களுக்கு விளங்குதா! புதுசு வாங்கச் சொல்றன். உங்கட பழைய உடுப்ப கையில தர விருப்பமில்லை என்றன்." என்று படபடவெனச் சட்டமாகச் சொன்னவள், பணத்தை ஆகாஷின் கையில் தினித்து விட்டு, அவனைக் கடந்துசென்றாள் தன் இருக்கைக்கு.

"நதி… நில்லு." என்றான் உரக்க. அதில் ஒட்டு மொத்த அலுவலகமே இவர்களை வாய் பார்க்கத்தொடங்கியது.

ஏனெனில் வர்மா யாரின் பெயரையும் சுருக்கி செல்லமாக அழைத்ததில்லை. பெண்களின் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டிய நிலை வந்தால் கூட மரியாதையுடன் தான் அழைப்பான்.

இப்பொழுது வானதியின் பெயரைச் சுருக்கி, ஒருமையில் நதி என்று அழைத்தால் பார்க்கத்தானே செய்வர். கால்கள் நடப்பதை நிறுத்திவிட்டது பெண்ணவளுக்கு. உடல் மொத்தமும் விறைத்துப்போக, சிலையென சமைந்துபோனாள் வானதி.

'என்னையா அழைத்தான்!!' என்ற அதிர்ச்சியும், 'நதி' என்றதில் உண்டான குளுமையும் ஒரே நேரத்தில் தாக்க, உடல் சில்லிட்டு சுற்றத்தை மறந்து திரும்பிப்பார்க்க வைத்தது.

மற்றவர்கள் அனைவரும் தெளிவற்று out of focus-ல் தெரிய, அவன் மட்டும் தெளிந்த நடையுடன் அவளின் அருகில் வருவதுபோல் தோன்றியது.

முட்டைக் கண்களை விரித்து, முழுதாக அவனை உள் வாங்கிக்கொள்பவள் போல் பார்த்தவளின் தளிர் கரத்தைப்பற்றி, அவள் கொடுத்த ரூபாயை வைத்தான்.

இத்தனை நெருக்கத்தில் அவனைப் பார்ப்பதே, பிரம்மை பிடித்தது போலிருந்தது. இதில் கையை வேறு பிடித்துவிட்டான். சொல்லவாவேண்டும்!!

பூங்கரத்தில் உள்ள பூனை முடிகள் குத்தீட்டிபோல் எழுந்து நிற்க, அவளின் மயிர்க்கூச்சத்தை உணர்ந்து கொண்டவன், மெல்லிய சிரிப்புடன்,

"புதுசு... நீயே வாங்கி குடுத்திடு." என்றான் சத்தமாக.

‘ஏன்னடா! பக்கத்தில வந்த பிறகும் சத்தமாக் கதைக்கிறாய்!’ என நினைத்தவள் சுற்றி முற்றி பார்க்க, அனைவரின் கண்களும் அவர்கள் மேல்தான்.

"நானா!!" என்று இதழ்களுக்குள் முணுமுணுக்க, ஆம் என்பது போல் தலையசைத்தான்.

"உங்கட சைஸ் எனக்கு தெரியாது." என்றாள் மெல்லிய குரலில்.

"Text பண்றேன்."

"எங்க வாங்க?"

"அதையும்."

"டிசைன்?"

"கடைக்குப் போனதும் வீடியோ கால் பண்ணு." என்று அனைத்திற்கும் ரெடிமேடாக ஒரு பதிலை வைத்திருப்பது அவளுக்கு எரிச்சலைத்தந்தது.

"முன்னப் பின்ன பழகாத ஒரு பெடியனுக்கு வீடியோ கால் எடுத்து ஜவுளிக் கடைய சுத்திக் காட்டி எனக்குப் பழக்கமில்லை. தனியா அழைஞ்சி திரிஞ்சி, உடுப்பு தேர்வு செய்வதெல்லாம் என்னால ஏலாது. இந்தாங்க.... இத்தோட எல்லாம் முடிஞ்சிது. இனி எனக்கு மெசேஜ்ஜோ காலோ எடுக்காதீங்க." என்று காசை அவனிடம் கொடுத்துவிட்டு தனது நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

அனைவர் முன்னிலையிலும் அவள் அவனிடம் நடந்து கொண்டது அவனுக்கு அவமானம் இருந்திருக்கவேண்டும். ஆனால் இல்லை. அவன் அவ்வாறு எண்ணவில்லை.

