அத்தியாயம் 9
கணினியில் தான் ஆரனின் பார்வை மொத்தமும், ஆனால் மூளை இதுவரை விசாரித்த மொத்த முகங்களையும் சுற்றி வந்தது.
தனித்தனியாக எட்டுப் பெண்களின் மொபைலிலிருந்தும் டேட்டா தரவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. இது சாதாரண மொபைல் செர்வீஸ் சென்டர்களில் செய்ய முடியாது, அவர்கள் செய்யவும் கூடாது. டிஜிட்டல் ஃபாரீன்ஸீக் அதிகாரிகள் அந்த மொபைல் வாங்கிய தினத்திலிருந்து கடைசி உபயோகம் செய்ததுவரை மொத்தத்தையும் அக்குவேர் ஆணிவேராக பிரித்தெடுத்துவிடுவர். அவர்களுக்கு மட்டுமே அதற்கான அதிகாரமும் உண்டு.
அப்படித்தான் ரத்னாவின் மொபைல் துவங்கி இன்று ஆண்டாளின் மொபைல் வரை தரவுகளை எடுத்தனர், எட்டு பேரின் மொபைலையும் ஆராய்ந்ததில் அவர்களின் வீடியோக்கள், என்று எந்த எண்ணிலிருந்து அனுப்பப் பட்டிருக்கிறது என்பது வரை சிக்கியிருந்தது.
"எடிட் பண்ணிருக்க வீடியோ தான சார்?" என்றான் மதுரன்.
"ஆமா ஹாஸ்பிட்டல் பெட்னு பாத்ததும் தெரியுது, ஆனா சுத்தி வேறெதோ ரூம் மாதிரி எடிட் பண்ணி அந்த பொண்ணுங்களுக்கு அனுப்பிருக்காங்க" என அந்த ஃபாரீன்ஸீக் காவலர் கூற,
"ஆக்சுவலா, குழந்தை இல்லன்ற ரீசன் தான் டெத்தோட ஸ்டராங் பாய்ண்ட். நமக்கு அந்த ஃபெர்டிலிட்டி ஹாஸ்பிடல் மேல டவுட் வேற இருக்கு, அதனால பாத்ததும் இது ஹாஸ்பிடல் ரூம்னு கெஸ் பண்ணிட்டோம். இல்லனா சாதாரணமா பாக்றவங்களுக்கு, அவங்க செக்ஸ்கு ரெடி வ்யூ தானே கிடைக்கும்?" என்றான் மதுரன்.
"மீதி நாலுபேரோட மொபைலையும் எக்ஸ்டராக்ட் பண்ணுங்க" என்றான் ஆரன்.
"அவங்க தான் அந்த ஹாஸ்பிடலே போகலையே சார்?" என மதுரன் கேட்க,
"ஒரு க்ளாரிபிகேஷனுக்கு தான். நீங்க முடிஞ்சளவுக்கு சீக்கிரம் பண்ணுங்க சக்தி" என அவர்களை அனுப்பிவிட்டான்.
அவர்கள் சென்றதும், "மதி ஹாஸ்பிடல் ஃபுட்டேஜ் தான் சார் இது" என்றான் மதுரன்.
"இருக்கலாம்"
"அந்த லேடி அந்தப் பேச்சுப் பேசுச்சு? நம்பி ட்ரீட்மெண்ட் பாக்க வந்த பொண்ணுங்கள வீடியோ எடுத்து வச்சுருக்கு" என மேலும் எரிச்சலானான்.
"அவங்களுக்கு தெரியாம நடந்துருந்தா?"
"கைனக் டாக்டர் அவங்க தானே? கண்டிப்பா இது ஸ்கேனிங் பொஷிசன், அவங்க தான் பண்ணிருப்பாங்க. ட்ரெஸ் மாத்திட்டு, ஃபெர்டிலிட்டி ட்ரீட்மெண்ட் பண்றதும் அவங்க சொல்லி தான நடந்துருக்கும்"
"ம்ம்"
"ஒருவேளை இப்ப அவங்க பையன் கண்ட்ரோல்ல இருக்கறதா சொன்னாங்களே? அவன் பாத்த வேலையா இருக்குமோ?" என்றான் அவனே,
"மே பி"
"வாங்க சார் போய் அரெஸ்ட் பண்ணுவோம்" என மதுரன் டென்ஷன் ஆக,
"இதெல்லாம் நா அனுப்பல, இது எங்க ஹாஸ்பிடலே இல்லன்னு சொல்லுவான்"
"அப்ப உங்க ஸ்டைல்ல என்கவுண்டர் பண்ணிடுங்க. செத்து ஒழியட்டும்"
"அதுக்கு இவன்தான்னு நா கன்ஃபார்ம் பண்ணணும். பண்ணிட்டு முடிச்சு விட்ரலாம்" என்றவன் பதிலில், அவ்வளவு நேரமிருந்த கோபம் சட்டென்று குறைய, சிரித்தான் மதுரன்.
"சார்!"
"ஹாஸ்பிடல்ல என்ன நடக்குன்னு தெரியணும் மேன். அந்த ஏரியால உனக்கு யாரையும் தெரியுமா?"
"அந்த ஏரியால தான் படிச்சேன் சார், பசங்கள கேக்கலாம் ஆனா விஷயத்த தோண்டுவானுங்க"
"ம்கூம் வெளில இல்ல உள்ளயே பிடிக்கணும்" என ஆரன் யோசிக்க,
"நாம வேணா அன்டர்க்ரௌண்ட் ஆபரேஷன் பண்ணுவோமா சார்?"
"உன்ன கொல்லப் போறேன். இந்த பொம்பள பொறுக்கிக்கு அன்டர்க்ரௌன்ட் ஆபரேஷன் வேற கேடு" என முறைக்க, சிரித்தான் மதுரன்.
"சிரிக்காம போய், எவிடென்ஸ் எப்படி கலெக்ட் பண்ணறதுன்னு யோசி" என அனுப்பிவிட்டு, கமிஷ்னரிடம் சென்று அனைத்தையும் காட்ட,
"எப்படி ஹாஸ்பிடல்ல இருந்து ஃபுட்டேஜ் எடுக்கப் போறீங்க?"
"அங்க யாரையாவது பிடிக்கணும் சார், ஸ்டராங் எவிடென்ஸ் வேணும். அந்த வீடியோஸ் வந்துருக்கு ஆனா சேட் எங்கையும் அந்த ஹாஸ்பிடல் நேமோ, அங்குள்ள ஆட்கள் நேமோ வரல, தான் யாருன்னே சொல்லாம தான் பேசிருக்கான், அவங்கள ப்ரோவோக் பண்ணி தற்கொலை செய்ய தூண்டிருக்கான், அவனோட மோட்டிவ் அவங்க சூசைட் பண்ணிக்கணும்னுன்றது மட்டுந்தான்"
"நீங்க லீவ்ல போறீங்க தானே அதுக்குள்ள இந்த கேஸ முடிச்சுடுங்க ஆரன்" என்றார்,
"அதுக்காகலாம் கல்யாணத்தையும் ஹனிமூனையும் தள்ளி வைக்க முடியாது சார்" என்றான் அவன் அசால்ட்டாக,
"முடிச்சுட்டா தலைவலி இல்லாம என்ஜாய் பண்ணுவீங்கள்ல? இல்லனா நாங்க பாதிலேயே உங்கள அழைச்சுக்க வேண்டி வரலாம்"
"தலைவலின்னு உங்கள நீங்களே சொல்லிக்கிறீங்க? நா அப்படிலாம் நினைக்க மாட்டேன் சார் டோன்ட் வொர்ரி"
"ஜீஸஸ்!" என்றார் கமிஷ்னர்,
"இது மட்டுந்தானா இல்ல வேறெதுவும் டார்ச்சர் குடுத்தானா எல்லாம் தெரியவர வேண்டி இருக்கு. பத்தே நாள் தான் என் கல்யாணத்துக்கு இருக்கு. அதனால எது முந்துதோ அதுக்கு தான் என் ப்ரயாரிட்டி சார்"
"என்னமோ பண்ணுங்க. எனக்கு சீக்கிரம் கேஸ் முடிஞ்சா சரி" என்றுவிட்டார். அவனிடம் தான் பேசி மீள முடியவில்லையே, பின் எதற்கு வாயைக் கொடுப்பானேன் என விட்டுவிட பழகிக்கொண்டார்.
இதற்கிடையில், செல்வகுமாருக்கு நடந்தது உண்மையிலேயே விபத்து தானா என விசாரிக்க சொல்லியிருந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டரிடமிருந்தும் தகவல் வந்தது.
"விபத்து தான் சார். அன்னைக்கு அவர் ஆபிஸ்ல இருந்தே ஒரு கார் அவர ஃபாலோ பண்ணிருக்கு, முதல்ல ஒருதடவ செல்வகுமார் கார் கிட்ட வர இடிக்க மாதிரி வந்து வளைச்சு முந்திருக்கான், அப்பவே அவர் லைட்டா பேலன்ஸ் மிஸ்ஸாகி ஸ்டெடி பண்ணிருக்காரு. மறுபடியும் கொஞ்சம் தூரம் வந்ததும், திடீர்னு ப்ரேக் போட்ருக்கான், அவர் வண்டிய நிப்பாட்ட ட்ரை பண்ணி முடியாம முன்ன அவன் வண்டில இடிச்சுட கூடாதுன்னு ரைட்ல கட் பண்ண, அங்க பெரிய பள்ளம், வலது பக்கம் ரெண்டு டயரும் இறங்கிடுச்சு. அதுல தான் தலைல நல்ல அடி அவருக்கு. பட் அந்த கார் காரன் தான், கொண்டு வந்து ஹாஸ்பிடலயும் சேர்த்துருக்கான்"
"ஆள பிடிச்சுட்டீங்களா?"
"ம்ம், வேணும்னு செய்யல சார். நிஜமா வண்டி சடர்னா ஆஃபாகிட்டுன்னு சொன்னதையே தான் சொல்றான். அதுக்கு முன்னயே ரெண்டு தடவ இடிக்க மாதிரி ஏன் போனன்னு கேட்டா, இல்ல இல்லங்குறான். ஆள பாத்தாலே தெரியுது சார், ப்ளான் பண்ணி தான் பண்ணிருக்கான்"
"ஆள் மேல வேறெதுவும் கேஸ் இருக்கா?"