அவள், முறைப்புடன் முணுமுணுத்தவாறே அவனைப் பார்ப்பது தெரிந்தது. தென்றலைச் சாமரம் வீசியதுபோல் உணர்ந்தான், படபடவென அவளின் இமைகள் மூடித்திறக்கும் வேகத்தில்.

எதுவும் சொல்லாது தன் கேபினுக்குள் சென்றான்.

பார்க்க எக்கச்சக்க வேலைகள் இருந்தபோதும், எந்த வேலையும் அவனுக்கு ஓடவில்லை. கண்ணாடி வழியே வானதியை நோட்டமிடுவதை மட்டுமே வேலையாகக்கொண்டிருந்தான்.

அவ்வபோது நிமிர்ந்து இவனைப் பார்க்கும் வானதிக்குப் புன்னகை சிந்தியபடி காசை உயர்த்திக் காட்டினான். அவளோ, ‘உன் பைத்தியக்கார செயல்கள் எனைப் பாதிக்காது.’ என்பதுபோல் முகத் திருப்பிக்கொள்ள, வர்மாவால் தான் அப்படி இருக்க முடியவில்லை.

‘சாதாரண டி சர்ட். உன்னிடம் எத்தனை உள்ளது அதுபோல். அதற்காக வம்பு வளர்க்காதே! விலகி இரு.’ என்று கட்டளையிட்ட மூளைக்கு முற்றுப்புள்ளியாய் வானதியை நிறுத்தியது மனம்.

பைக்கில் பெண்ணை ஏற்றிக்கொண்டு அவன் ஊர் சுற்றுவதைவிட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இன்று அவளை ஏற்றிக்கொண்டு வந்தது சுகமாகயிருந்தது. சாய்வு நாற்காலியில் இரு கரத்தையும் தலைக்கு அடியில் மடித்து வைத்தவனின் தோள் இப்பொழுதும் குறுகுறுத்தது. ஒவ்வொரு முறை எச்சிலை விழுங்கும் போதும் குரல்வளையில் அவள் தந்த முத்தத்தை விழுங்க முடியாது தவித்தான்.

அவளைப் பற்றிய நினைப்பே கற்கண்டாய் இனித்து, திகட்டாது தித்தித்தது. அவளின் அண்மையைக் கேட்டது அவனின் ஆழ்மானம்! அவளுடனான பொழுதுகள் வேண்டும்.

வேகமாக எழுந்து சென்றவன், கேண்டீனுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தவளிடம்,

"தனியா அழையுறது தான் உனக்கு பிரிச்சனையா?" என்று கேட்டான்.

"என்ன?" என்றவளின் மேஜையில் பணத்தை வைத்து, "எனக்கு என்னோட டி சர்ட் தான் வேணும். காசு... ம்ஹிம்..." என்று தலையசைத்து நகர்த்தி வைத்தான்.

"ஆனா எனக்கு."

"I Know. உனக்கு அது பழக்கம் இல்லன்னு. அதுக்கு எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு." என்றவன் மேஜையில் சாய்ந்து நின்றுகொண்டு, கரங்களைக் கட்டிக் கொண்டான். எப்பொழுதும் வசீகரிக்கும் ஆடவனின் வசீகரம் பெண்ணவளை வசியம் செய்ய,

"என்ன ஐடியா?" என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்.

"நாம சேந்து சாப்பிங் போகலாம் நதி."

"??" என்ன சொல்வது என்று தெரியாது திருதிருவென முழிக்க,

"எங்கூட வா. நாம சாப்பிங் போகலாம். நான் செலக்ட் பண்றேன். நீ பே பண்ணிடு. சிம்பிள். ஈவ்னிங் வெய்ட் பண்றேன், முன் கேட் பக்கத்துல." என்றுவிட்டு செல்ல,

"நான் வாரன் எண்டு கமிட் செய்யல." என்றவளைத் திரும்பிப்பார்த்து,

"சரியா 5 ஓ க்ளாக் வந்திடு. நாம சாப்பிங் முடிக்க லேட்டாகலாம். சோ, அத்தைட்ட வர லோட்டாகும்னு கால் பண்ணி சொல்லிடு நதி. இல்லன்னா உன்னைக் காணும்னு பயந்திடுவாங்க." என்று செய்தியாக வாசித்தவன், தன் கேபினுக்குள் சென்றுஅமர்ந்தான்.