"ஆமா சார். ரெண்டு திருட்டு கேஸ் இருக்கு. இப்ப சார் இந்த கொலை தொழிலுக்கு ப்ரோமோட் ஆகிருக்காங்க"
"அப்ப செய்ய சொன்னவன பிடிக்கணுமே? நீங்க இவன இங்க அனுப்பிடுங்க" என்றுவிட்டான்.
"போடா! நல்லா வச்சு பரலோகம் அனுப்பிடுவார். என்ட்ட இல்ல இல்லங்குறல அங்க போய் சொல்லு பாப்போம்" என அனுப்பிவிட, ஆரனைப் பற்றி தெரிந்துகொண்டு வருபவன், எதற்கு வளவளக்கப் போகிறான், வந்ததுமே, செய்ய சொன்னவன், எப்போது சொன்னான், எப்படி செய்ய சொன்னான், எவ்வளவு தந்தான் என அனைத்தையும் ஒரு அடி கூட வாங்காமல் சமத்தாக ஒப்பித்துவிட்டான். அப்படியாக அவன் கை காட்டியவன், நிலாயினியின் தந்தை திருட்டுதனமாக தொடர்பு வைத்துக்கொண்டிருந்த பெண்மணியின் தம்பி.
"ஆஹான்!" என அதை அப்படியே உள்வாங்கினான் ஆரன் விஷ்வேஷ்வரன்.
அனைத்தையும் கரைத்து வாங்கிவிட்டு, நான்கு அப்பு அப்பி, "மறுபடியும் என்கிட்ட வரக்கூடாது நீ. வந்தனா உனக்கே தெரியும் என்ன நடக்கும்னு" என அறிவுறுத்தியே, திருப்பி அனுப்பிவைத்தான்.
அங்கு இரண்டு நாட்களில் வரவேண்டிய, மதி மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் இன்னும் வந்திருக்கவில்லை.
"எப்ப வருவாங்க மேடம்?" என அந்த வாரத்திலேயே மூன்றாவது முறையாக சென்று நின்றனர் ஆரன், மதுரன் இருவரும்.
"சார் நீங்க இப்படி கொலை குற்றவாளிய தேடுற மாதிரி தேடுறது எங்க ஹாஸ்பிடல் ரெப்யூடேஷன், என் பையனோட டாக்டர் நேம்ம எல்லாம் பாதிக்கும். விசாரிக்க தான் வர்றீங்கன்னு வெளில உள்ளவங்க பேச மாட்டாங்க. அவன் வரவும் நானே அனுப்பி வைக்கிறேன். இனி இங்க வராதீங்க" என்றார் மதி.
"சரி அவர் வர்றப்ப வரட்டும். நா ஹாஸ்பிடல் மொத்தமும் ஒரு செக் பண்ணனுமே?" என்றான் ஆரன் நிதானமாக.
"எதுக்கு?"
"உங்க பையன் வந்தார்னா அவர்ட்டயே எல்லாம் விசாரிச்சு தெளிவாகிடலாம்னு பாத்தோம். இனி நாங்களே தான சுத்தி வந்து க்ளாரிஃபை பண்ணிக்கணும்? எங்களுக்கு கேஸ் முடிக்கணும்ல? அவர் வர்ற வரை வெயிட் பண்ணிட்டே இருக்க முடியுமா? உங்க ஹாஸ்பிடல்க்கு வந்துட்டு போன அப்றம் தான் அந்தப் பொண்ணுங்க சூசைட் பண்ணிருக்காங்க" என மேசையை தட்டி அரட்டிய ஆரனின் அதட்டலில், வாயை மூடிக்கொண்டார் மதி.
"இங்க உள்ள ஸ்டாஃப் ரெண்டு பேர எங்க கூட அனுப்புங்க" என்றவன் வெளியேறிவிட்டான்.
"நானே வரேன்" என எழுந்தவரை,
"நாங்க ஸ்டாஃப்ஸ்டையும் விசாரிக்கணும் உங்களுக்கு நம்பகமானவங்களையே அனுப்புங்க" என நின்றான் மதுரன்.
"நா கோர்ட்ல கேஸ் குடுப்பேன்"
"அது உங்க இஷ்டம். உங்க பையன் எங்க முதல்ல?"
"நிஜமாவே கேம்ப் தான் சார் போயிருக்கான். மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள், அங்க ஃபோன் நெட்ஒர்க் வசதியும் அதிகம் கிடையாது. அதனால ரெண்டு நாளா ஃபோன் கூட போக மாட்டேங்குது"
"லாஸ்டா எப்ப பேசுனீங்க?"
"நீங்க செகெண்ட் டைம் வந்துட்டு போன அன்னைக்கு"
"சரி மறுபடியும் பேசினா அவர் சீக்கிரம் வந்தே ஆகணும்னு சொல்லுங்க" என சொல்ல,
"சரி!" என தலையசைத்தவர், "ஆறு வருஷம் முன்ன உள்ள கேஸெல்லாம் எதுக்கு எங்க தலைல கட்டப் பாக்றீங்க? அப்பவே வந்து ஏன் விசாரிக்கல?" என்க,
"அப்ப சந்தேகம் வரல, இப்பதான் வந்துருக்கு" என்றான் மதுரன். செவிலியர்கள் இருவரை அவனுடன் அனுப்பினார் மதி.
வெளியே வந்த மதுரன், அங்கு ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்த ஆரனிடம் வந்தான்.
"அப்ப மூணு மாசமா இங்க வர்றீங்க?" என அவன் அந்தப் பெண்மணியிடம் கேட்க,
"ஆமா சார். ரெண்டு வருஷமா எங்கெல்லாமோ அலைஞ்சுட்டோம். பிள்ளையே கிடைக்கல, இந்தம்மாட்ட ரொம்ப கை ராசின்னாங்க அதான் வந்தோம்"
"டாக்டர் மதி என்ன சொல்றாங்க?" என சாவகாசமாக கேட்டபடி நிற்க,
"நல்லா பாப்பாங்க சார். என்ன கேட்டாலும் சிரிச்ச முகமா பதில் சொல்லுவாங்க, அதுலேயே நமக்கு சீக்கிரம் பிள்ள வரம் கிடைச்சுரும்னு தோணும்" என பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்தவராக அளந்தார் அந்த பாட்டி.
"உங்கப் பொண்ணு எங்க?"
"ஸ்கெனுக்கு போயிருக்கா சார்"
"டாக்டர் இங்க தானே இருக்காங்க?"
"ஆமா சார், ஆனா முதல்லயே பாத்ரூம் போய்ட்டு அங்கன போய் படுக்க சொல்லிருவாக, டாக்டர் இங்க ரெண்டு டோக்கன முடிச்சு அங்க ஸ்கேனுக்கு அனுப்பிட்டு தான் அங்கப் போவாக, அந்த மூணு பேரையும் அங்க ஸ்கேன் முடிச்சிட்டு இங்க வருவாக. அப்டி மாத்தி மாத்தி போய்ட்டு வருவாக"
"சரிதான். ஓகே உங்க பொண்ண பத்ரமா பாத்துக்கோங்க" என்றவன், திரும்ப,
"நீங்க உங்க சம்சாரத்துக்கு இங்க மதி டாக்டர்ட்ட பாருங்க சார். நல்லா பாப்பாக" எனவும் அந்த பாட்டி சொல்ல, சிரித்தவன், "கண்டிப்பா" என நகர்ந்தான்,
"நீங்க முன்ன போங்க, ஒவ்வொரு ரூமா காட்டுங்க" என அந்த இரு பெண்களையும், மதுரன் முன்னே அனுப்ப, அவர்கள் பின் ஆரன், ஆரன் பின் மதுரன் என சென்றனர். மற்றவர்கள் பார்த்தும் பாராததுமாக, வேலையில் இருப்பதாக காட்டிக்கொண்டனர்.
"சார் அவங்க பையன் ரெண்டு நாளா ஃபோனே எடுக்கலையாம். கேம்ப் போன இடம் ரொம்ப வில்லேஜ் அதனால ஃபோன் போகலன்னு சொல்றாங்க"
"அவனே எடுக்கலையா, இல்ல போகலையா?"
"ரெண்டும் தான்னு நினைக்கிறேன். பேசலன்னு மட்டும் தெளிவா சொல்றாங்க, லாஸ்ட்டா நாம இங்க புதன் வந்தோமா? அன்னைக்கு பேசிருக்காங்க, நம்ம வந்து விசாரிச்சதையும் சொல்லிருக்காங்க. சரி வரேன்னு சொன்னவன் அடுத்து ஃபோனே எடுக்கலயாம்"
"சரி எப்படியும் இங்க வரணும் தானே? அவனே வரட்டும் பாப்போம்" என முடித்துக்கொண்டான் ஆரன்.
மாத்திரைகள் வைத்திருக்கும் அறை, அடுத்ததாக ஸ்கேன் அறை அதை ஒட்டிய அறையாக ஐயூஐ, ஐவிஎஃப் செய்யும் படுக்கையுடன் கூடிய உபகரணங்கள் கொண்ட அறை, ரத்த பரிசோதனைக்கான அறை, லேபோரட்டரி, மைனர் ஓடி(ஆப்ரேஷன் தியேட்டர்), பிரசவ அறை, பிரசவத்தின் பின் பெண்கள் தங்கும் அறைகள், என வரிசையாக அனைத்தையும் பார்த்து வந்தவர்கள், மீண்டும் ஸ்கேன் அறை முன் வந்து நின்றனர்.
"அப்ப லேடீஸ் இருக்காங்கன்னு உள்ள போய் பாக்கல. இப்ப க்ளியர் பண்ணுங்க, உள்ளேயும் பாத்துட்டுக் கிளம்புறோம்" என ஆரன் சொல்லவும்,
"ஸ்கேன் அறைல என்னத்தடி சுத்திப் பாக்கப் போறாங்க?" என அவர்களுக்குள் முனங்கியபடியே உள்ளே சென்றனர் அந்தப் பெண்கள்.