"அத்தையா!!! ஆருக்கு ஆர் அத்தை? பயந்திடுவாங்களாம்... ரொம்பத்தான் அக்கறை. வீட்டுக்கு வார காலத்தில திரும்பிகூட பாக்கமாட்டான். அந்த ஈஸ்வரி சிஸ்டர்ஸைத் தவிர்த்து என்ர பெரியம்மா இவன்ட கண்ணுக்கே தெரிஞ்சதில்லை. இப்போ!! எங்கருந்து முளைச்சதோ! திடீர் அத்தை பாசமும், உறவும்." என்று நெட்டித் தள்ளியவளை கேபினுக்குள் இருந்தவன் குறுநகை பூக்க பார்த்தபடி இருந்தான்.

வேலை‌ முடிந்து புறப்படும்போது, "front gate." என்று ஜாடை செய்தபடி கடந்துசெல்ல, கொதித்துக்கொண்டு வந்தது வானதிக்கு.

"இவனுக்கு இண்டைக்கு என்ன நடந்த? ஒரே நாள்ள இவ்வளவு அதிசயங்களும் என்ர கண்ணுல சிக்கினா! அட்டாக் வந்து எமனை நேரடியா பேட்டி எடுக்க போயிருவேன் போலயே!" என்றுவிட்டு தன் பையை எடுத்துக்கொண்டு சென்றாள்.

வீட்டுக்கா! எப்படி முடியும். அவன்தான் பூத கணம் போல் வாயிலைக் காவல் காத்துக் கொண்டுநிற்கிறானே. பின் எப்படி முடியும்!!

அவனது பைக் பின் பக்கம் உயர்ந்து, முன்னால் இருப்பவனைக் கட்டி அணைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

காலையில் அதில் ஏறவே அவளுக்குச் சங்கட்டமாக இருந்தது. அதிலும் அவன் ப்ரேக்கை அழுத்தும்போது, மேடு பள்ளங்கள் வரும்போது, அவன் முதுகுடன் உரசுவதைத் தவிர்க்க ஒரு கையால் தன் பையை அணைத்துக்கொண்டும், மற்றொரு கையில் அவனின் தோளை அழுத்திப் பிடித்தபடியும் அமர்ந்துவந்தாள், பெரும் சிரமத்துடன்.

காலையில், வெறும் பத்து நிமிட பயணம். இப்பொழுது ஊருக்குள் செல்லவேண்டும். கடை கடையாய் அழைய வைக்கப்போகிறான் என்பது பார்த்தாலே தெரிகிறது. அப்படியெனில் குறைந்தது ஒரு மணி நேரமாகும். ஏகப்பட்ட மேடு பள்ளங்கள் வரும், சிக்னல், வேகத் தடைகள்.

வித்தைக் காட்டிக்கொண்டு விறைப்பாய் அமர்ந்தால் முதுகுத்தண்டு உடைவது உறுதி.

ஆதலால் அவனுடனான பைக் பயணத்தைத் தவிர்க்கவேண்டும். எப்படி? என்ற யோசனையுடனேயே நடந்துவந்தவள், அவனின் பைக்கைப் பார்த்து முகத்தைக் கோணிக்க,

"என்னாச்சி நதி?"

"இதுல தான் வெளிக்கிடணுமா?"

"ம்..."

"நான் வரல்ல. உங்கட பைக்கில் ஏறினதும் மலை ஏறுவதும் ஒண்டா இருக்கு. என்னால ஏலாது.”

“அப்பறம் எப்படி சாப்பிங் போறது?”

“பைக்கை இங்கயே வச்சிட்டு வாங்க. பக்கத்துல இருக்க கடையாய்ப் பாத்து போவம்." என்றாள் சட்டமாக.

"ஓ... போகலாமே." என்றவன் பைக்கை ஆகாஷிடம் கொடுத்துவிட்டு, தன்னுடன் நடந்துவருவான் என்று அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இன்றைக்கான மற்றொரு அதிர்ச்சி அவளுக்கு.

“வா நதி…” என்று அவன் முன்னே நடக்க, அவள்தான் குழப்பத்துடன் அவனைத் தொடர்ந்தாள்.

சின்ன சின்ன தோலுரசல்களோடு, அதிகம் பேசிடாது, மௌனத்தைத் தகர்த்தெரியும் வார்த்தைகளோடும் இருவரின் பயணமும் ஆரம்பித்தது.

அவனுக்கு இது முடிவில்லாத பாதையாக இருக்க ஆசை. அவளுக்கோ இதை இன்றே முடித்துவிடவேண்டும் என்ற ஆவல்.

முடிவில் யாரின் ஆசை நிறைவேறியதோ!!!
 
Last edited:
Top Bottom