அங்கிருந்த பெண்களை வெளியே அனுப்பிவிட்டு அவர்களும் வெளியே வர, "நீங்க உள்ள வாங்க" என அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
"இங்க யாரெல்லாம் வருவீங்க?" என்றான் எங்கெங்கு என்னென்ன இருக்கிறது என ஆராய்ந்தபடி.
"சார், டெய்லி ஐம்பது பேஷன்ட்டாவது வருவாங்க சார்"
"உங்க ஸ்டாஃப்ஸ்ல யாரெல்லாம் வருவீங்க?"
"நாங்க ஷிஃப்ட்ல ஒரு பதினைஞ்சு பேர் வொர்க் பண்றோம், டாக்டர் கூட நாங்க பதினைஞ்சு பேருமே மாத்தி மாத்தி வருவோம் சார்"
"வேற டெக்னீஷியன்ஸ்?"
"அவங்களாம் எப்பவும் வர்றதில்ல சார். எப்பவாது தான் ரொம்ப ரேரா தான் வருவாங்க. அதும் கம்ப்யூட்டர்ல எதும் இஷ்யூனா மட்டுந்தான் வருவாங்க. இப்ப வந்தே ஒன் இயர் மேல இருக்குமே"
"உங்க சைல்ட் ஸ்பெலிஷ்ட்?"
"அவர் பேஷன்ட் இருக்கும்போது வரமாட்டார், மேடம் அவசரமா பாக்கணும்னா மட்டும் எப்போவாது வருவார்"
அவர்கள் பார்த்த ஃபோட்டோக்களில் இருந்த அதே படுக்கை அமைப்பு தான், அருகில் இருக்கும் ஸ்கேன் சாதனங்கள் எல்லாம் அதில் கத்தரிக்கப்பட்டிருந்தது, இப்போது அறையோடு பொருத்தி பார்க்கையில் நன்றாக ஒத்துப்போனது.
ஃபோட்டோ எடுக்கப்பட்டிருந்த ஆங்கிலை வைத்து, படுக்கைக்கு நேரெதிரான சுவற்றைக் கூர்ந்து ஆராய்ந்தான் ஆரன். அந்த ஓரம் முழுவதும், கீழிருந்து மேல் வரை பெரிய செல்ஃபாக இருந்தது. அதிலும் ஸ்கேனுக்கு தேவையான பொருட்கள் தான் நிரம்பி இருந்தது. அதுப்போக சில ஃபைல்களும்.
செல்ஃபை திறந்தான், கண்ணாடி கதவின் மேல் பகுதியில் சிறிய கரும்புள்ளி கதவை திறந்ததும் கதவில் இருக்கும் அந்த கரும்புள்ளி தனித்து தெரிந்தது.
சுற்றிப் பார்த்தவன், ஷூவை கழற்றிவிட்டு, சிகிச்சைக்கு வரும் பெண்கள் படுக்கைக்கு ஏற வைத்திருக்கும் ஸ்டூலை இழுத்து அதில் ஏறி பட்டென்று அந்த சிறிய கேமிராவை எடுத்தான்.
"கேமரா தான சார்?" என மதுரன் கேட்க,
"கேமராவா?" என அதிர்ந்தனர் அந்த செவிலியர்கள்.
"உங்கட்ட வர்ற பேஷன்ட்ஸ இப்படி தான் வீடியோ எடுக்குறீங்களா? இது எப்ப இருந்து நடக்குது?" என ஆரன் அரட்டவும், இருவரும் அழுது நடுங்கிவிட்டனர், வார்த்தை கூட வாய்விட்டு வரமுடியாதளவிற்கு நடுக்கம்.
"என்ன?" என ஆரன் மறுபடியும் அதட்ட,
"சத் சத் சத்தியமா எதுவும் தெரியாது சார்" என்றனர் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு.
"உங்களுக்கு தெரியாது?"
"சத்தியமா தெரியாது சார்"
"நாங்க இத இங்க யார் வச்சான்னு கண்டு பிடிக்குற வர நீங்க ரெண்டு பேரும் இங்க நடந்தத மூச்சு விட கூடாது" என்றதும் வேகமாக தலையை அசைத்தனர்.
"சொல்லிட்டா?"
"சொல்லவே மாட்டோம் சார்" என்றனர் அரண்டு போய்.
"எதுமே செய்யலனா எதுக்கு இவ்ளோ பயம்?" என சந்தேகமாக கேட்க,
"இல்ல இல்ல சார்" என்றனர் வெளிப்படையாகவே நடுங்கி, ஆரன் அதே பார்வையுடன் வெளியேறிவிட,
"பயப்படாதீங்கம்மா. தப்பு செய்யலனா எதுக்கு பயப்படணும்? இங்க வந்த பொண்ணுங்கள அரைநிர்வாணமா ஃபோட்டோ எடுக்கப்பட்டிருக்கு அதனால எட்டுப் பொண்ணுங்க செத்து போய்ட்டாங்க. இத யார் செஞ்சான்னு கண்டுபிடிக்கணுமா வேணாமா?"
"நம்பவே முடியல சார். யாரும் அப்படி பண்றவங்க இல்ல சார்"
"உங்க முன்னாடி தான கேமராவ தேடி எடுத்தோம்?"
"ஆமா சார். ஆனா?"
"உண்மை தெரியணுமா வேணாமா?"
"ஆள கண்டுபிடிக்கணும் சார்"
"ம்ம் வெரிகுட். யாராவது வித்தியாசமா வந்து போற மாதிரி இருந்தா இன்ஃபார்ம் பண்ணணும். இதப்பத்தி உங்க மதி மேடத்துட்ட கூட சொல்லக் கூடாது. அந்த குரு சார்ட்ட அவங்க பேசுறாங்களான்னு வாட்ச் பண்ணி சொல்லணும். இதெல்லாம் செஞ்சா தான் யார் செஞ்சான்னு ஈசியா கண்டுபிடிக்க முடியும். போலீஸ்க்கு சொல்றதுக்குத்தான் உங்கள இங்க இப்படியே விட்டுட்டுப் போறோம். நாம உங்க மதி மேடத்துக்கும் ஹெல்ப் தான் பண்ண போறோம். புரியுதா?"
"ஓகே சார்"
"இதான் என் நம்பர். எதுனாலும் உடனே கால் பண்ணனும்" என அவன் நம்பரை சொல்ல, அதில் ஒரு பெண் அவள் செவிலியர் உடையிலிருந்த பையிலிருந்து செல்லை எடுத்து மதுரன் நம்பரை பதிந்து கொண்டாள்.
திருமண நாளும் நெருங்கியேவிட்டது, கள்ளன் என கண் வைத்து அவர்கள் தேடிய அந்த குரு என்பவன் மட்டும் வெளியே வரவேயில்லை. அவர்களை பொறுத்தவரை விஷயமறிந்து அவன் கிட்டத்தட்ட தலைமறைவாகிவிட்டான் என்ற கணிப்பு தான்.
"மொபைல் நெட்ஒர்க் வச்சு இவன தூக்கிட்டு வந்துட்டா என்ன சார்?" என்றான் மதுரன்.
"அவன் ஃபோன் காட்டுற இடத்துல தான் இப்ப வர இருப்பான்னு தெரியாம எப்படி மூவ் பண்றது"
"உங்களுக்கு மூணு நாள்ல கல்யாணம் சார்"
"ஆமா, நா நாளைக்கு ஜுட் விட்ருவேன். லீவ் முடிச்சு நா வரதுக்குள்ள அவன புடிச்சு குடுத்து அவார்ட்டோட என்னைய மீட் பண்ணனும் நீ" என மதுரன் தோள் தட்டினான் ஆரன்.
"சார்!" என அவன் அதிர,
"உன்ட்ட நா பெருசா எதிர்பாக்றேன்டா மதுரா. என் நம்பிக்கைய காப்பாத்து"
"எப்படி காப்பாத்துறது நாந்தான் துணை மாப்ளையா கூடவே வந்துருவேனே?"
"உன்ன யாரு மேன் கூப்பிட்டா?"
"நீங்க கூப்பிடலனாலும் நா வருவேன்"
"லீவ் யாரு தருவா?"
"நீங்க தான்"
"கமிஷ்னர்ட்ட என்ன சொல்லுவ?"
"லூஸ் மோஷன் நாளு நாளைக்குப் போவும் போலன்னு சொல்லுவேன். என்ன வந்தா செக் பண்ணுவாரு?"
"அவார்ட் வேணாமா உனக்கு?"
"வெறுப்பேத்தாதீங்க சார்" என்றான் சோகமாக மதுரன்.
"சரிவிடு. ஆனா உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா?"
"ஆள பிடிச்சுட்டீங்களா சார்?" என அவன் பரபரப்பாக,
'இல்லை' என தலையாட்டிய ஆரன், "அவனே வருவான்டா நம்மள தேடி" என்றான்.
"எப்புடி சார்? எனக்கு சொல்லாம எதுவும் ப்ளான் பண்ணிட்டீங்களா?"
"ம்ம்கூம், ஆனா வருவான் பாரேன். வந்தா உனக்கு அவன அடையாளம் தெரியுமா?"
"இல்லயே நாம தான் அவன மீட் பண்ணவே இல்லையே"
"தெரிஞ்சுவச்சுக்கோ தேவைப்படும்" என பூடகமாக முடித்துவிட்டான்.
இரண்டு நாட்கள் யாருக்கும் காத்திராமல் ஓடியிருந்தது, அன்று பெண்ணழைப்பு, ஆரன் விஷ்வேஷ்வரன் வீட்டிலிருந்து வந்து லஷ்மி நிலாயினியை திருமணத்திற்கு அழைத்துச் செல்லும் வைபவம்.
நிலாயினி ஆரனைப் பார்த்து மூன்று நாட்களாகியிருந்தது, பேசியது கூட அன்று துணிக்கடையில் வைத்து பேசியது தான், மற்றபடி பேச வாய்ப்பு கிடைத்தால் வளவளப்பானே தவிர, தானாக அழைத்து பேசிவிட மாட்டான். அவளுக்கும் பகலில் வங்கி வேலையும் இரவில் தங்கைகளும் உடன் இருப்பதால் பேச நினைக்கவில்லை. ஆனால் அவனை நினைக்காமலும் இல்லை.
"ஏசிபி கடலைலாம் வறுக்க மாட்டாராக்கா? எப்பதான் அவர்ட்ட பேசுவ நீ?" என தீக்ஷியே கேட்கும்படி தான் இருந்தது.
"கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கலாம்னு இருப்பாரா இருக்கும்" என சொல்லும்போதே, அன்று அவன் சொன்ன, "பேசி பேசியே முப்பது பிள்ள பெத்துக்குறோம்!" என்பது ஞாபகம் வர, தலையை வேகமாக உலுக்கிக் கொண்டாள்.
இதோ பெண்ணழைப்பு, பெண்கள் படை சூழ, புனிதா கொண்டு வந்த பட்டை உடுத்தி, அவள் கையால் மடி நிரப்பி, இடுப்பில் வெள்ளி குடத்துடன் அவள் வீட்டிலிருந்து கிளம்பினாள் நிலாயினி.
திருநெல்வேலியிலிருந்து கிளம்பி நேராக தென்காசியில் நிலா, ஆரன் திருமணத்திற்காக பிடித்திருக்கும் மண்டபம் வந்திறங்கினர்.
வேனிலிருந்து இறங்கும்போதே, "மாப்ள பொண்ண வரவேற்க வாசல்லயே நிக்றாப்லயே" என பெண்களின் கிண்டல் ஆரம்பிக்க, ஒவ்வொருவராக தொடர்ந்துவிட்டனர்.
வேனில் ஏறியதும் இறக்கி வைத்திருந்த குடத்தை, மண்டபத்தில் இறங்கியதும் மறுபடியும் தூக்கி அவள் இடுப்பில் வைத்துவிட்டனர். சந்தன நிற பட்டு புடவையில் கை நிறைய கண்ணாடி வளையல்கள், தலை நிறைய பூ, கழுத்தில் போதுமானளவு தங்க நகைகள், வலது கையால் மடி நிரப்பியிருந்த முந்தானையை சுற்றி பிடித்திருந்தவள், இடது கையில் வேப்பிலையோடு, இடுப்பில் வெள்ளிக் குடத்தை வைத்தபடி நிற்க,
மண்டப வாசலில் பட்டு வேஷ்டியை தொடைக்கு மடித்து கட்டி பைக்கில் சாய்ந்து நின்றவன் ஜம்பமாக அவளைத் தான் பார்த்திருந்தான். மற்றவர்களின் கிண்டலையோ, கேலியான பார்வையையோ எதையும் கண்டுகொள்ளவில்லை.
தீக்ஷி குனிந்து, "ஏசிபி அத்தான் கெத்த பாருக்கா. சும்மா சூப்பரா இருக்காரு" என்க,
தலையைத் திருப்பாமல் பார்வையை மட்டும் சுழற்றி அவனைத் தேடியவள் கண்டதும், வேஷ்டி சட்டையில் நின்றவனைப் பார்க்க, "என்ன?" என்றான் எப்போதும் போல் புருவம் உயர்த்தி, அதில் கண்ணை விரித்தவள், அடுத்த நொடி சுருக்கியும் கொண்டாள்.
அவள் பார்த்த பின்னரே, மடக்கிக் கட்டிய வேஷ்ட்டியை அவிழ்த்து மறுபடியும் மடக்கிக் கட்டியபடி அவளிடம் வந்தான்.
"ஆரத்தி உங்க தங்கச்சி எடுப்பா, நீங்க எடுக்க வேணாம் போலீஸ்கார்" என நக்கலாக ஒரு பெண்மணி சொல்ல,
"நா என் பொண்டாட்டிக்கு நெட்டி முறிக்க வந்தேன். எம்புட்டு அழகு, என் கண்ணே பட்டுபோச்சு" என்றவன், அவளின் முகத்தை இரு கைகளாலும் வழித்து அவன் நெற்றியில் வைத்து சொடுக்கிட,
"சரித்தான், நாங்களாம் நிக்றதா இல்ல போயிடறதா?" என்றனர் அவர்கள்.
"அது உங்க இஷ்டம், ஆனா நா இப்படி தான் நிக்கப் போறேன், புனிதா எனக்கும் சேர்த்து ஆரத்தி எடுப்பா" என்றான் சளைக்காமல்.
புனிதா சிரிக்க, தங்கமாடத்தி, "மானத்த வாங்குவான்" என முனங்கியபடி நின்றார்.
"தண்ணி தூக்குற தங்க ரதமே, உன்ன தூக்கிட வரலாமா? தண்ணி பானை வச்ச இடத்த மாமன் பார்வை தொடலாமா" என பாட்டை அவன் பாட்டுக்கு முனங்கலாக பாடியபடி நிற்க, அவளுக்கு மட்டுமின்றி அவளுக்கு பின் நின்ற தீக்ஷி சந்திராவிற்கும் கேட்க, இருவரும் கிளுக்கி சிரிக்க, குடம் வைத்திருந்த முட்டியால் அவன் வலது நெஞ்சோரம் இடித்து முறைத்தாள் நிலாயினி.
"உன் ஃபோன் எங்க நிலா?" என்றான் மெல்ல,
"பேக்ல இருக்கு" என சந்திராவை கை காண்பித்தாள்.
"நிலா ஃபோன குடு சந்திரா" என திரும்பி அவளிடம் கேட்க, கையில் குத்துவிளக்குடன் நின்றவளால் எடுக்க முடியாமல் போக, தானே அவள் பேக்கை வாங்கி திறக்கச்சென்றவன், திறக்கும்முன், "உள்ள உன் திங்கிஸ் மட்டுந்தான இருக்கு?" என நிமிர்ந்து நிலாவிடம் கேட்க,
"ஆமா. என்னாச்சுங்க?" என அவள் புரியாமல் விழிக்க,
உள்ளிருந்து மொபைல் எடுத்து, "பாஸ்வேர்ட்?" என்க, அவளும் சொல்ல,
"உனக்கு கால் பண்ணேன் ரிங்கே போகல, அதான் ப்ளாக் எதுவும் பண்ணிருக்கியான்னு செக் பண்றேன்" என்றவன் படபடவென அதில் எதையோ செய்துவிட்டு மீண்டும் அவள் கைப்பையிலேயே போட்டு, சந்திராவின் தோளிலும் மாட்டிவிட, பிடித்துக் கொள்வதாக தலையசைத்தாள் சந்திரா.
அனைத்தும் வாசலில் வைத்தே நடந்தது. இருவரும் பேசியபடி இருப்பதால், பெண்களும் சுவாரஸ்யமாக பார்த்தபடி அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.
புனிதா இருவருக்கும் ஆரத்தி எடுத்து பொட்டிட, சிரித்தபடி நகர்ந்துவிட்டான் ஆரன். எதற்கு வந்தான் எதற்கு சென்றான் என யாருக்கும் விளங்கவில்லை. நிலாயினியை மண்டபத்தினுள் அழைத்துச் சென்றுவிட, அங்கேயே நின்றவன் அவள் உள்ளே சென்றபின், மீண்டும் மொபைலை எடுத்துப்பார்த்து, "கைல சிக்குவல்ல, இருக்குடி உனக்கு" என பல்லைக் கடித்தான்.
வேகமாக வந்த மதுரன், "ஆள் இங்க ஒரு கிலோமீட்டர் சரௌண்டிங்க்ல இருக்குறதா தான் காட்டுதாம்" என்க,
"நாம எதுவும் அலட்டாம இருந்தா அவனே நம்மள தேடி வருவான் மதுரா"
"வரலைனா சார்?"
"வரலைனா நா ஹனிமூன் போறேன். நீ ஸ்டேஷன் போ"
"சார்?"
"வருவான்டா வாடா" என்றுவிட்டான்.
காலை ஆறுமணி முகூர்த்தத்தில், குடும்பங்கள், சொந்தங்கள், நண்பர்கள், உடன் வேலைப்பார்ப்பவர்கள் ஆசிர்வாதம் தர, தங்க சங்கிலியில் கோர்த்த தாலியை லஷ்மி நிலாயினி கழுத்தில் போட்டு, தன்னுறவாக்கினான் ஆரன் விஷ்வேஷ்வரன்.
பரிசுகள் பெற இருவரும் மேடையில் நின்ற தருணம், ஒவ்வொருவராக வந்து வாழ்த்தி புகைப்படம் எடுத்துவிட்டு நகர்ந்தபடி இருந்தனர்.
அப்போது முகத்தில் மாஸ்க்குடன் ஏறிய குருதேவ், அவர்களை நெருங்கியதும் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எதையோ வெளியே எடுக்க முனைய, அந்த கை பாக்கெட்டை விட்டு வெளிவரும் முன், இந்தப்பக்கம் மதுரன் அந்தப்பக்கம் இன்னொரு காவல் அதிகாரியால் அணைத்துப் பிடிக்கப்பட்டான்.
அப்படியே அவனை நகர்த்திக் கொண்டு ஆரனிடம் வர, "வாங்க! நிலா இந்த சார் யாருன்னு தெரியுதா?" என அவளிடமும் திரும்பி சிரித்த முகமாகவே கேட்க, புருவம் சுருக்கி யோசித்தாள் அவள்.
"ம்ச் என்ன இப்படி மறந்துட்ட அவன் மனசு எவ்வளவு கஷ்டப்படும்" என்றவன், "சாரிடா உன்ன நிலாக்கு ஞாபகம் கூட இல்ல" என சொல்ல,
"விடுங்க என்னைய" என திமிறினான் அவன்.
"இது ஃபங்ஷன் நடக்குற இடம். நீ என்ன ப்ளான்ல வந்திருந்தாலும் இனி ஒன்னும் செய்ய முடியாது. இவங்களோட திருநெல்வேலி போய் வெயிட் பண்ணு காலைல வந்து நானே பாக்றேன் உன்ன. இப்ப சத்தமில்லாம போகணும்" என ஆரன் சிரித்தபடியே தான் மிரட்டினான்.